11 மே 2013 - பெங்களூரு - இந்தியா
அதற்குப் பிறகு இரண்டு
ஸ்லோகங்கள் வருகிறது,
‘பீஜம் மாம் சர்வ-பூதானாம் வித்தி பார்த்த சனாதனம். புத்திர்ப்
புத்திமதாம் அஸ்மி தேஜஸ் தேஜஸ்வினாம் அஹம். பலம் பலவிதாம் சா-அஹம்
காம-ராக-விவர்ஜிதம். தர்மாவிருத்தோ பூதேஷு காமோஸுமி பரதர்ஷப.’ (7.10 &
7.11)
ஒவ்வொருவரிடமும் ஒரு
விதை இருக்கிறது. இந்த உலகிற்கு வரும் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒன்றை தம்முடன் கொண்டு
வருகிறார்கள் (ஒரு குணம் அல்லது பரிசு). ஒவ்வொரு மனிதரிடமும் மாறாத ஏதோ சில
குணங்கள் (விதைகள்) உள்ளார்ந்து இருக்கின்றன. ஆசிரியர்கள் பலமுறை கூறுவதை
கேட்டிருக்கலாம், ‘மாணவர்களிடம் ஏதாவது சிறிது குணம் இருந்தால் தானே அதை நான் மேலும் வளர்க்க
முடியும்.’ விதை இருந்தால் அதை வளர்க்க முடியும். தொடங்குவதற்கே ஏதும் இல்லாத போது அதை எப்படி வளர்க்க
முடியும்?
எனவே ஸ்ரீ கிருஷ்ண
பகவான் கூறுகிறார், ‘ஜீவன்களில் இருக்கும் இந்த விதை, தொன்று தொட்டு இருந்து வருகிறது, ஏதோ புதிதாய்
வந்ததல்ல. அதற்கு தொடக்கம் கிடையாது, யார் அதை விதைத்தார்கள் என்று யாருக்கும்
சரியாகத் தெரியாது. எல்லா ஜீவன்களிலும் (பூதானாம்) உள்ள இந்த விதை நான்.
ஒவ்வொரு உயிரினத்திலும், ஜீவனிலும் ஒரு விதை அதனுள் இருக்கிறது என்பதை தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த விதை எப்படி
காலங்காலமாய் இருந்து வருகிறதோ,
அப்படியே எல்லா ஜீவன்களும் காலங்காலமாய் இருந்து வருகிறது.`
மூன்று விஷயங்கள்
அனாதியாகவும் (தொடக்கமற்றது) அனந்தமாகவும் (முடிவற்றது) கருதப்படுகிறது.
முதலாவது கடவுள்,
இரண்டாவது ஜீவன் (இங்கே குறிப்பது ஒரு தனிப்பட்ட ஆத்மா அல்லது மெய்யுணர்வு), மூன்றாவது
பிரக்ருதி (இயற்கை).
அபர பிரக்ருதி
தொன்று தொட்டு இருந்து வருகிறது.
கடவுளும் ஜீவனும் அப்படியே. எனவே படைப்பு என்பது ஒரு சுழற்சி (வ்ருத்தா);
ஒரு வட்டத்திற்கு தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை, ஆனாலும் ஒவ்வொரு புள்ளியிலும்
தொடக்கம் முடிவு என இரண்டும் உள்ளது. ஸ்ரீ கிருஷ்ண பகவான்
மேலும் விவரிக்கிறார், ‘ஓ அர்ஜுனா, நீ ஒரு புத்திசாலியைப் பார்த்தால், அவரின் அந்த
புத்தி எல்லாவற்றையும் அவரே தேடி கிரகித்துக் கொண்டார் என்று நினைக்காதே. அந்த
புத்திசாலியின் புத்தி நான்தான்.’
