9 பிப்ரவரி, 2014
பெங்களூர், இந்தியா
கே: தியானம் செய்ய சிறந்த வழி என்ன என்று
சொல்ல முடியுமா? ஆழ்ந்த தியானத்தில் செல்ல ஏதாவது சிறப்பான இசை இருக்கிறதா? (ரிது குமார்
– ஆடை வடிவமைப்பாளர், இந்தியா 2013ம் ஆண்டு பத்மஶ்ரீ பட்டம் பெற்றவர்)
குருதேவர்: தியானம் மிக எளிதானது.
ஓரிரண்டு நாட்களில் கற்றுக் கொள்ளலாம். ஒரு முறை கற்றபின் நீயாகவே தியானம் செய்யலாம்.
எந்த இடத்தில் வேண்டுமானாலும், விரும்பிய நேரத்தில் தியானம் செய்யலாம். ஆனால் தியானம்
உணவு உண்பதற்கு முன்பே செய்ய வேண்டும் என்பதில் கவனமிருக்கட்டும்! ஏனென்றால் நம் உடலின்
மெடபாலிஸம் (வளர்சிதை மாற்றம்) தியானத்தின் போது மிக மெதுவாக நடக்கும். உணவு உண்ட பின்
இந்த மாற்றம் உச்ச நிலைக்கு செல்கிறது. எனவே உணவு உண்பதற்கு முன் 2 -3 மணி நேரம் முன்போ,
அல்லது உணவு உண்ட பின் 2 – 3 மணி நேரம் கழிந்த பின் தியானம் செய்வது நல்லது.
தியானம் செய்வது நம் உடலுக்கும்
மனதுக்கும் நல்லது. தியானம் நம் உடலை வலிமையாக்குகிறது. தியானம் செய்வதால் மனம் தெளிவடையும்.
நம் உணர்ச்சிகள் மென்மையாகும். நம் உள்ளுணர்வு திறமையாக, ஆக்கபூர்வமாக செயல்படும். சூழ்நிலையோடு ஒன்றி அமைதியாக இருக்க முடியும். நம்மை சுற்றி ஒரு ஆக்க பூர்வமான சக்தியிருப்பதை
உணர முடியும். தியானத்தால் மற்றும் பல நன்மைகள் உண்டாகும்.
கே: நான் இங்கு வருவதற்காக நுழைவாயிலில்
நுழைந்த போது என் மனதில் பல கேள்விகள் இருந்தன. ஆனால் நான் இங்கு அமர்ந்த பின் எனக்குப்
புரிந்தது. நமக்குள் இருக்கும் அமைதியை தேடுவதற்கான வழிகள் இங்கு சொல்லப்படுகின்றன
என்பதை புரிந்து கொண்டேன். இது ஒரு அழகான உணர்வாக இருக்கிறது.
இன்று என் கேள்வி ஆப்பிரிக்காவைப் பற்றியது. ஆப்பிரிக்க மக்களுக்கு உணவுப் பொருட்கள்
மட்டும் அனுப்பினால் போதாது என்று சொன்னீர்கள். அவர்களுக்குச் செய்யும் உதவியை எப்படி
மேம்படுத்த முடியும் என்று வழி காட்ட வேண்டுகிறேன். ஆப்பிரிக்காவை மற்ற நாடுகள் மறந்து
விட்டன. ஆப்பிரிக்க மக்கள் கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். நீங்கள் தான் வழிகாட்ட
வேண்டும். (மாண்பு மிகு ஷேய்கா காலித் காலித் அல் காஸிமி – யூ.ஏ.இ யில் வசிக்கும் பெண்
பத்திரிக்கையாளர் – வடிவமைப்பாளார்)
குருதேவர்: உனக்குத் தெரியுமா?
நானும் ஆப்பிரிக்க மக்களுக்கு எப்படி நன்மை செய்ய முடியும் என்பது பற்றி சிந்தித்து
வருகிறேன். மூன்று வழிகளில் நாம் செயல் பட வேண்டும்.
முதலாவது: லஞ்சம் கூடாது.
