புராதன அறிவியலின் ரகசியம்....................


ஏப்ரல் - 8 - 2013 - பூன், வடக்கு கரோலினா

கே: குருதேவ், உங்களைப் போன்ற மகாத்மாக்கள் எவ்வளவு அடிக்கடி இவ்வுலகத்துக்கு வருகின்றனர்? எப்போது வருவதென்று எப்படி முடிவெடுக்கின்றனர்?

குருதேவ்: அது ரகசியம்!

கே: குருதேவ், சப்தரிஷிகளைப் பற்றி கூறமுடியுமா?

குருதேவ்: இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒரு தாளகதி உண்டு, அதன் பெயர் சண்டா. எல்லாமே அலை வடிவில் இருக்கின்றது. சில குறிப்பிட்ட அலை வடிவங்களை உள்வாங்கக்கூடியவர்கள் ரிஷிகள் எனப்பட்டனர். ரிஷி என்பது ஒரு பதவி, இது ஒருவரின் பெயர் அல்ல, ஆயிரத்திற்கும் மேலான ரிஷிகள் இருக்கின்றனர். இவற்றில், ஏழு ரிஷிகள் மிக முக்கியமானவர்கள், அவர்கள் ஏழு சக்கரத்தோடு தொடர்புடையவர்கள்.

ரிஷிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்து வருகிறார்கள். அவர்களைப் பற்றி பல கதைகள் உண்டு. ஒரு ரிஷி என்பவர் ஒரு துறைத் தலைவர் அல்லது ஒரு பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் போன்றவர். அவர்களும் கூட தமது துறையில் தகுந்த பயிற்சி எடுத்து அந்த மரபு வழியின் ஒரு பகுதியானவர். நீங்கள் எப்படி, ‘நான் ஒரு ஹார்வர்ட் பல்கலை கழகத்தின் மாணவன்’, அல்லது, ‘ஸ்டான்போர்ட் பல்கலையில் பட்டம் பெற்றவன்’, என்று கூறுகிறீர்களோ, அப்படியே இங்கு ‘கோத்ரம்’ என்ற பிரிவு இருந்தது.

‘கோ’ என்றால் அறிவு, ‘கோத்ரம்’ என்றால் ஒரு குறிப்பிட்ட அறிவுத் துறையைச் சேர்ந்தவன் என்று பொருள். இப்போது எப்படி வித விதமான இரத்தப் பிரிவு இருக்கிறதோ, அப்படியே கோத்திரங்கள் அல்லது குறிப்பிட்ட அறிவுப் பிரிவைச் சேர்ந்த குடும்பங்கள், அல்லது ரிஷி மரபு வழியினர் என்று கூறலாம்.

கே: சப்தரிஷிகளின் பெயர்கள் என்ன?

குருதேவ்: சப்த அல்லது ஏழு ரிஷிகளின் பெயர்கள், கஷ்யபர், அத்ரி, வசிஷ்டர், பரத்வாஜர், கௌதமர், ஜமதக்னி மற்றும் விஸ்வாமித்ரர்.



கே: சிரார்த்தம் செய்வதின் முக்கியத்துவம் என்ன?

குருதேவ்: அக்கறை சேர்ந்தவர்களின் நினைவாக, நம்பிக்கையோடு செய்யும் நற்காரியங்கள் சிரார்த்தம் எனப்படும். ஏழைகளுக்கு உணவளிப்பது, அவர்களை பார்த்துக் கொள்வது, அவர்களுக்குப் பரிசளிப்பது என்று ஆரம்பித்தது இந்த மரபு. ஆனாலும், அமரரானவர்களின் நினைவாக, அவர்கள் பெயரில் செய்யும் எந்த விதமான நன்கொடைகளோ, நற்காரியங்களோ, எல்லாமே சிரார்த்தம் எனப்படும். அவர்கள் இவ்வுலகில் இல்லையென்றாலும் அவர்களுக்கு நன்றி கூறுவதே இதன் நோக்கம். அமரரானவர்களுக்கு சடங்குகள் செய்யும் வழக்கம் உலகெங்கும் இருக்கிறது. சிங்கப்பூரில் விடுமுறையுடன் இது ஒரு விழாவாகவே கொண்டாடப்படுகிறது. சீனாவில் கூட இது ஒரு பெரிய விஷயம்.