பகவான் மதியூகமாக செய்தார். மனம் எங்கெல்லாம் கவர்த்ந்திழுக்கப்படுமோ, அங்கிருந்தெல்லாம்,
அர்ஜுனனின் மனதை திரும்பப் பிடித்து இழுத்து மறுபடி தன்னை நோக்கி மனதைக் குவிய
வைக்கிறார். நாம்
புதிசாலிகளால் கவரப்படுகிறோம். நாம் நினைக்கிறோம், ‘இவர் சிறந்த புத்திசாலி. அவர்
புத்தி மிகக் கூர்மையாகவும் அவர் அறிவாளியாகவும் இருக்கிறார்.’ இப்படியாக அவரைப்
புகழத் தொடங்குகிறோம். எனவே, அந்த மனதை திரும்ப அழைக்க ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார்,
‘எங்கெல்லாம் சுடர்விடும் அறிவைக் காண்கிறாயோ, அவையெல்லாம் நானே எனத்
தெரிந்துகொள். அது அனைத்தும் என்னுடைய அம்சம் மட்டும் தான்’.
இதைச் சொல்வதின் மூலம்,
மனதை திரும்பக் கொணர்ந்து தன் மீது குவிய வைக்கிறார். எங்காவது கூர்மையான புத்தியைக்
கண்டால் அது ஸ்ரீ கிருஷ்ணர் தான்
என்றும் அவரிடமிருந்தே அது வந்தது என்றும் தெரிந்து கொள்க. இது தெரிந்தால்,
உங்கள் மனம் எங்கும் அலையாது. (ஏனென்றால் எல்லாமே ஸ்ரீ கிருஷ்ணரின் ஒரு வடிவம் தான் என்று தெரிந்து அவர்
மீதே குவிந்து இருக்கும்)
அதே வழியில், அவர்
கூறுகிறார், ‘சக்தி வாய்ந்தவர்களின் தேஜஸ் (பிராகாசம் அல்லது ஒளிர்தல்)
நான். யார் முகத்திலாவது நீங்கள் பார்க்கும் ஒளி நான். தாபங்களினால்
பாதிப்படையாமல் இருக்கும் ஒருவரின் உறுதியான மனம் நான் தான்’.
ஒருவர் துவேஷத்திலும் வெறுப்பிலும் கூட வலிவைப் பெறமுடியும். அப்படிப்பட்டவர்கள்
மிகுந்த வலிமையானவர்கள் போலத் தோன்றுவார்கள். நான் அதுவல்ல. பயங்கரவாதிகளும்
தீவிரவாதிகளும் தங்கள் வெறுப்பின் காரணமாக மிகுந்த வலிமையைப் பெற்றவர்கள் போலத்
தோன்றுவார்கள். ஆனால் ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார், ‘நான் அந்த வலிமையல்ல
(எதிர்மறை உணர்விலிருந்து எடுக்கப்பட்ட)’. தீவிரவாதிகள் அப்படி ஒரு ஜூர வேகத்தில்
நடக்கிறார்கள். மற்றவர்களை
பயமுறுத்தி தங்கள் வலிமையை காண்பிக்கிறார்கள்.
அந்த வலிமை காமம் (ஆசை) மற்றும் ராகங்களிலிருந்து (தாபம்)
விடுபட்டவை அல்ல. எங்கு தாபம் இருக்கிறதோ அங்கு வெறுப்பும் இருக்கிறது. தாபங்களினால் வலிமையை
வெளிக்காட்ட முனைவது முட்டாள்தனமானது. மேலும், ஜூர வேக ஆசைகளினால்
உந்தப்படுபவர்கள் அசாதாரணமான அளவு அதிக சக்தியை காண்பிப்பது போலத் தோன்றும். இன்றைய
உலகில் இதுதான் பொதுவாகக் காணப்படுகிறது. ஜூர வேகத்தினால் உந்தப்படுபவர்கள் தங்களை
மிக வலிமையாகக் காட்டிக் கொண்டாலும், அந்த வலிமையினால் எந்தப் பயனும் இல்லை. ஜுர வேக ஆசைகளினால் வரும்
வலிமை, மேலோட்டமானதே, மேல் பரப்பில் மட்டுமே அவ்வாறு இருக்கும். உள்ளே காலியாக,
வெறுமை தான்
இருக்கும். அப்படிப்பட்டவர்களின் மனங்களில் ஆழமான பயம்
இருக்கும். பயம் உள்ளே இருக்கும் போது
ஒருவர் வலிமையாக இருக்கவே முடியாது.
