உண்மையான நம்பிக்கை, நிரந்தரமான மகிழ்ச்சிக்கு வழி வகுக்கிறது.

மே 31, 2014

பெங்களுரு, இந்தியா





கேள்வி - பதில்கள்:






கே: குருதேவ்! வாழ்வின் மகிழ்ச்சிக்கு முக்கியமான மந்திரம் அல்லது திறவுகோல் எது?

ஸ்ரீ ஸ்ரீ: நான்! என்னால்! என்னுடையது! என்பது போன்ற தனிப்பட்ட ஆசைகள் அல்லது பொருள் ஆதாயங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது தான் வாழ்வின் மகிழ்ச்சிக்கு திறவுகோல் ஆகும். உங்களுடைய வாழ்க்கையை ஒரு பெரிய நோக்கத்திற்காகவோ அல்லது உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு சேவை செய்வதற்காகவோ அர்ப்பணிக்கவும். பின்னர் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி மட்டுமே பொங்கி வழிவதை பார்க்கலாம்.

இரண்டாவதாக" என்னை மிகவும் ஆழ்ந்து நேசிக்கும் ஒருவர் இங்கே இருக்கின்றார், அவர் என்னை எல்லா நேரங்களிலும் என்னை பாதுகாக்கின்றார். நான் இல்லாமல் அவர் இருக்க முடியாது.மேலும் என்னிடம் இருக்கும் எந்த குறைபாட்டையும் நீக்கும் திறமை கொண்டவர்" என்பதை நீங்கள் எல்லா நேரத்திலும் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்க வேண்டும். இந்த உயர்ந்த சக்தியை நீங்கள் குரு சக்தி அல்லது பரமாத்மா அல்லது கடவுள் என எப்படி அழைக்கின்றீர்கள் என்பது முக்கியம் அல்ல. உங்களுடைய திறமைகள் எவ்வாறு இருப்பினும் உங்கள் மீது நம்பிக்கையுடன் இருந்தால். எப்போதுமே மகிழ்ச்சியுடன் இருக்கலாம். மிகவும் வலிமை மிக்க ஒருவர் உங்களை பார்த்துக் கொள்ளவும் உங்களுக்கு பாதுகாவலராகவும் இருக்கிறார் என்று அறிந்திருப்பதனால், உங்கள் முதுமை பருவத்திலும் நீங்கள் பாதுகாப்பற்றவர் மற்றும் வலுவற்றவர் என்ற எண்ணம் இன்றி வாழலாம்.  

இவை இரண்டையும் அறிந்து  வைத்திருப்பது ஒருவருடைய வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வரும். நீங்கள் வாழ்வில் ஏதாவது செய்ய வேண்டும் என்னும் போது, நீங்கள் வாழ் நாள் முழவதும் ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பது அநேகமாக இயலாத ஒன்று. மேலும், உங்களுடைய திறமைக்கு மிஞ்சிய எதையும் உங்களால் செய்ய முடியாது. எனவே உங்களுடைய செயல்கள் அத்தனையும் உங்களுடைய திறமை மற்றும் நேரத்திற்கு உட்பட்டது. 

உதாரணத்திற்கு பிறந்த  குழந்தைக்கு 5 அல்லது 10 வயது ஆகும் வரை பல விஷயங்களை தானாகவே செய்து கொள்ள இயலாது. அதுவரை தன்னுடைய பல தேவைகளுக்கு மற்றவரை சார்ந்து இருக்க வேண்டும். அதைப் போலவே நாம் வயது நிறைந்து 70-80 வயதனவராகும் போதும், மிக குறைந்த செயல்களையே நம்மால் செய்ய முடியும் என்று பார்க்கின்றோம். நாம் மறுபடியும் மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலையை அடைகின்றோம்.      

நம்முடைய தேவைகளை நாமே நிறைவேற்றிக்கொள்ள கூடிய இந்த இடைப்பட்ட நாட்களில் கூட நாம் நம்முடைய திறமைக்கு உட்பட்டவைகளை மட்டுமே செய்கின்றோம்.ஒரே நபர் ஒரே நேரத்தில் ஒரு மருத்துவராகவும், ஒரு பொறியாளராகவும் மற்றும் ஒரு பெரிய அதிகாரியாகவும் உருவாக முடியாது. இந்த மூன்றில் ஏதாவது ஒன்றாகத்தான் வர முடியும். ஆகவே ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட திறமைகள் உள்ளன. மேலும் அவரவர்களுடைய வயதிற்கு ஏற்றவாறு அவர்களுடைய திறமைகளை வெளிப்படுத்த வரம்புகளும் உள்ளன. ஒவ்வொருவரிடமும் வேறுபட்ட பலங்கள் உள்ளன.  நம்முடைய திறமைகளுக்கும் வரம்புகள்  உள்ளன. நீங்கள் 10 வருடங்களுக்கு முன் இளமையாக இருந்த போது செய்த வேலைகளை இப்போது செய்ய இயலாது அல்லவா? நீங்கள் இப்போது செய்கின்ற வேலைகளை 20 வருடங்கள் கழித்து செய்ய இயலாது. எனவே நாம் காலம் மற்று திறமையை சார்ந்து இருக்கின்றோம்.     

