வியாழக்கிழமை - 05 மார்ச் – 2015
பெங்களூர், இந்தியா
நாளை ஹோலி பண்டிகை கொண்டாடுவோம். இது தான் இந்த ஆண்டின் கடைசி பௌர்ணமி. அடுத்த
பௌர்ணமி, சந்திர காலண்டரின் படி அடுத்த ஆண்டின் முதல் பௌர்ணமியாகும். ஆண்டின் கடைசி
பௌர்ணமியை நிறங்களுடன் கொண்டாடுகிறோம். இன்றைய தினத்தில் பொதுவாக மக்கள் வீட்டில் இருக்கும்
பழைய பொருட்களை எரிக்கிறார்கள். கடந்த கால நிகழ்வுகளை ஏற்கனவே எரித்து, நாம் தூய்மையாக
இருக்கிறோம். மேலும் புகையை கிளப்பி, சுற்றுச் சூழலை மாசு படுத்தவேண்டாம். எனவே பொது
இடங்களில் எரிப்பதை நிறுத்துவோம்.அதே போல் சந்தனப் பசையை உபயோகித்து ஹோலி விளையாடுவோம்.
உடலுக்கு ஊறு விளைவிக்கும் இரசாயன நிறங்களை உபயோகப்படுத்த வேண்டாம். ஹோலி பண்டிகையை
பண்போடு கொண்டாடுவோம்.
நம் உணர்ச்சிகளும், மன எழுச்சிகளும் பல்வேறு நிறங்களுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது.
கோபம் – சிவப்பு; பொறாமை – பச்சை; மகிழ்ச்சி – மஞ்சள்; அன்பு – இளஞ் சிவப்பு; பரந்த
மனப்பான்மை – நீலம்; அமைதி – வெள்ளை; தியாகம் – காவி; அறிவு – ஊதா. ஒவ்வொரு மனிதனும்
பல்வேறு நிறங்களின் நீரூற்று போன்றவன். அதில் வரும் நிறங்கள் மாறிக் கொண்டேயிருக்கும். உன் வாழ்க்கை ஹோலிப் பண்டிகையின் நிறங்கள் போலிருந்தால், ஒவ்வொரு நிறத்தையும்
தெளிவாகப் பார்க்க முடிந்தால், அது உன் வாழ்க்கைக்கு அழகூட்டும்.
வேற்றுமையில் ஒற்றுமையை காண்பது, வாழ்க்கையை துடிப்பானதாக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி நிரம்பும். வாழ்க்கை
வண்ணமயமாகும். வாழ்க்கை ஹோலிப்பண்டிகை போல் வண்ணமயமாக இருக்க வேண்டும்,சலிப்பாக இருக்கக்கூடாது.
ஒவ்வொரு நிறத்தை காணும் போது வாழ்க்கை துடிப்பாக இருக்கும். எல்லா நிறங்களும் கலந்த
கலவையாகி விட்டால் கறுப்பு நிறம் மட்டும் தெரியும். வாழ்க்கையில் நாம் பல்வேறு பாத்திரங்களாக
செயல்பட வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு பாத்திரமும், அதற்கான
மன உணர்ச்சியுடன் செயல்பட வேண்டும். மன உணர்ச்சியில் குழப்பம் ஏற்பட்டால் வாழ்க்கையில்
பிரச்சினைகள் ஏற்படும்.
நீ தகப்பனாக நடக்கும் போது, அந்த பாத்திரத்தின் மனநிலையில் இருக்க வேண்டும். உன் அலுவலகத்தில் ஒரு தகப்பன் நடப்பது போல் நடக்க முடியாது. வாழ்க்கையில் பல பாத்திரங்களை
சரிவர புரிந்து கொள்ளாமல் கலக்கும் போது நீ தவறு செய்யத் துவங்குகிறாய். எந்தப் பாத்திரமாக
இருந்தாலும், அதன்படி 100% நடந்துகொள். அஞ்ஞானிக்கு மன உணர்ச்சிகள் பிரச்சினையாகிறது.
ஞானிக்கு மன உணர்ச்சிகள் பல்வேறு வண்ணங்களாகத் தென்படும். நான் எல்லாவிதமான பாத்திரங்களிலும்,
சிறப்பாக அதற்குரிய கௌரவத்துடன் நடந்து கொள்வேன் என்று உனக்கு நீயே சொல்லிக் கொள்.
