பணத்தால் எல்லாவற்றையும் அடைய முடியாது

06 பிப்ரவரி 2014                                   

பெங்களூர், இந்தியா



பணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். வாழ்க்கைக்கு பணம் தேவை தான். ஆனால் பணத்தால் மட்டும் எல்லாவற்றையும் அடைய முடியாது. மனிதர்கள் தங்கள் மன உறுதியால் வேண்டியதைப் பெற முடியும். உலகில், இது வரை நடந்த பெரிய மாற்றங்களை ஏற்படுத்திய புரட்சிகள் பணத்தால் நடக்கவில்லை.

இந்தியாவில், மகாத்மா காந்தி தன் போராட்டத்தைத் துவங்கிய போது, அவர் அதை பணத்தால் சாதிக்கவில்லை. உன்னுடைய தொலை நோக்குப் பார்வை உன் இலட்சியத்தை நோக்கி வழி நடத்தும். பணமும் தேவை. ஆனால் அதுவே எல்லாமும் அல்ல. நீ சமூகத்துக்கு ஏதாவது நன்மை செய்ய உறுதியோடு உழைக்கும் போது, தேவையான உதவி தானாகவே வந்து சேரும். இயற்கை உனக்கு உதவத் தொடங்கும். அப்படித் தான் நான் வாழும் கலை அமைப்பைத் துவங்கினேன். அப்போது என்னிடம் வேண்டிய பணம் இல்லை.185 ஏழைச் சிறுவர்களுக்கு உணவு வேண்டியிருந்தது. ஆனாலும் நான் அதை பற்றி என்றுமே கவலைப்படவில்லை. பணம் எப்படி வரும் என்று நினைக்க வில்லை. இந்தப் பள்ளியை மூடி விட்டால் இந்தச் சிறுவர்களுக்கு ஏதும் போக்கிடம் கிடையாது. எனவே எப்படியாவது இப்பள்ளியை நடத்தியே தீர வேண்டும் என்ற மன உறுதியுடன் இருந்தோம். தேவையான உதவி எப்படியோ வந்த  வண்ணமிருந்தது.

பள்ளியை நடத்த ஒரு மேலாளர் இருந்தார். நான் பல இடங்களுக்குச் சென்று (வாழும் கலை) பயிற்சி அளித்து வந்தேன். ஒரு நாள் எங்களிடம் எல்லா பொருட்களும் தீர்ந்து விட்டன. அப்போது எங்கிருந்தோ ஒருவர் இரண்டு மூட்டை அரிசியும் ஒரு மூட்டை பருப்பும் கொண்டு வந்து நன்கொடையாகக் கொடுத்தார். நன்றியுடன் பெற்றுக் கொண்டேன். பின்பு அதே போல் பலர் உதவினார்கள். பள்ளி நடக்க ஆரம்பித்தது. இன்று படிப் படியாக வளர்ந்து 40000 குழந்தைகள் வாழும் கலை நடத்தும் பள்ளிகளில் படித்து வருகிறார்கள். 185 சிறுவர்களுக்கு பாடம் நடத்த இடம் இல்லாமல் இருந்தோம். பலருடைய வீடுகளில் அவர்களைத் தங்க வைத்து அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தோம். எப்படியோ எங்கள் பயணம் தொடர்ந்தது. எப்போதும் உட்கார்ந்து கவலைப் படாமல், ஒருவரையும் பணத்துக்காகக் கெஞ்சாமல் தானாக மக்கள் முன் வந்து கொடுத்த நன்கொடைகளை நன்றியுடன் ஏற்றுக் கொண்டோம். நம்மைக் காக்க ஒரு சக்தி  இருக்கிறது என்று நம்பினோம்.

