வடிவத்தின் மூலம் - வடிவமற்றதாக

பிப்ரவரி 25, 2014

பெங்களுரு இந்தியா


கேள்வி - பதில்கள்

கே: குருதேவ்!  இறந்த பிறகும் மனிதன் ஆன்மாவின் வடிவாக ஒரு உடலை தேடி அலைகிறான். எதனால் உடலின் மீது அவ்வளவு பந்தம்? 

குருதேவ்: இது எதனால் என்றால்,ஒருவருக்கு அவருடைய தர்மத்தை (கர்ம வினைப்பலன் அல்லது கடமைகள்) செய்வதற்கு உடல் ஒரு உபகரணமாக உள்ளது. "ஷாரிர மத்யம் தர்ம காலு சாதனம்" என்று சொல்லப்படுகிறது.இதன் அர்த்தம் என்னவென்றால் ஒருவர் கடமைகளையும், கர்ம வினை பலன்களையும் எடுத்துச்செல்ல வேண்டி உள்ளது. அதை அவர் ஒரு ஸ்தூல உடலின் மூலமாகத் தான் செய்ய இயலும். அசிரீரியாக, உடல் ஏதும் இன்றி  மற்றவர்களின் கண்ணுக்குத் தெரியாமல், இருப்பவர்களால் அதை செய்ய முடியாது. இதனால் தான் தேவர்களும் தேவதைகளும் கூட தர்ம வழியில் சென்று முக்தி அடைய மனித வடிவத்தை எடுத்துக் கொள்ளுகிறார்கள்.

கே: குருகுல் கோவிலில் ஐந்து முகம் கொண்ட கணபதி சிலை உள்ளது. ஐந்து முகத்தின் பொருள் என்ன?

குருதேவ்: நம்முடைய உடலில் பார்த்தல்,முகர்தல்,தொடுதல்,சுவைத்தல் மற்றும் கேட்டல் ஆகிய ஐந்து புலன்களை கொண்டிருக்கிறோம். அவ்வாறே படைப்பிலும் பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய ஐந்து சக்திகள் உள்ளன. அது போலவே கடவுளுக்கும் ஐந்து முகங்கள் உள்ளன. ஆகவே எந்த தெய்வீக வடிவம் இந்த ஐந்து சக்திகளிலும் உள்ள தடைகளை   நீக்கும் திறனை கொண்டுள்ளதோ,அதுவே பஞ்சமுக கணபதி என்று அழைக்கப்படுகிறது. இந்த படைப்பில் உள்ள அனைத்துமே இந்த ஐந்து சக்திகளும் சேர்ந்த குழுவால் ஆக்கப்பட்டவையே. உதாரணத்திற்கு, நீரானது பால் தயிர் போன்ற பல்வேறு வகைப்பட்ட வடிவங்களில் உள்ளது. அதைப் போலவே காற்றும் பல வடிவங்களில் உள்ளது. கரி மல வாயு, பிராண வாயு, நைட்ரஜன் போன்ற பல வாயுக்களை நாம் காணலாம். இம்மாதிரியான வாயுக்களின் கூட்டமைப்பே காற்று என்று அழைக்கப்படுகிறது. இதே போல் பலவகையான திரவங்களின் கூட்டமைப்பே நீர் சக்தியாகிறது.நீர் ஒரு குழுவை கொண்டுள்ளது, காற்று ஒரு குழுவை கொண்டுள்ளது, அதைப் போலவே பூமியும் தங்கம், வெள்ளி, செம்பு, கற்கள், மண் போன்ற பல்வேறு உலோகங்கள் மற்றும் கனிமங்களை கொண்ட ஒரு குழுவாக உள்ளது. ஆகாயம் கூட அதற்குள்ளாகவே உள்ளிடம் வெளியிடம் போன்றவற்றால் ஒரு குழுவை கொண்டுள்ளது. கணேசன் இந்த குழுக்கள் அனைத்திற்கும் கடவுள் ஆவார். ஐந்து முதன்மையான குழுக்கள் இருப்பதால் இந்த குறிப்பிட்ட வடிவம் பஞ்சமுக கணபதி என அழைக்கப்படுகிறது.

