ஏப்ரல் 6 – 2013 - பூன், வட
கரோலினா
உங்களுக்குத் தெரியுமா? வாழ்க்கையில்
எப்போதும் ஏதொ ஒன்றைப் பற்றி கவலை இருந்து கொண்டு தான் இருக்கும். அதனால் தான் வாழ்க்கை ஒரு மாயை என்று
சொல்லப் படுகின்றது. அது ஒரு பிரமை.எது வேண்டுமானாலும் உங்களுக்கு ஒரு கவலையாக மாறலாம். உங்களிடம் யாராவது அன்பு செலுத்தினால் அது ஒரு
கவலையாக மாறலாம். அன்பு
செலுத்தவில்லையென்றாலும் அதுவும் ஒரு கவலையாக மாறலாம்.
உங்கள் நண்பர்களே உங்கள் கவலைக்குக் காரணமாக இருக்கலாம். அதே போல்
உங்கள் எதிரிகளும் காரணமாக இருக்கலாம்
இல்லையா? அதனால் தான் யோக சூத்திரத்தில் மகரிஷி பதஞ்சலி சொல்கிறார், மிக நுட்பமான பாகுபாட்டுத் திறன் உள்ளவர்களுக்கு இந்த உலகத்தில் அனைத்துமே பிரச்சினையாக தெரியும் என்று
இதற்குப் பொருள். நீங்கள் பேசினாலும் பிரச்சினை,பேசாமல் இருந்தால் பிரச்சினை. இதனை ஒரு அறிவாளி
தெரிந்து கொள்ளும் போது அவன் எதையும்
பொருட்படுத்துவதில்லை. வேறு
வழியொன்றுமில்லை என்பது அவனுக்கு தெரியும். என்ன நடந்தாலும் பொருட்டில்லை. அவன்
மகிழ்ச்சியாக இருப்பான். எது வந்தாலும், நான் என் மகிழ்ச்சியை இழக்கமாட்டேன் என்று அவன் நினைக்கின்றான். ஒருவர் தன் வாழ்வில்
உறுதியாக பற்றிக் கொள்ள வேண்டியது இதைத் தான்,
'எது வந்தாலும் நான் என் மகிழ்ச்சியை
இழக்கக்கூடாது.'
உதாரணத்திற்கு நீங்கள் ஏதோ ஒன்றைச் செய்கின்றீர்கள். சரியாக நடக்கவில்லை. அதற்காக நீங்கள் உங்கள் சந்தோஷத்தை ஏன் இழக்க
வேண்டும்? அது உங்களுக்கு இரட்டை நஷ்டம் இல்லையா? உங்கள் வியாபாரத்தில் நஷ்டமடைகின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். எப்படியும் இழப்பு
ஏற்பட்டுவிட்டது. அதன் கூடவே உங்கள் மகிழ்ச்சியையும் இழக்காமலாவது இருக்கலாமே. இதுவே ஞானம். இந்த
ஆன்மீக ஞானம் இந்த நிலைக்குத் தான் உங்களை கொண்டு வரவேண்டும். இதுவே
உங்கள் வளர்ச்சியின் அளவுகோல். உங்கள் தொழிலிலோ, அல்லது உறவு
முறையிலோ. அல்லது வேறு ஏதாவது வாழ்க்கை சூழலிலோ, நீங்கள் எதையோ
இழக்க நேர்ந்தாலும், நீங்கள் உங்கள் மகிழ்ச்சியை இழக்கக் கூடாது. அப்போது தான் நீங்கள் உண்மையான ஒன்றைப் பற்றிக்
கொள்கின்றீர்கள்.