மக்கள் நன்மைக்காக அனுப்பும் கோடிக்கணக்கான டாலர்கள் சில தலைவர்களின் சொந்த வங்கிக்
கணக்கில் சேர்க்கப்பட்டு, மக்களை அடைவதில்லை என்று எனக்குத் தெரிய வந்தது. இந்த விவரம்
சரி என்று நினைக்கிறேன். நான் ஐரோப்பிய பார்லிமெண்ட்
கூட்டத்தில் கலந்துகொண்ட போது, பல நாட்டுத் தலைவர்கள் “ஆப்பிரிக்க மக்களுக்கு நாம்
அனுப்பும் உதவித் தொகையை அங்கு உள்ள தலைவர்கள் லண்டனில் உள்ள வங்கிகளில் தங்கள் சொந்தக்
கணக்கில் சேர்த்து விட்டு மக்களுக்கு ஒன்றும் செய்வதில்லை“ என்று கூறினார்கள். ஆப்பிரிக்க நாடுகளில், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி லஞ்சத்தை ஒழிப்பது அவசியம்.
லஞ்ச ஊழல் செய்பவர்களை சட்டப்படி தண்டிப்பதற்கு வழி வகுக்க வேண்டும். இப்படிச் செய்வது
மிக மிக அவசியம்.
இரண்டாவது: மக்களிடையே அவர்கள் அனைவரும்
ஒருவரை ஒருவர் சேர்ந்தவர்கள் என்ற உணர்வு வளர வேண்டும். ஆப்பிரிக்க மக்கள் இனக் கலவரங்களால்
மிகவும் கஷ்டப் படுகிறார்கள். பணமும் நஷ்டமாகிறது. மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து
தங்கள் வேற்றுமைகளை மறந்து மனிதாபிமான உணர்வுகளோடு ஓரினமாக வாழ்ந்தால் வேற்றுமைகளைக்
கொண்டாட முடியும். ஆப்பிரிக்கா ஒரு நாடு அல்ல. பல சிறு நாடுகள், பல இன மக்கள், ஆதிவாசிகள்
வசிக்கும் மிகப் பெரிய கண்டம்.
இந்தியாவின் உதாரணத்தை எடுத்துக்
கொண்டு, ஆப்பிரிக்க மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ்க்கையைக் கொண்டாட முடியும்.
இந்தியாவிலும் ஒவ்வொரு 200 கிலோ மீட்டர் தூரத்திலும் வேறு ஒரு மொழி பேசப்படுகிறது.
கிட்டத் தட்ட ஐரோப்பிய நாடுகளை போலவே ஒவ்வொரு மாநில மக்களும் ஒரு தனி மொழியைப் பேசுகிறார்கள்.
இந்தியாவைப் போல ஐரோப்பியாவிலும் பல மொழிகள் பேசப்படுகின்றன. பல இன மக்கள் ஒன்று சேர்ந்து
வாழ்கிறார்கள். இந்தியாவில் சில மாநிலங்களில் 10 - 15 பழங்குடியினர் வசிக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு மாநிலத்தில் வாழ்கிறார்கள். கலவரங்கள் பெரிய அளவில்
மக்களைப் பாதிப்பதில்லை. மக்களுக்கு, வேற்றுமையில்
ஒற்றுமையோடு வாழ்வதற்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். நம் கல்வித் திட்டத்தில் சேர்க்க
வேண்டும். மற்றவர்களின் பழக்க வழக்கங்களை மதிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். இப்படிச்
செய்ததால் தென் ஆப்பிரிக்காவில் பெரிய அளவில் முன்னேற்றம் காணப்படுகிறது. ஆப்பிரிக்காவின்
மற்ற நாடுகளிலும் இப்படி நடக்க வேண்டும். நாம் பண உதவி மட்டும் செய்தால்
போதாது. உண்பதற்கு மீன் மட்டும் கொடுத்தால் போதாது. மீன் பிடிக்க கற்றுத் தருவது நல்லது.
அவர்கள் தன் சுய உழைப்பில் முன்னுக்கு வர முடியும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு அளிக்க
வேண்டும். இது தான் நல்லது என்று நான் நம்புகிறேன்.
கே: புதிய சகாப்தத்தில் நாடுகள் முன்னேற்றம்
அடையும் போது, வரும் ஆண்டுகளில் பெண்கள் சமுதாயத்தில் முக்கிய பங்கு வகிப்பார்கள்.
அப்படி வரும் போது பெண்கள் திறமையாக காரியம் செய்ய தங்கள் சக்தியை எப்படி அதிகரித்துக்
கொள்ளலாம் ? (மார்சியா டீ லூகா. ப்ரேசில் நாட்டில் வசிக்கும் யோகா மற்றும் உடல்நல ஆலோசகர்)
குருதேவர்: முதலாவதாக
நான் சொல்வது: அவர்கள் தாங்கள் உண்ணும் உணவின் மீது கவனம் வைக்க வேண்டும். உடல் நலத்தைக்
கொடுக்கும் இயற்கை உரத்தில் விளைவிக்கப் பட்ட உணவுப் பொருட்களையே உண்ண வேண்டும்.
