கொடுப்பதில் உள்ள ஆனந்தத்தை பகிர்ந்து கொள்ளவும். . . . .

மே 15, 2014

பெங்களூர், இந்தியா


கே: செல்வந்தன் சொர்க்கத்தில் நுழைவதை விட, ஊசியின் துளையில் ஒட்டகம் நுழைவது எளிதானது என்று பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசு ஒரு பொதுவுடைமைவாதியா?   பணக்காரர்களுக்கு எதிரானவரா?

ஸ்ரீஸ்ரீ: நான் இதற்கான மற்றொரு விளக்கத்தினை கேள்விப்பட்டேன். ஜெருசலத்தில் 'ஊசியின் கண் வாயில்' என்ற பெயரில் ஒரு வாயிற்கதவு உள்ளது. அது மிகவும் சிறியது என்பதனால் ஒரு ஒட்டகம் அதில் நுழைந்து செல்வது என்பது மிகவும் கடினம். ஆகவே இது ஒரு விளக்கமாக இருக்கலாம். போதகர்கள், ஒன்றை சொல்லும் போது அவர்கள் சொல்கின்ற காலத்திற்கும் அக்காலத்தில் வாழும் மக்களுக்கும் ஏற்றவாறு சொல்வார்கள். அதனால் தான் ஏசுவும் அவ்வாறு சொல்லியிருக்க கூடும். இதற்கு அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்றோ அல்லது செல்வந்தர்கள் அனைவரும் கெட்டவர்கள் என்றோ பொருள் இல்லை. நீங்கள் வார்த்தைகளின் சாரத்தினை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் உணர்ச்சியற்றவர்களாக இருந்தால் சொர்க்கத்திற்கு செல்ல வழியே கிடையாது என்பதே  இதன் சாரம். அக்காலத்தில் பெரும் செல்வந்தர்கள் மிகவும் உணர்ச்சியற்றவர்களாகவும் பிறரைப் பற்றி அக்கறை கொள்ளாதவர்களாகவும் இருந்தனர். அவர்கள் பணத்தின் மீது மட்டுமே அக்கறை கொண்டிருந்தனர். அதனால் தான் அவர் அவ்வாறு சொல்லியிருக்க கூடும். உண்மையில் இயேசு  உலகை விட்டு நீங்கிய பின் 70 ஆண்டுகள் கழித்து பைபிள் எழுதப்பட்டுள்ளது. ஆகவே இப்போது அதன் நம்பகத்தன்மை பெரும் கேள்விக்குறியாக உள்ளது. சமீபத்தில், 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை இயேசு சிலுவையில் அறையப்படவில்லை  என்று சொல்கின்றன. இது செய்தித்தாள்களிலும் வெளியிடப்பட்டது.

இயேசு கிறிஸ்துவின் முற்றிலும் மாறுபட்ட கதை செதுக்கப்பட்ட செப்புத் தகடுகளை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆகவே நீங்கள் எப்போதும் வெறும் வார்த்தைகளைப் பற்றிக்கொண்டு இல்லாமல் அவற்றின் சாரத்தினை பார்க்க வேண்டும். வார்த்தைகளின் பின்னாலிருக்கும் நோக்கத்தினை பார்க்க வேண்டும். "நான் அமைதியை உண்டாக்க வரவில்லை. தந்தைக்கு எதிராக மகனையும், தாய்க்கு எதிராக மகளையும் வைக்கவே வந்துள்ளேன்" என்று இயேசு சொல்லி இருக்கின்றார். அப்படியென்றால் இயேசு குடும்பங்களை பிரிக்க விரும்பினார் என்று அர்த்தமா?   இல்லை. நீங்கள் எப்போதும் வார்த்தைகள் சொல்லப்பட்ட சூழல், அவற்றின் சாரம், நோக்கம் ஆகியவற்றையே பார்க்க வேண்டும்.
 
அக்காலத்தில் இளைய தலைமுறையினர் வெறுமனே முதிய தலைமுறையினரின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தனர். ஏதேனும் மாற்றங்கள் கொண்டு வரவோ அல்லது புரட்சிகரமான  முடிவுகள் எடுக்கவோ இல்லை. அவர்கள் அநீதியை அப்படியே ஏற்றுக்கொண்டு அமைதியாக இருந்தனர். அத்தனை ஏழ்மையையும்,அடிமைத்தனத்தையும் அப்படியே ஏற்றுக்கொண்டனர். முதிய தலைமுறையினர் ஏற்றுக்கொண்ட காரணத்தினால் இளைய தலைமுறையினரும் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்து துன்பகரமான வாழ்க்கையை நடத்தினர். ஆகவே தான் ஏசுநாதர் சொன்னார், " நான் இங்கே அமைதியை கொண்டு வருவதற்காக மட்டும் வரவில்லை. தந்தைக்கு எதிராக மகனையும், தாய்க்கு எதிராக மகளையும் வைத்து மாற்றத்தினை கொண்டு வர விரும்புகின்றேன். முதிய தலைமுறையினர் ஏற்றுக்கொண்டு வாழும் பரிதாபகரமான வாழ்க்கைக்கு எதிராக இளைய தலைமுறையினர் கிளர்ந்து எழ வேண்டும் என்று நான் விரும்புகின்றேன். "அதற்காகவே ஏசுநாதர் "நான் தந்தைக்கு எதிராக மகனை நிறுத்த வந்துள்ளேன்" என்று சொன்னார். 

