உண்மையின் வேறு,வேறு நிலைகள்

11 ஏப்ரல் 2013 - மாண்ட்ரியால், கனடா


         
கே: ஆத்மா ஒன்று என்றால், நாம் யாரென்று நம்மைப் பற்றி நினைப்பது சரியா. யாராவது மற்றவரின் உடலுக்குள் சென்று அந்த அனுபவத்தை உணர முடியுமா? வேண்டும்போது நம் ஆத்மாவை உடலை விட்டு வெளிக் கொணரவோ மீண்டும் உடலுக்குள் நுழைக்கவோ முடியுமா?

குருதேவர்: இந்த அறையில் எத்தனை மின் விளக்குகள் இருக்கின்றன என்று பார்த்தாயா? இந்த விளக்குகளில் வேறுபாடு இருக்கிறதா? ஆம். அவை வேறு வேறு விளக்குகள் தான். அவற்றின் செல்லும் மின்சாரம் வேறு வேறு என்று சொல்ல முடியுமா? முடியாது இல்லையா?

ஒரு நிலையில் பார்த்தால் விளக்குகள் வேறு வேறானவை. ஒரு நிலையில் பார்த்தால் எல்லா விளக்குகளும் ஒரே மின்சாரத்தால் ஒளி விடுகின்றன. அதைப் போல வேறு வேறு நிலைகளை நாம் அறிய வேண்டும். உண்மைக்கு வேறு வேறு நிலைகள் உண்டு. அறிவதிலும் வேறு வேறு நிலைகள் இருக்கின்றன. 

ஆதி சங்கரரைப் பற்றி ஒரு கதை இருக்கிறது. ஒரு சமயம் ஆதி சங்கரர் சொன்னார். இந்த உலகம் முழுதும், நாம் திடமாக நினைக்கும், எல்லாவற்றையும் அடக்கிய இந்த உலகம் சூன்யமாகும். இவை எல்லாமே சூன்யம் என்று அவர் சொன்னார்.ஒன்றுமே கிடையாது. இன்றைய நவீன விஞ்ஞானிகளும், திடப்பொருள் என்று ஒன்றுமே கிடையாது. எல்லாமே அதிர்வலைகள் தான் என்று சொல்கிறார்கள்.

திடமாகத் தெரியும் இவ்வுலகம் பொய்யானது என்று சங்கரர் சொன்னார். இதில் ஒன்றுமே கிடையாது. அப்படி அவர் சொல்லிக் கொண்டிருந்த போது ஒரு மதம் பிடித்த யானை அவரை நோக்கி ஓடி வந்தது. சங்கரரும் ஓடி ஒளிந்து கொண்டார். கூட்டத்தில் ஒருவர், நீங்கள் சொல்லியபடி யானையும் பொய்யானது. ஏன் ஓடி ஒளிகிறீர்கள்? என்று கேட்டார். இந்த யானை ஓடி வந்ததும் பொய். நான் ஓடி ஒளிந்ததும் பொய் என்று சங்கரர் சொன்னார். எனவே உண்மையைப் பற்றிய குழப்பம் வேண்டாம்.

ஒருவர் அரைத்தூக்கத்தில் இருந்தபோது கனவு கண்டார். கனவில் ஒரு புலியைப் பார்த்தார். அவர் தன் துப்பாக்கியை எடுத்து புலியை சுட விரும்பினார். அவர் போட்ட சத்தத்தில் எழுந்த அவர் மனைவி அவரை எழுப்பி, நான் உங்கள் மனைவி, புலி அல்ல. விழித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். கனவில் வந்த புலியைச் சுட நீங்கள் கனவுத் துப்பாக்கியை உபயோகிக்க வேண்டும்.கனவுப் புலியை நிஜத் துப்பாக்கியால் சுட முடியாது. சரியா? ஆகவே உண்மையின் வேறு,வேறு நிலைகளை சரியாகப் புரிந்து கொண்டு வாழ்க்கையை சுவையாக்கிக் கொள்ள வேண்டும்.

கே: சில சமயம் நான் யார் என்று பார்க்க இயலாமல் அழுகிறேன். இந்தக் கேள்வி கிட்டத்தட்ட என் வாழ்க்கையின் முடிவான கேள்வியாகத் தெரிகிறது. இதை எப்படித் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்?

