8 மே 2013 - பெங்களூரு,
இந்தியா
நான் உங்களுக்கு ஒரு
போட்டி வைக்கிறேன். சவாலை ஏற்கத் தயாரா?‘அ’ சேர்க்காமல்
உங்களால் ‘க’ என்ற எழுத்தை உச்சரிக்க முடியுமா? உங்களால் முடியாது. ‘அ’
சேர்க்காமல் உங்களால் ‘க’ வை உச்சரிக்க முடியாது. சரி, ‘அ’ சேர்க்காமல்
‘ச’ என்ற எழுத்தை உச்சரிக்க முயலுவோம். முடியுமா? முடியாது!
இப்படிதான்
சம்ஸ்க்ருதத்தில் மெய்யெழுத்துக்கள் வடிவமைக்கப் பட்டுள்ளது.
அ, இ, உ, ரி, லி, எ, ஐ,
ஒ, ஔ, அம், அஹ் - இவையெல்லாம் உயிர்
எழுத்துக்கள். க(ka), க்ஹ(kha), க(ga), க்ஹ(Gha), ந, ச, ச்ச, ஜ, ஜ்ஹ, ண, த(tha),
த்ஹ(thha), த(dha), தஹ்(dhha), ட(da), ட்ஹ(dha), ட(ta), ட்ஹ(tha), ன, ப(pa),
ப்ஹ(pha), ப(ba), ப்ஹ(bha), ம ஆகியவை மெய்யெழுத்துக்கள். உயிரெழுத்துக்கள்
இல்லாமல் இந்த மெய்யெழுத்துக்களை உச்சரிக்க முடியாது. புரிகிறதா? ‘கி’ என்று சொல்லும்போது,
‘இ’ சேர்க்காமல் சொல்ல முடியாது. இது
அவ்வளவு தூரம் அறிவியல் பூர்வமாக அமைக்கப்பட்டிருப்பதால் தான் இது தேவ பாஷை
என்று கூறப்படுகிறது; கடவுளின் மொழி, ஏனென்றால் இயற்கையோடு ஒட்டி
அமைக்கப்பட்டிருகிறது. ‘அ’
என்று சொல்லும் போது,
அது படைப்பு, எல்லாமே திறக்கிறது. ‘உ’ என்று சொல்லும் போது அது தொடர்கிறது, பின்னர்
‘ம்’ என்று சொல்லும்போது அது முடிகிறது.
ஓசை எப்படி பிறக்கிறது?
இது மிக அழகாக ஒரு ரிஷியால் சொல்லப்பட்டிருக்கிறது. சுயம், அறிவோடு இணைந்து,
மறுபடி மனதோடு கைகோர்க்கும் போது,
அது உடலில் வெப்பத்தை அல்லது சக்தியை ஏற்படுத்தி, அந்த சக்தி காற்றை தொண்டை வழியாக
அனுப்பும் போது
ஓசை பிறக்கிறது. இப்படி ஓசை எழுவதை அறிவியல் பூர்வமாக அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ஞானம் இதயத்திற்கோ
(மனம்) அல்லது தலைக்கோ (புத்தி) அல்ல. இதயத்திற்கும் தலைக்குமான மிகச் சரியான ஒரு கலவை.
இதுதான் ஆன்மீக ஞானம். மேலும்,
இசையின் ஸ்வரங்களை கவனித்தீர்களானால், ச ரி க ம ப த நீ என ஒவ்வொரு ஸ்வரமும்
ஒரு குறிப்பிட்ட விலங்கைக் குறிக்கிறது. ச என்ற ஸ்வரம் மயிலுக்கானது. ரி
என்ற ஸ்வரம் பசுவையும், க என்ற ஸ்வரம் ஆட்டையும், ப என்ற ஸ்வரம்
வானம்பாடியையும், த என்ற ஸ்வரம் குதிரையையும், நீ என்ற ஸ்வரம்
யானையையும் குறிக்கிறது. யானை மிகப் பெரிதாய் இருந்தாலும் அதன் குரல் சிறிதாய்
உச்ச ஸ்தாயியில் இருக்கும். ஒவ்வொரு
விலங்கின் குரல்கள்தான் இசையின் ஸ்வரங்களான ச ரி க ம ப த நீ.
