வேள்வியின் முக்கியத்துவம்....


8 – பிப்ரவரி – 2013 – பெங்களூர் - இந்தியா

கே: குருதேவா! வேள்வி (யஞ்ஞம்) நடத்துவதன் முக்கியத்துவம் என்ன? வேள்வி நடத்துவதின் மூலம் மழை கூட வரும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். நாம் ஏன் ஒரு பெரிய வேள்வி நடத்தி உலகில் உள்ள எல்லா தீய சக்திகளையும் அழிக்கக் கூடாது?

குருதேவர்: நீ வண்ணத்துப் பூச்சி சிறகடிப்பதால் ஏற்படும் விளைவு பற்றி கேள்விப் பட்டிருக்கிறாயா? அமேசான் காடுகளில் சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சியால் ஏற்படும் அலை அதிர்வுகள் சீன தேசத்தின் மேல் இருக்கும் மேகங்களை பாதிக்கின்றன. அதன் பொருள், இந்த உலகில் ஒவ்வொரு சிறு நிகழ்ச்சிகளும் உலகின் மற்ற நிகழ்ச்சிகளைப் பாதிக்க வல்லது. எனவே வேள்வி என்பது பழங்காலத்திலிருந்து வந்த சடங்குகளில் ஒன்று. இவை சுற்றுப் புறத்தையும், மனித மனத்தையும் மற்றும் மக்களின் ஒருமித்த கருத்துக்களையும் மாற்றக் கூடிய சக்தி வாய்ந்தவை.

வேள்வி நடத்த குறிப்பிட்ட மூலிகைகளை, குறிப்பிட்ட நாளில் ஆத்மார்த்தமாக வேள்வித் தீயில் இட வேண்டும். அண்ட கோச சாத்திரமும் (கிரகங்களின் நிலைகளைப் பற்றிய அறிவு) விவசாயமும் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? இது பற்றி சமீபத்தில் விவேகானந்தா யோகா அனுசந்தான சமஸ்தானம் (VYASA) ஆராய்ச்சி மையத்தில் குறிப்பிட்ட நாட்களில், குறிப்பிட்ட நேரத்தில் அதன்படி பரிசோதனை நடத்தினார்கள்.

தென் இந்தியாவில் எந்த நிகழ்ச்சியையும் ராகுகாலத்தில் துவங்க மாட்டார்கள். ராகு காலம் என்பது ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட ஒன்றரை மணி நேரமாகும். விஞ்ஞானிகள் ராகுகாலத்தில் மக்களுக்குப் போடப்பட்ட தடுப்பூசிகளினால் உடலில் ஏற்படும் மாற்றங்களைப் ஆராய்ந்தார்கள். அவர்கள் ஆராய்ச்சிப்படி, ராகு காலத்தில் போடப் பட்ட தடுப்பூசிகளால் உடலில் எந்த மாற்றமும் இல்லை. ராகு காலத்தில் போட்ட தடுப்பூசி பலன் தரவில்லை என்று கண்டறிந்தார்கள். அதே போல, அக்னி ஹோத்ரம் (சுற்றுப் புறத்தைத் தூய்மைப் படுத்துவதற்கான ஒரு வேள்வி) செய்வதால் மரங்களைப் பீடிக்கும் கிருமிகளை அழிக்க முடியும் என்று கண்டறிந்திருக்கிறார்கள். தீயில் இடப்படும் சில மூலிகைகளால் சுற்றுப்புறம் தூய்மையாகி, மரங்களைத் தாக்கும் கிருமிகள் அழிகின்றன.