குருதேவர்: நீ உன்னை ஒரு அறியும் பொருளாக்க முடியாது. நீ அறிபவன். ஒரு குழந்தை தன் தாயை ஒரு அறிய வேண்டிய பொருளாகக் கருதாது. குழந்தை தூங்கி எழுந்தவுடன் “அம்மா, நீ எங்கிருந்து வந்தாய்?” என்று கேட்பதில்லை. நீ எந்தப் பள்ளிக்குச் சென்றாய்? உன் அம்மா யார்? உன் அப்பா யார்? உன் பெயர் என்ன?

ஒரு குழந்தை இப்படிப் பட்ட கேள்விகளையா கேட்கும்? குழந்தை தாயை பார்த்தவுடன் அன்போடு அவளிடம் செல்லும். அம்மா யார்? எங்கு பிறந்தாள்? எங்கு வளர்ந்தாள்? அவர் பெயர் என்ன? என்று ஆர்வம் காட்டுவதில்லை. அது தன் தாயை அறிய வேண்டிய பொருளாகக் கருதுவதில்லை.

குழந்தை தாயிடம் பாசமாக இருக்கிறது. அது போல் கடவுளை நாம் பொருளை போல் அறிய முடியாது. கடவுள் நாம் (புலன்களால்) அறியும் பொருள் அல்ல. இதைப் புரிந்து கொள். நீ சரியான இடத்துக்கு வந்திருக்கிறாய். தியானம் மற்றும் சாதனைகள் உன் கேள்விக்கு விடை அளிக்கும். நீ உன்னுடைய இடத்தில் இருப்பதை உணரலாம்.

கே: எப்போதும் கடவுளுக்கு உகந்த காரியங்களைச் செய்யத் தவறிவிட்டதாக நினைத்து பயமாக இருக்கிறது. நான் செய்யும் காரியங்கள் கடவுளுக்கு பிடிக்குமா என்று தெரியவில்லை. இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்க்கலாம்?

குருதேவர்: கவலை வேண்டாம். உன் சார்பில் நான் கடவுளிடம் முறையிடுவேன். நீ ஓய்வாக இரு. ஆனால் உன் ஆத்மாவுக்குப் பிடிக்காத எந்தக் காரியத்தையும் செய்யாமல் இரு. பல சமயங்களில் உன் ஆத்மா (மனசாட்சி) நீ செய்வது சரியான செயல் இல்லை என்று உறுத்தும். இதை செய்யாதே என்று சொல்லும். அல்லது நீ ஏன் இப்படிப்பட்ட காரியம் செய்கிறாய் என்று கேட்கும்.  எதை செய்வதில் மன உறுத்தல் இல்லையோ அதையே செய்.

கே: குருதேவா ! ஒரு பெண் கர்ப்பம் தரிப்பதற்கு முன்னும் கர்ப்பம் தரித்த பின்னும் தன்னை ஆன்மீக வழியில் செலுத்த என்ன செய்ய வேண்டும்?

குருதேவர்: நீ ஆன்மீக வழியில் எப்போதும் செல்கிறாய் என்பதை நினைவில் வைத்துக் கொள். இறைவனின் குணங்கள் என்ன என்று பார். தெய்வீக குணங்களை நினைத்துப் பார். எது எங்கும் இருக்கிறதோ, எப்போதும் எல்லா இடங்களிலும் இருக்கிறதோ, அதை இறைத்தன்மை என்கிறோம். அது உன்னிடமும் இருக்கிறது. அப்படி இல்லா விட்டால் அதை இறைவன் என்று எப்படி சொல்ல முடியும்? இறைவனின் முதல் குணமே எல்லா இடங்களிலும் இருப்பது தான். சில இடங்களில் இருந்து மற்ற இடங்களில் இல்லாமல் இருக்கவே முடியாது. ஆகவே இறைவன் உன்னுள் இருக்கிறார். ஒரு குணம் இருப்பதை நீ அறியலாம்.

இறைவனின் இரண்டாவது குணம், அவர் எல்லா நேரங்களிலும் இருப்பவர். எப்போதும் இருப்பவர். கடந்த காலத்திலும் இருந்தார். தற்சமயத்திலும் இருக்கிறார். வருங்காலத்திலும் இருப்பார். தற்சமயம் இருக்கும் கடவுள் உன்னுள்ளும் இருக்கிறார். இப்போதும் இருக்கிறார். மற்றும் இறைவன் எல்லோருக்கும் பொதுவானவர். உனக்கும் வேண்டியவர். உன்னைச் சார்ந்தவர்.

