அரசனை போல் இருங்கள், சேவை செய்யும் மனபான்மையுடன் வாழுங்கள்.

பெப்ரவரி 24, 2014

பெங்களூரு, இந்தியா


சாதரணமாக இல்லாமல் பெரிதாக எண்ணுவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைப்பது வாழ்வில் ஒரு பெரும் அதிர்ஷ்டம் ஆகும்.  உண்ணுதல், அருந்துதல், போன்ற அன்றாட சிறு விஷயங்களிலிருந்து மாறுபட்டுப் பெரும் எண்ணங்களில் ஈடுபட வேண்டும். பெரிய விஷயங்களை எண்ணக்கூடிய நிலைஅவ்வாறு எண்ணுதற்கு தூண்டக் கூடியோரின் சகவாசம் ஆகிய இரண்டுமே சிறந்த ஆசியும் பேரதிர்ஷ்டமும் ஆகும். இதை ஒருநாளும் இழக்கக் கூடாது. 

ஞானத்தினால் மட்டுமே இத்தகைய உயர்வை அளிக்க முடியும். வேறெதுவும் இதற்கு உதவ முடியாது. ஞானம் உங்கள் வாழ்வில் இல்லையெனில் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு ஓடிக்கொண்டிருப்பீர்கள். ஞானமின்றி இருந்தால் நீங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தடுமாறிக்கொண்டு, வாழ்வின் ஒவ்வொரு படியையும் துயர் மிகுந்ததாக உணருவீர்கள். ஞான மார்க்கமும் சத்சங்கமுமே உங்களை துயரிலிருந்தும், வருத்தங்களிலிருந்தும் காக்கும். இதில் நீங்கள் ஆழமாகச் செல்ல வேண்டும்.எப்போதெல்லாம் முடியுமோ, அப்போதெல்லாம், உங்களுக்கென்று சற்று நேரம் ஒதுக்கி, அமைதியாக அமர்ந்து தியானம் செய்யுங்கள்.

ஞானத்தின் அமுதினைச் சுவைக்கும் வரை வாழ்வில் எதைத் தவற விட்டிருக்கின்றோம் என்றே நீங்கள் அறிய மாட்டீர்கள்.ஆனால் ஞானத்தின் போதையில் ஆழ்ந்து விட்ட பிறகு மற்றவை  எல்லாம் முக்கியமற்று மங்கி விடுகின்றன அல்லவா? ஞானத்துடன்  ஒப்பிட்டால்  மற்ற ஒவ்வொரு போதையையும்  மங்கலாகி விடுகின்றது. அது தான் ஞானத்தின் ஆழம் ஆகும்நாம் ஞானத்தில் வளரும்போது இயற்கை கூட நமது விருப்பங்களுக்குச் செவி சாய்க்கின்றது. இது உறுதியாக நிகழ்கின்றது.ஆஸ்ரமத்திலிருந்து யாரும் வெறும்கையுடன் திரும்பிச் செல்ல மாட்டார்கள். எதையாவது கேட்கும் போது, உங்கள் தகுதிக்கேற்றவாறு விருப்பம் கொண்டு கேளுங்கள். மேலோட்டமாக எதையும் கேட்காதீர்கள். உண்மையாக, இதயபூர்வமாக, நீங்கள் எதையாவது வேண்டினால் அது நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும்.

ஒரு சிறிய கிண்ணத்தை கையில் வைத்துக் கொண்டு பத்து லிட்டர் பால் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தால் அது எவ்வாறு சாத்தியம் ஆகும்? வாழ்வில் எதை வேண்டுகின்றீர்களோ அதை அடைவதற்கு ஏற்றவாறு உங்கள் தகுதியைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். உங்கள் மனமும் அதற்கேற்றவாறு  விரிவடைந்திருக்கும்.

குருதேவ்! மௌனத்திலிருந்து பிறந்தது தான் படைப்பாற்றல் என்று கூறப் படுகின்றது. ஆனால் பல படைப்புக்கள் ஆழ்ந்த மனக்கசப்புமற்றும் கடுந்துயரிலிருந்தும் பிறக்கின்றன. இதை தயவு செய்து விளக்கிக் கூறுங்கள்.

குருதேவ்: அது உண்மை தான். தாற்காலிகமாக ஏற்படும் க்ஷண நிலைத் துயரிலிருந்து படைப்பாற்றல் ஏற்படுகின்றது. ஆனால் அதே மனக்கசப்பும் துயரும் தொடர்ந்து கொண்டே போனால் அதிலிருந்து எதுவும் வராது. மனக்கசப்பும் துயருமே படைப்பாற்றல் ஏற்படக் காரணமானால் ஆப்கானிஸ்தான், லெபனான், மற்றும் சூடான் போன்ற துயர் மிகுந்த இடங்களில் இதற்குள் படைப்பாற்றல் மிகுந்திருக்க வேண்டும்.  அது போன்று எதுவும் இது வரை நிகழவில்லையே ?

