18 பிப்ரவரி 2013 - பெங்களூரு, இந்தியா
சத்தியம் என்பது நீங்கள் தப்பிக்க முடியாதது, அது விவரிக்க இயலாதது. சத்தியத்தை
விவரிப்பது மிகக் கடினம், அதே அளவு அதை தவிர்ப்பதும் கடினம். அதை போலவே, அழகு என்பதை நீங்கள் கைக்கொள்ளவும் முடியாது,
அதை நீங்கள் துறக்கவும் முடியாது. அன்பு என்பது மறைக்க
இயலாதது. நீங்கள் அன்பை மறைக்கவும் முடியாது அதை முழுதுமாக வெளிப்படுத்தவும்
முடியாது. முயன்று தான் பாருங்களேன்.அன்பை மறைப்பது முடியவே முடியாது.
நீங்கள் அன்பு வைத்திருக்கும் ஒருவருக்காக உங்கள் கண்களில் அன்பு வழிந்தோடும்.
ஒருவருடைய இதயம் அன்பால் நிரம்பியிருந்தால், அவருடைய கண்களிலிருந்து அன்புக்
கதிர்களே வீசும். ஆனாலும் அதை உங்களால் முழுதுமாக வெளிப்படுத்தவும் இயலாது.
எப்படிச் செய்ய முடியும்? காலங்காலமாய், மனிதன் அன்பை தெரிவிக்க முயன்று
வருகிறான். எல்லா வழிகளும் முயற்சித்து விட்டான்
ஆனால் அவனால் முழுதுமாக வெளிப்படுத்த முடியவில்லை. அதனால் தான் காதலில் இருப்பவர், ‘என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை!’ என்று எப்போதும் கூறுகிறார்கள்.
ஏன் இதை சொல்கிறார்கள்? ஏனென்றால் அவர்களால் தங்களுடைய அன்பை முழுதுமாக
வெளிப்படுத்த முடியவில்லை. தங்களை யாரும் புரிந்து கொள்வதில்லை என்று பொதுவாக
பெண்கள் புகார் செய்வார்கள். பெண்கள் தங்கள் குடும்பத்தினர் அனைவர் மீதும் அன்பாய் இருப்பார்கள், தங்கள் அன்பை முழுதுமாக
வெளிப்படுத்த முடியாததால், குடும்பத்திலுள்ள யாரும், கணவரோ, மகனோ, அல்லது தந்தையோ
யாரும் புரிந்து கொள்வதில்லை என்று உணர்கிறாள். எனவே இன்றைய ஞானத்தின் சாரம் இது தான். இதைப் பற்றி
ஆழமாய் யோசிக்கும் போது உங்களுள் மேலும் ஞானம் மலரும்.
உங்கள் வாழ்க்கையில் உங்களுக்குக் கிடைத்த அனுபவங்களை நன்றாய் கவனியுங்கள்,
இந்த அனுபவங்களிலிருந்து என்ன கற்றுக் கொண்டீர்கள் என்பது முக்கியம். அதே
நேரத்தில், நீங்கள் மற்றவர்களுக்கு எப்படிப் பயன்படலாம், மற்றவர்களுக்கு எப்படி
உதவி செய்யலாம் என்று எண்ணிப் பாருங்கள்.
நாம் பார்க்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் இரண்டு – நான்
மற்றவர்களுக்கு என்ன செய்யவேண்டும்? என் வாழ்க்கையிலிருந்து எனக்கு என்ன வேண்டும்?
கே: குருதேவ், என்னுடைய
கேள்வி சரணாகதி பற்றியது. சரணாகதிக்கும் அகங்காரத்திற்கும் உள்ள முரணைப் பற்றி
தயவு செய்து விரிவாகக் கூறுங்களேன்.
