வியாழன் - 29 மே - 2014.
பெங்களூரு, இந்தியா
குருதேவ், பாகவத கீதையில் பகவான் கிருஷ்ணர்
குறிப்பிட்டுள்ள மூன்று வகையான த்ரித்திகளின் (பலங்கள் அல்லது மனோதிடத்தின்) யாவை?
குருதேவ்: அவை மூன்று வகைகள்: ஞானம் (அறிவு) ,கர்மா,(செயல்) கர்த்தா
(செய்பவர்). அது போன்று புத்தி, த்ரிதி (பலம்) மற்றும் தானம் இவை பகவத்
கீதையில் விளக்கி கூறப்பட்டுள்ளது. ஸ்ரீ கிருஷ்ணர்
கூறுகின்றார்,"த்ர்த்ய யாய தரயதெ மன - ப்ரானேந்த்ரிய - க்ரியாஹ்.
யோகேநவ்யாபிசரின்ய த்ரித் ஸ பார்த்த
சத்விக் (18.33). அதாவது,“ ஒருவன்
சலனமில்லாத முயற்சியுடன் யோகா தியானத்தின் மூலம் மனதின் செயல்பாடுகள், ஐந்து வாயுக்கள், ஐம்புலன்கள் இவற்றைக்
கட்டுப்படுத்தும் போது ஏற்படும் திடநிலை சத்விக்
ஆகும் அர்ஜுனா" என்று கூறுகின்றார். எது
உயிர்நிலையை காத்து நிலைத்திருக்கச் செய்கின்றதோ அதுவே த்ரிதி என்பது ஆகும். மூன்று வகையான
த்ரிதிக்கள் உள்ளன. அவை, சத்விக் த்ரிதி, ரஜசிக் த்ரிதி, மற்றும்
தமசிக் த்ரிதி ஆகும். சிலருக்கு சிறு
விஷயங்களில் கூட மனதிடம் பாதிக்கப்படும். மனம் அலை பாய்ந்து, ஒரு சிறு அவமானத்தை கூடத் தாங்க முடியாமல்
இருப்பர். சிறு குறைபாட்டினை கூடத் தாங்கிகொள்ள முடியாது. இது மன திடக் குறைவைக்
காட்டுகின்றது.
சத்விக்
த்ரிதிதான் (சத்வ அல்லது நேர்மறையில் இருந்து உருவாகும்
மனநிலை) மனதை நிலைநிறுத்தி உயிர்நிலையும்,
புலன்களின் அனைத்து செயல்பாடுகளையும்
தாங்குகின்றது.
உதாரணமாக உங்கள் நாக்கிற்கு பல்வகை உணவுகளைச் சுவைக்க விருப்பம்
இருந்தாலும், உங்கள் மனம் அதைக் கட்டுப்படுத்தி அதிக அன்பவித்தலைத் தடுக்கின்றது. நீங்கள், மூன்று
நாட்களுக்கு அல்லது பத்து நாட்களுக்கு விரதம் இருக்க முடிவெடுக்கின்றீர்கள். இடையில், உங்கள் மனம் அமைதியிழந்து,"ஒ! பரவாயில்லை,விரதத்தை சற்று நிறுத்தி, ஏதேனும் நல்ல உணவு உண்ணலாம், என்ற எண்ணம் தோன்றுகின்றது. ஆனால் ஏதோ ஒரு ஆழ் மனபலம் நீங்கள் விரதத்தை நிறுத்தி
விடாமல் உங்களைக் காக்கின்றது. தடைகளையும் சபலங்களையும் மீறி, தடுமாற்றமற்ற நிலையுறுதி
கொள்ள செய்வதே சத்விக் த்ரிதி ஆகும்.அது
உங்களது மனதை அலைபாயாமல், ஒழுங்குபடுத்தி, நிலை நிறுத்த உதவுகின்றது. அத்தகைய திடநிலை, (மனத்துணிவு அல்லது விடாமுயற்சி ) உங்களை,"
நான் என்ன செய்யத் துணிந்தேனோ, அதை விடாமல் செய்து முடிப்பேன்" என்று எண்ண வைக்கின்றது,
அதுவே சத்விக் த்ரிதி ஆகும். இங்கு ஸ்ரீ கிருஷ்ணர்,"
யோகத்தில் எது உன்னை நிலை நிறுத்த உதவுகின்றதோ அதுவே சத்விக் த்ரிதி. ஒரு நாள் யோகத்தில் இருந்து, அடுத்த நாளே போகத்தில் (புலன்களின்
சுகம்) திளைப்பது அல்ல அது என்று கூறுகின்றார்.
