கடந்த காலத்தை மறு ஆய்வு செய்து உயிர் சக்தியைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்

31 டிசம்பர் 2015,

பாத் அண்டோகஸ்ட் ,ஜெர்மனி


இன்று டிசம்பர் 31 ஆம் நாள். இன்று நாம் கடந்து சென்ற ஆண்டினைப் பற்றி மறு ஆய்வு செய்ய வேண்டும். ஓர் நதிக்கரையில் நீங்கள் அமர்ந்து, ஓடிகொண்டிருக்கும் நதியைக் கவனித்துக் கொண்டிருப்பது போலக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஆற்றில் ஓடி கொண்டிருக்கும் பலவற்றையும் நீங்கள் கவனிக்கிறீர்கள். ஓர் கப்பல் சென்று கொண்டிருக்கிறது, சில கட்டைகள் மிதந்து கொண்டிருக்கின்றன,இலைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. நகர்ந்து சென்று கொண்டிருக்கும் அனைத்தையும் நீங்கள் முற்றிலும் தொந்தரவின்றி கவனித்துக் கொண்டிருக்கின்றீர்கள். அதே போன்று, காலத்தின் கரையில் அமர்ந்து, காலம் நிகழ்வுகளை எடுத்து சென்று கொண்டிருப்பதைக் கவனிக்கும் போது உங்களில் ஒன்று மாற்றமின்றி இருப்பதைக் கண்டுணர்ந்து ஆச்சரியப்படுவீர்கள். நிகழ்வுகளால் நீங்கள் மாற்றம் அடையவில்லை, எதனாலும் நீங்கள் பாதிக்கப் படவில்லை என்பதை அறிவீர்கள்.

நிகழ்வை ஆய்வது என்பது அதில் பங்கெடுத்துக் கொள்வது என்பதை விட, அந்நிகழ்விற்கு ஓர் சாட்சியாக இருக்க உதவுகிறது. நான் கூறுவது புரிகிறதா? போன மாதம் நிகழ்ந்தவை, அதற்கு முந்தைய மாதம் நிகழ்ந்தவை, அதற்கும் முந்தைய மாதம் நிகழ்ந்தவை என்று ஆண்டு முழுவதிலும் சில அற்புதமான விஷயங்களும் சில அசிங்கமான விஷயங்களும் நடந்திருக்கின்றன. அனைத்தும் முடிந்து விட்டன. ஆகவே நதிக்கரையில் அமர்ந்து ஓடும் நதியினை கவனிப்பது போல்  கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு க்ஷணமும் புதிய நீர் வந்து கொண்டிருக்கின்றது.பல பொருட்கள் நீரில் மிதந்து சென்று கொண்டிருக்கின்றன. பல பறவைகள் தங்கள் இறையினை கொத்திக் கொண்டு பறந்து செல்கின்றன. அன்னப்பறவைகளும், வாத்துகளும் நீர் ஓடிக் கொண்டிருப்பதை போல், நீருடன் சிறிது தூரம் மிதந்து ஓடிப் பின்னர் தங்கள் இடத்திற்கே வந்து சேருகின்றன. மேலும் அன்னப் பறவைகள் ஈரமாவதே இல்லை. நீரை விட்டு வெளியே வந்து தங்களை குலுக்கிக் கொண்டு சற்று சூரிய உஷ்ணத்தைப் பெற்றுக் கொண்டு மீண்டும் நீரிலேயே குதித்து விடுகின்றன.

ஓர் அன்னப் பறவை நமக்குப் பல விஷயங்களைக் கற்பிக்கின்றது - அதாவது, நிகழ்வுக்குள்ளேயே இருத்தல், அதிலிருந்து வெளியே ஓடி விடாமல் இருத்தல்,ஆனால் அந்நிகழ்வு நம்மீது ஒட்டிக் கொள்ளாமல் இருத்தல் ஆகியவற்றை கற்பிக்கின்றது. கடந்து செல்லும் நிகழ்வுகளை ஓர் புன்னகையுடன் கரையில் அமர்ந்து காண்பதுவே கொண்டாட்டம். வாழ்க்கையில் பல இனிய நிகழ்வுகளும், பல இனிமையற்ற நிகழ்வுகளும் கடந்து செல்கின்றன. இரண்டுமே உங்களை ஒரு விதத்தில் ஆழமாக்குகின்றன. ஒரு விதத்தில் வலுவானவராக்குகின்றன. ஆகவே அதை  ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு முன்னேறிச் செல்லுங்கள். ஏற்கனவே நடந்து முடிந்த விட்ட எதையும் கேள்வி கேட்காதீர்கள். நடந்து முடிந்தவிட்ட எதைப்பற்றியும் கேள்வி கேட்பது விவேகமல்ல.
கடந்து சென்ற காலத்தை மறு ஆய்வு செய்யுங்கள். உங்களுக்குள் இருக்கும் உயிர் சக்தியை புதுப்பித்துக் கொள்ளுங்கள். நமது உயிர் சக்தி, தூசி அல்லது சாம்பலினால் மூடப்பட்டிருக்கின்றது. 

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், அதைச் சற்று ஊதிவிட வேண்டியது மட்டும் தான். மீண்டும் புத்துயிர்  பெறும். உங்களுக்குள் இருக்கும் உயிர் சக்தியைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள். குழந்தைகளைப் பாருங்கள். அவர்கள் மகிழ்ச்சி, உற்சாகம் நிறைந்தவர்களாக துடிப்பான ஆற்றலுடன் இருக்கின்றனர். ஏன் நீங்கள் மட்டும் இப்படி  மந்தமாக முகத்தைத் தொங்க விட்டுக் கொண்டு இருக்கின்றீர்கள்?

நாம் என்ன செய்கிறோம் தெரியுமா? கம்பளத்திலுள்ள தூசியைத் தட்டி நீக்குவதற்குப் பதிலாக ஏன் தூசி ஏற்பட்டது என்ற காரணத்தை தேடிக் கொண்டிருக்கின்றோம். "எங்கிருந்து இந்தத் தூசி வந்தது? ஏன் வந்தது? என்றெல்லாம், பொருளற்ற பகுப்பாய்வு செய்து கொண்டிருக்கிறோம். ஓர் ஜன்னல் வழியாக தூசி வந்ததென்றால்,அந்த ஜன்னலருகே சென்று இங்கிருந்துதான் தூசி வந்தது என்று கூறிக் கொண்டிருக்கிறோம்.அதில் எந்த சந்தேகமும் இல்லை, அன்பானவரே! எங்கிருந்து, எந்த ஜன்னல் வழியாக தூசி வந்தது என்பது ஒரு பொருட்டே அல்ல. கம்பளத்தில் தூசி நிறைந்து விட்டது, அதை முதலில் சுத்தப்படுத்துங்கள்.

எப்போதும் நாம் செய்வது என்னவென்றால், யார் நமக்கு என்ன செய்கிறார்கள் என்பதைத் தேடிக் காண்கிறோம்.பின்னர், அவன் இப்படி, இவன் அப்படி என்று விமர்சிக்கின்றோம். அவற்றையெல்லாம் விட்டு விடுங்கள்.உங்கள் மனதில் என்ன பதிவுகளை பிறர் ஏற்படுத்துகின்றனர் என்பதை மட்டும் காணுங்கள்.அதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். பிறரால் ஏதேனும் எண்ணப் பதிவுகள் உங்கள் மனதில் ஏற்படுத்தப்பட்டிருந்தால், முதலில் அவற்றை நீக்குங்கள். அதைச் செய்ய வில்லையெனில், யார் உங்கள் மனதில் பதிவுகளை ஏற்படுத்துகிறார்கள் என்பது முக்கியமல்ல. ஏன் நீங்கள் அந்த அழுக்கை சுமக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். உங்களை உலுக்கி விட்டுக் கொள்ளுங்கள். வேண்டாத தூசியை  அழுக்கை  நீக்குங்கள். கொண்டாட்டமே அதைச் செய்யும் வழியாகும்.

புதிய ஆண்டு துவங்கும் இந்த வேளையில், உங்களுடன் இசைந்து வராதவர்களுக்கு முதலில் வாழ்த்துத் தெரிவியுங்கள். உங்களுக்கு விருப்பமானவர்களுக்கும் வாழ்த்துத் தெரிவியுங்கள். அனைவரையும் வாழ்த்துங்கள்! கடந்து சென்ற காலத்தை மறு ஆய்வு செய்யுங்கள். உங்களுக்குள் இருக்கும் உயிர் சக்தியை நிகழ் தருணத்திற்கு  புதுப்பியுங்கள். நிகழ்வுகள் தேய்ப்பதில்லை, பிறரின் எதிர் வினைகளும் உங்களைத் தேய்ப்பதில்லை. நீங்கள் ஓர் சுதந்திரமான ஒளி. நிகழ்வுகள் மற்றும் சூழல்களால் பாதிக்கப்படாத ஞானம் நீங்கள்

ஞானமும் ஓர் செல்வமே

வியாழக்கிழமை, 12 நவம்பர் 2015,

பிரான்க்பர்ட், ஜெர்மனி

பகுதி 1:


பூஜா  என்பது என்ன?

