நாராயணர் - மனித நரம்பு மண்டலத்தில் உள்ள ஒரு பேருணர்வு.

19 ஜூலை 2013 - மாண்ட்ரியல், கனடா


கே: எங்களுக்கு நாராயணர் பற்றி சொல்ல முடியுமா? யார் மற்றும் எது நாராயணர்?

குருதேவ்: நாராயணர் என்பது ஒரு மனிதரல்ல. நாராயணர் என்பது மனித நரம்பு மண்டலத்தில் உள்ள ஒரு பேருணர்வு. நாராயணர் என்பவர் ஒளியால் ஆனவர், ஒளியால் ஆன ஒரு உடம்பு. நீங்கள் வெறுமையாகவும், காலியாகும் போது, உங்களுக்குள் இந்த ஒளி உடம்பை நிறுவுகிறீர்கள், அதுவே நாராயணர். அதனால் தான் இந்தியாவில் சாதுக்களை பார்க்கும் போது ‘நமோ நாராயணா’ என்று சொல்கிறார்கள். அப்படியென்றால் உங்களுக்குள் இருக்கும் நாராயணரை வணங்குகிறேன் என்று பொருள். நாராயணர் எங்கு இருக்கிறார்?

நாராயணர் அரசனுக்குள் இருக்கிறார், ஏனென்றால் அரசன் என்பவன் ஒட்டு மொத்த பேருணர்வு. தன்னைப் பற்றி யோசிக்காமல் தன் நாட்டைப் பற்றி, தன்னுடைய அனைத்து மக்களைப் பற்றியும் யோசித்து அவர்களை காக்க வேண்டும். ஒரு அரசன் தன் மக்களிடம் கொண்டுள்ள அன்பு மற்றும் பரிவின் காரணமாக நாரயணரின் அளவிற்கு உயர்த்தப்படுகிறான், அதாவது தூய ஒளி.

பிறகு வைத்திய நாராயணர். ஒரு மருத்துவர் நாராயணர் ஆவார்.ஒரு மருத்துவர் தன் நோயாளிக்கு சிகிச்சை தரும் போது, தான் எவ்வளவு சம்பாதிக்கப் போகிறோம் என்றெல்லாம் யோசிப்பதில்லை. அவரை எப்படி குணப்படுத்துவது என்பதிலேயே அவர் கவனமெல்லாம் இருக்கும். நாராயணர் ஒவ்வொரு மருத்துவருள்ளும் இருக்கிறார் நாராயணர். வேறு யார் நாராயணர்? (கூட்டத்தினர் கூறுகிறார்கள்: கணவன்)

ஆம், அவர் தன் குடும்பத்திற்காக முழு பொறுபேற்றிருந்தால், தன் மனைவிக்க்காகவே வாழ்ந்தால். மனைவி தன் கணவனை நாராயணாராக கருத வேண்டும்! தன்னைத் தானே அவர் நாராயணாராக கருதக் கூடாது. (சிரிப்பு)  தனக்காக எதுவும் வேண்டாமல் தன் குடும்பத்தை காப்பவன் கணவன். எல்லோருக்கும் வேண்டியதைத் தேடுபவன். எனவே அவரும் நாராயணர்.

ஒரு சாது நாராயணர், ஏனென்றால் அவர் எல்லோருடைய நலத்தையும் விரும்புபவர். ஒரு மருத்துவர் நாராயணர். ஒரு தன்னலமற்ற அரசன் ஒரு நாராயணர். குரு ஒரு நாராயணர். ஒரு ஆசிரியர் ஒரு நாராயணர். வரும் விருந்தினர் ஒரு நாராயணர், ஏனென்றால் நாராயணர் பல வடிவங்களில் வருகிறார். தன்னலமில்லாமல் உங்களுக்குத் தேவையான நேரத்தில் உதவுபவர் ஆபத் நாராயணர் என்று அழைக்கப்படுகிறார். ஒரு பிரச்சினை நேரும் போது வருபவர் ஆபத் நாராயணர். தரித்திர நாராயணர் என்று ஒரு பெயர் உள்ளது. எதுவுமே இல்லாதவர், ஏழ்மையில் இருப்பவர், செல்வமில்லாத (இலக்ஷ்மி இல்லாத) நாராயணர்.

