6 ஏப்ரல் 2013 பூன், வட கரோலினா
கே:
நம்முள் உறைந்திருக்கும் கடவுள் எல்லாவற்றையும் செய்யும் திறன் உடையவர் ஆதலால் நாமும்
எதையும் செய்யலாமா?
அப்படி எனில் விதி, இறை சித்தம் இவை எங்கு பொருந்துகின்றன?
குருதேவ்: மிக
நன்றாகவே பொருந்துகின்றது. உங்களுடைய எண்ணங்கள்
இறைமையுடன் ஒழுங்கமையும்போது அது சுயவிருப்பம் ஆகின்றது.உங்கள் எண்ணங்கள் இறைமையிலிருந்து
வேறுபடும்போது,அது விதிப்பயன் ஆகின்றது.புரிகிறதா?
பதஞ்சலியின் யோக சூத்திரங்களைப் படிக்கவில்லை எனில், நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டும். அதில், இதைப்பற்றித்தான் முதலில் கூறியுள்ளேன். அதாவது, மனதின் ஐந்து வித அதிர்வலைகளைப் பற்றியது.இதைப்பற்றி
பின்னர் பேசுகிறேன்.இது முக்கியமானது ஆகும். ஐந்து அதிர்வலைகளில் ஒன்று
பிரமாணா.அதாவது சான்று. ஒவ்வொன்றுக்கும் நமக்கு சான்று தேவைப்படுகிறது.
அன்பு, உண்மை ஒருவரது நேர்மை,கடவுள் இவை எல்லாவற்றுக்குமே சான்று தேவைப்படுகிறது.
இரண்டாவது அதிர்வலை விபர்யாயா (தவறான முடிவுகள் அல்லது
தவறாகப் புரிந்து கொள்ளுதல்). மனமானது யதார்த்தமில்லாத முற்றிலும் வேறுபட்ட தனி உலகில்
சஞ்சரிக்கும் நிலை.யோக சூத்திரத்தில் அது,விபர்யய மித்யஜ்னாமதத்றுபப்ரதிஷ்த்தம்
(யோக சூத்திரா அத்1;
செய் 8) என்று கூறப்பட்டுள்ளது.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னால், மக்கள் இந்த வார்த்தையை விபர்யாச என்று
கூறிக்கொண்டிருந்தார்கள்.அதன் பொருள் என்னவென்றால், எது நினைத்தோமோ அது நடப்பதில்லை
என்பதாகும்.அதாவது உண்மையில் உள்ளதைத் தவறாகப் புரிந்து கொள்ளுதல். தற்போது, அந்த சொற்கள் குப்பையில் போடப்பட்டு
மக்கள் அதை மறந்து விட்டார்கள்.
ஆக,
விபர்யாயா என்பது உண்மையில்லாதவற்றை
உண்மையாகவும், உண்மையானதை உண்மையில்லாதது போலவும்
எண்ணுதல். தற்காலிகமான, மாறுகின்ற அழியக் கூடியவற்றை
நிரந்தரமானதாகவும், அழிவற்றதாகவும் காணுதல் என்பது
பொருள் ஆகும். இது எப்படியென்றால், சில
சமயங்களில், உங்களைப் பற்றி யாரோ எதையோ
எண்ணுகிறார்கள். அவர்களும் மறைந்து விட்டார்கள், அவர்களின் எண்ணங்களும் மறைந்து
விட்டன. ஆனால் நீங்கள் அதையே கெட்டியாகப் பிடித்துக் கொண்டு துன்புறுகிறீர்கள். புரிகிறதா? இதுதான் விபர்யாயா.
இதோ ஒரு எளிய உதாரணம்: நீங்கள் ஒருவர் வீட்டிற்குச்
செல்கிறீர்கள். நீங்கள் உள்ளே நுழைவதைக் கவனிக்காமல்,வேகக்காற்றைத் தடுக்கவோ,பல்லி/அரணை நுழைவதைத் தடுக்கவோ, கதவை மூடுகிறார்கள். நீங்கள் உள்ளே
நுழைவதும், அவர்கள் கதவை மூடுவதும் தற்செயல்
நிகழ்வுப் பொருத்தம். ஆனால் நீங்கள், உங்களது வரவை எதிர்த்துக் கதவை
மூடுவதாக எண்ணுகிறீர்கள். இது விபர்யயாவிர்க்கு ஒரு எளிய உதாரணம்.
