குருபூர்ணிமா - குருதேவின் செய்தி

22 - ஜூலை 2013 – மொண்ட்ரியல் - கனடா

ஓம் நமோ ப்ரணவார்த்தாய சுத்தஞான ஏக அம்ருதையே நிர்மலாய ப்ரஷந்த்தாய  ஸ்ரீதக்ஷிணாமூர்த்தயே  நமஹ:

(எப்போதும் தூய்மை, அமைதி, தூய ஞான உரு, ஓம் எனும் மந்திரத்தின் குறிப்பு ஆகிய வையாகிய ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியை வணங்குகிறேன்)

ஒரு சமயம், ஒரு குரு பிரார்த்தனை திருக்கூட்டத்தில் அமர்ந்திருந்த போது, மக்கள் வந்து அவரது ஆசியைப் பெற்றனர். அவர், நீண்ட நேரம் எதுவும் பேசாமல் இருந்தார். மக்கள் ஆசி பெறும் போது ஏதாவது கேட்டால்," ஓ ! நீ மிகுந்த அதிர்ஷடசாலி" என்றே கூறி வந்தார். ஒரு மாணவன் வந்து "குருவே நான் தேர்வில் தோல்வி அடைந்து விட்டேன்" என்றான். அதற்கு அவர், “நீ மிகுந்த அதிர்ஷடசாலிஎன்றார். மற்றொருவர்," குருவே, நான் என் வேலையை இழந்து விட்டேன்" என்றார். அதற்கும் அவர் நீ மிகுந்த அதிர்ஷடசாலி என்று கூறினார்.

மூன்றாவதாக ஒருவர் வந்து," என் நண்பர்கள் யாரும் என்னுடன் பேசுவதில்லை, அனைவரும் என் விரோதிகளாகி விட்டனர் என்றார். அதற்கும் குரு ! நீ மிகுந்த அதிர்ஷடசாலி என்று கூறினார். மற்றொருவர்," என் மனைவி என்னை விட்டுப் பிரிந்து சென்று விட்டாள்'' என்றார். அதற்கும் குரு ! நீ மிகுந்த அதிர்ஷடசாலி” என்றே கூறினார். இவ்வாறு ஒவ்வொருவராக தங்கள் பிரச்சினைகளை கூறும் போது குரு நீ மிகுந்த அதிர்ஷ்டசாலி என்றே கூறி வந்தார். ஆனால் விந்தையான ஏதோ ஒன்று அவர்களுக்கு நிகழ்ந்து, மிக மகிழ்ச்சியாகத் திரும்பி சென்றனர். ஒருவர், அப்போது வந்து," குருவே! நான் மிகுந்த அதிர்ஷ்டசாலி என் வாழ்வில் நீங்கள் இருக்கின்றீர்கள். நான் மிகுந்த நன்றியுள்ளவனாக இருக்கின்றேன்." என்றார். குரு கோபம் அடைந்து, அவரை அடித்து விட்டார். நன்றி மிகுதியால் கண்களில் கண்ணீருடன் அந்த கனவான் நடனமாடத் துவங்கினார்.

இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒருவர் மிகக் குழப்பம் அடைந்து விட்டார்." நான் காண்பதை என்னால் நம்பவே முடியவில்லை.' மிகுந்த நன்றியுடன் இருக்கின்றேன் என்றவரை அடிக்கிறார், ஆனால் தங்கள் பிரச்சினைகளைக் கூறி அழுபவர்களை அதிர்ஷ்டசாலி என்கிறார் என்ன இது? எதுவும் புரியவில்லையே என்று எண்ணினார்.

குருவை அணுகி இதைக் கேட்கத் தைரியமில்லாததால், தன்னுடன் அமர்ந்திருந்த மற்றவர் களை நோக்கி, " நீங்கள் நெடுங்காலமாக இங்கு இருக்கின்றீர்கள். இது என்ன இவ்வாறு நடக்கின்றது? என்னால் குருவின் நடத்தையைப் புரிந்து கொள்ள முடியவில்லை அது தர்க்க ரீதியாக பொருத்தமில்லாததாக இருக்கின்றது." என்று கேட்டார். பக்தர்கள் வழக்கம் போல அவரவருக்குத் தெரிந்த விளக்கத்தைக் கூறினார்கள். ஒரு முதுநிலை சீடர் " ஆம் ! குரு செய்தது மிகச் சரியானது!" என்றார்.