சிங்கப்பூரில், தங்கள் முன்னோர்கள் நினைவாக என்னவெல்லாம் செய்கிறார்களோ அவை அசீர்வாதங்களாக தங்களுக்கு கிடைக்கும் என்பதே. எனவே தங்களுக்குத் தேவையான ஆசிகளை பேப்பரில் எழுதி அவற்றை எரித்துவிடுவார்கள். நெருப்பில் போடுபவை எல்லாம் தங்களுக்கு ஆசீர்வாதமாய் திரும்பக் கிடைக்கும் என்பதே அவர்கள் நம்பிக்கை. உதாரணமாக தமக்கு ஒரு காரோ அல்லது குளிர்சாதனப் பெட்டியோ வேண்டுபவர்கள், பெரிய அளவில் காகிதத்தால் கார் அல்லது குளிர்சாதனப் பெட்டி செய்து தெருவில் வைத்து அவற்றை எரிப்பார்கள். மில்லியன் டாலர் பணம் வேண்டுபவர்கள், ஒரு மில்லியன் டாலர் போலி அல்லது மாதிரிப் பணத்தை எரிப்பார்கள். மில்லியன் டாலர் வேண்டி மனிதர்கள் எப்படியெல்லாம் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள் என்பது வியப்பாயிருக்கிறது! எப்படியோ, இது அவர்கள் மரபு வழிச் சடங்கு.

இந்தியாவிலும் இது போன்று நடக்கிறது. பகவதி அம்மனையோ அல்லது பராசக்தியையோ வேண்டிக் கொண்டு தங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணை கிடைக்க 21 தேங்காய்களை உடைப்பார்கள். அவர்கள் சொல்வார்கள், ‘நான் உனக்கு 21 தேங்காய்கள் உடைக்கிறேன், எனக்கு ஏற்ற வாழ்கைத் துணையைக் கொடு’. என்னவோ பராசக்தி இந்த 21 தேங்காய்களை எதிர்பார்ப்பது போல! அறியா மக்கள், தமக்கு ஏதாவது கிடைப்பதற்கு தாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். இது மன்னத் (வேண்டுதல்) என்று அழைக்கப் படுகிறது, அதாவது ஒன்று கிடைக்க வேண்டுமானால் ஒன்றைச் செய்ய வேண்டும்.

கே: எவ்வளவு காலத்திற்கு சிரார்த்தம் செய்ய வேண்டும்?

குருதேவ்: முற்காலத்தில், ஆத்மா மறுபிறவி எடுக்கும்வரை சிரார்த்தம் செய்து வந்தார்கள். எனவே, 15 ஆண்டுகள் சிரார்த்தம் செய்து பின்னர் நிறுத்திக் கொள்வார்கள், ஏனென்றால் அவர்களுக்கு எப்போது மறுபிறவி எடுக்கும் என்பது தெரிந்திருந்தது. இப்போது நமக்குத் தெரிவதில்லை அதனால் செய்து கொண்டே இருக்கிறோம்.

கே: இந்த சடங்குளில் சிலவற்றின் முக்கியத்துவம் என்ன?

குருதேவ்: பிராம்ண வீடுகளில், சிரார்த்தம் ஒரு நீண்ட விரிவான சடங்கு. பெண்கள் காலையிலிருந்து உணவு தயாரிப்பதில் ஈடுபடுவார்கள், சில குறிப்பிட்ட உணவு வகைகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு. பிறகு பண்டிதர் வருவார், அந்த ஆத்மாக்களை அழைத்துவர தேவதைகளுக்கு பூஜை செய்வார்.