உங்களைப் பற்றி பிறர் தவறாக எண்ணுவதாக,நீங்கள் நினைத்துக்
கொண்டிருக்கிறீர்கள்.அவர்களைக் கேட்டால், நான் உன்னைப் பற்றி எதுவுமே நினைக்கவில்லை என்னுடைய வேலையை கவனித்துக் கொண்டிருந்தேன், என்று தான் கூறுவார்கள்.பிறரைப் பற்றி
எண்ணுவதற்கு எங்கே நேரம் இருக்கின்றது? மூன்றாவது விகல்பா. வீண் கனவு மற்றும் கற்பனை.இதுவும், இல்லாதவற்றை இருப்பது போன்று அதிவேகமாக எண்ணிக்கொள்ளுதல். அடுத்தது நித்ரா அதாவது உறக்கம். கடைசியாக, ஸ்ம்ரிதி (ஞாபகம்). கடந்த கால நினைவுகளில்
எப்போதும் மூழ்கி இருப்பது.
மனமானது இந்த ஐந்து வ்ருத்திகளிலிருந்து (அதிர்வலைகள் அல்லது உருக் கோளாறுகள்) வெளி வரவேண்டும்.அதுதான் யோக நிலை. அதனால்தான் ' யோக சித்த வ்ருத்திரோதஹா' (யோக நிலை என்பது இவ்வதிர்வலைகளின்
பிடியிலிருந்து விடுபடும் செயல்) என்று
கூறப்படுகின்றது) இந்த ஐந்து வ்ருத்திகளை அழிக்க முடியாது. அவை எப்போதும்
இருந்து கொண்டு தான் இருக்கும். ஆனால் மனதை அவற்றில் சிக்கிகொள்ளாமல்
அகற்றிக்காக்கும் செயல்திறம் தான் யோகா என்பது.
கே:
கடவுளை அறியாமையும் எப்படி இறைமை ஆகும்? வன்முறை, மன அழுத்தம், அறியாமை, பகைமை இவை யாவும் கடவுளின்
உருப்படிவானால் நாம் ஏன் அவற்றிலிருந்து விலகி அமைதியை நாடவேண்டும்? கடவுளின் ஒரு
பகுதியிலிருந்து விலகி ஏன் இன்னொரு பகுதிக்குச் செல்ல வேண்டும்?
குருதேவ்: ஒரு
மனிதன் என்கிற முறையில் அவ்வாறு செல்வது இயற்கை. ஒரு ரொட்டித் துண்டும், வைக்கோல் கட்டும்
வைக்கப்பட்டிருந்தால்,
நீங்கள் பசுவாக இருந்தால், வைக்கோலை நாடிச் செல்வீர்கள்.
மனிதனாக இருந்தால் ரொட்டித் துண்டை நோக்கிச் செல்வீர்கள். அது இயல்பானது.பசுவும்
கடவுள்,வைக்கோலும் கடவுள், ரொட்டித் துண்டும் கடவுள், நீங்களும் கடவுளே.நெருப்பு
மேல்நோக்கி நகருகிறது,தண்ணீர் கீழ் நோக்கிப் பாய்கிறது. இரண்டுமே
இறை தன்மையுடையன. நெருப்பு என்கிற வகையில் அது மேல்நோக்கியும், நீர் எனும் தன்மையில் அது கீழ்
நோக்கியும் போகின்றன. இவை இயல்பான விஷயங்கள்.
நீங்கள் பிரகிருதி (வாழ்விற்கும், படைப்பின் செயல்பாட்டிற்கும் ஆதாரமான
அறிவும் தெய்வீக சக்தியும் இணைந்தது) புருஷா (இயற்கை முழுதளாவி,ஊடுருவிப் பரந்துள்ள 'தான்' எனும் தனித்தன்மை) இரண்டும்
ஆவீர்கள்.இது நம்மை வேறொரு விவாதத்திற்குறிய
விஷயத்திற்கு எடுத்துச்செல்லும்.
ஆக, சத்வ,ரஜஸ் தமோ எனும் குணங்களுக்குத்
தகுந்தாற்போல் செயல் படுகிறீர்கள்.
தமோ குணம் அதிகம் இருந்தால் வன்முறையில் ஈடுபடுகிறீர்கள்.சத்வ
குணமிருந்தால் ஒற்றுமைக்கு உழைக்கிறீர்கள். ரஜோ குணமிருந்தால் அதிக செயல்களில்
பாடுபடுகிறீர்கள். இவைகளுக்கு இடைப்பட்ட நிலையில் இருந்தால் சிறிது வன்முறை,சிறிது அமைதி என்றிருக்கிறீர்கள்.