தன் மெய்யுணர்வோடு
தொடர்பிலில்லாதவர்கள் உறுதியாக இருக்கவே முடியாது. தன்
மையத்தோடு தொடர்பில்லாமல் தன்
இருப்பைப் பற்றி தெரியாதவர்கள், எவ்வளவு வலிமையாய் வெளியில் காட்டிகொண்டாலும், அவருக்குள்ளே உள்ள பயத்தினால்
வெறுமையாய் இருப்பார்கள். அதைப்போல,
வெறுப்பிலிருந்து மற்றும் பேய்த்தனமான விழைவுகள் இவற்றிலிருந்து வரும் வலிமையும்
உள்ளே வெறுமையாய் இருக்கும். ‘த்விதிய த்வை பயம் பவதி’, என்று ஒரு
பழமொழி உண்டு. பயத்தின் காரணம் இரண்டாய் இருப்பது என்பதே
இதன் பொருள்.
(சுயத்தோடு ஒன்றாமல் இருப்பதே இரண்டாய் இருப்பதாக இங்கே
குறிப்பிடப்படுகிறது.)தனக்குள்ளே தன்
மெய்யுணர்வோடு ஒன்றாமால் இருப்பவர்கள் (அந்தர்முகி), உள்முகமாக நோக்கி தன்
சுயத்தோடு ஒன்றாமல் இருப்பவர்கள், இவர்களை உறுதியானவர்களாக கூறவே முடியாது.
தாபங்களும், ஜூர வேகமும் (பரிதவிப்பு) கொண்டவர்களால் தமக்குள் சென்று சுயத்துடன்
ஒன்றுவது என்பது முடியவே முடியாது.
ஒருவர்
தமக்குள்ளே மையத்தில் இருக்கும் போது மட்டுமே பெரும்
வலிமை பிறக்கிறது. அப்படிப்பட்ட வலிமை, தாபம் மற்றும் ஜூர வேகங்களினால் வரும்
எதிர்மறை விளைவுகள் அற்றது, மேலும் இது அவற்றையெல்லாம் தாண்டியது. அது மட்டுமே
உண்மையான வலிமை.
இதனால் தான் ஸ்ரீ கிருஷ்ண பகவான்
சொல்கிறார், ‘எங்கெல்லாம் தூய வலிமையை பார்க்கிறீர்களோ, அது நான் என்று தெரிந்துகொள்.’
இப்போது நீங்கள்
கேட்கலாம், ‘தாபங்களும் ஜுர வேகமும் இல்லாத
போது தான் பெரு வலிமை கிடைக்கிறது
என்று ஸ்ரீ கிருஷ்ண பகவான் சொல்லிவிட்டார். எல்லா ஆசைகளும் தீமையானதா? ஆசை கொள்வது
தவறா, அல்லது எல்லோரும் நலமாய் இருக்க ஆசைப்படுவது தவறா? அப்படியென்றால் ஒருவர்
ஆசைப்படவே கூடாதா?’. இல்லை, அப்படி இல்லை.
ஸ்ரீ கிருஷ்ண பகவான்
கூறுகிறார், ‘தர்மத்திற்கு எதிராக இல்லாத ஆசைகள் அனைத்தும் நானே.
தர்மத்தின் வழியில் நடப்பவர்கள் மற்றும் தன் ஸ்வதர்மத்தை (தன் பொறுப்புகளை ஒரு
இயல்பாக அல்லது கடமையாகச் செய்வது) பின்பற்றுபவர்கள், இவர்களுள் எழும் ஆசை நான் தான், நான் மட்டுமே.’ இதை நீங்கள் எல்லோரும்
அனுபவித்திருப்பீர்கள்: உங்கள் இதயத்தில் எழும் ஒரு ஆசையின் படி நீங்கள் செயலாற்றும் போது, அது உங்களையும்
உங்களைச் சுற்றி உள்ளோரையும் மேன்மையடையச் செய்யும். எல்லோரும் பயனடைவார்கள். அப்படிப்பட்ட ஆசைகள் இறைவனின்
அம்சம்.