சுவாமி ராமதாஸ் வேதாந்தத்தைப் பற்றி (வேதங்களின் குறிக்கோள் அல்லது வேதங்களின் முடிவு பற்றி)
சொற்பொழிவு ஆற்றுவதற்கென டோக்கியோவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆகவே அவர் இந்தியாவிலிருந்து கப்பலில் பயணம்
செய்தார். அந்தக் காலத்தில் அத்தனை தூரம்
கப்பலில் மட்டுமே பயணம் செய்ய முடியும் அதுவும் மாதக்கணக்கில் ஆகும். அவர் உலகம்
துறந்த ஒரு துறவி, சந்நியாசி. எங்கு சென்றாலும் ஒரு ஜோடி உடை மட்டுமே கொண்டு செல்வார். அப்படி அவர் அங்கு சென்று சேர்ந்த போது
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தவரை காணவில்லை. பார்வையாளரும் எவரும் இல்லை. எனவே
அவர் கடற்கரை அருகில் நின்று தனக்குத்
தானே சொற்பொழிவு ஆற்றிக் கொண்டார். அவர் பேச்சைக் கேட்க எவரும் இல்லை. அவருக்கு
ஜப்பானிய மொழி தெரியாது. அவர் தனக்குத் தானே உரை நிகழ்த்திவிட்டு மகிழ்ச்சியோடு திரும்பி வந்தார்.
அவர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களையோ அல்லது வருகை தராத பார்வையாளர் களையோ யாரையும் குற்றம் கூறவில்லை.
இது பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது. அக்காலத்தில் இப்போது இருப்பது போல் அடிக்கடி அயல்நாட்டுப
பயண நிகழ்ச்சிகள் இல்லை .எனவே பயணத்திற்கான
செலவை அவரே ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சி சுவாமிகளிடையே மிகப் பிரபலமான ஒரு
சிறுகதை. இதே போன்ற ஒரு நிகழ்ச்சி இந்தியாவிலும் நிகழ்ந்தது. அவ்வப்போது பல மாநாடுகள்
நடைபெறும். மாநாடுகள் மக்களை ஓரிடத்தில் சேர்த்து ஒருங்கிணைப்பதன் மூலம் மக்கள் தொடர்பை வலுப்படுத்தும். மக்கள் வந்து ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டு,
கலந்துரையாடி, பின்னர் விடைபெறுவார்கள்.
ஆழ்ந்த ஞானம் எதுவும்
விவாதிக்கப்படுவதில்லை என்பதனால் பெரியதாக பயன் ஒன்றும் உண்டாவதில்லை.ஒரு முறை ஒரு கனவான் இந்த மாநாட்டில் இருந்த குழுவினருக்கு உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். நிகழ்ச்சித் தொகுப்பாளர் உரை
முடித்துக்கொள்ள வேண்டி மணி அடித்த
பின்பும் அவர் பேசிக்கொண்டே இருந்தார். சிலர் கையில் ஒலிபெருக்கி கிடைத்தால்
அதை எளிதில் விடுவதில்லை. இது போன்ற
பேச்சாளர்கள் முன்னுரைக்கே அரை மணி நேரம் எடுத்த பிறகு தான் விஷயத்திற்கு வருவார்கள்.
எனவே நிகழ்ச்சித் தொகுப்பாளர் பேச்சாளரின் பின்புறம் சென்று அவரது சட்டையை
லேசாக இழுத்தார். ஆனாலும் அந்த கனவான் பேச்சை நிறுத்தவில்லை. நிகழ்ச்சித்
தொகுப்பாளர் மூன்றாவது முறையாக அவரது சட்டையை இழுத்தபோது பேச்சாளர் தனது சட்டையை
கழற்றி அவரிடம் தந்துவிட்டு பேச்சைத் தொடர்ந்தார். (அவையில் சிரிப்பு)
அவர் சட்டையை வேண்டுமானால் இழக்கத் தயாராக இருந்தார் ஆனால் ஒலிபெருக்கியை அல்ல.
கே: குருதேவ், நான்
ஒரு உறவில் இருக்கும் போது மட்டுமே
முழுமையாக இருப்பதாக உணர்கின்றேன். இதனால்
நான் துன்பமடைகின்றேன். இந்தப் போக்கினை
கடந்து வருவது எப்படி?
குருதேவ்: இது மிகவும் கடினமானது. நீங்கள்
மிகவும் கஷ்டமான நிலையில் இருக்கும் போது எந்த அறிவுரையும் முள் குத்துவது போல் தோன்றும். உண்மையில் எதுவுமே
பலன் தராது. நீங்கள் வெறுமனே கேள்வி கேட்கின்றீர்கள். நாங்கள் உங்கள் மேல் அனுதாபப்படுகின்றோம். \உங்களுக்குத் தெரியுமா மக்கள் பொதுவாக ஐந்து வகையான கேள்விகளை கேட்கின்றனர். நான்
ஏற்கெனவே இது குறித்து பேசியதை கேட்டிருப்பீர்கள். மற்றொரு சமயம் இதனை விரிவாக பார்ப்போம்.
