தெரியாததைத் தெரிந்து கொள்வது


26 ஜூலை 2013 - பூன், வடக்கு கரோலினா, அமெரிக்கா      



கே: அன்பான குருதேவா உண்மை உயிரெழுத்துக்கும் மெய்யெழுத்துக்கும் நடுவில் மறைந்திருக்கிறது என்று சொன்னீர்கள். அதைப் பற்றி விளக்குவீர்களா?

குருதேவர்: ஒவ்வொரு எழுத்தும் உடலின் ஒவ்வொரு இடத்தைப் பாதிக்கிறது. நம் உடல் என்பது எழுத்துக்களால் ஆன ஒரு மாலையாகும். சமஸ்கிருத மொழியில் “அக்ஷர மாலா” என்று அழைப்பார்கள். நீங்களே ஒரு மாலையாக, ஜப மாலையாக இருக்கிறீர்கள். ஒவ்வொரு எழுத்தும் உடலில் உள்ள ஒவ்வொரு சக்கரத்தை (சக்தியை) குறிக்கும்.
சமஸ்கிருதம் உலகிலேயே மிகப் பழமையான மொழி. இதன் அமைப்பு டார்வினின் பரிணாம வளர்ச்சி போல் இருக்கிறது. சமஸ்கிருதத்தில் முதல் எழுத்து “அ”. ஒவ்வொரு குழந்தையும் இதைச் சொல்லும். கடைசி உயிரெழுத்து “அஹ” என்பது. நீ சிரிக்கும் போது வரும் ஒலி எது? “அஹ்ஹஹா”. இல்லையா? சிரிப்பில் “அ” முதல் “அஹ” வரை அடங்கி இருக்கிறது. “அஹ” என்பது ஆச்சரியத்தை குறிக்கும். சிரிப்பையும் குறிக்கும். எவ்வளவு முயன்றாலும் “அ” மற்றும் “அஹ” இல்லாமல் உன்னால் சிரிக்க முடியாது. 

உயிரெழுத்துக்களான அ, ஆ, இ, ஈ, உ, ஊ என்ற ஒலிகள் எப்படிப் பிறக்கின்றன என்று பார்ப்போம். “அ” என்பது தொண்டையின் அடிப் பகுதியிலிருந்து வெளிப் பக்கமாக வருகிறது. “இ” நாக்கிலிருந்து வருகிறது. “உ” உதடுகளிலிருந்து வருகிறது. “ரு” என்று சொல்லும் போது நாக்கு அதிர்கிறது. மற்ற எழுத்துக்கள் ஐ, ஆய் ஒ, ஔ, அம் மற்றும் அஹ உதடுகளிலிருந்து வரும்

மெய்யெழுத்துக்குச் சென்றால், க, க்க, (க), (க.) ந என்னும் ஒலிகள் தொண்டைப் பகுதியிலிருந்து புறப்படுகின்றன. ச, ச்ச, ஜ, ஜ. என்னும் ஒலிகள் நாக்கு, மற்றும் உதட்டுக்கு அருகிலிருந்து புறப்படுகின்றன. த,த்த, (த) (த..) என்னும் போது பற்களுக்கு அருகிலிருந்து ஒலி வருகிறது. ப, ப்ப, (ப) (ப) என்னும் போது உதட்டிலிருந்து ஒலிக்கிறோம். பொதுவாக எழுத்துக்களை உச்சரிக்கும் போது ஒலி தொண்டையிலிருந்து துவங்கி வெளி நோக்கி உதட்டருகில் வருகிறது.

இப்போது மிருகங்களும், பறவைகளும் செய்யும் ஒலிகளைக் கவனிக்கலாம்.  பறவைகள் “க” மற்றும் “ச” சப்தங்களை வெளிவிடும். கிளி மற்றும் மைனாவால் மட்டும் “ம” என்ற ஒலியெழுப்ப முடியும். மற்ற பறவைகள் “க” மற்றும் “ச” சப்தத்தையே செய்ய முடியும். நீரிலும் நிலத்திலும் வாழும் தவளை போன்ற பிராணிகள் த, தா, ட்ரா சப்தமிடும்.
பாலூட்டும் மிருகங்களான பசு, ஆடு, குதிரை முதலியன “பா”, (பா), “மா” என்ற ஒலிகளை எழுப்பும்.