பு என் சொல் முழுமை என்பதை குறிக்கிறது. ஜா என்றால் முழுமையிலிருந்து பிறந்தது என்று பொருள். ஆகவே பூஜா என்றால் முழுமையிலிருந்து பிறந்த ஒன்று என்னும் பொருளாகிறது. பூஜையிலிருந்து உங்களுக்குக் கிடைப்பது முழுமையும் திருப்தியும். பூஜை செய்வது, சூழலில் ஓர் நுண்ணிய அதிர்வலையை ஏற்படுத்தி நேர்மரையினை எடுத்து வருகின்றது. தீபாவளி ஓர் ஒளித் திருவிழா. புத்தர்,"அப்போ தீபோ பவ" என்று கூறியிருக்கிறார் அதாவது உங்களுக்கே நீங்கள் ஒளியாகிறீர்கள்.வேதங்கள் மற்றும் உபநிஷதங்கள்". அனைவரும் விளக்குகளே சிலர் ஏற்றப் பட்டிருக்கின்றீர்கள், சிலர் ஏற்றப்படவில்லை ஆனால் ஒவ்வொருவரிடமும் ஒளி  வீசும் சாத்தியக் கூறு உள்ளது " என்று கூறுகின்றன.

எனவே, தீபாவளி இருளை அகற்றுகின்றது.இருளை அகற்ற விளக்கு மட்டும் போதாது. சமுதாயம் முழுமையும் வெளிச்சமாக வேண்டும். ஓர் குடும்பத்தில் ஒருவர் மட்டும் மகிழ்ச்சியாக இருந்தால் போதாது. ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவர் மகிழ்ச்சியற்று இருந்தால் கூட, மற்றவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. எனவே ஒவ்வொரு வீடும் ஒளியூட்டப்பட வேண்டும்.

இரண்டாவதாக, வாழ்வில் நாம் எடுத்துவர வேண்டியது இனிமை. இனிப்புக்களை மட்டும் பிறருக்கு வழங்காமல் இனிமையையும் சேர்த்து வழங்குங்கள். உங்களுக்கு ஏதேனும் கசப்புணர்வு இருந்தால் அழுத்தம் இருந்தால், உங்கள் மனதில் இறுக்கம் இருந்தால், பட்டாசுகளைப் போன்று அவற்றை வெளியே வெடித்துத் தள்ளுங்கள். புதிய வாழ்வைத் துவக்குங்கள், அதைக் கொண்டாட்டமாகுங்கள் என்றே தீபாவளிப் பண்டிகை உங்களுக்கு நினைவுறுத்துகின்றது. அமாவாசையன்று தீபாவளி கொண்டாடப்படுகின்றது. நாம் பெண் கடவுளான லக்ஷ்மியைப் பிரார்த்திக்கின்றோம்.தேவி லக்ஷ்மி செல்வத்தினை வழங்கும் தெய்வமாக பிரதிபலிக்கின்றார். இந்தியாவில், கடவுள் ஆணாக மட்டுமின்றி  சில சமயங்களில்  பெண்ணாகவும் குறிப்பிடப்படுகின்றார். ஓர் வெண்மையான ஒளி பல நிறங்களைப் பிரதிபலிப்பது போன்று ஒரே தெய்வம் பல சுவைகளைக் கொண்டுள்ளது. இன்று நாம் லக்ஷ்மி தேவியைப் பூஜித்து, பழமையான ரிக்வேத மந்திரங்களை ஜபித்து, நேர்மறையான அதிர்வலைகளையும் நிறைவான செல்வத்தையும் அடைவோம்.

தீபாவளிக்கு முந்தைய நாள் தந்தேராஸ் என்றழைக்கப் படுகின்றது. பழங்காலத்தில் செல்வங்களை திரட்டி இந்த தினத்தில் இறைவனின் முன் சமர்ப்பிப்பதுண்டு.இப்போதெல்லாம் மக்கள் சாதரணமாக தங்கள் செல்வத்தை வங்கியிலோ அல்லது பாதுகாப்புப் பெட்டகத்திலோ மறைத்து வைக்கின்றனர். ஆனால் முற்காலத்தில்,தந்தேராஸ் தினத்தில் அனைத்து செல்வங்களையும் முன்புறமாக வைத்து, கண்டு நிறைவினை உணர்ந்திருக்கின்றனர்.செல்வம் என்பது வெறும் பொன்னும் வெள்ளியும் மட்டுமல்ல, ஞானமும் கூட. எனவே அவ்வாறு கொண்டாடப்பட்டது. அனைவரும் உங்களது ஞானத்தினை நெஞ்சாரக் கண்டு மகிழ்ந்து நிறைவாக உணர வேண்டும்.

தந்தேராஸ் ஆயுர்வேதத்தின் தினமும் கூட மூலிகைகளும் ஒரு வகையில் செல்வமேயாகும். மூலிகைகளும் செடிகளும் செல்வமாகும். தீபாவளி தினத்தன்று தான் மனித இனத்திற்கு அமிர்தம் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனவே, இன்று  நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்ந்து நடுநிலையில் உணர்ந்து, வாழ்வில் முன்னோக்கிச் செல்லுங்கள். எப்போதெல்லாம் ஆசீர்வதிக்கப் பட்டதாக உணருகின்றோமோ அப்போதெல்லாம் மேலும் அதிகமாக வந்து சேர்கின்றது. பைபிளில்," யாருக்கு இருக்கின்றதோ, அவருக்கே அதிகமாக அளிக்கப்படும், இல்லாதவருக்கு இருக்கும் மிகக் குறைவானதும்  எடுக்கப்பட்டு விடும்" என்று வசனம் உள்ளது.பழங்காலத்திலிருந்தே மிகுதியானதை  உணரவேண்டும் என்னும் எண்ணம் இருந்து வந்திருக்கின்றது. மிகுதியானது என்பது உள்ளத்தின் உள்ளிருந்து துவங்கி வெளிப்புறத்தில் தெரிகிறது. ஆகவே உங்களுக்கு ஏராளமான ஆசீர்வாதம் இருக்கின்றது. இந்த உணர்வுடனேயே செல்லுங்கள்.

மனதிலுள்ள கோபத்திலிருந்து விடுபடுவது எவ்வாறு?

ஒரு நாள் இறந்து விடுவோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். புன்னகையுடன் இறக்க விரும்புகிறீர்களா அல்லது கோபத்துடன் செல்ல விரும்புகிறீர்களா? நிச்சயமாக  ஓர் விமானத்திலோ ரயிலிலோ குப்பையை எடுத்துச் செல்ல விரும்ப மாட்டீர்கள். உங்கள் பெட்டியை அடுக்கும் போது, குப்பையையும் சேர்த்து வைத்துக் கொள்வீர்களா என்ன? எனவே,"நான் குப்பையை எடுத்துச் செல்ல விரும்பவில்லை" என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதைத் துறந்து விட்டு மகிழ்ச்சியாகச் செல்லுங்கள். ஒவ்வொரு குற்றவாளியும் ஒரு பாதிக்கப்பட்டவரே என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

வாழ்க்கையின் பொருள் என்ன?

தெரிந்தவர் கூற மாட்டார், கூறுபவருக்கு தெரியாது. இந்தக் கேள்வியே வாழ்வில் முன்னேறிச் செல்ல உதவும் ஒரு வாகனம் ஆகும். புனிதமான ஒன்றினைப் பாதுகாத்து வைத்துக் கொள்வது போன்று இந்தக் கேள்வியையும் உங்களுடனேயே வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் உங்களுக்கு விடை கிடைக்கும். அதற்கு முன்னர் வாழ்க்கையை மதிக்கத் துவங்குங்கள்.

நானும் என் துணைவரும் ஒருவருக்கொருவர் பொருத்தமானவர்தானா  என்று எவ்வாறு  நான் அறிந்து கொள்வது?

மிகவும் எளிதான ஒன்று இது. உங்கள் துணைக்கு  ஒரு வாரத்திற்கு எரிச்சலூட்டுங்கள். அவர் அல்லது அவள், அப்போதும் உங்களை நேசித்தால் சரியான துணை என்று கண்டறியுங்கள். ஒரு வாரத்திற்கு மட்டும், அவர்களிடம் தெரிவிக்காமல்  அவர்களுக்கு பிடிக்காத அனைத்தையும் செய்யுங்கள்!

அநீதியை எவ்வாறு கையாள்வது?

பொறுமை மற்றும் விடாமுயற்சியுடனேயே அநீதியைக் கையாள வேண்டும். கோபம் கூடாது, விடாமுயற்சி தேவை. கோபத்துடன் எதைச் செய்தாலும் எப்போதுமே பின்னர் வருந்துவோம்.

எதற்கு நான் முன்னுரிமை அளிக்க வேண்டும்?- தொலை தூரத்தில் இந்தியாவிலிருக்கும் என் குடும்பதிற்கா அல்லது ஐரோப்பாவில் சிறப்பாகச் சென்று கொண்டிருக்கும் எனது தொழில் வாழ்க்கைக்கா?


திறந்த மனதுடன் நீங்கள் அவர்களுக்குக் கிடைக்கும்படியான  நிலையில்  இருங்கள். ஒரு வேளை  உங்களது பெற்றோர் உடல்நலமின்றி இருந்தாலோ, தீவிரமாக உங்களது தேவையை உணர்ந்தாலோ நீங்கள் அங்கு செல்லும் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். நலமுடன் வசதியாக இருந்தால், நீங்கள் உங்கள் தொழில் வாழ்க்கையை தொடர விரும்பினால் அவ்வாறே செய்யுங்கள். ஒன்றுடன் ஒன்று மோத வேண்டாம். சில சமயங்களில் மனம் மோதலில் ஈடுபடும். அங்கு சென்றால் இங்கு வந்து பணிபுரிய வேண்டும் என்று தோன்றும். எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள்.

