அமைதி எனக்குள் துவங்குகின்றது

சனிக்கிழமை, 30 ஆகஸ்ட், 

டெல்லி, இந்தியா

(நீங்கள் போதிப்பதை பயிற்சி செய்யுங்கள் என்னும் இடுகையின் தொடர்ச்சி)

மூன்று விதமான சந்தேகங்கள் உள்ளன.
1. நம்மை நாமே சந்தேகிப்பது
2. நம்மைச் சுற்றி இருப்பவர்களை சந்தேகிப்பது
3. இறைவனையே சந்தேகிப்பது

நாம் கடவுளை கண்டதில்லை. ஆகவே, எப்போதும் மனதின் ஓரத்தில், கடவுள் இருக்கின்றாரா இல்லையா என்னும் சந்தேகம் எழுகின்றது.முதலில் நாம் செய்ய வேண்டியது, மக்களை எவ்வாறு இருகின்றார்களோ அவ்வாறே ஏற்றுக்கொள்வது. நாம் சமுதாயத்தில் எல்லோரையும் ஒரு சந்தேகக் கண்ணோடேயே காண்கின்றோம். எப்போது நம்மைப் பிறர் சந்தேகமின்றிக் காண வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்போது, நாமும் பிறரை அவ்வாறே காண வேண்டும்.

இவ்வாறு நான் கூறுவதால், சுற்றியிருக்கும் அனைவரையும் கண்மூடித்தனமாக எல்லாவற்றிற்கும் நம்பவேண்டும் என்னும் பொருள் அல்ல. ஏதோ ஒரு தெரியாத நபரிடம், உங்கள் பணப்பையைக் கொடுக்கலாம் என்றோ அவன் அதனுடன் ஓடி விட்டால் பரவாயில்லை என்றோ பொருளல்ல.இது அல்ல நான் கூறுவது, நம்முடைய மனதில் என்ன எண்ணம் ஓடிக் கொண்டிருக்கின்றது என்பதை விழித்துணர வேண்டும். இதற்குத்தான் கவனம் செலுத்த வேண்டும். நம்மை முன்னேற்றிக் கொள்ளாத வரையில், நம்முள்ளிலிருந்து மகிழ்வும், அன்பும் தூண்டப்படாத வரையில், எவ்வாறு அமைதியும் மகிழ்ச்சியும் சமுதாயத்திலும் உலகெங்கிலும் ஏற்படும்? ஆகவே முதலில் செய்ய வேண்டியது, பிறரை எவ்வாறு இருக்கின்றார்களோ அவ்வாறே ஏற்றுக் கொள்வது ஆகும்.

வாழ்வில் உங்களைப் போன்றே இருக்கும் இருப்பவர்களை எத்தனை பேர் சந்தித்திருக்கின்றீர்கள்? அனைவரும் உங்களை போன்றே சிந்தித்து செயல்பட வேண்டும் என்று விரும்புகின்றீர்கள். உங்களை போன்றே ஒருவரை சந்தித்தால், ஐந்து நிமிடங்கள் கூட நீங்கள் அவரை சகித்துக் கொள்ளமாட்டீர்கள். உண்மை என்னவென்றால், உங்களை போன்றே சிந்தித்துச் செயல்படும் ஒருவரை ஏற்றுகொள்வது மிகக் கடினமான விஷயம். இதுதான் வாழும் கலையின் அடிப்படைத் தத்துவம்.

உலகில் ஒரு ஏசுதான், ஆயினும் எத்தனை  விதமான கிறிஸ்தவ பிரிவுகள் உள்ளன தெரியுமா? இன்று உலகில் 72 விதமான கிறிஸ்தவப் பிரிவுகள் உள்ளன. எத்தனை இஸ்லாமியப் பிரிவுகள் உள்ளன? ஐந்து பிரசித்தி பெற்ற பிரிவுகள்,ஷியா சுன்னி,அஹ்மெதயா,சுபி போன்றவை. ஒரே ஒரு புத்தர் தாம் ஆயினும் 32 புத்தமதப் பிரிவுகள் உள்ளன. ஹிந்துமதப் பிரிவுகள் எண்ணிக்கையிலேயே அடங்காது.(சிரிப்பு) ஒவ்வொரு சிறப்பு மிக்க துறவிக்கும் ஒரு பாரம்பர்யமும் அதைப் பின்பற்றும் பிரிவினரும் உள்ளனர். சீக்கியமதத்திலும் பல பிரிவினர் உள்ளனர். காலப் போக்கில் பல்வேறு துறவிகள், பல்வேறு சமயக் கொள்கைகள் தோன்றின. நாம் அனைத்து வேறுபட்ட பாரம்பர்யங்களும் பிரிவுகளும் வளர்ந்து செழிக்கச் செய்ய வேண்டும்.