நம்முடைய தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றக் கூடிய உயர்ந்த சக்தி முழுமையாக நமக்கு சொந்தமாக எப்போதும் நம்மிடம் உள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொண்டிருந்தால், அந்த சக்தி ஒன்றே நம்மை அனைத்து நேரங்களிலும் மகிழ்ச்சியுடன்  வைத்திருக்கும். எனவே இந்த நம்பிக்கை மட்டுமே கூட நம்மை மகிழ்ச்சி உள்ளவராக்கும்.

வயது கூடும்போது நம்முடைய பலமும், திறமைகளும் குறையும். இது இயற்கையே. பலர் முதுமையடையும், அவர்கள் மனத் தளர்வுடனும் பாதுகாப்பற்ற உணர்வுடனும் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அவர்களுடைய முகம் துக்கத்தையும், துன்பத்தையும் பிரதிபலிக்கும். ஆனால் ஒரு பக்தனுக்கு அவ்வாறு ஏற்படுவதில்லை. வயது கூடகூட அவர் மிகவும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷமாகவும் இருப்பார். அவர் மேலும் புன்னகையுடனும் ஆனந்தமாகவும் இருப்பார்.

ஒரு பக்தர், "நான் அனைத்தையும் பார்த்து விட்டேன். அனைத்தையும் புரிந்து கொண்டேன். நான் உள்ளுக்குள் மிகவும் மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் உள்ளேன். என்னுடைய தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய கடவுள் எப்போதும் என்னுள் இருக்கிறார்" என்று நினைப்பார். நான் ஒரு முறை தென் ஆப்ரிகா சென்றிருந்த போது முதியோர் இல்லத்தில் இருந்து சிலர் என்னை பார்க்க வந்தார்கள். என்னை சந்திக்க ஒரு பெரிய கூட்டம் கூடி இருந்தது. நான் அவர்களுடைய முகங்களைக் கண்டு பெருமளவு ஏமாற்றம் அடைந்தேன். அவர்களுக்கு என்ன ஆகி விட்டது என்று நான் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தேன். அவர்கள் அவ்வளவு பரிதாபமாக இருந்தனர்.

அவர்களுடைய குழந்தைகள் அவர்களை சொந்த வீட்டில் இருந்து வெளியேற்றி ஒரு முதியோர் இல்லத்தில் தங்க வைத்திருந்தனர். அவர்கள் குழந்தைகளை பற்றி நினைத்து நினைத்து மன அழுத்தத்தில் இருந்தது அவர்களுடைய முகங்களில் தெரித்தது. அவர்கள் பல ஆண்டுகளாக சிரிப்பையே பார்க்காதது போல் தெரிந்தது. நான் நம்முடைய வாழும் கலை ஆசிரியர்களை சந்தித்து அந்த முதியவர்களுக்கு ஆனந்தமளிக்கும் பயிற்சியினை அளிக்குமாறும் அதன் மூலம் அவர்கள் பயிற்சிகள் செய்து ஞான மார்க்கத்திற்கு வர வழிகளை செய்யுமாறும் கூறினேன். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு ஒருவருக்கு புதியதாக எதையும் கற்றுக்கொள்ளுவது சிரமமானதாக இருக்கும். இது எதனால் என்றால், நமக்கு முதுமை அடையும் போது நம்முடைய  பார்வையும் கேட்கும் திறனும் படிப்படியாக குறையத் தொடங்கும்.