குருதேவ்: நீங்கள் எதை சரணாகதி செய்ய வேண்டும்? ஏதாவது நல்லவற்றை
சரணாகதி செய்ய மாட்டீர்கள். அன்பை சரண் செய்ய வேண்டாம். சத்தியத்தை சரண் செய்ய
வேண்டாம். எனவே எதைச் சரண் செய்வீர்கள்? உங்களுடைய தீய பழக்கங்கள், உங்கள் பிரச்சினைகள், மன அழுத்தம் மற்றும் உங்கள்
இதயத்தை சங்கடப் படுத்தும் எல்லாவற்றையும் நீங்கள் சரண் செய்யுங்கள். உங்கள்
பிரச்சினைகளைக் கீழே போடுங்கள் – இதை செய்ய தான் நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
உங்களிடம் கடவுள் என்ன கேட்கிறார்? உங்கள் வசதியை விட்டு விடுங்கள் என்று கேட்கமாட்டார். நல்லன எல்லாவற்றின்
வடிவமே இறைவன். அதனால் நீங்கள் கொண்டிருக்கும் சிறு மகிழ்ச்சியை விட்டு விடச் சொல்லிக் கேட்பதினால் அவருக்கு என்ன இலாபம்? அவர்
அன்புக் கடல், உங்களிடம் உள்ள கொஞ்சம் அன்பைக் கேட்டு என்ன செய்யப் போகிறார்?
இறைவனிடம் என்னதான் இல்லை? அவரிடம் பிரச்சினைகள் இல்லை, துயரங்கள் இல்லை
மற்றும் கஷ்டங்கள் இல்லை; அதை தான் அவர் தன்னிடம்
கொடுத்து விடும்படி கேட்கிறார். அதை உங்களால்
கொடுக்க முடியாதா? எனவே உங்களுடைய எல்லா தீய குணங்களையும் சரண் செய்துவிடுங்கள்.
உங்களுடைய நற்குணங்களை சரண் செய்யச் சொல்லி யாரும் எப்போதும் கேட்க
மாட்டார்கள். உங்கள் பெருமைகளையும் எதிர்மறை குணங்களையும் சரண் செய்யுங்கள். அதை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அவ்வளவு இலேசாககி விடுகிறீர்கள். எனவே நீங்கள் உள்ளேயிருந்து இலேசாக
உணர்வதற்கு உதவும் செயல்முறை இது.
உங்களுக்கு தேவையில்லாத அனைத்தையும் சமர்பித்து விடுங்கள். அதை ஏன் இன்னும் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
இதுதான் சரணாகதி என்பது. இதை செய்வதின் மூலம், நீங்கள் உங்களுடைய உண்மையான இயல்பை,
உண்மையான வடிவத்தை அடைகிறீர்கள். உங்களுடைய உண்மையான இயல்பு என்ன? அது அன்பு,
மகிழ்ச்சி மற்றும் நிறைவு. உங்களுடைய உண்மையான இயல்புக்கு வருவதே உண்மையான சரணாகதி
என்பது.
அதனால் தான், ’சமாதி சித்தௌ ஈஸ்வரி
ப்ரநிதாநாத்’ என்று சொல்லப் படுகிறது. இறைவனிடம் சரணாகதி அடைவதின் மூலம்
ஒருவர் இயல்பாகவே சமாதி நிலையை அடைகிறார். நமது நூல்களில் சொல்லப் பட்டிருக்கிறது.
கே: என்னுடைய அம்மா சுத்தம்
பேணுவதிலும் வீட்டை தூய்மையாய் வைத்திருப்பதிலும் மிகவும் கண்டிப்பாய்
இருக்கிறார். இது காலையில் ஆரம்பித்து இரவு வரை தொடரும். பூஜை மற்றும் மற்ற
சடங்குகளிலும் மிகவும் குறிப்பாக இருக்கிறார். இது வீட்டில் நிறைய பிரச்சினைகள்
உருவாக்குகிறது. நான் ஏன் அப்படி இருக்க வேண்டும்? இது கட்டாயம் தேவையா? அவருக்கு
என் மீது அன்பு இல்லை என்று நினைக்கிறேன்.
குருதேவ்: கட்டாயம் சுத்தம் பேண
வேண்டும் தூய்மை வேண்டும் என்று சாத்திரங்கள் எங்கும் சொல்லவில்லை. இதன் பின்னே
உள்ள ஆழமான பொருளை புரிந்துகொள்ள வேண்டும். இரண்டு விதமான தூய்மைகள் இருக்கின்றன. அந்தஹஷுசி
(உள்ளே உள்ள தூய்மை) மற்றும் பகிரங்கஷுசி (சுற்றுப்புற தூய்மை).