ஒருவர் அனைவரும் ஒரே விதமாக சிந்தித்து செயல்பட செய்ய வேண்டும் என்று முயற்சித்தால், அதன் விளைவு இன்று நாம் சிரியா எகிப்து ஆகிய நாடுகளில் காண்பதைப் போன்று ஆகிவிடும். அந்நாடுகளின் நிலை மிக துரதிர்ஷ்டமானது. அங்கு வர்த்தகம் செய்யும் ஒரு சர்தார்ஜி நம்மிடையே இன்று இருக்கின்றார். அவருடன் இரண்டு மருத்துவர்களை அந்நாட்டு மக்களுடன் பேசுமாறு நான் அனுப்பி வைத்து வைத்தேன். சதாம் ஹுசைனின் காபினட் அமைச்சர்களுடன் பேசுமாறு கூறினேன். அவர்கள் நிதித்துறை அமைச்சரிடம் பேசினார்கள். அவரை சதாம் ஹுசைனிடம் ரத்தம் சிந்தும் துன்பமிகு போரினைத் தவிர்த்து விடுமாறு தெரிவிக்கக் கோரினோம். அதற்குப் பின் நடந்தவை பெரிய கதை. ஆயினும் துரதிர்ஷ்டவசமாகப் போர் நிகழ்ந்தது. அங்கு செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அருகில் ஒரு மறுவாழ்வு மையத்தை ஏற்படுத்தினோம். போரின் போது செஞ்சிலுவைச் சங்கக் கட்டிடம் தாக்கப்பட்டு அங்குள்ளோர் இடம் பெயர்ந்தனர். நானும் நமது மையதொண்டர்களை அவ்விடம் விட்டுச் சென்று விடுமாறு கூறினேன்.

அதற்கு அவர்கள் என்ன பதிலுறுத்தார்கள் தெரியுமா? "குருதேவ், நாங்களும் எங்கள் கடமையைப் புறக்கணித்து ஓடி விட்டால் காயமுற்று இருக்கும் இம்மக்களை யார் கவனித்துக் கொள்வார்கள்? ஒவ்வொரு நாளும் 700 பேருக்கு மருத்துவ வசதி தேவைப்படுகின்றது. நாங்கள் இங்கேயே இருந்து  இவர்களைக் கவனித்துக் கொள்கின்றோம். தாங்கள் எங்களை நேசிக்கின்றீர்கள். எங்களைக் காக்க இறைவன் இருக்கின்றான்." என்று கூறினார்கள். 

போரினால் ஏழுலட்சம் பெண்கள் விதவையர் ஆனார்கள்.அங்குள்ள நிலவரத்தை காண நான் மூன்று முறை இராக் சென்றேன். அங்குள்ள மக்கள் தங்கள் பகுதிகளில் பெரிய தடித்த சுவர்களை எழுப்பியுள்ளனர். ஷியா பகுதி தனியாகவும்,சுன்னி பகுதி தனியாகவும் உள்ளன. எங்களுடன் ஒரு சுன்னி இமாமை (மதத்தலைவர்) அழைத்துக்கொண்டு ஒரு கிராமத்திற்குச் சென்றோம் அங்கு 8000 மக்கள் போரின் காரணமாக தப்பி வந்தவர்கள். அங்குள்ள மக்களிடமும், தலைவர்களிடமும் ஒரு மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் பேசினோம். அவர்கள் புரிந்து கொண்டு எங்களை வரவேற்றனர். மெதுவாக ஒரு அமைதியான சூழல் உருவாக்கப்பட்டது. இராக்கிய அரசு 50 இளைஞர்களை பயிற்சிக்காக நமது பெங்களூரு ஆஸ்ரமத்திற்கு அனுப்பி வைத்தது. அவர்கள் அனைவருக்கும் குடும்பமும்,பணியும் இருந்தன, ஆயினும் அவர்கள் தங்கள் நாட்டின் முன்னேற்றத்தின் பொருட்டு பயிற்சிக்காக வந்தனர்.