மற்ற மெய்யெழுத்துக்கள் ய, ர, ல, வ, ஷ முதலியவை வருகின்றன. (மனிதர்களால் மட்டுமே உச்சரிக்க முடியும்) எனவே உயிரெழுத்துக்களும், மெய்யெழுத்துக்களும் ஒரு வரிசைக் கிரமத்தில் அமைக்கப் பட்டிருக்கின்றன. இதை டார்வினின் பரிணாம வளர்ச்சி தத்துவத்தோடு ஒப்பிட்டுச் சொல்லலாம். பறவைகள், நீரில் வாழும் ப்ராணிகள், நீரிலும் நிலத்திலும் வாழக் கூடியவை., நிலத்தில் வாழும் மிருகங்கள், மனிதர்கள் என்று வளர்ந்ததாக டார்வின் பரிணாம வளர்ச்சித் தத்துவம் சொல்கிறது. இது மிகவும் ஆச்சரியத்துக்குரியது இல்லையா?

இங்கிலாந்தில் நடந்த ஒரு ஆராய்ச்சியில், சமஸ்கிருத மொழி, மனிதர்களின் நரம்பியல் செயல் பாட்டுக்கு உகந்த மொழி என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். 10 ஆண்டுகளுக்குப் பின் இதை உறுதி செய்திருக்கிறார்கள். சமஸ்கிருத மொழியோ அதைச் சார்ந்த மொழியறிந்தவர்கள் கணக்குப் பாடத்திலும் வல்லவர்களாக இருப்பதாகத் தெரிய வருகிறது.
ஆங்கில மொழியில் 60% சமஸ்கிருதம் கலந்திருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? ஆங்கில மொழியில் உள்ள பல வார்த்தைகளுக்கு அடிப்படை சமஸ்கிருத மொழி தான். ஸ்வாசா என்றால் சிஸ்டர். ப்ராதா என்றால் ப்ரதர். பிதா என்றால் ஃபாதர். மாதா என்றால் மதர். இப்படி பல வார்த்தைகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஆங்கில மொழியும் சமஸ்கிருத மொழியிலிருந்து வந்தது என்பதை அறியலாம். இன்று காலை நடந்த உரையாடலைத் தொடர்ந்து, இப்போது பேச்சு என்பது நான்கு வகையானது என்பதைப் பார்க்கலாம்.

1.   வைகாரி – நாம் பழக்கத்தில் உபயோகிக்கும் மொழி. 2.   மத்யமா – இது வைகாரியை விட சூட்சுமமானது. இங்கு தொடர்பு கொள்ள மொழி அவசியமில்லை. நம் விருப்பமும், உணர்ச்சிகளுமே மற்றவருக்கு நாம் சொல்ல வந்ததை உணர்த்தி விடும். உன் மொழியை அறியாதவர்களுக்கு கூட நீ உன் உணர்ச்சிகளைத் தெரிவிக்க முடியும். அதே போல் அவர்களுடைய உணர்ச்சிகளை நீ புரிந்து கொள்ள முடியும்.

குழந்தைகளோடு தொடர்பு கொள்ள மொழி தேவையில்லை. குழந்தைக்குப் பசி எடுத்தாலோ, தூக்கம் வந்தாலோ அது நமக்குத் தெரிந்துவிடும். (குழந்தை பேசாமலே அதன் தேவையை நமக்கு உணர்த்தி விடும்.)

மத்யமா என்பது பேச்சை விட நுட்பமானது. மிருகங்களும், மரங்களும் மத்யமாவில் நம்மோடு தொடர்பு கொள்கின்றன.

