மரணத்திற்கு அருகில் சென்ற அனுபவம்

31 ஜூலை 2013 - பாட் அன்டகஸ்ட், ஜெர்மனி



கே: பிறப்பதற்கு முன் ஜீவனும் ஆத்மாவும் எங்கே இருந்தது? ஜீவனுக்கும் ஆத்மாவுக்கும் இடையே என்ன வித்தியாசம்? ஜீவன் எப்படி பிறக்கிறது, எங்கே இருந்து வருகிறது?

குருதேவ்: இரண்டும் ஒன்று தான். கருவுரும் போது உடம்புக்கு உயிர் வருகிறது, சில சமயம் பிறக்கும் நேரத்தில் கூட வருகிறது. கருவுரும் போதோ அல்லது பிறக்கும் போது ஆத்மா உடம்புக்குள் நுழைகிறது. சில நேரங்களில் பிறக்கும் வரை ஒரு ஆத்மா தங்கி இருந்து பிறக்கும் போது வேறு ஒரு ஆத்மா வருகிறது. பொதுவாக ஒரே ஆத்மா தான் கருவுற்றதிலிருந்து முழுதுமாக இருக்கும்.

ஐந்து இரகசியங்களில் இது ஒன்று. இறப்பின் இரகசியம், பிறப்பின் இரகசியம் மற்றும் இராஜங்க இரகசியம். இவை ஐந்து இரகசியங்களில் சில. இவற்றை என்னுடை ஞானப் பேழை புத்தகங்களில் கூறியுள்ளேன். இவற்றை படித்துக் கொள்ளலாம்.

ஏழு பகுதிகளாக வெளிவந்த ‘ஞானம் தேடுபவருக்கு’ என்ற நூலை உங்களில் பலர் இன்னும் படிக்கவில்லை. இந்த ஏழு பகுதிகளையும் படியுங்கள். ஏழு வருடங்கள் ஒவ்வொரு வாரமும் ஒரு ஞானத் தாள் கொடுத்து வந்தேன். ஒவ்வொரு புதன் கிழமையும் உட்கார்ந்து ஏதாவது புதிதாக எழுதினோம். இவற்றையெல்லாம் தொகுத்து இந்த ஏழு பாகங்களாக ‘ஞானம் தேடுபவருக்கு’ என்ற நூல் தொகுப்பு வெளியிடப்பட்டது.

நீங்கள் படிக்க வேண்டிய மற்றொரு புத்தகம் ‘யோக வசிஷ்டா’ (இராமபிரான் ஆழ்ந்த துயரத்தில் இருந்த போது வசிஷ்ட முனிவரால் இராமருக்கு அளிக்கப்பட உரை). ஒரு முறை படிப்பதால் உங்களுக்குப் புரியாமல் இருக்கலாம். அதை மறுபடி மறுபடி  படிக்க வேண்டும். என்ன புரிந்தாலும் அதை அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள். என்ன புரியவில்லை என்றாலும் அப்படியே விட்டு விடுங்கள். ‘ஓ, இதுதான் அது’, என்று ஒரு நாள் நீங்கள் சொல்வீர்கள்.

அமெரிக்காவில், மூளை அறுவை சிகிச்சை செய்யும் ஒரு மருத்துவர் இருந்தார். அவர் ஏழு நாட்கள் கோமாவில் இருந்தார், எல்லோரும் அவர் இறந்து விட்டார் திரும்ப வரமாட்டார் என்றே நினைத்தனர். ஆனால் திடீரென்று ஏதோ நடந்து அவர் திரும்ப வந்துவிட்டார். அவர் ‘சொர்கத்தின் நிரூபணம்’ (Proof of Heaven) என்ற புத்தகம் எழுதினார். அவர் ஒரு கிருத்துவர், அவருக்கு கிழகத்திய ஞானம் எதுவும் அறிமுகமில்லை. அதைப் பற்றி அவர் ஏதும் படித்திருக்கவில்லை. அவர் உயிர் பெற்றபின் அவர் என்ன எழுதினார் என்பது பேராச்சரியமான ஒன்று. பகவத் கீதையில் என்ன அறிவுறுத்தப்பட்டிருக்கிறதோ அதையே எழுதினார்.