ஒரு சமயம், பெங்களூரு ஆஸ்ரமத்தில் ஒரு முதுநிலை சீடர் என்னிடம் ஒரு நிகழ்ச்சியைப் பற்றிக் கூறினார்.அதாவது 1942ஆம் ஆண்டு பெங்களூரில் ஒரே ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் தான் இருந்தார், அவர் MBBS தேர்வில் ஏழு தடவை தோல்வி அடைந்தவர். அக்காலத்தில் குடல்வால் அழற்சி அறுவை சிகிச்சையின் போது தவறான நரம்பைத் துண்டித்து அதனால் நோயாளி இறந்து விடுவார். ஏழு தடவை தோல்வி அடைந்த இந்த டாக்டர் அதைக் கண்டு பிடித்ததால்,அவர் மிகவும் மதிக்கப்பட்டார். பிற்காலத்தில் சர்வ தேச விருதும் பெற்றார். ஆனால் அவர் ஏழு தடவை MBBSஇல் தோல்வி அடைந்தவர்! ஆகவே யாரவது தேர்வில் தோல்வி அடைந்தால், அவர்கள் மறுமுறை நன்றாகப் படிப்பார்கள்.

ஒரு தடவை படித்துத் தேர்வு எழுதும் போது ஏதோ ஒரு குருட்டு அதிர்ஷ்டத்தில் வெற்றி அடைந்து விட்டுப் பின்னர் படித்தவற்றை மறந்து விடுகிறீர்கள். ஆனால், தோல்வி அடைந்தால் அதில் மிகத் தேர்ச்சி அடைகிறீர்கள். கணக்கில் தோற்றுவிட்டால் முயன்று நன்றாக மனனம் செய்து மிக நன்றாகப் படிக்கிறீர்கள். ஆகவே ஒருவர் தேர்வில் ஒரு முறை தோற்றுவிட்டால், மிக நல்ல டாக்டராகவோ, அல்லது பொறியியல் வல்லுனராகவோ ஆகிறார்கள் (சிரிப்பு). அதாவது, அதே பாடங்களை அதிக முயற்சியுடன் படித்துத் தேர்வு அடைகிறார்கள்.

அதனால் தான், அந்த முதுநிலை சீடர்," குரு தோல்வியடைந்தவன் அதிர்ஷ்டசாலி என்று  கூறியது சரியே. அவன் மேலும் முயன்று படிக்கிறான்." என்றார். அது போல,வேலையை இழந்து விட்டேன் என்று கூறியவருக்கும் குரு நீ அதிர்ஷ்டசாலி என்று பதிலளித்தார். ஏனெனில் அவர் இப்போது தன்னைப் பற்றி, தனக்கு என்ன வேண்டும் என்பதைப் பற்றி சிந்திப்பதற்கு நேரம் கிடைத்துள்ளது. சாதாரணமாக வேலையிலுள்ளவர்கள், தங்களைப் பற்றி சிந்திப்பதில்லை. தங்களுக்கு நேரம் இல்லை என்று குறைப்படுவதுண்டு. வேலையிழந்த இவருக்கு இப்போது நேரம் கிடைத்துள்ளது. வாழ்க்கையில் நேரம் என்பதை அடைவதே பெரிய அதிர்ஷ்டம். தன்னைப்தெய்வீகத்தினைப் பற்றி, தான் யார் என்பதை அறிவதை பற்றி மெய்நிலை அறிவது பற்றி சிந்திப்பதற்கு நேரம் கிடைப்பது மிகப் பெரிய அதிர்ஷ்டம்.

