உங்கள் கண்களுக்கு உயிரூட்டுங்கள்.....

29 ஏப்ரல் 2013 - பாலி - இந்தோனேசியா  




கே: குருதேவ், இறைவனின் தாய் தந்தையை பற்றி எங்களுக்குக் கூறமுடியுமா? இறைவனுக்கு எத்தனை சகோதர சகோதரிகள்?

குருதேவ்: ஆஹா! நீங்கள் டென்னிஸ் பந்து எங்கே தொடங்குகிறது என்று சொன்னால் நான் கடவுளின் தாய் தந்தை யார் என்று கூறுகிறேன். பிறப்பு இறப்புக்கு ஆளாகும் ஒன்றை நீங்கள் கடவுள் என்று அழைக்கமாட்டீர்கள். இறைவன் ஒளி, இறைவன் ஒரு மெய்யுணர்வு, அதற்கு பிறப்பு இல்லை.

பிரபஞ்சத்தில் மூன்று விஷயங்கள் சிரஞ்சீவியானது. ஒன்று பிரபஞ்சம், எப்போதும் இருப்பது. இரண்டாவது ஆத்மா; ஒரு தனிப்பட்ட ஆத்மா சிரஞ்சீவியானது. மூன்றாவது, ஆகப் பெரிய மனம், அல்லது கடவுள்; எப்போதும் இருப்பது. இல்லையென்றால் அது கடவுள் என்று அழைக்கப்பட மாட்டாது. கடவுள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்தார், இப்போது இல்லையென்றால் அது கடவுளில்லை. அல்லது கடவுள் எதிர்காலத்தில் வருவார் என்றாலும் அது கடவுள் இல்லை. கடவுள் என்பவர் முன்பு இருந்தார், இப்போது இருக்கிறார், எதிர்காலத்திலும் இருப்பார்; அது எங்கும் எப்போதும் இருப்பது. கடவுள் ஒரு மனிதரல்ல. அது ஒரு சக்தி, அது ஒரு வெளி. உபநிஷத்தில் ஒரு அழகான கதை உண்டு.

ஒரு எட்டு வயதுச் சிறுவன் தன் தந்தையிடம் கேட்டான், ‘அப்பா, கடவுள் எப்படி இருப்பார்?’ எனவே, தந்தை தன் மகனை வீட்டுக்கு வெளியே அழைத்துச் சென்று, அவனிடம் கேட்டார், ’இந்த கட்டிடம் கட்டுவதற்கு முன்பு இங்கே என்ன இருந்தது?’அந்தச் சிறுவன் சொன்னான், ‘ஒரு வெட்ட வெளி. ’அந்தத் தந்தை கேட்டார், ‘இந்தக் கட்டிடம் எங்கே நிற்கிறது?’அந்தச் சிறுவன் பதலளித்தான், ‘வெட்ட வெளியில்.’‘அந்தக் கட்டிடம் இடிக்கப்பட்டால்அங்கு என்ன இருக்கும்?’ அந்தச் சிறுவன் கூறினான், ’வெட்ட வெளி’ அந்தத் தந்தை கூறினார், ‘எனவே வெட்ட வெளி என்பது எப்போதும் இருப்பது அல்லவா?’அந்தச் சிறுவன் கூறினான், ’ஆம்.’அந்தத் தந்தை கூறினார், ‘அது போலத்தான் கடவுள் இருப்பார்.’

எல்லாமே அங்கு வரும், எல்லாமே அங்கு இருக்கும், எல்லாமே அங்கு கரைந்து போதும் ஒரு வெளி போலத்தான் கடவுளும். அதை அழிக்கவே முடியாது. மேலும் அது எப்போதும் இருப்பது. அதிலிருந்து நீங்கள் தப்பிக்கவே முடியாது. கடவுளை விட்டு நீங்கள் எங்கும் போகவே முடியாது. முடியவே முடியாது!