இரண்டாவது: பெண்கள் பாடுவதை
நிறுத்தக் கூடாது. இந்த நாட்டில் (ப்ரேசில்) கிராமப்புறங்களில் வயல்களில் வேலை செய்யும்
பெண்கள் ஏதாவது பாட்டை பாடிய வாறு இருக்கிறார்கள். பாடுவதால் அவர்கள் தங்கள் வேலையை
உற்சாகமாக அதிக சக்தியோடு செய்ய முடிகிறது. ஆண்கள் பாட்டுப்பாட வெட்கப்படுகிறார்கள்.
எனவே பெண்கள் தாங்கள் பாடுவதை நிறுத்தக் கூடாது. பாட்டு பாடுவது அதிக சக்தியை அளிக்கும்.
மூன்றாவது: ப்ராணயாமம் மற்றும்
யோகா செய்வதால் சக்தி அதிகரிக்கும்.
கே: கணவன் மனைவி உறவு நல்ல முறையில் இருக்க,
மனைவி கணவனின் பெருமையைச் சுட்டிக் காட்டிய வண்ணம் இருக்க வேண்டும். மற்றவர்கள் முன்
கணவனை மட்டம் தட்டக் கூடாது என்று சொல்கிறீர்கள். வேலை செய்யும் பெண்ணான நான் அப்படிச்
செய்தால், அலுவலகத்தில் என்னுடன் வேலை செய்யும் ஆண்கள், அதிகாரிகளின் மதிப்பில் தாழ்ந்து
விடக்கூடும்.
குருதேவர்: எல்லா சமயங்களிலும்
நீ அப்படிச் செய்ய தேவையில்லை. சில சமயம் அலுவலகத்தில் உள்ள ஆண்களிடம் அவர்களைப் பற்றிய
பெருமையைப் பேசிப் பார். அவர் அகம்பாவம் அவரை ஆட்டிப் படைப்பதை பார்த்து ஒரு விளையாட்டை
போல் ரசிக்கலாம். வீடோ, அலுவலகமோ, எக்காரணத்தைக்
கொண்டும் உன் புன்முறுவலை இழக்காதே. பூமியில் கிடைக்கும் எதுவும் உன் புன்முறுவலுக்கு
ஈடாகாது.
மலர்ந்த முகத்தோடு இரு. மற்றவர்களைப்
பார்த்து எப்போதும் சிரிக்கலாம் என்று எண்ண வேண்டாம். உன் இதயம் மலர்ந்திருக்க வேண்டும்.
நீ சொல்வதைக் கேட்டு உன் அதிகாரி கோபப்படும் போது, அவர் முகம் எப்படி மாறுகிறது என்பதை
மலர்ச்சியோடு பார்! அவர் கண் சிவப்பதைக் கவனி! அவர் நடத்தையை கண்டு உன் சிரிப்பை இழக்க
அவசியமில்லை.
உன் மன உறுதி இந்த அளவு நீ
வளர்ந்த பின் மற்றவர்கள் கோபப்படும் போது உன்னால் அமைதியாக இருக்க முடியும். இது உன்
இதயம் மலர்ந்திருப்பதன் அடையாளமாகும். யாரும் உன்னை வெல்ல முடியாது. விழித்துக் கொள்.
உன்னிடம் அந்த மன உறுதி உண்டு என்பதை உணர்ந்து கொள். நீ ஒரு அன்பின் சமுத்திரம். உன்னிடம்
மிகுந்த கருணை உள்ளது. இதை நீ உணர்ந்தாலே போதும். உலகில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துவாய்.
“உலகில் என்ன மாற்றங்களைக் காண விரும்புகிறாயோ, மற்றவர்களை மாற்றுவதற்கு முன், நீ அதன்படி
மாறு “ என்று மகாத்மா காந்தி சொன்னார்.
கே: தற்சமயத்தில் வாழச் சொல்கிறீர்கள்.