3.       பஷ்யந்தி – வார்த்தைகள் இல்லாமல், மொழியில்லாமல் ஞானத்தை அறிவது பஷ்யந்தி எனப்படும். ஆழ்ந்த தியான நிலையின் போது, சில சமயம் மந்திரங்கள் அல்லது வார்த்தைகள் ஒலிப்பது போல் இருக்கும். அல்லது ஏதாவது கருத்து தோன்றும். மொழியின் உதவியில்லாமல் மனதில் கருத்து தோன்றுவதை பஷ்யந்தி என்று சொல்கிறோம். ஒரு முனிவர் இந்த நிலையை நன்கு அறிவார். பெரிய விஞ்ஞான கண்டு பிடிப்புகளும் பஷ்யந்தி நிலையில் நிகழ்கின்றன.

4.   பரா – பரா என்பது பஷ்யந்தி நிலையைத் தாண்டிய ஒரு நிலை. அது எந்த விதமான உணர்வு வெளிப்பாடுகளுக்கும் மூலமான ப்ரபஞ்சத்தின் மொழியாகும். ஆழ்ந்த சமாதியில் இருக்கும் போது, எந்தச் சலனமும் இல்லாத மன நிலையில், நீ பராவோடு தொடர்பு கொள்ள முடியும். ப்ரபஞ்சத்தின் அலை அதிர்வுகளை உணர்ந்து தொடர்பு கொள்ளலாம். நாம் பேச்சு மூலம் (வைகாரி நிலையில்) தொடர்பு கொள்ளும் போது எண்ணங்களுக்கும் மனதுக்கும் வேலை கொடுப்பது மட்டுமே நிகழ்கிறது. மனத்தால் பரா நிலையில் தொடர்பு கொள்ள முடியாது. ஆத்மா மட்டுமே பரா நிலையில் தொடர்பு கொள்ளும் சக்தி வாய்ந்தது. பரா என்பது ஆத்மாவின் மொழி. மனதுக்குப் பொழுது போக்கு அவசியம். வைகாரி (ஒருவருக்கொருவர் பேசுவது) மனதுக்குப் பொழுது போக்காக இருக்கிறது.

கே: குருதேவா! ஒலி / எழுத்து தியானம் பற்றி விளக்குவீர்களா?

குருதேவர்: இன்று நாம் செய்த தியானம் அது தான். “ஆ” இல்லாமல் நீ “கா” வுக்குச் செல்ல முடியாது. எனவே அந்த ஒலி ஆரம்பிக்கும் மூலமான இடத்துக்குச் சென்றீர்கள். இல்லையா? அப்போது என்ன நடந்தது? ஒரு சலனமும் இல்லை! மனம் ஒரு எண்ணமும் இல்லாமல் அமைதியாக இருந்தது!

எனவே இந்த தியானத்தின் போது நாம் எண்ணங்கள் புறப்படும் இடத்துக்குச் சென்றோம். 25 நிமிடம் எப்படிக் கடந்தது என்ற உணர்வே நமக்கு இல்லை. இந்த தியானத்தைப் பற்றிப் புரிந்து கொண்டால், நீ இன்னும் ஆழ்ந்த நிலைக்குச் செல்ல முடியும். தியானத்தைப் பற்றி எந்தப் புத்தகத்திலும் படிக்க முடியாது. உங்கள் அனுபவத்தில் வர வேண்டும். அது மிக முக்கியம்.

‘ஒலி” உருவானது எப்படி என்று பண்டைக்காலத்து ரிஷி ஒருவர் அழகாக சொல்லியிருக்கிறார். “ஆத்மா புத்தி சமேத் யுக்தா”. ஒலி புத்தியைத் தொடும் போது, மனதோடு இணைந்து உஷ்ணம் (சக்தி) உடலில் தோன்றுகிறது. இந்த உஷ்ணம் ஒலிப் பெட்டியில் காற்றை செலுத்துகிறது.  அந்தக் காற்றினால் ஒலி உண்டாகிறது. இது எப்படி நடக்கிறது என்று அறிய ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். உடலில் / மனதில் சலனமின்றி ஒலி எங்கிருந்து வருகிறது? (ஒலியின் ஊற்றுக் கால் எங்கிருக்கிறது?) என்று கண்டு பிடிக்க வேண்டும். இது மிகவும் வியப்புக்குரிய ஒன்று.