தந்தேராஸ் தினத்தில் நிறைவாக உணருங்கள்

திங்கள்கிழமை, 9 நவம்பர் 2015,

பெங்களூரு, இந்தியா 



அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்! இன்று தந்தேராஸ் தீபாவளி இன்று துவங்குகின்றது. தந்தேராஸ் அன்று நீங்கள் மிக நிறைவாக, அனைத்தையும் அடைந்திருப்பதாக உணருகின்றீர்கள். நிறைவிலிருந்து நிறைய வளருகின்றது. எனவே அனைவரும் திருப்தியுடனும் நிறைவாகவும் உணருகின்றனர்.  



நமக்கு தேவையானதெல்லாம் ஏற்கனவே நமக்குக் கிடைத்துவிட்டதாக உணர்ந்து நடங்கள். இதுவே தந்தேராஸ் செய்தியாகும். நமக்கு எது வேண்டுமோ அது நடக்கும். நமக்கு நிறையவே வந்து கொண்டேயிருக்கும். எப்போதெல்லாம் வெற்றி கிடைக்கின்றதோ ஓர் அருளினால் தான். விளையாட்டில், லாட்டரியில், படிப்பில், போட்டியில் அல்லது அரசியலில் எதில் வெற்றியானாலும், அது அருளினால் மட்டுமே நிகழ்கின்றது. அதை மறந்து ஒருவன் தான் எனும் அகந்தையில் மூழ்கினால் வீழ்ச்சி ஏற்படுகின்றது. எனவே எப்போதெல்லாம், எங்கெல்லாம் வெற்றி ஏற்பட்டாலும் அது அருளினால் மட்டுமே என்பதை எப்போதுமே நினைவில் கொள்ளுங்கள்.

குருதேவின் தீபாவளிச் செய்தி

வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2015,

பெங்களூரு இந்தியா


நமது வாழ்க்கை ஒரு விளக்கை போன்றது. ஒரு விளக்குக்கு ஆக்சிஜென் தேவையாக இருப்பதை போன்று நமக்கும் வாழ ஆக்சிஜென் தேவை. ஓர் கண்ணாடிக் கூண்டில் உங்களை அடைத்து வைத்தால், அதில் ஆக்சிஜென் இருக்கும் வரையில் தான், உயிர் வாழ்வீர்கள். அது போன்று ஓர் விளக்கை கண்ணாடி கூட்டில் மூடி வைத்தால் அது ஆக்சிஜென் இருக்கும் வரையில் தான் எரியும். எனவே நிச்சயமாக விளக்கிற்கும் நம் வாழ்விற்கும் ஒற்றுமை இருக்கின்றது.அந்த ஒற்றுமைதான் தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு அடிப்படையானது ஆகும். நீங்கள் விளக்கை போன்றவர் என்று உங்களுக்கு நினைவுறுத்துவதற்கேயாகும்.

நமது நாட்டில் தீபாவளிப் பண்டிகை பழம்பெரும் காலத்திலிருந்தே கொண்டாடப்பட்டு வருகின்றது.  வாழ்க்கை ஒரு விளக்கைப் போன்றது, எப்போதுமே அது விளக்குடன் தொடர்பு கொண்டதாகவே இருந்து வருகின்றது. நமது ஆத்மா ஓர் ஒளி, ஒளியுடனேயே தொடர்பு கொண்டதாக இருக்கின்றது.  அதனால் தான் ஒருவர் மரணம் அடையும் போது ஓர் விளக்கினை அவரது தலைப்பக்கத்தில் ஏற்றி வைப்பது வழக்கம். ஓர் குழந்தை பிறந்தவுடனேயே  வீட்டில் விளக்கேற்றி வைப்பார்கள். ஆகவே விளக்கு நமது வாழ்க்கையுடன் தனித்துவம் வாய்ந்த உறவினைக் கொண்டதாகும். 

வெளிச்சத்தை கொண்டுவர ஒரு விளக்கை மட்டும் ஏற்றினால் போதாது. நமது சமுதாயத்திலுள்ள அனைத்து விளக்குகளையும் ஏற்றவேண்டும். (மக்கள் ஞானம் மற்றும் ஆனந்தத்துடன் ஒளிவீச வேண்டும் என்ற பொருள்). அப்போது தான் நாம் சமுதாயத்தை முன்னேற செய்யமுடியும். சமஸ்க்ருதத்தில் சங்கச்சத்வம் என்றால், நாம் அனைவரும் இணைந்து நடப்போம், அனைவரின் வாழ்விலும் ஒளியும் மகிழ்ச்சியும் நிலவட்டும் என்பதே பொருளாகும். இது தான் தீபாவளியின் தனித்துவம் வாய்ந்த செய்தி. 

தீபாவளியன்று ஓர் விளக்கல்ல, ஆயிரம் விளக்குகளை ஏற்றுகிறோம். இருட்டினை அகற்ற ஒரு விளக்கு மட்டும் போதாது. ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட வேண்டும். தீபாவளியன்று ஆயிரக்கணக்கான விளக்குகளை ஏற்றி அனைவரும் சேர்ந்து கொண்டாடுகிறோம். அதனால் தான் அது தீபாவளி என்று அழைக்கப்படுகிறது. பழமையான இதிகாசங்களாகிய ராமாயணம் மகாபாரதம் இவற்றுடனும் தீபாவளிக்கு வலுவான தொடர்பு உள்ளது. மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ள பல நிகழ்வுகள் தீபாவளிப் பண்டிகையுடன் தொடர்புள்ளவை. ராமாயணத்தில், ஸ்ரீராமர் 14 ஆண்டுகள் வனவாசத்தினை முடித்து விட்டுத் திரும்பும் போது, நகரில் அனைவரும் விளக்குகளை ஏற்றி கொண்டாடியதாக கூறப்பட்டுள்ளது. பொருள் என்னறால், ஞான ஒளி உள்ளிருந்து தோன்றியவுடன் நம்மை சுற்றி உலகெங்கும் வெளிச்சம் ஏற்படுகிறது. உலகம் முழுமையும் அந்த ஞானத்தினால் பிரகாசிக்கின்றது. வாழ்க்கையில் ஆன்மீக ஞானத்தின் தனித்துவம் வாய்ந்த முக்கியத்துவத்தினை எடுத்துக்காட்டும் பொருட்டு தீபாவளியை கொண்டாடுகிறோம். புத்தர் பெருமான்,"ஆப்பஹ் தீபோ பவஹ்" என்று கூறுகிறார். வீட்டில் விளக்குகளை ஏற்றி வைத்ததுடன் தீபாவளியை கொண்டாடி விட்டதாக எண்ணக்கூடாது. உண்மையில் ஞானத்துடன் ஒளிவீச வேண்டும், அப்போது தான் பிறருடைய வாழ்க்கை பாதையில் வெளிச்சம் ஏற்படுத்த முடியும்.இதை தான் புத்தர் கூறியுள்ளார். அனைவரும் சீராகத் தியானம் செய்யவேண்டும்.

யோகா சூத்திரங்களில் பதஞ்சலி மகரிஷி, "முர்தா ஜ்யோதிஷி சித்த தரிசனம்" (விபூதி பாதா#32) உங்களுக்குள் இருக்கும் தெய்வீக ஒளியினை நீங்கள் கண்டறிந்தவுடன் முழுமையடைகின்றீர்கள், பல சித்திகள் விழித்தெழும். உங்கள் புத்தி சுத்திகரிக்கப்பட்டு ஒளி வீசும். ஆகவே இந்த தீபாவளி தினத்தன்று உங்களுக்குள் இருக்கும் ஞானதீபத்தை ஏற்றுங்கள். திருப்தியுடனும் மகிழ்ச்சியுடனும் இருங்கள். உங்களை சுற்றியிருப்பவர்களிடம் மகிழ்ச்சியைப் பரப்புங்கள். கடந்தகால அனைத்து பிரச்சினைகளையும் எதிர்மறைகளையும் ஒதுக்கி விட்டுவிடுங்கள்.அனைவருடனும் ஒத்திசைவுடன் இருங்கள். அனைவரிடமும் இனிமையாகவும் மென்மையாகவும் நடந்து கொள்ளுங்கள்.

தீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பது நமது மனதை நிகழ்காலத்திற்கு எடுத்து வருவதற்காகவே. உங்கள் மனம் பல்வேறு ஆசைகள் வெறுப்புகள் இவற்றால் தொந்தரவடையும் போது உங்கள் தலை வெடித்து விடும் போலிருக்கின்றதல்லவா? நீங்கள் பட்டாசுகள் வெடிக்கும் போது அவை வெளிப்புறத்தில் வெடித்து உள்ளே மனதில் ஏதோ ஒன்றினை சரிசமப்படுத்துகின்றது. மின்சார வசதியற்ற முற்காலத்தில் குழந்தைகள் வேடிக்கை விளையாட்டுக்காக பட்டாசுகள் வெடித்து மகிழ்வதுண்டு. மின்வசதியுள்ள தற்காலத்தில் பட்டாசுகள் வெடிக்கத் தேவையில்லை. நிறைய பட்டாசுகளுக்குப் பதிலாக மின்விளக்குகளை ஏற்றுங்கள். அது காற்றில் மாசு ஏற்படுவதை தடுக்கும்.