மூன்று தலைமுறை முன்னோர்களை நினைத்து, மூன்று சோற்று உருண்டைகளை காகத்திற்கு உண்ண வைப்பார்கள். காகம் எந்த திசையிலிருந்து வருகிறது, எப்படி உண்கிறது, எங்கு போகிறது, அது திருப்தியாயிற்றா என்றெல்லாம் காத்திருந்து கவனிப்பார்கள். டர்ராட் அட்டைகளைப் படிப்பது போல, சில செயல்களைக் கொண்டு என்ன நடந்தது என்ன நடக்கிறது என்று அனுமானிப்பார்கள். சற்று சிக்கலான விஷயம் சில நேரங்களில் மிக சிக்கலான விஷயம். முக்கிய விஷயம் உணவை தயாரிப்பதும் அதை எல்லோருக்கும் கொடுப்பதும் ஆகும். இவை எல்லாம் மனிதனால் உண்டாகப் பட்டது என்றே நினைக்கிறேன். சில அறிவியல் பூர்வமாகக் கூட இருக்கலாம். அதை நாம் பார்க்க வேண்டும்.

எள்ளும் தண்ணீரும் அளிக்கும் திள தர்ப்பணம் என்னும் ஒரு சடங்கு இருக்கிறது. நான் நினைக்கிறேன், இந்த சடங்குகளின் முக்கியத்துவம் என்னவாக இருக்கும் என்றால், இதை அமரரானவர்களிடம் சொல்வது தான். அமரரானவர்க்களே! உங்கள் ஆசைகள் உங்கள் மனதில் இன்னும் பற்றிக் கொண்டிருந்தால், அதை அப்படியே விட்டுவிடுங்கள். அவையெல்லாம் இந்த எள்ளைப் போல மிகச் சிறியதும் முக்கியமற்றதும் ஆகும். நாங்கள் உங்கள் குழந்தைகள் இதை நிறைவேற்றுவதற்கு இங்கு இருக்கிறோம். நீங்கள் இதை விட்டுவிட்டு மேலே செல்லுங்கள். 

இந்தியாவில், எள் என்றால் ஆகச் சிறியது, தர்ப்பணம் என்றால் நிறைவேற்றுவது, திருப்தி என்றால் நிறைவு பெறுவது. அமரர்களிடம் மூன்று முறை சொல்கிறோம், ‘நிறைவாகுங்கள்’. இவற்றின் கருத்து ‘இந்த உலகை விட்டுவிட்டீர்கள். அங்கே சென்றபின் அலைய வேண்டாம். ஏதாவது அதிருப்தி இருந்ததென்றால் அதை விட்டுவிடுங்கள். மேலே செல்லுங்கள். இந்த உலகம் மிகப் பெரியது, ஏராளம் இங்கு உண்டு, நீங்கள் ஒளியைச் சேருங்கள், பந்தத்தை இங்கேயே விட்டுவிடுங்கள். உங்களுடைய ஆசைகள் ஏதாவது இருக்கிறதென்றால், அதை நிறைவேற்ற உங்கள் குழந்தைகளாகிய நாங்கள் இங்கு இருக்கிறோம். நீங்கள் நிறைவாக இருங்கள். இந்த மந்திரங்கள் மிக நன்றாக அழகாக இருக்கும்.

கே: இறுதிச் சடங்குகளின் முக்கியத்துவம் என்ன?

குருதேவ்: இறுதிச் சடங்குகளுக்கும் காரணங்கள் உள்ளன, மிக அருமையான சடங்கு. சவத்தின் காதுகளில் ஒரு மந்திரம் சொல்லப் படுகிறது. ஏனென்றால் அந்த ஆத்மா உடனே சென்று விடாது, அங்கே சற்று நேரம் தங்கி இருக்கும். அவற்றுக்குச் சொல்லப்படுவது ‘பாருங்கள், இந்த உடம்பு அதன் மூல பொருட்களுடன் சென்று சேரப்போகிறது. நீங்கள் அதுவல்ல. நீங்கள் ஒளி. நீங்கள் மேலே செல்லுங்கள்.’மகனோ அல்லது மகளோ இதைச் சொல்கிறார்கள். இன்றைய நாளில், இந்த சடங்குகளில் ஆண்களின் ஆதிக்கம் அதிகமாய் இருக்கிறது.

