07 – 2013 – ஏப்ரல், பூன், வடகரோலினா
இவை அனைத்துமே நாம் அணிந்திருக்கும் தொப்பியை மாற்றுவது போன்றது தான். எல்லாவற்றையும் நிகழ வைக்கின்ற அதற்கு வெற்றி’ என்று பாராட்டி கொண்டே உங்கள் தொப்பிகளை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால், எல்லாவற்றையும் நிகழ வைக்கின்ற இதற்கு வெற்றி என்று பாராட்டலாம். அதற்கு என்று சொல்லும் போது அது வெளியே தூரத்தில் இருப்பது போல் தோன்றக் கூடும். இதற்கு என்று சொல்லும் போது, இங்கே இருப்பது என்று பொருள்
இவை அனைத்துமே நாம் அணிந்திருக்கும் தொப்பியை மாற்றுவது போன்றது தான். எல்லாவற்றையும் நிகழ வைக்கின்ற அதற்கு வெற்றி’ என்று பாராட்டி கொண்டே உங்கள் தொப்பிகளை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால், எல்லாவற்றையும் நிகழ வைக்கின்ற இதற்கு வெற்றி என்று பாராட்டலாம். அதற்கு என்று சொல்லும் போது அது வெளியே தூரத்தில் இருப்பது போல் தோன்றக் கூடும். இதற்கு என்று சொல்லும் போது, இங்கே இருப்பது என்று பொருள்
கே: குருதேவ்,
நீங்கள் பொருட்படுத்தாமல் விட்டுவிடுதல் பற்றி பேசியிருக்கின்றீர்கள். ஆனால் ஒருவர்
மீண்டும் அதே தவறை செய்து கொண்டிருந்தால் என்ன செய்வது? முதல் முறை,,இரண்டாவது முறை
என்றால் பரவாயில்லை என்று விட்டு விடலாம். மூன்றாவது முறை என்றால் விட்டுவிட முடிவதில்லை.
நான் அவர்களிடம் சொல்லவேண்டுமா? பாடம் கற்பிக்க வேண்டுமா? வேறு என்ன செய்ய வேண்டும் குருதேவ்?
குருதேவ்: ஆம்.
நீங்கள் அவர்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும், பாடம் கற்பிக்க வேண்டும்; ஆனால் உங்கள்
மனதிலேயே இருந்து கொண்டிருக்க கூடாது. அதனை மனதிலிருந்து வெளியேற்றி விடவேண்டும். விட்டுவிடுதல்
என்பது தவறுகளை பார்த்துக்கொண்டு வெறுமனே அமைதியாக இருப்பதில்லை. யாராவது ஒரு தவறு
செய்யும்போது நீங்கள் அவரிடம், "நீங்கள் இப்படிச் செய்யாதீர்கள், அது என்னை மிகவும்
பாதிக்கின்றது" என்று சொன்னால் அவர்கள் அப்படிச் செய்வதை ஒரு போதும் நிறுத்த மாட்டார்கள்.
அப்படியின்றி "நீங்கள் இப்படித் தவறு செய்வது உங்களையே பாதிக்கும்" என்று
சொன்னால் அந்த தவறினை மீண்டும் செய்ய மாட்டார்கள். இதுவே ஒரு ஆசிரியருக்கும், பாதிக்கப்பட்டவருக்கும்
உள்ள வித்தியாசம். பாதிக்கப்பட்டவர் குற்றவாளியிடம் "நீ ஒரு குற்றவாளி, நான் பாதிக்கப்
படுகின்றேன், ஆகவே நீ தவறு செய்யாதே" என்று சொல்லி ஒரு போதும் குற்றவாளியை திருத்த
முடியாது. ஆனால் அதுவே ஒரு ஆசிரியராக திருத்த
முடியும். ஆசிரியர் என்ன செய்கின்றார்? அவர் தவறு செய்பவரிடம் அன்போடு,"பார்,
நீ செய்வது உனக்கே துன்பம் விளைவிக்கும். ஆகவே அதை செய்யாதே. உன் மீதிருக்கும் அன்பினாலும்,
கருணையினாலும் தான் நான் இதை சொல்கின்றேன், உன்னையே பாதிக்கும் என்பதனால் இந்த தவறை
தயவு செய்து செய்யாதே" என்று சொல்வார்.