அப்படியென்றால் ஒரு கேள்வி வருகிறது, ‘கடவுள் நன்மையே நிரம்பியவர் என்றால் தீயவர்கள் எப்படி கடவுளாக முடியும்? நல்லவர்களும் இருக்கிறார்கள், தீயவர்களும் இருக்கிறார்கள், எப்படி எல்லோரையும் கடவுள் என்று சொல்ல முடியும்?’ வேறு ஒரு உதாரணம் தர விரும்புகிறேன்; ஒரு திரைப்படம் எப்படி காட்டப்படுகிறது?

ஒரு திரைப்படச் சுருளின் பின்னிருந்து ஒளிக்கற்றையை பாய்ச்சி திரைப்படம் காண்பிக்க படுகிறது, இல்லையா? திரைப்படம் காட்டும் கருவியை (Projector) பார்த்திருக்கிறீர்களா, எப்படி படச்சுருள் ஓடுகிறது, எப்படி ஒளி அதன் பின்னிருந்து பாய்ச்சப்படுகிறது என்பதை பார்த்திருக்கிறீர்களா? அந்த ஒளியினால் திரைப்படம் திரையில் விழுந்து நமக்குத் தெரிகிறது. எந்த திரைப்படமாயிருந்தாலும், அது கதாநாயகன் வந்தாலும் சரி எதிர் நாயகன் (வில்லன்) வந்தாலும் சரி, வரும் ஒளி அதே தான், இல்லையா? அந்த ஒளிதான் கடவுள், கதாநாயகன், எதிர்நாயகன், நீங்கள் பார்க்கும் நல்லவை தீயவை, நடக்கும் மற்றவை, என எல்லாமே வெறும் நிகழ்வுகள் தான். அதற்கும் ஒளிக்கும் ஒன்றுமே இல்லை. அந்த ஒளியினால் தான் நம்மால் அதை பார்க்க கூட முடிகிறது. உங்களுக்கு இது புரிகிறதா?

நீங்கள் உணமையிலேயே கடவுள் என்றால் என்ன இயற்கை என்றால் என்ன, என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், நீங்கள் விஞ்ஞானியாக இருக்க வேண்டும். நீங்கள் ஒரு இயற்பியல் வல்லுனராயிருந்தால், உங்களால் புரிந்துகொள்ள முடியும். உங்களால் குவாண்டம் இயற்பியலை புரிந்துகொள்ள முடிந்தால், உங்களால் ஆன்மீகத்தை நன்கு புரிந்துகொள்ள முடியும், கடவுளையும் நன்றாக புரிந்துகொள்ள முடியும்.

கடவுள் எங்கும் இருக்கிறார் என்றால், இங்கே இருக்கிறாரா? ஆம். கடவுள் எல்லோருக்குமானவர் என்றால், அவர் உங்களுடையவரா? ஆம். கடவுள் எங்கும் இருப்பவர் என்றால், அவர் இங்கும் இருக்கிறாரா? அவர் எப்போதும் இருந்து வருகிறார் என்பதால் எங்கே இப்போது இருக்கிறார்! அவர் எல்லோருக்குமானவர் என்பதால் அவர் என்னுடையவரும் கூட. எல்லாம் நடப்பதற்கான தளம் அவர்; அவர் எதையும் செய்யது முடிக்கக்கூடியவர், அதனால் எனக்குத் தேவையான எதையும் நிறைவேற்ற முடியும். இந்த நான்கும் தெரிந்திருந்தால் அதுவே போதும். வேறு எதுவும் உங்களுக்குத் தேவையில்லை. எனவே நீங்கள் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டியது என்னென்ன?

