மனித வாழ்க்கை விலை மதிப்பற்றது

27 ஏப்ரல் 2013 - நுசா தூவா - பாலி  


   
                 
வாழ்க்கைக்கு மூன்று விஷயங்கள் மிகவும் அவசியம். அவை ஆசை, பற்றின்மை மற்றும் கருணை என்பவையாகும். வாழ்க்கைக்கு ஆசை அவசியம்.ஆசை அல்லது விருப்பம் இருந்தால் தான் உன்னால் ஒரு காரியம் செய்ய முடியும். ஒரு இலக்கை அடைய முடியும். வாழ்க்கைக்கு ஆசை அவசியம். வாழ்க்கைக்கு ஆசையுடன் பற்றின்மையும் தேவையாகிறது. ஆசை மட்டும் போதாது. தீவிர ஆசையுடன் பலர் வாழ்கிறார்கள். ஆனால் அந்த ஆசை அவர்களைக் களைப்படைய செய்கிறது. சீக்கிரத்தில் சோர்வடைகிறார்கள். சில சமயம் தீவிர ஆசை நிறைவேறாமல் மன அழுத்தத்தினால் வருந்துகிறார்கள். ஏனென்றால் அவர்களின் ஆசை அதி தீவிரமாக இருக்கிறது. முடிவு அவர்கள் விரும்பிய படி இருப்பதில்லை.

ஆகவே ஒருவருக்கு ஆசையுடன் பற்றின்மையும் இருக்க வேண்டும்.பற்றின்மை ஒரு பாதுகாப்பு வால்வு மாதிரி இயங்குகிறது.பற்றின்மை மன அளவில் ஒரு நடு நிலைமையை கொடுக்கும். உள்ளிழுக்கும் மூச்சு ஆசையையும், வெளிவிடும் மூச்சு பற்றின்மையையும் குறிக்கிறது. ஆசை மற்றும் பற்றின்மையோடு கருணையும் அவசியம். பற்றின்மையால் நீங்கள் தூங்க முடிகிறது. ஆசையினால் நீங்கள் விரும்பியதை அடைய முடிகிறது. கருணையால் உங்கள் தனித்தன்மை ஒளி விடுகிறது. நம் வாழ்க்கைக்குப் போதுமான அளவு ஆசை, பற்றின்மை மற்றும் கருணை இருக்க வேண்டும்.

கருணையை எங்கு காட்ட வேண்டும். எவ்வளவு காட்ட வேண்டும் என்று தெரிந்து கொள்வது அவசியம். உங்கள் குழந்தை பள்ளிக்குச் செல்லமாட்டேன் என்று அழும் போது கருணை காட்டுவது சரியல்ல. சரி! வீட்டிலேயே இரு என்று சொல்லக் கூடாது. குழந்தை பள்ளிக்குச் செல்வது மிகவும் அவசியம். யாராவது தவறான வழியில் செல்லும் போது, போதை மருந்துப் பழக்கம் அல்லது மது பானம் அருந்தும் பழக்கத்தில் ஈடுபட்டு வாழ்க்கையை பாழாக்கிக் கொள்ளும் போது, நீ அவர்களிடம் கருணையுடன் இருப்பேன் என்று சொல்ல முடியாது. அவர்களுடன் கடுமையாக நடந்து கொண்டு கண்டித்து, அவர்களை கெட்ட பழக்கத்திலிருந்து விடுவிப்பது தான் நீ அவர்களிடம் காட்ட வேண்டிய கருணையாகும். இப்படிப்பட்ட கருணையை நாம் வாழ்வில் பின்பற்ற வேண்டும். வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு மேலான ஒன்று உண்டு. உண்மையென்று நாம் நினைக்கும் உலகை விட ஆச்சரியமான தெய்வீகமான ஒரு சக்தி, என்றும் மாறாத பேருண்மை ஒன்று இருக்கிறது. அதை நாம் நம்பும் போது வாழ்க்கைக்கு ஒரு ஆழமான பரிமாணம் கிடைக்கிறது. அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளை விட்டு உன் பார்வையை என்றும் மாறாத பேருண்மையை (பரம் பொருளை) நோக்கித் திருப்பும்.

கற்பனை செய்து பார். இந்த சந்திரன் இங்கு பல கோடி ஆண்டுகளாக இருக்கிறது. இந்த பூமி 1900 கோடி ஆண்டுகளாக இருப்பதாகத் தெரிய வருகிறது. நீ எவ்வளவு ஆண்டுகளாக இங்கிருக்கிறாய்? மிகவும் குறைவான காலமே நீ இங்கிருந்திருக்கிறாய். இருக்க போகிறாய். ஒரு வேளை 50 அல்லது  60 ஆண்டுகள் இருந்திருப்பாய். இன்னும் எவ்வளவு ஆண்டுகள் இருக்கப் போகிறாய்? 30 அல்லது 40 ஆண்டுகள். அவ்வளவு தான். வாழ்க்கை முடிந்து விடும். இருந்தாலும் நம் மனம் சொல்கிறது. நான் எப்போதுமே இந்த இடத்தில் இருந்திருக்கிறேன் என்று சொல்கிறது.