இறைவன் எல்லாக் காரியங்களையும் நடத்த வல்லவர். மேல் சொன்ன இறைவனின் நான்கு குணங்களையும் ஓய்வாக சிந்தித்துப் பார். அவ்வளவு தான். இறைவனைப் பற்றிப் பேசும் போது அவர் (ஆண்பால்) என்று குறிப்பிடுகிறோம். இறைவன் அவன் அல்லது அவள் கிடையாது. பழங்காலத்து ரிஷிகள் இறைவனை “ப்ரம்மம்” என்று குறிப்பிட்டார்கள். “ப்ரம்மம்” என்பது ஆணோ பெண்ணோ அல்லது அஃரிணையோ அல்ல. இறைவனை ஆண், பெண், அது என்று எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். “ப்ரம்மம்” எல்லா இடங்களிலும் இருக்கிறது. உன்னிடத்திலும் இருக்கிறது. எல்லா நேரங்களிலும் உன்னுடன் இருக்கிறது. “ப்ரம்மம்” எல்லோருக்கும் பொதுவானது. உன்னையும் சேர்ந்தது. வல்லமை படைத்தது. நீ இதைத் தெரிந்து கொண்டால் போதும். ஓய்வாக இரு.

இறைவன் (இறைத் தன்மை) என்னுள் இருக்கிறார். இப்போது இருக்கிறார். இறைவன் எனக்குச் சொந்தமானவர். எல்லா வல்லமையும் படைத்தவர்.

கே: குருதேவா ! உபநிஷத்துக்களைப் பற்றிச் சொல்லும் போது ப்ரம்மத்தை அறிய அறிவை (உன் பார்வையை) உள் நோக்கித் திருப்ப வேண்டும் என்று சொன்னீர்கள். நம் ஆசைகள், பற்றுகள் ஒழியாத போது ப்ரம்மத்தை அறிவது சாத்தியமா?
நான் இப்போதும் எது நன்றாக இருக்கிறதோ, எது சரியாக இருக்கிறதோ அதைத் தேர்ந்தெடுக்கிறேன். (விருப்பு, வெறுப்பிலிருந்து விடுபடவில்லை) என்ன செய்வது?

குருதேவர்: நல்லது. உன்னைப் பரிசோதிக்க உன்னிடம் நிறைய நேரம் இருக்கிறது என்று தெரிகிறது. வா! ஏதாவது காரியத்தில் ஈடுபடு. சேவை செய். நல்ல காரியம் செய்து இயல்பாக இரு. ஏன் நல்ல ருசியான உணவை விரும்புகிறாய் எப்போதும் கசப்பானவைகளையே சாப்பிடு என்று சொல்பவன் நான் இல்லை. உனக்கு ருசியான உணவை உண்ண விருப்பமென்றால், ருசியான உணவை உண்ண வேண்டும். அதைப் பற்றியே நினைத்து நினைத்து ஏங்குவது நல்லதல்ல.

கே: ஒருவர் ஞானமடைய ஐந்து உடல்களின் அனுபவம் தேவை என்று படித்திருக்கிறேன். இப்படிப் பட்ட பயங்கரமான எண்ணம் ஏன் வருகிறது. நான் விரிவடைவதாக கற்பனை செய்யும் போது, அப்படிப் பட்ட அனுபவம் ஏற்படும் போது எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது.

குருதேவர்: கவலை வேண்டாம். ஓய்வாக இரு. அதனால் தான் ஆன்மீகப்  பாதையில் செல்லும் போது ஒரு குரு தேவை என்று சொல்கிறார்கள். அந்த குரு “கவலைப்படாதே. நான் இருக்கிறேன்” என்று சொல்வார். உன் குரு “கவலை வேண்டாம். நான் இருக்கிறேன்” என்று சொல்வதைக் கேட்கும் போது உனக்கு மேலே செல்ல நம்பிக்கை ஏற்படும்.

கே: குருதேவா ! மற்ற கிரகங்களில் உயிரினங்கள் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். ஆத்மா திரும்பவும் பிறவி எடுக்கும் போது எந்த கிரகத்தில் வாழ்ந்ததோ, அதே கிரகத்துக்குத் திரும்புமா? திசை மாறி மற்ற கிரகங்களுக்குச் செல்ல வாய்ப்பு உண்டா?

குருதேவர்: எல்லாம் நடக்கும். திசை மாறி மற்ற கிரகங்களுக்குப் போக வாய்ப்பு இருக்கிறது.

கே: நாம் ஆன்மீகப் பாதையில் செல்லும் போது ஒரு பிறவியில்  ஞானம் அடையாத நிலையில், அடுத்த பிறவியில் எங்கே விட்டோமோ அங்கிருந்து பயணத்தைத் துவங்குவோமா?

