பயத்தை நீக்குதல் - நான்காம் பகுதி

14 மே 2013 - பெங்களூர், இந்தியா


                        
அடுத்த ஸ்லோகத்தில் பகவான் கிருஷ்ணர் மேலும் விளக்குகிறார்;

“சதுர் விதா பஜந்தே மாம் ஜனா: ஸுக்ருதினோர்ஜுன | ஆர்தோ ஜிக்ஞாஸுரர்த்தார்த்தீ ஞானீ ச பரதர் ஷப || (7.16)

முந்தைய ஸ்லோகத்தில் பகவான் தீய செயல்களை செய்பவர்களைப் பற்றி சொன்னார். ஆனால் உலகில் எப்போதும் தீயசெயல்களை செய்பவர் என்று யாருமே இல்லை. நல்ல குணம் சிறிதும் இல்லாத மனிதனும் கிடையாது. நற்செயல்கள் செய்து பகவானிடம் சரணம் அடைபவர்கள் நான்கு வகையானவர்கள். முதல்வகை அர்த்தாஹ, இதன் பொருள் மன உளைச்சலில் வாடுபவர்கள். ஞானமில்லாத ஒருவன் வாடும்போது அவனிடம் மாறுதல் துவங்கிவிட்டது என்று அறிந்து கொள். அவன் இந்த அரக்க குணத்தை விட்டு விலகத் தொடங்கிவிட்டான்.

தீய செயல்கள் புரிந்தவர்களை, அவர்கள் விதைத்த தீய செயல்களை, இயற்கையே பலமடங்கு அறுவடை செய்யும்படி வாட்டும். இதுவும் இறைவன் அருள் காரணமாக நடக்கும் செயல். ஏனென்றால் ஒருவன் துக்கத்தில் வாடும்போது, தன் பார்வையை ஆத்ம தரிசனத்துக்காக உள்நோக்கித் திருப்புவான். யாரும் துக்கப்பட விரும்புவதில்லை. துக்கம் யாருக்கும் பிடிக்காது.
எந்த உயிருக்கும் துக்கத்தைத் தாங்க முடியாது. துக்கத்தை யாராவது விரும்பினால் அது ஒரு வியாதி என்று தான் சொல்ல வேண்டும். அப்படிப்பட்டவர்கள் துக்கத்திலும் மகிழ்ச்சி அடைகிறார்கள். மேலும் மேலும் துக்கப்பட விரும்புகிறார்கள்.

சில கல்லூரி மாணவ மாணவிகள் எப்போதுமே சோகமான முடிவுள்ள திரைப்படங்களை மிக விரும்பிப் பார்க்கிறார்கள். (கதாநாயகன், கதாநாயகி உள்பட எல்லோருமே அந்த படத்தின் முடிவில் இறந்து விடுவதாக உள்ள கதை).(பார்வையாளர்கள் சிரிப்பு!!) இப்படிபட்ட படங்கள் அவர்களுக்கு மிகப் பிடிக்கிறது. இதுவும் ஒருவகையில் துக்கத்தை விரும்பும் வியாதியைப் போன்றது. அமெரிக்காவில் இப்படிப் பட்ட விளம்பரங்களைப் படிக்கலாம். “அழகான மனைவி தேவை. ஒரு சங்கிலியால் என்னைத் தினமும் அடிப்பவளாக இருக்க வேண்டும்.”