நீங்கள் அனைவரும் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். உங்களைப் புழுப்பூச்சிகளை போன்று எண்ணிக்கொள்ளாதீர்கள். நீங்கள் உயர்ந்தவர்கள். இவ்வுலகை படைத்தவருடன் இணைந்தவர்கள். இப்படைப்பினை படைத்தவர் உங்களைச் சார்ந்தவர் என்னும் முழு உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும் வாழ்வில் முன்னேறிச் செல்லுங்கள். இத்தகைய உற்சாகம் இருந்தால் யாரும் உங்களை அசைக்க முடியாது. வாழ்வில் மிகச் சிறிய அற்பமான நிகழ்வுகளுக்குக் கூட வருந்துகின்றீர்கள். அற்ப விஷயங்களுக்கு அழ ஆரம்பித்து, சிறு விஷயங்களைக் கூட எண்ணிப் பயந்து கொண்டிருக்கின்றீர்கள். இவ்வாறு செய்வதால் உங்கள் வாழ்கையையே பாழாக்கிக் கொண்டிருக்கின்றீர்கள். இவ்வுலகைப் படைத்தவர் உங்களைச் சார்ந்தவர் என்று எண்ணி ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளுங்கள்." 

நிச்சயம் எனக்குத் தேவையானது  எனக்குக் கிடைக்கும், என் வாழ்க்கை அற்புதமாக இருக்கும். இதற்கு மாற்றுத் தேர்வு எதுவும் கிடையாது "இத்தகைய தைரியத்துடன் உங்கள் வாழ்கையை நடத்த வேண்டும். நீங்கள் அனைவரும் இந்த சங்கல்பத்தையும் பிரார்த்தனையையும் செய்ய வேண்டும். வாழ்வில் வேறெதுவுமே தேவையில்லை.

ஒரு பிச்சைக்காரனை போன்று, " எனக்கு வெற்றி வேண்டும், புகழ் வேண்டும், பணம் வேண்டும் என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்காதீர்கள்.அது பயனற்றது. இறைமையுடன் ஆழ்ந்த தொடர்பு கொள்ளுங்கள். எப்போதும் நான் இறைமையுடன் தொடர்பு கொண்டிருக்கின்றேன், கடவுள் யார் எங்கிருக்கிறார் என்று எனக்குத் தெரியாது ஆனால் அசைக்க முடியாத ஆழ்ந்த தொடர்பு எனக்கு உள்ளதுஅவ்வளவு தான் எனக்குத் தெரியும், அதுதான் தேவையானது" என்று எப்போதும் உங்களுக்கு நினைவுறுத்திக் கொள்ளுங்கள்.

இதில் முழ நம்பிக்கை கொள்ளுங்கள்.ஒரு மீன், தான் நீரில் இருப்பதைப் பற்றி முழுமையான நம்பிக்கை கொண்டிருப்பது போன்று நீங்கள் இறைமையால் சூழப்பட்டு இருப்பதைப் பற்றி முழு நம்பிக்கை கொள்ளுங்கள். என்ன நிகழ்வுகள் ஏற்பட்டாலும் கடவுளுடன் நான் ஆழ்ந்த தொடர்பு கொண்டிருக்கின்றேன் என்று நம்புங்கள். நீங்கள் கடவுளைக் காணவோ, அறியவோ இல்லை, ஆனால் குரு கண்டிருக்கின்றார். அவரை நீங்கள் கிடைக்கப் பெற்றிருக்கின்றீர்கள். அதனால் தான்  கடவுளை அடையக் கூடிய வாயிலாகக் குரு கருதப்படுகின்றார்.

முன்னர் கிடைக்காமல் இருந்த ஒரு விமான டிக்கெட் திடீரென்று உங்களுக்குக் கிடைத்து விடுகின்றது. கொட்டும் மழை நிற்க வேண்டும் என்று விரும்பினால் நின்று விடுகின்றது. வந்திருக்கும் நான்கு பேர் சில மாதங்களுக்கு முன்னர் தங்களுக்கு விமான டிக்கெட் கிடைக்காமல் இருந்து, சில தினங்களுக்கு முன் திடீரென்று கிடைக்கப் பெற்று இங்கு வந்திருக்கிறார்கள். பாருங்கள்! டிக்கெட் கிடைக்க வில்லையே என்று அவர்கள் முன்னர் மிகவும் பதட்டமாக இருந்தார்கள். ஆனால் அவர்கள் டிக்கெட் பதிவு கிடைத்து பாதுகாப்பாக இங்கு வந்து சேர்ந்து விட்டனர்.