எனவே இந்த இரண்டு தூய்மைகளையும் நாம் கடைபிடிக்க வேண்டும். ஆனால், மக்கள் இதை
வித்தியாசமாக புரிந்து கொண்டு, காலக்கிரமத்தில் இதை மிகச்
சிக்கலாக்கி விட்டனர், மற்றும் சிலர் இதில் மிகக் கண்டிப்பாகி விட்டனர். அதனால் தான் நான் சொல்கிறேன், நாராயணா என்று
ஜெபிப்பதன் மூலம் உங்களிடம் உள்ள எதிர்மறைகள் எல்லாம் கழுவப்பட்டு தூய்மை
அடைகிறீர்கள். உங்களுக்கு புரிந்ததா?
அதனால் தான், ‘அபவித்ரா
பவித்ரா சர்வாவஸ்தங்கடோபிவா யஸ்மரீத் புண்டரீகாக்ஷம் சபஹ்யா-பியந்தரஹா ஷுசிஹி’ என்று நாம் ஜெபிக்கிறோம். இதன் பொருள், எங்கும்
பரவியிருக்கும் பேருணர்வான நாராயணனை தியானிப்பவர்கள் உடனடியாக உள்ளும் புறமும்
தூய்மை செய்யப்படுகிறார்கள். எனவே, ‘புண்டரீகாக்ஷ புணத்துமாம்’
என்று ஜெபிப்பதே போதும் என்று உங்கள் அம்மாவிடம் சொல்லுங்கள். இதைச் செய்வதின்
மூலம் உள்ளும் புறமும் எல்லாம் தூய்மை செய்யப்படுகிறது. உங்களுக்குப் புரிந்ததா?
உங்கள் அம்மா உங்களை தூய்மையாய் இருக்கச் சொல்கிறார் என்பதற்காக ஏன் நீங்கள்
நொந்து போகிறீர்கள். அவர்களுக்கு எது சிறந்ததாக தெரிகிறதோ அதை செய்கிறார்கள்.
புரிந்ததா?
அவர்களுக்கு உங்கள் மீது அன்பில்லை என்று நினைக்க வேண்டாம். உங்கள் மீது அன்பை
பொழிய ஒவ்வொருவரும் வித்தியாசமான வழிகள் பின்பற்றுகிறார்கள். நீங்கள் எல்லோர்
மீதும் அன்பைப் பொழியுங்கள். எல்லோருக்கும்
இடமளிக்கும் அளவு பெரிய இதயம் உங்களுக்கு இருக்க வேண்டும். அன்பு நிபந்தனைகள்
கொண்டதாக இருக்கக் கூடாது. அது
நிபந்தனைகள் கொண்டதாக இருந்தால் நீங்கள் மனத்தாழ்ச்சி அடைவீர்கள். எல்லோர் மீதும்
அன்பாய் இருங்கள், எல்லாம் அதன் வழியில் நடந்தவாறு இருக்கும்.
எந்த ஒரு அம்மாவாலும் தன் குழந்தை மீது அன்பு செலுத்தாமல் எப்போதும் இருக்க
முடியாது. நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், அவ்வளவு தான். தன் சொந்த மகள் தன்னைப் புரிந்து கொள்ளவில்லையே என்று உங்கள் அம்மாவும்
வருத்தத்திலிருப்பார்கள். அவர் எப்படி இருக்கிறார்களோ அப்படியே அவரை ஏற்றுக்
கொள்ளுங்கள். உங்கள் தாய் மீது அன்போடும் பரிவோடும் இருங்கள். அவர் விருப்பப்படி
எப்படி வேண்டுமானாலும் தூய்மையாகவும் சடங்குகள் செய்தபடியும் இருக்கட்டும்.
கே: நான் இறைவன் முன் நிற்கும் போது, என் இதயத்தின் ஒரு பகுதி இறைவன் இருக்கிறார் என்று
சொல்கிறது, மற்றொரு பகுதி இறைவன் இல்லை என்று சொல்கிறது. உண்மை என்ன?
குருதேவ்: எல்லாப் பொருளும் ஒரே
பொருளினால் தான் ஆக்கப்பட்டிருக்கிறது என்பதை
நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
நம்மை சுற்றி காற்று இருக்கிறதா? காற்று இருக்கிறது என்று இடைவிடாமல்
உங்களுக்கு நீங்களே ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டுமா என்ன? இல்லை அல்லவா? ஆனால் அதை
நம்புகிறீர்களா? ஆம்!காற்று எங்கே இருக்கிறது? உங்களை சுற்றி உள்ள வெளியில்
இருக்கிறது அல்லவா?