அதைப் போல, மெய்யெழுத்துக்களும் விளங்குகுகளோடு
தொடர்புடையது. க, ச்ச ஆகியவை பறவைகளோடு தொடர்புடையது. நாம் பழக்கிவிட்டால் முழு
மொழியையும் பேசக்கூடிய கிளி மற்றும் மைனாவைத் தவிர மற்ற பறவைகள் க, ச்ச என்ற இந்த
இரண்டைதவிர வேறெதையும் பேச முடியாது. பின்னர், த, த்ஹ ஆகியவை நீர் மற்றும்
நிலத்தில் வாழும் தவளை போன்ற விலங்குகள் எழுப்பக்கூடிய ஒலி.
மெய்யெழுத்துக்களில்
இறுதியில் வரும் ப(pa), ப்ஹ(pha), ப(ba), ப்ஹ(bha), ம ஆகிய ஒலிகளை பாலூட்டிகலான
ஆடு மாடு போன்றவை எழுப்புகிறது. இயற்கையோடு
ஒட்டியே மெய்யெழுத்துக்கள்
அமைக்கப்பட்டுள்ளன. இதை யாரும் உருவாக்கவில்லை, இது நமக்குக் கிடைத்த ஒரு பரிசு;
இது தரவிறக்கம் செய்யப்பட்டது. வேதங்கள் ஸ்ருதி என்று அழைக்கப்படுகிறது,ஏனென்றால் இதை எந்த ரிஷியும்
புத்தியால் எழுதவில்லை; எனவே அதற்கு அவர்கள் பெருமை ஏற்கவில்லை. அவர் எளிமையாகக்
கூறியது என்னவென்றால், நான் தியானத்தில் ஆழ்ந்த போது இது எனக்கு கேட்டது; அதை
நான் அப்படியே இறக்கியிருக்கிறேன். எனவே அவை ஸ்ருதி என்று அழைக்கபடுகிறது; ஆழ்ந்த
தியானத்தில் கேட்கப்பட்டது. சமஸ்க்ருத மந்திரங்கள் அனைத்தும் அப்படி ஆழ்நிலை
தியானத்தில் பெறப்பட்டவை தான்.
அப்படித்தான் சொல்லப்பட்டிருக்கிறது.
கே:
குருதேவ், ‘அனுக்ரஹம்’ என்றால் என்ன? அதை எப்போது பெற முடியும்?
குருதேவ்:
‘அனுக்ரஹம்’ என்றால் அருள் அல்லது கருணை. ‘அனுக்ரஹம்’ இல்லாமல்
வாழ்க்கையில் எதுவுமே முடியாது. அதற்கான முயற்சி இன்றி உங்களுக்கு அதிகம்
கிடைத்தால் உங்களுக்கு ‘அனுக்ரஹம்’ ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது என்று
சொல்லப்படுகிறது. என்ன சொல்கிறேன் என்று புரிகிறதா? பொதுவாக உங்கள்
வேலையில் நீங்கள் கடின உழைப்பு செய்து அதற்கான ஊதியம் பெறுகிறீர்கள். எனவே நீங்கள்
அதை சம்பாதித்தேன் என்று சொல்வீர்கள். ஆனால் உங்களுக்கு யாராவது பரிசு தந்தால் அதை
நீங்கள் சம்பாதித்தேன் என்று சொல்வதில்லை. சம்பாதித்த ஒன்றை பரிசு என்று சொல்ல
முடியுமா? இல்லை. அதற்கான உழைப்பு ஏதுமின்றி நீங்கள் பரிசு பெறுகிறீர்கள். நீங்கள்
ஏதோ ஒரு பரிசோ அல்லது விருதோ வாங்குகிறீர்கள் ஆனால் அதற்கு நீங்கள் எந்த
முயற்சியும் செய்து தகுதி பெறவில்லை என்றால் அதை ‘அனுக்ரஹம்’ என்று
சொல்லலாம். நம்
தகுதிக்கு மீறி அல்லது நம் திறமைக்கு என்ன கிடைக்குமோ அதைவிட அதிகமாய் கிடைப்பதை
அருள் என்று சொல்லலாம். நம் தகுதிக்கு மீறி நம் திறமைக்கு மிக அதிகமாக நம்
வாழ்க்கையில் நமக்கு கிடைப்பதை பார்க்கும்
போது
ஒரு நன்றியுணர்ச்சி பெருகும். அந்த நன்றியுணர்ச்சி பெருகுவதொடு, நம் புலம்பல்கள்
குறைந்து ஏராளம் கிடைக்கும்..நன்றியுணர்வு உள்ள ஒருவருக்கு எதிலும்
குறைவிருக்காது.
