ஒரே மார்க்கம் நானே

ஆகஸ்ட் 08, 2013 பெங்களூர், இந்தியா


கே: குருதேவ் பைபிளில் கிறிஸ்து"நான் தான் ஒரே மார்க்கம்" என்று சொல்கின்றார்.  குரானும் அது ஒன்றே வழி என்று சொல்கின்றது.கீதையும் 'மாம் ஏகம் சரணம் விரஜ ' என்று சொல்கின்றது.  மதவாத முரண்பாடுகள் அனைத்திற்கும் இதுதான் காரணமா? இதை நாம் எப்படி மாற்றுவது?

குருதேவ்: இந்த ஞானம் அது வழங்கப்பட்ட காலகட்டத்திலிருந்த மக்கள் தங்கள் மனதை நிகழ்காலத்தில் ஒருமுகப்படுத்த உதவுவதற்கென வழங்கப்பட்டது. நீங்கள் என் வார்த்தைகளைக் கவனிப்பவராக இருந்தால் நான் இது உண்மை. இப்பொழுது  இக்கணத்தில் இருங்கள் போதும்" என்று சொல்வேன்.மனமானது ஒன்று கடந்த காலத்தையே போற்றி கொண்டிருக்கும் அல்லது எதிர்காலத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் இக்கணம் என்கின்ற நிகழ்காலத்தை நிராகரிக்கும் போக்கினைக் கொண்டது.

கிருஷ்ண பகவான்,'மாம் ஏகம் சரணம் விரஜ' அதாவது'என்னிடம் மட்டுமே சரணடையுங்கள்' என்று சொல்லியிருக்கின்றார். இதனை அவர் தனது மிகவும் பிரியமான சிஷ்யன் அர்ஜுனனிடம் அவன் மனது முழுமையாக நிகழ் காலத்தில் இருக்கவும் அதன் மதிப்பினை உணரச் செய்வதற்காகவும் சொன்னார். "நான் தான் ஒரே மார்க்கம்" என்று  சொல்லப்பட்ட போதெல்லாம் அது மிக உயர்ந்த ஒரு உணர்வு நிலையிலிருந்து சொல்லப்பட்டது. ஒருவரை தீவிரமான மத வெறியராக   மாற்றுவதற்காக அல்ல. ஒருவரை சத்தியத்தினை உணர வைப்பதற்காகவே அவ்வாறு சொல்லப்பட்டது. சத்தியத்தினை வலியுறுத்துவதற்காகவே "இது ஒன்றே வழி" என்று  சொல்லப்பட்டது.

இல்லையென்றால் மனம் நிகழ்காலத்தை நிராகரித்துவிடும். கிறிஸ்துவின் காலத்திலும் இவ்வாறே நிகழ்ந்தது. அவரது காலத்தில் மக்கள்  எதிர்காலத்திலோ அல்லது இறந்த காலத்திலோ யாரோ ஒருவரைப் பற்றி  மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தனர். அதனால் தான் அவர் "இங்கே, இக்கணம் நான் தான் ஒரே மார்க்கம்"  என்று சொன்னார். இதனை அவர் "நான்" என்னும் உணர்வு நிலையிலிருந்து சொல்லியிருக்கின்றார்.  

இயேசு கிறிஸ்து தன உடலை விட்டுப் பிரிந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகே பைபிள் எழுதப்பட்டுள்ளது. அவரது வார்த்தைகள் எந்த அளவிற்கு சரியாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அவரது வார்த்தைகள் எந்த  அளவிற்கு சரியாக மொழி பெயர்க்கப்பட்டிருக்கும் என்பது ஒரு பெரும் கேள்விக் குறி.