அப்பொழுது அவர்களிடம் ஒரு தெளிவு உண்டாகி,
நீங்கள் சொல்வதைக் கவனிப்பார்கள். செயல்களையும் மாற்றிக் கொள்வார்கள். இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்
பாதிக்கப்பட்ட ஒருவர் ஒரு போதும் ஒரு குற்றவாளியைத் திருத்த முடியாது. நீங்கள் யாரையாவது
திருத்தி பாடம் கற்பிக்க விரும்பினால் ஒரு ஆசிரியரின் பெருந்தன்மை உங்களிடம் வேண்டும்.
கருணை, பரந்த நோக்கு, சாந்தம் ஆகியவை நிறைந்திருக்க
வேண்டும். பெருந்தன்மை, சாந்தம், திறமை ஆகிய
மூன்றும் மிக அவசியம். இவை இருந்தால் நீங்கள் பிறருடைய தவறுகளை எளிதில் ஜீரணிக்க முடியும். இந்த கிரகத்தில் தவறுகள் நடந்து கொண்டுதானிருக்கும்.
தவறுகள் நிகழாமல் நீங்கள் தடுக்க முடியாது. காலம் காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. தொடர்ந்து நிகழும். உங்களின் ஒரு பாகமாக நீங்கள்
நினைக்கும் ஒருவர் ஒரு தவறு செய்யக் கூடாதென்று நீங்கள் விரும்பினால்,அவர் துன்பப்
படுவதை பார்த்து அதிலிருந்து அவர் விடுபட வேண்டுமென்று நீங்கள் நினைத்தால், அதிலிருந்து
வெளியேற அவர்களுக்கு வழிகாட்டுங்கள். புரிந்ததா?
இந்த உலகத்தில் சாக்கடையும், சகதியும்
இருக்கவே கூடாது என்று நீங்கள் சொல்ல முடியாது. இந்த கிரகத்தில், சகதி இருக்கத் தான்
செய்யும். உங்கள் நண்பரோ அல்லது உங்களுக்கு மிகவும் விருப்பமானவரோ அதில் விழுந்து விடக்கூடாதென்று நீங்கள் விரும்பினால் அதிலிருந்து
தூர விலகிச் செல்ல அவர்களுக்கு வழிகாட்டி உதவி செய்யுங்கள். இதற்கு கருணை மிகவும் அவசியம்.
சாக்கடையில் விழுந்துவிட்ட ஒருவருக்கு
நீங்கள் எப்படி உதவி செய்வீர்கள்? வெறுமனே
அங்கே நின்றுகொண்டு அவர்களிடம் "சாக்கடையிலிருந்து வெளியே வாருங்கள்" என்று
சொல்வது எந்த விதத்திலும் பயன் தராது. அவர்களுக்கு
உதவ உங்கள் கரங்களை நீட்ட வேண்டும். அவர்களும் தங்கள் கைகளை உங்கள் கைகளிடம் கொடுப்பதற்கு
முன்னர், நீங்கள் நிச்சயமாக அவர்கள் அதிலிருந்து வெளியே வர உதவி செய்வீர்கள் என்று
முழுமையாக நம்ப வேண்டும். அவர்கள் கைகளை நீங்கள் நன்றாக பிடித்துக்கொள்ள முடிந்தால்
மட்டுமே உங்களால் அவர்களை, அந்த சூழலிலிருந்து வெளி கொண்டு வரமுடியும்.அப்பொழுது தான்
நீங்கள் மக்களிடம் மாற்றம் கொண்டு வரமுடியும்.
ஒருவரது தவறுகளை அவருக்கு வெறுமனே சுட்டிக் காட்டுவது எந்தப் பயனும் தராது. நீங்கள்
பெருந்தன்மை, சாந்தம், திறமை ஆகியவற்றைப் பெற்றிருக்க வேண்டுuம். உங்களிடம் சாந்தம்
இருந்தால் நீங்கள் ஒருவர் தவறு செய்யும்போது அமைதியாக இருக்க முடியும். அவர்களைத் திருத்தக்கூடிய திறமையும் உங்களிடம் இருக்கலாம்.