ஒரு கணம் தியானத்திலும்
மறுகணம் உங்கள் போகத்தை நோக்கித் திரும்புவதும் கூடாது. இது சத்விக் த்ரிதி அல்ல. எது உங்கள் மனதினை நிலைநிறுத்தி, வாழ்வில் ஒருமுனைப்பான
குவியத்தை ஏற்படுத்துகின்றதோ, உங்கள் மனதை நிலைநிறுத்தி, உயிர்நிலையும், ஐம்புலன்களின்
செயல்பாடுகளையும் உயர்த்தித் தாங்குகின்றதோ, அதுவே சத்விக் த்ரிதி ஆகும்.அடுத்த செய்யுளில், ஸ்ரீ
கிருஷ்ணர், தொடர்ந்து, "யயா து தர்ம காமார்த்தம் த்ர்த்ய தரயேத அர்ஜுனா , பிரசன்கேன ப்ஹலகன்க்ஷி
த்ரித் ஸ பார்த்த ரஜசி " (18.34) என்று கூறுகின்றார். மனதை உற்சாகம் கொள்ள செய்கின்றதோ, நடத்தையும்
செயலும் ஒரு பலனை எதிர்நோக்கி இணைக்கபட்டிருக்கின்றனவோ அதுவே ரஜசிக் த்ரிதி ஆகும்.
அத்தகைய ஒருவன் "எனக்கு என்ன தரப் போகின்றாய்? இதன் மூலம் எனக்கு என்ன கிடைக்கும்?
நல்ல பலன் கிடைத்தாலே நான் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வேன்." என்று கூறுவான்.
ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகின்றார்,
ஒரு சூழ்நிலை, அல்லது ஆசை அல்லது பொருள் லாபம் இவற்றினால் நமது செயல்கள் செலுத்தப்பட்டால், அந்த நிலையுறுதி, ரஜசிக் த்ரிதி. அத்தகைய செயல்கள் தர்மத்தின்படி சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம், மனஎழுச்சியின்
காரணமாக ஒருவர் எடுத்துக் கொள்ளும் சபதம் அல்லது உறுதி மொழி அனைத்தும் ரஜசிக் உறுதிமொழிகளே
ஆகும். (அதாவது நேர்மை வழியில் தடுமாற்றமற்ற
நிலையுறுதி கொண்ட மனநிலையில் பிறந்தவை அல்ல) சிலர் "நான் இந்த பணியை செய்து முடிக்கும் வரை ஆஸ்ரமத்திற்குச் செல்ல மாட்டேன் என்று கூறுவதை கேள்வியுற்றிருப்பீர்கள்.உணர்ச்சி வேகத்திலும், மன எழுச்சியிலும், பரிசுகள் போன்ற பலனை எதிர்பார்த்தும் இத்தகைய உறுதிமொழிகளை
எடுத்து கொள்பவர்கள் ரஜசிக் த்ரிதியின்
பாதிப்பில் இருக்கின்றார்கள்.
உதாரணமாக, பலர் இறைமையிடமிருந்து
சில நன்கொடைகளைப் பெறுவதற்காக சடங்குகளை செய்கின்றார்கள். சில பெண்கள் திருமணம் ஆவதற்கு,
மற்றும் நல்ல கணவன் கிடைப்பதற்கு அல்லது நல்ல ஊதியமுள்ள வேலை கிடைக்கும் பொருட்டு சோலா சோமவார் விரதம் மேற் கொள்கின்றார்கள். சில சமய அல்லது ஆன்மீக வழக்கங்களை
மிகச் சாதரணமான பொருள் சார்ந்த பலன்களுக்கோ அல்லது சுய ஆசைகளுக்காகவோ பிரயோகித்தால்
அது ரஜசிக் த்ரிதி ஆகும்.