இந்தியாவில் ஒரு நம்பிக்கை உண்டு. விடுதலை பெறுவதற்கு மகன் வேண்டும், ஏனென்றால் மகன் தான் இறந்தபின் இந்த மந்திரங்களைச் சொல்லி ஞானம் தந்து விடுதலை பெற்றுத் தருவான். மகன் இல்லையென்றால் இந்த விடுதலை கிடைக்காது! ஆனால், இது உண்மையல்ல! பண்டைய காலத்தில், பெண்களுக்கும் இந்த உரிமை இருந்தது.

வாழும் கலை நிறுவனம், பெண் சிசு கொலையை எதிர்த்து போராடிவருகிறது. UNICEF மற்றும் ஐக்கிய நாடுகளின் குடும்ப நல நிதி நிறுவனங்களுடன் சேர்ந்து ஆண் பெண் சம உரிமைக்காக வேலை செய்கிறோம். பண்டைய இந்து மத நூல்கள் ஆண் பெண் சமம் என்பதை வலியுறுத்துகிறது. ஆனால் மத்திய காலகட்டத்தில் இது மாற்றம் அடைந்திருக்கிறது. பாலி யில், இன்றும் பெண் பூசாரிகளைக் காணலாம். அங்கு உள்ள இந்து மத கலாசாரம் இந்தியாவில் பின்பற்றப்படுவதைவிட பழமையானது. இந்தியாவில் இந்த வழக்கம் மறைந்து விட்டது. பெண்கள் பூசாரிகளாக அனுமதி இல்லை. இறந்தவர்களிடம், ‘திருப்தியாகுங்கள்! நிறைவடையுங்கள்! அங்கே ஆனந்தமாய் இருங்கள்!’ என்று சொல்வது அருமையாக இல்லை? இதை மனதிலே சொன்னால் கூட இது ஒரு மிக மிக அருமையான செய்தி. சற்று அதிக புத்திசாலிகளாய் இருப்பவர்கள் மனதில் செயல்படுவதே போதும்.

மக்களில் புத்திசாலித்தனம் சற்று குறைவாக இருப்பவர்களுக்கு வெளிப்படையான செயல் வேண்டும். புத்திசாலிகளாய் இருப்பவர்களுக்கு நீங்கள் மலர் கொண்டுவரத் தேவையில்லை. ஆனால் சற்று குறைவாக இருப்பவர்களுக்கு வெளிப்படையான செயல் தேவைப்படும். புத்திசார்ந்த முதிர்ச்சி இல்லாதவர்கள் செயலில்லாமல் வாழ முடியாது. எனவே செயல்களாலும் இந்த சடங்குகளை அவ்வளவு அர்த்தமுள்ளதாக்கி விட்டனர். எள்ளை கைகளில் எடுத்து அதன்மீது இறந்தவரை நினைத்து தண்ணீர் விடுங்கள். அவ்வளவுதான். இதுதான் சிரார்த்தம் என்பது, வேறு எதுவும் இல்லை.

பின்னாளில், பண்டிதர்களும் பூசாரிகளும், ‘எப்படியும் மக்கள் ஏதாவது தானம் செய்கிறார்கள், இரண்டையும் சேர்த்தல் என்ன?’ என்று நினைத்தனர். எனவே அந்த எள் மீது இரண்டு ரூபாய் நாணயத்தை வைக்கச் சொன்னார்கள். அந்த நாணயத்தை பின்னர் தாங்கள் எடுத்துக் கொண்டனர். நாணயத்தைப் பற்றி எதிலும் சொல்லப்படவில்லை! எள்ளைப் பற்றி மட்டும்தான்! ‘திருப்தியடையுங்கள்!  எல்லா ஏக்கங்களையும் விட்டுவிடுங்கள்; ஏதாவது ஆசைகள் இன்னும் இருந்தால், அதை என்னிடம் விட்டுவிடுங்கள்,’ என்ற இந்த உணர்வோடு இதை செய்யுங்கள் போதும்.