இப்படித்தான் நடைமுறையில் உள்ளது.
கே:
நாமே ஓம் என்பதால் (பிரணவ சப்தம்),
ஓம் என்பது ஒலி அதிர்வலைகளைக்
குறிப்பதா, அல்லது ஓம் எனும் தத்துவத்தைக்
குறிப்பதா அல்லது ஓம் சப்த ஒலி அதிர்வலைகளின் முடிவில் ஏற்படும் விளைவினைக்
குறிப்பதா ? இவைஅல்லாது, ஓம் அமைதியை ஏற்படுத்துவதால், அந்த அமைதியே நாமாகிறோமா அல்லது அந்த
அமைதியின் விளைவாக ஏற்படுகிறோமா?
குருதேவ்: கூறப்பட்ட
அனைத்தும் கூறப்படாத எல்லாமும் சேர்ந்ததே ஓம்.தெளிவான அனைத்தும் மற்றும்
தெளிவில்லாத அனைத்தும் சேர்ந்ததே ஓம்.இப்போது தெளிவாகிறதா? அல்லது குழப்பமாக இருக்கிறதா? எப்படியானாலும் எல்லாமுமே ஓம்தான். (சிரிப்பு) எதை நீங்கள் கூறினாலும், எதைக் கூறாவிட்டாலும் அது ஓம்தான். அதிர்வலையானாலும், இல்லாவிட்டாலும் முதல் ஆனாலும், முடிவு ஆனாலும் அது ஓம் தான்.
ஆக,
முதல், முடிவு, நடுநிலை எல்லாமே ஓம்.
கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் வரும்காலம் எனும் காலங்களைக்
கடந்தது ஓம். இவ்வாறுதான் கூறப்படுகிறது;அது
உண்மையானதும் கூட. அதனால் தான் எந்த நல்ல விஷயத்திற்கும் ஓம் மந்திரத்தைக்
கூறுகிறோம்.முதிய முனிவர்கள் உடலில் எங்கு வலி ஏற்பட்டாலும் ஓம் என்று ஜபம்
செய்வார்கள்.
இது எனக்கு ஒரு முதிய முனிவரின் கதையை
நினைவுபடுத்துகிறது.நான் இதை எங்கேயோ கூறி இருக்கிறேன்; ஒரு வேளை அஷ்டவக்கிர கீதையின்
விளக்கவுரையில் இருக்கலாம். இது,
தொண்ணூறாம் ஆண்டுகளின் துவக்கத்திலோ, அல்லது எண்பதுகளின் மத்தியிலோ, நமது ஆஸ்ரமம் சிறியதாக இருந்த
காலத்தில் நடந்த நிகழ்வு. ஒரு முதிய ஸ்வாமிக்கு நான் எனது அறையைத் தர முன் வந்தேன்.ஆனால் அவர் அதை ஏற்றுக்கொள்ள
மறுத்து விட்டார்.அவருக்கு 85 வயது இருக்கும். வாழ்நாளில் ஒரு
தடவை கூட அவருக்கு உடல்நலக் குறைவு
ஏற்பட்டதில்லை. திறந்த வெளியில் தங்குவதற்கு அவர் மிகுந்த நம்பிக்கையுடன்
இருந்தார்.
அப்போது டிசம்பர் மாதம். குளிர் காற்று இருந்தது.அப்படியும்
அவர் சுய விருப்பத்துடன் இரவு திறந்த வெளியில் உறங்க முன்வந்தார். காலையில் நாங்கள் ஓம் ஓம் என்று
உரத்த சப்தத்தில் ஜப ஒலி அவரிடமிருந்து வருவதைக் கேட்டோம். நாங்கள் அவர் ஓம் ஓம்
என்று பல தடவைகள் கூறி தியானம் அல்லது ஜபம் செய்வதாக எண்ணினோம்.ஆனால் வெகு
நேரத்திற்கு அந்த ஒலி கேட்டதால் அருகில் சென்று அவரைப் பார்த்தோம்.அவர் குளிரில்
உறைந்து போயிருந்தார். அவரது தோள்கள், முதுகு
மற்றும் கால்கள் விறைத்துப் போயிருந்தன. அவரால் உடலை அசைக்க முடிய வில்லை.ஓம்
எனும் சப்தம் மட்டுமே வந்து கொண்டிருந்ததைக் கேட்க முடிந்தது.
ஓம் என்பது ஹிந்து சுவாமிகளுக்கு மட்டும் உரியது அல்ல.