எனவே, நீங்கள் தானம் செய்யும் போது, ஏழ்மையில் இருக்கும் தானம் பெறுபவரை நாராயணராகப் பார்த்து தானம் செய்யுங்கள். அவரைப் ஒரு புழுவைப் போல பார்த்து தானம் செய்யாதீர்கள். எனவே தானத்தை புனிதத் தன்மையோடு செய்யுங்கள். மிக ஏழ்மையில் இருப்பவர், அதிர்ஷ்டம் கெட்டவர் கூட நாராயணர் தான். எனவே, நாராயணரை ஒரு பாவப் பட்டவரிடத்தில் பார்க்கலாம், ஒரு மருத்துவரிடம் பார்க்கலாம், குடும்பத் தலைவரிடம் பார்க்கலாம், ஒரு அரசனிடம் பார்க்கலாம். அவர்கள் எல்லாம் நாராயணர்களே. எங்கும் நாராயணர்.

நாராயண உபநிஷத்தில் இது மிக அழகாகக் கூறப்பட்டுள்ளது, ‘நாராயணர் முன்னால் இருக்கிறார், பின்னால் இருக்கிறார், பக்கங்களில் இருக்கிறார், மேலே இருக்கிறார் மற்றும் கீழே இருக்கிறார். நாராயணர் எங்கும் இருக்கிறார்!’

நாராயண பரோஜ்யோதிஹ் ஆத்மநாரயண பரஹ் நாராயணரே பிரம்மன் (இறை). நாராயணரே ஆத்மா, உங்களுக்குள் இருக்கும் சுயம். நாராயணரே ஒளி. முழு பிரபஞ்சமும் பாற்கடலில் இருக்கிறது, அந்தப் பெருங்கடலே நாராயணர்.

கே: குருதேவ், நான் என் பெற்றோரிடம் என்னுடைய பாலினச் சேர்கை பற்றி நேர்மையாக இருக்க விரும்புகிறேன். ஆனாலும், அவர்களுடைய அன்பையும் துணையையும் இழந்து விடுவேனோ என்ற பயத்தில் என்னால் நேர்மையாய் இருக்க முடியவில்லை. நீங்கள் பற்று, பற்றின்மை மற்றும் பரிவு பற்றி பேசினீர்கள். நான் என் பெற்றோர்களிடம் பரிவு கொண்டு அவர்களை சுமைக்கு ஆளாக்காமல் இருக்க வேண்டுமா? இது என்னை பயமுறுத்துகிறது. இதற்குத் தீர்வு காண எனக்கு வழி காட்டுங்கள்.

குருதேவ்: உங்களை நீங்களே ஓரினச் சேர்க்கையாளர் என்று முத்திரை குத்திக்கொள்ள வேண்டாம். இந்த முனைப்புகள் வந்து போகும் இயல்புடையவை. உங்களை நீங்கள் இறைவனின் ஒளியாக முத்திரை குத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் எந்த பாலினச் சேர்கையாளர் என்பதை விட மேலானது, ஏனென்றால் இது மாறும் இயல்புடையது. பலர் திருமணமான பின் தமக்கு வேறு வகை முனைப்புகள் இருப்பதை கண்டுபிடிக்கிறார்கள். ஓரினச் சேர்க்கையாளர் கூட, சில காலத்திற்குப் பிறகு தமது தேர்வை மாற்றிக் கொள்கிறார். இப்படி பல ஓரினச் சேர்கையாளர்கள் மனம் மாறி திருமணம் செய்து கொண்டு சாதாரண குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு குழந்தை பெற்றுக் கொள்வதை பார்த்திருக்கிறேன். இதற்கு மாறாகவும் பார்த்திருக்கிறேன். எனவே எல்லா வாய்ப்புகளும் உண்டு. உடனடியாக நீங்கள் யார் என்று முத்திரை குத்திக் கொள்ள வேண்டிய தேவை என்ன? இருபாலினச் சேர்கையாளர்களும் உண்டு.

உங்கள் பெற்றோர்களிடம் சொல்வதால் என்ன சாதிக்கப் போகிறீர்கள்? இதனால் மகிழ்ச்சியடையப் போவதில்லை என்றால், எதற்காக அவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்? யோசனை செய்து பாருங்கள். நேர்மை ஒரு விஷயம். முதலில் உங்களிடமே நீங்கள் நேர்மையாக இருக்க வேண்டும். இப்போது உங்கள் நிலை என்ன? உங்களிடம் நீங்கள் நேர்மையாக இருங்கள். உங்கள் இயல்புக்கு மாறாக உங்களை வெளிக் காட்டிகொண்டு நடிக்க வேண்டாம், அதே சமயம் மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயங்களை வெளிபடுத்தி அதிர்ச்சி குண்டுகளை வீச வேண்டாம். அவர்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக சொல்லுங்கள். அவர்களைத் தயார்ப்படுத்துங்கள்.