கே: ஞானம் பெற்ற பேராசான்களின் விருப்ப இடமாக ஏன் இந்தியா இருந்து வருகிறது? இந்த இடத்தில் ஏதும் இரகசியம் இருக்கிறதா?

குருதேவ்: இந்தியாவில் மட்டுமே அப்படிப்பட்ட பேராசான்கள் இருந்தார்கள் என்பது சரியல்ல. இல்லை! கலிபோர்னியா என்ற வார்த்தை கபில ரிஷியின் பெயரிலிருந்துதான் வந்தது. ஸ்ரீ கிருஷ்ணரின் ஒரு முந்தைய பிறவிதான் கபிலர். கலிபோர்னியாவில் பிறந்து வெகு காலம் அங்கேயே வாழ்ந்தவர். அந்த இடம் கபிலாரண்யம் எனப்பட்டது. அந்த இடம் இந்தியாவிலிருந்து 12 மணி நேர வித்தியாசம் கொண்டது என்று பண்டைய நூல்களில் கூறப்பட்டிருக்கிறது. கனடாவில் உள்ள நோவா ஸ்காடயா என்பது ஒரு சமஸ்கிருத வார்த்தையே. நவஸ்கோஷா என்றால் 9 மணி நேர வித்தியாசம் கொண்டது என்று பொருள். ஒரு கோஷம் என்பது ஒரு மணி நேர தூரம். நவ கோஷ என்றால் 9 மணி நேர வித்தியாசம், அந்த இடம் மிகச் சரியாக 9 மணி நேர வித்தியாசத்தில் உள்ளது.

கே: குருதேவ், இந்தப் பெயர்களுக்கெல்லாம் மூலம் சமஸ்க்ருதம் தான் என்று கூறினீர்கள். இவற்றை தவிர சமஸ்க்ருதத்தில் இருந்து வந்த பெயர்கள் வேறு என்ன இருக்கின்றன?

குருதேவ்: எல்லா மாதங்களின் பெயர்களும் சமஸ்க்ருதத்தில் இருந்துதான் வந்தன என்று தெரியுமா? சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை, சூரியன் மேஷ ராசியின் முதல் புள்ளிக்கு வருவதை தான் புத்தாண்டாகக் கொண்டாடிவந்தனர். ஆனால், இலண்டனின் அரசரான ஜார்ஜ், ஜனவரி 1ஆம் தேதியை புத்தாண்டாக கொண்டாட முடிவு செய்தார். அதை புத்தாண்டாக அவர் அறிவித்திருந்தாலும், மக்கள் அதை பின்பற்றாமல், மார்ச் மாதக் கடைசி அல்லது ஏப்ரல் முதல் நாளையே புத்தாண்டாகக் கொண்டாடிவந்தனர். அவ்வாறு மக்கள் கொண்டாடுவதை நிறுத்தச் செய்ய ஏப்ரல் முதல் தேதியை முட்டாள் தினமாக அறிவித்தார். மாதங்களின் பெயர்களின் பொருளை இப்போது பார்போம்.

க்பாகன் (fagun) என்றால் கடைசி (fag end) என்று பொருள்; அதுவே பெப் (பெப்ரவரி) கடைசி மாதம் என்ற பொருளில் அழைக்கப்பட்டது. மார்ச் என்றால் புதிதாய்த் தொடங்குவது; மேலே செல்வது; புது வருடத்தின் முதல் மாதம். ஆகஸ்ட் என்பது ஷஷ்டா, ஆறாவது மாதம். அம்பர் அன்றால் வானம்; சப்த் என்றால் ஏழு, சப்டம்பர் என்றால் ஏழாவது வானம். அக்டோபர் என்பது அஷ்டா; எட்டாவது வானம். நவம்பர், நவ என்றால் ஒன்பது, ஒன்பதாவது வானம். டிசம்பர், தஸ் என்றால் பத்து, பத்தாவது வானம், பத்தாவது மாதம்.