சிலர் அடி வாங்க விரும்புகிறார்கள். இது உண்மை. (பார்வையாளர்கள் சிரிப்பு!!) முதல் முறை படித்த போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் அங்கிருந்த போது ஒருவர் என்னிடம் இந்த விளம்பரத்தைக் காட்டினார். அந்த செய்தித் தாளில் இன்னொரு விளம்பரத்தையும் பார்த்தேன். “என்னை தினமும் ஷூவால் அடிக்கும் தோழி தேவை” இப்படி விளம்பரங்களைக் கொடுப்பவர்கள் சிறு வயதில் அடி வாங்கியிருக்கிறார்கள். அந்த அடி வாங்கும் உணர்ச்சியை மகிழ்ச்சியாக எதிர் பார்க்கும் குணம் அவர்களிடம் வளர்ந்துவிட்டது. அவர்களை யாராவது அடித்துக் கொண்டிருந்தால் அவர்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. மனோதத்துவ அறிஞர்களும் இப்படிப்பட்ட குணத்தை அனுமதிக்கிறார்கள். இதில் தவறு இல்லை என்று சொல்கிறார்கள். செயலால் அவர்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது என்கிறார்கள்.துக்கம் என்பது நமக்கு வலியை உண்டாக்குவது.. நமக்கு பிடிக்காத அனுபவம். தீய செயல் செய்தவர்களுக்கு துக்கம் வராமல் இருக்கவே முடியாது. தீய செயல்களின் பலன் துக்கம் தான். அப்படி துக்கப்படும் போது, அவர்கள் தங்கள் பார்வையை உள்நோக்கித் திருப்பி இறைவனை நாடி நல்லவர்களாக முடியும்.

நற்செயல் புரியும் நான்கு வகையான மனிதர்கள் என்னை வணங்குகிறார்கள். முதல் வகை துக்கத்தினால் வருந்துபவர்கள். துக்கம் வரும் போது எல்லாவற்றையும் துறந்துவிட நினைப்பார்கள்.

இரண்டாவது வகை மனிதர்கள் வாழ்க்கையில் அடைய விரும்பும் பொருள்களுக்காக என்னை வேண்டி வணங்குகிறார்கள். அவர்களின் முயற்சியால் மட்டும் அவர்கள் விரும்பும் பொருள்களை அடைய முடியாது என்று அவர்கள் அறிவார்கள். இறைவனின் அருள், (குரு அருள்) இருந்தால் மட்டுமே அப்பொருட்களை அடைய முடியும் என்று அவர்களுக்குத் தெரியும். அப்படி பொருள் விரும்பும் மனிதர்களும் என்னை வணங்குகிறார்கள். பள்ளி / கல்லூரி தேர்வு சமயத்தில் நீங்கள் இதைக் காணலாம். கோவில்களில் மாணவ மாணவியரின் நீண்ட வரிசையைப் பார்க்கலாம். (பார்வையாளர்கள் சிரிப்பு!!) கடவுளுக்குப் படைக்கும் இனிப்புப் பதார்த்தங்களில் வியாபாரம் அதிகரிக்கும். சிலர் குறிப்பிட்ட நாட்களில் கோவிலுக்குச் செல்வார்கள். (உதாரணமாகச் செவ்வாய்க் கிழமைகளில் அனுமனை வேண்டி கோவிலுக்குச் செல்வார்கள். அது புனிதமான நாள் என்று சிலரால் கருதப்படுகிறது.) வேலைக்காக நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தபின் கடவுளை வணங்குவார்கள். பிரார்த்தனை செய்வார்கள். இல்லையா? நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் முன் கடவுளை வணங்குவது எல்லோரும் செய்யும் செயல் தான். சிலர் “ஜெய் குருதேவ்” என்று சொல்வார்கள்.