குருதேவர்: ஆம்! நீ சொல்வது சரி.

கே: நான் எப்போதும் இருக்கிறேன் (எடர்னல்) என்று நம்புகிறேன். அதன் பொருள் என்ன?

குருதேவர்: கேள் ! சூரியன் எவ்வளவோ காலமாக இருந்து வருகிறது. இல்லையா? அது பலகாலம் இருக்கப் போகிறது. சூரியன் எப்போதும் இருக்கக் கூடியது. பூமியும் எப்போதும் இருக்கக் கூடியது. எது காலம் காலமாக இருக்குமோ, அது எப்போதும் இருப்பது. நேற்று இருந்ததும் நீ தான். இன்று இருப்பதும் நீ தான். நாளை இருக்கப் போவதும் நீ தான். பள்ளிக்குச் சென்றது நீ தான். கல்லூரிக்குச் சென்றதும் நீ தான். உன்னில் ஒன்று எப்போதும் உன்னைத் தொடர்கிறது. ஆனால் உன் உடல் மாறிக் கொண்டே இருக்கிறது. உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் மாறுகின்றன. பழைய செல்கள் அழிந்து புது செல்கள் உருவாகின்றன. ஆனாலும் ஏதோ ஒன்று தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இல்லையா?

கே: குருதேவா ! ஆன்மீகப் பாதையில் செல்ல எப்போது எனக்கு அழைப்பு வரும்? உதவி செய்யுங்கள்.

குருதேவர்: ஏன் நீ அழைப்புக்காகக் காத்திருக்கிறாய்? நடுப்பகலில் சூரியனைத் தேடாதே. நீ ஏற்கனவே சரியான இடத்தில் இருக்கிறாய். இது தான் உனக்கு அழைப்பு என்று அறிந்து கொள். உலகம் முழுதும் ஒரு புதிய திருப்பம் ஏற்படுகிறது. மக்கள் பொருளீட்டும் ஆசையை விட்டு ஆன்மீகத்தில் செல்ல விரும்புகிறார்கள். உலகம் முழுதும் ஒரு புரட்சி ஏற்பட்டிருக்கிறது.

சென்ற செப்டம்பர் மாதம் நான் அர்ஜெண்டினா சென்ற போது ஒரு சிறைச் சாலையில் ஐயாயிரத்து இருநூறு கைதிகள் வாழும் கலைப் பயிற்சியில் பங்கேற்றார்கள். ப்ரேசில் நாட்டிலும் இப்படி நடந்தது.

ரியோவில் உள்ள சிறைச்சாலைக்கு நான் பயிற்சியில் பங்கேற்ற கைதிகளைப் பார்க்க சென்ற போது, அங்கு ஒரு அறையின் வாசலில் “வாழும் கலை மையம்” என்று எழுதப் பட்டிருப்பதைப் பார்த்தேன். சிறைச் சாலைக்குள் அந்த அறையில் என் ஃபோட்டோவை வைத்திருக்கிறார்கள். வாழும் கலைப் புத்தகங்கள், ஒலி, ஒளி நாடாக்கள், தட்டுகள் முதலியவை அங்கு இருந்தன. இந்த அறைக்கு வந்து அமர்ந்து சிறைக் கைதிகள் அமைதி அடைகிறார்கள். நான் அவர்களைப் பார்த்த போது அவர்கள் தேம்பித் தேம்பி அழுதார்கள். (வாழும் கலைப் பயிற்சிக்குப் பின்) எங்கள் வாழ்க்கை முற்றிலும் மாறி விட்டது என்றார்கள். அவர்கள் மிக நல்லவர்கள்.

அர்ஜெண்டினாவிலும் அதையே பார்த்தேன். கண்களில் கண்ணீர் இல்லாதவர்கள் யாரும் இல்லை. நகரத்திலிருந்த நீதிபதிகள், நாட்டின் உச்ச நீதி மன்றத்தின் நீதிபதிகள் எல்லோரும் இதைப் பார்க்க விரும்புவதாகச் சொன்னார்கள். எப்படிப் பட்ட புரட்சி நடந்திருக்கிறது. அவர்கள் என்னுடன் வந்து கைதிகளின் அனுபவங்களைக் கேட்டறிந்தார்கள். ஒருவருக்கொருவர் சண்டையிட்டு, அடிதடியில் ஈடுபட்டிருந்த கைதிகள் முற்றிலும் மாறி விட்டார்கள்.