நாம் குழந்தைகள் வளர்வதைப் பார்க்கிறோம். ஆனாலும் நாம் வளராமல் அப்படியே இருப்பதாக உணர்கிறோம். இந்த அனுபவம் எவ்வளவு பேருக்கு இருக்கிறது? குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள். நான் மட்டும் மாறாமல் அப்படியே இருக்கிறேன். எனக்கு வயதே ஆக வில்லை என்று நினைக்கிறோம. இது உண்மை தான். உனக்குள் இருக்கும் ஒன்று, நீ பிறந்திருக்கிறாய். ஒரு நாள் இறக்கப் போகிறாய் என்பதை ஒத்துக் கொள்வதில்லை. உங்களைச் சுற்றி எல்லாமே மாறினாலும், உன் ஆழ்மனதில் ஒன்று (உன் ஆத்மா) என்றுமே மாறாமல், வயதால் பாதிக்காமல் இருக்கிறது. உன் ஆத்மா நீ பிறப்பதற்கு முன்பிருந்தே இருக்கிறது. இந்தப் பிறவி மட்டுமல்ல. நாம் பல முறை பிறந்திருக்கிறோம்.

யாரோ ஒருவர் தன் ஒரு நாள் நிகழ்ச்சிகளை மட்டும் நினைவில் வைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள். அடுத்த நாள் அவர் முந்தைய நாளில் நடந்த நிகழ்ச்சிகளை மறந்து விடுகிறார். ஒருவரின் ஞாபக சக்தி மிகக் குறைவு. காலையிலிருந்து இரவு வரை நடந்த சம்பவங்களை மட்டும் நினைவில் வைக்க முடிகிறது. நேற்று நடந்த எதுவும் அவருடைய நினைவில் இல்லை. அல்லது நாளை வரவே வராது என்று நினைத்துக் கொள்.“அம்னீசியா” என்ற மறதி வியாதி வந்தவர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள். நம்முடைய நிலைமையும் இது போலதான் இருக்கிறது. ஒருவர் அளவுக்கு மீறிக் குடித்திருக்கும் போது நடந்தவை அவருடைய நினைவில் இருப்பதில்லை. அதே போல் நாம் நம்முடைய முந்தைய பிறவிகளைப் பற்றிய அனுபவங்களை மறந்து விட்டோம். மீண்டும் பிறவி எடுப்போம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு இருந்து வருவோம். இந்த உண்மையை நாம் அறியும் போது வாழ்க்கை என்பது ஒரு மகத்தான பரிமாணமுடையது என்பது தெளிவாகும். 

இங்கு “பாலி”யில் சிறிய சிறிய கோவில்களைக் காண்கிறீர்கள். இந்தக் கோவில்களில் எந்த உருவச் சிலைகளும் இல்லை. ஏன் என்று தெரியுமா? இவை நம் முன்னோர்களுக்காக கட்டிய கோவில்களாகும். கோவில்களில் சிறிய பீடம் மட்டும் அமைத்திருக்கிறார்கள். இது நம் முன்னோர்களின் ஆத்மாவுக்காக அமைக்கப்பட்டது. கடவுளர்களுக்கான கோவில்களும் இருக்கின்றன. பல கடவுள்களை வழி படுகிறார்கள். பல கடவுள்கள் வருகிறார்கள். இந்த பீடங்களில் அமர்கிறார்கள். உங்களை ஆசிர்வதிக்கிறார்கள். உங்களைக் காக்கிறார்கள்.மக்கள் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இது நம்பிக்கை மட்டும் அல்ல.உண்மையும் அது தான்.

உண்மைக்குப் பல நிலைகள் உள்ளன. முதல்நிலை ஒளி. எல்லாவற்றிற்கும் மேலான தெய்வம். ஒரே கடவுள். பல அல்ல. ஒன்றே தான். அது தான் பரமாத்மா என்று அழைக்கப் படுகிறது. பரமாத்மாவுக்கு அடுத்த நிலையில் பல தேவதைகள், சக்திகள் அல்லது ஆண் தெய்வங்கள், பெண் தெய்வங்கள் இருக்கின்றன. இந்த தேவதைகளுக்கு அடுத்த நிலையில் பல கண்ணுக்குத் தெரியாத ஆவிகள் இருக்கின்றன.

அடுத்த நிலை நாம் காணும் உலகம். எனவே நாம் காண்பது எல்லோராலும் பார்க்க முடிந்த உலகம். அதற்கு மேல் சுட்சுமமான கண்ணுக்குத் தெரியாத (நல்ல மற்றும் கெட்ட) சக்திகள் இருக்கின்றன. அதற்கு மேல் நம் முன்னோர்கள், தெய்வங்கள் இருக்கிறார்கள். அதற்கு மேல் பரமாத்மா, எல்லாவற்றுக்கும் மேலான, ஒரே கடவுள் இருக்கிறார். அதை நீ எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்.