ஒருவர் துன்பத்தில் இருக்கும் போதெல்லாம் மீண்டும் நான் மட்டும் ஏன்", எனக்கு மட்டும் ஏன் இந்தத் துன்பம்?" "நான் மிகவும் துன்பப்படுகின்றேன், கடவுள் என்னிடம் மட்டும் ஏன் கடுமையாக இருக்கின்றார்?"
என்பது போன்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
யாராவது ஒருவர் இந்த நிலையில் இருக்கும் போது நீங்கள்
அவர்களுக்கு ஏதேனும் சொல்ல முயற்சி செய்தாலும் நீங்கள் சொலவதைக் கவனிக்க மாட்டார்கள். காது கேளாதது போல் நடந்து கொள்வார்கள்.
உங்கள் வீட்டிலிருப்பவர்களிடம் உங்களுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கின்றதா? வயதான
பெரியோர்கள் மிகவும் கவலையாக இருக்கும் போது
கேள்விகள் கேட்பார்கள். ஆனால் நீங்கள்
எந்த பதில் அளித்தாலும் அவர்கள் அதை கேட்காமல் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆகவே,
துன்பத்திலிருப்பவர்கள் தங்களுக்குள்ளே நிறைய கேள்விகள் வைத்திருப்பார்கள். நீங்கள் அவற்றிற்கு பதிலளிக்காமல் அமைதியாக
இருப்பதே நல்லது.
இரண்டாவது வகையான கேள்வி மக்கள் கோபத்தில் இருக்கும் போது கேட்கப்படுவது. அவர்கள் "எனக்கு மட்டும் ஏன் இந்த
அநீதி? என்று
கேட்பார்கள். அவர்கள் மிகவும் தர்க்க ரீதியாக ஆனால் கோபமாக இருப்பார்கள். அவர்களிடமும் பெரிய கேள்வி இருக்கும். ஆனால் அதற்கு பதில் அளிப்பதில் எந்த
பயனும் இல்லை.
மூன்றாவது வகை கேள்வி ஏற்கெனவே பதில்
தெரிந்திருந்தும் மக்களால் வேண்டுமென்றே
கேட்கப்படுவது. உங்களுக்குத் தெரிந்திருக்கின்றதா இல்லையா என்று சரி பார்த்துக்
கொள்வதற்காக கேட்கப்படுவது. அவர்கள் அந்த உபநிடதத்தில் மூன்றாவது பத்தியில்
என்ன சொல்லப்பட்டிருக்கின்றது என்று
சொல்லுங்கள் பார்க்கலாம்" என்பது போன்ற கேள்விகளைக் கேட்பார்கள்.
நான்காவது கேள்வி மக்கள் தங்கள் இருப்பை பிறர் அறியச் செய்வதற்காக
கேட்கப்படுவது. அவர்கள் எழுந்து உங்களை கேள்வி கேட்பார்கள். நீங்கள் நேர்மையுடன் அதற்கு பதில் சொல்ல ஆரம்பித்த உடன்
அவர்கள் வேறு எதையோ செய்யத் துவங்கி விடுவார்கள். உங்கள் பதிலில் சிறிதும் அக்கறை கொள்ளமாட்டார்கள்.அவர்கள் எழுந்து நின்று கேள்வி
கேட்டு அவர்கள் அங்கே இருப்பதை நீங்களும்
மற்ற அனைவரும் கவனிக்கும்படி செய்து விட்டனர். அவ்வளவு தான்.
ஐந்தாவது வகை கேள்வி மக்கள் உண்மையாகவே விடை தெரிந்து கொள்வதற்காக கேட்கப்படுவது. அவர்கள் உங்களுக்கு விடை தெரியும் என்பதை அறிந்து நீங்கள்
அளிக்கும் விடையை ஏற்றுக் கொள்வார்கள்.