வாழும் கலைப் பயிற்சிக்கு முன் சிறைக் காவல் அதிகாரிகளுக்கு, கைதிகளை அமைதியாக வைக்க முடியாத நிலை இருந்தது. பயிற்சிக்குப் பின் அந்த நிலை மாறிவிட்டது. இப்போது எல்லாக் கைதிகளும், அமைதிக்கான அடையாள வில்லைகள் அணிந்து, “நாங்கள் சண்டை சச்சரவில் ஈடுபட மாட்டோம். அமைதி காப்போம்” என்று உறுதி அளித்தார்கள்.
எவ்வளவோ காரியம் செய்ய வேண்டியிருக்கிறது. உட்கார்ந்து அழைப்புக்காகக் காத்திராதே. யாரோ உள்ளிரூந்து ஒரு நாள் உன்னை அழைப்பார்கள் என்று எண்ணாதே. அழைப்பு தெளிவாக, சத்தமாக இருக்கிறது. நிறைய காரியம் செய்ய வேண்டியிருக்கிறது. சேவைக்கான திட்டங்களில் சேர்ந்து, சேவையில் ஈடுபடு.

சமீபத்தில் இந்தியாவில் உள்ள ஒரு வாழும்கலையினர் நடத்தும் பள்ளிக்குச் சென்றிருந்தேன். அது ஒரு பழங்குடியினர் வசிக்கும் பகுதியில்  இருந்தது. சிறுவர் சிறுமிகளின் பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்றதில்லை. இந்த தலைமுறையில் தான் சிறுவர் சிறுமிகள் பள்ளிக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள். நான் சென்ற போது மாணவ மாணவிகள் கம்ப்யூடரில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அதை பார்க்கும் போது நெஞ்சம் நெகிழ்ந்தது. இது ஒரு நல்ல மாற்றம். நிறைய சேவை காரியங்கள் நடக்கின்றன. இன்னும் நிறைய பேர் சேவைக்காகத் தேவைப் படுகிறார்கள்.

நீ (கனடா) ஆசிரமத்துக்கு வந்து சேவை செய்யலாமே. மற்றவர்களையும் நேரம் கிடைக்கும் போது அழைத்து வந்து சேவையில் ஈடுபடுத்தலாம். நான் (கனடா) ஆசிரமத்தில் இருக்கும் போது மட்டும் ஆசிரமத்துக்கு வருவது சரியல்ல. நான் இல்லாத போதும் 10 – 15 பேர் அடங்கிய குழுவாக வார விடுமுறை நாட்களில் ஆசிரமத்துக்கு வந்து சேவை செய்யலாம். வாழும் கலைப் பயிற்சியில் இது வரை சேராதவர்களையும் அழைத்து வந்து சேவையில் ஈடு படுத்தலாம். இங்கு 200 பேர் தங்க வசதி இருக்கிறது.

குழுக்களில் மக்களை அழைத்து, ஞானம் சம்பந்தமான விஷயங்களைப் பற்றிப் பேசலாம். தியானம் செய்ய வைக்கலாம். நல்ல உணவு பரிமாறலாம். எத்தனை பேர் வருவார்கள் என்று சமையல் அறையில் முன்பாகவே சொல்லுங்கள். நாலைந்து விதமான உணவுப் பண்டங்களை சமைத்து எல்லோரும் சேர்ந்து உண்ணலாம். சிறிது நேரம் இசை, நடனத்தில் பங்கு கொள்ளலாம். ஆசிரமத்தைச் சுற்றிக் காண்பிக்கலாம்.

பார்! உன்னால் பல விதமான சேவைகள் செய்ய முடியும். எத்தனையோ பேர்கள் மனச்சிதைவால் (டிப்ரஷன்) வாடுகிறார்கள். மகிழ்ச்சியற்ற வாழ்க்கை நடத்துகிறார்கள். ஒரு அறையில்  அப்படிப்பட்டவர்களை பூட்டி வைத்து ஒரு டி.வி. மற்றும் இண்டர்நெட் கம்ப்யூடர் வசதி மட்டும் கொடுப்பதால் அவர்கள் தங்கள் மனச்சிதைவிலிருந்து விடுபட முடியாது. அவர்களை தங்கள் அறையிலிருந்து வெளியே வந்து வாழ்க்கையை முழுமையாக மகிழ்ச்சியாகக் கழிக்க வழி செய்ய வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து மகிழ்ச்சி அலைகளை உருவாக்குவோம். அவர்களுக்கு அதை எடுத்துச் சொல்லி, அவர்களின் வாழ்க்கையை ஒரு கொண்டாட்டமாக மாற்றுவோம்.