நாம் தர்மத்தின்
வழியில் செயலாற்றும் போது,
நம்மால் தவறு ஏதும் செய்ய முடியாது. மேலும், தர்மத்தோடு,
ஆசைகளும் கூட எழுகின்றன.ஆனால் அப்படிப்பட்ட ஆசைகள் தெய்வீகமானது (இறைவனின்
விருப்பதால் தூண்டப்படுவது)
‘தன்மேய மனஹா சிவ
சங்கல்பமஸ்து’ என்று அதனால் தான்
வேதங்களில் சொல்லப்பட்டுள்ளது. அப்படியென்றால் எல்லோருக்கும் நன்மை தரக்கூடிய
ஆசைகள் மனதில் எழட்டும். எல்லோருக்கும் நன்மை தரக்கூடிய ஆசைகள் எனக்கு
இருக்கட்டும். உண்மையை நோக்கி, மற்றும் புனிதமானது எல்லாவற்றையும் நோக்கி என்
ஆசைகள் இருக்கட்டும். இப்போது
உண்மைக்கான ஆசையும் ஆசை தான்.
வாழ்க்கையில் நீங்கள் முன்னேற விரும்பினால், அதுவும் ஆசை தான். எல்லோரும் நன்மையடைய
ஆசைப்படுவதும் ஆசை தான்.
எல்லோருக்குமான புனிதமான ஆசைகள் இல்லாமல் எந்தப் பண்டிகையையும் நீங்கள் கொண்டாட
முடியாது.
ஆசைகள்
இல்லாமல் வாழ்க்கையில் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது. வாழ்வில் நீங்கள் செய்யும்
ஒவ்வொரு செயலின் பின்னாலும் ஒரு ஆசை இருக்கிறது. வாழ்வில் நீங்கள் எதைச்
செய்தாலும் அதற்கு ஒரு காரணம் உண்டு, அந்தக் காரணம் ஆசை.
எனவே, என்ன விதமான ஆசையாக இருக்க வேண்டும்? தர்மத்திற்கு முரணான ஒன்றாக இல்லாமல்
அது தர்மத்தின் வழியில் இருக்க வேண்டும். எனவே, ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார், ‘தர்மத்தின்
வழியில் இருக்கும் எல்லா ஆசைகளும் நான்’.
நீங்கள் ஆசையினால்
உந்தப்பட்டு ஒரு செயலைச் செய்ய, அது நீங்கள் எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்த, அது
மட்டுமல்லாமல் அதனால் பலரும் நன்மையடைந்திருப்பார்கள். நீங்கள் எல்லோரும் இதை ஏதோ
ஒரு சமயம் அனுபவித்திருப்பீர்கள். உங்களுள் ஒரு ஆசை எழுந்து, அதை முடிக்க நீங்கள்
செயலைச் செய்ய, அது அமைதியையும் வசதியையும் உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்களைச்
சுற்றி உள்ளோருக்கும் அளித்திருக்கும். உங்கள் மனதில் எந்த முரண்பாடும் எழாமல்,
தர்மத்தின் வழியில் உள்ள ஆசை அது.
தர்மத்தின் வழியில்
இல்லாத உங்கள் செயல் எதுவும் உங்களை உள்ளுக்குள்ளே உறுத்தும். உங்களுக்கு உள்ளே
இருந்துகொண்டு உங்களை தொந்திரவு செய்து கொண்டிருக்கும் மற்றும், ‘ஓ, நான் ஏதோ தவறு
செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன்’, என்று உணரவைக்கும். உங்கள் உள்மனம் இதை
உங்களுக்குச் சொல்லும். ஆனால் தர்மத்தின் வழியில் செயல்படும் போது நீங்கள் இறுக்கமில்லாமல் அமைதியாய் உணர்வீர்கள்.
யே ச்சை-வ
சாத்விகா பாவா ராஜசாஸ் தாமசாஸ் ச்ச யே. மத்த ஏவேதி தான் வித்தி ந த்வ-ஹம் தேஷூ தே
மயி. (7.12)
ஸ்ரீ கிருஷ்ணா பகவான்
கூறுகிறார், ‘ஓ அர்ஜுனா, மூன்று குணங்களான, சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய
மூன்றும் என்னிடமிருந்து பிறந்தவை. ஆனால் அதில் நான் இல்லை மற்றும் அதுவும்
என்னிடம் இல்லை, ஆனாலும் அவை என்னிடமிருந்து வந்தவை. இதைத்தான் நீ தெரிந்து கொள்ள வேண்டும்’.