ஓரிரண்டு பட்டாசுகள் வெடித்தால் பரவாயில்லை. அவை மிகுந்த ஓசையுடனும் புகையுடனும் இருக்கக்கூடாது. பறவைகளும் விலங்குகளும் அவற்றால் பாதிப்படையும். அவற்றுக்கு அதிர்ச்சியும் பயமும் ஏற்படும். எனவே தீபாவளியன்று பட்டாசுகளை தவிர்த்து விடுங்கள். தவிர்க்கவே முடியவில்லையெனில், சில மத்தாப்புக்களை மட்டும் கொளுத்துங்கள். அனைவரையும் தொல்லைக்குள்ளாக்கும் சப்தம் அதிகமான பட்டாசுகளை வெடிக்கத் தேவையில்லை. இவற்றால் பறவைகளும் விலங்குகளும் மிகவும் பயந்து விடுகின்றன. மேலும் பொரித்த தின்பண்டங்களை தீபாவளியன்று உண்பதும் தேவையில்லாததாகும். ஆரோக்கியமான சத்தான உணவை உட்கொண்டு அதை பிறருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையின் பரந்த முடிவில்லாத இயல்பினை நினைவில் கொள்ளுங்கள். வாழ்வில் நீங்கள் பெற்றுள்ள அனைத்திற்கும் ஆழ்ந்த நன்றியுடன் இருங்கள். எங்கும் ஒளியூட்ட விளக்குகளை ஏற்றுங்கள். அத்துடன் நீங்களும் ஓர் அழகான விளக்கு என்பதை நினைவுறுத்திக் கொண்டு மகிழ்ச்சி மற்றும் ஞானத்தை பரப்புங்கள். உங்களிடம் வரும் ஒவ்வொருவரும் சந்தோஷ ஒளியினை பெறவேண்டும் யாருமே வருந்தக்கூடாது. இதற்குத்தான் நீங்கள் பிரார்த்தனை செய்யவேண்டும்.

பக்தன் தோல்வி அடைய முடியாது

சனிக்கிழமை, 31 அக்டோபர், 2015,

பெங்களூரு இந்தியா


 நாம் தோல்வி அடையும் போது செயல்படுபவர் யார்? நான் வெற்றியடையும் போது, அது கடவுள் அருள், குருதேவ் அதை நிறைவேற்றினார் என்றெல்லாம் கூறுகிறேன். ஆனால் நான் தோல்வியுறும் போது, பொறுப்பேற்று கொள்ள கடவுள் என்னைச் சுற்றி எங்குமில்லையே?

தோல்வியுற்ற நேரங்களை பின்னோக்கிப் பாருங்கள். அந்த தோல்விகள் அனைத்தும் உங்களுக்கு நன்மையாகியிருப்பதை எத்தனை பேர் உணருகின்றீர்கள்? (பலர் கையுயர்த்துகின்றனர்) உங்கள் தோல்விகளை பின்னோக்கி பார்க்கும் போது, அவற்றிலிருந்து கற்றுக் கொண்டிருந்திருப்பீர்கள், முன்னோக்கிச் செல்ல உங்களுக்குப் படிக்கற்களாக அமைந்திருக்கும். நீங்கள் இந்தப் பாதையில் இருக்கும் போது,மனத் தூய்மையுடன் தியானம் செய்து கொண்டு இருக்கும் போது ஒரு போதும் தோல்வி அடையவோ,கீழே இறங்கவோ மாட்டீர்கள். தோல்வி அடைவது போன்று தோன்றினாலும், அந்த சிறு தோல்வியும் உங்களுக்கு பெரிய வெற்றியினை ஈட்டித் தருவதற்காகவே ஆகும். இது நிச்சயம். பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் "என் பக்தர் ஓர்நாளும் அழியமாட்டார்" என்று உலகிற்கு உறுதியளித்திருக்கின்றார். பக்தன் அழியும் வாய்ப்பே இல்லை. தூய்மையான மனம் கொண்டவனே பக்தன். நீங்கள் கபடமானவராக இருந்தால் அதனால் தான் தோல்வி ஏற்படும். கபடத்தின் பலனை நீங்கள் அனுபவித்தேயாக வேண்டும். நல்லனவற்றையே செய்து தோல்வி அடைந்தால் கவலைப் படாதீர்கள். நீங்கள் முன்னேறுவது உறுதி.

இயேசு நாதர் சென்னையிலுள்ள மயிலாப்பூரில் வாழ்ந்திருக்கின்றார் என்று முன்னர் தாங்கள் கூறியிருக்கின்றீர்கள். அதைப் பற்றி மேலும் கூற முடியுமா?

இயேசு மயிலாப்பூரில் வாழ்ந்து அங்கு தான் வேதாந்தத்தினை கற்றார். அவர் திரும்பி சென்றவுடன், புனித தாமஸ் அவரை சந்தேகித்தார். இயேசு அவரை, “என்னை நம்பவில்லையெனில் நீயே சென்று பார்“ என்று கூறினார். அதனால் தான், புனித தாமஸ் இந்தியாவிற்கு வந்தார். அவர் முதலில் கேரளாவில் வந்திறங்கி, பின்னர் மயிலாப்பூருக்கு வந்தார். அவர் தம் வாழ்நாளின் இறுதிப் பகுதியினை இங்கேயே கழித்தார். புனித தாமஸ் குன்று மீது அமர்ந்து தியானம் செய்து வேதாந்தம் முழுவதையும் மற்றும் யோகா தியானம் ஆகியவற்றையும் கற்றார். இன்றும் நீங்கள் செயின்ட் தாமஸ் மவுண்ட் இருப்பதை காணலாம். அவரது சமாதியும் அங்குள்ளது. வாட்டிகன் சர்ச் இதனை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளாது. ஆனால் அவர்கள் செயின்ட் தாமஸ் இங்கு வந்ததை ஒப்பு கொள்கின்றனர். தாமஸின் வழி வந்தவர்கள் இப்போதும் சன்யாசிகளை போன்று சிவப்பு ஆடையும் ருத்ராக்ஷமும் அணிகின்றனர். பல சான்றுகள் உள்ளன. நீங்கள் ஆழ்ந்து தியானம் செய்தால், கடந்த கால பல விஷயங்களை அறிந்து கொள்ளலாம். ஆனால் அதற்கு நீண்ட காலமாக  தியானம் செய்ய வேண்டும்.

புரிந்தவரையில், நான் கற்றுக்கொண்ட வரையில், அனைத்தும் பிரம்மன், பிரம்மனுக்கு வெளியே எதுவுமேயில்லை. எங்கும் நிறைந்த அதிவிவேக பிரம்மனில் ஓர் பகுதியாக இருக்கும் போது எவ்வாறு நாம் அறியாமையுடன் இருப்பது நிகழ்கின்றது? இந்த அறியாமை எவ்வாறு எழுகின்றது?

அறியாமையும் பிரம்மனில் ஓர் பகுதியே. பிரம்மன் முழுமையானது அனைத்தின் கூடுதலானது..

சில சமயங்களில் மாயையின்றி ஏதேனும் இருக்கிறதா என்று அதிசயிக்கின்றேன். நான் பார்க்கும், உணரும் அல்லது அனுபவிக்கும் அனைத்தும் ஏதோ ஓர் விதத்தில் மாயை என்றே தோன்றுகிறது. உலகத்தில் எதன் பின்னாலும் ஓடுவதில் பயனில்லை என்று தோன்றுகிறது, ஆயினும் உங்கள் பின்னால் ஓடிகொண்டிருக்கின்றேன்! மாயை மற்றும் மாயையற்றது இவற்றினை வேறுபடுத்திக் காண உதவுங்கள்.

உங்கள் இதயம் கூறுவதைக் கேளுங்கள். எதை அளவிட முடியுமோ அது மாயை. மாயை என்னும் சொல்லிலிருந்து அளவிடுதல் எனும் சொல் ஏற்பட்டது.இந்தப் பூமியில் அளவிடக் கூடியதனைத்தும் மாயை தான். காண்பதையெல்லாம் அளவிட முடியும். கண் பரிசோதனைக்கு மருத்துவரிடம் சென்றால்,அவர் உங்கள் பார்வை 0.5 அல்லது அது போன்ற ஓர் அளவினை குறிப்பிடுவார். ஆகவே பார்வை அளவிடக் கூடியது. அது போன்று ஓசை, சுவை, தொடுதல் அளவிடக் கூடியவை.. பஞ்ச பூதங்களால் ஆன இவ்வுலகில் உள்ளவை அனைத்தும் அளவிடக் கூடியவை.

அளவிட முடியாதது கருணை என்னிடம் 10 லிட்டர் அல்லது 2 டிகிரி கருணை உள்ளது அல்லது 5 டிகிரி அன்பு உள்ளது என்று கூறமுடியாது. அன்பினை அளக்க முடியாது. உண்மையை அளவிட முடியாது. பேரின்பத்தினை அளவிட முடியாது. இவையெல்லாம் பிரம்மனின் ஓர் பகுதியாகும். மெய்யுணர்வின் பகுதி , மெய்யுணர்வு என்பது அளவிற்கு அப்பாற்பட்டது, எனவே மாயைக்கு அப்பாற்பட்டது. விழிப்புணர்வின் இயல்பு, உயர்ந்த மெய்யுணர்வினை நோக்கி நகர்வதேயாகும். சிறு மனம் பெரிய மனதினை நோக்கி நகருதல் போன்றது. ஓர் சிறு குழந்தை தன் தாயை நோக்கி ஓடுவதை போன்று சிறு விழிப்புணர்வு அல்லது சிறு மனம் பெரிய மெய்யுணர்வை அல்லது பெரிய மனதினை நோக்கி ஓடுகின்றது.

தோல்வியைப் பற்றிய பயம் சில சமயங்களில் முயற்சி எடுப்பதைத் தடை செய்கின்றது. இதை நான் எவ்வாறு தடுப்பது?