இறைமையின் மீதுள்ள அன்பினால் செய்யப்படுவதில்லை. இத்தகைய உண்ணா நோன்புகளும் சடங்குகளும் சுய லாபத்திற்காகவே
இறைமையை ஆற்றுபடுத்தும் நோக்கத்தோடு செய்யப் படுபவை. கடவுள் உங்களுடைய ஆசைகளை
நிறைவேற்றுவார் என்று எண்ணியே பட்டினி கிடக்கின்றீர்கள். கடவுளுக்காக அந்தப் பட்டினி
இல்லை. நீங்கள் பட்டினி கிடந்தால் கடவுளுக்கு என்ன லாபம்?
நன்கொடைகளையும்,
பலன்களையும் கருதி, விடாமுயற்சியுடனும் தீர்மானத்துடனும் செயல்படுவது ரஜசிக் த்ரிதி
ஆகும். ரஜசிக் த்ரிதி என்பது பலனை
எதிர்பார்த்து, ஏற்படும் மன நிலை,உற்சாகம், நடத்தை மற்றும் செயல்பாடு ஆகும். அடுத்து, தமசிக் த்ரிதி
என்பது என்ன? ஸ்ரீ கிருஷ்ணர் அடுத்த செய்யுளில் "யய ஸ்வப்னம் பயம் சோகம் விஷாதம்
மதம் ஏவ ச. ந விமுஞ்சதி துர்மேத த்ரிதி ச பார்த்த தமசி " (18.35) என்று
கூறுகின்றார். ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகின்றார்:
எந்த திடம் அல்லது விடா முயற்சியினால் ஒரு தீய மனமுடையவன் தன்னுடைய தூக்கம், பயம்,
பதட்டம், துக்கம் மற்றும் கர்வம் இவற்றை இழக்காமல் அது தமசிக் த்ரிதி ஆகும்.
தமசிக்
த்ரிதியின் குறியீடுகள் யாவை?ஒருவன் மிகச் சோம்பேறியாக, தூங்குகின்றானோ அவனுக்கு உறக்கமே முக்கியமானது. வேறெதுவும் ஒரு பொருட்டில்லை.
எங்கு வேண்டுமானாலும் அவர்களால் உறங்க முடியும். டுத்தோ அல்லது பேசிக்கொண்டோ
கூட உறங்குவார்கள்.
கேரளாவில் இவ்வாறு துன்புறும்
ஒருவரை பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றேன். காலையில் 8 மணிக்கு காலையுணவு உண்ணும்
போது கூட உறங்குவாராம். ஒரு தோசை உண்ட பின்னர் இரண்டாவதற்க்காகக்
காத்திருக்கும் இடைவெளியில் மேஜையிலேயே உறங்கி விடுவாராம். ஒரு சமயம் இது போன்ற ஒருவரின்
வீட்டில் தாங்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் என்னை மீண்டும் வற்புறுத்தி
வரவேற்றதால் நான் அதனை ஏற்றுக் கொண்டு தங்கினேன். அவர் வீட்டிலிருந்த ஒரு
பணியாளர் என்னிடம் " குருதேவ் அவர் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உறங்கிவிடுவார். காலையில்
தேநீர் அருந்தும் போதும் யாருடனாவது பேசிக் கொண்டிருக்கும் போதும் திடீரென்று உறக்கத்தில்
ஆழ்ந்து விடுவார்." என்று கூறினார்.
இந்நிலைக்கு வைத்தியம் செய்து
கொள்ள ஒரு மருத்துவரை நாடிச் சென்றார். டாக்டர்கள் இந்நிலையை கண்டு மிகுந்த ஆச்சர்யம்
அடைந்து, மூளையை ஊடுகதிர் படம் மூலம் நுட்பமாக ஆராய முடிவு செய்தனர். தற்காலத்தில்
புது வகையான ஊடுகதிர் படங்கள் மூளையை ஆராய்கின்றன. இவருக்கும் செய்யப்பட்டது. அவரைப் படுக்கவைத்து ஊடுகதிர் படகருவியின் வழியாக நகரும் படிச் செய்தார்கள்.
கருவி இயக்கப்பட்ட சிறிது நேரத்தில், அந்த அறையிலிருந்து விசித்திரமான சப்தம் வெளிப்பட்டது.