வாழ்க்கையில் யாருக்கு
குறைவு இருக்கும்? ‘எனக்கு அவ்வளவு திறமை இருந்தும் எனக்கு எதுவும் கிடைக்கவில்லை’
என்று நினைபவருக்கே. தனக்கு
பிரதமர் பதவி வேண்டும் என்று நினைத்த ஒருவர் முன்பு இருந்தார். அவருக்கு கழுதை
மேய்க்கும் திறமை கூட இல்லாமலிருந்தும், தனக்கு பிரதமர் பதவி வேண்டும் என்று
ஆசைப்பட்டார். அப்படிப்பட்டவருக்கு என்ன சொல்வீர்கள்? அவருடைய புலம்பல்கள் குறையவே
குறையாது. எப்போதும் அவருக்கு புகார்கள் அதிகமாகவே இருக்கும். நன்றியோடு இருப்பது
என்றால் புகார்கள் காணாமல் போய்விடும் அவ்வளவே. நாம் கேட்டதை விட அதிகம்
அல்லது நம் தகுதிக்கு மீறி நமக்கு அதிகம் கிடைத்திருக்கிறது என்ற உணர்வு உங்கள்
இதயத்தில் இருந்தால் ஆழமான நன்றியுணர்வு உங்களுள் எழும். நன்றியுணர்வு
இருக்கும்போது உங்கள் வாழ்க்கையில் குறைவு என்பதே இருக்காது. அப்படிப்பட்ட
ஒருவருக்கு, விரும்பியதெல்லாம்
நிறைவேறும். இப்போது
நீங்கள் மிகக் கடினம் என்று சொல்லலாம். ஆம் இது கடினம் தான். எதையும் அடைவது
எளிதல்ல. ஆனால் அதை நோக்கி ஒரு அடி முன்னே எடுத்து வைக்கும்போது அது எளிது என்பதை
காண்பீர்கள்.
கே:
குருதேவ், பரா, பஷ்யந்தி, மத்யமா மற்றும் வைகாரி என பேச்சு
நால்வகைப் படும் என்று சொல்லபடுகிறது. ஒரு சாதகருக்கு (ஆன்மீகப் பயிற்சியில்
இருப்பவருக்கு) இதன் முக்கியத்துவம் என்ன?
குருதேவ்:
நாம் இப்போது செய்துகொண்டிருக்கும் உரையாடல் ‘வைகாரி’’ எனப்படும்.
இந்த ‘வைகாரி’’ வகையில் மட்டுமே மனிதர்களால் பேச முடியும். ‘சட்வாரி வாக்
பரிமிட்டா பதானி தானி விதுர் பிராமான்யா யே மனிஷினாஹ். குஹா ட்ரினி நிஹிடா
நியியேன்காயன்ட்டி துரியம் வாச்சோ மனுஷ்யா வதண்டி’ (ரிக்வேத சம்ஹிதா
1.164.45) எனப்படுகிறது.
மனிதர்கள் தங்களுக்குள்
பேச இந்த நான்காவது வகைப் பேச்சைத் தான் பயன்படுத்துவார்கள். மற்ற மூன்று வகைகள்: பரா,
மத்யமா மற்றும் பஷ்யந்தி வகைகளை மொழிகள் தேவைப்படாமல் மிக ஆழமான
அளவில் நடக்கும் தொடர்புக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மொழியே இல்லாமல், ஆனாலும்
முழு சாரமும் புரிந்து கொள்ளப்படும்
அந்த நிலை பர வாணி என்று அழைக்கப்படுகிறது.
இறந்த பின்னர், ஒருவர்
தன் உடலைத் துறக்கிறார், மேலும் மொழியை உபயோகித்து பேசக்கூடிய திறனையும் துறந்துவிடுகிறார்.
அந்த நிலையில், நடப்பது எல்லாவற்றையும் கவனிக்கிறார், அந்த கவனிப்பில் அறிவு
கிடைக்கிறது. இதுவே பஷ்யந்தி என்று அழைக்கப்படுகிறது.
(சம்ஸ்க்ருதத்தில் ‘பஷ்யா’ என்றால் பார்ப்பது அல்லது கவனிப்பது என்று பொருள்). பரா
மற்றும் பஷ்யந்தி நிலைக்கு இடையே உள்ள பேச்சு வகை மத்யமா
என்று அழைக்கப்படுகிறது.