எனவே நீங்கள் விரும்புவதை அடைவது என்பது மிகுந்த கடினமானது அல்ல. வாழ்வில் அற்ப விஷயங்களை வேண்டுவது என்பது ஒன்றும் பெரிதானது அல்ல. மகத்தான எதையாவது கேட்க வேண்டும். இறைமையிடம் வேண்டிக் கொள்ளும் போதெல்லாம் உங்களுக்கு சிறப்பானதும் பெரிதானதுமான ஏதேனும் கேளுங்கள்.  இவ்வுலகில் பலர் மிகுந்த துயரில் இருக்கின்றார்கள்.ஏராளமான பணம் இருந்தும் அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியின்றி இருக்கின்றார்கள்.புகழும் பெருமையும் இருந்தும் வாழ்வில் உற்சாகமின்றி இருக்கின்றார்கள். பணம், புகழ், அதிகாரம் இவையெல்லாம் பயனற்றவை. உங்கள் வாழ்வில் சாரம் வேண்டுமானால் ஒரே வழிதான் உள்ளது. அது இறைமையுடன் பலமான அசைக்க முடியாத தொடர்பினை கொள்ளுங்கள். 

அப்போது இவ்வாழ்வே ஒரு ஆசீர்வாதம், வாழ்வில் ஒவ்வொன்றும் ஆசீர்வாதம் என்று உணர்ந்து கொள்ளுவீர்கள். உங்கள் மூச்சு, உங்கள் மனம் எல்லாமே ஆசீர்வதிக்கப்பட்டவை ஆகும். வாழ்வில் எல்லாமே ஆசி என்று உணரும்போது பெரும் வளமையை காணுவீர்கள், கேட்கும் முன்னரே தேவையானது எல்லாம் உங்களை வந்து அடையும். இது ஞானத்தின் அறிகுறி. விரும்பிக் கேட்கும் முன்னரே தேவையானவை வாயிலில் காத்திருப்பதை ஆழமாக நம்புவதுதான் ஞானத்தின் அறிகுறி.

வாழ்நாளெல்லாம் போராடிய பின்னர் ஒன்றை அடைவதில் பயன் இல்லை. நீங்கள் விரும்புவதை அதிகப் பிரார்த்தனைக்குப் பின், அல்லது தாமதமாக, அல்லது உரிய காலத்தில் அல்லாமல் அடைவது என்பது நல்லது அல்ல. கேட்கும் க்ஷணத்திலேயே ஒன்றை அடைவது என்பது நல்லது. கேட்க வேண்டிய தேவை இல்லாமலேயே ஒன்றை நீங்கள் அடைவது என்பதே மிகச் சிறப்பானது. அது, தாகம் எடுக்கத் துவங்கும் போதே தண்ணீர் கிடைப்பது போன்றது . சித்தவஸ்தா (முயற்சியின்றி வேண்டுவதை அடையும் திறன்) என்றழைக்கப்படும் இது, உங்கள் சரணாகதியைக் காட்டுகின்றது. இத்தகைய ஆழ்ந்த நம்பிக்கையுணர்வு உங்களுக்கு இருக்க வேண்டும். அதனால் தான் ஸ்ரீ கிருஷ்ணர், "வா! என்னிடத்தில் பூரண அடைக்கலம் அடைந்து விடு! உனது அத்தனை குற்றங்களிலிருந்தும் உன்னை நான் விடுவிக்கின்றேன்" என்று கூறுகின்றார்.

ஒருவரது வாழ்வில் துன்பம் அல்லது வேதனை இருந்தால் அதற்கு அவரது பாபங்களே காரணம். அவற்றிலிருந்து விடுபட ஒரே வழிதான் உள்ளது. முழுமையாக இறைமைக்கு சரண் அடைந்து விடுவது ஆகும். எப்போதும் உங்களைக் கவனித்துக்கொள்ள ஒரு மேலான சக்தி உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே உங்கள் எல்லாப் பிரச்சினைகளையும் ஒப்புவித்து விடுங்கள், இறைமை எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும் என்னும் நம்பிக்கை வையுங்கள்.