நம் இதயம் தூய்மையாக இருக்கும் போது, நம் விருப்பம் சரியானதாக இருக்கும் போது, நாம் மனப்பூர்வமாக உழைக்கும் போது, தேவையான உதவி தானாகவே தேடி வரும். தேவைப் படும் போது, தேவையான அளவு (பணம், பொருள், உழைப்பு) உதவி கிடைக்கும். இது தான் வாழும் கலையின் மூல தத்துவம். இத்தனை ஆண்டுகளாக இப்படித் தான் நடக்கிறது.  ஒரு நாள் நம் மேலாளர் மின்சார கட்டணம் கட்ட பணம் இல்லை என்று என்னிடம் வந்தார். மிகவும் தயக்கத்துடன் என்னிடம் சொன்னார். நான் சிரித்துக் கொண்டே, அதற்குத் தேவையான பணம் வந்து விடும் என்று சொன்னேன். அன்று மாலை ஒருவர் மின்சார கட்டணத்துக்குத் தேவையான பணத்தை நன்கொடையாகக் கொண்டு வந்து கொடுத்தார். எல்லாமே அப்படித் தான் நடந்து வந்தது. சமூகத்துக்கு நல்ல காரியம் செய்ய விரும்பும் போது எதற்கும் குறைவு வராது. இது தான் நம் அனுபவம்.

கே: குழந்தைகளுக்கு எப்படி உணர்ச்சிபூர்வமான அறிவை (எமோஷணல் இண்டெலிஜென்ஸ்) அறிமுகப்படுத்தி, அவர்களை சமநிலையில் இருக்க உதவலாம்?

குருதேவர்: நீ அவர்களுக்கு அறிமுகப்படுத்த அவசியமில்லை. அவர்களிடம் உணர்ச்சி பூர்வமான அறிவு ஏற்கனவே இருக்கிறது. ஒரு மாத்திரையை விழுங்க செய்து அப்படிப் பட்ட அறிவைக் கொடுக்க முடியாது. அவர்களுக்குத் தேவையான உணர்ச்சி பூர்வமான அறிவு அவர்களிடம் இருக்கும். அவர்கள் வளர வளர அதுவும் வளரும். குழந்தைகளிடமும் உணர்ச்சிகள் உண்டு. எனவே சில சமயம் ஆவேசமாக அழும். கூச்சலிடும். சிரிக்கும். உன்னை அணைத்துக் கொள்ளும். அன்பை வெளிப்படுத்தும். உணர்ச்சி என்பது ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் இருக்கும் ஒன்று. அதை நாம் அன்பான செயல்களால் வெளிப் படுத்தச் செய்ய முடியும். நல்ல கதைகளை அவர்களுக்குச் சொல்வதால், அந்த உணர்ச்சிகளை நல்ல முறையில் வெளிப் படுத்தும்படிச் செய்ய முடியும். டி.வி யின் முன் நாள் முழுதும் அமர வைத்து “டொனால்ட் டக்” கார்ட்டூன் பார்க்க வைப்பது நல்லதல்ல. குழந்தைகளை மனிதர்களுடன் கலந்து பழக வைப்பது அவசியம்.

கே: குருதேவா! என்னை திரும்பத் திரும்ப ஆன்மீக வழியில் அழைத்துச் செல்லுங்கள். சோம்பல் காரணமாக அதில் செல்வதில் தடையாக இருக்கிறது. சோம்பலை ஒழிக்க என்ன செய்ய வேண்டும் என்று தயவு செய்து ஆலோசனை சொல்லுங்கள்.

குருதேவர்: சோம்பலை ஒழிக்க குறைந்த கால கட்டத்துக்கு சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்த 20 நாட்களுக்கு நான் சோம்பலாக இருக்க மாட்டேன் என்ற உறுதியோடு சபதம் எடுக்கலாம். நடுவில் சோம்பல் வந்தால் அடுத்த 20 நாட்களுக்கு சபதம் எடுக்க வேண்டும்.சபதம் மீறப்படும் போது, நம் உற்சாகத்தையும் சுறுசுறுப்பையும் இரட்டிப்பாக்கி சோம்பலை ஒழிக்க வேண்டும். பலர் இப்படி சோம்பலை வெற்றி கொண்டிருக்கிறார்கள். 

முதல்: சபதம் எடுத்துக் கொண்டு மன உறுதியோடு இருப்பது.