ஒரு நல்ல கணவன் / மனைவி , நல்ல மகன் / மகள் , நல்ல தகப்பன் / தாய் , ஒரு நல்ல குடிமகன் முதலிய எல்லா பாத்திரங்களிலும் உன் பங்கை நிறைவேற்ற
முடியும். எல்லா வகையான பாத்திரங்களுக்கும் இருக்க வேண்டிய நற்பண்புகள் உன்னிடம் இருப்பதாகக்
கருதலாம். அப்பண்புகளை மேலும் மலர விடு.
கேள்வி பதில்கள்
குரு மண்டலம் என்று ஒன்று இருப்பதாக கேள்விப்பட்டேன். குருமண்டலம் என்றால் என்ன?
அது எங்களுக்கு (சாதகர்களுக்கு) நல்லதா?
உன் இலட்சியமான ஆத்மாவை (நடுப்பகுதியை) அடைய நீ தாண்ட வேண்டிய பல வட்டங்களைக்
குறிப்பது குருமண்டலம். குருமண்டலம் பல்வேறு ஈர்ப்புகள், சபலங்கள், விலக்கங்களைக் குறிக்கிறது.
இவ்வட்டங்கள் உன்னை வலுவானவனாக்குகிறது. கடந்து விட்டால், நீ உன் ஆன்மாவை அடைய முடியும். நீ மிகவும் வலுவானவனாகலாம். நீ ஞானப்பாதையில் செல்லும் போது, பல விஷயங்கள் குறுக்கிட்டு உன்னைப் பல்வேறு
திசைகளில் திருப்பி விடும். அதைத் தான் குருமண்டலம் என்று அழைக்கிறோம். உனக்கு ஒன்று
தெரியுமா? சின்னச் சின்ன விஷயங்கள் கூட உன்னை சோர்வடையச் செய்கிறது. ஒருவர் தியானப்
பயிற்சி செய்வதற்காக வருகிறார். அவருக்கு ஒதுக்கிய அறை அவருக்குப் பிடிக்கவில்லை. அளிக்கப்பட்ட உணவு திருப்தியளிக்கவில்லை. “எனக்குக் கிடைத்த உணவு சரியில்லை, அதனால்
நான் தியானம் செய்யப் போவதில்லை“ என்று சொன்னால், அவர் வந்த நோக்கத்தை தவற விடுகிறார்.
ஒவ்வொரு நாளும் எதுவானாலும் நீ சாப்பிடுகிறாய். வீட்டில் நீ பான்கேக் சாப்பிடுவாய்.
இங்கு பான்கேக் கிடைக்காததால், தியானம் செய்யமாட்டேன் என்று சொன்னால்,தியானம் செய்யும்
வாய்ப்பைக் கை விடுகிறாய். நீ அப்போது குருமண்டலத்தில் சிக்கியிருக்கிறாய். அதே போல்
தியானம் செய்ய வந்த இடத்தில் யாருடனோ சச்சரவு ஏற்பட்டு நீ மன வருத்தம் அடைகிறாய். அப்போது
நீ உன் பாதையிலிருந்து விலகி உன் இலக்கை விட்டு தூரமாகப் போய்விடுவாய். வட்டத்தின்
பரிதியிலேயே சுற்றுவாய். இதுதான் குருமண்டலம். வாழ்க்கையில் உயர்ந்த ஞானத்தை பெறுவது தான் உன் இலட்சியம். பாதையில்
சிறுசிறு விஷயங்களில் சிக்கி, முக்கியத்துவமற்ற விஷயங்கள் உன்னை உன் பாதையிலிருந்து
திசை திருப்பி இலட்சியத்தை அடையவிடாமல் செய்யும். இவை தான் குருமண்டலத்தின் அம்சங்களாகும்.
குருதேவா ! பிரமசாரிகளுக்கு (திருமணமாகாத ஆண் / பெண்) ஞானப் பாதையில் தனி இட
ஒதுக்கீடு உள்ளதா? குடும்ப வாழ்க்கை நடத்துபவர்கள் ஞானம் பெறுவது கடினமா ?
இல்லை. ஆத்மாவின் மிக எளிமையான நிலை தான் ஞானம். குழப்பமில்லாத, எளிமையான சிந்தனையே
ஞானியின் அடையாளமாகும். ஞானம் என்றால் திரும்பவும் கள்ளமில்லாத குழந்தையாவது தான்.
எனவே எல்லோரும் ஞானமடைய முடியும். நம் மனம் பலவிதமான பதிவுகளால் நிரம்பிய நிலையில்
இருக்கிறது. நம் வாழ்க்கையை மிகவும் சிக்கலாக்கி விட்டோம். இந்த பதிவுகளை மனதிலிருந்து
அழிக்க வேண்டும். ஞானமடைவது என்றால், இயல்பான, நேர்மையான, அன்பான நிலைக்குத் திரும்புவது.
