பக்தன் தோல்வி அடைய முடியாது

சனிக்கிழமை, 31 அக்டோபர், 2015,

பெங்களூரு இந்தியா


 நாம் தோல்வி அடையும் போது செயல்படுபவர் யார்? நான் வெற்றியடையும் போது, அது கடவுள் அருள், குருதேவ் அதை நிறைவேற்றினார் என்றெல்லாம் கூறுகிறேன். ஆனால் நான் தோல்வியுறும் போது, பொறுப்பேற்று கொள்ள கடவுள் என்னைச் சுற்றி எங்குமில்லையே?

தோல்வியுற்ற நேரங்களை பின்னோக்கிப் பாருங்கள். அந்த தோல்விகள் அனைத்தும் உங்களுக்கு நன்மையாகியிருப்பதை எத்தனை பேர் உணருகின்றீர்கள்? (பலர் கையுயர்த்துகின்றனர்) உங்கள் தோல்விகளை பின்னோக்கி பார்க்கும் போது, அவற்றிலிருந்து கற்றுக் கொண்டிருந்திருப்பீர்கள், முன்னோக்கிச் செல்ல உங்களுக்குப் படிக்கற்களாக அமைந்திருக்கும். நீங்கள் இந்தப் பாதையில் இருக்கும் போது,மனத் தூய்மையுடன் தியானம் செய்து கொண்டு இருக்கும் போது ஒரு போதும் தோல்வி அடையவோ,கீழே இறங்கவோ மாட்டீர்கள். தோல்வி அடைவது போன்று தோன்றினாலும், அந்த சிறு தோல்வியும் உங்களுக்கு பெரிய வெற்றியினை ஈட்டித் தருவதற்காகவே ஆகும். இது நிச்சயம். பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் "என் பக்தர் ஓர்நாளும் அழியமாட்டார்" என்று உலகிற்கு உறுதியளித்திருக்கின்றார். பக்தன் அழியும் வாய்ப்பே இல்லை. தூய்மையான மனம் கொண்டவனே பக்தன். நீங்கள் கபடமானவராக இருந்தால் அதனால் தான் தோல்வி ஏற்படும். கபடத்தின் பலனை நீங்கள் அனுபவித்தேயாக வேண்டும். நல்லனவற்றையே செய்து தோல்வி அடைந்தால் கவலைப் படாதீர்கள். நீங்கள் முன்னேறுவது உறுதி.

இயேசு நாதர் சென்னையிலுள்ள மயிலாப்பூரில் வாழ்ந்திருக்கின்றார் என்று முன்னர் தாங்கள் கூறியிருக்கின்றீர்கள். அதைப் பற்றி மேலும் கூற முடியுமா?

இயேசு மயிலாப்பூரில் வாழ்ந்து அங்கு தான் வேதாந்தத்தினை கற்றார். அவர் திரும்பி சென்றவுடன், புனித தாமஸ் அவரை சந்தேகித்தார். இயேசு அவரை, “என்னை நம்பவில்லையெனில் நீயே சென்று பார்“ என்று கூறினார். அதனால் தான், புனித தாமஸ் இந்தியாவிற்கு வந்தார். அவர் முதலில் கேரளாவில் வந்திறங்கி, பின்னர் மயிலாப்பூருக்கு வந்தார். அவர் தம் வாழ்நாளின் இறுதிப் பகுதியினை இங்கேயே கழித்தார். புனித தாமஸ் குன்று மீது அமர்ந்து தியானம் செய்து வேதாந்தம் முழுவதையும் மற்றும் யோகா தியானம் ஆகியவற்றையும் கற்றார். இன்றும் நீங்கள் செயின்ட் தாமஸ் மவுண்ட் இருப்பதை காணலாம். அவரது சமாதியும் அங்குள்ளது. வாட்டிகன் சர்ச் இதனை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளாது. ஆனால் அவர்கள் செயின்ட் தாமஸ் இங்கு வந்ததை ஒப்பு கொள்கின்றனர். தாமஸின் வழி வந்தவர்கள் இப்போதும் சன்யாசிகளை போன்று சிவப்பு ஆடையும் ருத்ராக்ஷமும் அணிகின்றனர். பல சான்றுகள் உள்ளன. நீங்கள் ஆழ்ந்து தியானம் செய்தால், கடந்த கால பல விஷயங்களை அறிந்து கொள்ளலாம். ஆனால் அதற்கு நீண்ட காலமாக  தியானம் செய்ய வேண்டும்.

புரிந்தவரையில், நான் கற்றுக்கொண்ட வரையில், அனைத்தும் பிரம்மன், பிரம்மனுக்கு வெளியே எதுவுமேயில்லை. எங்கும் நிறைந்த அதிவிவேக பிரம்மனில் ஓர் பகுதியாக இருக்கும் போது எவ்வாறு நாம் அறியாமையுடன் இருப்பது நிகழ்கின்றது? இந்த அறியாமை எவ்வாறு எழுகின்றது?