இரண்டாவது: நம் உணவுப் பழக்கத்தில் கவனமாக இருப்பது.

மூன்றாவது: ப்ராணயாமம் செய்து நம் ப்ராண சக்தியை அதிகரித்துக் கொள்வது. உடலில் ப்ராண 

சக்தி அதிகரிக்கும் போது உன்னால் சோம்பலாக உட்கார முடியாது. நான்காவது: உடலில் விடமின்களின் அளவைப் பரிசோதனை செய்து கொள். டி3 மற்றும் பி12 விடமின்களின் அளவு குறைந்தால் சோம்பலாக இருக்க வாய்ப்பிருக்கிறது. காலை எழும் போதே களைப்பாக இருப்பாய். இது விடமின் டி3 குறைவாக இருப்பதற்கு அடையாளம். துரித உணவை உண்பதால் இப்படி ஏற்படும். துரித உணவில் கெட்டுப் போகாமல் இருக்க சில இரசாயனப் பொருட்களை (ப்ரிஸர்வேடிவ்ஸ்) சேர்க்கிறார்கள். இப் பொருட்கள், சூரிய கிரணங்களால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை தடுக்கிறது. நீ சூரிய ஒளி படும் இடங்களில் சென்றாலும், உன் இரத்தத்தால், சூரிய கிரணங்களில் உள்ள விடமின் டி3 யை எடுத்துக் கொள்ள முடியாது. எனவே, ப்ரிஸர்வேடிவ் அதிகமுள்ள உணவுப் பொருட்களை (கெட்ச் அப், ஊறுகாய், பிட்ஸா முதலியவை) அதிக அளவில் உண்பது நல்லதல்ல. துரித உணவைத் தவிர்க்க வேண்டும். எத்தனை பேர் இக் கருத்தை ஏற்றுக் கொள்கிறீர்கள் ? (பார்வையாளர்களில் பலர் கைகளை உயர்த்துகிறார்கள்). நாம் இயற்கை உரத்தால் விளைந்த உணவுப் பொருட்களையும், காய் கறி பழ வகைகளையும் அதிக அளவில் உண்பது நல்லது.

கே: நான் (இறைவனை) வேண்டி ப்ரார்த்தனை செய்யும் போது, வேண்டியது கிடைப்பதற்காக காத்திருக்க வேண்டியிருக்கிறது. வேண்டிய சமயத்தில் கிடைக்காததால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன். என்ன செய்யலாம் ?

குருதேவர்: நீ வருத்தப்படும் போது எந்த ஞானமும் உன் உதவிக்கு வராது. நீ அறிந்த எல்லா ஞானமும் உன் உணர்ச்சிப் பெருக்கென்ற வெள்ளத்தில் அடித்துச் சென்று விடும். உன் வருத்தத்தைப் போக்காது. ஓய்வாக இரு. வருவதை ஏற்றுக் கொள். வாழ்வில் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் சில சமயம் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். அதைப் பற்றி கவலை வேண்டாம். எதிர்பாராத திருப்பங்களால் வாழ்க்கை மேலும் வளமடையும். இப்படிப் பட்ட அனுபவங்கள் உன்னைச் சுற்றி உள்ளவர்களுக்கும் இருந்திருக்கக் கூடும். அவர்கள் அந்தச் சந்தர்ப்பங்களை எப்படி சமாளித்தார்கள் என்று கேட்டு அறிந்து கொள்.

கே: நான் ஒரு மாணவன் / மாணவி. என்னைச் சுற்றி என் மனத்தை அலைக்கழிக்க பல விஷயங்கள் உள்ளன. படிக்க ஆரம்பிக்கும் போது மனம் ஒரு நிலைப்படாமல் அவதிப்படுகிறேன். இதற்கு ஏதாவது நிரந்தரத் தீர்வு உண்டா?