அது போல, மனைவி தன்னை விட்டுப் பிரிந்ததாகக் கூறியவருக்கு நீ அதிர்ஷ்டசாலி என்றதும் சரியே. அவர் இதுவரை தன மனைவியின் தேவைகள் என்ன என்பதைப் பற்றிய கூருணர்வு இன்றியே வாழ்ந்திருக்கின்றார். ஒருவர் உங்களை விட்டுப் பிரியும் போது தான் அவரது அருமை தெரியும். உங்களது தவறுகளை உணருவீர்கள். இதை விட மேன்மையாக செயல்பட்டிருக்கலாமே என்று அறிவீர்கள். எனவே ஒரு பெண்ணின் பிரச்சினைகளை கூருணருவதற்கான வாய்ப்புப் பெற்ற அவர் அதிர்ஷ்டசாலியே.

மனைவியின் மன உணர்வு பிற தேவைகளை அறிந்து செயல்பட்டிருந்தால் அவள் ஏன் பிரிந்து செல்கிறாள்? ஒரு பெண்ணின் தேவைகளை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றே அவள் பிரிந்து சென்றிருக்கிறாள். இதை அறிந்து கொண்ட அவர் மகிழ்ச்சியடைந்தார். எனவே வாழ்க்கையில் நீங்கள் ஒன்றை இழக்கும் போது மிகுந்த துயர் அடைகிறீர்கள். அந்தத் துயரமே உங்களை  எழுச்சி அடைய வைக்கின்றது.

மனித உள்ளுணர்வில் மூன்று நிலைகள் உள்ளன. முதலாவது நிலை செயலற்ற மந்த நிலை. இந்தியில் கோரஜரட்ட என்று சொல்லப்படும் உணர்வற்ற அல்லது அறிவுபூர்வமற்ற நிலை. எதையுமே உணர இயலாத அளவிற்கு மிக அதிகமான மந்த நிலை. இத்தகைய மந்த நிலையிலிருந்து பின்னர் வாழ்க்கை இன்பகரமானது என்பதை நீங்கள் உணரத் துவங்கும் போது விவேகமும், வைராக்கியமும் உங்களுக்குள் மலரத் துவங்குகின்றது. வைராக்கியம் என்கின்ற சாந்தம் உங்கள் வாழ்வில் ஏற்படும் போது நீங்கள் மிகவும் அதிருஷ்டசாலி ஆகின்றீர்கள்.  
ஆக, உங்கள் நண்பர்கள் அனைவரும் உங்களை விட்டு விலகிச் சென்றுவிட்டால், அவர்கள் 

உங்களை நீங்களே நன்கு ஆராய்ந்து கண்டறிந்து கொள்ள உங்களுக்கு அவகாசம் கொடுத்திருக்கின்றனர். நீங்கள் யார்?, நீங்கள் என்னவாக இருக்கின்றீர்கள், உண்மை என்ன என்பதையெல்லாம் நீங்கள் அறிய நேரம் கிடைப்பதனால் நீங்கள் அதிருஷ்டம் செய்தவர்.
எல்லாம் துன்பமயம் என்பதை உணர்வதே முதல் படி. வாழ்க்கை துன்பகரமானது. வருத்தம் நிறைந்தது. இதை உணரும் நிலையில் தான் மக்கள் தங்கள் மதத்தில் பற்று கொண்டு பக்தி வழியில் செல்கின்றனர். அடுத்த நிலை வாழ்வை ஆனந்த மயமாகப் பார்ப்பது. எல்லாம் துன்பரமானது என்று உணருகின்ற முதல் நிலையிலிருந்து நீங்கள் அடுத்த நிலைக்கு நகருகின்றீர்கள். கவலை எங்கே இருக்கின்றது? விழித்தெழுங்கள் என்ற அடுத்த நிலையில் தான் குருவின் அவசியம் உண்டாகின்றது. குருதத்துவம் மலரும் போது அல்லது குருவின் இருப்பு உணரப்படும் போது துன்பம் மறைந்து ஆனந்தம் உண்டாகின்றது. முழுமையான ஆனந்தம். வாழ்கை ஆனந்தமயம். வாழ்கை ஒரு லீலை, அது ஒரு விளையாட்டு என்பது புரிய வரும்.  
கதையில் இறுதியாக வந்து குருவிடம் "நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்" என்று சொன்னவனுக்கு குருவிடமிருந்து அறை கிடைத்தது?