அதே சமயம் வருங்காலத்தில் நாம் அடைய விரும்பும் இலட்சியங்கள் நம் வாழ்க்கைக்கு அவசியம்
என்றும் சொல்கிறீர்கள். இவை இரண்டும் முரண்பாடாக உள்ளது. இல்லையா? தற்சமயத்தில் வாழ
வேண்டுமென்றால் வாழ்க்கையில் இலட்சியத்துக்கு அவசியம் என்ன?
குருதேவர்: வாழ்க்கை சிக்கலானது!
எளிதல்ல! சிக்கல்களை அனுபவிக்கும் போதுதான் நம்மால் வாழ்க்கையின் அழகை ரசிக்க முடியும்.
சிக்கல் இருப்பதால் தான் நாம் வாழ்க்கையின் அழகை உணர்கிறோம். நம் உடலுக்கு ஒரு பரிமாணமும்,
நிறமும், வடிவும் இருக்கிறது ஆனால் நம் மனதுக்கோ இவைகள் கிடையாது. நாம் வெளிப்படையான
உடலும், சூட்சுமமான கண்ணுக்குத் தெரியாத மனமும் இணைந்தவர்கள். ஒன்று கண்ணுக்குத் தெரிவது.
மற்றது சூட்சுமமானது. உடலைத் தொட்டுக் காண்பிப்பது போல் உன்னால் உன் மனதைக் காண்பிக்க
இயலாது. எனவே நாம் இயற்கையின் சிக்கலான பல தத்துவங்களால் ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கிறோம்.
அதே சமயம் நாம் இயற்கையின் ஒரு முழுமையான படைப்பாகவும் இருக்கிறோம். எனவே நீ தற்சமயத்தில்
வாழ வேண்டும். உனக்கு வருங்காலத்தைப் பற்றிய தொலை நோக்குப் பார்வையும் அவசியம். நீ
இரண்டையும் செய்ய முடியும். இதைச் செய்யும் திறமை உன்னிடம் உண்டு.
கே: லக்ஷ்மி (செல்வம்), சரஸ்வதி
(ஞானம்), துர்கா (சக்தி / வலிமை) மூன்றும் ஒரு சேரக் கிடைக்காமல் ஒன்றே ஒன்று தான்
கிடைக்கும் எனும் போது, இன்றைய பெண் ஒருத்தி எதைத் தேர்ந்தெடுக்கலாம்?
குருதேவர்: இந்தியப் புராணங்கள்
பெண்களுக்கு மூன்று சக்திகளையும் அளித்திருக்கிறது. எல்லா முக்கியத் துறைகளும் பெண்களிடமே
விடப் பட்டிருக்கின்றன. நிதி அமைச்சகம் (லக்ஷ்மி), கல்வி அமைச்சகம் (சரஸ்வதி) மற்றும்
பாதுகாப்பு அமைச்சகம் (துர்கா). எனவே ஒரே பெண் மூன்று பாத்திரங்களையும் வகிக்க முடியும்.
ஒரு பெண் தன் குழந்தைகளுக்கு
ஆசிரியையாக இருக்கிறாள். (சரஸ்வதி). சில சமயம் தன் கணவனுடனும் பக்கத்தில் இருப்பவர்களுடனும்
சேர்ந்து துர்காவின் பாத்திரத்தை ஏற்கிறாள். தன் குடும்பத்தின் நிதி நிலைமைக்கும் பொறுப்பு
வகிக்கிறாள். (லக்ஷ்மி).
பழங்காலத்தில் பெண்களுக்கு
ஶ்ரீதனம் கொடுக்கும் வழக்கம் இருந்து வந்தது. அவள் அந்தப் பணத்தை செலவு செய்யாமல் சேமிப்பாக
வைத்திருப்பாள். விருப்பப்பட்டால், அப் பணத்தை தன் மகளுக்குக் கொடுக்கலாம். அல்லது
அவள் விருப்பப்படி செலவு செய்து கொள்ளலாம். அப்படி ஒரு வழக்கம் இருந்து வந்தது. பெண்கள்
வழி வழியாக சொத்துக்களை அனுபவிக்கும் வழக்கம் இன்றும் கேரள மாநிலத்திலும், வடகிழக்கு
மாநிலங்களிலும் இருக்கிறது. திருமணத்துக்குப் பின் மணமகன் மணமகள் வீட்டோடு சென்று வசிக்கும்
வழக்கமும் இருக்கிறது. இக்குடும்பங்களில் ஆண் பிள்ளைகளுக்கு சொத்து கிடைப்பதில்லை.
பெண்களுக்கே சொத்துரிமை இருக்கிறது.