அது போலவே தான், "ஒரு ஊசியின் கண் வழியாக ஒட்டகம் கூட நுழைந்துவிடலாம்,ஆனால் ஒரு செல்வந்தன் சொர்க்கத்தில் நுழைய முடியாது" என்று சொன்னதன் பொருள் "நீங்கள் மற்றவர் பற்றிய உணர்ச்சி அற்றவராகவும், பிறருக்கு சேவை செய்யாமல் அனைத்தையும் வைத்துக் கொள்பவராகவும் இருந்தால் உங்களுக்கு மகிழ்ச்சியே இருக்காது' என்பது தான். உங்களுக்கு தெரியுமா! கொடுப்பதிலும் பங்களிப்பதிலும் தான் மகிழ்ச்சி உள்ளது. சொர்க்கம் என்பது என்ன? சந்தோஷமும், மகிழ்ச்சியுமே. கஞ்சத்தனம் உள்ள ஒருவனால் கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாது. அது தான் அதனுடைய அர்த்தம்.

மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுவது தான் கம்யூனிசம் என்றால் அவர் ஒரு கம்யூனிஸ்ட் தான். கடவுள் என்று ஒருவரை ஒத்துக் கொள்ளாதது கம்யூனிசம் என்றால் அவர் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல. அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும், அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் போன்றவையே கம்யூனிசத்தின் விளக்கம் என்றால், அவர் கம்யூனிஸ்ட் தான். சில கம்யூனிசத் தலைவர்கள் பதவியில் நீடித்திருக்க வேண்டும் என்பதற்காக பல லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி இன்றும் பலருக்கு தெரியாது.அவர்கள் பதவியில் இருப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வை இழந்தனர். அது சிவப்பு புரட்சி. அது அமைதியான ஒரு புரட்சி அல்ல. இந்த உலகத்தில் ஒரு ரத்தம் சிந்திய புரட்சி.

கம்யூனிசம் வன்முறையை வளர்க்கும் எனில் நாம் அதற்கு எதிரானவர்கள். அவர்கள் கடவுளை ஏற்றுக் கொள்கிறார்களா இல்லையா என்பது ஒரு பொருட்டல்ல, அது ஒரு சிறு விஷயமே. நீங்கள் ஒரு நாத்திகராக இருக்கலாம், பரவாயில்லை. நாத்திகராகவே ஒரு நல்ல மனிதராக இருக்கலாம். ஆனால் கம்யூனிசம் என்ற பெயரால் வன்முறையை அனுமதிக்கவோ அல்லது நியாயப்படுத்தவோ செய்தால் அது ஏற்கத்தக்கது அல்ல. ஆனால் அது தான் நடந்தது. மேற்கு வங்காளத்தில் தாங்க முடியாத மற்றும் மன்னிக்கத்தகாத அளவு வன்முறை இருந்ததால், மக்கள் கம்யூனிஸ்டுகளை நிராகரித்தனர்.   
 
கே: குருதேவ்! யோகப்பாதையில் செல்ல பயிற்சி, நடுநிலைமை ஆகிய இரண்டு அவசியமாகின்றன. இந்த இரண்டையும் எவ்வாறு தனித்தனியாக வளர்த்துக் கொள்ளுவது?

ஸ்ரீஸ்ரீ: ஞானம் உங்களை நடுநிலைமைக்கு கொண்டு செல்லும் மற்றும் உங்களுடைய செயல் உங்களை பழக்கத்திற்கு  கொண்டு செல்லும். பயிற்சியில் பழக்கம் ஏற்பட நாம் பிராணயாமா, தியானம் ஆகியற்றை செய்ய வேண்டும். ஞானம் மற்றும் விழிப்புணர்வு உங்களுக்கு சாந்தத்தையும் நடுநிலைமையையும் ஏற்படுத்தும். நீங்கள் மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் - அனைத்துமே ஒன்றுமில்லை. எதையாவது செய்வதற்கு முனனால் அங்கு ஒன்றுமே கிடையாது. அனைத்தையும் செய்து முடித்த பின்பும் அங்கு ஒன்றும் இருக்காது. எனவே, இல்லை என்பதே அனைத்தும் இருப்பதாகும் .

முதலில் ஒரு நாத்திகராக இல்லாமல் இருந்து ஒரு உண்மையான விசுவாசியாக மாறியிருக்க முடியாது. நாத்திகராக இருப்பது அவசியமாகிறது. எனவே முதலில் ஒரு நாத்திகவாதியாக இருங்கள். நாத்திகவாதி என்பதன் பொருள் என்ன? ஒருவர் எதையுமே நம்பாமல் இருப்பது தான் நாத்திகவாதம். நீங்கள் இதில் எனக்கு நம்பிக்கை இல்லை! அதில் எனக்கு நம்பிக்கை இல்லை! எனக்கு எதிலுமே நம்பிக்கை இல்லை! என்றெல்லாம் கூறும் போது, அவை எல்லாம் ஒன்றுமே இல்லை. நீங்கள் பார்ப்பவை எவற்றையுமே ஒன்றும் இல்லை என்று உதறி விட்டால் பின் உங்களால் அது என்ன என்று பார்க்க முடிய வேண்டும். அதனால், நீங்கள் முதலில் ஒரு நாத்திகராக இல்லாமல் இருந்து ஒரு உண்மையான விசுவாசியாக மாறியிருக்க முடியாது. 