ஒரு யோகி 103 அல்லது 104 வயதிருக்கும். ஏழெட்டு வருடங்களுக்கு முன் காலமானார். அவரை நாத ப்ரம்மம் என்று அழைத்தார்கள். ஏனென்றால் உடலின் எந்தப் பாகத்திலிருந்தும் அவரால் ஒலி எழுப்ப முடிந்தது. நான் கூட அவரை ஒரு முறை பார்க்கச் சென்றிருக்கிறேன். பல விதமான ஒலிகளை உடலின் வேறு வேறு பாகங்களிலிருந்து உண்டாக்கினார்.

அவர் அமெரிக்கா சென்றிருந்த போது, அங்கிருந்த விஞ்ஞானிகள் அவர் திறமையைக் கண்டு மிக ஆச்சரியமடைந்தனர். மின் இணைப்புகளைப் பொருத்தி பல பரிசோதனைகள் நடத்தினார்கள். அவர் இமயமலையின் அடிவாரத்தில் ரிஷிகேசத்தில் வாழ்ந்து வந்தார். பல ஆன்டுகள் சாதனை மூலம் இத்திறமை பெற்றிருந்தார். மிகவும் பருமனாக, எடை அதிகமான உடலமைப்பை பெற்றிருந்தார்.

கா, சா, பா என்ற ஒலிகளை உடலின் வேறு வேறு பாகங்களிலிருந்து வெளிப் படுத்துவார். இது மிக ஆச்சரியமான விஷயம். அவர் ஒரு நல்ல மனிதராக வாழ்ந்தார். ஆனால் அவர் இந்த வித்தையை யாருக்கும் சொல்லிக் கொடுக்க வில்லை என்று நம்புகிறேன். இத்திறமை அவரோடு மறைந்து விட்டது.

இவ்வுலகம் மிக ஆச்சரியகரமானது. ஒரு சமயம் எனக்கு 22 – 25 வயதிருக்கும் போது, இந்த வித்தையை அவரிடமிருந்து கற்க வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் நான் செய்ய வேண்டிய வேறு காரியங்கள் பல இருந்தன. ஞானத்துக்கு இந்த பூமியில் ஒரு எல்லையே கிடையாது. அதுவும் இப்படிப்பட்ட பல இரகசிய வித்தைகள் பல உள்ளன.

ஒரு முறை ஜெனீவாவில் உள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிலையத்துக்கு (சி இ ஆர் என்) என்னை அழைத்திருந்தார்கள். அங்குள்ள விஞ்ஞானிகள் என்னிடம் கடவுளின் துகள் என்று காட்டி, அதை அவர்கள் எப்படிக் கண்டு பிடித்தார்கள் என்று விளக்கி சொன்னார்கள். பொருளைப் பற்றி 40 ஆண்டுகள் ஆராய்ச்சி நடத்திய விஞ்ஞானி ஒருவர் பொருள் என்று ஒன்றுமே இவ்வுலகில் கிடையாது என்று அறிந்ததாக என்னிடம் சொன்னார். அணுவை விட நுட்பமான எலெக்ட்ரான், ப்ரோட்டான், நியூட்ரான் மற்றும் அதை விட நுட்பமான பகுப் பொருட்களைப் பற்றிய ஆராய்ச்சிக்குப் பின் விஞ்ஞானிகள் பொருள் என்று ஒன்றுமே கிடையாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

இந்த முடிவு நம் முன்னோர்கள், தத்துவ ஞானிகள் சொன்னதை ஒத்திருக்கிறது. “எல்லாமே சூனியம். ஒவ்வொன்றும் சூனியம். சூனியமே எல்லாமாக இருக்கிறது.” என்று சொல்லியிருக்கிறார்கள். நீங்கள் காண்பது அத்தனையும் உண்மை அல்ல. நீங்கள் சூனியம் என்று நினைப்பது தான் எல்லாவற்றிற்கும் காரணமாகிறது. உலகில் எல்லாவற்றையும் தோன்ற செய்கிறது. 