ஜனவரி பதினோராவது மாதம், பெப்ரவரி பனிரண்டாவது மாதம். முதல் முதலில் நாட்காட்டி இப்படித் தான் இருந்தது. இந்திய, இரானிய, ஆப்கானிய மற்றும் எகிப்திய நாட்காட்டிகள் இதற்கு தக்கவே இருக்கிறது. சீனத்து புது வருடம் கூட பெப்ரவரி கடைசியில் அல்லது மார்ச் முதலில் தான் இருக்கிறது. தேதிகள், கிழமைகள் மற்றும் மாதங்கள் எல்லாம், சூரிய அல்லது சந்திரனின் அமைப்பை ஒட்டியே வடிவமைக்கப் பட்டிருக்கிறது. சூரியனை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டியில், ஆங்கில நாட்காடியைப் போல லீப் நாள் கூட இருக்கிறது. சந்திரனை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டியில், பதிமூன்றாவதாக வரும் லீப் மாதம் கூட இருக்கிறது. இது நான்கு வருடத்திற்கு ஒருமுறைதான் வரும்.

இந்த வருடம் லீப் மாதம் உண்டு, எனவே சூரியனை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டியும் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டியும் கிட்டத்தட்ட ஒன்றாக வரும். இந்த வருடம், சந்திரன் மேஷத்தின் முதல் புள்ளியைத் தொடும் நாளான ஏப்ரல் 10, சந்திரனின் அமைப்புப்படி புத்தாண்டு. சூரியன் மேஷத்தின் முதல் புள்ளியைத் தொடும் நாளான ஏப்ரல் 13, சூரியனின் அமைப்புப்படி புத்தாண்டு.

சூரிய சந்திரனின் அசைவைக் கொண்டே உங்கள் மூச்சு கூட இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இது ஒரு அழகான அறிவியல். சந்திரனை அடிப்படையாகக் கொண்ட மாதத்தின் முதல் நாள் உள்ள உங்கள் மூச்சின் அசைவு, சூரியனை அடிப்படையாக கொண்ட மாதத்தின் முதல் நாளில் உள்ளதை விட வித்தியாசமானது. உங்கள் மூச்சு அதை அடிப்படையாகக் கொண்டது என்பதை பார்ப்பீர்கள், வலது நாசியும் (சூர்ய நாடி) இடது நாசியும் (சந்திர நாடி) கூறும். அண்டமும் பிண்டமும் ஆச்சரியப்படத்தக்க வகையில் ஒன்றோடொன்று தொடர்புடையது.

கே: குருதேவ், வானம் ஒன்றுதான். ஏழாவது வானம், எட்டாவது வானம் என்பதின் பொருள் என்ன?

குருதேவ்: பிரபஞ்சத்தில் 360 பாகைகள் (degrees) உண்டு. அவற்றை பனிரண்டு பாகங்களாகப் பிரித்து, ஒவ்வொன்றும் ஒரு குறியீட்டில் அறியப்படுகிறது. இதுவே இராசிகள் எனப்படும். பூமி நகர்கையில், சூரியன் ஓவ்வொரு பாகையில் இருப்பதாக அவதானிக்கப்படுகிறது. அந்த ஒவ்வொரு பகுதியும் ஒரு வானம். பாருங்கள், நட்சத்திரங்கள் ஒரே இடமாக இருக்கின்றன, ஆனால் பூமி நகர்கிறது. பூமி சூரியனைச் சுற்றுகையில், பூமி நகர்வதை அவதானித்தால், சூரியனை வெவ்வேறு இடங்களில் காணலாம். அது மேஷம் என்று எடுத்துக் கொள்ளுங்கள். பூமி மேலும் நகர்கையில் அது மகரத்தில் இருக்கும். அதற்கு அப்பால் நகரும்போது கன்னியில் இருக்கும். எனவே இதை தான் ஏழாம் வானம் எட்டாம் வானம் என்று அழைக்கிறார்கள்.