நம்மால் நன்றாக பார்க்க முடியும் அல்லது கேட்க முடியும் என்றாலும், நம்முடைய மனம் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் எளிதாக அறிந்து கொள்ளவோ புரிந்து கொள்ளவோ செய்யாது. எதையாவது கேட்டாலும் அது வெளி அளவிலேயே நின்று விடும், நம்முடைய மனதிற்குள் ஆழ்ந்து செல்லாது. முதுமை அடையும் ஒருவரின் நிலைமை இதுவே. ஆகவே நான் மற்றவர்களை பார்த்து முதுமையில் என்ன ஆகின்றது என்று பார்த்துக் கொள்ளுமாறும், வாழ்க்கையை ஒரு பெரிய இலக்கிற்கு அர்ப்பணம் செய்வதன் மூலம் நல்ல ஞானத்தில் இருக்கலாம் என்றும் கூறினேன்.

உங்களுடைய குழந்தைகள், வீடு போன்றவற்றை பற்றியே நினைத்துக் கொண்டு ஆசைகள் மற்றும் பந்தங்களில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்றும் கூறினேன். அவர்களுடைய வாழ்க்கையில் எந்த மாதிரியான சிரமங்களை அடைந்திருப்பார்கள் என்று ஒருவரால் கற்பனை செய்து பார்க்க இயலாது. அவர்கள் எவ்வாறு தங்களுடைய குழந்தைகளை வளர்க்கவும் படிக்க வைக்கவும் பணம் ஈன்றிருப்பார்கள்? அத்தனையும் செய்த பின்னும் அதே குழந்தைகள் அவர்களை முதியோர் இல்லத்திலே சேர்த்து அவர்களை கவனித்துக் கொள்ள பணமும் கொடுக்கிறார்கள். வருடத்தில் ஒருமுறை அன்னையர் தினம் அல்லது தந்தையர் தினம் என்று வரும்போது அவர்கள் பெற்றோரை வந்து பார்த்து செல்லுவார்கள் அல்லது வர இயலவில்லை என்றால் கடிதம் எழுதுவார்கள். வயதான அந்த பெற்றோர்களின் நிலைமை மிகவும் துரதிருஷ்டவசமானது. 

ஆனால் என்னை மிகவும் நேசிக்கும், எனக்கே சொந்தமான எப்போதும் என்னை விட்டு நீங்காத ஒரு உயர்ந்த சக்தி எப்பொழுதும் என்னுடன் இருக்கின்றது என்னும் அசைக்க முடியாத நம்பிக்கை நம்மிடம் இருந்தால். அந்த நம்பிக்கையில் இருந்து நாம் பெரும் பலம் நம்மை மகிழ்ச்சியில் ஒளிர வைக்கும். வற்றாத புன்னகை நம்முடைய முகத்தையும் ஒளி பெறச் செய்யும். இதனால் தான் வாழ்க்கையில் ஆன்மிகம் மிகவும்  அத்தியாவசியமாகிறது. ஆன்மீகமே மகிழ்ச்சி, ஆர்வம், உள்ளுணர்வு, சுய உணர்வு மற்றும் அனைத்து விருப்பங்களும் பூர்த்தி அடைதல் ஆகியவற்றை கொண்டு வரும். 

கே: வாழ்க்கையில் ஒருவர் எவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும்? ஒருவருடைய தேவைக்கும் மேலாக சம்பாதிப்பது மற்றொருவருடைய பங்கை பதுக்குவது போல் ஆகுமா? மேலும், தன்னிறைவுடன் இருப்பது, வளமுடன் இருப்பது இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

ஸ்ரீ ஸ்ரீ: உங்களுடைய அனைத்து முயற்சிகளையும் செய்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு சம்பாதிக்கவும். ஆனால் சில விதிகளை கடைப்பிடிக்கவும். குற்றம் புரிவதன் மூலமாகவோ அல்லது மற்ற ஏதாவது தவறான வழிகளின் மூலமாகவோ சம்பாதிக்க வேண்டாம். அவ்வாறு நீங்கள் செய்தால் முடிவு துன்பமாகவும் துயரமாகவும் இருக்கும். சம்பாதிப்பதற்காக தவறான வழிகளை பின்பற்றினால், உங்களுடைய உள்ளுணர்வே உங்களை குத்தும். யாரிடமோ இருந்து திருடிவிட்டதை போல உங்களுக்குள்ளயே உறுத்தல் ஏற்படும். அதனால் சம்பாதிக்க தவறான வழிகளை பின்பற்ற வேண்டாம். உங்களிடம் உள்ள நேரத்தை முழுமையாக உபயோகித்து முழு முயற்சியுடன் செயல்பட்டு சம்பாதிக்கவும்.

கே: குருதேவ்! ஆத்மா என்பது என்ன?