இரண்டாம் வகை மனிதர்கள் விரும்பிய பொருள் கிடைப்பதற்காக என்னை வணங்குகிறார்கள். அவர்களும் நல்லவர்கள் தான். நற்செயல் புரிபவர்கள். இறைவனின் அருள் இல்லாமல் விரும்பியது கிடைக்காது என்று அறிந்த புத்திசாலிகள். இவர்கள் தன் முயற்சியால் மட்டும் தாங்கள் விரும்பிய பொருள் கிடைக்காது என்பதை நன்கு அறிந்திருக்கிறார்கள். அதிருஷ்டம் மற்றும் வினை பயன்படி தான் வேண்டியது கிடைக்கும் என்று நம்புகிறார்கள். இறைவனின் அருளை வேண்டி சரண் அடைகிறார்கள். பொருளை நாடி என்னிடம் சரண் அடைபவர்களும் நல்லவர்களே. பல நற் செயல்களைச் செய்திருக்கிறார்கள். மேலும் சிலர் வாழ்க்கையில் பொருளை அடைய விருப்பம் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இறைவன் மேல் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர்கள் எப்போதும் கவலையில் வாடுகிறார்கள். அவர்களின் கர்மவினை எதிர்மறைப் பயன்களையே தரும்.
நாத்தீகர்களின் பிரச்சினை இது தான். தங்களை நாத்தீகர் என்று நினைப்பவர்கள் மனதுக்குள் மிகவும் பயமுடையவர்களாக இருப்பார்கள். பெரிய காரியம் சாதிக்க வேண்டியிருக்கும் போது, வெளியில் திடமாக இருப்பது போலக் காட்சி அளித்தாலும், உள்ளுக்குள் மிகவும் பலவீனமாக இருப்பார்கள். முடிவு என்ன ஆகுமோ என்ற சந்தேகம், எதிர்காலத்தில் நிச்சயமின்மை வாடுவார்கள். (அவர்களுக்கு உதவ இறைவனின் சக்தியை போல் எதுவும் இல்லாத போது) எல்லாவற்றையும் அவர்களே செய்ய வேண்டும் என்கிற பய உணர்ச்சி இருக்கும். எல்லாமே ஒரு நிச்சயமில்லாமல் இருக்கும். இவ்வுலகம் ஓர் இருண்ட இடம் போல் அவர்கள் மன திடமில்லாமல் வாடுவார்கள். அவர்களின் கர்ம வினை நன்மையில் முடியும் என்று எப்படி சொல்ல முடியும்?

நல்ல கர்மவினை உள்ளவர்கள், எல்லா நேரத்திலும் எனக்குள் இறைவன் இருக்கிறார் என்று உணர்ந்து நடப்பார்கள். என் குருநாதர் என்னுடன் இருக்கிறார். எனக்கு வேண்டிய மனோதிடத்தை அளிப்பவர் அவர் தான் என்ற நம்பிக்கையோடு செயல்படுவார்கள். இறைவன், குரு மற்றும் தன் மேல் நம்பிக்கை உள்ளவர்கள் எதைக் கண்டும் பயப்பட மாட்டார்கள். அவர்களால் அமைதியாகத் தூங்க முடியும். எந்த சந்தேகமும் இல்லாமல் முழு மனதுடன் செயலில் ஈடுபடுவார்கள். அவர்களுடைய  திறமையின் மேல் அவர்களுக்கு முழு நம்பிக்கை உண்டு. அவர்கள் செய்யும் எல்லா செயல்களிலும் இறைவனின் துணை இருக்கிறது என்று அவர்கள் அறிவார்கள். இந்த நம்பிக்கை இல்லாமல் வாழ்க்கையில் முன்னேற முடியாது. தன் மேல் நம்பிக்கை, சமுதாயத்தின் மேல் நம்பிக்கை, எங்கும் நிறைந்திருக்கும் கண்ணால் காண முடியாத இறைவனின் சக்தியின் மேல் நம்பிக்கை இவை வாழ்க்கைக்கு மிக முக்கியமாகும். இந்த மூன்று நம்பிக்கைகளும் ஒன்று தான். வேறு அல்ல.

மூன்றாவது வகையான மனிதர்கள் “நான் யார்? இந்த உலகத்தில் என்ன இருக்கிறது?வாழ்க்கையின் அர்த்தம் என்ன?” இப்படிப்பட்ட ஞானத்தின் மேல் உண்மையாகவே நாட்டம் உடையவர்கள். இவர்கள் ஞானம் பெறுவதற்காக என்னை வணங்குகிறார்கள். என்னை வணங்கும் நான்காவது வகையான மனிதர்கள் எல்லாம் அறிந்த ஞானிகள். அவர்கள் உண்மையை உணர்ந்தவர்கள். என் மேல் நம்பிக்கை உள்ளவர்கள். உண்மையை உணர்ந்தவர் கட்டாயமாக என் மேல் நம்பிக்கை உள்ளவராக இருப்பார். தன் ஆத்மாவை அறிந்த ஒருவருக்கு எப்படி (என் மேல்) நம்பிக்கை இல்லாமல் இருக்க முடியும்?