கே: வாரத்தில் உள்ள கிழமைகள் எதை அடிப்படையாகக் கொண்டது?

குருதேவ்: வாரத்தில் உள்ள கிழமைகள், பெருங் கிரகங்களை கொண்டு அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு கிரகத்தை கொண்டு அழைக்கப்படுகிறது. சூரியனை ஞாயிற்றுக் கிழமையும், சந்திரனை திங்கள் கிழமையும், செவ்வாய் கிரகத்தை செவ்வாய் கிழமையும், புதன் கிரகத்தை புதன் கிழமையும், வியாழன் கிரகத்தை வியாழக் கிழமையும், வெள்ளி கிரகத்தை வெள்ளிக் கிழமையும், சனி கிரகத்தை சனிக்கிழமையும் குறிக்கிறது.

கே: கிரகங்கள் எப்படி நம் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன?

குருதேவ்: அண்டத்திற்கும் பிண்டத்திற்கும் பெரும் தொடர்பு உள்ளது. ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட தானியம், வண்ணம், வடிவம், பறவை மற்றும் விலங்கு இவற்றோடு தொடர்புடையதாய் இருக்கிறது. இவையெல்லாம் தொடர்புடையது; உடம்பின் ஒரு குறிப்பிட்ட பகுதியோடு கூட தொடர்புடையது. உங்கள் விரல்கள் கூட! ஒவ்வொரு விரலும் ஒரு கிரகத்தோடு தொடர்பு உடையது என்பது உங்களுக்குத் தெரியுமா? அண்டத்தையும் பிண்டத்தையும் இணைக்கும் இது ஒரு அற்புத அறிவியல். உதாரணமாக, செவ்வாய் கிரகம் ஈரல் மற்றும் பித்தத்துடன் தொடர்புடையது, பித்தம் கொண்டைக் கடலையுடன் தொடர்புடையது. அதிகம் கொண்டைக் கடலை சாப்பிட்டால் பித்தம் அதிகமாகும். எனவே, பித்தம், கொண்டைக் கடலை மற்றும் செவ்வாய் கிரகம் எல்லாம் தொடர்புடையது.

ஆடு செவ்வாய்க் கிரகத்தோடு தொடர்புடையது; அது சூட்டை அளிக்கும்; கம்பளியைத் தரும். அப்படிதான் ஆடு செவ்வாய்க் கிரகத்தோடு தொடர்புடையதாய் இருக்கிறது. அதைப் போல, சனி கிரகம் கருப்பு எள், காகம் மற்றும் உங்கள் பற்களோடு தொடர்புடையது. மருத்துவ ஜோசிடம் என்று ஒன்று இருக்கிறது, அதில் உள்ள கணக்கு மற்றும் படத்தின் படி, உங்களுக்கு என்ன வியாதி வரக்கூடும் அல்லது பாதிப்புக்கு உள்ளாகக் கூடும் என்று அறியலாம். ஜாதகப்படி கூட இதை அறியலாம். துரதிருஷ்டவசமாக, இதில் பெரும்பகுதி கல்வியை நாம் இழந்து விட்டோம். இவை பனை ஓலை நூல்களில் எழுதப்பட்டிருந்ததால், பாதிக்குமேல் அரிப்புக்குள்ளாகி காணாமல் போய்விட்டது, சிலவற்றில் ஓட்டை விழுந்துவிட்டது. சிலவற்றை சரிவர பாதுகாக்கவில்லை. இருந்தும்கூட சில பகுதிகள் இன்னும் இருக்கிறது. 

