விஷயங்கள் வீழ்ச்சியடையும் போது


வெள்ளிக்கிழமை, 3 ஏப்ரல் 2015


ஏன் இந்த ஆன்மீக வழியில் நேர்மையுடன் இருக்கும் போதும், என் வாழ்க்கையில் ஒரு பகுதி முன்னேற்றமின்றி இருக்கின்றது? துரதிர்ஷ்டம் என்றே கருதுகின்றேன்.என்னை சுற்றியிருக்கும், ஆன்மீக வழியில் இல்லாத பலர் நன்கு முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். ஏன் அவ்வாறு நிகழ்கின்றது மற்றும் நான் எவ்வாறு இதைச் சரியாக்குவது ஆகியவற்றுக்கு எனக்கு தயவு செய்து ஆலோசனை அளியுங்கள்.

இரண்டு பிரச்சினைகள் உள்ளன.

1. ஆன்மீக வழியில் இருப்பது

2. எதைச் செய்கிறீர்களோ அதில் வெற்றியடைவது.

இவ்விரண்டையும் ஒன்றிணைக்காதீர்கள். ஒன்றை இழந்தாலும் பற்றிக் கொள்வதற்கு மற்றொன்றாவது  இருக்கும். இரண்டையும் ஒன்றிணைத்து விட்டால், இரண்டையுமே இழந்து விடுவீர்கள். இது மிக முக்கியமானது. பலர் என்னிடம்,"இவ்வளவு ஆன்மீக ஞானமுள்ள இந்தியா ஏன்  இத்தனை பிரச்சினைகளுடன் இருக்கிறது? என்று கேட்கின்றார்கள். நான் அவர்களிடம்,"பல மருத்துவமனைகள் இருக்கின்றன. ஆயினும் மக்கள் நோயுறு கின்றனர். மக்கள் நோயுறுவதற்கு மருத்துவமனைகள்தாம் காரணமா ? என்று கேட்கிறேன்.

எப்படியும் மக்கள் நோய் அடைகின்றார்கள் என்றால் மருத்துவமனைகள் எதற்கு? அவற்றை மூடி விட முடியுமா? அவ்வாறு செய்தால் என்ன ஆகும் என்று உங்களுக்கே தெரியாது. அது போன்றே, விஷயங்கள் வீழ்ச்சியடையும் போது, ஆன்மீக வழியில் இருந்த போதிலும் அவை சரியாக நடைபெற வில்லையென்று நீங்கள் எண்ணினால், உங்கள் எண்ணம் சரியில்லை. ஆன்மீக வழியை இழந்தால், கடினமான காலங்களை கடந்து செல்லும் பலம் உங்களுக்கு இருக்காது.

ஆன்மீக வழியில் இல்லாதவர்களை பாருங்கள். எவ்வளவு துன்பத்துடன் இருக்கிறார்கள் பாருங்கள். தியானம், ஞானம், போன்ற எந்த அனுபவமுமே உங்களுக்கு இல்லையெனில் நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்று எண்ணிப் பாருங்கள். இதை விட மோசமாக இருப்பீர்கள் அல்லவா? ஆகவே நல்லதே நடக்கும் என்னும் நம்பிக்கையுடன் அனைத்தையும் கையாளுங்கள். இதில் சந்தேகமே இல்லை. சத்தியம். ஆன்மீக வழியில் நீங்கள் ஒரு நாளும் பின்னடைய மாட்டீர்கள், முன்னேறியே செல்வீர்கள்.

குருதேவ், வயது ஏறிக் கொண்டு போகும் கவலையுடன், வாழ்க்கை (ஆத்மத்) துணையை தேடிகொண்டிருக்கும்போது எவ்வாறு மனத் திருப்தியுடன் இருக்க முடியும்?

முதலில் உங்கள் ஆத்மாவை சந்தியுங்கள். அது, “எனக்கு முதுமையே கிடையாது, எப்போதுமே இளமையுடன் இருக்கிறேன்" என்று கூறும். அப்போது உங்கள் கவலைகள் பறந்தோடி விடும்.
நீங்கள் கவலைகளுடன், பிரச்சினைகளுடன் இருக்கும்போது யாருமே உங்களைத் துணையாகத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். எனவே, நீங்கள் உங்கள் ஆத்மாவை சந்தித்து, அது என்றுமே இளமையுடன் இருக்கக் கூடியது என்பதை அறிந்துணர்ந்து கொண்டால், உங்களிடம் ஒரு மகிழ்ச்சிப் பொறி, குதித்தெழும்  உற்சாகம் தோன்றும், அப்போது பல துணைகள் உங்களை நோக்கி ஓடி வருவார்கள்.

முரண்பட்ட முன்னுரிமைகள் பல எழும்போது எவ்வாறு வேலைகளை நடத்தி முடிப்பது?