நிர்குணமாகவும் நிரகாரமாகவும் உள்ள கடவுளானவர் புனிதமான மந்திரங்களை உச்சரிப்பதன் மூலமாக இந்த வடிவத்தில் வழிபாடு செய்யப்படுகிறார் என்பதே இதன் சாரம்.  

கே: ஒருவருக்கு கிடைக்கக்கூடிய குருவின் அன்பின் அளவு, அவருடைய அருள் மற்றும் ஆசிர்வாதம் பெரும் கொள்திறனை சார்ந்ததா அல்லது அதிக தகுதியும் திறமையும் உள்ளவர்கள் உங்களை வேகமாக அடைவார்களா?

குருதேவ்: அம்மாதிரியாக எதுவும் கிடையாது. நீங்கள் ஏற்கனவே என்னிடம் வந்து விட்டீர்கள். இன்னும் வந்து சேராதவர்கள் அவர்களை என்னிடம் கொண்டு வந்து சேர்க்க உங்களுக்காக காத்திருக்கிறார்கள்.   

கே: குருதேவ்! "சர்வ தர்மம் பரித்யாஜய மாம் ஏகம் சரணம் வ்ரஜ. அஹம் தவம் சர்வ பபெப்யோ மோக்ஷயிஷ்யமி ம ஷுசாஹ்" என்று பகவத் கீதையில் எழுதப்பட்டுள்ளது. தர்மம் அல்லது மதத்தின் அர்த்தம் குருவின் முன் மாறி விடுமா?

குருதேவ்: பகவத் கீதையின் முடிவில் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லி முடித்த பின், பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் "சர்வ தர்மம் பரித்யாஜய மாம் ஏகம் சரணம் வ்ரஜ. அஹம் தவம் சர்வ பபெப்யோ மோக்ஷயிஷ்யமி ம ஷுசாஹ்" என்று கூறுகிறார்.உன்னுடைய சமயத்தையும் மற்ற நம்பிக்கைகளையும் விடுத்து என்னிடம் சரணாகதி அடைந்துவிடு ! அர்ஜுனா! நான் உனக்கு உன்னுடைய பாவங்களில் இருந்தும் துன்பங்களில் இருந்தும் முக்தி அளிக்கிறேன். தர்மம் என்பது ஒரு சோப்பு போன்றது. 100 ரூபாய் விலை கொடுத்து வாங்கிய ஒரு சோப்பினால் உன்னுடைய துணிகளை சலவை செய்ததனால், நீ அந்த சோப்பை  துணிகளோடு வைத்துக்கொள்ள இயலாது. நீ அதை கரைத்துவிட தான் வேண்டும். 

வாழ்வில் இந்த பந்தம் பாசம் போன்றவற்றை விடுத்து வரவேண்டிய ஒரு நிலை ஏற்படும். அந்த நிலையில் ஒரு ஆழ்ந்த பக்தியுடன் "நான் உன்னுடையவன். உன்னுடையவன் மட்டுமே" என்று இறைவனிடம் முழமையாக சரணடைந்து விடுவோம். இதுதான் இந்த செய்யுளில் கூறப்பட்டுள்ளது. பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு இதை சொல்ல வேண்டியிருந்தது, ஏன் என்றால், இதைத்தவிர வேறு ஞானத்தை அளித்திருந்தாலும், அர்ஜுனன் அதில் சிக்குண்டு விடுபடாமல் இருந்திருப்பான். நீ இவ்வாறு செய் என்று  கூறியிருந்தால் அர்ஜுனன் அதை பின்பற்றி அந்த அளவு மட்டுமே செய்திருப்பான். அர்ஜுனன் அவ்வாறு  சிக்கிக் கொள்ளாமல் இருக்க பகவான் கிருஷ்ணர் இறுதியில் "நீ உன்னுடைய அனைத்து தர்மங்களையும் விடுத்து என்னிடம் புகலடைந்து விடு. உன்னுடைய பாவங்களில் இருந்து முக்தி பெற உன்னுடைய முயற்சிகளால்  இயலாது. நான் உன்னை உன்னுடைய பாவங்களில் இருந்தும் துன்பங்களில் இருந்தும் விடுவிக்கிறேன், என்னிடம் வந்து விடு என்று கூறுகிறார்.