குருதேவர்: இல்லை! ஏன் நிரந்தரத் தீர்வை விரும்புகிறாய்? வாழ்க்கைக்கு நிரந்தரமான மருந்து என்று ஒன்றும் கிடையாது. மனம் ஒரு நிலைப்படாத போது, எது உன்னைத் தொந்தரவு செய்கிறது என்று பார். ஒரு விறுவிறுப்பான திரைப்படத்தைப் பார்க்கும் போது உன் மனம் அதில் லயித்து விடுகிறது. ஏதோ உனக்கு ஒரு தீவிர ஆசை இருக்கிறது. அதுவும் நீ படிக்கும் போது தொந்தரவு செய்வது உன் காதலியோ / காதலனோ. மனத்தை அலைக்கழிக்க செய்வது காதல். அந்தச் சமயத்தில் நீ உறுதியோடு இருந்து, படிப்பு முக்கியம். படித்து முடித்த பின் என்ன செய்ய வேண்டும் என்ற திடமான முடிவுடன் மற்றவைகளுக்கு இடங் கொடுக்காமல் படிப்பதில் கவனமாக இருப்பது அவசியம்.

மனம் அலைக் கழிக்கப்படுகிறது என்ற உணர்வே உன்னை அதிலிருந்து வெளியே கொண்டு வந்து விடும். எனவே அதைப் பற்றிக் கவலைப் படாதே. சற்று நேரம் ப்ராணயாமம், யோக ஆசனங்கள் மற்றும் உடற் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது.

கே: குருதேவா! யோக சூத்திரத்தை விளக்கும் போது, நல்ல செயல் செய்யாதவர்களுக்கு அறிவுரை சொல்லித் திருத்தலாம். அல்லது அவர்களை விட்டு ஒதுங்கி விடு என்று சொல்கிறீர்கள். அந்த நபர் நம் வாழ்க்கைத் துணைவராக இருந்தால் என்ன செய்வது ? எப்படி ஒதுக்குவது அல்லது திருத்துவது ?

குருதேவர்: உன் வாழ்க்கைத் துணைவரையும் கேட்க வேண்டும். உன்னைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று கேட்க வேண்டும். இக் கேள்விக்கு பதில் அளிக்க எனக்கு தகுதி கிடையாது. எனக்கு அனுபவமும் இல்லை. எனக்கு அனுபவமில்லாத விஷயங்களைப் பற்றி நான் பேசுவதில்லை. இருந்தாலும் அவர் எப்படி இருக்கிறாரோ, அவரை அப்படியே ஏற்றுக் கொள் என்று சொல்வேன். அவருக்கு ஆசிரியராக வேண்டாம்.

ஆண்களின் அகங்காரத்தை நீ அவமதிக்கும் போது, உன் அறிவுரையை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கட்டுக்கடங்காத குழந்தையைப் போலாகி விடுவார்கள். ஒரு பெண் எப்போதும் தன் கணவனை அவமதிக்கக் கூடாது. அவரைப் பாராட்டி அவருடைய கர்வத்தை மேலும் அதிகமாக்கலாம். அவரை பெருமைப்பட வைக்க வேண்டும்.

ஒருவர் தன்னை உயர்வாக நினைக்காத போது மற்றவர்களுக்கு தொந்தரவு செய்வது இயல்பு. இதை நீ புரிந்து கொள்ள வேண்டும். அவருடைய மனம் நோகாமல் அறிவுரையை ஏற்றுக் கொள்ளும் படிச் செய்ய வேண்டும். சமயம் பார்த்து, அவர் மகிழ்ச்சியாக இருக்கும் போது அவருக்குச் சொல்ல வேண்டும். 