கடவுள் எங்கும் எப்போதும் இருப்பவர், எனவே அவர் இங்கு இப்போது இருக்கிறார். அவர் என்னுடையவர், அவர் என்னுள் இருக்கிறார், என்னிடம் இல்லாதவற்றை நிறைவேற்ற அவர் இருக்கிறார். அவ்வளவு தான். தியானத்தில், ‘நான்’ கரையும் போது, அறிவு கரைகிறது. (உங்களிடம் உள்ள அறிவு மிகக் குறைவு என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே அறிவு கரைய வேண்டும். ஆழ்ந்த உறக்கத்தில் என்ன நடக்கிறது? அறிவு கரைகிறது) அறிவு கரையும் போது, ‘நான்’ என்ற உணர்வு கரையும் போது, பிறகு என்ன எஞ்சி இருக்கிறதோ அதுவே இருக்கும். அதுதான் நிஜமான உண்மை, அதுதான் ‘ஷிவா’, மற்றும் அதுதான் ‘பைரவா’ ‘பைரவா’’ நிலையில் தான் நீங்கள் ‘ஷிவா’’ உடன், ‘ஷிவோஹம்’ உடன் ஒன்றாகிறீர்கள், அங்கு நான் கரைகிறது, அறிவு கரைகிறது, ஆனாலும் எல்லாம் இருக்கிறது.

இதை எப்படி அடைவீர்கள்? இதை பற்று, பற்றின்மை மற்றும் அருள் (அல்லது கருணை) மூலம் அறியலாம். சாதகம் செய்வதில் ஆழ்ந்த பற்று, மற்ற எல்லாவற்றிலும் பற்றில்லாமல் இருப்பது, மற்றவர்கள் மீதும் உங்கள் மீதும் அருளோடு இருப்பது – இவை தான் அந்த மூன்றும். சில சமயம் பிறர் மீது அருளோடும் தங்கள் மீது கடுமையாகவும் நாம் இருப்போம்; அதுவும் நல்லதல்ல. (அருள் – Compassion)

கே: உடல் உறுப்பு தானம், ஒரே பாலினத்தில் திருமணம், இரத்த தானம், கருக் கலைப்பு இவற்றைப் பற்றிய உங்கள் பார்வை என்ன?

குருதேவ்: உடல் உறுப்பு தானம் சரிதான், நீங்கள் செய்யலாம்; அதில் ஏதும் தவறு இல்லை. இந்தப் பிரச்சினைகள் எல்லாம் வெகுவாக தொடர்புடைய விஷயங்கள். இதை நீங்கள் நல்லவை, கேட்டவை, எனக்கு வேண்டும், வேண்டாம் என்று குறிப்பிட்டு பெயரிட வேண்டாம். நீங்கள் என்ன தேர்வு செய்தாலும், கவலை வேண்டாம், அது பரவாயில்லை. ஆனாலும், இந்தச் சிறு சிறு நிகழ்வுகளை விட வாழ்கை மிக அதிகமானது என்பதை நீங்கள் மறக்கக் கூடாது, அது தான் முக்கியம். இந்தப் பொருள் உலகை விட மேலான ஏதோ ஒன்றில் சில கணங்கள், ஒரு சதவீதமேனும் அதில் நம்பிக்கை, நீங்கள் உயர்வடைய இதுவே போதும். நீங்கள் நீரில் இருக்கும் போது, பெருங்கடலில் இருக்கும் போது, உங்களுக்குத் தேவையானதெல்லாம் ரப்பர் மிதவைகள் மட்டுமே; அதுவே போதுமானது. அப்படித் தான் நீங்கள் நீந்தக் கற்கிறீர்கள் அல்லவா? அதைப்போல, எல்லாவற்றிலும் மேலான ஒன்றில் சிறிதேனும் நம்பிக்கை போதும்.

சமஸ்க்ருதத்தில், ஷ்ராத் என்ற வார்த்தை உண்டு, சிரத்தையுடன் இருப்பது, அதாவது நம்பிக்கை. யாராவது இறந்துவிட்டால், நீங்கள் அவர்களை ஞாபகம் வைத்திருக்கிறீர்கள், அவர்கள் இருந்தார்களா இல்லையா என்று சந்தேகம் கொள்வதில்லை. அவர்கள் உங்களுடன் இருந்தார்கள் என்பதும் அவர்கள் போய்விட்டார்கள் என்றும் உங்களுக்குத் தெரியும். அவர்கள் சென்ற அந்த தினத்தில் அவர்களை ஞாபகம் கொள்கிறீர்கள், அதுதான் சிரார்த்தம், அப்படியென்றால் நம்பிக்கை.

அவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதில் நம்பிக்கை. மற்றும் என்ன செய்கிறீர்கள்? சிறிது எள்ளை எடுத்து, நீர் விட்டு, ‘திருப்தியடையுங்கள், திருப்தியடையுங்கள், திருப்தியடையுங்கள். உங்கள் மனதில் ஏதேனும் ஆசைகளிருந்தால், இந்த எள்ளைப் போல அவையெல்லாம் மிகச் சிறியவை, அவற்றை விட்டுவிடுங்கள். உங்கள் ஆசைகளை நிறைவேற்ற நான் இருக்கிறேன். நீங்கள் திருப்தியாய் மேலே செல்லுங்கள், நிறைவாய் இருங்கள்.’ என்ற தகவலை அவர்களுக்கு அளிக்கிறோம்.

இறந்து சென்றவர்களுக்கு அவர்கள் குழந்தைகள் இதை தான் சொல்கிறார்கள். அவர்களுடைய குழந்தைகள் தான் இதைச் செய்ய வேண்டும் என்பதில்லை, யார் வேண்டுமாலும் செய்யலாம், அவர்களுடைய நண்பர்கள், யாராவது சொந்தக்காரர்கள் என யார் வேண்டுமானாலும் செய்யலாம். இந்தச் சடங்கு இங்கு பாலியிலும் முக்கியமாக செய்யப்பட்டு வருகிறது. இந்தச் சடங்கில், ஐம்புலன்களும் திருப்தியடையச் செய்யப்படுகிறது; சுவைக்கு உணவு, நுகர்வதற்கு ஊதுவத்தி, ஓசைக்கு பாடல்கள் மற்றும் பார்ப்பதற்கு விளக்கு. இறந்து அந்தப் பக்கம் சென்றவர்களுக்கு நன்றியை காட்ட இது ஒரு வழி. இது ஒன்று மட்டுமல்ல, இதையும் தாண்டி வேறு ஒரு உலகம், இன்னொரு ராஜ்ஜியம், இருப்பதற்கு இன்னுமொரு இடம் இருக்கிறது என்பதை நமக்கு ஞாபகப்படுத்தவும் இந்தச் சடங்குகள் செய்யப்படுகிறது. உங்கள் கண்கள் திறக்கப்படுகிறது.

கே: குருதேவ்,போன பிறவியில் நாங்கள் என்ன செய்தோமோ, இந்த பிறவியில் எங்களுக்கு நீங்கள் அவ்வளவு தருகிறீர்கள். நாங்கள் ஆசைப்படுவதற்கு முன்னேயே எங்களுக்கு அது கிடைக்கிறது. எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி.

குருதேவ்: மிக்க நன்று. நாம் எவ்வளவு அதிகமான நன்றியோடு இருக்கிறோமோ அவ்வளவு பரிசுகள் நம் வழி வருகிறது. உங்களில் எத்தனை பேர் இதை அனுபவித்திருக்கிறீர்கள். நீங்கள் என்னவெல்லாம் ஆசைப்படுகிறீர்களோ, அவையெல்லாம் உண்மையாகிறது. உங்களுக்கு ஏதேனும் வேண்டுமானால், அவையெல்லாம் நடக்கிறது. அவ்வளவு தான்! உங்களுக்கு என்ன வேண்டுமோ அது கிடைக்கிறது; அதுதான் நம் பாதையின் அழகு. சில சமயம், சில குறும்புகளும் செய்ய வேண்டும்; அதிக கடினமான மனநிலைக்குச் செல்லாமலிருக்க. இந்த அழகிய ஞானம் மிக ஆழமாய் இருந்தாலும் கூட, அதை நாம் விளையாட்டாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்; அதாவது மிக கடுமையான மன நிலையோடு அதில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதனால் தான் இது லீலை என்று அழைக்கப்படுகிறது. அப்படியென்றால் விளையாட்டு அல்லது நாடகம், அதாவது இறைவனின் லீலை; ராம லீலை, கிருஷ்ணா லீலை. எனவே, இந்த முழு பிரபஞ்சமும் ஒரு விளையாட்டு மற்றும் மெய்யுணர்வின் ஒரு காட்சி, கடவுளின் விளையாட்டு.