குழந்தைகளுடன் விளையாடுங்கள். அவர்களிடம் தோற்பதற்குத் தயாராகுங்கள். அது நல்ல பயிற்சி. குழந்தைகளுடன் விளையாடும் போது எப்போதும் வெற்றியடைய விரும்புவீர்களா என்ன? நீங்கள் பெரியவர், குழந்தைகளுடன் விளையாடுகிறீர்கள். வெற்றியையா விரும்புவீர்கள்? அவர்களை வெற்றியடைய செய்வதிலேயே உங்கள் சந்தோஷம் அடங்கியுள்ளது. எனவே நீங்கள் தோல்வி அடைகின்றீர்கள். ஆயினும் விளையாட்டினை மிகவும் விரும்புகிறீர்கள். அதே போன்று, சில தோல்விகள் வாழ்வில் வரும்.அதனால் என்ன? பரவாயில்லை. உங்கள் ஆழத்திலிருக்கும் ஒன்று எப்போதுமே தோல்வி அடையாது.

கலை மற்றும் கலைஞனின் நோக்கம் மற்றும் பங்கு யாவை? ஆன்மீகத்திற்கும் கலை வெளிப்பாட்டிற்கும் இடையே உள்ள உறவு என்ன?


வாழ்க்கையே ஓர் கலை.எது இருக்கிறதோ அதைப் பாராட்டுவது கலை. மலர்க் குவியல் இருந்தால் அதை நீங்கள் மலர்குவியலாகவே காண்பீர்கள். அதையே பகுதிகளாகப் பிரித்து அலங்கரித்தால் அதைக் கலை என்று கூறுகின்றீர்கள். கலை என்பது உங்களுக்கு எதையோ தெரிவிக்கும் ஒன்று. அது உங்கள் இதயத்தை, உணர்வுகளைத் எழுப்பி, உங்கள் மனதை வசீகரிக்கின்றது.

வார்த்தைகளில்லாத ஒரு குரல்

வியாழக்கிழமை, 29 அக்டோபர், 2015        

பெங்களூர், இந்தியா


(தமிழ்நாட்டிலிருந்து வந்த பாடகர்களின் குழுவினர், இன்றைய சத்சங்கத்தில் சேர்ந்து கொண்டார்கள். புகழ் பெற்ற மாணிக்கவாசகர் இயற்றிய பாடல்களைப் பாடினார்கள்)

இன்று தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் குழுவினர், பிரசித்தி பெற்ற 63 நாயன்மார்களில் ஒருவரான மாணிக்கவாசகரை சேர்ந்தவர்கள்.தமிழகத்தில் 63 சிவஅடியார்கள் இருந்தனர். அதில் மூன்றாவதாக வந்தவர் மாணிக்கவாசகர். வார்த்தைகள் ஞானத்தின் முத்துகள் போன்றவை என்பதால் அவரை மாணிக்கவாசகர் என்றழைத்தனர். அவருடைய வார்த்தைகள் வைரம் மற்றும் சிவப்பு இரத்தினக் கற்கள் போன்றவை. அவர் பேசுவது போல் தெளிவாக அப்பழுக்கில்லாமல் இருக்கும். இவர்கள் பாடிய இப்பாடலில், மாணிக்கவாசகர் மனித வாழ்க்கையை பற்றிய அழகான விளக்கத்தை அளிக்கிறார். பின் வருமாறு. இறைவன் ஒரு சிறுமி கயிற்றைத் தாண்டி விளையாடுவது போல் ஆடுகிறார். தாண்டி விளையாடும் போது கால் கயிற்றில் சிக்காமல் குதித்து விளையாடுகிறீர்கள். அதே போல், வாழ்வில் வரும் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளாமல், தாண்டி சென்று இறைவனை சென்றடையுங்கள் என்று அழகாக சொல்கிறார். எல்லாத் தடைகளையும் தாண்டி இறைவனை சென்றடையுங்கள். அவர் மேலும் சொன்னது; சிவபெருமான் மூன்றாவது கண்ணைத் திறந்து மூன்று மாநகரங்களை எரித்தார். அந் நகரங்கள் யாவை?

·         கர்ம வினை (செயல்களின் பதிவுகள்)
·         அகம்பாவம்
·         மாயை (உண்மையற்றதை உண்மையென்று நினைப்பது)

இந்த மூன்று நகரங்களில் மனிதன் சிக்கிக் கொண்டு சுற்றிச் சுற்றி வருகிறான். (மீண்டும் 
மீண்டும் பிறவி எடுக்கிறான்).இப்பிறவித் தளையிலிருந்து விடுபட, முக்தியடைய இறைவனின்
அருள் தேவை. எனவே ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கயிறு தாண்டுவது போல், அதில் சிக்கிக் 
கொள்ளாமல் தாண்டிச் செல். பிரச்சினைகள் கயிறு போன்றவை. நீ கவனமாக அதைத் தாண்ட
வேண்டும். பிரச்சினைகளைத் தாண்டி மேலே சென்றால் இறைவனின் அருளை உணரலாம்.
பிரச்சினைகளைத் தாண்ட உதவும் இறைவன் எப்போதும் உன்னுடனிருப்பதை நீ உணரலாம். 
இப்பாடலின் கருத்து இது தான்.

பாடலுக்கு மற்றொரு பொருளுண்டு. 3 நகரங்கள் விழிப்பு, கனவு மற்றும் தூக்க நிலைகளை குறிக்கிறது. இறைவனின் அருளை நீ உணரும் போது, உன் வாழ்வில் இறைவனின் பங்கை நீ புரிந்து கொள்ளும் போது, நான்காவது நிலையை, ஞான நிலையை அடைய முடியும். அதை சிவ தத்துவமென்று சொல்லலாம்.  தியான நிலை அல்லது துரிய நிலை என்றும் அழைக்கப்படுகிறது. நீ தியானத்தில் அமரும் போது நான்காவது நிலையை அடைய முடியும். தியானத்தின் போது விழிப்பு நிலை, கனவு நிலை மற்றும் தூக்க நிலைகளைக் கடந்து செல்கிறாய்.

மாணிக்கவாசகரின் பாடல் 2000 ஆண்டுகளுக்கு முன்பானது. ஒரு சில பக்தர்கள் இப்பாடல்களை போற்றி அழியாமல் காத்து காத்து நமக்குத் தருகிறார்கள். அப்படிப்பட்ட சிறந்த மனிதர்களை நான் இங்கு அழைத்திருந்தேன். எல்லாவற்றையும் மறந்து இப்பாடல்களைப் பாடி, அதன் கருத்துகளைச் சிந்திக்க முடியும். இந்தியாவின் மூலை முடுக்குகளில் பல பக்தர்கள் வாழ்கிறார்கள். பல அறிஞர்கள் பல அழகான பாடல்களை பாடியிருக்கிறார்கள். குருவாயூர் கிருஷ்ணரிடம் மிகவும் பக்தியுள்ள கேரளாவில் வாழ்ந்த பூந்தானம் என்பவர் இயற்றிய ஞானப்பானா என்ற பக்திப் பாடல் இன்றும் பாடப்பட்டு வருகிறது. 12 ம் நூற்றாண்டில் கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்த பசவண்ணா இயற்றிய வசனங்கள் இன்றும் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. 12ம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் வாழ்ந்து வந்த அல்லாம பிரபு எழுதிய வசனங்களும் போற்றப்படுகின்றன. அக்கா மாதேவி என்ற பெண் புலவர் இயற்றிய “மந்த்ர கோப்யா” மற்றும் ‘யோகாங்கத்ரிவிதியாரே” கன்னட இலக்கியத்தில் சிறந்ததாகக் கருதப்படுகிறது.



13ம் நூற்றாண்டில் மகாராஷ்டிரத்தில் வாழ்ந்து வந்த, நாத் பரம்பரையில் வந்த தத்துவ ஞானி மற்றும் யோகி, சந்த் க்யானேஷ்வர் பகவத்கீதைக்கு விளக்கம் எழுதியிருக்கிறார். அவர் எழுதிய த்யானேஷ்வரி மற்றும் அம்ருத அனுபவ மராட்டி இலக்கியத்தில் சிறப்பாகப் போற்றப்படுகின்றன. இந்தியாவின் எல்லா பகுதிகளிலுமே ஆன்மீக விழிப்புணர்வு இருந்து வந்திருக்கிறது. எல்லா மாநிலங்களிலும் பல ஞானிகள், புலவர்கள் பல சிறந்த இலக்கியங்களை படைத்திருக்கிறார்கள்.
எனவே இந்திய நாடு ஞானிகள், தத்துவ அறிஞர்கள் வாழ்ந்து வந்த நாடாகும். கன்னட மொழியில் “வசன சாகித்யம்” என்ற தாள கதியில் எழுதப்பட்ட பாடல்கள் பிரசித்தி பெற்றவை. ‘வசனம்” என்றால் சொல்லப்பட்டது என்று அர்த்தம்.

கேள்வி - பதில்கள்

நாங்கள் ‘வைசேஷிக தர்ஷணம்’ (இந்தியாவில், இந்து மதத்தின் பழமை வாய்ந்த 6 பிரிவுகளில் ஒன்று) பற்றி படித்தோம். மைக்ராஸ்கோப் போன்ற நுண்ணிய கருவிகள் இல்லாத பழங் காலத்தில், இந்து மத ஞானிகள் எப்படி விஞ்ஞான அறிவில் சிறந்து விளங்கினார்கள் என்பதை பற்றிச் சொல்வீர்களா?

