மார்ச் 18, 2015
பெங்களுரு இந்தியா
(ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் ஜப்பான் டோக்யோ நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் பார்வையாளர்கள் குழுவில் மார்ச் 18, 2015 அன்று
உரையாற்றினர். அந்த உரையின் தமிழாக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது)
சூரியன் உதிக்கும் இந்த மண்ணில்
இருப்பது அருமையாக உள்ளது. உண்மையில் இந்த
உலகம் இங்கே தான் ஆரம்பமாகின்றது. நான் பங்கு கொள்ளும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அனைவரும் அவரவருடைய சொந்த வீட்டில் இருப்பதை போல உணர வேண்டும் என்னும்
கொள்கையை நான் வைத்திருக்கிறேன். நாம் இதயபூர்வமாக பேசுவதால் அங்கே எந்த விதமான சம்பிரதாயங்களும்
தேவை இல்லை. ஆகவே அது தனியாக ஒருவர் பேசுவது
போல் இல்லாமல் உரையாடலாக வைத்து கொள்ளலாம். உங்களிடம் ஏதாவது கேள்விகள் இருந்தால் நீங்கள்
என்னிடம் கேட்கலாம். நான் ஏதாவது கேள்விகள் வைத்திருந்தால் உங்களிடம் கேட்பேன்.
உங்களுக்கு தெரியுமா! சுமுகமான மற்றும் முறைசாராத ஒரு சூழ்நிலையில் தான் உண்மையான
அதிகாரபூர்வமான ஞானத்தை பெறுதல் ஏற்படும். நீங்கள் அனைவரும் சௌகரியமாக உங்கள் வீடுகளில் உள்ளது போல் உணருகிறீர்களா? (அனைத்து பார்வையாளர்களும் கைகளை உயர்த்துகின்றனர்)
இன்றைய தலைப்பு புத்திசாலித்தனம்
அறிவியல் மற்றும் படைப்பாற்றல் ஆகியவை.
புத்திசாலித்தனம்:
புத்திசாலித்தனத்தின் சிறப்பியல்புகளில்
ஒன்று விழிப்பாக இருப்பது. நான் புத்திசாலி
ஆனால் சிறிது மந்தமானவன் என்று நீங்கள் சொல்ல முடியாது. ஆகவே புத்திசாலித்தனம்
என்றால் விழிப்புடன் இருப்பது ஆகும். நீங்கள் அனைவரும் விழிப்புடன் இருக்கிறீர்களா?
நாம் விழிப்புடன் இருக்கும் போது என்ன நடக்கின்றது?
நம்முடைய கருத்தும் கவனிப்பும் அதிகரிக்கின்றது. மற்றும் நம்முடைய வெளிப்பாடு சரியானதாக
இருக்கும். சமயங்களில் மக்கள் " என்னை யாருமே புரிந்து கொள்ளவில்லை" என்று கூறுவார்கள். அதற்கு பதிலாக " என்னால் என்னுடைய எண்ணங்களை சரிவர வெளிப்படுத்த
முடியவில்லை" என்று கூறவேண்டும்.
உங்களிடம் அந்த திறமை இருந்தால், எந்த விதமான மனவேற்றுமையும் இருக்காது. ஆகவே நாம் விழுப்புடன் இருக்கும்போது, கருத்து, கவனிப்பு மற்றும் வெளிப்படுத்துதல் ஆகிய
அனைத்தும் ஏற்படுகின்றன. இப்போது நீங்கள் நீண்ட நேரம் விழித்திருந்தால் என்ன ஏற்படுகின்றது? உங்களுக்கு சோர்வும் சக்தி தீர்ந்துவிட்ட உணர்வும் ஏற்படுகின்றது. ஆகவே எப்போதுமே விழித்திருப்பது நம்முடைய மூளையின்
இயல்பல்ல. நமக்கு சற்று ஓய்வும் தேவை.பெரும்பாலும் நமக்கு தெரிந்த ஒய்வு
என்பது தலையணையை போட்டுகொண்டு உறங்குவது
மட்டுமே. அவ்வளவு தான். தூக்கம் அவசியம். ஆனால் மற்றொரு விதமான ஓய்வும் இருக்கின்றது.
விழிப்புடனும் அதே சமயம் ஒய்வுடனும் இருக்கும் ஒரு நிலை.
அது உணவை (அரிசியை) கடற்பாசியில்
மூடி வைத்திருப்பதை போன்றது. கடற்பாசி குளிர்ச்சியாக இருக்கும் ஆனால் உணவு சூடாக இருக்கும். அதைப்போலவே நீங்கள் விழுப்புடன் இருப்பீர்கள் ஓய்வாகவும் இருப்பீர்கள். அதுவே தியானம். நீங்கள் அனைவரும் இங்கே இருக்கிறீர்களா?