ஆனால் அவர்களை அப்படியே ஏற்றுக்கொண்டு அவர்களை மேம்படுத்த கூடிய பெருந்தன்மை இல்லையென்றால்
எந்தப் பயனும் உண்டாகாது. நான் கண்டறிந்தது இதுவே. பெருந்தன்மை, சமத்துவம், திறமை ஆகிய
மூன்றின் உதவியுடன் நீங்கள் ஒரு குற்றவாளியை மாற்ற முடியும். உங்களில் சிலர் வாழும்
கலை ஆசிரியர்களாகவும், சிலர் அமைப்பாளர்களாகவும்
இருக்கின்றீர்கள். எனவே இந்தக் கருத்து உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நான் உங்களுடன் ஒரு நிகழ்ச்சியை
பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். ஒரு சமயம் மும்பையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்ய ஒரு தலைமை அலுவலகமும் சில மூத்த ஆசிரியர்களும்
மும்பையில் இருந்தனர். அந்த மூத்த ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக இது போன்ற நிகழ்ச்சிகளை
ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். ஆனால் சில புது உறுப்பினர்களுக்கு அவர்கள் ஏற்பாடு
செய்யும் விதம் பிடிக்கவில்லை. மூத்த ஆசிரியர்களே எப்போதும் நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பேற்று
நடத்தி வந்தனர். இந்த புது உறுப்பினர்கள் இம்முறை பொறுப்பேற்று செய்யும் வாய்ப்பினை
பெற விரும்பினர். மூத்த ஆசிரியர்கள் இவர்கள் விரும்பியபடி வேலை செய்ய வாய்ப்பளிக்க வில்லை.
ஆகவே அவர்கள் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். அதில் மூத்த ஆசிரியர்கள் அனைவரும்
ஒன்று சேர்ந்து ஒரே குரலாக புது இளைய உறுப்பினர்களை வசை பாடினார்கள். அதனைத் தொடர்ந்து
நிகழ்ச்சி அமைப்பாளர்கள் எல்லோரும் ராஜினாமா செய்தனர். நிகழ்ச்சிக்கு இரண்டு வாரங்களே
இருந்த போது இவ்வாறு நடந்தது. நான் மூத்த ஆசிரியர்களை தொலைபேசியில் அழைத்து "நீங்கள்
கோபமாகத் திட்டியதனால் அவர்கள் உங்கள் அறிவுரைகளை ஏற்றுக்கொண்டார்களா?" என்று
கேட்டேன். அவர்கள் "இல்லை"என்று சொன்னார்கள்.ஆகவே நான் சொன்னேன்,"அவர்கள்
உங்கள் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று உங்களுக்குத் தெரிந்தும் ஏன் அறிவுரை
கூறுகின்றீர்கள்? திட்டிச் சொல்வதென்றால் உங்கள் அறிவுரையை எப்போதும் கேட்க மாட்டார்கள்.
உங்கள் மனதில் இருப்பதையெல்லாம் அவர்களிடம் கொட்டிவிட்டீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை,
ஆனால் அப்படிச் செய்ததனால் என்ன பலன்? ஆக்கபூர்வமாக ஏதனும் நிகழ்ந்ததா இல்லை இன்னும்
மோசமானதா?" அவர்கள் சொன்னார்கள், “ஆம். நிலைமை இன்னும் மோசமாகத்தான் மாறியது"
என்று. நீங்கள் இதை தான் கவனிக்கவேண்டும் என்று நான் விரும்புகின்றேன்.
உதாரணத்திற்கு, ஒரு நிறுவனத்தில்
வேலை செய்து கொண்டிருக்கும் உங்களுக்கு ஒரு அற்புதமான யோசனை தோன்றுகின்றதென்று வைத்துக் கொள்வோம். நீங்கள் உங்கள் மேலதிகாரியிடம்
சென்று அவர் செய்வது தவறு என்று வசை பாடினால் அவர் நீங்கள் சொல்லும் கருத்தினை கவனிப்பார்
என்று நினைக்கின்றீர்களா? அவர் நிச்சயம் கவனிக்க மாட்டார். பிறகு பயனில்லாத ஒன்றை ஏன்
செய்கின்றீர்கள்? உங்கள் சக்தியும் நேரமும் எவ்வளவு வீணாகின்றது?உங்கள் உணர்வுகளை வெளியே
கொட்டிவிட்டதனால் உங்கள் மனம் வெறுமையாகி இருக்கலாம். ஆனால் அது எந்த விதத்திலும் பலன்
தராது.