நிலைமையை நீங்கள் நன்கு அறிய வேண்டும். உங்கள் பெற்றோர் எவ்வளவு மென்மையானவர்கள்? ஏற்கனவே எவ்வளவு தூரம் மகிழ்சியற்று இருக்கிறார்கள், நீங்கள் இதைச் சொன்னால் இன்னும் எவ்வளவு தூரம் மகிழ்ச்சியற்றுப் போவார்கள்? இப்படி அவர்களைத் துயரத்தில் ஆழ்த்தி நீங்கள் நேர்மையாய் இருப்பதில் ஏதேனும் பயன் இருக்கிறதா? இதில் உள்ள எல்லா சாதக பாதகங்களை நீங்கள் எடை போட்டுப் பார்க்க வேண்டும்.

உங்கள் பெற்றோர் உங்களைத் திருமணம் செய்துகொள்ள கட்டாயப் படுத்தினால், அப்போது நீங்கள் சொல்லலாம், ‘இல்லை, எனக்கு இதில் ஆர்வம் இல்லை, எனக்கு வேறுவிதமான ஆர்வங்கள் உண்டு.’ இல்லையென்றால் நீங்கள் ஏன் சொல்ல வேண்டும்? அத்தகைய நேரங்களில் நீங்கள் நேர்மையாய் இருந்தாக வேண்டும். இல்லையென்றால் வேறு ஒருவரின் (நீங்கள் மணமுடிக்க இருப்பவரின்) வாழ்கையை நீங்கள் பாழாக்கிவிடுவீர்கள். உங்கள் தாய் ஏற்கனவே மிகுந்த வயதாகி வேறு சுமைகளில் இருக்கும் போது, நீங்கள் நேர்மையாய் இருந்து பெருமைபட்டு கொள்வதற்காக இந்த விஷயத்தை சொன்னால், அவர் சுமை இன்னும் கூடி, தூக்கம் கெட்டு உடல் நலம் தான் மேலும் கெடும். என்ன பயன்? எதற்கு இது?

நம் நாட்டின் பண்டைய முறைகளில் இது அழகாகக் கூறப்பட்டுள்ளது, ‘சத்யம் ப்ருயத் ப்ரியம் ப்ருயத் ந ப்ருயத் சத்யம் அப்ரியம், அதாவது உண்மையைப் பேசு, ஆனால் மகிழ்ச்சியான உண்மையைப் பேசு. மகிழ்ச்சியற்ற உண்மையைப் பேசாதே, மகிழ்ச்சியான பொய்யைப் பேசாதே.
சில விஷயங்கள் இன்பமாய் இருக்கலாம், ஆனால் அது பொய்யென்றால் அதைப் பேசாதே. இன்பமற்ற உண்மையையும் இன்பமான பொய்யையும் பேசாதே. இதுதான் நம் நாட்டின் பண்டைய வழி முறை. கச்சிதமான சமன்பாடு. அவர்களிடம் சொல்ல வேண்டும் என்றால், அதனால் ஏதேனும் பயனுள்ளது என்றால், உங்களின் எடைபோட்டுப் பார்க்கும் திறனை உபயோகித்து அவர்களை மென்மையாய்த் தயார் செய்யுங்கள்.

உங்கள் உடம்பு உணர்வைத் தாண்டி மேலே எழுதல் வேண்டும். நீங்கள் ஒளி என்று தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் சுடர்விட்டு மின்னும் ஒரு ஒளி. உங்கள் உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லும் பேருணர்வால், ஒளியால், அன்பால் மற்றும் உயிரால் விழிப்புணர்ச்சி பெற்றது.

கே: ஞானம் பெறுவதில் ஏன் பக்திக்கு அவசியமான பங்கு? பற்றின்மைக்கும் பக்திக்கும் ஏதேனும் முரண்பாடு உள்ளதா?

குருதேவ்: வாழ்கையின் சாரம் பக்தி. உலகில் யாரையேனும் ஏன் அன்பு செய்கிறீர்கள்? அன்பில்லாத வாழ்கையை கற்பனை செய்து பாருங்கள். ஒரு இயந்திர மனிதனாக இருப்பது போல இருக்கும். பக்தி வாழ்க்கைக்கு வாசம் சேர்த்து அதைச் செம்மையாக்கும்.