என்ன நிகழ்கின்றது என்று யாருக்கும் புரியவில்லை. எது அத்தகைய சப்தங்களை எழுப்புகின்றது
என்றும் அறிய முடியவில்லை. அப்போது அவரது சமையல்காரன் மற்றும் கார் ஓட்டுனர்
" “இது ஒன்றும் இல்லை. பயப்படாதீர்கள். எஜமான் தூங்கி விட்டார் அவரது குறட்டை
ஒலிதான் அது" என்று கூறினர்.
நான் இவரது வீட்டிற்குச்
சென்றிருந்த போது என்னுடன் வந்தவர்களுக்கு இத்தகைய தூக்க சீர்குலைவு பற்றித் தெரியாது.
அவர்களில் சிலர் அவரிடம் சுதர்சன்க்ரியா மற்றும் தியானம் செய்யுமாறு ஆலோசனை கூறிக்
கொண்டிருந்தனர். பல தொழிலதிபர்களும்,அரசியல்வாதிகளும்
உறக்கமின்மையை பற்றி குறை கூறிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவரோ," ஒ எனக்கு
அந்தப் பிரச்சினையே கிடையாது" என்றார் (சிரிப்பு).
ஒருவன் வேளாவேளைக்கு நல்ல
உணவு, சுகமான வாழ்க்கை, எந்த விதமான பணியோ அல்லது குறிக்கோளோ இல்லாமை என்றிருந்தால்,
பகல் கனவு, சோம்பல், தூக்கம் இவையனைத்தும் ஏற்படும். தூக்கத்தைத் தவிர வேறென்ன செய்ய
முடியும்? சாதரணமாக வேலை குறைவாக இருந்தால் ஒருவன் சோர்வாகவும், சோம்பலாகவும் ஆவான். இங்கு ஆஸ்ரமத்தில் யாருக்கும் அவ்வாறு நிகழ விட மாட்டோம். அனைவரையும் சுறுசுறுப்பாகவே வைத்திருப்போம். (சிரிப்பு).
சாதரணமாக ஆஸ்ரமங்களின் தலைவர்கள்
எவ்வாறு அங்குள்ள அனைவரையும் சோர்வின்றி சுறுசுறுப்பாக வைத்திருப்பது என்னும் பிரச்சினையை
அடைகின்றார்கள். சில இடங்களில், ஒரு இடத்திலிருக்கும் மண்ணைத் தோண்டி எடுத்து, வேறொரு
இடத்தில் கொண்டு அடைக்கும் பணியினை செய்யச் சொல்வார்கள். ஏதோ ஒன்றைச் செய்ய வைத்து, சோம்பல் என்னும் வலையில்
விழுந்து விடாமல் தடுப்பர்.
தமசிக்
த்ரிதியில் உள்ளவர்கள் செய்ய வேண்டிய எந்த முக்கியப் பணியானாலும்
அதைத் தவிர்த்து விட்டு தூங்க முற்படுவார்கள். அவர்களுக்கு பயம் அதிகம்
இருக்கும். ஒரு சோம்பேறி எப்போதும் எதைப் பற்றியாவது பயந்து கொண்டிருப்பான். தன்னை
சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொண்டிருப்பவன் எதைக் கண்டும் பயப்பட
மாட்டான். செயல் விருப்பமின்றி எதுவும்
செய்யாமல் இருப்பவன் விரைவில் பயத்திற்கு ஆளாவான். இந்த பயமானது துன்பம் மன அழுத்தம் இவற்றுக்குக்
கொண்டு செல்லும். இத்தகைய மனிதர்களின் முகங்கள்
எப்பொதும் சோர்வாகவும் மகிழ்ச்சியற்றும் இருக்கும். அவர்கள்," எனக்கு என்ன ஆகும்?
யார் என்னை எனது வயது முதிர்ந்த காலத்தில் கவனித்துக் கொள்வார்கள்? இறுதிக் கடன்களை
யார் செய்வார்கள்?" என்றெல்லாம் எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பர். ஒருவன் இறந்த பின்னர் எரித்தால்
என்ன புதைத்தால் என்ன? அவர் தம்முடைய உடலின் மீது இறந்த பின்னரும் கூட பற்றுக் கொண்டிருக்கின்றார்!
தனது மரணத்திற்குப் பின்னர் விட்டுச் செல்லப்படும் உடலின் மீது அத்தனை கவலை!