ஏசுநாதர்  "நான் கடவுளின் மைந்தன்" என்று சொன்னதை தேவாலயம் "ஜீசஸ்  கடவுளின் ஒரே மைந்தன்" என்று பொருள் விளக்கம் கூறியுள்ளது. ஏசுநாதர் சொன்னது என்னவென்றால்  தேவன் ஒருவனே என்றும் அவர் அந்த ஒரே தேவனின் மைந்தன் என்றும் தான். அனைவருக்கும் தந்தை ஒருவனே."அந்த ஒரே தந்தையின் மைந்தன் நான்" என்று தான் அவர் சொன்னார். இல்லையென்றால்  "பரலோகத்திலிருக்கும் நம் பிதாவை வணங்குவோம்" என்று அவர் ஏன் சொல்ல வேண்டும்? அனைவருக்கும் தந்தை என்பதையே அவர் "நம் பிதா' என்று குறிப்பிட்டுள்ளார். பிறகு அவர் எப்படி இறைவனின் ஒரே மைந்தனாக இருக்க முடியும்? மற்றவர்களின் நிலை என்ன? அவருக்கு முன் பிறந்தவர்களெல்லாம் இறைவனின் மைந்தர்கள் இல்லையா? அப்படியென்றால் "பரலோகத்திலிருக்கும் எங்கள் பிதாவே" என்று எப்படி சொல்ல முடியும்? "ஏசுநாதரின் தந்தையே எனக்கு உதவி புரியுங்கள்" என்றல்லவா பிரார்த்தனை செய்ய வேண்டும்?
 
தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதன் விளைவே இது. "ஒரே பிதாவின் மைந்தன்"    என்று அவர் சொன்னார். ஆனால் அது "பிதாவின் ஒரே மைந்தன்" என்று  திரிந்து பொருள் கொள்ளப்பட்டது. ஒரே ஒரு வார்த்தை  இடம் மாறினாலும் பொருளில் பெரும் மாற்றம் ஏற்பட்டுவிடும். இக்காரணத்தினால் தான் எப்போதுமே  வேதங்களுக்கு விளக்கம் கூறும் போது அது எப்பொழுது, எங்கே எவ்வாறு சொல்லப்பட்டது என்பதும், யாருக்கு என்ன காரணத்திற்காக சொல்லப்பட்டது   என்பதும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். உண்மை உலகளாவியது, கால வரையறை  அற்றது  என்றாலும் ஞானம் சூழ்நிலை சார்ந்தது. ஞானத்திற்கான  சூழல் எப்போதுமே இருக்கும்.

ஏசுநாதர் ஒருமுறை "நான் தந்தைக்கெதிராக மகனையும் தாய்க்கு எதிராக  மகளையும் நிறுத்தவே வந்திருக்கின்றேன். தீயை உண்டாக்கவே நான் வந்துள்ளேன். அமைதியை ஏற்படுத்த அல்ல" என்று சொல்லி இருக்கின்றார். சொல்லப்பட்ட சூழ்நிலையை கருத்தில் கொள்ளாமல் இதனை அப்படியே எடுத்துக்கொண்டால்  ஜீசஸ் சொன்னது தவறாகும். எனவே நீங்கள் அவர் எங்கே, எதனால், எப்படி,அதை  சொன்னார் என்பதையும் பார்க்க வேண்டும். ஜீசஸ் ஒரு புரட்சியைக் கொண்டு  வருவதற்காக வந்தார். கிருஷ்ண பகவானும் ஒரு பெரும் புரட்சியைக் கொண்டு வந்து மக்களின் மனநிலையை மாற்றுவதற்காக வந்தார். முஹம்மது பைகம்பார் என்பவரும் இதையே தான் செய்தார்.

மக்கள் மதச் சடங்குகளிலே தங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டு  இருந்ததனால் அவர்கள் எப்போதுமே தங்களுக்குள்ளே ஆழ்ந்து சென்று பிரார்த்தனை செய்யவில்லை. ஆகவே அவர் "இவையெல்லாம் போதும், வாருங்கள்.நீங்கள் எல்லா நேரமும் ஒரு சிலையிலிருந்து மற்றொன்றிற்கு மாறி கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் உங்கள் கண்களை மூடி உங்களுக்குள்ளே ஆழ்ந்து சென்று தியானம் செய்வதில்லை. போதும். இப்போதாவது கண்களை மூடி தியானம் செய்யுங்கள்" என்று சொன்னார். மதச் சடங்குகள் வியாபாரமாகி விட்டது. மக்கள் பயத்தினால் சிலை வழிபாடு செய்யத் துவங்கி விட்டனர். ஆகவே அவர் "உங்களுக்குள்ளே ஆழ்ந்து சென்று பிரார்த்தனை செய்யுங்கள்" என்று சொன்னார்.