உடம்பை விட்டபின், ஒரு பெரிய இருப்பை உணர்ந்ததாகவும், அந்த இருப்பின் பெயர் ‘ஓம்’ என்றும் எழுதியிருக்கிறார். அதை அவர் ‘ஓம்’ என்று அழைக்கிறார். பொன் முட்டை பற்றியும், மற்றும் உள்ளகம் (Core) பற்றியும் சொல்கிறார். உள்ளகம் என்றால் சுயம், ஆத்மா. மேலும் அவர் சொல்கிறார், வேர் மேலே இருக்கிறது, குருத்து உள்ளே இருக்கிறது. இதைத் தான் பகவத் கீதை சொல்கிறது. வேர்கள் மேலே வானத்தில் இருக்கும் ஒரு மரம் இருக்கிறது.

உடம்பை விட்ட பின் தாம் வேர்கள் வழியாகச் சென்று அந்தப் பக்கத்திற்கு சென்றதாக கூறுகிறார். மங்கலான இருட்டான வெளி வழியாக அவர் செல்ல வேண்டி இருந்ததாம். இதை தான் நம் புராணங்கள் முழுமையாகக் கூறுகிறது. இது அப்படியே பண்டைய புராணம் நவீன மொழியில், அறிவியல் மொழியில் இருக்கிறது. இது அதையே தான் சொல்கிறது; மொழியே இல்லாமல் தொடர்பு கொள்ளுதல். ஒரு தேவதை வழிகாட்டியாக வந்து ஓரிடத்திலிருந்து அடுத்த இடத்திற்கு அழைத்துச் செல்கிறது. இதுதான் சொல்லப்பட்டிருக்கிறது.

வாழ்க்கையில் ஏன் ஒரு குரு வேண்டும்? இறந்த பின் நீங்கள் பார்க்கப் போகும் முதல் ஆள் குரு தான். அந்த இடத்திலிருந்து உங்களை ஒரு வழிகாட்டியை போல அழைத்துச் செல்லப் போவதும் குரு தான். விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் உங்களை வரவேற்று வாகனத்திற்கு அழைத்துச் செல்ல யாராவது வருவது போலத் தான் இது. அதனால் தான் குரு என்பவர் முக்கியம்.
இப்படி பண்டைய விஷயங்களைத்தான் இந்த மருத்துவர் எழுதியிருக்கிறார். இது மிக சுவாரசியம். ஒரு சுரங்கப் பாதையின் அடுத்த பக்கத்தில் ஒரு அன்பான ஒளியைக் கண்டது – இது போன்ற அனுபவங்களைத் தான் இப்படி மரணத்திற்கு அருகில் சென்றவர்கள் கண்டிருக்கிறார்கள்.

நரகத்திற்குச் செல்வதோ அல்லது அதைப் போன்றவற்றையோ அல்ல. இந்த அனுபவங்களைப் படிப்பது உங்கள் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள வைக்கும். நரகத்தைப் பற்றிய பயத்தையோ அல்லது சொர்கத்தைப் பற்றிய தூண்டல்களையோ மறந்து விடுங்கள். இந்தியாவில் கூட இப்படி உண்டு. ஆசிரமத்திற்கு தவறாமல் வரும் ஒருவர் உண்டு. அவரும் இதைப் போன்ற அனுபவங்கள் தனக்கு ஏற்பட்டதாக கூறினார். அவர் காப்பாற்றப்படுவதற்கு முன் ஏழு நிமிடங்கள் இறந்த நிலையில் இருந்துள்ளார்.

அவர் பிழைத்தவுடன், சிலர் வந்து தன்னை ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு அழைத்துச் செல்ல வந்தார்கள் என்று தன் பயண அனுபவத்தைக் கூறினார். வெள்ளை நிற உடையணிந்து, தாடியுடன் ரிஷிகளைப் போல சிலர் இருந்ததாக கூறினார். அந்த ரிஷிகள் அவரை அழைத்து வந்தவர்களிடம் கூறினார்கள், ‘ஏன் இவரை அழைத்து வந்தீர்கள்? தவறான ஒருவரை அழைத்து வந்து  விட்டீர்கள். இவர் இன்னும் பூமியில் இருக்க வேண்டியிருக்கிறது.’