எனவே வேள்வி அல்லது யாகம் என்பது சுற்றுப் புறத்தைத் தூய்மையாக்க, பஞ்ச பூதங்களை சாட்சியாகக் கொண்டு செய்யப் படுவது. வேள்வி என்பது விதிமுறைப்படி முறையாகக் கற்றவர்களால் செய்யப்பட வேண்டும். இந்த விஞ்ஞானம் ஏறக்குறைய அழியும் நிலையில் இருந்தது. அதனால் நாம் இங்கு ஒரு பாடசாலை துவங்கினோம்.1980 ல் நான் ஜெர்மனியில் பயணம் செய்த போது, சர்வ கலா சாலைகளில் இதைப் பற்றிப் பேசும் போது, சிலர் அவர்களுடைய நூலகங்களுக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். அவர்களிடம் ஆயிரக்கணக்கான சமஸ்கிருத ஏடுகள் இருந்தன. “இவ்வேடுகளைப் படித்துப் பொருள் தெரிந்து கொள்ளும் அறிஞர்கள் இருக்கிறார்களா?” என்று அவர்களைக் கேட்டேன். “எங்களிடம் இவ்வேடுகளைப் படித்து அறியும் அறிஞர்கள் இப்போது இல்லை. இருந்தாலும் இவைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம்” என்று சொன்னார்கள்.

ஹாம்பர்க் சர்வகலாசாலையில் இப்படிப்பட்ட பல ஏடுகளை பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். ட்யூபிங்கன் என்ற இடத்தில் இப்படிப்பட்ட ஏடுகளைப் போட்டோ எடுத்து வைத்திருக்கிறார்கள். நான் இந்தியா திரும்பியதும் பல ஆலோசனைக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தேன். இவ்வேடுகளைப் படிக்கத் தெரிந்த அறிஞர்கள் பலர் தங்கள் வயது காரணமாக வெளிநாடு செல்ல விரும்பவில்லை. அவர்கள் 60,70 வயது கடந்தவர்களாக இருந்தார்கள். இளைஞர்களுக்கு இவ்வேடுகளைப் படிக்கத் தெரியவில்லை. இவ்வேடுகளில் பல விஞ்ஞான சம்பந்தப் பட்ட விஷயங்களும், ஆயூர்வேத மருத்துவத்தைப் பற்றியும் விளக்கப்பட்டிருந்தன. எனவே ஒரு சமஸ்கிருத பாடசாலையைத் துவக்க முடிவு செய்தோம். அதுதான் இன்றைய வேத விஞ்ஞான மகா வித்யா பீடமாக பெங்களூரில் செயல்படுகிறது. எல்லா அறிஞர்களையும் கூட்டி அடுத்த தலைமுறைக்கு நம் பாரம்பரிய விஞ்ஞான முறைகளையும், புதிய விஞ்ஞானத்தைப் பற்றிய அறிவையும் அளிப்பதற்காக இந்தப் பாடசாலை செயல் படுகிறது. இங்கு படிப்பவர்கள் ஆங்கில அறிவையும் பெற்றிருக்க வேண்டும். சமஸ்கிருதத்தையும், நம் பழங்கால கிரந்த எழுத்துக்களையும் படிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். அப்போது தான் அவர்களால் அதை மொழி பெயர்க்க முடியும்.

ரைட் சகோதரர்கள் தான் முதல் முதலாக விமானத்தில் பறந்தவர்கள் என்று சரித்திரப் பாடத்தில் நாம் படித்திருக்கிறோம். அது உண்மை அல்ல, அதைப் பற்றிய ஒரு குறும்படம் பார்த்திருக்கிறீர்களா? சுப்பராய ஷர்மா என்னும் இந்தியர் ரைட் சகோதரர்கள் விமானத்தைப் பறக்கவிடுவதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே, சௌபாத்தி கடற்கரையில் தான் அமைத்த விமானத்தில் பறந்து காட்டினார். இந்த விமானத்தை அமைக்க நவ்ரோஜி என்ற பார்சி இனத்தைச் சேர்ந்த கனவான் நிதியுதவி அளித்திருந்தார். இச்செய்தி லண்டன் தினசரியில் வெளியானது. அப்போது நம்மை ஆண்ட ஆங்கிலேய அரசு அவர்கள் இருவரையும் சிறையில் அடைத்தது. நவ்ரோஜியும், சுப்பராய ஷர்மாவும் சிறையில் வாடினார்கள். இந்த விமானத்தின் ரகசியத்தை அவர்கள் வெளியிடவில்லை. இந்தக் கால கட்டத்தில் ரைட் சகோதரர்களின் முயற்சியும் வெற்றி அடைந்தது.