நாம் புத்திசாலித்தனம் பற்றிய மூன்று அம்சங்களை
பார்த்தோம்.
1.விழிப்பு
2.முறையான கருத்து மற்றும் கவனித்தல்.
3.சரியான வெளிப்பாடு
புத்திசாலித்தனத்தின் மற்றொரு அடையாளமும்
உள்ளது. என்ன என்று சொல்லுங்கள் பார்க்கலாம். இது ஒரு உரையாடல் நேரம், எனவே நீங்கள் புத்திசாலித்தனத்தின் மற்றொரு அடையாளம் என்ன என்று சிந்தித்து
கூறவும்.
பார்வையாளர்கள்: நினைவோடு இருப்பது.
ஸ்ரீ ஸ்ரீ: அது விழிப்பு
பார்வையாளர்கள்: மற்றவர்களிடம் கருணையுடன் இருப்பது
ஸ்ரீ ஸ்ரீ: சரி, வேறு ஏதாவது.
பார்வையாளர்கள்: ஆனந்தம், ஒருமுகப்படுத்துதல், பொறுமை, ஞானம்,புன்னகை மற்றும் திறமை.
ஸ்ரீ ஸ்ரீ: ஆமாம், திறமை.மற்றும் வேறு என்ன?
பார்வையாளர்கள்: படைப்பாற்றல்
ஸ்ரீ ஸ்ரீ: படைப்பாற்றல்! ஆமாம். புத்திசாலித்தனத்தின்
மற்றுமொரு அடையாளம் படைப்பாற்றல். சரி. இன்னும் ஒன்று. கண்டு பிடியுங்கள். உங்கள் புத்திசாலித்தனத்தை உபயோகிக்கவும்.
பார்வையாளர்கள்: அதே தவறுகளை மறுபடியும் செய்யாமல்
இருப்பது மற்றும் நிகழ் காலத்தில் இருப்பது.
ஸ்ரீ ஸ்ரீ: புத்திசாலித்தனத்தின் மற்றுமொரு
அடையாளம் மோதல்களை தீர்த்து வைக்கும் திறமை. முட்டாள்கள் ஒருவருக்கும் மற்றவர்களுக்கும்
இடையே மோதல்களை உண்டாக்குவர். புத்திசாலியான ஒருவர் மற்றவர்களிடம் உள்ள
மோதல்களையும் முரண்பாடுகளையும் தீர்த்து வைக்க தெரிந்தவர். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?
இதில் ஏதாவது அர்த்தம் உள்ளதா? படைப்பாற்றல் மிகுந்த ஒருவர் மற்றவர்களிடம் அதிகமாக மோதல்களை உண்டாக்கினால்
நீங்கள் என்ன சொல்லுவீர்கள்? கடவுளே! அது புத்திசாலித்தனம் அல்ல! என்று கூறுவீர்கள் இல்லையா?
நீங்கள் புத்திசாலியான ஒருவரை மோதல்கள்
நடக்கும் இடத்திற்கு அனுப்பினால் அங்கே மோதல்கள் அதிகமாகுமா அல்லது குறையுமா?அவர்
அதை தீர்க்கவோ அல்லது குறைக்கவோ செய்வார் இல்லையா? ஒற்றுமையை கொண்டு வரும் போக்கு புத்திசாலித்தனத்தின் அடையாளம். ஒரு தீர்வை கொண்டு வரும் திறமை புத்திசாலித் தனத்தின் அடையாளம்.
நான் உங்களுக்கு இரண்டு கதைகள் சொல்ல
விரும்புகிறேன்.
பணமா அல்லது மெய்யறிவா?
சுவாமி விவேகானந்தர் இங்கிலாந்து சென்ற காலத்தில் அங்கே இனம் சார்ந்த
தவறான அபிப்பிராயங்கள் இருந்தன. இது இரண்டாம்
உலகப்போருக்கு முன்பு.