அவரை அழைத்துவந்தவர்கள் பதில் கூறினார்கள், ‘இல்லை, இவர்தான் சரியான் ஆள்’, என்றவாறு அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு அவரைத் திரும்ப அழைத்து வந்து அவர் உடலின் மூக்கருகே அவரை விட்டுவிட்டனர் என்று தன் அனுபவத்தை விவரித்தார். அவர் சொன்னார், ‘என்னை நானே அறுவை சிகிச்சை மேஜை மீது பார்த்தேன். என்னை நானே பார்த்தேன் மற்றும் எல்லோரும் அழுது கொண்டிருந்தார்கள். மருத்துவர் என்னை பிழைக்க வைக்க முயன்று கொண்டிருந்தார் ஆனால் நானோ போய்விட்டேன். நான் ஒரு மெல்லிய கையிற்றால் இணைக்கப் பட்டிருந்தேன். என்னை அந்த மெல்லிய கயிற்றுடன் இணைத்து விட்டு மூக்கருகே விட்டுவிட்டுச் சென்றனர். மிக மெதுவாக நான் சுவாசிக்க ஆரம்பிக்க, எனக்கு உயிர் வந்தது. உயிர் பிழைத்த பலருக்கு இதைப் போன்ற அனுபவங்கள் ஏற்பட்டிருக்கிறது.

நாம் நினைப்பதை விட வாழ்கை மிக அதிகம். என்னுடைய 17 வயதில் கன்னடத்தில் நான் ஒரு கவிதை எழுதினேன். அந்தக் கவிதையில், நான் எங்கும் இருக்கிறேன், திடீரென்று ஒரு ஒளியைப் போல பூமிக்கு வந்து விட்டேன் என்று எழுதினேன். இதேயே தான் அந்த மருத்துவரும் தன் நூலில் மிகச் சரியாக எழுதியிருந்தார்!

கே: மன நல மருத்துவர்கள் நினைப்பது போல நம்முடைய பெரும்பாலான பிரச்சினைகள் பெற்றோரிடம் உள்ள உறவால் வந்ததாக நினைக்கிறீர்களா?

குருதேவ்: இல்லை, பெரும்பாலான பிரச்சினைகள் உங்களுடைய மனதினால் தான் வருகிறது. பாவம் பெற்றோர்கள், அவர்களுடன் இதை இணைக்க வேண்டாம்.

சில வருடங்களுக்கு முன் ஒரு இளம் பெண் தன் பெற்றோர்களுடன் வந்தார். அந்தப் பெண்ணிற்கு பதின் வயதைத் தாண்டி ஒரு 21-22  வயதிருக்கும். தன் பெற்றோர்களிடம் அவ்வளவு நல்ல உறவு வைத்திருந்தார். மன நல மருத்துவர்கள், பெற்றோர்களினால் தான் அந்தப் பிரச்சினை என்று அந்தப் பெண்ணிடம் சொல்ல, தன் பெற்றோரிடம் அவர் வைத்திருந்த உறவே முறிந்து போனது. அதற்கு முன் எந்தப் பிரச்சினையும் இருந்திருக்கவில்லை.

பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து, அதில் வரும் பாதிக்கப்பட்டவர்களிடம் தன்னைப் பார்கிறார்கள் இந்தக் குழந்தைகள். அதில் வரும் பலவந்த படுத்தப்பட்ட குழந்தைகளைப் பார்த்து விட்டு திடீரென்று, ‘எனக்கு இரண்டு வயதாக இருக்கும் போது, என் தந்தை என்னை பலவந்தப் படுத்தினார்,’ என்றெல்லாம் நினைக்கத் தொடங்குகின்றனர்.