யாராவது பேசப்படும்
மொழி புரியாவிட்டாலும் என்ன சொல்ல முயற்சிக்கிறார்கள் என்பது புரிகிற அந்த அனுபவம்
பல தடவை
நடக்கிறது. மத்யமா என்பது அப்படி ஒரு நிலை தான். உதாரணமாக, குழந்தை
கருவிலிருக்கும் போது,
அந்தக் குழந்தை தாயைப் பார்த்ததில்லை, அந்தத் தாயும் குழந்தையைப் பார்த்ததில்லை.
ஆனாலும் ஒருவரை ஒருவர் முழுமையைப் புரிந்து
கொள்கிறார்கள்.
அந்த நிலையில் மொழிப் பரிமாற்றம் இல்லை, அப்போதும் கூட, மொழியைத் தாண்டிய தொடர்பு
நடக்கிறது. இதுதான் மத்யமா.
இதனால்தான்
இந்த முழு படைப்பும் ஹிரண்யகர்பம் (பொன் முட்டை அல்லது பொன் கர்ப்பம் என்று
பொருள்) என்று அழைக்கப்படுகிறது. நாம் அனைவரும் இந்த அண்டவெளி கர்பத்தில்
இருக்கிறோம்; இதற்கு வெளியே என்ன இருக்கிறது என்று தெரியாது.
கருவிலிருக்கும்
குழந்தையைத் தாய்க்குத் தெரியும் ஆனால் அந்தக் குழந்தைக்குத் தாயைத் தெரியாது;
அதைப்போல கடவுளுக்கு நம்மைத் தெரியும் ஆனால் நமக்கு கடவுளைத் தெரியாது. அதனால் தான்
இறைவனை ஆக்யேயா (எப்போதும் இருப்பது ஆனால் தெரியாதது என்று பொருள்)
என்று அழைக்கிறார்கள். இறைவனைத் தெரிந்து
கொள்ளவே
முடியாது ஆனால் அனுபவிக்க முடியும். எப்படி அனுபவிக்க முடியும்? உங்களுக்குள்ளே
இறங்கும் போது. எனவே மொழி தேவைப் படாமல்
பேசப்படுவது பர வாணி, மேலும் அது உணர்வுகளுக்கு அப்பாற்பட்டது. பஷ்யந்தியில் நம் உணர்வுகளைக் கொண்டும் தொடர்பு
கொள்கிறோம்.
நம் மெய்யுணர்வின்
ஆழமான தளங்களுக்குச் செல்லும் போது,
நம்முடைய உடம்பிலுள்ள ஒவ்வொரு புலன் உறுப்புகளும் எல்லா வேலைகளையும் செய்யும்
திறனைப் பெறுகிறது. அப்படி என்றால் நம்முடைய ஐந்து புலன்களின் வேலையையும் ஒரே
உறுப்பு செய்கிறது. எனவே
அந்த நிலையில், ஒரே ஒரு தொடுகையில் உங்களால் உணர, பார்க்க, நுகர, சுவைக்க மற்றும்
அந்தப் பொருளைப் பற்றிய முழு அறிவையும் தெரிந்து கொள்ள முடிகிறது. எனவே ஒவ்வொரு உறுப்பும் ஐந்து
புலன்களின் (தொடு உணர்ச்சி, பார்த்தல், கேட்டல், நுகர்தல் மற்றும் சுவைத்தல்) வேலையையும்
தானே செய்யக் கூடிய
திறனை பெற்றுவிடுகிறது. எனவே அந்த பஞ்சேந்த்ரியங்கள் (ஐந்து புலன்கள்) கரைந்து ஒரு
புலனாய் மாறிவிடுகிறது (உணர்வுப் புலன்), அந்த நிலைதான் பர-சேத்னா
(தூய மெய்யுணர்வு) நிலை எனப்படுகிறது. அந்தப் பேச்சு தான்பர வாணி.அதனால் தான், ‘ஜானத்
தும் ஹி தும் ஹி ஹோ ஜாயே’, எனப்படுகிறது. (அப்படி என்றால் தெரிந்து
கொள்பவர், தெரிந்து கொள்ளபப்டுவது மற்றும் தெரிந்தும் கொள்ளும் அறிவு ஆகிய
மூன்றும் ஒன்றாகும் போது)
அதனால்தான், இறைவன் மீது மிக ஆழமான பக்தி கொள்பவர் இறைவனாகவே ஆகிவிடுகிறார்
என்பார்கள். அதைப்போல, பிரம்ம ஞானம்
பெற்றவர்கள் பிரம்மனாகவே ஆகிவிடுகிறார்கள். அந்த நிலையில், அன்பு செய்பவர் அன்பு
செய்யப்படுபவர் அந்த அன்பு ஆகிய மூன்றும் ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டதல்ல. அவை
அனைத்தும் கரைந்து ஒன்றாகிறது. இதுதான் பர வாணி நிலை.