நீ ஒரு தவறு செய்கிறாய் என்று வைத்துக் கொள். நான் இவ்வாறு தவறு செய்து விட்டேனே! எப்படி இதில் இருந்து விடுபடுவது! என்ன செய்வது? என்று மீண்டும் மீண்டும் எண்ணி வருந்திக் கொண்டு இருக்கிறாய் என்று வைத்துக் கொள்வோம். அந்த முயற்சியினால் உனக்கு அதிலிருந்து விடுதலை கிடைக்காது. அதனால் தான் பகவான் கிருஷ்ணர், "நான் உன்னுடைய பாவங்களையும் துன்பங்களையும்  தாங்கிக்கொள்ள தயாராக இருக்கிறேன். ஆகவே  அனைத்தையும் விடுத்து வந்து என்னிடம் புகலடைந்து விடு" என்று கூறுகிறார்.

கே: குருதேவ்! நீங்கள் பதினாறு தனிச் சிறப்புடைய திறமைகள் அல்லது தெய்வீக குணங்கள் (பதினாறு கலங்கள்) பற்றி சொல்லி இருக்கிறீர்கள்.  அவை என்ன மற்றும் அவைகளுடைய முக்கியத்துவங்கள் என்ன?

குருதேவ்: கலம் என்கின்ற வார்த்தை பொதுவாக சந்திரன் ஒரு நாளில் தேயும் அல்லது வளரும் அளவை குறிப்பதாகும். சந்திரன் 16 வேறுபட்ட கலங்களை கொண்டுள்ளது என்று புரிந்து கொள்ளப்பட்டது. அமாவாசையில் இருந்து பௌர்ணமி வரை உள்ள நாட்களில் இதை நீங்கள் கவனிக்கலாம். அமாவாசையில் இருந்து பௌர்ணமி வரை உள்ள நாட்களை எண்ணினால், அது 16 நாட்களாக இருக்கும். அமாவாசையில் இருந்து பௌர்ணமி வரையில் ஏற்படும் இந்த மாற்றம் பூஜ்யத்தில் இருந்து முழுமைக்கு நகருவதை குறியிட்டுக் காட்டுகிறது. அமாவாசை தினத்தன்று சந்திரனே இல்லை என்பது இதன் அர்த்தம் அல்ல. அது அன்றும் இருக்கிறது. இவைகளே 16 காலங்கள் என்று புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. சூரிய கிரகணத்தன்று கூட சந்திரன் அங்கு தான் இருக்கிறது, ஆனால் அதை நம்மால் காண இயலாது. அவ்வளவுதான்.

அமாவசை தினத்தன்று நம்மால் சந்திரனை காண இயலாது. பௌர்ணமி தினத்தன்று முழு சந்திரனை காணலாம். ஆகவே கலம் என்கின்ற வார்த்தை ஒருவரின் சக்தியை அளக்கும் அலகு அல்லது ஒருவர் எந்த அளவு முன்னேறியிருக்கிறார் அல்லது மலர்ந்திருக்கிறார் என  வெளிப்படுத்துவது. சிலருக்கு அரை சந்திரன் பிடிக்கும், சிலருக்கு முக்கால் சந்திரன் பிடிக்கும், மற்றும் சிலருக்கு முழு சந்திரன் பிடிக்கும் என கூறலாம். இது பண்டைய காலத்தில் அளப்பதற்குரிய ஒரு முறையாக இருந்தது.     