வாழ்கையும் ஒரு விளையாட்டு தான்; ஒரு நாடகம், சண்டையோ போரோ அல்ல. நீங்கள் அதை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். ஆனாலும்,அந்த விளையாட்டு முடியும், எல்லோரும் இறக்கப் போகிறார்கள். எல்லோரும் இறக்கப் போகிறார்கள். எல்லோரும் அந்த ஒளியுடன் ஒன்றிணையப் போகிறார்கள், ஒரு நாள் இல்லை என்றால் வேறொரு நாள், சில முறைகள் சுற்றிச் சுற்றி. எனவே, வாழ்கை இரண்டுமானது; ஆழமானதும் அதே சமயம் மகிழ்ச்சி, விளையாட்டு மற்றும் சந்தோஷமானதும் கூட.

கே: மகாபாரதத்தில் சிக்கியிருக்கிறோம் என்று எப்படி தெரிந்துகொள்வது? எப்படி அதிலிருந்து வெளி வருவது?

குருதேவ்: இது எப்படி இருக்கிறது என்றால், ‘எனக்கு ஜலதோஷம் பிடித்திருப்பது என்பதை எப்படி தெரிந்து கொள்வது.’ என்று கேட்பது போல இருக்கிறது. நீங்கள் ஜலதோஷத்தை உணரும் போது உங்களுக்கு ஜலதோஷம் இருப்பதை தெரிந்துகொள்வீர்கள். எனவே நீங்கள் மகாபாரதத்தில் இருக்கும் போது, நீங்கள் பெரிய சிக்கலில், சண்டையில் சிக்கியிருக்கிறீர்கள் என்று அர்த்தம், வெளிப்படையாகத் தெரியும், உங்கள் தூக்கம் கெடும்.

வாழ்க்கையில், நீங்கள் ஒரு சச்சரவை, சண்டையை பார்த்தால், அது ஒரு நன்மைக்காக என்று தெரிந்தால், எழுந்து நின்று சண்டையிடுங்கள் போதும். சண்டையிடுவதற்கு உகந்ததல்ல என்று தோன்றினால், அதனால் எந்த பயனுமில்லை என்று உணர்ந்தால், உங்கள் உத்தியை மாற்றிக் கொண்டு அதிலே சிக்காமல் தாண்டிச் சென்றுவிடுங்கள்.

கே: எந்தப் புள்ளியில் உயிர் உருவாக்கப்படுகிறது? பிறப்பின் போதா, கருவுரும் போதா அல்லது இதற்கிடையே எப்போதேனும் நடக்கிறதா?

குருதேவ்:இது மூன்றுமே சாத்தியம். கருவுரும் போதோ, அல்லது ஐந்தாவது மாதத்திலோ, அல்லது அரிதாக சில விஷயத்தில் பிறக்கும் போதோ கூட ஒரு ஆத்மா வரலாம். இவையெல்லாம் பிறப்பின் இரகசியம், இவற்றைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கக் கூடாது. ஐம்பெரும் இரகசியங்களுள், பிறப்பின் இரகசியமும், இறப்பின் இரகசியமும் அடங்கும், இவற்றை பற்றி எல்லாம் நாம் அதிகம் பேசிக்கொண்டிருக்கக் கூடாது. ஆனால், நீங்கள் அதை அறியலாம்; தியானத்தில் ஆழமாய்ப் போய் அறிந்துகொள்ளலாம்.

கே: மற்ற கிரகங்களில் என்ன வகை உயிரினங்கள் இருக்கின்றன? நம்முடைய ஆன்மீக உலகம் தான் அவர்களுக்கும் உள்ளதா?


குருதேவ்: ஆம், நம்முடைய பூமியைப் போல பல உலகங்கள் இருக்கின்றன. நம்முடைய பண்டைய நூல்களின் கூற்றுப்படி, உங்களை போலவே ஐந்து உலகங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கின்றன.