நான் புதிய உறுப்பினர்களிடம்,
மூத்த உறுப்பினர்கள் சமுதாயத்தில் மேல் நிலையில் இருப்பதன் காரணமாக, இவர்கள் சொல்வதை
கேட்கப் போவதில்லை என்று சொன்னேன். அவர்கள் பெரும் தொழிலதிபர்கள். அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்று அவர்களுக்கு
நன்றாகத் தெரியும் அல்லது அவர்கள் அப்படி நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள்
தவறே செய்தாலும் பிறர் சொல்வதைக் கேட்கப் போவதில்லை.மற்றவர்கள் அதிலும் இளையவர்கள்
சொல்வதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.சமுதாயத்தில் பல நிலைகளும், தடைகளும்
உள்ளன என்று உங்களுக்குத் தெரியுமா? வயது வித்தியாசத்தினால் வரும் தடைகள், அந்தஸ்தினால்
வரும் தடைகள், இப்படி எதுவுமில்லையென்றால் தான் என்கின்ற முனைப்பினால் வரும் தடைகள்
என்று பல தடைகள் உள்ளன.
அவர்கள் அடுத்த நாள் ஒன்று கூடி
மீண்டும் ஒரு கூட்டம் அமைத்தனர். நான் மும்பைக்கு வரவேண்டும் என்று விரும்பியதாலும்,
மக்கள் மிகவும் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர், நான் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு
அங்கே செல்கின்றேன். எல்லாம் நல்ல விதமாக முடிவடைந்தது.
பெருந்தன்மை, சமத்துவம், திறமை
ஆகிய மூன்றுமே இருக்க வேண்டும். இந்த நிகழ்ச்சி மூத்த ஆசிரியர்களின் மனங்களைத் திறந்துவிட்டது.இதுவே
சரியான வழி என்று அவர்கள் ஒத்துக் கொண்டனர், ஏற்கனெவே நிகழ்ந்துவிட்ட ஒரு தவறை சுட்டிக்
காட்டுவதில், எந்தப் பலனும் இல்லை. மக்கள் அதனை கவனிக்காமல் தங்கள் தவறுகளை நியாயப்படுத்தவே
விரும்புவார்கள்.
நிலைமை இப்படி இருப்பதனால், மற்றவர்
செய்தது தவறு என்று சுட்டிக்காட்டாமல்,உங்கள் கருத்துக்களை நேர்மறையான யோசனையாக முன்
வையுங்கள் அல்லது இப்படிச்செய்வது இன்னும் சிறந்த யோசனையாக இருக்கலாம் என்று அவர்களிடம்
சொல்லிப்பாருங்கள்.
ஜோசியரைப்பற்றி
இன்னொரு கதை உங்களுக்குக் கூறுகின்றேன். ஒரு சமயம் ஒரு ஜோசியர்
ஒரு அரசரைக் காண சென்றிருந்தார். அரசர், அவரை ஒரு ஆசனத்தில் அமர
வைத்துப் பரிசுகள் அளித்துக் கௌரவித்தார். பின்னர் அரசர் தன உள்ளங்கையையும், தனது
ஜாதகத்தையும் காண்பித்தார். ஜோசியர் அரசனிடம்" ஒ ! அரசனே! நீங்கள் உங்கள்
குடும்பம் முழுவதையும் இழந்து விடுவீர்கள்! உங்களுக்கு முன்னாலேயே குடும்பத்தில்
உள்ள ஒவ்வொருவரும் இறந்து விடுவார்கள். நீங்கள் தான் கடைசியாக இறப்பீர்கள்"
என்றார். இதைக் கேட்டதும் அரசர் மிகுந்த வேதனை அடைந்து ஜோசியரை சிறையில்
அடைத்தார். இச்செய்தி ஜோசியர் சமூகத்தையே உலுக்கியது. அவர்கள், "நாம் இனி அரசரிடம் உண்மையையே கூறக்கூடாது, கூறினால் நம்மை சிறையில்
அடைத்துவிடுவார், என்று எண்ணினார்கள். யாருமே எதிர் மறையான முன்கணிப்பை
விரும்புவதில்லை. எப்போதுமே நல்ல, நேர்மறை யானவற்றையே விரும்புகிறார்கள்.
அரசனும் அதையே விரும்பினார்.