அந்த நாளில் ஒரு கல்லில் இருக்கும் பிராண சக்தி ஒரு கலத்திற்கு சமமானதாகவும், நீருக்கு இரண்டு கலம் என்றும், நெருப்பிற்கு மூன்று கலம் என்றும், காற்றிற்கு நான்கு கலம் என்றும், ஆகாயத்திற்கு ஐந்து கலம் என்றும், கூறப்பட்டது. செடிகள் மற்றும் மரங்கள் ஆறு கலங்கள் விலங்குகள் ஏழு கலங்கள் மற்றும் மனித இனம் எட்டு கலங்கள் என்றும் கூறப்பட்டது. 
தனிச் சிறப்புடைய மனிதர்களிடம் ஒன்பது கலங்கள் இருந்ததாக கூறப்பட்டது. பகவான் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒருவரான பகவான் பரசுராமர் ஒன்பது கலங்களும், பகவான் ராமர் பன்னிரண்டு கலங்களும் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பகவான் ஹனுமான் ராமரை விட சக்தி வாய்ந்தவர் என்றும் அவர் 14 கலங்களை கொண்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது. அதனால் தான் அவரால் பகவான் ராமருக்கு உதவி செய்யவும் முடிந்தது. நம்மை விட பலசாலிகளாக இருப்பவர்களால் தான் நமக்கு உதவி செய்ய முடியும்.   

தேவி 16 தெய்வீக குணங்களையும் கொண்டிருப்பதால் "ஷோதாஷகால" என்று அழைக்கப்படுகிறார். அவர் அனைத்து தெய்வீக மற்றும் உயர்ந்த குணங்களைக் கொண்டிருப்பவர். குறைபாடு எதுவும் இல்லாதவர் என்பதே இதன் பொருளாகும். பகவான் கிருஷ்ணரும் பதினாறு கலங்களையும் கொண்டிருப்பவர் என்று கூறப்படுகிறது. அதனால் தான் அவர் பூரண அவதார் என்று அழைக்கப்படுகிறார். 16 கலங்களும் கொண்டிருப்பது என்பதன் பொருள், மொத்த மலர்ச்சிக்கும் தெய்வீக குணங்களை வெளிப்படுத்தவும் காரணியாக இருக்கும் 16 குணங்களையும் கொண்டிருப்பவர் என்பதாகும்.
   
நீங்கள் தேவியை பார்த்தால் அவர் ஒரு புறம் அன்பும் அருளும் நிறைந்து அழகாக தோன்றுவார். ஆனால் மறுபுறம் பார்த்தால், திகிலூட்டுவதாகவும் உக்கிரத்தை வெளிப்படுத்தும் காளி மாதாவாக தோன்றுவார். அவர் வசீகரமானவர் மற்றும் சாந்தமானவர் ஆனால் அதே சமயம் திகில் மற்றும் உக்கிர தோற்றத்தையும் கொண்டவர். பெண் தெய்வம் துர்கா மிகவும் திகிலூட்டுபவர் மற்றும் பக்தி பூர்வமான பயம் உண்டாக்குபவர். பெண் தெய்வம் லக்ஷ்மி மிகவும் அமைதியானவர் வசீகரமானவர்.
தேவியிடம் நீங்கள் எதிர்மறையான தெய்வீக அம்சங்கள் அனைத்தும் இருப்பதை காணலாம். எல்லாவற்றையும் வழங்கும் பெண் தெய்வம் லக்ஷ்மி தீங்கற்ற ஆந்தையின் மேல் அமர்ந்திருப்பவர். அறியாமையையும் தீயவற்றையும் போக்கும் பெண் தெய்வம் துர்க்கை கொடுமையான சிங்கத்தின் மேல் அமர்ந்திருப்பவர். கற்பனை செய்து பாருங்கள்! எங்கு நீங்கள் சிங்கத்தையும் ஆந்தையையும் சேர்த்து காண முடியும். 