அந்தப் குழந்தையின் தந்தை சொன்னார், ‘நான் அப்படியெல்லாம் செய்ய மாட்டேன், இது சத்தியம், ஆனால் என் குழந்தை நான்  அவளை பலவந்தப்படுத்தினேன் என்று  கூறுகிறாள்.’ அவர்கள் இப்படியே இடிந்து போய்விட்டனர். அவர்கள் இருவரும் நரக வேதனைப்பட்டனரே ஒழிய வேறேதும் சொல்லவில்லை. அந்தக் குழந்தை அப்படியெல்லாம் கற்பனை செய்து கொண்டது. இரண்டு வயதுக் குழந்தை எப்படி நினைவில் வைத்துக் கொள்ள முடியும்? இரண்டு வயதுக் குழந்தையாக உங்களை யார் தொட்டிலில் போட்டார்கள் என்று நினைவுகூர முடியுமா? அவர்கள் அப்படியே நான்கு வயது வரை உங்களுடன் இருந்தார்கள் என்றால் சரி, உங்களுக்கு நினைவிருக்க வாய்பிருக்கிறது. ஆனால், இரண்டு வயதில் யாரேனும் ஏதாவது செய்தால் அது நினைவிலிருக்கும் என்றா நினைக்கிறீர்கள்? தனிப்பட்ட முறையில் நான் அப்படி நினைக்கவில்லை.

சரி, அப்படியே நடந்திருந்தால், 25 அல்லது 30 வருடங்களுக்குப் பிறகு தன் ஐம்பதுகளின் இறுதியில் இருப்பவரை குற்றம் சாட்டி அவர் வாழ்கையை குலைப்பதால் என்ன பயன்? ஆம், நீங்கள் பாதிக்கப் பட்டவராய் இருந்தால் நீங்கள் பேச வேண்டும். ஆனால் சில நேரம் தனக்கு எதுவும் நடக்கவில்லை என்றாலும் தான் பாதிக்கப்பட்டதாக சிலர் நினைத்து விடுகிறார்கள். பாதிக்கப்பட்டவரை தன்னோடு பொருத்திக் கொள்கிறார்கள்; சிலர் இப்படிச் செய்கிறார்கள்.

இது ஒரு பெரும் பிரச்சினை. நம் பாரம்பரிய ஞானத்திலிருந்து நவீன மனநலவியல் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். மிக ஆழத்தில் உங்களுக்கு ஏதோ வலி இருக்கிறது என்று சொல்லக் கூடாது. மிக ஆழத்தில் உள்ளே சென்றால் அங்கு வலியே இல்லை, அங்கு பேரானந்தம் தான். நீங்கள் உங்களுக்குள் ஆழமாய்ச் சென்றதே இல்லை.

கே: பல நல்ல கொள்கைகளை நான் இங்கு கற்றுக் கொண்டேன். என்னுடைய தினசரி வாழ்க்கையில் இவற்றை எவ்வாறு நடைமுறைப் படுத்துவது? என் தொழிலில் நான் சற்று ஆவேசமாகவும் வேகமாகவும் செயல்பட வேண்டியிருக்கிறது. வெறும் தியானம் போதாது.

குருதேவ்: சரிதான்! மனநிலையை நீங்கள் உருவாக்க வேண்டிய தேவையில்லை. இங்கே நீங்கள் அமரும் போது கால்களை மடித்து அமர்கிறீர்கள். நீங்கள் அலுவலகம் செல்லும் போது, இப்படி அமரத் தேவையில்லை! வேலையில் இருக்கும் போது, வேலை செய்யுங்கள்.