பின்னர் அரசன் வேறொரு
ஜோசியரை அழைத்தார். பலர் இவ்வழைப்பைத் தவிர்க்க முனைந்தார்கள்.முதியவரான ஒரு
ஜோசியர் அழைப்பை ஏற்று அரசரிடம் வந்தார். அவருக்கும் முன்போலவே அரசன், மரியாதைகள் செய்து, பரிசுகள் வழங்கி
வரவேற்றார். பிறகு, தன் உள்ளங்கையை காட்டினார். முதிய
ஜோசியர், “ஓ! அரசனே! நீங்கள் எப்படிப்பட்ட பாக்கியம்
பெற்றிருக்கிறீர்கள்! தங்களுடையது மிக நல்ல ஜாதகம். உங்களுடையதைப் போன்ற நீண்ட
ஆயுள் வரலாற்றிலேயே யாரும் பெற்றிருக்கவில்லை. உங்களுடைய வம்சத்திலேயே இதுபோன்ற
நீண்ட ஆயுள் யாரும் பெற்றிருக்கவில்லை." என்றார். ஜோசியர், அரச குடும்பத்திலுள்ள அனைவருக்கு பின்னரும் அரசர் வாழ்ந்திருக்கப் போகிறார்
என்று கூறவில்லை! அதற்குப் பதிலாக அரசருக்கு நீண்ட ஆயுளுடன் கூடிய நல்ல ஜாதகம்
என்று கூறினார்.
தனது ஆரோக்கியம், நீண்ட ஆயுள் பற்றிய முகத்துதியில் மயங்கிய மன்னர், ஜோசியரிடம், "என்ன பரிசு வேண்டுமோ
கேளுங்கள். நான் தருவேன்" என்று கூறினார். ஜோசியர் அரசனிடம்," தயவு செய்து சிறையில் இருக்கும் என் ஜோசியர் நண்பனை விடுதலை செய்யுங்கள்"
என்று கேட்டார். கருத்துப் பரிமாற்றத்தில் தேர்ச்சித் திறன் என்பது பெரும்
மாற்றத்தை ஏற்படுத்தும்.
கன்னடத்தில் ஈரடிச்
செய்யுள் ஒன்று உண்டு. "சொற்களின் மூலம் வேடிக்கையும் சிரிப்பும் ஏற்படுகிறது; அதுபோலவே சொற்களின் மூலம் பகையும் ஏற்படக்கூடும்." எனவே
கருத்துப் பரிமாற்றத்தில் தான் சண்டைகள் ஏற்படுகின்றன. இன்று வட கொரியாவிற்கும்,
தென் கொரியாவிற்கும் என்ன முரண்பாடு? இரு
கொரியாக்களுக்கும், அமெரிக்காவிற்கும் என்ன சண்டை? இந்நாடுகள்
பயன்படுத்திய சொற்களே இதற்குக் காரணம். வர்த்தகமோ வேறு எந்தக் காரணமுமோ அல்ல.
கன்னடத்தில் ஒரு பாடல்
உண்டு." உன்னுடைய பேச்சு அற்புதமாகவும் இனிமையாகவும் இருக்க வேண்டும்; சிவபெருமானே கூட அதைக் கவனித்து, ஆனந்தத்துடன்
"ஆம்! ஆம்! என்று ஆமோதித்துத் தலையாட்ட வேண்டும்." என்பதாகும். அப்படி
அற்புதமாக உங்கள் பேச்சு இருக்க வேண்டும்.
கே: குருதேவ்! பற்றுதல் என்பதை எவ்வாறு கடந்து
செல்வது?
தங்களிடம் கொண்டுள்ள பற்றுதலை எப்படிக் கையாள்வது? இப்போதெல்லாம், அது வலியுள்ளதாகவே
இருக்கின்றது.
குருதேவ்: அன்பை உங்களால் மறைக்க முடியாது. அதை
உங்களால் முழுமையாக வெளிப்படுத்தவும் முடியாது. காலங்காலமாக இவ்வாறு தான் இருந்து
வருகின்றது. அன்பானது, கசிந்து, கண்களிலும், செயல்களிலும் வெளிப்படும். எவ்வளவு
தான் முயற்சி செய்தாலும், அதை நீங்கள் நினைத்த அளவு
வெளிப்படுத்த முடியவில்லை என்றே உணருவீர்கள். இது தான் பிரச்சினை, அதனால் தான் மனதில் வலி ஏற்படுகின்றது.