இந்தியர்களின் விமானத்தைப் பற்றிய குறும்படம் ஒன்று நம் தொலைக் காட்சியில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது. லண்டன் தினசரிப்படி சுப்பராய ஷர்மா தான் முதல் முதலாக விமானத்தில் வெற்றிகரமாகப் பறந்தவர் என்று தெரிய வருகிறது. இங்கு நான் சொல்ல வருவது என்னவென்றால், ஒவ்வொரு தலை முறையிலும் பல அரிய ஞானம் இருக்கிறது. நீங்கள் கருப்பு பதார்த்தம், இருண்ட பதார்த்தம், இருண்ட சக்தி பற்றி நவீன விஞ்ஞானத்தில் படிக்கிறீர்கள். இவைகளைப் பற்றி நம் பண்டைய ஏடுகளில் எழுதப்பட்டிருக்கிறது. துரதிருஷ்டவசமாக இவைகளைப் படித்து விளக்கம் சொல்பவர்கள் பலர் நம்மிடையே இல்லை.

இங்கு டாக்டர் ஹரி, அவர் மனைவி ஹேமா இந்த விஷயங்களைப் பற்றி பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். உங்களில் பலர் கங்கை ஒரு இயற்கையான நதி என்று எண்ணுகிறீர்கள். ஆனால் அது மனிதனால் உருவாக்கப்பட்டது என்று விஞ்ஞான பூர்வமாக கண்டறிந்திருக்கிறார்கள். அது இந்தியாவின் பல மாகாணங்களில் ஓடி கடலில் சேர்கின்றது. வேள்வி என்பது தீய சக்திகளை அழிப்பதற்காக செய்யப்படுகிறது. வேள்வியினால் ஆக்க சக்தியின் அணுத்துகள்கள் சுற்றுப் புறத்தில் பரவுகின்றன. ஆயுர்வேதம் மீண்டும் வளர்வது போல, வேள்விகள் செய்வதும் மேலும் மேலும் மக்களிடையே பரவ வேண்டும். அதுவும் நடக்கும்.

கே : குருதேவா! மற்றவர்களுக்கு நாம் சேவை செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள். மற்றவர்களின் கடமை என்ன? எதற்காக இருக்கிறார்கள்?

குருதேவர்: கட்டாயம் உன்னைத் தொந்தரவு செய்வதற்காக இல்லை. மற்றவர்கள் உனக்குப் பாடம் கற்பிப்பதற்காக இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் உனக்கு ஒரு பாடம் சொல்லித் தருகிறார்கள். ஒவ்வொருவரிடமும் நீ கற்றுக் கொள்ளலாம். இவ்வுலகம் ஆசிரியர்களால் நிரம்பியுள்ளது. நீ ஒரு நல்ல மாணவனாக இருக்க வேண்டும்.

சமஸ்கிருத பழமொழி ஒன்று உள்ளது. “முதலில் கெட்டவனை வணங்கு. நல்லவனை பிறகு வணங்கலாம்.” ஒரு கெட்டவன் தன் அழிவினால் உனக்கு நல்ல பாடத்தைக் கற்பிக்கிறான். நல்லவன் நல்வழியில் செல்வதைப் பார்த்து நீ அவன் பின் செல்ல வேண்டும். நல்லவன் ஒரு திசையைக் காண்பிக்கிறான். ஆனால் கெட்டவனோ, தன் அழிவினால் உனக்கு ஒரு நல்ல பாடம் (எச்சரிக்கை) சொல்லித் தருகிறான்.“பார். எனக்கு என்ன ஆகி விட்டது. என்னைப் போல் நடக்காதே” என்று சொல்கிறான். எனவே கெட்டவன் உனக்கு ஒரு விலையுயர்ந்த அனுபவத்தை அளிக்கிறான்.