பூமி சூரியனை சுற்றி வருகிறது என்று நம்புகிறீர்களா? அது எப்படி உங்களுக்குத்
தெரியும்? பூமி சூரியனைச் சுற்றி வருவதை நீங்களே நேரடியாக எப்போதாவது
பார்த்திருக்கிறீர்களா?
(விடை: இல்லை குருதேவ், அதை நான் உணர்ந்தேன்.)
சரி தான், எனவே நீங்கள் அதை கேட்டீர்கள்,
நம்பிவிட்டீர்கள் அல்லவா? அதை போலவே, மனிதன் நிலவில் கால் வைத்து விட்டதாக மக்கள் கூறுகிறார்கள். யாரோ அங்கு சென்றார்கள்
என்று அவர்கள் புகைப்ப்படத்தை காட்டினார்கள், அந்தப் படத்தைப் பார்த்தே நீங்கள்
நம்பிவிட்டீர்கள். அதைப் போலவே, ஸ்ரீ கிருஷ்ண பகவானின் படங்களை பார்க்கும் போது அவர் உண்மையில் இருந்தார் என்று நம்புகிறீர்கள்,
சரிதானே? எனவே சில விஷயங்கள் உங்களுக்குத்
தெரிய வேண்டும், சில விஷயங்கள் அப்படியே உண்மை என்று எடுத்துக் கொள்ள வேண்டும். முன்னே
நகர்ந்து சென்று எல்லோரையும் அன்பினால் அரவணைத்து கொள்ளுங்கள்.
கே: நான் ஒரு குருவிடம்
சென்று என்னை சமர்ப்பணம் செய்து விடும் போது, அந்த நிலையில், ஏதாவது ஜோதிடர் மீதாவது தொடர்ந்து
நம்பிக்கை வைத்தாக வேண்டுமா என்ன?
குருதேவ்: ஆழமான பக்தியோடு, ஒரு
சரணாகதி உணர்வோடு இருந்தால், பிறகு அதுதான் அனைத்திலும் ஆகச் சிறந்தது. ஜோதிட அறிவியல் என்பது இந்திந்தச் சாலை வழியாகச் சென்றால்,
நீங்கள் இதையோ அல்லது அதையோ அடைவீர்கள் என்று உங்களுக்கு வழிகாட்டும் ஒரு வரைபடம்.
நீங்கள் ஆகாய விமானம் மூலம் செல்லும் போது, நீங்கள் சாலை
வழியாகச் சென்றால் எதிர் கொண்டிருக்கக் கூடும் அனைத்து தடங்கள்களையும் தவிர்த்து
மாற்று வழியில் சென்று விடுகிறீர்கள். புரிந்ததா?
(அடியவர்: ஆனால் குருதேவ், ஏன் அவ்வப்போது மனம் தன்னுடைய கேள்விகளுக்கு
ஜோதிடம் தான் விடைதரும் என்று
உலாவி வருகிறது?)
அப்படி நடந்தால் அது பரவாயில்லை. ஏனென்றால் மனதிற்கு ஜோதிட அறிவியல்
இருக்கிறதா என்று கேள்வி கேட்கக் கூடிய முனைப்பு இருக்கிறது. அப்படி அது நடந்தால்,
உங்களுடைய ஜாதகத்தில் எந்த கிரகம் எந்த கட்டத்தில் இருக்கிறது, அதனால் என்ன
விளைவுகள் உண்டாகும் என்று தெரிந்து கொள்ள ஒரு ஜோதிடரின்
உதவியை நாடலாம். அதற்கு விடைகள் கிடைத்த பின், ஒன்பது கிரகங்களின் அதிபதியான
சிவபெருமானிடம் அவற்றை சமர்பித்துவிடுங்கள். ‘ஓம் நமசிவாயா’ ஜெபம் செய்யுங்கள்.
கிரகங்களினால் வரும் பாதகங்கள் என்று சொல்லப்பட்டவை எல்லாம் தானாக இல்லாமல்
போகும்.