உண்மை என்பதும் இது போலத்தான்.
உங்களால் உண்மையைத் தவிர்க்க முடியாது, அதை
தெளிவாக வரையறுத்து விளக்கிக் கூறவும் முடியாது. அது போலவே, அழகு என்பதை வெறுத்துத் துறக்கவும் முடியாது, அதை
சொந்தமாகப் பெறவும் முடியாது.
மனித இனம் அதனால்தான்
பெரும் பிரச்சினைக்கு ஆளாகி இருக்கின்றது. மனிதர்கள் அனைவருக்கும் அன்பு, உண்மை, அழகு ஆகிய அனைத்தும் தேவையாக
இருக்கின்றன.
யாருக்கு உண்மை
தேவையில்லை கூறுங்கள்? உங்களைச் சுற்றியுள்ள
ஒவ்வொருவரும் பொய் பேச ஆரம்பித்தால் உங்களால் தாங்க முடியுமா? நீங்கள் கொதிப்படைவீர்கள். ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொருவரும்
உங்களிடம் உண்மையாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் அல்லவா? ஒவ்வொருவரும் இல்லாவிட்டாலும், ஒரு சிலராவது உண்மையாக
இருக்கவேண்டும் என்று விரும்புகிறீர்கள். ஆனால் நீங்கள் உங்களைச் சுற்றி இருக்கும்
ஒவ்வொருவரிடமும் உண்மையாக இருக்கிறீர்களா? அது பெரிய
கேள்வி! அதனால் தான் உண்மை என்பதை நீங்கள் தவிர்க்கவே முடியாது. ஆயினும் அதனை
நீங்கள் வரையறுத்து விளக்க முடியாது.
இந்தக் கணத்தில் உங்களுக்கு
உண்மையாக இருப்பது வேறொருவருக்கு உண்மை இல்லாமல் இருக்கலாம். நான் கூறுவது
உங்களுக்குப் புரிகின்றதா? உதாரணமாக, உண்மை என்று ஒன்றை நீங்கள் இப்போது கருதுகிறீர்கள். அதைத் தாண்டிச்
சென்றபின், "ஒ! நான் உண்மை என்று எதை நம்பினேனோ அது
உண்மை அல்ல" என்று எண்ணுகிறீர்கள்.
உங்களில் எத்தனை பேர்
இதுபோன்று எதையோ உண்மை என்று நினைத்துப் பின்னர் நீங்கள் நினைத்தது சரியல்ல என்று
உணர்ந்திருக்கிறீர்கள்? கைகளைத் தூக்குங்கள். (பலர்
கை உயர்த்துகிறார்கள்).
அப்போது எது உண்மை
என்று எவ்வாறு நிர்ணயிக்க முடியும்? உங்களால்
உண்மை என்பதை வரையறுத்துக் கூற முடியுமா? முடியாது. நீங்கள் அக்பரும்,
பீர்பாலும் கதையைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இக்கதையை நான் முன்னரே
கூறி இருக்கின்றேன். இந்தியாவில் அக்பர் என்னும் பெயர் கொண்ட பேரரசர் இருந்தார். பொய்
பேசுபவருக்கு மரண தண்டனை விதித்து தூக்குமேடைக்கு அனுப்ப வேண்டும் எனும் சட்டம் இயற்ற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு
ஒரு சமயம் ஏற்பட்டது. இச்சட்டத்தைப் பற்றி
அறிவிக்கப்பட்டவுடன் நாட்டில் மக்களிடையே பீதி ஏற்பட்டது. முதலில், வணிகர்கள் ஒன்று சேர்ந்து, "இது ஒரு
கடுமையான சட்டம். நாம் விற்கும் பொருட்கள் முதன்மையானது என்று கூறி விற்கின்றோம். பட்டு
விற்பனை செய்தால் நமக்கே உண்மையல்ல என்று தெரிந்தாலும் அதுவே மிக சிறந்த வகை என்று
கூறுகின்றோம், தென் நாட்டில் இதைவிடச் சிறந்த பட்டுக்
கிடைக்கும். ஆனால் நாம் நமது பொருட்களை விற்க வேண்டும். என்ன செய்ய முடியும்?
நமது தொழிலை இப்படியன்றி வேறு விதமாக நடத்த முடியாது."
என்றனர்.