பக்தர்களில் மூத்தவரான ஒருவர் சொன்னார், அந்த பக்தன் 'நான்' என்னும் எண்ணம் கொண்டிருந்தான். குரு அவனுக்கு ஒரு அறை கொடுத்த போது வாழ்க்கையில் நாம் இருப்பதே தெரியாமல் இல்லாதது போல் வாழ வேண்டும் என்பதை உணர்ந்தார். பொதுவாக மக்கள் வாழ்வில் இருப்பார்கள் ஆனால் வாழ்க்கையை வாழ்வதில்லை. அது அறியாமை. ஆனால் நம் இருப்பதே தெரியாதது போல் வாழ்க்கை நடத்துவதே ஞானம். குருவின் அறை அவனுக்கு விழுப்புனர்வைக் கொடுத்தது. நான் மகிழ்ச்சியாக இருக்கின்றேன் 'நான் துன்பப்படுகின்றேன்' என்றெல்லாம் சொல்லும் போது நான் என்பது எங்கே இருக்கின்றது? நான் அங்கே இல்லை. நீங்கள் இருப்பதே தெரியாமல்   இல்லாதது போல் வாழ்க்கை நடத்துங்கள். குருவின் அறை கிடைத்த போது அந்த பக்தனுக்கு இந்த செய்தி ஞானமாக கிடைத்ததினால், அவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.

நன்றியுணர்வோடு இருப்பதற்கு அவசியம் என்ன? அதற்கு இருவர் தேவைப்படுகின்றது. குரு சொன்னார், "விழித்தெழுங்கள்.'நீ' 'நான்' என்று சொல்வது இருவரை குறிக்கும்.ஆனால் இருப்பது ஒன்றே. நீ என்றும் நான் என்றும் தனித்தனியே இல்லை. இருப்பதெல்லாம் பரம்பொருள் ஒன்றே. இவையெல்லாம் ஒரு நாடகம், ஒரு லீலை; ஒரு விளையாட்டு. இதனை உணரும் போது துன்பம் என்பது வாழ்விலிருந்து மறைந்து போகும். ஒவ்வொரு சவாலும் அளிக்கப்பட்ட ஒரு வாய்ப்பு. ஒவ்வொரு வாய்ப்பும் இறைவனை நோக்கி எடுத்து வைக்கப்படும் ஒரு அடி. 

இதுவே இந்த கதையின் கருத்து.

மற்றொரு கதை!

விரல்கள் அனைத்தும் வெவ்வேறானவை என்பது உங்களுக்குத் தெரியும். இரண்டு விரல்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒருமுறை விரல்கள் எல்லாம் அவைகளில் எது பெரியது என்ற சர்ச்சையில் இறங்கின. கட்டை விரல் சொன்னது "நான் தான் பெரியவன். நான் தான் அதிக பருமனானவன். மக்கள் எப்போது வெற்றி பெற்றாலும் அதைக் குறிக்க என்னை தான் காண்பிக்கின்றனர். தொடர்ந்து செல்லலாம் குறிக்கவும் என்னையே காட்டுகின்றனர். ஏனென்றால் நான்தான் பெரியவன். படிக்காதவர்கள் அடையாளத்திற்கென என்னுடைய ரேகையை தான் பதிவு செய்கின்றார்கள். ஆகவே நான் தான் பெரியவன் என்று கட்டை விரல் சொன்னது.

ஆள்காட்டி விரல், "மக்கள் குறிப்பிட்டு காட்டுவதற்கு என்னையே பயன்படுத்துகின்றனர்.  ஞானம் உள்ளவர்கள் பாதையைக் காட்டுகின்றனர். எனவே வாழ்க்கையில் திசை காட்டுவதனால் நான்தான் பெரியவன்" என்று சொன்னது.

