24 ஏப்ரல் 2013
- டோக்கியோ, ஜப்பான்
நாம்
வாழ்கையை ஒரு பரந்த கோணத்திலிருந்து காண வேண்டும். நமது புலன்களின் மூலமாகவே,
நாம் வாழ்கையையும் இந்த முழு உலகத்தையும்
காண்கிறோம். பார்ப்பது, கேட்பது,
தொட்டுணர்வது,
புரிந்து
கொள்வது இவற்றின் மூலமாகத் தெரிந்து கொள்கின்றோம். இவ்வாறு ஐம்புலன்களின் மூலமாக
அறிவது என்பது ஒரு நிலை. புலன்களின் மூலமாக அடையும் அறிவை விட மேலானது புத்தி
பூர்வமாக அடையும் அறிவு.
புத்தி
பூர்வமான அறிவு,
புலனறிவை விட மேலானது. சூரியன்
உதித்து மறைவதை காண்கின்றோம். ஆனால் புத்தியின் மூலமாக
சூரியன் உதித்து மறைவதில்லை, பூமி
சுழன்று கொண்டிருக்கின்றது என்பதை அறிகின்றோம். இந்த புத்தி பூர்வமான அறிவை விட மேலானது
ஒன்றிருக்கின்றது. அதுதான் உள்ளுணர்வின் மூலமாக அடையும் அறிவு. மனிதர்களாக பிறந்த
நாம் அனைவரும் உள்ளுணர்வு நிலையைத் தொட்டு அடையும் திறமை உள்ளவர்கள். உள்ளுணர்வு அறிவு தான் ஆன்மீக அறிவு.
காலத்தையும்,
பரப்பையும்
கடந்து செல்லும் போது உண்மை என்பதை அறிந்து கொள்வீர்கள் .அறிவு ஒன்றைக் கூறும் போது உள்ளுணர்வு வேறொன்றை
கூறுவதை நீங்கள் அனைவருமே வாழ்வில் ஏதோ ஒரு கட்டத்தில் உணர்ந்திருப்பீர்கள். உங்களுக்கு உள்ளுணர்வு ஒன்றை
உறுதியாகக் கூறும் போது,
புத்தி
வேறொன்றைக் கூறி, உள்ளுணர்வு அறிவுருத்தியதே
நடந்திருப்பதை உணர்ந்திருப்பீர்கள். எத்தனை
பேர் இந்த அனுபவத்தை அடைந்திருக்கின்றீர்கள்? (பலர்
கை தூக்குகிறார்கள்). ஒவ்வொருவருக்கும்
இந்த மனோசக்தி இருக்கின்றது, எப்படிப்
பயன்படுத்துவது என்று தெரிவதில்லை.
இது
எப்படியென்றால்,உங்களிடம் ஒரு பூட்டிய செல்வக்குவியல்
பெட்டி இருக்கின்றது, அதற்குச் சாவி இல்லை,
அப்பெட்டியை
என்ன செய்வது என்று தெரியவில்லை. அது
போல, ஒரு கம்ப்யூட்டர் இருக்கின்றது,
ஆனால்
அதற்குப் பாஸ்வோர்ட் தெரியவில்லை. கைபேசி
இருக்கின்றது ஆனால் அதற்கு கீ வோர்ட் தெரியவில்லை. ஐ பாட் இருக்கின்றது அது
பூட்டப்பட்டு அதன் கீ வோர்ட் மறந்து விட்டது. இது போன்றது தான் வாழ்கை. நமக்கு
உண்மையின் பல அளவீடுகளைத் தெரிந்து கொள்ள வழி இருந்தாலும்,
அவற்றை அடையத் திறமைகள் இருந்தாலும் நம்மிடம் கீ வோர்ட் இருந்தால் மட்டுமே முடியும். இது எளிமையான,
ஆனால்
மிக ஆழ்ந்த விஷயம். ஒரே
ஒரு பாஸ்வோர்ட், உங்கள் கம்ப்யூட்டர் இயங்க
ஆரம்பிக்கின்றது. அது இயங்க ஆரம்பித்தவுடன் நீங்கள் எல்லாச் செய்திகளையும்
சென்றடையலாம். நம்முள்
இருக்கும் பிரபஞ்ச சக்தி, பிரபஞ்சத்
திறனுடன் இணைதல் மிக அவசியம். அத்தகைய
இணைவு ஏற்பட்டவுடன் உலகின் எதனாலும், உங்கள்
புன்முறுவல், சக்தி,உற்சாகம்,மகிழ்ச்சி
அறிவுத்திறன் ஆகியவற்றைக் குறைக்க முடியாது. ஆன்மீகப் பயிற்சிகள்,
உங்கள்
வாழ்க்கையிலேயே உள்ள, மதிப்பு மிக்க
எல்லைக்குள் உங்களை அழைத்துச் செல்கின்றன.