'நிர்குன்நிராகர்பரபிரம்மா" உருவமற்ற வெளிப்படையாகத் தெரியாத தெய்வத்தை பிரார்த்தனை  செய்ய வேண்டும் என்பதே வேதாந்தத்தின் சாரம். உருவ  வழிபாட்டிலிருந்து அருவ வழிபாட்டிற்கு செல்ல வேண்டுமென்று அது சொல்கின்றது. அது எவ்வாறு இயலுமென்றால் தியானத்தின் மூலம் மட்டுமே முடியும்.

இதற்கு மூன்று உபாயங்கள் உள்ளன. முதலாவது பிரார்த்தனை மற்றும் வழிபாடு  மூலமான அன்வ உபாயம். இரண்டாவது தியானத்தின் வழியான ஷக்த உபாயம்.  மூன்றாவது விழிப்புணர்வும் இயல்பான இறையுணர்வுமாகிய சாம்பவ உபாயம்.  

வழிபாட்டிற்கு உருவங்கள் தேவையில்லை என்று முஹம்மது சொன்னாலும் மக்களுக்கு ஏதோ சில சின்னங்கள் தேவைப்படுகின்றன என்பதை அறிந்திருந்தார்.  அதனால்தான் அவர் லிங்கத்தைப் போல ஒரு காபா கல்லினை அமைத்தார்.  ஒருவர் அக்கல்லினை வலம் வந்து நமாஸ் செய்யலாம். மனம் ஒருமுகப்படுவதற்கு ஒரு சின்னம் மிகவும் அவசியம்.

வேத காலங்களில் சிலைகள் இல்லை. ஆர்ய சமாஜத்தில் மக்கள் யாகங்கள் (தீ வேள்வி) செய்வதிலும் மந்திர உச்சாடனங்களிலும் ஈடுபட்டிருந்தனர். அனைவராலும் இந்தத் தத்துவத்தைப் புரிந்து  கொள்ள முடியாது. ஆனால்  யார் வேண்டுமானாலும் ஒரு வடிவம் அல்லது சிலையுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ள முடியும்.

ஒரு பெருந்தலைவரின் பிறந்த நாளன்று மக்கள் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கின்றனர். உதாரணத்திற்கு, காந்தி ஜெயந்தியன்று மக்கள் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கின்றனர். இக்காலத்தில் ஒருவரது உருவப்படம் இல்லாமல் அவருக்கு மரியாதை செலுத்துவது என்பது இயலாத  காரியம்.  அதே  போல் தான் எல்லா மதங்களிலும் ஒரு சின்னம் என்பது மிக அவசியமானதாகவும் தவிர்க்க முடியாததாகவும்  ஆகிவிட்டது. இதனை நன்கறிந்ததனால் ரிஷிகள் "சரி பரவாயில்லை; நீங்கள் ஆரம்பத்தில் சிலைகள், வடிவங்கள் அல்லது சின்னங்கள்  போன்றவை கொண்டு துவங்கி வழிபாடு செய்யுங்கள். ஆனால் சிறிது காலத்திற்கு மட்டுமே. பிறகு அவற்றை நீரில் அமிழ்த்தி விடுங்கள்" என்று சொன்னார்கள்.    இவ்வாறாகவே கணபதி பூஜை என்று பத்து நாட்களுக்கு கணபதி சிலைக்கு வழிபாடுகள் செய்து பிறகு சிலையை தண்ணீரில் கரைத்து விடும் வழக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாகவே எல்லா இடங்களிலும் கோவில்கள் கட்டப்பட்டன.  தினமும் கோவில்களுக்கு செல்ல வேண்டியது அவசியமில்லை. வழிபாட்டிற்கு சின்னம் அவசியம் என்று உணர்கின்ற போது  மட்டும் கோவிலுக்குச் சென்று அங்கே அமர்ந்து பிரார்த்தனை செய்யலாம்.
 