நீங்கள் குளிருக்கான மேல் சட்டையை எப்போதும் அணிந்து கொண்டிருப்பதில்லை. இந்த தட்ப வெப்ப நிலையில் குளிருக்கான மேல் சட்டையை அணிந்து கொண்டிருந்தால் எப்படி இருக்கும் என நினைத்துப் பாருங்கள். உங்களால் தாங்க முடியாது. குளிர்காலத்தில் மட்டுமே அதை அணிந்து கொள்ள முடியும். அதைப் போலவே குளிர்காலத்தில் கோடை உடை அணிந்திருக்க முடியாது.
உங்கள் சட்டையை மாற்றுவது போல, உங்கள் மன நிலையை, உங்கள் நடைமுறைகளை மாற்றிக் கொள்ளும் திறன் உங்களுக்கு உண்டு. ஒரே நடை முறையில் நீங்கள் எப்போதும் இருக்கத் தேவையில்லை. எப்போதும் நல்ல முகம் காட்டிக் கொண்டு இருக்க முடியாது. நீங்கள் தொழிலில் இருக்கும் போது தொழில் மன நிலையில் இருங்கள். மெதுவாக இல்லாமல் வேகமாக சுறுசுறுப்பாக உங்கள் செயல்களைச் செய்யுங்கள்.

மெதுவாகச் செய்யும் அசைவு நிலைத் தியானத்தை (பயிற்சியில் கற்றுத் தரப்படும் ஒரு வகை தியான நுட்பம்) இங்கு செய்யலாம், சாப்பிடும் கூடத்தில் அல்ல. இதை சாப்பிடுமிடத்தில் செய்தால் உங்கள் மதிய உணவு இரவு உணவாகிவிடும். இங்கு நீங்கள் கற்றுக் கொண்டதெல்லாம் உங்களுக்குள், உங்கள் அகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த. மனதளவில் ஒரு கோட்பாட்டை ஏற்படுத்த அல்ல. இவை எல்லாம் உங்களின் ஒரு பகுதி. உண்மையில், நீங்கள் உங்களின் தினசரி வாழ்க்கையில் இதை நடைமுறைப்படுத்த முயல வேண்டாம். நீங்கள் சாதாரண மனிதராக இயல்பான மனிதராக இருங்கள். இந்த ஞானம் தானாகவே உங்கள் வாழ்க்கையில் வெளிப்படும். அது அந்த ஞானத்தின் கடமை. இதை நடைமுறைபடுத்த எந்த முயற்சியும் தேவையில்லை. இது சுயமாக தானாகவே வெளிப்படும்.

கே: ஆசையை எப்படி சமாளிப்பது? எனக்கு குழந்தை வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, பல முறை முயன்றும் இன்னும் நிறைவேறவில்லை.

குருதேவ்: ஆசை நிறைவேறுகிறதோ இல்லையோ, மகிழ்ச்சியாய் இருந்து கொள்ளுங்கள். ஒரு ஆசையையே பிடித்துக் கொண்டிருக்காதீர்கள். ஏனென்றால், ஒரு ஆசை நிறைவேறிய பின் அந்த ஆசை வருவதற்கு முன் நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்களோ அங்கேயே உங்களை விட்டுவிடுகிறது. எல்லா ஆசைகளும் நிறைவேற முடியாது. சில நிறை வேறுகிறது சில நிறைவேறாது. ஆனால் நீங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். எந்த நிலைப்பாடு என்று உங்களுக்குத் தெரியுமா? என்ன வந்தாலும் சரி, நான் மகிழ்ச்சியாய் இருக்கப் போகிறேன். நீங்கள் விரும்பினால் உங்களுக்குத் திருமணமாக நிறைய வாய்புகள் உள்ளது. உங்களுக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்தாலும் சரிதான். அப்படியும் மகிழ்ச்சியாய் இருங்கள். உங்களுக்குக் குழந்தை இருக்கிறதோ இல்லையோ மகிழ்ச்சியாய் இருங்கள்.

வாழ்க்கையில் நீங்கள் எடுக்க வேண்டிய முடிவு என்னவென்றால், ‘எந்த ஒரு சூழ்நிலையும் என் மகிழ்ச்சியை குலைக்க அனுமதிக்க மாட்டேன்.’ புரிந்ததா? நீங்கள் அந்த முடிவை எடுத்தாக வேண்டும், வேறு யாரும் அந்த முடிவை உங்களுக்காக எடுக்க முடியாது.

கே: உங்கள் கருத்துப்படி, இறப்பிற்கு பின் என்ன இருக்கிறது? மறுபிறப்பில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?