இது மிகப் புதிதாய்
இருக்கிறது. ஸ்ரீ கிருஷ்ணா பகவான் கூறுகிறார், ‘நான் இந்த மூன்று குணங்களால்
ஆளப்படுவதில்லை மற்றும் இந்த மூன்று குணங்களும் என்னிடம் இல்லை, ஆனாலும் இவை
என்னிடமிருந்து மட்டுமே உருவாகி இருக்கிறது. இதற்குப் பின்னே ஒரு மிகப் பெரிய
அறிவியல் உண்மை இருக்கிறது. இந்த
மூன்று குணங்களின் விளையாட்டிற்கு சாட்சியாய் மாறிவிட்டால், அவை
எல்லாவற்றிலுமிருந்து நீங்கள் பிரிந்து விடுகிறீர்கள்
என்பதை, இதை ஆழமாய் புரிந்து கொள்ள விழைந்தால் நீங்கள் உணர்வீர்கள். எனவே அவர் கூறுகிறார், ‘இந்த
மூன்று குணங்களும் என்னிடமிருந்து பிரிந்து இருந்தாலும், அவை என்னுடைய
தொடர்ச்சியே.’ நான்
இந்த ஆடையை என் உடம்பில் உடுத்தியிருக்கிறேன் ஆனால் நான் அந்த ஆடை அல்ல, நான் அந்த
ஆடையின் ஒரு பாகமுமல்ல. எப்படி நாம் ஆடையை உடுத்தினாலும் நாம் அந்த ஆடையல்லவோ மற்றும் அந்த ஆடையின் ஒரு பாகமும் அல்லவோ,
ஆனாலும் அந்த உடை நம்முடையது தானோ - அப்படித்தான் இது. இதைப்
புரிந்துகொண்டீர்களா?
ஸ்ரீ கிருஷ்ணர்
கூறுகிறார், ‘நான் தான்
இந்த மூன்று குணங்களை (உடை) உருவாக்கினேன் மற்றும் அவை என்னுடையது, ஆனாலும்
அவற்றால் நான் பாதிக்கப்படவில்லை மற்றும் அவை என்னிடம் இருப்பதில்லை மற்றும் நான்
இந்த மூன்று குணங்களுமல்ல. எனவே, ஓ தனஞ்சயா (மாபெரும் செல்வங்களை வெல்பவன் என்ற
பொருள் கொண்ட அர்ஜுனரின் மற்றொரு பெயர்), நீயும் இந்த மூன்று குணங்களுக்கு
சாட்சியாய் மாற வேண்டும். இவை என்னுடைய இறை இயல்பின் ஒரு அங்கம் என்பதை நீ
புரிந்துகொள்ள வேண்டும். இவை என்னால் உருவாக்கப்பட்டது மற்றும் இதை நான் தான் தாங்கிக்
கொண்டிருக்கிறேன், ஆனாலும் நான் இந்த மூன்று குணங்கள் அல்ல’.
கால்களுக்கு காலணி,
உடம்புக்கு உள்ளாடை மேலாடை, தலைக்குத் தலைப்பாகை, என உடம்பின் வேறு வேறு
அங்கத்திற்கு வேறு வேறு உடை இருப்பது போலவே தான் மூன்று குணங்களுக்கும்
தனித்தனியான குறிப்பிட்ட தன்மை உள்ளது. உங்கள் தலைப்பாகையை
காலிலும், அல்லது கையுறையை காலிலும், காலுறையை கையிலும் அணிய முயற்சித்தால் எப்படி
முடியும், அது சரியாக வராது. ஒவ்வொரு உடைக்கும் அதற்கென தனியாக குறிப்பிட்ட இடம்
உள்ளது, அதை வேறு இடத்தில் பயன்படுத்த
முடியாது.
எனவே ஸ்ரீ கிருஷ்ணர்
கூறுகிறார், ‘மூன்று குணங்கள் ஒவ்வொன்றிற்கும் தனக்கென ஒரு குறிப்பட்ட தன்மை,
அதற்கான இடம் உள்ளது, மற்றும் அவை என்னிடமிருந்து வந்தவை, ஆனாலும் அவை நானல்ல.