அறியாமையும் பிரம்மனில் ஓர் பகுதியே. பிரம்மன் முழுமையானது அனைத்தின் கூடுதலானது..

சில சமயங்களில் மாயையின்றி ஏதேனும் இருக்கிறதா என்று அதிசயிக்கின்றேன். நான் பார்க்கும், உணரும் அல்லது அனுபவிக்கும் அனைத்தும் ஏதோ ஓர் விதத்தில் மாயை என்றே தோன்றுகிறது. உலகத்தில் எதன் பின்னாலும் ஓடுவதில் பயனில்லை என்று தோன்றுகிறது, ஆயினும் உங்கள் பின்னால் ஓடிகொண்டிருக்கின்றேன்! மாயை மற்றும் மாயையற்றது இவற்றினை வேறுபடுத்திக் காண உதவுங்கள்.

உங்கள் இதயம் கூறுவதைக் கேளுங்கள். எதை அளவிட முடியுமோ அது மாயை. மாயை என்னும் சொல்லிலிருந்து அளவிடுதல் எனும் சொல் ஏற்பட்டது.இந்தப் பூமியில் அளவிடக் கூடியதனைத்தும் மாயை தான். காண்பதையெல்லாம் அளவிட முடியும். கண் பரிசோதனைக்கு மருத்துவரிடம் சென்றால்,அவர் உங்கள் பார்வை 0.5 அல்லது அது போன்ற ஓர் அளவினை குறிப்பிடுவார். ஆகவே பார்வை அளவிடக் கூடியது. அது போன்று ஓசை, சுவை, தொடுதல் அளவிடக் கூடியவை.. பஞ்ச பூதங்களால் ஆன இவ்வுலகில் உள்ளவை அனைத்தும் அளவிடக் கூடியவை.

அளவிட முடியாதது கருணை என்னிடம் 10 லிட்டர் அல்லது 2 டிகிரி கருணை உள்ளது அல்லது 5 டிகிரி அன்பு உள்ளது என்று கூறமுடியாது. அன்பினை அளக்க முடியாது. உண்மையை அளவிட முடியாது. பேரின்பத்தினை அளவிட முடியாது. இவையெல்லாம் பிரம்மனின் ஓர் பகுதியாகும். மெய்யுணர்வின் பகுதி , மெய்யுணர்வு என்பது அளவிற்கு அப்பாற்பட்டது, எனவே மாயைக்கு அப்பாற்பட்டது. விழிப்புணர்வின் இயல்பு, உயர்ந்த மெய்யுணர்வினை நோக்கி நகர்வதேயாகும். சிறு மனம் பெரிய மனதினை நோக்கி நகருதல் போன்றது. ஓர் சிறு குழந்தை தன் தாயை நோக்கி ஓடுவதை போன்று சிறு விழிப்புணர்வு அல்லது சிறு மனம் பெரிய மெய்யுணர்வை அல்லது பெரிய மனதினை நோக்கி ஓடுகின்றது.

தோல்வியைப் பற்றிய பயம் சில சமயங்களில் முயற்சி எடுப்பதைத் தடை செய்கின்றது. இதை நான் எவ்வாறு தடுப்பது?

குழந்தைகளுடன் விளையாடுங்கள். அவர்களிடம் தோற்பதற்குத் தயாராகுங்கள். அது நல்ல பயிற்சி. குழந்தைகளுடன் விளையாடும் போது எப்போதும் வெற்றியடைய விரும்புவீர்களா என்ன? நீங்கள் பெரியவர், குழந்தைகளுடன் விளையாடுகிறீர்கள். வெற்றியையா விரும்புவீர்கள்? அவர்களை வெற்றியடைய செய்வதிலேயே உங்கள் சந்தோஷம் அடங்கியுள்ளது. எனவே நீங்கள் தோல்வி அடைகின்றீர்கள். ஆயினும் விளையாட்டினை மிகவும் விரும்புகிறீர்கள். அதே போன்று, சில தோல்விகள் வாழ்வில் வரும்.அதனால் என்ன? பரவாயில்லை. உங்கள் ஆழத்திலிருக்கும் ஒன்று எப்போதுமே தோல்வி அடையாது.

கலை மற்றும் கலைஞனின் நோக்கம் மற்றும் பங்கு யாவை? ஆன்மீகத்திற்கும் கலை வெளிப்பாட்டிற்கும் இடையே உள்ள உறவு என்ன?


வாழ்க்கையே ஓர் கலை.எது இருக்கிறதோ அதைப் பாராட்டுவது கலை. மலர்க் குவியல் இருந்தால் அதை நீங்கள் மலர்குவியலாகவே காண்பீர்கள். அதையே பகுதிகளாகப் பிரித்து அலங்கரித்தால் அதைக் கலை என்று கூறுகின்றீர்கள். கலை என்பது உங்களுக்கு எதையோ தெரிவிக்கும் ஒன்று. அது உங்கள் இதயத்தை, உணர்வுகளைத் எழுப்பி, உங்கள் மனதை வசீகரிக்கின்றது.