கே: சமீபத்தில் நீங்கள் குவான்டம் இயற்பியல் முடியும் இடத்தில் வேதாந்தம் (சுயத்தை அறிதலைப் பற்றிய பாரம்பரிய தத்துவம்) தொடங்குவதாக கூறியுள்ளீர்கள். இதைப் பற்றி மேலும் விரிவாகப் பேச முடியுமா? எதிர்காலத்தில் பேருணர்வை அறிவியல் உள்வாங்கிவிடுமா?

குருதேவ்: ஆம். பேருணர்வை புரிந்துகொள்ள விரும்பினால் நாம் பொருளிலிருந்து தொடங்க வேண்டும். முதலில் பூதங்களை அறிந்து கொள்ளுங்கள். இந்தப் பிரபஞ்சம் ஐந்து பூதங்களால் ஆனது: நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் வெளி. இங்கிருந்து நீங்கள் பேருணர்வை புரிந்து கொள்ள முடியும். முழு பயணமும் பொருளிலிருந்து ஆத்மாவிற்கு. உண்மையில், இது அறிவியல் அது ஆன்மிகம் என்று சொல்வது தவறு. இரண்டும் ஒன்றே தான்.

கே: இறந்த பின் மனதை எப்படி ஒழிப்பது?

குருதேவ்: அதை ஒழிப்பதற்கு வழியே இல்லை. மனதை எப்படி ஒழிப்பது என்று தெரிந்து கொள்ள விரும்பினால், அது உடம்பு இருக்கும்போது மட்டுமே நடக்கும். அதற்குப் பிறகு உங்களால் மனதை ஒழிக்க முடியாது.

கே: பலர் உங்களிடம் தனிமையில் கேள்விகளைக் கேட்கிறார்கள். மற்றவர்கள் நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்கிறார்கள். நான் எப்போதும் உங்களிடம் நேரில் பேச வேண்டுமா, அல்லது கண்களை மூடி உண்மையாக பிரார்த்தனை செய்தால், நான் சொல்வது உங்களுக்குக் கேட்டு நீங்கள் பதில் தருவீர்களா?

குருதேவ்: உங்கள் வேலை முடிகிறதா? அதுவே சொல்லும். உங்களுக்கு எழுத வேண்டும் போல கட்டாயம் தோன்றினால் எழுதுங்கள். வெளிபடுத்துவதற்கான புலம் எண்ணற்றது.

கே: கடைசியாக எப்போது நீங்கள் துயரத்தை அனுபவித்தீர்கள், அதை விட்டு விடுவதில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் என்ன?


குருதேவ்: எப்போதேல்லாம் யாராவது துயரத்தில் இருப்பதை பார்க்கிறேனோ, அதை நான் உணர்கிறேன். அவர்களுக்காக வருந்துகிறேன். அவர்கள் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கலாம். காரணம் ஏதுமில்லாமல் அவர்கள் துயரப்படுகிறார்கள். சமீபத்தில் இமலயமலைப் பகுதிகளில் ஏற்பட்ட சுனாமி மிகக் கொடுமையான ஒன்று. நம்முடைய வாழும்கலை தொண்டர்கள் அங்கு இருந்து இரவு பகலாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். உணவு, உடை, இருப்பிடம் மற்றும் மருத்துவ உதவிகள் செய்து வருகிறார்கள். ராணுவமும் காவல் துறையும் நம் வாழும்கலைத் தொண்டர்களைப் பாராட்டியுள்ளார்கள். எங்கள் இராணுவ வீரர்கள் சோர்ந்து விடுகிறார்கள், ஆனால் உங்கள் இளைஞர்களும் யுவதிகளும் காலி முதல் இரவு வரை வேலை செய்துகொண்டே இருக்கிறார்கள். மற்றும் எல்லா வேலைகளையும் ஒரு புன்னகையுடனேயே செய்து வருகிறார்கள். இராணுவத்தினரும் காவல்துறையும் மிக ஆச்சரியப்பட்டுப் போனார்கள்! எப்படி அவ்வளவு வேலைகளைப் புன்னகையுடன் செய்ய முடிகிறது என்று கேட்டார்கள். எனவே நம் தொண்டர்கள் அவர்களுக்கு தியானம் கற்றுத் தந்தார்கள்.