இவ்வுலகம் பல உறைகள் உள்ள உண்மையாகும். நீ இவ்வுடலை விட்டுப் போகும் போது உன் ஆவி (உயிர்) மற்றொரு இடத்துக்குப் போய் சில காலம் தங்கும். இன்னொரு உடலில் மீண்டும் சென்றடைந்து பிறக்கும். மனிதப் பிறவி அடைவதற்கு அரியது. ஏனென்றால் மனிதப் பிறவியில் தான் பேரொளியான பரமாத்மாவுடன் நாம் கலக்க வாய்ப்பிருக்கிறது. மனித வாழ்க்கையில் நீ அன்பை வெளிப்படுத்த முடியும். மனித உடல் கிடைத்தற்கு அரிய ஒன்று.

நான் சொன்னது போல் இங்கு உருவ சிலைகள் இல்லாத பல சிறுசிறு கோவில்கள் உள்ளன, கடவுளுக்கு உருவம் இல்லை என்பதை இவைகள் உணர்த்துகின்றன.அதே சமயம் தெய்வங்கள் இந்தக் கோவில்களில் இருப்பதை நாம் உணர முடியும். இது நம்முடைய ஞாபக சக்தி போலிருக்கிறது. நீ உன் முன்னோர்களைப் பற்றி நினைக்கும் போது (இறந்து போனவர்களை பற்றி நினைக்கும் போது) உன் மனதில் அவர்கள் இன்றும் வாழ்கிறார்கள். இல்லையா? அவர்கள் இன்னும் உன்னோடு இருப்பது போல் நீ உணர்கிறாய். அவர்களோடு கழிந்த நிகழ்ச்சிகள் உன் நினைவுக்கு வருகிறது. அதே போல் பல விதமான தேவதைகள் (ஆண், பெண் தெய்வங்கள்) நம் உடலின் பல பாகங்களில் இருக்கிறார்கள்.

உடலின் ஒவ்வொரு பகுதியும் ஒரு தெய்வத்தால் ஆளப்படுகிறது. அத்தெய்வங்களின் நினைவு நமக்கு வரும்போது உடலின் அந்த பாகத்தில் உணர்ச்சி ஏற்படுகிறது. இப்படிப்பட்ட நம்பிக்கை உலகின் பல்வேறு பாகங்களில் இன்றும் இருக்கிறது. தென் அமெரிக்கா, மெக்ஸிகோ, ஆசியா, மங்கோலியா வரை இப்படிப்பட்ட நம்பிக்கை இருக்கிறது. வெறும் நம்பிக்கை மட்டும் போதாது.

நீ தியானம் செய்யும் போது என்ன நடக்கிறது என்று உனக்குத் தெரியுமா? நீ உண்மையின் அடுத்த நிலைகளைத் தொடுகிறாய். உன் மனம் சலனமில்லாமல் இருக்கும் போது, தியானம் நிகழும் போது, உன் உடலில் உள்ள எல்லா செல்களையும் தூய்மைப்படுத்துவது மட்டுமல்லாமல், உன்னைச் சுற்றி ஆக்க பூர்வமான சக்திகளைப் பரப்புகிறாய். உன் தியானத்தின் மூலம், இறந்துபோன முன்னோர்களின் ஆத்மாவுக்கு அமைதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.


நீ மௌனத்தில் இருக்கும் போது, இவ்வுலக விஷயங்களில் உன் மனம் செல்லாமல் அமைதியாக இருக்கும். உடலும் மனமும் தூய்மையடையும். இந்த சமயத்தில் உன் மனதில் சில எண்ணங்கள் எழும். கடந்த கால நிகழ்ச்சிகளின் நினைவு உன்னை பாதிக்கக் கூடும். கவலை வேண்டாம். பயப்பட வேண்டாம். நீ தியானத்தில் அமர்ந்திருப்பதே போதும். எது நிகழ்ந்தாலும் அது நல்லதே. பழைய நினைவுகள் உன்னைத் தொந்தரவு செய்தால் வருந்த வேண்டாம். அவை வந்த மாதிரியே போய் விடும். எது எப்படியானாலும் மௌனம் காப்பது மிக மிக விலை மதிப்பில்லாதது. உனக்கு மட்டுமல்லாமல் கண்ணுக்குத் தெரியாத சூட்சும உலகுக்கும் நல்லது. நீ மௌனமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், தியானத்தில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், உன்னால் பரவும் ஆக்க பூர்வமான சக்திகள் உலகுக்கு நன்மை அளிக்கும். பௌர்ணமி அன்று சமுத்திரத்துக்கு அருகில் தியானம் செய்வது மிகவும் நல்லது. மனம் பல விதமான எண்ண அலைகளால் சஞ்சலமாக இருக்கும் போது, மீண்டும் மீண்டும் நீ உலக காரியங்களிலிருந்து விடுபட்டு அமர்ந்து தியானத்தில் மூழ்கும் போது, கலக்கம் மறைந்து, மனம் தெளிவடையும். அமைதி கிடைக்கும்.