கோவில்கள் வெறும் தெய்வச் சிலைகள் இருக்கும் இடங்கள் அல்ல. அவை மந்திரங்களின் சக்தி நிறைந்தவை.கோவில்களில் பிரானா எனப்படும் உயிர்ச் சக்தி தூண்டப்படுகின்றது. இவ்வாறாக கோவில்கள் சக்தி மையங்களாகத் திகழ்கின்றன. பண்டைக் காலத்தில் மக்கள் மிகவும் புத்தி கூர்மையுள்ளவர்களாக இருந்தனர்.  மனித இயல்பினை மிக நன்றாக அறிந்திருந்தனர். அதற்கேற்ப வழிபாடு முறைகளை அமைத்துள்ளனர்.

கே: குருதேவ்! ஞானம் அடைவதன் அறிகுறிகள் யாவை? ஞானம் அடைந்த ஒவ்வொருவரும் குரு ஆக முடியுமா? ரிஷிகள், சாதுக்கள், ஸ்வாமிகள் இவர்கள் மட்டுமே ஞானம் அடைந்தவர்களா?

குருதேவ்: இக்கேள்விக்கு நீங்களே விடை காணுங்கள். ஞானம் என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள் ? முதல் படி,  நான் அதிர்ஷ்ட சாலி என்று எண்ணுவது. தான் அதிர்ஷ்டசாலி என்று எண்ணுவதை நிறுத்தி விட்டால் நீங்கள் ஞானம் அடைகிறீர்கள். சில நாட்களுக்கு முன்னர் நான் கூறிய கதையைக் கேட்டீர்களா? ஒரு மாணவன் வந்து "குருவே நான் தேர்வில் தோல்வி அடைந்து விட்டேன்" என்றான்.

அதற்கு அவர், “ நீ மிகுந்த அதிர்ஷடசாலி” என்றார். மற்றொருவர்," குருவே, நான் என் வேலையை இழந்து விட்டேன்" என்றார். அதற்கும் அவர் “நீ மிகுந்த அதிர்ஷடசாலி என்று கூறினார். மற்றொருவர்," என் மனைவி என்னைவிட்டுப் பிரிந்து சென்று விட்டாள்'' என்றார். அதற்கும் குரு  “! நீ மிகுந்த அதிர்ஷடசாலி” என்றே கூறினார். இவ்வாறு ஒவ்வொருவராக வந்து தங்கள் பிரச்சினைகள கூறும்போது குரு நீ மிகுந்த அதிர்ஷ்டசாலி என்றே கூறி வந்தார். ஆனால் விந்தையான ஏதோ ஒன்று அவர்களுக்கு நிகழ்ந்து மிக மகிழ்ச்சியாகத் திரும்பிச் சென்றனர். இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒருவர்  குருவிடம் ‘தோல்வி அடைந்த மாணவன் அதிர்ஷ்டசாலி என்று எப்படிக் கூறுகிறீர்கள்' என்று கேட்டார். குரு," ஆம் ஒரு தடவை தோல்வி அடைந்தவன் அதையே திரும்பத் திரும்பப் படித்து,அதில் மிகுந்த தேர்ச்சி பெற்றவன் ஆகிறான்" என்றார்.

ஒரு சமயம், பெங்களூரு ஆஸ்ரமத்தில் ஒரு முதுநிலை சீடர் என்னிடம் ஒரு நிகழ்ச்சியைப் பற்றிக் கூறினார்.அதாவது 1942ஆம் ஆண்டு பெங்களூரில் ஒரே ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் தான் இருந்தார், அவர் MBBS தேர்வில் ஏழு தடவை தோல்வி அடைந்தவர். அக் காலத்தில் குடல்வால் அழற்சி அறுவை சிகிச்சையின் போது தவறான நரம்பைத் துண்டித்து அதனால் நோயாளி இறந்து விடுவார்.ஏழு தடவை தோல்வி அடைந்த இந்த டாக்டர் அதைக் கண்டு பிடித்ததால், அவர் மிகவும் மதிக்கப் பட்டார். பிற் காலத்தில் சர்வ தேச விருதும் பெற்றார். ஆனால் அவர் ஏழு தடவை MBBS ல் தோல்வி அடைந்தவர்!