ஜோதிடம் ஒரு வியக்கததக்க அறிவியல்,ஆனால் ஜோதிடர்கள் இதை சரிவர கற்கவில்லை. ஜோதிடர்களைப் பற்றி எனக்கு தனிப்பட்ட கருத்து உண்டு. ஆனால், ஜோதிடம் பற்றி, எப்படி இந்தத் தொடர்புகள் அவ்வளவு அறிவியல் பூர்வமானது என்பது எனக்குத் தெரியும். இது மிக அமைப்பானது; தொடர்புகள் அறிவியல் பூர்வமாக அமைக்கப்பட்டுள்ளது. பாருங்கள், கண்கள் சூரியனோடு தொடர்புடையது. அதைப்போல, வியாழன் மூக்கோடு தொடர்புடையது. பற்கள் சனி கிரகத்தோடும், கன்னம் வெள்ளி கிரகத்தோடும் தொடர்புடையது.
நெற்றி புதனோடு தொடர்புடையது. இது ஒரு அழகான அறிவியல், விஷயங்களை கச்சிதமாக அறிந்து கொள்ளலாம். ஒருவர் முகத்தை பார்த்து ஜாதகம் எழுதலாம். ஆனால், இந்த அறிவியல் பெரும்பாலும் தொலைந்து போய்விட்டது. உதாரணமாக, முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு வாஸ்து சாஸ்திரம் பற்றி யாரும் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. இந்தியாவில் கூட யாரும் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை, ஆனால் இப்போது, இது பரவியிருக்கிறது.

இதை மகரிஷி மகேஷ் யோகி அவர்கள்தான் முதலில் திரும்பக் கொண்டு வந்தார். வாஸ்து சாஸ்திரத்தை பரப்பும் யோசனை அவருடையது தான். அதன் பிறகே உலகில் இது பரவ ஆரம்பித்தது. அதற்கு முன் கோவில் கட்டும் ஸ்தபதிகள் மட்டுமே இதைப் பற்றி அறிந்திருந்தனர். வாஸ்து சாஸ்திரத்தில் கூட பல புத்தகங்கள் இல்லை. மேலும், வாஸ்து சாஸ்திரத்தை எல்லா இடத்திலும் ஒரே மாதிரி பயன்படுத்த முடியாது, இந்தியாவில் உள்ளத்து, அமெரிக்காவிலும் ரஷியாவிலும் வேறாக இருக்கும்.

கே: சாக்கலேட் சாபிட்டால் நாடிகள் அடைத்துக் கொள்ளுமா?

குருதேவ்: எனக்கு சாக்கலேட் பற்றி தெரியாது. யாராவது சத்துணவு நிபுணர்களைக் கேளுங்கள். எதையுமே அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லதல்ல. எப்படியோ, எனக்கு சாக்கலேட்டோ அல்லது எந்த வித இனிப்போ எடுத்து வராதீர்கள். நீங்கள் புன்னகைத்தாலே போதும். நிறைய பேர் சாக்கலேட், இனிப்புகள் போன்றவற்றை எடுத்து வருவதை நான் காண்கிறேன். இதிலெல்லாம் ஏன் பணத்தை விரயம் செய்ய வேண்டும்? வேறு நல்ல விதமாக அதை உபயோகிக்கலாம்.

இந்தியாவில், ‘எனக்காக இனிப்பு எடுத்து வந்தால், நான் அவ்வளவு இனிமையாய் இல்லை என்று கூறுவது போல் உணர்கிறேன். நான் இன்னும் இனிமையாய் இருக்க வேண்டும். பூக்கள் கொண்டு வந்தால் நான் இன்னும் மலரவில்லை என்று உணர்கிறேன். இன்னும் மலர வேண்டும்.’ இந்த செய்தியை எனக்குக் கூற வேண்டும் என்றால் எனக்கு இனிப்புகளும், பூக்களும்,மாலைகளும் கொண்டு வாருங்கள்.  இல்லையென்றால் வெறும் புன்னகையோடு வாருங்கள். மலர்களிலும் இனிப்பிலும் செலவு செய்யும் பணத்தை, வேறு நல்ல தொண்டு மற்றும் சேவைகளில் உபயோகிக்கலாம்.