நம் மனதுக்கு எட்டாத புதிர் என்று நினைக்கிறேன். இன்று காலை தற்கால விஞ்ஞானி ஒருவர் “வைசேஷிக தர்ஷணத்தில் பௌதீகம்’ என்ற தலைப்பில் எழுதிய ஒரு புத்தகத்தை படித்தேன். இரண்டு மூன்று சூத்திரங்களைப் படித்த உடனே மனதுக்கு எட்டாத ஆச்சரியமாக இருந்தது.
10000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ரிஷிகள் அணுவைப் பற்றி விவரமாக சொல்லியிருக்கிறார்கள். ஒரு அணுவை அழிக்கும் போது, அது எப்படி மற்ற பல அணுக்களை அழிக்க வல்லது என்பதை விவரித்திருக்கிறார்கள். அணுத் துகள்களின் ஓட்டப் பாதையைப் பற்றியும், அவை எப்படி மற்ற அணுத்துகள்களுடன் எப்படித் தொடர்பு கொண்டிருக்கிறது என்பது பற்றியும் நுணுக்கமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஒரு அணுவை நாம் நன்றாக அறிந்து கொண்டால், அது மற்ற அணுக்களை பற்றிய அறிவுக்கு வழி வகுக்கும்.

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது இதுதான். ஐந்து புலன்கள் மூலம் அறிவதற்கப்பால், வேறுவழி ஒன்று உள்ளது. ஆறாவது அறிவு என்று சொல்கிறோம். 6வது அறிவை உபயோகப்படுத்தி, கடந்தகால மற்றும் எதிர்கால நிகழ்வுகளை பற்றி நீ அறியமுடியும். வாழும் கலையில், குழந்தைகளுக்கான ஒரு விசேஷ பயிற்சித் திட்டத்தை வகுத்திருக்கிறோம். இது அவர்களுடைய ஆறாவது அறிவைத் தூண்டுவதற்கான பயிற்சி. பெரியவர்களும் இப் பயிற்சியில் சேரலாம். ஆனால் அவர்களுக்கு அதிக காலம் தேவை. குழந்தைகளின் இந்த சக்தியைத் திறக்க சில மணி நேரம் அல்லது சில வாரங்களே தேவை. அவர்கள் தங்கள் கண்களை மூடிய படியே புத்தகத்திலிருப்பதை படிக்க முடியும். உங்களுக்குத் தெரியுமா? சில குழந்தைகள் இப்பயிற்சிக்கு,  மாலை சத்சங்கத்தில் பேசப் போவதை முன் கூட்டியே அறிந்து என்னிடம் சொன்னார்கள். அவர்களுடைய ஆறாவது அறிவை பயன்படுத்தும் திறமை வேகமாக வளர்கிறது. பண்டைய காலத்து ரிஷிகளுக்கும் இந்த ஆறாவது அறிவுத் திறமை (உள்ளுணர்வு) மிகவும் சிறப்பாக இருந்திருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

தமிழ் நாட்டில் தஞ்சாவூர் கோவிலுக்குச் சென்றால், (கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டது.) தொப்பி அணிந்த,துப்பாக்கி ஏந்திய ஆங்கிலேயப்படை வீரனின் சிலையை காணலாம். 1000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வந்திருக்கவில்லை. துப்பாக்கிகளும் கிடையாது. அப்போது வாழ்ந்தவர்கள், பிற்காலத்தில் இப்படி நடக்குமென்பதை, ஆங்கிலேயர்கள் வந்து நம்மை ஆள்வார்கள் என்பதை தங்கள் உள்ளுணர்வால் அறிந்திருந்தார்கள். எனவே தொப்பி அணிந்த, துப்பாக்கி ஏந்திய ஆங்கிலேய படை வீரனின் உருவத்தை கல்லில் வடித்தார்கள். இது அவர்களுடைய ஆறாவது அறிவால் சாத்தியமாகும். நாமும் நம் ஆறாவது அறிவை எப்போதாவது பயன் படுத்தியிருப்போம். அதை தியானம் மூலம் முறையாக தொடர்பு கொள்ளலாம்.

இறைவனின் கவசம்

செவ்வாய், 10, அக்டோபர், 2015  



பெங்களூரு, இந்தியா

எல்லாம் ஏராளமாக கொடுக்கப்படும் என்ற நம்பிக்கையோடு, இறைவனால் பாதுகாக்கப்படுகிறீர்கள் என்ற நம்பிக்கையோடும் செயல்படுங்கள். உங்களை சுற்றி இறைவனின் கவசம் இருக்கிறது.நீங்கள் கவலைபடுவதற்கு ஏதும் இல்லை.இதை அறிந்து,வாழ்வில் திருப்தியுடனும், உறுதியுடனும், ஆனந்தத்தோடும்,பொறுமையுடனும், நிறைவுடனும் நம்பிக்கையுடனும் மேலே நடந்து செல்லுங்கள்.

நாளை ரிஷி ஹோமம். இதுவென்று கணிக்க இயலாத பன்னெடுங்காலமாய் இருந்து வரும் குருமரபினுக்கு மரியாதை செய்யும் நாள். நாளை ஆயுதபூஜையும் கூட. எல்லா கருவிகளும் தொழில் நுட்பங்களும் இறையின் அங்கமே. எல்லா கருவிகளையும் தொழில் நுட்பங்களையும் இறைவனின் பரிசாகக் கருதி நாளை அவற்றுக்கு மரியாதை செய்வோம். ஆன்மீகத்தில், வாழ்க்கை முழுமையான ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆன்மீகம் வாழ்கையின் ஒரு மூலைப்பகுதி அல்ல, வாழ்கையின் முழுமையைப் பார்க்கும் திறன். உணவு, இசை, நடனம், அறிவு, கருவிகள், தொழில்நுட்பம், என எல்லாமே ஆன்மீகத்தின் ஒரு பகுதி. வாழ்கையின் இந்த முழுமையில் ஈடுபடுவதே ஆன்மீகம்.எனவே ஆயுதபூஜையில் அனைத்து கருவிகளையும் தொழில்நுட்பங்களையும் இறைவனின் பரிசாகக் கருதி மரியாதை செய்கிறோம். கணினிகள், கைபேசிகள், கருவிகள், தொழில்நுட்பங்கள், திருப்புளி, சுத்தியல், என முடிந்த ஒவ்வொன்றும் இறையின் அங்கமாகக் கருதி மரியாதை செலுத்தப்படுகிறது.

சிறு குழந்தைகள், சிறுவர் சிறுமியர், முதிர்ந்த தம்பதி, பெண்கள், குதிரை, யானை இவை எல்லாமே இறையின் அங்கமாகக் கருதி இன்றைய சண்டி ஹோமத்தில் மரியாதை செய்யப்பட்டது. இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துளியிலும் அன்னை சக்தியின் அருள் விரவி இருக்கிறது. எனவே அன்னை சக்தியின் இருப்பை ஒவ்வொரு உயிர் வடிவிலும் கண்டு மரியாதை செய்கிறோம்.

கண்களை மூடினால் இருக்கும் வெளியும் ஒளியும் எல்லாமே அன்னை சக்தியே. கண்களைத் திறந்தால் நீங்கள் பார்க்கும் எல்லா வடிவமும் அதன் முழுமையோடும் குறைகளோடும் அன்னை சக்தியின் வடிவங்களே.(குண்டலினி சக்தி, சித்த சக்தி மற்றும் பராசக்தி என்றும் அழைக்கபடுகிறது.) எனவே ஆசையோ அல்லது ஞானமோ எல்லாமே சக்தியின் அங்கமே.

நினைவுகள்

புதன் கிழமை 23,  செப்டம்பர் 2015

பெங்களூர், இந்தியா


கேள்வி - பதில்கள்

குருதேவா ! இன்று சுதர்சன கிரியா கோடிக்கணக்கான உலக மக்களின் வாழ்க்கையில் நன் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதைப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரிய வந்தது. அல்லது அது எப்படி உங்களுக்குக் கிடைத்தது?

காலத்தின் தேவைப் படி ஞானம் மக்களுக்காக வெளிப்படுகிறது. தன்னிச்சையாக நிகழ்கிறது. இது ஆச்சரியம். இப்படைப்பு நமக்குத் தெரியாத பல ஆச்சரியங்களை உள்ளடக்கியுள்ளது. பல முறை நாம் அதிசயங்கள் நடப்பதைப் பற்றிப் பேசுகிறோம். எல்லோருடைய வாழ்க்கையிலும் அவ்வப்போது அதிசயங்கள் நிகழ்கின்றன.

நமக்குள் அமைதியாக நம் ஆன்மாவின் ஆழத்தில் ஒன்றியிருக்கும் போது, அதிசயங்களுக்குக் குறைவே கிடையாது. படைப்பின் அதிசயங்களுக்கு முடிவு கிடையாது. அதிசயம் என்பது யோக சாதனைகளின் முகவுரையாகும். நம் வாழ்வில் ஆச்சரியமான நிகழ்வுகள் துவங்கும் போது, இயற்கையாகவே நம் வாழ்வின் மற்றொரு பரிமாணத்தை உணரலாம். இதுவரை வெளிப்படாத, கண்ணால் காண முடியாத, சூட்சுமமான, இது வரை கற்பனை செய்ய முடிந்ததை விட மகத்தான ஒன்றைப் பற்றி அறியலாம்.
இந்த அனுபவம் சில முக்கியமான மனிதர்களுக்கு மட்டுமல்ல. யாருக்கு வேண்டுமானாலும் இந்த அனுபவம் வர முடியும். ஆனால் உண்மையில் சிலர்  மட்டுமே அனுபவிக்கிறார்கள்.