அடுத்து, வைத்தியர்கள் ஒன்று கூடினார்கள். தங்களுக்குள் விவாதித்தார்கள்."
நாம் ஒரு உடல் பிரச்சினையை யூகித்து அதற்கு மருந்து தருகிறோம். நோயாளியை குணப்படுத்தும் எனும் அனுமானத்தில்
கொடுக்கிறோம். ஆனால் நோயாளியிடம், நிச்சயமாக குணமாகும்
என்று கூறி ஆறுதல் படுத்துகிறோம். ஆனால் ஒரு வேளை மருந்து வேலை செய்யவில்லை
என்றால் நாம் தூக்கு மேடைக்கு அனுப்பப்படுவோம்". வைத்தியர்கள் அரசனுக்கு
கிறுக்குப் பிடித்து விட்டதாக எண்ணினார்கள். இச்சட்டத்தைக் கடைப்பிடிக்க முடியாது
என்று அவர்கள் அதிர்ந்து போனார்கள்.
அடுத்து ஜோசியர்கள்
ஒன்று கூடினார்கள். அவர்கள், இவ்வரசன் நமது
தொழிலைக் கெடுக்கவே முனைகிறான். நாம்
சிலவற்றைப் புரிந்து கொண்டும், சிலவற்றை ஊகித்துக்
கொண்டும், முன் கணிப்பு செய்துக் கூறுகின்றோம். ஆனால்
இச்சட்டம் தங்கள் தொழிலைப் பாதிக்கும் என்று கருதி வேறெங்கானும் ஒருவேளை
அமெரிக்காவிற்குக் கூட(!)சென்று விடலாமா என்று யோசித்தனர். ஆக, நாட்டில் உள்ள ஜோசியர்கள் அனைவரும் அரசனின் சட்டத்தினால் மிகுந்த
பயத்தை அடைந்தனர். அடுத்து வந்தது
வக்கீல்களின் குழு. அவர்கள் தங்களுக்குள் "இச்சட்டம் அநியாயமானது" என்று
கருதினார்கள். நாம் கருப்பை வெள்ளை என்றும், வெள்ளையைக்
கருப்பு என்றும் கூறி பிழைக்கிறோம். அதனால் தான் மக்கள் நம்மிடம் வருகிறார்கள். இனி
என்ன செய்வது என்று கருதி வருந்தினார்கள். அடுத்து, சமயச் சடங்குகள் ஆற்றும் பூசாரிகளும் கவலைக்காளானார்கள்.
இவ்வாறு ஒவ்வொரு
பிரிவினரும் அரசனது சட்டத்தினால் பாதிக்கப்பட்டார்கள். மக்கள் அனைவரும் பீர்பாலை
அணுகினார்கள். பீர்பால் அறிவாளி, மற்றும் அரசவை
விகடகவி. பேரரசரின் அன்பைப் பெற்றவர். பீர்பால் அனைவரது பிரச்சினைகளையும்
கேட்டறிந்தார்.
ஒரு நாள், பீர்பால், அரசது தனி மாளிகையை நோக்கிச்
சென்றார். காவலர்கள் அவரைத் தடுத்தனர். எங்கு செல்கிறீர்கள்? என்று கேட்டனர். பீர்பால், நான் என்னைத்
தூக்கிலிட்டுக் கொள்ளப்போகிறேன் என்று பதிலளித்தார்..
இச்செய்தி விரைவில்
பேரரசரைச் சென்றடைந்தது. பீர்பால் அரசரின் தனி மாளிகைக்குச் சென்று, தூக்கிலிட்டுக் கொள்ளப் போவதாகக் கூறியது உண்மையிலேயே பொய். இப்போது
பீர்பாலைத் தூக்கிலிட்டால், அவர் கூறியது உண்மையாகி
விடும். அப்போது உண்மை கூறிய குற்றமற்றவரைத் தூக்கிலிடுவது பெரும் தவறாகி விடும். அக்காலத்தில்,அரசன் ஒரு நிரபராதியைத் தண்டித்தால், தானும்
அத்தண்டனையை அனுபவிக்க வேண்டும். இதுதான் அக்காலத்தில் விதி முறை. குற்றமற்றவரைத்
தண்டிப்பது பெரும் பாவமாகக் கருதப்பட்டது. ஆனால், பீர்பாலைத் தண்டிக்காமல் விட்டு விட்டால், அரசன்
இயற்றிய சட்டத்திற்கு புறம்பானதாக ஆகிவிடும். தண்டித்தாலோ வேறொரு சட்டத்தை
மீறியதாக ஆகிவிடும்.பேரரசர் பெரும் குழப்பத்திற்கு ஆளானார். அனைத்து அறிஞர்களையும்
அழைத்து விவாதிக்கலானார்.