விவேகானந்தர் படித்துக் கொண்டிருந்த
கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் அவரை தூண்டிவிடும் எண்ணத்தில் ஒரு கேள்வியை கேட்டார். "நீ தெருவில் நடந்து சென்று
கொண்டிருக்கும் ஒரு பக்கத்தில் கொஞ்சம் பணத்தையும் மறுபக்கத்தில் ஒரு ஞானப்
புத்தகத்தையும் கண்டால் எதை எடுத்துக் கொள்ளுவாய்?" என்று கேட்டார். சுவாமி விவேகானந்தர்
"நான் பணத்தை எடுத்துக் கொள்ளுவேன்" என்று கூறினார். பேராசிரியர் விவேகானந்தரை கேலி செய்யும் விதமாக "இங்கே பாருங்கள்! இந்த மனிதருக்கு ஞானத்தின்
மதிப்பு தெரியாததால் பணத்தை எடுத்துக் கொள்ளுவதாக கூறுகின்றார். நான் புத்தகத்தை தான்
எடுப்பேன். பணத்தை எடுக்கமாட்டேன்" என்று சொன்னார். அதற்கு விவேகானந்தர் என்ன பதில் கூறினார் என்று
தெரியுமா? அவர் மிகவும் அமைதியாக " ஒருவர் அவரிடம் இல்லாத ஒன்றை தான் எடுத்துக்கொள்ள விரும்புவார்" என்று கூறினார். இது புத்திசாலித்தனம்.
பன்றியும், பறவையும்
சுவாமி விவேகானந்தர் ஒரு உணவகத்திற்கு
சென்றபோது அவருடைய பேராசிரியர் அமர்ந்திருந்த மேஜைக்கு அருகிலேயே அமர்ந்தார். பேராசிரியர்
விவேகானந்தரை பார்த்து "ஒரு பன்றியும் ஒரு பறவையும் ஒரே மேஜையில் அமர்ந்து உன்ன
முடியாது" என்று கூறினார். அதற்கு விவேகானந்தர் என்ன பதில் கூறினார் தெரியுமா?
அவர் "ஐயா! நீங்கள் எப்போது கூறினாலும் நான் இங்கிருந்து பறந்து சென்று விடுகிறேன்" என்று கூறினார்.
புத்திசாலித்தனம் ஒவ்வொரு மோதலையும் நகைச்சுவையாக மாற்றி விடக்கூடியது. நகைச்சுவை உணர்வும் புத்திசாலித்தனத்தின் மற்றுமொரு அடையாளம். உங்களிடம் நகைச்சுவை உணர்வு இருந்தால் எந்த ஒரு மோதல் உருவாகக்கூடிய சூழ்நிலையையும்
உங்களால் சமாளித்து விட முடியும். புத்திசாலித்தனத்தின் மற்றொரு அடையாளம்
மன அழுத்தத்திற்கு உட்படாமல் இருப்பது. அப்படியே மன அழுத்தம் ஏற்பட்டாலும் அதில் இருந்து
எப்படி வெளியே வருவது என்பதை அறிந்திருப்பது. இதுவே புத்திசாலித்தனம்.
புத்திசாலித்தனத்தை பற்றி அதிகம் உரையாடி விட்டோம் என்று நினைக்கிறேன்.
மற்றும் இங்கே புத்திசாலிகள் உள்ளனர். நம்முடைய மனதையும் உடலையும் எவ்வளவு உபயோகப்படுத்த வேண்டும் என்று அறிந்து கொள்வது
புத்திசாலித்தனம்.அதிகமாக பயன்படுத்தக் கூடாது.நம்முடைய மனதையும் உடலையும் அதிக உபயோகத்திற்கு உள்ளாக்கினோம் என்றால் அவற்றின் சக்தி தீர்ந்து விடும், சோர்வடைந்துவிடும்.
அழகான நடுப்பாதையில் நடந்து செல்லுவதே புத்திசாலித்தனம். இதைத்தான் புத்தர் கூறியுள்ளார்.
அறிவியல்
உங்களுக்கு தெரியுமா! புத்தர் என்றால்
முதிர்ச்சி அடைந்தவர் அல்லது ஞானம் பெற்றவர் என்பர். ஒரு புத்திசாலி. சமஸ்கிருதத்தில்
புத்தி என்றால் அறிவு என்று பொருள். முதிர்ச்சியடைந்த அறிவை பெற்றவர்களில் புத்தரும்
ஒருவர். அறிவியல் என்பதும் முழுவதும் புத்தியை பற்றியதே. என்ன என்பதை படிப்படியாக
தர்க்கரீதியாக புரிந்து கொள்ளுவதே அறிவியல்.
கிழக்கிலும் தூர கிழக்கிலும் எப்போதுமே
நாம் அறிவியலை ஊக்குவித்துள்ளோம்.நூற்றாண்டுகளாக இங்கே ஒரு விஞ்ஞானி கூட துன்புறுத்தப்பட்டதில்லை.ஆகவே தர்க்கரீதியாக புரிந்துகொள்ளுதலை ஊக்குவிப்பதும் பரிசோதனை செய்து பார்ப்பதுமே
அறிவியல் ஆகும். அறிவியலும் ஆன்மீகமும் எப்போதுமே ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டது இல்லை,
மாறாக எப்போதுமே அவை ஒன்றை ஒன்று நிறைவு செய்பவை. இது என்ன என்று கேட்பது அறிவியல்.