குருதேவ்: மறு பிறப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. அது இருக்கிறது என்று தெரியும். உங்களுக்குத் தெரியாததைத் தான் நம்ப வேண்டும். எனக்கு அது இருக்கிறது என்று தெரியும் போது நான் ஏன் நம்பவேண்டும்? ‘என் கார் வெளியே இருக்கிறது என்று நம்புகிறேன்’, என்று நீங்கள் சொல்வதில்லை. உங்கள் காரை வெளியே நிறுத்தியிருந்தால், ‘என் கார் வெளியே இருக்கிறது’, என்று சொல்வீர்கள். புரிந்ததா?
நம் எல்லோருக்கும் இருக்கும் விசாலமான வாழ்கையின் ஒரு சிறு அங்கம் தான் இந்த வாழ்கை. இந்த வாழ்கை ஒரு சிறு துளிதான்.

கே: நான் உங்கள் ட்விட்டர் கணக்கை பின்பற்றுகிறேன், உங்கள் ட்வீட்களை நீங்களே எழுதுகிறீர்களா? (ட்விட்டர் – சிறு வாசகங்களை பதிவு செய்ய வலைப்பின்னலில் இருக்கும் ஒரு மென்பொருள் வசதி, இதில் உங்கள் கணக்கை பின்பற்றுபவர்களுக்கு அந்த வாசகங்கள் கிடைக்கும்)
குருதேவ்: ஆம், இன்று காலை கூட நான் மூன்று ட்வீட்களை அனுப்பினேன். என் ட்வீட்களை நானே தான் அனுப்புகிறேன். சில சமயம் என் உதவியாளரையோ அல்லது வேறு சிலரையோ செய்யச் சொன்னாலும் பெரும்பாலும் 95% நானே அனுப்புவேன். நீங்கள் எல்லோரும் என் ட்விட்டர் கணக்கில் இருக்கிறீர்களா? உங்களில் எத்தனை பேர் இன்னும் என் ட்விட்டர் கணக்கில் இல்லை. கொஞ்சமும் தாமதிக்காமல், இப்போதே அதில் சேருங்கள்! உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள். தினசரி கொஞ்சம் ஞானம் படிப்பது நல்லது.

கே: பல வருடங்கள் நான் மன அழுத்தத்திற்கான மருந்தை உட்கொண்டிருந்து வந்தேன். கடந்த இரண்டு வருடங்களாக ஏதும் எடுத்துக் கொள்ளவில்லை. தினசரி சுதர்ஷனக் கிரியா செய்து வருகிறேன், ஆனாலும் என்னுடைய கவனம் மற்றும் தூக்கம் சரியாக இல்லை, இது என் வேலையை பாதிக்கிறது. அந்த மருந்தை எடுத்துக் கொண்டிருந்த போது நன்றாக இருந்தது என்று சில நேரம் உணர்கிறேன். என் வேலை ஆபத்தில் இருப்பதால், மருத்துவரின் ஆலோசனைப் படி நான் அந்த மன அழுத்தத்திற்கான மருந்தை உட்கொள்ளலாமா அல்லது என்ன ஆனாலும் சரி என்று அதை தவிர்ப்பதா?

குருதேவ்: என்ன ஆனாலும் சரி அதை தவிர்த்து விடுங்கள் என்று சொல்ல மாட்டேன், ஆனால் நீங்கள் அதை தவிர்க்க முயல வேண்டும். மேலும், யோகாசனம் செய்யுங்கள். காலை வேளையில் ஒரு மணிநேரம் உடம்பை நீட்டி சமன் செய்து பயிற்சி செய்யுங்கள். இன்று காலை செய்த யோகப் பயிற்சி நன்றாக இருந்தது அல்லவா? எத்தனை பேர் அதை அனுபவித்து மகிழ்ந்தீர்கள்? அதைச் செய்தால் உங்கள் கவனம் மற்றும் எண்ணக் குவிப்பு மேம்படும். அதனால்தான் நான் உங்களுக்கு கண் திறந்தவாறு செய்யும் தியானப் பயிற்சி அளித்தேன். கண்களை மூடினால் பல சமயம் உங்கள் மனம் எங்கோ சஞ்சரித்து காற்றிலே கோட்டை கட்ட ஆரம்பித்து விடுவீர்கள் என்று எனக்குத் தெரியும். பிறகு உங்கள் கண்களை திறக்க நான் ஞாபகப்படுத்த வேண்டும்.