அவர், “இந்த வழக்கில் பீர்பாலை என்ன செய்வது” என்று
கேட்டார். பீர்பால் பொய் தான் கூறியிருக்கிறார். அவரைத் தண்டிப்பதா அல்லது
வேண்டாமா? அச்சமயம் பீர்பால் அங்கு வந்து, "பாருங்கள்! உண்மை என்பது என்ன வெளிப்படுத்தப்படுகிறதோ அல்லது என்ன
பேசப்படுகிறதோ அல்ல. நிலைத்திருப்பதே உண்மை.அது என்ன என்று அறிந்து கொள்வது முற்றிலும்
வேறுபாடான ஒரு விஷயம்" என்றார். பேரரசனின் சட்டம் நீக்கப்பட்டு அனைவரும்
மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். இத்துடன் கதை முடிந்தது.
எனவே உண்மை என்பது
என்ன பேசப்படுகின்றதோ, அது மட்டுமல்ல (சொற்கள்
என்னும் வரம்புக்கு மட்டும் உட்பட்டதல்ல) அது காலத்திற்கு அப்பாற்ப்பட்டது -
அதாவது கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் வருங்காலம்.அது தவிர, காலங்காலமாக
ஏற்படும் சோதனைகளை எல்லாம் தாண்டி நிலைபெற்றிருப்பதே உண்மை. ஆகையால் தான், உண்மை என்பதை வரையறுத்து
விளக்கிக் கூற முடியாது.
உண்மையைத்
தவிர்க்கவும் முடியாது. அழகும் இதுபோல தான். அழகைத் துறக்க முடியாது. எதையாவது
நீங்கள் துறக்க முடியுமானால், அது நிச்சயம் அழகாக
இருக்க முடியாது. அழகை அடையவும் முடியாது. புரிகின்றதா? இந்த மூன்றும்தான்
மனித வாழ்வின் முக்கியமான அம்சங்கள்
கே: நான் பிரதிபலிப்பு என்பதைப்பற்றி சிறிது கேள்விப் பட்டிருக்கிறேன். எத்தனை வகையான
பிரதிபலிப்புகள் நம்மிடம் உள்ளன? அவை என்ன
கருத்துக்களைத் தெரிவிக்கின்றன?
குருதேவ்: நீங்கள் ஒரு
சொல்லைக் கூறும்போதே அதற்கு ஒரு பொருளை இணைத்திருக்கிறீர்கள். பிரதிபலிப்பு என்பது
பிரதிபலிப்பு தான். வெளியுலகில் என்னவெல்லாம் காண்கிறீர்களோ அவையெல்லாம் தான்.
செயல் என்பதும் உங்களது பிரதிபலிப்பு தான். உங்களுடைய எண்ணங்கள், உங்கள் மனம், உங்கள் உணர்ச்சிகள் எல்லாமே
உங்களின் பிரதிபலிப்பு ஆகும். ஒரு விதத்தில் உங்கள் உடலும் கூட உங்களது
பிரதிபலிப்புத் தான்.
இந்த உண்மையை நீங்கள்
பிரதிபலிக்கும் போது இது எல்லாமே தெளிவாகிறது.
"அசங்கோகம்
அசங்கோகம் புனர்புனஹா” (நான் பற்றற்றவன், நான் பற்றற்றவன் மீண்டும் மீண்டும்) இதன் பொருள் என்னவென்றால், நான் இதுவல்ல, நான் இதுவல்ல, இவற்றிலிருந்தெல்லாம் விலகி, அணுக முடியாத
நிலையில் இருக்கிறேன். நான் என் உடல் அல்ல. எனது எண்ணங்கள், உணர்ச்சிகள், நான் செய்யும் செயல்கள் இவை
அனைத்துமே நான் அல்ல. நடப்பவை அனைத்திலிருந்தும் விலகி நின்று அவற்றுக்கு ஒரு
சாட்சியாக நாம் ஆக முடியும்.