அது போலவே தான் பகவான் கிருஷ்ணரும் 16 கலங்களையும் கொண்டவராக கருதப்படுகிறார். இது எதனால்? பகவான் கிருஷ்ணரிடம் நீங்கள்   எந்த  நிலையிலும் முழுமையான மற்றும் நிறைவான தெய்வீகம்  வெளிப்படுவதை காணலாம். அவர் அந்த அளவு முழுமையானவர்.அவர் கள்வர்களின் மன்னராவார். அவர் சின்ன விஷயங்களை திருடுவது கிடையாது. அவர் உங்களுடைய இதயங்களை திருடி விடுவார். அதனால் தான் அவர் "சித் சோரா" (மற்றவர் மனதை முழுமையாக கைப்பற்றுவதையும் திருடுவதையும் அழகாக செய்பவர்). மேலும் குஜராத்தில் "ராஞ்சொத்ரை" (போர்க்களத்தில் இருந்து தப்பிச்செல்லும் கோழை)  என்று அழைக்கப்படுகிறார். போர்க்களத்தில் இருந்து இடையில் தப்பி ஓடிவிட்டார் என்று சொல்லுகிறார்கள். ஆனால் மற்றொரு புறம் அவர் பிதாமகர் பீஷ்மரை (மகாபாரதத்தில் கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு மூதாதையராக இருந்தவர்) தோல்வியுறச் செய்ய தன்னுடைய சுதர்ஷன சக்கரத்தை எடுத்தார். எனவே அவர் துணிவும் உக்கிரமும் கூட உள்ளவர். ஆகவே அவர் ஒருபுறம் மிக்க தைரியமானவராகவும் மறு பக்கம் கோழையாகவும் உள்ளவர். அவர் எவ்வளவு முழுமையானவர் என்று ஒருவரால் கற்பனை செய்ய இயலாது. அவர் கீழ்ப்படிகிறவர் அதே சமயம் விதிகளையும் மீறுபவர்.

பகவத்கீதையில் பல இடங்களில் பகவான் கிருஷ்ணர் எல்லா சாத்தியமான நிலைகளிலும் பூரணமானவர் மற்றும் முழுமையானவர் என்று சொல்லப்பட்டுள்ளது. அதனால் தான் யாரும் பகவான் கிருஷ்ணரை பின்பற்றக் கூடாது என்று கூறப்படுகிறது. பகவான் ராமரின் வழியை பின் பற்ற வேண்டும், பகவான் கிருஷணர் சொல்லுவதை கேட்க வேண்டும். பகவான் கிருஷ்ணர் பாதையை பின்பற்ற வேண்டாம். நீங்கள் யாராவது பகவான் கிருஷ்ணர் செய்தது போல் ஒரு பெண்ணின் ஆடைகளை திருடச் சென்றால் மிகுந்த தொல்லைக்கு உள்ளாவீர்கள் (பகவான் கிருஷ்ணர் பெண்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது அவர்களின் உடைகளை எடுத்து மரங்களின் கீழே ஒளித்து வைத்து விடுவார்) .  

கே: தன்னிறைவு அடைந்த ஒருவருக்கு தன முனைப்பு அதிகரிக்குமா?

குருதேவ்:: தன்னிறைவு அடையும் போதோ அல்லது மற்றவர்களிடம் சார்ந்து இருக்க வேண்டிய நிலை இல்லாத போதோ தன முனைப்பு அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. தன்னிறைவு அடைந்துள்ள ஒரு நிலையிலும் நாம் கடவுளையும் பரமாத்மாவையும்( மிக உயர்ந்த நிலையை உடைய தெய்வீகம்) சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

கே: குருதேவ்! எங்களுக்கு வழி காட்டவும். இந்நாட்களில் குழந்தைகள், வளர்ந்தவர்கள் மற்றும் மகளிரிடம் கூட பான்பராக், குட்கா, புகையிலை ஆகியவற்றின் உபயோகம் அதிகரித்துள்ளது. நாம் இதை எப்படி நிறுத்துவது?