உனக்குப் பொறுமை அவசியம். பொறுமையோடு மற்றவர்களை ஏற்றுக் கொள். அல்லது அவருடைய நண்பர்களுடைய உதவியோடு, அவருக்குப் புரிய வைக்கலாம். நேராக அவரிடம் சொல்லாமல், அவர் மதிக்கும் ஒருவர் வாயால் அவருக்குச் சொல்லலாம்… யுக்தியைக் கையாள வேண்டும். உன்னால் அது முடியும் என்று எனக்குத் தெரியும். முடிவாக, “ஐயோ, இவர் இப்படிக் கெட்ட வழியில் செல்கிறாரே” என்ற எண்ணம் இருந்தால், இதயத்தில் வலி இருந்தால், அந்த வலியும் எண்ணமும் ப்ரார்த்தனையாக மாறி அவர் வாழ்க்கையில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்த முடியும். நான் இதைப் பார்த்திருக்கிறேன். அவர் நல்வழியில் திரும்ப ப்ரார்த்தனை செய். மகாத்மா காந்தி தன் சத்சங்கத்தில் ஒவ்வொரு நாளும் “சப் கோ சன்மதி தே பகவான்” என்று ப்ரார்த்தனை செய்வது வழக்கம். இதன் அர்த்தம் “இறைவா ! எல்லோருக்கும் நல்ல புத்தியைக் கொடு”

கே: ஆன்மீக அமைப்புகள் பல சேர்ந்து ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்கலாமா? அப்படிச் செய்தால், கட்டாயம் அக்கட்சி, நம் நாட்டு அரசியலை நல் வழியில் திருப்பி மக்கள் பயனடைவார்கள் என்று நினைக்கிறேன்.

குருதேவர்: ஆன்மீக அமைப்புகள் எல்லா அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் நன்மை செய்வதற்காக இருக்கின்றன. ஒரு ஆன்மீக அமைப்பு , அரசியல் கட்சியோடு இணைந்திருக்கக் கூடாது. அவர்கள் எல்லோரையும் உச்ச நீதி மன்றம் போல், சமநோக்கோடு பார்ப்பது அவசியம். நீதி மன்றம் எல்லோருக்கும் பொதுவானது. அதே போல் பொழுது போக்கு அமைப்புகள் (சினிமா, டி.வி., இசை, கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள்) எல்லோருக்கும் பொதுவானது. அவை ஒரு அரசியல் கட்சிக்கு மட்டும் சொந்தமாக இருக்க முடியாது.

மக்கள் தாங்கொணா துயரத்தால் வாடும் போது, பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவும், ஆறுதல் பெறவும் ஆன்மீகத்தை நாடுவார்கள். இப்படி வந்து தங்கள் துயரம் தீர்ந்து தங்களைப் புதுப்பித்துக் கொள்வார்கள். எல்லா அரசியல் கட்சியில் உள்ள மக்களுக்கும் இது தேவை. ஒரு விளையாட்டுப் போட்டியின் நடுவர், எந்த ஒரு குழுவையும் தனியாகப் பிரித்துப் பார்க்காமல், எல்லாக் குழுக்களையும் சமமாகப் பார்த்து விளையாட்டை நடத்த வேண்டும். எல்லோருக்கும் நல்ல வழிமுறையைக் காட்ட வேண்டும். நாம் எல்லா மக்களையும் வாக்களிக்கும் படிச் சொல்ல வேண்டும். குற்ற வாளிகளுக்கும், லஞ்ச ஊழல் செய்பவர்களுக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று நான் சொல்லி வருகிறேன். இதை நாம் கட்டாயமாக பின்பற்ற வேண்டும். நாடு லஞ்ச ஊழல் காரணமாக மிகவும் கெட்ட வழியில் சென்று கொண்டிருக்கிறது. சமுதாயத்தில் மிகச் சிலரே கெட்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அந்த சிலரிடம் பெரிய வாக்கு வங்கியே இருக்கிறது. அவர்கள் பண பலத்தால் மக்களின் வாக்கை விலை பேசுகிறார்கள். எல்லா அரசியல் கட்சிகளிலும் இப்படிப்பட்ட சிலர் இருக்கிறார்கள். அப்படிப் பட்டவர்கள் வேட்பாளர்களாக போட்டியிடுவதை நாம் தடுக்க வேண்டும். எதைப் பற்றியும் பொருட்படுத்தாமல் சிலர் வாக்களிக்க செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார்கள். மெதுவாக இந்த நிலையை மாற்றி எல்லோரும் வாக்களிக்கும்படிச் செய்ய வேண்டும். நம் உழைப்பால் இந்த நிலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டு வருகிறது.