அதனால் தான் ஆரம்பத்தில் நீங்கள் எதையும் நம்ப வேண்டாம், மற்றவர்களின் வார்த்தைகளையும் நம்ப வேண்டாம். பிறகு, உங்கள் மனம் சொல்லுவதையும் நம்ப வேண்டாம். ஒவ்வொன்றையும் ஒதுக்கி வைத்து விடும்போது, நீங்கள் எந்த முடிவுக்கும் வரமுடியாது. நீங்கள் ஒரு முடிவுக்கும் வர முடியாத போது, எதுவுமே இல்லை என்பது தான் அனைத்துமே என்பதை உணர முடியும். இது ஒரு அழகான ஞானம். இந்த மாதிரியாக, நம்பிக்கையின்மையில் இருந்து பூரண நம்பிக்கையை அடைகின்றோம். நாத்திகவாதத்தில் இருந்து அறிவில் முதிர்ச்சி அடைந்த நிலையை எட்டுகிறோம்.  உண்மையில் நல்ல நாத்திகவாதி தான் ஒரு நல்ல நம்பிக்கையாளராக மாற இயலும்.

கே: குருதேவ்! எவ்வாறு நம்முடைய ஆர்வமான எண்ணங்களை அதே ஆர்வத்துடன் செயலாக மாற்ற முடியும்?

ஸ்ரீஸ்ரீ: அதிக சிந்தனை செய்ய வேண்டாம். எதையாவது செய்ய வேண்டும் என்னும் சிந்தனை எழும் போது, அதை செயலாக்காமல் உங்களால் அமைதியாக இருக்க முடியாது, என்பது தான் ஆர்வம் எனப்படும். ஆர்வத்துடன் எண்ணங்கள் தோன்றும் போது, அது தானாகவே செயலாக்கப்படும், அதில் தாமதம் இருக்காது. எது முக்கியமென்றால், மந்தமாக இருக்கக் கூடாது. உங்களிடம் நல்ல எண்ணங்கள் இருந்தும் நீங்கள் மந்தமாக இருந்தால், அங்கே ஆர்வம் இல்லை என்பதே பொருள். ஆர்வமே உங்களுடைய எண்ணங்களை செயலாக மாற்றக்கூடிய  ஒரு கருவி.

அதனால் தான் நீங்கள் எதையாவது செய்ய வேண்டி இருப்பின் அதை நீங்கள் தனியாக செய்வதை விட இரண்டு அல்லது மூன்று பேர் கொண்ட குழுவாக செய்வது நல்லது. அப்பொது உங்களுடைய ஆர்வம் சற்று குறைந்தாலும் மற்றவர்கள் உங்களை அவர்களுடன் அழைத்து செல்லுவார்கள். சில சமயங்களில், மற்றவர்களுடைய ஊக்குவிப்பு அல்லது உந்துதல் ஆர்வத்தை அதிகரிக்கும். எனவே படிப்பதோ அல்லது பயிற்சி செய்வதோ எதுவாகினும், மூன்று நான்கு பேர் கொண்ட குழுவாக செய்யலாம். நான் இங்கே வந்து கொண்டிருக்கும் போது, வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று இசை வகுப்புகளை துவக்கலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். யாருக்கெல்லாம் இசை கற்றுக்கொள்ள வேண்டுமென தோன்றுகிறதோ அவர்கள் இங்கே வந்து கற்கலாம். ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் வகுப்புகள் வைக்கலாம். நாம் அதை செய்தால் உங்களில் எவ்வளவு பேர் வந்து பயில விரும்புவீர்கள்? பலர் இங்கே வருகிறீர்கள். இங்கும் அங்குமாக சுற்றித்திரிந்து நேரத்தை வீணாக்காமல் தபேலா, ஹார்மோனியம், புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகள் வாசிக்க பயிலலாம். கற்றுக்கொள்ளுவது நல்லது.  

சாஸ்திரங்கள், பகவத்கீதை, உபநிஷதங்கள் போன்றவைகள் பயிலவும் நாம் வகுப்புகள் நடத்தலாம். ஆசிரமத்தில் வாராந்தர வகுப்புகளும் ஏற்புத்தலாம். மக்கள் ஏதாவது பயின்று கொண்டோ இருக்க வேண்டும். நீங்கள் மேலே கூறியவைகளைத் தவிர சேவையும் செய்ய வேண்டும். நீங்கள் சேவை செய்வதை விடுத்து புல்லாங்குழல் வாசிக்க வேண்டும் என்று கூற வில்லை. அது ஏற்கத்தக்கதல்ல. சேவை அவசியமானது.