குருதேவா ! நான் இன்று இங்கு வரும் போது, துபாயிலிருக்கும் என் நண்பர் ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தார். உங்கள் குரலைப் பதிவு செய்து அவருக்கு அனுப்பச் சொல்லியிருந்தார். உங்களை ஆசிர்வதிக்க சொல்லியிருக்கிறார். இது வரை அவர் உங்களை நேரில் சந்தித்ததில்லை. ஆனால் உங்கள் ஞானம் பற்றிய அறிவுரைகளை யூ.ட்யூபில் (வீடியோ) பல முறை கேட்டிருக்கிறார். துபாய் மற்றும் அபுதாபியிலிருக்கும் பல மக்கள் உங்கள் ஸத்சங்கப் பதிவுகளை வீடியோவில் கண்டு, கேட்பதை வழக்கப் படுத்திக் கொண்டு, மன உளைச்சலிலிருந்து விடுபட்டிருக்கிறார்கள். நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?

இது நவீன தொழில் நுட்பத்தால் கிடைத்த பெரிய பரிசு. தொழில் நுட்பம் காரணமாக உலகின் எல்லா இடங்களுக்கும் நாம் தொடர்பு கொள்ள முடிகிறது. இது வரை, வெகு சிலரிடம், இரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு வந்த ஞானம் இப்போது பலருக்குச் சென்றடைகிறது. இண்டர் நெட் மூலம் வெகு விரைவாக பலரைத் தொடர்பு கொண்டு, ஞானத்தைப்  பகிர்ந்து கொள்ள முடிகிறது. அதனால் தான் ஞானத்தின் கதவுகளை எல்லோருக்காகவும் திறந்து விட நான் விரும்பினேன். இந்த ஞானம் (சுதர்சன கிரியா) விலை மதிக்க முடியாதது. இது ஜாதி, மதம், இன வேறு பாடின்றி எல்லோருக்கும் அளிக்கப்  படுகிறது. இது உலகின் எல்லா இடத்திலுமுள்ள மனித சமுதாயத்தை சேர்ந்து. சமுதாயமனைத்தும், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவரானாலும், எந்த மதத்தைச் சேர்ந்தவரானாலும், இந்த ஞானத்தால் பயனடைய முடியும்.

மத வழிபாட்டுடன், சில பயிற்சிகளைப் பின் பற்றுவதால், மனம் ஆனந்தமும் அமைதியுமடையுமென்று நினைக்கிறேன். ஆன்மீகப் பயிற்சிகள் மிக முக்கியமானவை. ஆன்மீகம் ஒவ்வொருவருடைய வாழ்க்கைக்கும் இன்றியமையாதது. பயிற்சிகள் உடலுக்கு வலுவைக் கொடுக்கிறது. மனமும் இதயமும் ஆனந்தத்தால் மலரும். அறிவாற்றலைக் கூர்மைப்படுத்தும். இந்த ஞானம் எல்லோரையும் சென்றடைய வேண்டுமென நான் நினைக்கிறேன். ஆகவே, இந்தியாவின் பழங்கால பொன் மொழியான வசுதேவ குடும்பகம் (உலகமனைத்தும் ஒரே குடும்பம்) என்பதற்கேற்ப, ஒவ்வொரு வீட்டுக்கும் இந்த ஞானத்தை எடுத்துச் செல்வதற்காக வாழும் கலை நிறுவனம் துவங்கப்பட்டது.

குருதேவா ! உலகிலுள்ள ஒவ்வொருவரும் உங்களைச் சந்திக்க விரும்புகிறார்கள். அவர்கள் மிகவும் செல்வாக்கு, வலிமை பெற்றவர்களாக இருந்தாலும் சரி, மிகவும் ஏழையாக இருந்தாலும் சரி. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது பற்றி தயவு செய்து சொல்லுங்கள்.

நல்லது. நானும் எல்லோரையும் சந்திக்க விரும்புகிறேன். இன்றைய தொழில் நுட்பத்தின் உதவியால் மிகத் தொலைவிலிருக்கும், மூலை முடுக்குகளில் வசிப்பவர்களையும் தொடர்பு கொள்வது சாத்தியமாகி விட்டது. உங்களைப் போன்ற ஊடகத்தில் வேலை செய்பவர்களால், பல மக்களைத் தொடர்பு கொள்ள முடிகிறது.

மக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை கடிதம் மூலம், இ.மெயில் மூலம் தொடர்பு கொள்ளலாம். இ.மெயில் உதவியால், ஒவ்வொரு நாளும் எனக்கு ஆயிரக்கணக்கான கடிதங்கள் வருகின்றன. இரு வகையான தொடர்புகள் உள்ளன.  வெளித் தொடர்பு, 2.     உள் தொடர்பு

நம் ஆத்மாவுடன் (உள்) தொடர்பு கொள்ள வேண்டும். நேர்மையாக மற்றவர்களின் ஆத்மாவோடு நாம் தொடர்பு கொண்டிருப்பதை உணரும் போது, அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வு தானாகவே வரும். இதை நாம் புரிந்து கொண்டு, அவர்களை ஆத்மார்த்தமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அது மட்டும் தான் தேவை.

நுட்பமான நிலையில், நாமனைவரும் இணைக்கப்பட்டிருக்கிறோம். எல்லோரும் ஒருவரோடொருவர் தொடர்பு கொண்டிருக்கிறோம். நம் மூளையில் கோடி கோடி செல்கள் உள்ளன. நம் உடலின் ஒவ்வொரு பகுதியும் இப்பிரபஞ்சத்தோடு சேர்ந்தவை. ஒவ்வொரு மனிதனும் பிரபஞ்சத்தின் ஒரு பகுதி தான். ஆழ் நிலையில் சென்று, நாமனைவரும் ஒருவரோடொருவர் சேர்ந்திருப்பதை உணர முடியும். தியானத்தின் போது அப்படி உணர முடியும்.

குருதேவா! உங்களைப் பார்த்தவுடன் எங்களுடைய எல்லா புகார்களும், கவலைகளும் தானாகவே மறைந்து விடுகின்றன. நீங்கள் எப்போதாவது கவலைப்படுவதுண்டா ?

நான் எல்லோரையும் பற்றிக் கவலைப்படுகிறேன். இந்த நாட்டைப் பற்றிக் கவலைப்படுகிறேன். முழு படைப்பையும் பற்றிக் கவலைப்படுகிறேன். ஆனால் இதை ஒரு பிரச்சினையாகக் கருதுவதில்லை.

குருதேவா ! இப்போது நீங்கள் உள் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதைப் பற்றிச் சொன்னீர்கள். நான் உங்களை சந்திக்கத் திட்டமிட்ட போது, பல பெற்றோர்கள் தங்கள் சொந்த பிள்ளைகளோடு தொடர்பு கொண்டு, நல்ல உறவோடு இருக்க முடியாமலிருப்பதைக் கண்டேன். உங்கள் குருதேவரிடம் என்ன மாயம் இருக்கிறது? கண்ட உடனே அவரால் ஈர்க்கப் பட்டு, பிள்ளைகள் அவரோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் பெற்றோர் சொல்வதைக் கேட்பதில்லை ?

இளைஞர்கள் அதிக உற்சாகமுள்ளவர்கள். எப்போதும், உற்சாகமாக இருப்பதை ஊக்கப்படுத்துபவன்  என்று அவர்களறிவார்கள். இளைஞர்கள் புதிதாகக் கற்றுக் கொள்வதில் ஆர்வமுள்ளவர்கள். அவர்கள் இங்கு வரும் போது, ஞானத்துக்கான தாகத்தைத் தீர்த்துக் கொள்ள முடிகிறது. இளைஞர்கள் முழு மனதுடன், அன்போடு, ஆனந்தமாக இருப்பதை விரும்புவார்கள். இங்கு அவர்களை நாம் மரியாதையாக நடத்துவோமென்று அவர்களுக்குத் தெரியும்.

ஒருவர் வயதால் மட்டுமே இளைஞராக முடியாது. தங்கள் இதயத்தில் இளமையாக உணர்ந்து, ஆர்வம் மற்றும் உற்சாகத்தோடு இருந்தால், அப்படிப் பட்டவர்களை நான் இளைஞரென்று அழைப்பேன். யார் இன்னும் களைப்படையவில்லையோ, அவரே உண்மையில் இளைஞர். வயது முதிர்ந்தவர்கள் கூட ஆசிரமத்துக்கு வந்தால், வயது குறைந்தது  போல் உணர்கிறார்கள். களைப்பு நீங்குவதை, கவலைகள் மறைவதை உணர்ந்த நேரத்திலேயே உற்சாகம் பெருகி, அவர்கள் புதிய சவால்களை ஏற்கத் தயாராகிறார்கள்.

ஆசிரமத்தில், இளைஞர்களை சமூக சேவை செய்ய ஊக்குவிக்கிறோம். ஏதாவது ஒன்றைப் பெற்று, அல்லது லாபமடைந்தால் கிடைக்கும் ஆனந்தம் ஒரு வகையானது. ஆனால் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் கிடைக்கும் ஆனந்தம் மற்றோரு வகையாகும். இரண்டாவது வகையில் உங்களுக்கு அதிக மகிழ்ச்சி கிடைக்கும்.

வாழ்க்கை என்பது பெறுவதில் கிடைக்கும் ஆனந்தத்திலிருந்து, கிடைத்ததை மேலும் மற்றவர்களோடு பகிர்வதில் கிடைக்கும் ஆனந்தத்தை நோக்கிச் செல்லும் பயணமாகும்.  இளைஞர்களிடம் நிறைய சக்தியுள்ளது. அவர்களால் சமுதாயத்துக்கு பல நன்மைகள் செய்ய முடியும். உண்மையில் அவர்களும் அப்படிச் செய்ய விரும்புகிறார்கள்.