ஆகவே யாரவது தேர்வில் தோல்வி அடைந்தால், அவர்கள் மறுமுறை நன்றாகப் படிப்பார்கள்.ஒரு தடவை படித்துத் தேர்வு எழுதும்போது ஏதோ ஒரு குருட்டு அதிர்ஷ்டத்தில் வெற்றி அடைந்து விட்டுப் பின்னர் படித்தவற்றை மறந்து விடுகிறீர்கள்.ஆனால், தோல்வி அடைந்தால் அதில் மிகத் தேர்ச்சி அடைகிறீர்கள். கணக்கில் தோற்றுவிட்டால் முயன்று நன்றாக மனனம் செய்து மிக நன்றாகப் படிக்கிறீர்கள்.ஆகவே  ஒருவர்  தேர்வில் ஒரு முறை தோற்றுவிட்டால், மிக நல்ல டாக்டராகவோ, அல்லது பொறியியல் வல்லுனராகவோ ஆகிறார்கள் அதாவது, அதே பாடங்களை அதிக முயற்சியுடன் படித்துத் தேர்வு அடைகிறார்கள். அதனால்தான்,  குரு தோல்வியடைந்தவன் அதிர்ஷ்டசாலி என்று  கூறியது சரியே.அவன் மேலும் முயன்று படிக்கிறான்..

அது போல, மனைவி தன்னை விட்டுப் பிரிந்ததாகக் கூறியவருக்கு நீ அதிர்ஷ்டசாலி என்றதும் சரியே. அவர் இதுவரை தன மனைவியின் தேவைகள் என்ன என்பதைப் பற்றிய கூருணர்வு இன்றியே வாழ்ந் திருக்கின்றார். ஒருவர் உங்களை விட்டுப் பிரியும் போது தான் அவரது அருமை தெரியும்.உங்களது தவறுகளை உணருவீர்கள். இதை விட மேன்மையாக செயல்பட்டிருக்கலாமே என்று அறிவீர்கள். எனவே ஒரு பெண்ணின் பிரச்சினைகளை கூருணருவதற்கான வாய்ப்புப் பெற்ற அவர் அதிர்ஷ்டசாலியே. மனைவியின் மன, உணர்வு பிற தேவைகளை அறிந்து செயல்பட்டிருந்தால் அவள் ஏன் பிரிந்து செல்கிறாள்? ஒரு பெண்ணின் தேவைகளை உணர்ந்து கொள்ள வைக்க வேண்டும் என்றே அவள் பிரிந்து சென்றிருக்கிறாள்.

அது போல,வேலையை இழந்து விட்டேன் என்று கூறியவருக்கும் குரு நீ அதிர்ஷ்டசாலி என்று பதிலளித்தார். ஏனெனில் அவர் இப்போது தன்னைப் பற்றி, தனக்கு என்ன வேண்டும் என்பதைப் பற்றி சிந்திப்பதற்கு நேரம் கிடைத்துள்ளது. சாதாரணமாக வேலையிலுள்ளவர்கள், தங்களைப் பற்றி சிந்திப்பதில்லை. தங்களுக்கு நேரம் இல்லை என்று குறைப்படுவதுண்டு. ஆனால் வேலையிழந்த இவருக்கு இப்போது நேரம் கிடைத்துள்ளது.