எனவே, சில நிமிடங்கள் இதைப் போன்ற தியானம் செய்வது உங்கள் கவனத்தை திரும்ப கொண்டு வந்து சேர்க்கும். என்னைப் பாருங்கள், மக்கள் ஒவ்வொரு நாளும் அவ்வளவு கேள்விகள் கேட்கிறார்கள், உங்களுக்கு அது எவ்வளவு என்று தெரியாது. இந்த வகுப்பு சிறியது, ஆனால் கனடாவில் 3000 பேர், அமெரிக்காவில் 3000 பேர், ஒவ்வொருவரும் நான் வரும் போதும் போகும் போதும் அதே கேள்வியை பல முறை கேட்கிறார்கள், நான் அதே பதிலை ஒவ்வொரு முறையும் கூறுகிறேன். அவர்கள் ஐந்து முறை கேட்கிறார்கள் என்று எனக்குத் தெரியும், எனவே நான் அதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்! நான் எல்லோரையும் பார்த்து விடுவதில் நிச்சயமாய் இருக்கிறேன், ஒருவரை நான் பார்க்காவிட்டால் கூட, ‘என்னை தவிர்த்து விட்டீர்கள், என்னை உங்களுக்குப் பிடிக்கவில்லை, உங்களுக்கு என் மீது அன்பு இல்லை,’ என்றெல்லாம் அவர் எழுதிவிடுவார்.

உண்மையில் நான் யாரையும் பார்க்காமலிருப்பதில்லை. நான் பார்க்கும் போது அவர்கள் எங்காவது பார்த்துக் கொண்டிருப்பார்கள்! ஆனால் அவர்கள், ‘நீங்கள் என்னைப் பார்த்து சிரிக்கவில்லை,’ என்பார்கள். நான் ஒவ்வொருவரையும் கவனித்து விடுகிறேன், 100 சதவீதம். உங்களாலும் அப்படிச் செய்ய முடியும்.

கே: அன்பு குருதேவ், நம் பூமி நான்காவது பரிமாணத்திற்குள் நுழையப் போகிறது என்று கடந்த சில வருடங்களாகப் பலர் கூறிவருகிறார்கள். இதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

குருதேவ்: எந்த பரிமாணத்தையும் இங்கே தெரிந்து கொள்ளும் வரை, இந்தப் பேச்சுகளில் திசை திரும்பாதீர்கள். இது திகைப்பான ஒரு உணர்வைத் ஏற்படுத்த ஒரு வழி. டிசம்பர் 2012 ல் உலகம் முடியப் போகிறதா என்ற கேள்வியை பல்லாயிரம் முறைகள் என்னிடம் கேட்டார்கள், அதைப் போலத்தான். ஓ கடவுளே! எங்கே போனாலும், பூமி முடியப் போகிறதா என்பதையே கேட்டேன். நான் சொன்னேன், ‘இது உண்மையல்ல, எல்லாம் எப்போதும் போல சரியாகவே இருக்கும்’.

எல்லாம் மூடிவிடப் போகிறார்கள் என்று ஆறு மாதத்திற்கு தேவையான பால் பவுடர், மளிகைப் பொருட்கள் போன்றவற்றை வாங்கி மக்கள் தங்கள் வீட்டு நிலவறையில் சேமித்து வைத்தார்கள். இதெல்லாம் மக்கள் சிறு சிறு சிலிர்ப்பான உணர்வுகள் வேண்டி அவ்வப்போது இப்படியான கற்பனைகளை கொண்டு வருவார்கள். எல்லா பரிமாணங்களும் இங்கே இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள், கவலை வேண்டாம், ஆனந்தமாய் இருங்கள்.