நான் அந்த மூன்று குணங்களை தாண்டியவன், எனவே என்னை அதில் தேடாதே’.
ஸ்ரீ கிருஷ்ண பகவான்
என்ன செய்கிறார் என்று தெரியுமா? அர்ஜுனரின் மனம் எங்கெல்லாம் கவரப்பட்டு செல்லுமோ
அங்கிருந்தெல்லாம் அதைத்
திரும்ப வரவழைத்து தன் மீதே குவிய வைக்கிறார். அதனால் தான் இதில் ஞானமும்
அறிவியலும் ஈடுபட்டு இருக்கிறது, மேலும் இதுதான் இந்த கீதையின் தனித்துவம். ஸ்ரீ
கிருஷ்ண பகவான் இந்த விசேஷமான ஞானத்தை கொண்டு, அர்ஜுனரின் மனம் எங்கெல்லாம் போகுமோ
அங்கிருந்தெல்லாம் அதை இழுத்து தன் மீது குவிய வைக்கிறார். அப்படியென்றால், அர்ஜுனருடைய
மனதை அர்ஜுனருகுள்ளேயே செலுத்தி அர்ஜுனரின் மெய்யுணர்வின் மீது குவிய வைக்கிறார். இதுதான்
குருவின் வேலை மற்றும் ஒரு சீடனின் கடமை.
எனவே, ஒருவர்
எங்கெல்லாம் பெருவலிமையைக் காண்கிறாரோ, அதெல்லாம் இறைவனுடையது, அதை வெளிக்
காட்டுபவருக்கு சொந்தமானது அல்ல என்பதை ஒருவர் உணர வேண்டும். எங்கெல்லாம் ஒருவர்
அழகைக் காண்கிறாரோ, அது
அந்த மனிதருடையதல்ல,
அழகின் பின் இறைவன் இருக்கிறார் என்பதை உணர
வேண்டும்.
இறைவன் இல்லாமல் எந்த அழகும் இருக்க முடியாது. அதனால் தான், ‘சத்யம் சிவம்
சுந்தரம்’, என்று சொல்லப்படுகிறது. எங்கெல்லாம் சிவ பெருமான்
இருக்கிறாரோ அங்கெல்லாம் அழகும் சத்தியமும் இருக்கிறது. இதை சொல்வதின் மூலம், ஸ்ரீ
கிருஷ்ண பகவான் அர்ஜுனரின் மனம் கவரப்படக்கூடிய
எல்லாவற்றிலிருந்தும் விடுவித்து, தன்னை நோக்கி இழுக்கிறார். கிருஷ்ணா
என்றால் கவர்ச்சி; அப்படியென்றால் எல்லாவற்றையும் தன்னை நோக்கிக் கவரக்
கூடிய ஒருவர் என்று பொருள். மனம் எங்கெல்லாம் அலையக்கூடுமோ
அதிலிருந்தேல்லாம் விடுவித்து மையத்திற்கு கொண்டுவருவது – அதுதான் அந்த
மையம் தான் ஸ்ரீ கிருஷ்ண பகவான்.
எனவே, எங்கேனும்
யாராவது ‘தேஜ்-புஞ்’ ஆல் (ஆன்மீக ஞானத்தால் விளைந்த பிரகாசம் – ஞானப்
பிரகாசம்) பிரகாசமாக காணப்பட்டால், அவர் ஸ்ரீ கிருஷ்ண பகவான் மீது ஆழ்ந்த அன்பில்,
காதலில் இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள், அதனால் தான் அவரால் எல்லோரையும்
தன்னை நோக்கிக் கவர முடிகிறது. மூன்று
குணங்களால் உலகில் ஏற்பட்டிருக்கும் வித்தியாசமான வற்றிலிருந்து மனதைத் திருப்பி
இழுத்து, நம்முள் இருக்கும் பரிசுத்தமான மெய்யுணர்வின் மீது குவிப்பது.
ஆன்மீக வழியில் இது ஒரு
தனித்துவமான படி மற்றும் பேராச்சரியமான அறிவியல்.