“வாழும் கலை” துவங்கி 35 ஆண்டுகள் கழிந்து விட்டன. இதைக் கொண்டாட 2016 ல் உலக கலாசார திருவிழா பெரிய அளவில் புதுடில்லியில் நடக்க இருக்கிறது. பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக திட்டமிடப்பட்டிருக்கிறது. உலக நாடுகளின் பல பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகிறார்கள். இப்படிப் பட்ட திருவிழாவுக்கு என்ன அவசியம்? மக்களிடையே இந்த திருவிழா எப்படிப் பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும்?

10 ஆண்டுகளுக்கு முன், பெங்களூரில் வாழும் கலை துவங்கி 25 ஆண்டுகள் நிறைவானதை வெள்ளி விழாவாகக் கொண்டாடினோம். அதற்கு 5 ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு, ஜெர்மனியில் பெர்லின் நகரில் ஒரு உலக கலாசாரத் திருவிழாவை நடத்தினோம். இந்த முறை, திருவிழாவை நட த்தித்தர டில்லி நகரத்துக்கு வாய்ப்பு வந்திருக்கிறது. 154 நாடுகளைச் சேர்ந்த மக்கள் உலகம் ஒரு குடும்பம் என்பதை உறுதி செய்வது போல இந்தத் திருவிழாவில் கலந்து கொள்ள வருகிறார்கள். மக்கள் தங்கள் நாட்டின் வளமையான கலாசாரத்தை உலக மக்களுக்கு எடுத்துக் காட்டுவார்கள். வாழும் கலையைச் சேர்ந்த குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து தியானம் மற்றும் யோக சாதனைகள் செய்து கொண்டாடுவதற்காகக் கூடுகிறார்கள்.

இந்நிகழ்ச்சி, உலகமனைத்துக்கும் பொதுவான தனிப்பட்ட சிறந்த உதாரணமாகத் திகழும்.
அன்பையும், அமைதியையும் உலக மக்களுக்கு எடுத்துச் சொல்ல, நமக்கு ஒரு வழியாகும். எதிர்மறை எண்ணங்கள் மற்றும் வன்முறையில் சிக்காமல், அவை பற்றிக் கேட்காமல், அமைதியை பரப்ப இது ஒரு நல்ல வழி. உலக கலாசாரத் திருவிழா, அமைதி, அன்பு மற்றும் பிரபஞ்சத்தின் நல்லிணக்கம் பற்றிய செய்தியை உலக மக்களுக்குத் தெரிவிக்கும். மனித நேயப் பண்புகள் இன்றும் உலகில் சிறந்து விளங்குகின்றன. இன்று இந்தச் செய்தி எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும்.

தற்சமயம், மன உளைச்சல் பரவலாகக் காணப்படுகிறது.மக்கள் குறுகிய மனத்தோடு, தங்களுக்கு என்ன ஆகி விடும், தங்கள் வருங்காலம் என்னவாகும் என்பதை நினைத்து அஞ்சுகிறார்கள். இந்த மன நிலையிலிருந்து அவர்களை வெளியே கொண்டு வருவதற்காக, நம் எதிர் மறை எண்ணங்களிலிருந்து விடுபட்டு, எல்லோரும் ஒன்று சேர்ந்து அமைதியையும் ஆனந்தத்தையும் கொண்டாடுவது அவசியம்.

குருதேவா ! நீங்கள் ஒரு நிகழ்ச்சியை நடத்தும் போது, ஊடகங்களுக்கு அதை முற்றிலும் கவனித்து செய்தியை மக்களுக்குச் சொல்வது ஒரு பெரிய சவாலாக இருக்கிறது. மாபெரும் நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்துவதின் பின்னால் உங்களிடம் என்ன இரகசியம் உள்ளது ?

சமஸ்கிருதத்தில் ஒரு பழமொழி உள்ளது. “சிறிய அளவானவைகளில் ஆனந்தம் கிடையாது. ஆனந்தம் எப்போதும் மகத்தான காரியங்களில் உள்ளது. “ எனவே உங்கள் பார்வை விரிந்திருக்கும் போது, நீங்கள் பெரிதாக சிந்தித்து செயல்படும் போது, நீங்களும் மகத்தான காரியங்களைச் செய்ய முடியும்.

உன் இதயம் பெரியதாக, தாராளமாக இருக்கும் போது, உன்னால் எப்படி சிறிய காரியம் செய்ய முடியும் ? எல்லாமே தானாகவே ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு, மகத்தான நிகழ்வுகள் நடக்கத் துவங்கும். இது ஒரு மனிதனின் விருப்பத்தால் மட்டும் நடப்பதில்லை. எல்லோருக்கும் விரிந்த பார்வையும், மகத்தான மன உறுதியும் வேண்டும். இப்படி பெரிய நிகழ்வுகள் எப்படி நடக்கிறது என்று பார்ப்பது மிகவும் சுவராஸ்யமானது. நிறுவனத்திலுள்ள அனைவரும் ஒரு லட்சியத்தை நோக்கிச் செல்கிறார்கள். பல குழப்பங்கள் வரும். பல காரியங்கள் செய்ய வேண்டியிருக்கும். எல்லாமே அதனதன் இடத்தில் வந்து ஒன்று சேர்வதைக் காணலாம். இந்த வழியே ஒரு தனிப்பட்ட சிறந்த வழி.

குருதேவா ! நாங்கள் நாலைந்து மணி நேரம் வேலை செய்து, ஒரு நாளில் 10 பேரைச் சந்தித்தாலே மிகவும் களைப்படைகிறோம். நாள் முடிந்ததும் ஒன்றும் செய்யாமல் ஓய்வெடுக்க விரும்புகிறோம். நீங்கள் எப்போதாவது விடுமுறை எடுத்ததுண்டா ?

நிச்சயமாக ! வாழ்க்கைகளின் இடைவெளியில். (சிரிப்பு) பார் ! நமக்கு இயல்பான ஒன்றைச் செய்யும் போது நாம் களைப்படைவதில்லை. ஒரு நதி ஓடுவதால் களைப்படைவதில்லை. சூரியன் பிரகாசிப்பதால் களைப்படைவதில்லை. எனவே நாம் நம்மியல்பில் இருக்கும் போது, நம் உண்மையான, இயற்கையான நிலையில் நிலைத்திருக்கும் போது, எல்லாமே தானாகவே நிகழும். நம்மைக் களைப்படையச் செய்யாது.

குருதேவா ! நீங்கள் இன்று ஆன்மீகத்தின் உச்சத்தில் இருக்கிறீர்கள். இன்று இங்கு உங்களுடன் இல்லாத ஞானம் தேடுபவர்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள் ?

எதைப் பற்றியும் முயற்சி செய்து ஞானத்தை அடை. அதே சமயம் நம்பிக்கை அவசியம். பார் ! உனக்கு எல்லாவற்றையும் பற்றி தெரிந்திருப்பது சாத்தியமில்லை. சிலவற்றில் ஆழ்ந்த நம்பிக்கை தேவை. சந்திப்பவர் எல்லோரையும் அன்போடு அரவணைத்துச் செல். இது தான் என்னுடைய செய்தி. பார் ! யாராவது  ஒரு பண்டத்தைக் கொடுத்து, இது மிகவும் இனிப்பாக உள்ளது என்று சொன்னால், நீ முதலில் அதை ருசித்து அது இனிப்பு என்பதை உறுதியாகத் தெரிந்து கொள்ள வேண்டும். யாராவது உன்னிடம் “ இது விஷம். இதைத் தொடாதே ” என்று சொன்னால் அவரை நம்ப வேண்டும். அப்போது  “ இல்லை. நான் இதை  ருசி பார்த்து  விட்டு உன்னை நம்புவேன் “ என்று சொல்லக் கூடாது. (சிரிப்பு)

வாழ்க்கைக்கு மூன்று விஷயங்கள் தேவை.  இதயத் தூய்மை 2. தெளிவான சிந்தனை 3.  நேர்மையான செயல். எனக்கு என்ன ஆகும் என்ற சிந்தனையில் சிக்கி விடாதே. பார் ! எல்லோருக்கும் வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். ஆனால் அவை எப்போதும் அப்படியே பிரச்சினையாக  இருக்காது என்பதை நினைவு கொள். பிரச்சினைகள் வரும். போகும். பிரச்சினைகள் உன்னை மூழ்கடிக்க விடாதே. அதற்குத் தேவையான வலிமையை, ஸ்திரத் தன்மையை ஆன்மீகம் உனக்குக் கொடுக்கும். உன்னால் பிரச்சினைகளை புன்முறுவலோடு சமாளித்து அதற்குத் தீர்வு காண முடியும். ஆன்மீகம் உன் சிந்தனையின் போக்கை, புதிய திசையில் திருப்பி வாழ்க்கையை சிறப்பிக்கும்.

குருதேவா ! கடைசியாக ஒரு கேள்வி. உங்களை சந்திக்கும் போது, மிகவும் ஆனந்தமடைகிறோம். நீங்கள் சொல்லும் ஞானத்தைக் கேட்டு வாழ்க்கைக்கு நல்ல வழி கிடைக்கிறது. உங்கள் பக்தர்களைப் பார்க்கும் போது, உங்களுடைய உணர்வுகள் எப்படி இருக்கின்றன ?

அவர்கள் அனைவரும் என்னைச் சேர்ந்தவர்கள். முற்றிலும் எனக்குரியவர்கள். இது வரை நான் சந்தித்த அனைவருமே என்னைச் சேர்ந்தவர்கள். எனக்குரியவர்கள். என் வாழ்வில் நான் ஒரு புதிய நபரை என்றுமே சந்தித்ததில்லை.