இன்று பல போர்கள் ஏற்படுவதற்குக் அமெரிக்க போர் தளவாடங்கள் செய்யும் தொழிற்சாலைகள் காரணமாக இருக்கின்றன. அவர்கள் தங்களது பொருட்களை விற்றாக வேண்டும் இல்லையெனில் அத்தொழிற்சாலைகள் மூடப் பட்டுவிடும். அத்தொழில்சாலைகளில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் இவை தயாரிக்கப்பட்டு போரின் இருதரப்பினர்க்கும் விற்கப்பட்டு, போர் செய்ய ஊக்குவிக்கப் படுகின்றன. இந்தியாவும் அதை செய்யலாம். ஹிந்துக்களும்,இஸ்லாமியரும் ஒருவரையொருவர் எதிர்த்துப் போரிடச் செய்ய முடியும். அவ்வாறு செய்வதில்லை. எல்லா தொழிற்ச்சாலைகளையும் பற்றிக் கூறவில்லை. உலகெங்கும் உள்ள துப்பாக்கி வெடிகுண்டு பிரச்சாரத்தைப் பற்றி மட்டுமே கூறுகின்றேன். இது ஒரு நாட்டில் மட்டுமல்ல. எங்கிலும் இது பரவிக் கொண்டிருக்கின்றது. ஏன் இவ்வாறு நிகழ்கின்றது? ஏனெனில் மனித நேயப் பண்புகளுக்கு முக்கியத்துவம் இல்லை.மேலும் மேலும் பணம் ஈட்டுவதை மட்டுமே பார்க்கின்றார்கள். சிரியா, இரான் போன்ற நாடுகளில் இதுவே நிகழ்ந்து கொண்டு இருக்கின்றது. இதைக் காண மிகவும் வருத்தமாக உள்ளது. நமது நாட்டில் அஸ்ஸாம், நாகாலாந்து ஜம்மு காஷ்மீர் ஆகிய இடங்களிலும் இவ்வாறே நிகழ்ந்து வருகின்றது.

வாழ்க்கை மிகவும் குறுகியது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.அன்பு செலுத்தப் போதிய காலம் இல்லாத போது ஏன் வெறுப்பையும், ரத்தம் சிந்துதலையும் எல்லா இடங்களிலும் பரப்பவேண்டும்? எங்கு அனைவரும் சுதந்திரமாக தங்களது சமயத்தை பின்பற்றி பிறருடன் ஒத்திசைந்து வாழ்கின்றனரோ, அங்கே ஓர் புதிய உலகம் தோன்றுகின்றது. இந்தியாவில் அவ்வாறே உள்ளது.ஏன் இந்தியர்கள் ஆண்,பெண் தெய்வங்களை வழிபடுகின்றார்கள் என்று சிலர் கேட்கலாம். இது தவறான புரிதல் ஆகும். ஒரே இறை, தனிப்பட்ட இணைப்பையும், ஆழ்ந்த ஒருமையையும், அடைவதற்காக தங்களுடைய சொந்த வழியில் மக்கள் வழிபடுகின்றார்கள், அதனாலேயே பல இறை உருவங்களும்,பல பெயர்களும் இருக்கின்றன.உருவ வழிபாட்டின் போது அக்கற்சிலையை வழிபடுவதில்லை,பின்புலத்தில் உள்ள இறைமையையே வழிபடுகின்றார்கள். இது எவ்வாறெனில், நமது அன்புக்குரியவர்களின் புகைப்படத்தை நாம் எங்கு சென்றாலும் எடுத்துச் செல்கின்றோமே அதைப் போன்றது ஆகும். நமது குழந்தைகளின் படத்தை வைத்துக் கொண்டிருக்கின்றோம். அவர்கள் அங்கில்லாவிடினும் ஒரு தீவிர தொடர்பு ஏற்படுகின்றது. அது போன்றே தெய்வ சிலைகளும் ஆகும். தெய்வச் சிலையானது இறைமையுடன் ஒரு இணைப்பை உருவாக்கவே ஏற்படுத்தப்பட்டதாகும்.