மொழியைப் பற்றி யோசிக்கும்போது,
மொழியைப் பேசுபவர் மற்றும் மொழியைக் கேட்பவர் இருக்க வேண்டும். இதற்கு இருவர்
வேண்டும் (இரண்டாக பிரிந்திருக்கும் தன்மை). இங்குதான் உங்களுக்கு வைகாரி
தேவை. வைகாரி என்றால் உங்களைச் சுற்றி இருக்கும் வேற்றுமைகள். அதனால் தான் உலகில் பல மொழிகள்
உள்ளன, ஒன்று மட்டுமல்ல. ஆனால் பர வாணி ஒன்றுதான் இருக்கிறது, மற்றும்
அதற்குள்ளேயே எல்லாம் அடங்கி விடுகிறது.
பர வாணியில், ஒரு வார்த்தை
உருவாவதற்குள் அதன் அர்த்தம் உடனடியாக புரிந்துவிடுகிறது. எனவே வார்த்தை அங்கு
தேவையேயில்லை. இவை
எல்லாம் புரிந்துகொள்ள மிகவும் நுட்பமாகத் தெரிகிறது. எனவே இதை நீங்கள் அறிவியல்
நோக்கில் பார்த்தால், பிறகு புரிந்துகொள்வது எளிது.
கே:
குருதேவ், மீராபாயோ (இந்தியாவின் மகா சந்நியாசினியும் ஸ்ரீ கிருஷ்ணரின்
பக்தையும் ஆவார்) அல்லது சந்த் துக்கராமோ பாரம்பரிய இசையை படித்திருக்கவில்லை. அவர்கள் தங்கள் பஜனைகளால் ஞாபகம் கொள்ளப்படுகிறார்கள். எனக்கும் பாடத் தெரியாது.எனக்கு என் பக்தியை காண்பிக்க வாய்ப்பாவது கிடைக்குமா என்று தயை கூர்ந்து சொல்லுங்கள்.
குருதேவ்:
ஆம், நிச்சயமாக! ஏற்கனவே அது முடிந்தது.
ஒரு
மலர் தன் மணம் பரப்ப வாய்ப்புக்காக கேட்பதோ காத்திருப்பதோ இல்லை. மலர் தான்
இருக்கும் இடத்தில் மணம் அப்படியே பரவுகிறது, அது தவிர்க்க முடியாதது. எனவே,
அன்பும் பக்தியும் இருக்குமிடத்தில் அதை யாரிடமும் இருந்து மறைக்க முடியாது. பாருங்கள், அன்பு என்பது
மறைக்க முடியாத ஒன்று. அன்பை மறைக்க முடியாது, அதை முழுமையாக வெளிப்படுத்தவும்
முடியாது. அன்பை வெளிப்படுத்த நாம் முயலும் ஒவ்வொரு முறையும், அதை முழுமையாக
வெளிப்படுத்த முடியவில்லை என்றே நாம் உணர்கிறோம், மேலும் இது ஒவ்வொரு காதலரின்
பிரச்சினை. தங்கள் காதலை எவ்வளவு தான்
வெளிப்படுத்த முயன்றாலும், அது குறைவாகவே உள்ளது என்பதைக் காண்கிறார்கள்.
கே:
குருதேவ், உங்களிடமிருந்து அவ்வளவு அழகான ஞானத்தை நாங்கள் வருடக்கணக்கில்
கேட்டுக் கொண்டு வருகிறோம். ஆனால் என்னால் அதை செயல்படுத்த முடியவில்லை. நான் என்ன
செய்வது?
குருதேவ்:
அந்த ஞானத்தை செயல்படுத்தும் முயற்சிகளிலேயே நீங்கள் தங்கிவிட்டீர்கள். சற்றே
இறுக்கம் தளருங்கள். நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை! எல்லாமே தானாக
நடந்துவருகிறது.