நான் யார் என்று கேட்பது ஆன்மிகம். பொருளை ஆய்வு செய்வது அறிவியல். தலைப்பை ஆய்வு செய்வது
ஆன்மிகம். பொருளையும் தலைப்பையும் பற்றி படிப்பது எப்போதுமே முரண்பாடாக இருந்ததில்லை.குறைந்தது கிழக்கு நாடுகளில்.
படைப்பாற்றல்:
அறிவியல் கலை இரண்டிலும் பொதுவாக
இருப்பது படைப்பாற்றலே. நமது மூளையின் இடது பகுதி தர்க்கத்தில் ஈடுபடும். வலது பகுதி
இசையை ரசிக்கும். இரண்டுக்கும் பொதுவானது எது,. படைப்பாற்றல். படைப்பாற்றல் நீங்கள்
மன அழுத்தத்துடன் இருக்கும்போது ஏற்படுவதில்லை. ஆனால் அது நடுநிலையுடன் இருக்கும் போது வெளிப்படும். நாம் அதிக அளவில் நடுநிலையுடன் இருக்கும்போது நமக்குள் இருந்து அதிக படைப்பாற்றல் தன்னிச்சையாக வெளிப்படும்.
ஆகவே நீங்கள் ஒரு ஓவியராக இருந்தால், மற்றவர்களுடைய ஓவியங்களை பார்க்கக்கூடாது என்று நான் பரிந்துரைப்பேன். அதற்கு
பதிலாக இசையை கேட்கும்படி சொல்லுவேன். இது ஒரு முழுவதும் புரட்சிகரமான யோசனையாக தோன்றலாம், ஏனென்றால், பெரும்பாலான
ஓவியர்கள் மற்ற ஓவியர்களுடைய வேலைப்பாடுகளை கவனித்தே கற்கவேண்டும் என்று கூறப்படுவர்.
அவர்கள் இசையை கேட்குமாறு கூறப்படவில்லை. நீங்கள் மற்றவர்களுடைய ஓவியங்களை பார்ப்பதை
விடுத்து இசையை கேட்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதன்பின் நீங்கள் உங்கள்
தூரிகையை எடுத்து வரைய ஆரம்பிக்கலாம்.
நான் பள்ளியில் இருந்த போது, மற்றவர்கள்
எழுதிய பல பாடல்களை படித்திருக்கிறேன். ஓ! நான் எழத வேண்டும் என்று நினைத்தேன், ஆனால்
வேறு யாரோ ஏற்கனனவே எழுதி விட்டாரே என்று நினைப்பேன். எனவே நீங்கள் ஒரு கவிஞராக இருப்பின்
மற்றவர்களின் கவிதைகளை படிப்பது நிறுத்துங்கள். நான் மற்றவர்களின் கவிதைகளை படிப்பது
நிறுத்திய பின்னர் சொந்தமாக எழுத ஆரம்பித்து விட்டேன்.
நீங்கள் ஒரு புதுமையான சமையல்காரராக
வேண்டுமென்றால் சமையல் குறிப்பு புத்தகங்களை படிக்க வேண்டாம். நீங்கள் உங்கள் சொந்த
பரிசோதனைகளை செய்யவும். ஒரு புதுமையான சமையல்காரராக வேண்டுமென்றால், எப்போதுமே
புத்தகங்களை படிக்க வேண்டாம். உண்மையில் பலனளிக்கும். படைப்பாற்றலுக்கு தேவையான மற்றொரு
முக்கியமான விஷயம் உள்ளுணர்வு. நீங்கள் உள்ளனர்வு உள்ளவராகவும் படைப்பாற்றல் மிக்கவராக வேண்டுமென்றால் நீங்கள் நடுநிலைமை உள்ளவராகவும் உங்கள் மனமும் உடலும் காலியும்
வெற்றிடமாகவும் இருக்க வேண்டும்.
எந்த ஒரு தொழிலதிபருக்கும் உள்ளுணர்வு
முக்கியம். உங்கள் உள்ளுணர்வை சொல்வதின் படி நீங்கள் முதலீடு செய்யும்போது வெற்றி பெறுகிறீர்கள்.
தொழில், அரசியல் படைப்பாற்றல், அறிவியல் மற்றும்
கண்டுபிடிப்பு ஆகிய அனைத்திற்கும் உள்ளுணர்வு தேவைப்படுகிறது. உள்ளுணர்வு பெற உங்களுக்கு என்ன தேவை? தியானம்.