“துர்ஜனம் ப்ரதமம் வந்தஏ. ஸுஜனம் ததநந்தரம்” முதலில் கெட்டவனை வணங்கு. ஏனென்றால் அவனும் உனக்கு ஒரு பாடம் கற்பிக்கிறான். இவ்வுலகம் ஆசிரியர்களால் நிரம்பியுள்ளது. ஒவ்வொரு ஜீவராசியும் உனக்கு எதையாவது கற்பிக்கிறது. ஶ்ரீமத்பாகவதத்தில் தத்தாத்ரேயரைப் பற்றிய ஒரு அத்தியாயம் இருக்கிறது. “அவர் ஒரு காக்கையிடமிருந்து, ஒரு அன்னத்திடமிருந்து, ஒரு எலியிடமிருந்து எப்படிக் கற்றுக் கொண்டார் என்று விளக்கப்படுகிறது”­­ “ஒவ்வொரு ஜீவனும் எனக்கு ஒரு சங்கதியைச் சொல்கிறது. ஒவ்வொரு பொருளும் எனக்கு சிறிது ஞானத்தையும், புதிய அறிவையும் கொடுக்கிறது” என்று தத்தாத்ரேயர் சொல்கிறார். நீ அனவரதமும் ஒரு மாணவனாக இருக்க வேண்டும். வாழ்க்கை என்பது ஒரு முடிவில்லாத ஒரு பாடசாலை போன்றது. கற்பதற்கு முடிவென்பதே இல்லை.

கே: குருதேவா! உலகில் அறிவாளிகளுக்கு மிகவும் சந்தேகமும், முட்டாள்களுக்கு அடங்காத தன்னம்பிக்கையும் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஏன் அப்படி?

குருதேவர்: ஒரு அளவுக்கு சந்தேகம் இருப்பது அறிவாளிகளின் அடையாளம். அது அளவுக்கு அதிகமானால் அது ஒரு நோய் போல ஆகிவிடும். உன் மீது நம்பிக்கை இல்லாவிட்டால் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது. சந்தேகம் என்பது ஒரு நோயைப் போல அறிவை மழுங்கச் செய்து விடும். உன்னைச் சுற்றி உள்ள எல்லோரையும் நீ சந்தேகப்பட்டால் உன்னால் எந்த வியாபாரமும் செய்ய முடியாது. வியாபாரம் நம்பிக்கையைப் பொறுத்தது. ஒரு நிறுவனத்தை நடத்துவதும் மற்றவர்கள் மேல் வைக்கும் நம்பிக்கையைப்  பொறுத்திருக்கும்.

ஒரு உணவு விடுதியில் 10000 ரூபாய் சேர்ந்ததும் அதை வங்கியில் போடுவதற்காக ஒருவரை நம்பி அவரிடம் கொடுக்க வேண்டியிருக்கும். அவர் மேல் உனக்கு சந்தேகம் இருந்தால், அவர் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விடுவார் என்று நீ நினைத்தால், சமூகத்தில் ஒரு காரியமும் செய்ய முடியாது. மேலும், ஒரு நியாயமான சந்தேகம் நல்லது, உன் அறிவு தெளிவாகும். அளவுக்கு அதிகமான சந்தேகம் உனக்கு இதய வலியை ஏற்படுத்தி உன்னை பின்னோக்கி இழுக்கும்.
வாழ்க்கை என்பது ஒரு மோட்டார் காரில் பயணம் செய்வது போல இருக்க வேண்டும். முன்னால் வழியைப் பார்ப்பதற்கான கண்ணாடி மிகப் பெரிதாக இருக்கும். பின்னால் பார்க்க உதவும் கண்ணாடிகள் சிறியவைகளாக இருக்கும். முன்னால் பார்க்க உதவும் கண்ணாடி பின்னால் பார்க்கும் கண்ணாடிகளைப் போல் சிறிதாக இருந்தால் காரை ஓட்ட முடியாது. அதேபோல் பின்னால் பார்க்கும் கண்ணாடிகள் மிகப் பெரிதாக இருந்தாலும் காரை ஓட்ட முடியாது. இதைக் கற்பனையில் பாருங்கள். வாழ்க்கையில் கடந்த காலத்தையே நினைத்திருந்தால், மேலே செல்லவே முடியாது. அவ்வப்போது கடந்த காலத்தைப் பற்றித் திரும்பிப் பார்க்கலாம். முன்னால் பார்க்கும் கண்ணாடி நிகழ் காலத்தைக் குறிக்கிறது. உன் பார்வை முன் கண்ணாடியிலேயே நிலைத்திருக்க  வேண்டும். (நீ நிகழ் காலத்தில் வாழ வேண்டும்)

கே: குருதேவா! எனக்குக் கேள்வியைப் பற்றித் தெரியவில்லை. ஆனால் ஆன்மீகத்தில் எல்லாக் கேள்விகளுக்கும் விடை கிடைக்கிறது. உலகில் உள்ள எல்லா பிரச்சினைகளுக்கும் ஆன்மீகத்திலிருந்து விடை கிடைப்பது எப்படி என்று அறிய விரும்புகிறேன்?