எனவே 1. துக்கத்தில் இருப்பவர்கள் 2. பொருளை அடைய விரும்புபவர்கள் 3. ஞானம் தேடுபவர்கள் 4. ஞானிகள் என்று நான்கு வகையான மனிதர்கள் என்னை வேண்டி சரண் அடைகிறார்கள்.
நான்கு வகையானவர்களுமே நல்ல கர்மவினை உடையவர்கள்.

இப்போது நீ உன் கடந்த கால வாழ்க்கையை நினைத்துப் பார். துக்கத்தில் இருந்த போது, ஏதோ பொருளை விரும்பிய போது, ஞான வேட்கையோடு உண்மையை நாடிய போது, உண்மை உணர்ந்தவனாக இறைவனை வணங்கிய நேரங்களை நினைவுக்குக் கொண்டு வா. ஞானி என்பவர் தன் வாழ்க்கையின் மாற்றங்களை கவனித்து,மிகவும் நன்றியுடன் எல்லாவற்றையும் இறைவனுக்கு அர்ப்பணித்து வாழ்பவர். எல்லாமே இறைவனின் அருளால் நிறைய கிடைத்து விட்டது என்று திருப்தியோடு இருப்பவர். இனி மேல் எதுவும் தேவை இல்லை என்று நினைப்பவர்.

யார் திருப்தியுடனும், ஆழ்ந்த நன்றியுடனும் இறைவனிடம் சரண் அடைகிறார்களோ, அவர்கள் ஞானிகள். அவர்களுக்குத் தேவை என்று ஒன்றும் கிடையாது. ஏதாவது வேண்டும் என்று நினைப்பதற்கு முன்பே அது கிடைத்து விடும். அவர்களுக்கு தாகம் எடுப்பதற்கு முன்பே யாராவது தண்ணீர் கொடுப்பார்கள். என் தகுதிக்கு மேல் எனக்கு எல்லாம் கிடைத்திருக்கிறது என்று நினைப்பவர் அறிவாளி. அப்படி அவர் உணரும் போது அன்பு, நன்றி, திருப்தி இவற்றால் நிறைந்து இயல்பாக இறைவனிடம் சரண் அடைந்திருப்பார்.

ஞானம் இல்லாத போது திருப்தி இருக்க முடியாது. ஞானம் இல்லாத போது நன்றி உணர்வு இருக்க முடியாது. திருப்தி இல்லாதவர்கள் எப்போதும் எதையாவது நினைத்து குறைபடுவார்கள்.
ஆகவே நான்கு வகையான மனிதர்கள் இறைவனிடம் சரண் அடைகிறார்கள். ஒரே மனிதனிடம் இந்த நான்கு வித குணங்களும் இருக்க வாய்ப்பு இருக்கிறது. முதலில் துக்கத்தில் இருக்கும் போது இறைவனிடம் சரண் அடைந்திருக்கலாம். பின்பு பொருள்களின் ஆசைக்காக இறைவனை வணங்கியிருக்கலாம். பின்பு ஞானியாகவும் இறைவனிடம் சரண் புகுந்திருக்கலாம். வாழ்க்கையின் பல்வேறு காலங்களில் ஒருவரிடம் இந்த மாற்றங்கள் நிகழக் கூடும். ஒரே நிலையில் நீ இருக்க முடியாது. துக்கப்படும் போது மட்டும் தான் இறைவனை நினைக்க அவசியம் என்றில்லை. அப்படி தேவையில்லை.