கே: நம் வாழ்க்கையில்
சத்சங்கத்தின் முக்கியத்துவம் என்ன?
குருதேவ்: நாம் வாழ்க்கையில்,விரும்பும் சிரிப்பு, சந்தோஷம், அன்பு மற்றும் நிறைவு
ஆகியவற்றை தருவது தான் சத்சங்கத்தின் வேலை.
சத்சங்கத்தில் தொடர்ந்து பங்கு பெற்றால்
இவை எல்லாம் கிடைக்கும்.
கே: அன்பு குருதேவ், என்
மனதில் ஒரு விருப்பம், அதை நான் வெளியில் சொல்லமாட்டேன். உங்களுக்குத் தெரியும்
என்று எனக்குத் தெரியும், அதனால் நீங்கள் அதை நிறை வேற்ற வேண்டும் என்று
விரும்புகிறேன்.
குருதேவ்: அது நல்லது. உங்களில்
எத்தனை பேர் உங்கள் விருப்பங்கள் நிறைவேறியதை உணர்ந்திருக்கிறீர்கள்? இது சித்தத்வா
என்று அழைக்கப்படுகிறது (சித்தி பெறுவது அல்லது விருப்பங்களை நிறைவேற்றும்
அசாதாரணமான திறன்). பிராணாயாமம் மற்றும் தியானத்தை நாம் தொடர்ந்து செய்து வந்தால், நம் விருப்பங்கள் மனதிலே தோன்றுவதற்கு முன்பேயே
நிறைவேறி விடும். எல்லோருக்கும் இப்படி நடப்பதை பாருங்கள். எனவே, நீங்கள் எதை
கேட்கிறீர்கள், எதை விரும்புகிறீர்கள் என்பதில் கவனம் தேவை.
பெரிதானவை மீது, சிறந்தவை மீது ஆசை கொள்ளுங்கள். நம் நாட்டில் வளம் செழிப்பது
தொடர வேண்டும் என்றும் யாரும் வேலை இல்லாமல் இருக்கக் கூடாது என்றும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நம் நாட்டில் உள்ள பெண்கள் பாதுகாப்பாக
உணர வேண்டும் என்றும் பயமில்லாமல் வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள்.
இந்த எண்ணத்தோடு முன்னே செல்லுங்கள். உங்கள் விருப்பங்கள் எப்படியும்
நிறைவேறுகிறது. உங்கள் விருப்பங்கள் உண்மையில் நிறைவேறுகிறது என்பது இந்த சோதனை
மூலம் நிரூபனமாகிறது. இப்போது நீங்கள் இந்த முழு சமூகத்தின் பெரு நன்மை வேண்டி ஆசை
கொள்ளுங்கள்.
கே: அசைவ உணவு சாப்பிட
வேண்டாம் என்று எல்லோரும் சொல்கிறார்கள். அசைவ உணவு உண்டால் மூளையின் சக்தி
குறைகிறது. ஆனால் அசைவம் உண்ணும் பலர் புத்திசாலிகளாகவும் தங்கள் தொழிலில்
முதன்மையானவராகவும் இருக்கிறார்கள். இதன்
பின்னே உள்ள காரணம் என்ன?
குருதேவ்: அசைவ உணவு நிச்சயம்
உங்கள் உடம்பை பாதிக்கிறது. அசைவ உணவு
உண்பவர்களுக்கு ஏற்படும் விளைவுகளை, அதைப் பற்றி
ஆராய்ந்த யாரவது விவரமாகக் உங்களுக்கு கூறமுடியும்.
மாசிடோனியாயாவைச் சேர்ந்த ஒரு பெண்மணி இதைப் பற்றி நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறார். வலைப் பக்கங்களில் தேடினால் ஏராளமான தகவல்கள் கிடைக்கும். அசைவ
உணவு எப்படி மனிதர்கள் உண்பதற்கு ஏற்றதல்ல என்பதை நிரூபித்திருக்கிறார். அது
ஆரோக்கியமான வாழ்கை முறைக்கு உகந்ததல்ல. நிறைய ஆராய்சிகள் நடந்து, சைவ உணவே
மனிதர்களுக்கு அதிகம் பொருத்தமானது என்பது சொல்லபட்டிருக்கிறது. வலைபக்கங்களில் தேடி அதைப்பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.