யோசியுங்கள்!
உங்கள் வாழ்கையில் உங்களுக்கு என்ன வேண்டும்? உங்களுக்கு
மூன்று விடைகள் கிடைக்கும்.முதலாவதும் முக்கியமானதுமாக, சந்தோஷம்
என்று கூறுவீர்கள். நீங்கள் ஏன் வேலை செய்ய விரும்புகிறீர்கள்?
ஏன்
பணம் சம்பாதிக்க விரும்புகிறீர்கள்? அதன்
மூலம் வசதியாக, மகிழ்ச்சியாக இருக்க முடியும்
என்று எண்ணுகிறீர்கள்.
இரண்டாவது அன்பு. உங்கள் வாழ்வில் அன்பு இல்லையென்றால், நீங்கள்
இந்தக்
கிரகத்தில் வாழ விரும்புவீர்களா? விரும்ப மாட்டீர்கள். கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இந்த உலகத்தில் உங்களிடம் யாரும்
அன்பு செலுத்தவில்லை,
நீங்களும் யாரிடமும் அன்பு செலுத்தவில்லை. அப்படியென்றால் நீங்கள் இங்கே இருக்க
வேண்டிய அவசியம் என்ன? மகிழ்ச்சி,
அன்பு ஆகிய இரண்டிற்கு பிறகு
மூன்றாவதாக ஞானம்.
இங்கே ஒவ்வொருவரும் வாழ்வது முக்கியமாக
அன்பு, ஆனந்தம், ஞானம் என்னும் இந்த மூன்று
விஷயங்களுக்காக தான். அன்பு என்பது மறைக்க முடியாத ஒன்று. உங்கள் உள்ளத்தில் அன்பிருந்தால்
நீங்கள் உங்கள் செயல்களில் அதைக் காண்பீர்கள். உங்கள் முகத்தில் அன்பு வெளிப்படும். உங்கள் கண்களில் அதை காணலாம்.
உங்களது ஒவ்வொரு அசைவிலும் அன்பு
வெளிப்படும். நீங்கள் யாராவது ஒருவருடைய கண்களைப்
பார்த்தே அவர் கவலையாகவோ,
வருத்தமாகவோ, பதட்டமாகவோ, கோபமாகவோ இருக்கின்றாரா அல்லது அன்பு
மயமாக இருக்கின்றாரா என்பதை தெரிந்து கொள்ளலாம். ஒரு சின்னக் குழந்தை, அல்லது ஒரு நாய்க்குட்டியின்
கண்களைப் பார்த்தால் அவை அன்பை வெளிப்படுத்துவதை காணலாம்.
அன்பு என்பது மறைக்க
முடியாதது. அதே சமயம் அது முழுமையாக
வெளிப்படுத்தவும் முடியாதது. யாராலும் அதை முழுமையாக வெளிப்படுத்த
முடியாது. நீங்கள் மேலும் மேலும் அதை வெளிப்படுத்த முயலும் போது ஏதோ ஒன்று குறைவதை நீங்கள்
உணர்வீர்கள். நூறு சதவீதம் அன்பை வெளிப்படுத்தவே முடியாது.
அடுத்து வருவது உண்மை. நீங்கள் உண்மையை தவிர்க்க முடியாது. ஒரு நாள் நீங்கள் அதை சந்தித்தே ஆக
வேண்டும். உங்கள் கண்களை மூடிக்கொள்வதால், பகல் இரவாக மாறி விடாது.
அல்லது இரவு
பகலாகி விடாது. உண்மை நிலையானது. நீங்கள் அதைத் தவிர்க்க முடியாது.
உண்மையை
விவரிக்கவும் முடியாது.
அது விவரிக்க இயலாத அளவிற்கு மிகவும்
பெரியது. மரணம்
அது போன்றதே. ஒரு நாள் நாம் அனைவரும் இறக்கப்
போகின்றோம். நாம் அனைவரும் முதுமை அடையப்
போகின்றோம். நீங்கள் அதைத் தவிர்க்க முடியாது.