உண்மை வெல்லும் என்ற நம்பிக்கையோடு வாழ்வது.
குருதேவா! நேரம் நன்றாக இருக்கும் போது எல்லோரும் நன்றாகப் பழகுகிறார்கள். எனவே மக்கள் நல்லவர்களா? அல்லது என் நல்ல நேரம்
என்னைச் சுற்றியிருப்பவர்களை நல்லவர்கள் ஆக்குகிறதா? எனக்குக் குழப்பமாக இருக்கிறது.
இந்தக் கேள்விக்கு விடை ஏற்கனவே உனக்குத் தெரியும் என்று நான் நினைக்கிறேன்.
பகலிரவாக உன் உதவியைப் பெற்றவர்கள் உனக்கு எதிரியாகியிருக்கிறார்கள். இல்லையா ? உங்களில்
எவ்வளவு பேருக்கு இப்படிப்பட்ட அனுபவம் இருக்கிறது? நீ அவருக்கு எந்தக் கெடுதலும் செய்யவில்லை.
இருந்தாலும் அவர் உன்னுடைய விரோதியாகி விட்டார். அதே போல் நீ எந்த உதவியும் செய்யாத
போதும், சிலர் உனக்கு பல உதவிகள் செய்து உன்னுடைய நண்பர்களாக இருக்கிறார்கள். இப்படி
நடக்கவில்லையா? ஒரு நண்பரோ, விரோதியோ கிடைப்பது நம் கர்ம வினைப்படி நடக்கிறது. உன் நேரம் நன்றாக
இருக்கும் போது உன் விரோதியும் உன் நண்பராக மாறுகிறார். நன்றாக இல்லாவிட்டால், நண்பரும்
விரோதியாக நடந்து கொள்கிறார்.
என் சிந்தனைகளைத் தடையின்றி எப்படி செயலாக மாற்றலாம் ?
நீ அதிகமாகச் சிந்திக்கிறாய். ஒரு நீரோட்டம் போல் தன்னிச்சையாக செயல்கள் நிகழும்.
நீ அந்தச் செயலில் ஈடுபடுவாய். எப்போதும் அப்படித் தான் நடக்கிறது. நீ ஒரு திரைப்படக்
காட்சியைக் காண விரும்பும் போது, அந்த எண்ணத்தை நிறைவேற்ற திரை அரங்கத்துக்குச் செல்வாய்.
ஏதாவது சிற்றுண்டி உண்ண விரும்பினால், காரில் அமர்ந்து வெளியே சென்று உனக்கு வேண்டியவைகளை
உண்பாய். நீ எந்தச் செயல் செய்தாலும், அதன் பின்னால் ஒரு எண்ணம் உள்ளது. நீ எண்ணிப்
பார்க்காமல் ஒரு செயலைச் செய்யும் போது, அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும். சமயங்களில்
சிந்தனையின்றி செய்யும் செயல், நீ அதிஷ்டக்காரனாக இருந்தால் நல்ல முடிவுகளைக் கொடுக்கக்
கூடும். இல்லாவிட்டால் அதன் விளைவுகளை நீ சந்திக்க வேண்டியிருக்கும்.
குருதேவா ! எது மாறுகிறதோ அது உண்மையல்ல. காலமும் மாறிக் கொண்டிருக்கிறது. காலம்
உண்மையா?
காலத்துக்கு பல பரிமாணங்களும், பல அடுக்குகளும் உள்ளன. காலம் என்பது இரண்டு
நிகழ்வுகளுக்கிடையே உள்ள தூரம். இடைவெளி என்பது இரண்டு பொருள்களுக்கிடையே உள்ள தூரம்.
இது காலத்துக்கு ஒரு விளக்கம். இதைத் தவிர ஒரு மகா காலம் என்று இருக்கிறது. இது என்றும்
மாறாத முழுமையான இறை சக்தி. நீ இந்த பூமியை விட்டு அண்ட வெளியில் சென்றால், அங்கு என்ன
அனுபவம் இருக்கும்? அங்கு சூரியன் உதயமாகாது. சூரியன் அஸ்தமனமாகாது. ஏனென்றால் சூரிய
உதயம், அஸ்தமனம், நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் எல்லாமே பூமியைச் சேர்ந்தவை. நீ மில்கிவே
நட்சத்திரக் கூட்டத்துக்கு வெளியே செல்லும் போது காலம் நகராமல் நிற்கும். இருந்தாலும்
அங்கு காலம் இருக்கிறது. அதை மகா காலம் என்று அழைக்கிறோம்.