பௌத்தம், சமணம்,சீக்கியம், டாஒயிசம், ஷிண்டோயிசம் ஆகியவற்றிலும்
ஜபிக்கப்படுகின்றது.ஏனெனில் இந்த சமயங்களில் எல்லாம் தியானம் பயிற்சி செய்யப்
படுகின்றது. ஆழ்ந்த தியான நிலையில் ஓம் எனும் சப்தம் கேட்க முடியும். ஜைனர்கள், சீக்கியர்கள், லாவ்ட்சுக்கள் (டாஒயிசத்தை பின்பற்றுபவர்கள்)
யாராயிருந்தாலும் ஓம் என்று ஜபித்து, ஒரு கை தட்டுதலையும் பழகுகிறார்கள்.
ஓம் என்பதின் ஒலித்திறிவே ஆமென் (அப்படியே ஆகட்டும்) என்று நான்
நினைக்கிறேன். அது போலவே, இஸ்லாமியர்கள் அமீன் (அப்படியே
ஆகட்டும்) என்பதுவும் இது போலவே தான் என்று எண்ணுகிறேன்.
கே:
குருதேவ்! தாங்கள் விண்வெளி மற்றும் பிரம்மன் என்பதனை விளக்கிக் கூற முடியுமா?
குருதேவ்: எது
நமது சொற்களுக்கும் மனத்தேடுதலுக்கும் உரியதோ,(தோற்றுவாய் மற்றும் சாரம்) எது
சொற்களாலும்,மனதாலும் அடைய முடியாததோ அதுவே பிரம்மன். நான் எப்போதுமே, ஊமையின் சுவையுடன் ஒப்பிட்டு இதை விளக்கிக் கூறி இருக்கிறேன்.ஒரு
ஊமை ஒரு உணவுப் பதார்த்தத்தை சாப்பிடும் போது, அதன் சுவையை எப்படி விவரிக்க முடியும்? அது போலவே, சொற்களும் மனமும் பிரம்மனை அடையமுடியாது. விண்வெளியை
ஓரளவுக்கு விவரிக்கலாம்;
ஆனால் பிரம்மனை சொற்களால்
விவரித்துக் கூற முடியாது.
ஏனெனில் சொற்களுக்கும்
விளக்கங்களுக்கும் அப்பாற்பட்டது பிரம்மன்.
கே:
உடலின் பல உறுப்புக்கள் எவ்வாறு நுட்பமாக தேவர்களுடன் தொடர்புடையதாக இருக்கின்றன
என்று கூற முடியுமா?
குருதேவ்: உடலின்
ஒவ்வொரு உறுப்பும் ஒரு தேவருடன் தொடர்பு கொண்டுள்ளது. "பிரஜானனே பிரம்ம
திஷ்டது" பிறப்பு உறுப்பில் பிரம்மா வாசம் செய்கிறார் என்று
கூறப்படுகின்றது. "பாதயோ விஷ்ணு திஷ்டது" பாதங்களில் விஷ்ணு
இருக்கிறார். அதுபோல,
"ஹஸ்தையோ ஹர
திஷ்டது " கைகளில் ஹரன் (சிவனின் ஒரு அம்சம்) இருக்கிறார். கர்னேயோ அஷ்வினோ
திஷ்டது"
இரட்டையரான அஸ்வின்
குமாரர்கள் (சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் இவற்றின் சின்னமான வேதக்கடவுள்கள்,அதுவும் தவிர செல்வத்திற்கும்
ஆயுர்வேத மருந்துகளுக்கும் உரியவர்கள்)) இரு காதுகளிலும் இருக்கிறார்கள். ஆயுர்வேத
மருந்துகள் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தை மனிதனுக்கு அளித்தவர்கள் அஸ்வின்
குமாரர்கள். அது போல கண்கள் சூரியனுடன் தொடர்புடையவை.
நெற்றி ருத்ரனின் (சிவனின் ஒரு அம்சம்) ஆசனம் என்று
கூறப்படுகின்றது. அக்னியின் (ஜீரண
நெருப்பு) ஆசனமாகிய தொப்புள் பகுதியில் ராமர் இருக்கின்றார். ருத்ரன் சிவன் இருவரும் சிவனின் இரு அம்சங்கள்.ருத்ரன்
நெற்றியில் இருக்கிறார்,சிவன் இதயத்தில் வசிக்கிறார். இது
போன்று உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஒரு கடவுளுடன் தொடர்புடையது.