குருதேவ்: இது தாய்மார்களின் முழு பொறுப்பாகும். ஆரம்பத்தில் இருந்தே தாய்மார்கள் குழந்தைகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்திருந்தால், அவர்கள் அத்தகைய தவறான வழிகளுக்கு செல்லமாட்டார்கள். ஆனால் பொதுவாக நடப்பது என்னவென்றால், இப்போதெல்லாம் தாய்மார்கள் தங்கள்  குழந்தைகளை மிகவும் சுதந்திரமாக விட்டு விடுகிறார்கள். குழந்தை பருவத்தில் இருந்தே, வீடுகளில் தாய் தந்தை இருவருமே குழந்தைகளின் மனங்களில் அத்தகைய தடைகளை உருவாக்க வேண்டும். குழந்தைகளிடம்   தாங்கள் புகையிலை போன்றவற்றை தொடவே கூடாது என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும்.

சைவ உணவு உண்பவர்களின் குடும்பங்களில், ஆரம்பத்திலிருந்தே குழந்தைகளின் மனங்களில் மீன் மாமிசம் முட்டை போன்றவற்றை தொடக் கூடாது என்கின்ற கண்டிப்பான தடைகளை ஏற்படுத்துகின்றனர். சிறு வயதிலிருந்தே குழந்தைகள் மனதில் ஒரு கண்டிப்பான பழக்கமாக உருவாகும் போது, அவர்கள் எப்போதுமே அசைவ உணவை நாடிச் செல்லமாட்டார்கள். அதை போலவே தான், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் புகையிலை மெல்லுவது, புகை பிடிப்பது மற்றும் மது அருந்துவது ஆகியவற்றிற்கு கண்டிப்பாக தடைகளை விதிக்க வேண்டும். நான் இங்கே அமர்ந்திருக்கும் உங்கள் அனைவரிடமும் கேட்க விரும்புகிறேன், உங்கள் அனைவருக்கும் போதை மருந்துகள் உபயோகிப்பது மற்றும் புகைபிடிப்பது ஆகியவற்றிற்கு எதிராக எச்சரிக்கப்பட்டீர்களா இல்லையா? இங்கே உங்களில் எத்தனை பேருக்கு உங்களுடைய பெற்றோர்களிடம் இருந்து போதை மருந்துகள் உபயோகிப்பது மற்றும் புகை பிடிப்பதற்கு அத்தகைய கண்டிப்பான தடைகள் விதிக்கப்பட்டன? பலருக்கு இளம் வயதிலிருந்தே நல்ல பழக்கங்களை கடைப்பிடிக்க செய்யப்பட்டிருகிறார்கள்.
 
குழந்தைப் பருவத்திலிருந்தே அத்தகைய பொருட்களை தொடவோ அல்லது உபயோகிக்கவோ  தடைகள் விதிக்கப்பட்டிருந்திருக்கின்றன. தாய்மார்கள் மட்டுமே இதை செய்ய இயலும். அவர்களுடைய குழந்தைகளிடம் இந்த தடைகளை செயலாக்க முடியும். இல்லையென்றால் குழந்தைகளை இங்கே அழைத்து வந்து ஏழு முதல் பத்து நாட்கள் இங்கே பயிற்சிகள் பயிலச் செய்யலாம். அவர்களிடம் இருக்கும் ஏதாவது தவறான பழக்கங்களை சுதர்சன கிரியாவின் மூலமாக வெளியற்றி விடுவோம் என்று உறுதி செய்கிறோம். சக்தி கிரியாவின் மூலமாக அவர்களை மேலும் வலுவுறச் செய்வோம்.
 
கே: தியானம் செய்பவன் என்கின்ற முறையில், நான் செய்யும் தியானங்கள் என்னை சுற்றி இருப்பவர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று நான் அறிவேன். ஆகவே தியானம் ஒரு பெரிய சேவையா?

குருதேவ்: இதன் பொருள் என்ன? நீங்கள் அமர்ந்து தியானம் செய்தால் மட்டும் போதும், வேறு எந்த சேவையும் செய்ய வேண்டியதே இல்லை என்பதா? நான் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் சேவை மற்றும் தியானமும் அத்தியாவசியமானது.