ஒருவர்,அப்போது வந்து," குருவே! நான் மிகுந்த அதிர்ஷ்டசாலி.என் வாழ்வில் நீங்கள் இருக்கின்றீர்கள். நான் மிகுந்த நன்றியுள்ளவனாக இருக்கின்றேன்." என்றார். குரு கோபம் அடைந்து, அவரை அடித்து விட்டார். நன்றி மிகுதியால் கண்களில் கண்ணீருடன் அந்த கனவான் நடனமாடத் துவங்கினார்.குரு தன்னிடம் சந்தேகம் கேட்டவரிடம் கூறினார், "நீங்கள்" நான்”அதிர்ஷ்டசாலி என்று கூறும் போது உங்கள் மனம் "நான்" என்பதையே சூழ்ந்து கொண்டுள்ளது. "நான்" அதிர்ஷ்டசாலி, "நான்" நன்றியுள்ளவனாக இருக்கிறேன்." நான் என்பதே முக்கியத்துவம் அடைகிறது. இந்த "நான்" என்பது கரையும்  போது, ஒவ்வொருவருடனும் கலந்து ஒரு குழந்தை போன்று ஆகிறீர்கள். வாழாமல் வெறுமே இருந்து கொண்டிருப்பது அறியாமை.. இருப்பது போலவே இல்லாமல் வாழ்வது ஞானம் அடைதல். எளிமையானது இயல்பானது.!

கே: குருதேவ்! ஆன்மிகம் என்பது என் வரையில், பூரண விடுதைலையாகும். ஆனால் வாழும் கலை யில்,தொண்டும்,பிற விஷயங்களும், கோட்பாடுகளுக்குபட்டவையாக இருக்கின்றன. இத்தகைய கோட்பாடுகள் உள்ள பயிற்சிக்கு சில சமயங்களில் என்னால் இயைந்து கொள்ள இயலவில்லை என்ன செய்வது?

குருதேவ்: உங்கள் மனம்தான் இந்த முரண்பாட்டை உருவாக்குகிறது. எல்லா விதமான தொண்டு களையும் நீங்கள் செய்ய வேண்டும் என்று கட்டாயம் இல்லை.ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தொண்டு என்பது அவசியம், ஏனெனில் அது நிறைவையும்,மகிழ்ச்சியும் ஏற்படுத்துகின்றது. உங்களால் அதிக பட்சம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு, உங்களை அதிகம் வருத்திக் கொள்ளாமல் செய்யுங்கள்.

உங்களுக்குக் கோட்பாடுகள் பற்றியெல்லாம் சிந்தித்துக் கொண்டிருப்பதற்கு அதிக அளவு ஒய்வு நேரம் இருப்பதாகக் கருதுகிறேன்.கோட்பாடு என்பது என்ன? கற்பித்தல் என்பது ஒரு ஒழுங்குமுறை, அம் முறை கற்பித்தலைப் பயன் மிகுந்ததாக ஆக்குகின்றது.கல்வியை எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமா னாலும் ஒரு கிராமத்திலுள்ள நாட்டு வைத்தியர் போன்று பயனற்ற முறையில் கற்றுத் தரலாம். கிராமங்களில் மக்கள் நோயுற்றால், நாட்டு வைத்தியரிடம் செல்வார்கள், அவர் தாற்காலி கமாக சில மூலிகைகளக் கொடுத்து அவற்றை அரைத்துக் குடித்து விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்பார்! சமஸ்க்ரிதத்தில் ஒரு முது மொழி உண்டு, " யஸ்யா கஸ்ய தரோ மூலம் , யேனகேனா பிசூநிதம் யஸ்மை கஸ்மை ப்ரதா தவ்யம் யதா தத் வபா விஷ்யத்தி"

இதன் பொருள் என்னவென்றால், ஏதாவது மரம்,வேர்,அல்லது எதையாவது அரைத்துப் பசையாக்கி, யாருக்காவது கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கும்!! இது ஒழுங்கற்ற வைத்தியம் செய்வது ஆகும். இப்படி பலர் செய்து வருகிறார்கள். இந்தியாவில் இது சாதாரணமாககாணப்படுகிறது.இந்தியாவில் ஒவ்வொருவரும் வைத்தியர்.ஒவ்வொருவரும் பிறருக்கு எதாவது பாட்டி வைத்தியம் செய்து கொண்டு இருக்கிறார்கள். பாட்டி வைத்தியம் பலன் உள்ளதுதான், நான் இல்லையென்று கூற வில்லை. ஆயினும் முறையாகப் பயின்ற ஒரு டாக்டர் நல்ல முறையில் முழுமையாகப் படித்திருப்பதால், அத் தகைய மருத்துவத்தின் பயன் அதிகம்.