நடுவிரல் சொன்னது, நீங்கள் அனைவரும் பார்வையற்றவர்கள் ஆகிவிட்டீர்கள் என்று நினைக்கின்றேன். யாருடைய கையை வேண்டுமானாலும் பிடித்துப் பாருங்கள் யார் எல்லோரையும் விட உயரமானவர் என்று! நான் தான் நீளமானவன். ஏன் வீணாக விவாதம் செய்கின்றீர்கள்? இது நண்பகலில் சூரியன் இருக்கின்றதா என்று கேட்பது போல் இருக்கின்றது. 

அப்பொழுது மோதிர விரல் சொன்னது,"எனக்கு உங்கள் எல்லோரையும் பார்த்தால் சிரிப்புத் தான் வருகின்றது. மக்கள் எந்த விரலில் நகை அணிகின்றனர்? கட்டை விரலில் யாரும் நகை அணிவதில்லை.மோதிர விரலில் தான் மோதிரங்கள் அணியப்படுகின்றன.உலகம் முழுவதிலும்   இதனை அங்கீகாரம் செய்துள்ளனர். எனவே நான் தான் பெரியவன்" என்று சொன்னது. 

இவற்றை எல்லாம் பார்த்து சுண்டு விரல் சிரித்துக் கொண்டிருந்தது. ஏன் சிரிக்கின்றாய் என்று மற்ற நான்கு விரல்கள் கேட்ட பொது, "யாராவது மதிப்பிற்குரியவர் வந்தால் எந்த விரல் முன்னே நிறுத்தப்படுகின்றது? (கைகள் இரண்டையும் ஒன்று சேர்த்து குவித்து நமஸ்தே என்று சொல்லும் போதோ அல்லது கைகளால் வணங்கும் போதோ சுண்டு விரல்கள் தான் முதலில் நிற்கின்றன. கோவிலில் பிரார்த்தனை செய்யும் போதும் இறைவன் முன் வைக்கப்படுவது யார்? மிக உயர்ந்தவரே இறைவன் முன் முதலில் வைக்கப்படுவார். ஆகவே, நான் தான் இறைவனுக்கு மிக நெருக்கமானவன். எனவே நான் தான் பெரியவன்." என்று சொல்லியது.  இவ்வாறாக, அனைத்து விரல்களும் தத்தம் வழியில் நான் தான் பெரியவன் என்று சொல்லிக் கொண்டன.  


அதே போல் ஒவ்வொருவரும் உங்களுக்குள் இருக்கும் நற்குணங்களையும் பெருமை தரும் விஷயங்களைய அங்கீகாரம் செய்து கொள்வதோடு மற்றவர்களிடம் இருக்கும் நற்குணங்களையும் அங்கீகாரம் செய்து பாராட்டுங்கள். அப்படி செய்யும் போது நீங்கள் மற்றவர்கள் என்னும் வேற்றுமை இல்லை. அதுவே 'நமஸ்தே'; அதுவே முழுமை. புத்தர் உங்களை செயலற்ற மந்த நிலையிலிருந்து வாழ்கை துன்பம் நிறைந்ததேன்பதை உணரும் நிலைக்கு கொண்டு சென்றார். பின்னர் அந்த நிலையிலிருந்து எல்லாம் இன்பமயம் என்னும் அடுத்த நிலைக்கு கொண்டு சென்றார். 'அனைத்தும் ஆனந்தம்' என்பதே வேதாந்தம். (தன்னை அறிந்து கொள்ளும் பாரம்பரிய தத்துவம். அதன் மூலம் பிரம்மத்தின் உண்மை நிலையை புரிந்து கொள்ளும் தத்துவம்). நான் எதுவுமில்லை (சூன்யம்) அனைத்தும் நானே (பூரணத்துவம்) தியானம் மற்றும் கொண்டாட்டம். எல்லாம் ஒருங்கிணைந்து செல்லும். இன்று தியானத்தையும் முழுமையையும் கொண்டாடும் நாள்.