ஒரு சிறு குழந்தை மண்ணில் விளையாடி அழுக்காக ஆகும் போது தனது தாயிடம் வந்து அழுக்கான கை கால்களைக் காட்டுகின்றது, ஏனெனில் தாய் தன்னை  கவனித்து கொள்ளுவாள் என்று அக்குழந்தைக்குத் தெரியும். ஒன்று அல்லது இரண்டு வயதான குழந்தைக்குத் தன்னை தானே கவனித்துக் கொள்ளத் தெரியாது. எனவே தாயிடம் ஓடி வருகின்றது. குழந்தை ஏன் இவ்வாறு செய்கின்றது? ஏனெனில், தன்னை மிகவும் நேசிக்கும் தாய் தன்னை எப்போதும் கவனித்துக் கொள்ளுவாள் என்று அக்குழந்தைக்குத் தெரியும்.
அது போன்றே, நம்மை முழுமையாக நேசிக்கும் இறைமை நமக்கு தேவையானவற்றை எல்லாம் எப்போதும் கவனித்துக் கொள்ளும் என்னும் ஆழ்ந்த நம்பிக்கை  இருக்க வேண்டும்.  அப்போது நமது எல்லாக் கவலைகள், கஷ்டங்கள் அனைத்திலிருந்தும் நாம் விடுபடலாம். இந்த உணர்வை ஒரு முறை நீங்கள் அடைந்தால் கூட, தலை நிமிர்ந்து உற்சாகமாக வாழ்வில் முன்னேறலாம். புழுப்பூச்சியினைப் போன்று இராமல், சிங்கம் போன்று நடை போடலாம்."ஒ அது இல்லை, இது இல்லை என்று உங்கள் பிரச்சினைகளை பற்றி அழுது கொண்டு இருக்க மாட்டீர்கள். நீங்கள் விரும்புவதெல்லாம் உங்கள் காலடியில் வந்து விழுவதைக் காண்பீர்கள்.

இந்த உணர்வு அகந்தையிலிருந்து பிறந்தது அல்ல. இத்தகைய உணர்வு எழுந்தால், நீங்கள் இயல்பாகவும், உங்கள் உள்ளிலிருந்து மலர்ந்ததாகவும் ஆகின்றீர்கள் என்று பொருள் ஆகும். உங்கள் அறிவும் மனமும் திறந்து மகிழ்ச்சி நிரம்பி உங்களின் மைய உணர்வில் எப்போதும் நிலை கொண்டிருக்கின்றீர்கள் எனபது ஆகும்.

ஒரு அரசனை போன்று நடந்து பொது நல ஊழியனாக இருத்தல் வேண்டும்.குழைவாகவும் கூருணர்வுடனும் அதே சமயம் உள் திடத்துடனும் இருங்கள். பொதுவாக, கூருணர்வுடன் இருப்பவர்கள், பலவீனமானவர்களாக இருக்கின்றார்கள்.  பிறர் பேச்சினால் மிகவும் பாதிக்கப்படுகின்றார்கள். மற்றவர்களின் மதிப்பீடுகள், பேச்சுக்கள் இவற்றினால் அழுது வருந்திக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு இருக்கக் கூடாது. உள் மனதில் பலமாக இருக்க வேண்டும். என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதை செய்ய முடியும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.  வாழ்வில் உங்களுக்கு நேரிடும் தடைகளைத் தாண்ட முடியும் ஏனெனில் நீங்கள் தனியாக இல்லை, உங்களைக் கவனித்துக் கொள்ள ஒருவர் இருக்கின்றார்.  இந்த நம்பிக்கை உள்ளிருந்து எழ வேண்டும். உண்மையில், அது ஏற்கனவே உங்களிடம் இருக்கின்றது.

யோக வசிஷ்டாவை ( ஸ்ரீ ராமருக்கும் வசிஷ்ட முனிவருக்கும் இடையே நிகழ்ந்த ஞான உபதேச உரையாடல் பற்றிக் கூறும் புனித நூல்)  நீங்கள் படிக்க வேண்டும் என்று ஆலோசனை கூற விழைகின்றேன். இதற்குப் பல ஒலிநாடாக்களும் உள்ளன.  ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் உள்ளது. சற்று நிதானமாக இதை கேளுங்கள். எப்போதெல்லாம் உங்கள் மனம் எதையேனும் எண்ணித் துன்புறுகின்றதோ அப்போதெல்லாம் யோகவ சிஷ்டாவை கேளுங்கள். சில மணித்துளிகளில் உங்கள் துன்பம் அனைத்தும் மறைந்து விடும். அதனால் தான், பகவத்கீதையில், " ந ஹி ஞானேன சதுர்ஷம் பவித்ரம் இஹ வித்யதே, தத் ஸ்வயம் யோக சம் ஸித்த கலேனத்மணி விந்ததி " (4.38) ஞானத்தை போன்று மனதைத் தூய்மைப்படுத்தக் கூடியது எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.