தற்சமயம் விஞ்ஞானமும் ஆன்மீகமும் இந்த விஷயத்தில் ஒத்த கருத்தைக் கொண்டிருக்கின்றன. யார் தங்களை வித்தியாசமானவர்கள் என்று நினைக்கிறார்களோ அவர்கள் எல்லாம் மூடர்கள். அவர்கள் 100 வருடங்களுக்கு முன் இருந்த அறிவோடு வாழ்கிறார்கள். இன்றைய விஞ்ஞான அறிவுப்படி எல்லாமே ஒரே பொருளால் ஆனது. ஆனால் வேறு வேறாகத் தோற்றமளிக்கிறது.

அங்குள்ள விஞ்ஞானிகளுடன் நான் மூன்று வகையான ஆகாயங்களைப் பற்றிப் (காலி இடம்) பேசினேன்.

1.   சித்தாகாஷா – இடையிலுள்ள இடம் அல்லது உள்ளே இருக்கும் இடம். இதில் எல்லா விதமான எண்ணங்களும் உணர்ச்சிகளும் மிதக்கின்றன.

2.   சிதாகாஷா – தூய்மையான ஆத்மாவின் இடம். (சக்தி). அங்கும் இங்கும் இணைந்து திடப் பொருள் போல் காட்சியளிக்கிறது.

3.   பூதாகாஷா – அண்ட வெளி. இங்கு நாம் பல பொருள்களைக் காண்கிறோம். பொருள்களாகக் காட்சி அளிப்பவை வேறு வேறு பொருள்கள் அல்ல. அவைகள் ஒரே சக்தியால் ஆக்கப் பட்டவை. அந்த சக்தியை நாம் ப்ரம்மம் என்றழைக்கிறோம்.

நாம் அனைவருமே ப்ரம்மம். எல்லாமே ப்ரம்மம். இதைக் கேட்டு விஞ்ஞானிகள் ஆச்சரியமடைந்தார்கள். இந்த சமயம் நாம் வாழ்வது, இந்தத் தலைமுறையில் கடவுளின் துகள் கண்டுபிடிக்கப்பட்ட சமயத்தில் வாழ்வது அதிர்ஷ்டமானது. இந்தக் கண்டுபிடிப்பு ஒரு மடிக் கணினியின் கண்டுபிடிப்பை போல அதிசயமானது. சில தலைமுறைக்கு முன் “கூகுள்” என்று ஒன்றும் கிடையாது. எதைப் பற்றியாவது தெரிந்து கொள்ள, ஒரு நூலகத்துக்கு சென்று அட்டவணையைப் பார்த்து, நூலைத் தேர்ந்தெடுத்து பக்கங்களைப் புரட்ட வேண்டும். அட்டவணையை பார்ப்பதற்கே 2 மணி நேரம் ஆகும். ஆனால் இன்றோ ஒரு பொத்தானை அழுத்தி உடனுக்குடனே எந்த விஷயத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள வசதி உள்ளது.

இந்தத் தலைமுறையினர் அதிர்ஷ்டசாலிகள். எதை பற்றி அறிய வேண்டுமானாலும், ஒரு மடிக் கணினி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். ஒரு கண்டத்திலிருந்து மிகப் பெரிய கனமான பல புத்தகங்களை மற்றொரு கண்டத்துக்கு (நாட்டுக்கு) எடுத்துச் செல்லும் அவசியம் கிடையாது.

சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் உள்ள ஒருவர் “நாரத பக்தி சூத்திரம்” என்ற புத்தகத்தைப் படிக்க விரும்பினால், இந்தியாவிலிருந்து அதைத் தருவிக்க மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டியிருந்தது. இப்போது உடனுக்குடன் கணினி மூலம் படிக்க முடிகிறது. தற்போது விஞ்ஞானமும் ஆன்மீகமும் ஒத்த கருத்தைக் கொண்டிருப்பது நம் அதிர்ஷ்டம். இன்றைய விஞ்ஞானம் ஆன்மீகத்தை மதிப்பதால், இளைஞர்கள் ஆன்மிக வழியில் நாட்டம் கொண்டு ஞானமடைய விரும்புவார்கள்.

கே: குருதேவா! இந்தியாவில் ஊழலினால் ஏற்பட்ட கெட்ட விளைவுகள் நம் சமுதாயத்தையும், சுற்றுப் புறத்தையும் நீண்ட நாட்கள் பாதிக்கக் கூடும். இந்த நிலையை மாற்ற முடியுமா? ஆம் என்றால் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் இக்காரியத்துக்கு எப்படி உதவலாம்?

குருதேவர்: இந்தியாவுக்கு நன்மை செய்ய விரும்பினால்,மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்று அறிய விரும்பினால், உன் திறமையைப் பிரயோகித்து இந்த பூமியில் உள்ள மிகப் பெரிய குடியரசைக் காப்பாற்ற விரும்பினால், கண்டிப்பாக இங்கு வசிக்கும் வாழும் கலையைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும். இக் காரியத்தில் நீ என்ன செய்ய முடியும் என்று உனக்கு உணர்த்துவார்கள்.

நீங்கள் பல விதமான சேவைகள் செய்ய முடியும். உங்கள் கிராமம், நகர்ப்புறத்தில் வசிக்கும் மக்களுக்கு நாட்டில் நடக்கும் ஊழல்களைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். அரசு உண்மையில் மக்களின் ஏழ்மையைப் போக்கும் எண்ணத்தைக் கை விட்டு குறுகிய கால கண்ணோட்டத்தில் தங்கள் பதவியைக் காத்துக் கொள்வதிலேயே கண்ணாக இருக்கிறது.  

கடந்த சில மாதங்களில் வாழும் கலையின் தன்னார்வத் தொண்டர்களின் முயற்சியால், மக்களின் உதவியோடு நான்கு நதிகள் தூர்வாரப்பட்டு, கரைகள் ஒழுங்குபடுத்தப் பட்டுள்ளன.பல காலத்துக்குப் பின் இந்நதிகளில் நீர் ஓடும் படிச் செய்திருக்கிறார்கள். கிராம மக்கள் மிக மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். பல கோடி செலவு செய்து அரசு செய்யாத காரியத்தை ஊர் மக்களே குறைந்த செலவில் தங்கள் உழைப்பைத் தந்து நதிகளைச் சீர் செய்து விட்டார்கள். கர்நாடகத்தில் 230 கிராமங்களிலும், மகாராஷ்டிரத்தில் 300-400 கிராமங்களிலும் இப்படிப்பட்ட பணிகள் நடந்து வருகின்றன.

ரீடிஃப்.காம் என்ற இணைய தளத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இமய மலைப் பகுதியில் வாழும் கலையின் 6 யெஸ் ப்ளஸ் ஆசிரியைகள் ஆற்றிய தொண்டைப் பாராட்டியிருக்கிறார்கள். இப்பெண்கள் இடிபாடுகளை நீக்குவதிலும், சாலைகளைச் சீரமைப்பதிலும் உதவி செய்தார்கள். வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களை அளித்து உதவினார்கள். மக்களின் துயரைப் போக்க இப்படிப் பட்ட பல காரியங்கள் வாழும் கலைத் தன்னார்வத் தொண்டர்களால் நடத்தப் படுகின்றன.