ஸ்ரீ ஸ்ரீ: நீங்கள் இங்கே இருப்பதின் காரணமே ஆத்மா தான். அது இல்லாமல் உங்களால் இருக்க முடியாது. ஆத்மா என்பது உங்கள் காதுகள் மூலமாக கவனிப்பது, கண்கள் மூலமாக உணர்வது, மூக்கின் மூலமாக முகர்வது, நாக்கின் மூலமாக சுவைப்பது மேலும் நடக்கும் அனைத்திற்குமே காரணமாக இருப்பது. 

கே: குருதேவ்! மக்கள் புதிய வீடு அல்லது கட்டிடம் கட்டுவதற்கு முன்னாள் வாஸ்து சாஸ்திர நிபுணரை கலந்து ஆலோசிக்க முனைகின்றனர். இந்த வழக்கம் இன்றைய காலத்திற்கு பொருத்தமானதா?

ஸ்ரீ ஸ்ரீ: இங்கே பல வேறுபட்ட சாஸ்திரங்கள் உள்ளன. வெவ்வேறு வேதங்களில் பல்வேறு வழிகளும் அணுகுமுறைகளும் எழுதப்பட்டும் குறிக்கப்பட்டும் உள்ளன. புதிய வீடு கட்டுவதற்கு முன்னால் வாஸ்து சாஸ்திர நிபுணரை கலந்தாலோசிப்பது சரியானதே. ஆனால் அதில் ஏதாவது தோஷம் (நிலத்தில் அல்லது கட்டிட வகையில் ஏதாவது முரண்பாடு) இருந்தால்  ஓம் நமசிவாயா மந்திரத்தை சொல்லவும். ஓம் நமசிவாயா மந்திரம் சொல்லுவது ஒன்றே எந்த விதமான எதிர்மறைத் தன்மையையும் மற்றும் எதிர்கொள்ளும் எந்த பிரச்சினைகளையும் நீக்கவும் போதுமானது.      

உங்களுக்கு தெரியுமா! ஒரு விதத்தில் பக்தியுடன் இருப்பதே எல்லா தடங்கல்களையும் நீக்கி விடும். சேவை, சாதனா மற்றும் சத்சங்கம் இவைகளில் உண்மையுடன் இருப்பதின் மூலமாகவே அனைத்து பிரச்சினைகளும் நீக்கப்படும், எதிர்மறைகளும் மறைந்து போடும். அதனால் தான் ஓம் நமசிவாயா போன்ற மந்திரங்களும்,மகாமிருதுஞ்சயா மந்திரமும் மிக உயர்ந்தவைகளாக உள்ளன. அவைகள் உங்களுடைய அனைத்து பிரச்சினைகளையும், வழியில் குறுக்கிடும் எதிர்மறைகளையும் நீக்கும் சக்தியை கொண்டவை.

கே: குருதேவ்! நான் உங்களுடன் இணைந்திருப்பதை எப்படி உணர்வது?

ஸ்ரீ ஸ்ரீ: அது மிகவும் எளிமையானது. நீங்கள் சந்தேகப்படுகிறீர்களா? ஏன் தெரியுமா? ஏனென்றால் இணைப்பு ஏறபட்டு விட்டது என்பதை நீங்கள் ஏற்கனவே அறிவீர்கள். என்னுடன் உங்களுக்கு இணைப்பு ஏற்பட்டிருக்கவில்லை என்றால் உங்களுக்கு இம்மாதிரியான கேள்விகள் தோன்றாது. இந்த மாதிரியான ஒரு கேள்வி தோன்றியதன் பொருளே இணைப்பு ஏற்பட்டுள்ளது என்பதாகும். அவ்வளவு தான். இணைப்பு ஏற்பட்டுள்ளது என்றும் வலுவாக உள்ளது என்றும் எடுத்துக் கொள்ளலாம். "குருதேவ் வேறு ஒருவரைப் பார்த்தார்! என்னை பார்க்கவில்லையே!" அல்லது "குருதேவ் அவளை பார்த்து சிரித்தார், ஆனால் என்னைப் பார்த்து அல்ல" போன்ற தவறான எண்ணங்கள் எழவேண்டாம். அந்த மாதிரி எண்ணவே வேண்டாம்.

நீங்கள் காற்றுடன் அல்லது உங்களை சுற்றியுள்ள வெற்றிடத்துடன் உங்களுடைய இணைப்பை எவ்வாறு அனுபவிக்கிறீர்கள்? அனுபவிக்க இதில் என்ன உள்ளது? ஒய்வு எடுத்துக் கொள்ளுங்கள் மற்றும் இளைப்பாறுங்கள். அனைத்தும் உங்களுடையதே.