மூன்றாவது அழகு. அழகு
என்பதனை சொந்தம் கொண்டாடவும் முடியாது. துறக்கவும்
முடியாது. இந்த உலகில் பிரச்சினைகள் அனைத்தும் உண்டாவது, இதன் காரணமாக தான். நாம் உண்மையை தவிர்க்க முயற்சி செய்து பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளுகின்றோம். அன்பை
முழுமையாக வெளிப்படுத்த முயற்சி செய்து பிரச்சினைகளை உருவாக்கி விடுகின்றோம். அழகை சொந்தம் கொண்டாடும் முயற்சியில்
பிரச்சினைகளில் சிக்கி விடுகின்றோம்.
அழகை உங்களால் துறக்க முடியுமா? உங்களால் துறந்துவிட முடியுமென்றால்
அது அழகே இல்லை. அழகை உங்களால் சொந்தம் கொண்டாட
முடியுமா? முடியாது. இதுவே இன்றைய ஞானத்தின் சாரம். இதை நீங்கள் உங்கள் மனதில்
வைத்திருந்தால் போதும்.
இது உங்கள் அன்றாட வாழ்க்கைக்கு
பேருதவியாக இருப்பதைக் காண்பீர்கள். உண்மை தவிர்க்க முடியாதது. விவரிக்கவும் முடியாதது. அழகு சொந்தம் கொண்டாட முடியாதது; துறக்கவும் முடியாதது. அன்பை மறைக்கவும் முடியாது, முழுவதுமாக
வெளிப்படுத்தவும் முடியாது. இந்தக்
கருத்துக்களை ஆழமாக சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்குள் ஞானம்
மேலும் மேலும் மலரும்.
கே: நான் தற்சமயம் யோகப் பயிற்சி
ஆசிரியராக இருக்கின்றேன்.
மக்களை எப்படி ஊக்குவிப்பது என்பது
மிகப் பெரிய
பிரச்சினையாக உள்ளது.
மக்களை ஊக்குவிப்பதற்கென
ஆசிரியர்களுக்கு
அறிவுரை சொல்லுங்கள் குருதேவ்?
குருதேவ்: அவர்களை மூன்று விஷயங்கள் கேளுங்கள், நீங்கள் மகிழ்ச்சியாக
இருக்க விரும்புகின்றீர்களா? ஆரோக்கியமாக
இருக்க விரும்புகின்றீர்கள? உங்கள்
அன்றாட வாழ்க்கையில் அதிக நேரம் கிடைக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா? ஆம் என்றால் வந்து யோகப்பயிற்சி செய்யுங்கள்.
நீங்கள் என்னிடம் பத்து நிமிடங்கள் கொடுங்கள். நான் பதிலுக்கு உங்களுக்கு இரண்டு
மணி நேரம் தருகின்றேன்.
நீங்கள் பத்து நிமிடம் யோகப் பயிற்சி
செய்தால், இரண்டு அல்லது அதற்கும் அதிகமான மணி
நேரத்திற்கு சமமான சக்தி உங்களுக்குக் கிடைக்கும். யோகப் பயிற்சி செய்வதால் ஆழ்ந்த
உறக்கம் உண்டாகும்.
குறைந்த அளவு நேர உறக்கமே போதும்.
மகிழ்ச்சியாகவும்
சக்தி நிறைந்தவராகவும் உணர்வீர்கள்.
யோகப் பயிற்சியின் மூலம் அனைவரிடமும்
அளவு கடந்த அன்பு பெருகும்.
உங்களுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்?
யாரும் ஊக்கப்படுத்தப்படவில்லை, யாரும் பயிற்சிக்கு வரவில்லை என்னும்
இந்த எண்ணத்தை முதலில் கைவிடுங்கள்.
இந்த எண்ணம் உங்கள் மனதில் இருக்கக்
கூடாது. அனைவருக்கும்
தேவையான ஒன்று உங்களிடம் இருக்கின்றதென்று நீங்கள் உணர வேண்டும்.
அவர்கள் தானாக
வருவார்கள். யாரும் ஊக்கப்படுத்தப்படவில்லை, யாரும் வரவில்லை என்று நீங்கள்
நினைத்தால் யாரும் வரமாட்டார்கள்.
டோக்கியோவில் ஒவ்வொரு நாளும் புது
யோகப்பயிற்சி நிலையங்கள் திறக்கப் படுகின்றன. அப்படியென்றால் மக்களுக்கு யோகப்
பயிற்சி தேவைப்படுகின்றது என்று தானே
அர்த்தம்!!!