குருதேவர்: ஏனென்றால் பிரச்சினைகள் மனிதர்களால் உருவாக்கப்படுகின்றன. பிரச்சினைகளின் மூல காரணம் ஒன்று தான்.“மனிதர்கள்”எனவே அதற்கான தீர்வும் ஒன்றாகத்தான் இருக்க முடியும். இல்லையா? ஆன்மீகம், மனிதர்களைப் பற்றியது. மனிதர்களால் உருவாக்கப்படும் பிரச்சினைகளை பற்றியது. ஒரு கட்டிடத்தின் அஸ்திவாரம் சரியில்லை என்றால் கட்டிடம் நிலைத்து நிற்க முடியாது. பிரச்சினையைக் கொடுக்கும். கட்டிடம் நிலைத்து நிற்க பலமான அஸ்திவாரம் அவசியம். அதே போல ஆன்மீகமும் மனித குலத்தின் அஸ்திவாரமாக இருக்கிறது.

கே: எங்கள் கடமைகளைச் சரிவரச் செய்ய வேண்டுமா? அல்லது சடங்குகளின் பின்னால் செல்ல வேண்டுமா?

குருதேவர்: கடமையைச் செய்வது அவசியம். அதே சமயம் உன் வாழ்க்கையை வளமாக்க, நீ உன் கடமையைச் சரிவரச் செய்ய, நீ உன்னைப் புதுப்பித்துக் கொண்டு சக்தி வாய்ந்தவனாக வேண்டும். எனவே சிறிது தியானம், ஓய்வு, சங்கீதம், இறைவனை வேண்டுவது இவை எல்லாமே உனக்கு உதவும். இறைவனை வேண்டுவது வாழ்க்கைக்கு இன்றியமையாதது.

கே: அன்பு செலுத்துவது மிகவும் மெதுவாக நடக்கிறது. ஆனால் வெறுப்போ, அதுவும் பலரிடம் வெறுப்பை உண்டாக்குவது தற்காலத்தில் மிக வேகமாக நடக்கிறது. நல்ல விஷயங்களப் பலரிடம் மிகவும் துரிதமாக எடுத்துச் செல்வது அவசியம். அதை எப்படிச் செய்ய முடியும்?

குருதேவர்: அந்தக் கேள்வி உன்னிடமே இருக்கட்டும். அந்தக் கேள்வியை நீ பலரிடம் பரவச்செய். பலர் இதைப் பற்ரி எண்ணி, பேசும் போது அன்பை வேகமாக பலரிடம் எப்படிப் பரப்பலாம் என்பது பற்றி பல கருத்துக்கள் வெளி வரும். அப்படி வரும் எல்லா கருத்துக்களையுமே, அல்லது அதிக பட்சமான கருத்துக்களை செயல்படுத்த வேண்டும். சில கேள்விகளுக்கு ஒரே ஒரு விடை கிடையாது. பல விடைகள் கிடைக்கக் கூடும். எல்லாமே, அல்லது அவற்றில் பல விடைகள் நன்மை அளிக்கும்.

கே: குருதேவா! சந்தேகம் எப்படி எழுகிறது? சந்தேகத்தை எப்படித் தவிர்க்கலாம்?

குருதேவர்: எதிர்மறைச் சக்தியால் நாம் பீடிக்கப்படும்போது, சந்தேகம் எழுகிறது. மிகவும் உற்சாகமாகவும், சக்தி வாய்ந்தவராகவும் இருக்கும் ஒருவருக்கு சந்தேகம் வராது. உன் ஆத்மசக்தி குறையும் போது உனக்குச் சந்தேகம் வரும். உன் உடலும் மனமும் சோர்வாக இருக்கும் போது சந்தேகம் வரும். மனதில் தெளிவில்லாத போது சந்தேகம் வரும்.