உங்களுக்கு பதில் தெரியும் என்ற நம்பிக்கை இல்லாமல் யாராவது உங்களிடம் கேள்வி கேட்பதில்
எந்த அர்த்தமும் இல்லை. உதாரணத்திற்கு நீங்கள் வட கரொலினாவிலிருந்து
வருகின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ரெலெக் என்னும்
இடத்திற்கு பயணம் சென்றடைய எவ்வளவு நேரமாகும் என்று உங்களை யாராவது கேட்டால்
உங்களுக்கு விடை தெரிந்திருக்கும். ஆகவே, அவர்கள் கேள்வி கேட்கும் போது உங்களுக்கு விடை தெரியும் என்று அறிந்து உண்மையாகவே
பதில் பெறுவதற்காக கேட்கின்றனர். இது
போன்ற கேள்வியே பதில் அளிக்கத் தகுதியானது.
மற்ற நான்கு வகை கேள்விகளுக்கும் வெறும் புன்னகையையே பதிலாக அளியுங்கள். அதுவும் அளவோடு இருக்கவேண்டும்.
நான்கு வகை கேள்விகளுக்கும் ஒரே அளவு புன்னகை கூடாது. முதல் வகை கேள்விகளுக்கு
மிகக் குறைந்த அளவு, அதாவது 2% புன்னகை போதும். யாராவது துன்பத்தில் இருக்கும் போது பெரிய புன்னகையை அளித்தால் உங்களுக்கு பதிலுக்கு மிகப் பெரியதாக வேறு ஏதாவது கிடைக்கக்கூடும். (சிரிப்பு) யாராவது
கோபமாக இருக்கும் போது உங்கள் புன்னகை 3%
இருக்கலாம். உங்கள் புன்னகை எனக்குத்
தெரியாது என்ற
வெகுளித்தனமான பாவனையில் இருக்கலாம். மூன்றாவது நான்காவது வகை கேள்விகளுக்கு
சற்றுப் பெரியதாக புன்னகை புரியலாம்.
கே: குருதேவ், நீங்கள் சொல்லியிருக்கும் அனைத்தையும் நான் முன்பு சில நேரங்களில் அனுபவித்திருக்கின்றேன். ஆனால் அதை இப்போது
நான் மீண்டும் அனுபவிக்க இயலவில்லை. அதற்கு
காரணம் என்ன? நான்
என்ன செய்ய வேண்டும்?
குருதேவ்: தளர்வாக இருங்கள். நீங்கள் சரியான இடத்தில் சரியான நேரத்தில்
இருக்கின்றீர்கள். அனுபவங்கள் வரும் போகும். அவை வரும் போது ஏற்றுக் கொள்ளுங்கள்.
அவற்றிற்காக ஏங்கவும் கூடாது. அவற்றை தவிர்க்க முயற்சி செய்யவும் கூடாது. இதுவே
நமது பொன்னான கொள்கை.
கே: எல்லா உபநிடதங்களும் ஒரே கருத்தை சொல்லும்போது பல உபநிடதங்களுக்கு அவசியம்
என்ன?
குருதேவ்: அவற்றுக்கிடையே சிறு
வித்தியாசங்கள் இருக்கின்றன. அவை அனைத்தும் ஒரே கருத்தை சொன்னாலும், சொல்லும் விதம் ஒன்றல்ல. ஒவ்வொன்றும் தனிப்பட்டது. ஒவ்வொன்றும் தனக்கென குறிப்பிட்ட மணம் உடையது. நீங்கள்
ஐஸ்கிரீம் கடைக்குச் சென்று "எதற்காக இத்தனை விதமான மணங்களில் ஐஸ்கிரீம்
வைத்துள்ளீர்கள்? என்று கேட்பது போன்றது. ஐஸ்கிரீம் அடிப்படையில் சர்க்கரையும் கிரீமும் தான். ஆனால் ஒவ்வொன்றும் வெவ்வேறு மணம் கொண்டது. ஒன்று சாக்கலேட், மற்றொன்று பிஸ்தா, மற்றொன்று வெண்ணை, என்பது போன்று பல மணங்கள். மூலப்பொருள் ஒன்றாக இருந்தாலும்
ஒவ்வொன்றும் வெவ்வேறு மணம் கொண்டவை.