தியானம் தவிர வேறெங்கு முரண்பாடுகள் இல்லையென்று கூறுங்கள்? ஏன் உங்களுக்கு புத்தி அளிக்கப்பட்டிருக்கின்றது? இயற்கை உங்களுக்குப் புத்திசாலித்தனத்தினை அளித்திருக்கின்றது. அதற்கு  ஒரு வேலையும் உள்ளது. உங்களுக்குப் புத்தி இல்லையெனில் முரண்பாடுகளும் இல்லை. உங்களுக்கு அறிவு அளிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், அதுவே முரண்பாடுகளை தீர்க்க வேண்டும். உங்கள் மூளையை பணிபுரிய விடுங்கள்.மூளைதான் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கின்றது, அதுவே அவற்றைத் தீர்க்கட்டும். என்னால் முரண்பாடுகளைத் தீர்க்க இயலவில்லை என்று நீங்கள் கூறினால், அப்போது என்னிடம் வரும் நான்கு வகை மக்களில் ஒரு வகையுடன் இணையுங்கள். மிகத் துன்பமாக உணர்ந்தால், சரணடையுங்கள். உதவி கிடைக்கும்.

அன்பு என்பது என்ன? ஏன் சிலரிடம் இருக்கிறது,சிலரிடம் இல்லை?

லரிடம் அன்பு இல்லை என்று நீங்கள் எண்ணினால்,நீங்கள் சரியாக பார்க்கவில்லையென்று பொருள். அவர்களிடமும் அன்பு உள்ளது. இந்தப் பிரபஞ்சத்தில், ஒரு அங்குலப்பரப்புக் கூட அன்பற்றது கிடையாது. தொலைந்திருக்கும் அல்லது அறியாமையில் மூடப்பட்டிருக்கும். அவ்வளவு தான்.

எவ்வாறு நான் ஆண்களை நம்புவது?

உண்மையில் உங்களையே நம்பவில்லை.உங்களை நீங்கள் நம்பினால், யாரை வேண்டுமானாலும் நம்ப முடியும். நீங்கள் அப்பாவியாக இருக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. அறிவுக் கூர்மையுடன், எச்சரிக்கையுடன் பரந்த அளவில் மக்களைப் புரிந்து கொள்ளுங்கள். அதிக உணர்ச்சி வசப்பட்டால்,உங்களால் எதையுமே சரியாகப் பார்க்க முடியாது. உங்களுக்கு ஏன் இந்த நம்பிக்கைப் பிரச்சினை? உங்களுக்கு உணர்ச்சி சமநிலை இன்மையால், சீற்றம் ஏற்பட்டால், உங்களால் எதையும் சரியாகப் பார்க்க முடியாது.

செறிவூட்டப்பட்ட உணர்ச்சிக்கும், அறிவுக்கூர்மைக்கும் இடையே ஒரு மெல்லிய தொடர்பு உண்டு. அதுதான் யோகா என்பது. கிரகிக்கும் நிலை என்று வரும்போது, உங்களுக்கு செறிவூட்டப்பட்ட உணர்ச்சி, கூர்மையான அறிவு, ஆகியவை இருக்க வேண்டும். இவை தவிர உள்ளுணர்வும் செயல்பட அனுமதியுங்கள். 

அன்புள்ள குருதேவ், நேற்று தாங்கள் சூரியனைச் சுற்றியுள்ள பரப்பில் எதிர்மறை ஆற்றல் நிறைந்துள்ளது என்று கூறினீர்கள். வெற்றிடமான ஒரு பரப்பில் எவ்வாறு நேர்மறை அல்லது எதிர்மறை இருக்கக்கூடும்?

இல்லை. அது இருள் அல்லது இருளாற்றல் என்றே கூறினேன். கண்ணுக்குத் தெரியாத அளவு வெளிச்சம் உள்ள ஆற்றல் அவ்வாறு அழைக்கப் படுகிறது. அது அறிவியல் சொல். பில்லி சூனியம் போன்றது அல்ல. இயற்பியல் வல்லுனர்கள் சூரியனை சுற்றியுள்ள கண்ணுக்குத் தெரியாத ஆற்றல் அல்லது பிரபஞ்ச ஆற்றல் இவற்றினை இருள் ஆற்றல் என்றே கூறுகின்றனர். ஒரு காற்றுக் குமிழி ஒரு பாட்டில் நீரில் சிக்கிக் கொண்டால், நீரின் அழுத்தத்தால் அந்தக் குமிழி உருண்டையாக தெரியும். அது போன்று, சூரியனும் உருண்டையாகத் தெரிகிறது ஏனெனில், அதைச் சுற்றியுள்ள ஆற்றல் சூரியனை விட மில்லியன் அளவு சக்தி வாய்ந்தது. அந்த ஆற்றல் இருள் ஆற்றல் என்று அழைக்கப்படுகிறது. எதிர்மறை ஆற்றலல. இருள் என்பது கெட்டது அல்ல. ஸ்ரீ கிருஷ்ணரும் கருப்புத்தான். அவர் சிவந்த மேனியுடன் தோற்றம் அளிக்கவில்லை. ஆப்பிரிக்காவில் ஜீசஸ் படம் கருநிறத்துடன் தான் காணப்படுகின்றது. எனவே கருமையே அழகு!