மூலிகை வைத்தியர் மூலிகைகளைப் பற்றி முழுமையாக அறிந்திருப்பார். எதையோ கொடுத்து எதுவோ ஆவது போன்று அல்ல. அது போல கற்பித்தலும் ஒரு செயல் நுட்ப இயலுக்கு உட்பட்டிருக்கின்றது. எல்லோருக்கும் எல்லாம் தெரிந்தாலும், எப்படி வேண்டுமானாலும் கற்பித்தல் என்பது விரும்பும் பயனைத் தராது.முற்காலத்தில் கூட குருகுல முறைப்படித்தான் மாணவர்கள் பயின்று ஆசிரியர்கள் ஆனார்கள்.

கே: குருதேவ்! நான் யார் எங்கே இருக்கின்றேன் என்கின்ற கேள்விகளை உள்ளாய்வு செய்த பின்னர் நான் எங்கேயும்  இல்லை,எல்லா இடத்திலும் வெற்றிடமாக இருக்கின்றேன் என்பதை உணர்ந்தறிய முடிகிறது.உடல் உணர்வற்ற இத்தூய்மையான விழிப்புணர்வு நிலையில் எவ்வாறு நிலைத்திருப்பது ?

குருதேவ்: உடல் விழிப்புணர்வற்ற நிலையில் நிலைத்திருப்பது என்பது ஒரு முயற்சி. அத்தகைய முயற்சிகளை எடுக்காதீர்கள். ஆழ்ந்த ஞானத்தை அடையும்போது அது தானாகவே நிகழும்.

வசனாஸ் ( எண்ணப்பதிவுகள்) குறைந்து மறையும் போது தெளிவாகவே உணருவீர்கள். எண்ணப் பதிவுகளை வற்புறுத்தி விலக்க முடியாது. சாதனா,சத்சங்கம், நல்ல சகவாசம் இவையாவும் மிக அவசியம். பேராசையும்,எதிர்மறை எண்ணங்களும் கொண்டவர்களுடன் இருந்தால் அதிலேயே உங்கள் மனம் ஆழ்ந்து விடும்.உங்கள் ஆன்மாவை மெய்யறிவுடன் மேம்படுத்துங்கள். முயற்சியின்றி என்ன நடக்கிறது என்று பார்ப்பீர்கள்.

கே: குருதேவ்! நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து செய்து மறு திருமணம் செய்து ஓராண்டுக்கும் குறைவாக ஆகின்றது. இதிலும் அதே பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இது என் கர்ம வினையா? அல்லது நான் அறிவை சரியாகப் பயன்படுத்தாமல் இருக்கின்றேனா?

குருதேவ்: உங்களுக்கே இது மேலாகத் தெரிந்திருக்கும் என்னன்ன தவறுகள் செய்கிறீர்கள் என்று பாருங்கள். ஏற்புத்தன்மை உங்களுக்கு இருக்கின்றதா? சரியாகத் தொண்டு செய்கின்றீர்களா? உற்ச்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்தவராக நீங்கள் இருந்தால் ஏன் ஒருவர் உங்களுடன் சேர்ந்திருக்க விரும்பவில்லை? நீங்கள் அன்பும் தொண்டுள்ளமும் கொண்டவராக இருந்தால் ஏன் ஒருவர் உங்களுடன் சேர்ந்திருக்க விரும்பவில்லை? நீங்கள் ஞானமும் அறிவும் உடையவராகவும்,உள்ளே காலியான வெற்றிடமாக உணருபவராகவும் இருந்தால் எல்லோரும் உங்களுடன் இருக்க விரும்புவார்கள். இரவும் பகலும் ஞானத்தில் திளைத்திருங்கள், ஞானத்துடனே உறங்குங்கள். விழித்தெழுந்தவுடன் ஞானக் கருத்துக்களைக் கேளுங்கள். யோக வசிஷ்டா,அஷ்டவக்கிரகீதா, பக்திசூத்ராஸ் ஆகியவற்றைப் படியுங்கள். விலை மதிப்பற்ற ஞானக் கருத்துக்கள் நமக்கு வழங்கப் பட்டிருக்கின்றன. ஒரு வேளைக்கு ஒரு சூத்திரம் படித்தாலும் போதும்.உதாரணமாக, " யோகச்சித்த வ்ருத்திநிரோதா ததா திராஷ்டுஹ்ஸ்வருபிவஷ்டனம் "

யோகம் என்பது காட்சியின் உட்பொருளை நிலைநிறுத்துவது,காட்சியை அல்ல. இக்கருத்தில் ஆழ்ந்து காண்பவரை உள்ளாழ்ந்து,காண்பதெல்லாம் காட்சியே என அறிதல். இவ்வுடல் என்பது காணும் காட்சி காண்பவரைத் தேடினால் மெய்யறிவுக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்படுவீர்கள். இவ்வுடல் காலியானது,என்றுணர்வீகள். வெளியே எல்லாமே காலியானது என்று அறிவீர்கள். ஒரு கோப்பையைப் பாருங்கள். உள்ளேயும் வெளியேயும் காலியிடம் உள்ளது. இவ்வுடல் ஒரு கோப்பையைப் போன்றது.காலியான மனம் கொண்ட நீங்கள் ஒரு சுபாத்ரா - நல்ல கோப்பை.மனதில் அழுக்குகள் நிறைந்துள்ள போது அது குபாத்ரா. நீங்கள் சுத்தமான கோப்பை என்றுணரும் போது தளர்ந்து விடுவீர்கள். உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் தளர்ந்துவிடும். எல்லா எதிர்மறை எண்ணங்களும் குப்பைகளும் அகன்று விடும்.

நீங்கள் காலியான வெற்றிடமான சுத்தமான ஒரு பாத்திரம்.இதை உணரும் மனநிலை எவ்வளவு ஆனந்தமாக இருக்கின்றது? அப்போது நீங்கள் 18 முதல் 20 மணி நேரம் சோர்வில்லாமல் மனத் தெளிவுடன் பணி புரியலாம். தினமும் ஆறு மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும்.

கே: பல எஸ் பிளஸ் பயிற்சி செய்ய விரும்புகிறார்கள். ஆனால் பெற்றோர் அனுமதிப்பதில்லை. இந்த வயதில் ஆன்மீகத்தில் செல்ல அவர்களை எவ்வாறு மனமேற்கும்படி செய்வது?

குருதேவ்: அவர்களிடம் இனிமையாக நடந்து கொள்ளுங்கள். தியானம் செய்வதாகக் கூறுங்கள். நீங்கள் இனிமையாக நடந்து கொள்ளாத தினத்தில் தியானம் செய்யவில்லை என்று கூறுங்கள். அப்போது அவர்கள் உங்களைத் தியானம் செய்யும்படிக் கேட்டுக் கொள்ளுவார்கள்.

கே: குருதேவ்! ஒருவர் கிருஷ்ணரை அடைய வேண்டுமானால் ராதையாக வேண்டும் என்றும், ராமரை அடைய வேண்டும் எனில் ஹனுமானாக வேண்டும் என்றும் கூறுவீர்கள். நான் தங்களை அடைய விரும்புகிறேன்.நான் என்னவாக வேண்டும்?

குருதேவ்: எதுவும் இல்லை. எதுவும் ஆவதற்கு முயற்சிக்காதீர்கள். நீங்கள் என்னவானாலும் அதை விட்டு விட்டு காலியாகவே இருங்கள். ஏற்கனவே உங்களில் நான் இருக்கின்றேன்.

கே: குருதேவ்! வாழ்க்கையில் பணம், அன்பு, சுய மரியாதை, உறவுகள் இவற்றில் எதுமுக்கியமானது?

குருதேவ்: இவற்றை எல்லாம் விட்ட பின்னர் எதுவோ, அதுவே வாழ்வில் அடையும் தகுதி உடையது.