சேவை – ஒரு உண்மை சம்பவம்


14 ஜனவரி 2014          
                       
விதர்பா, மஹாராஷ்டிரம்

சத்சங்கம் நடந்து கொண்டிருந்த போது பலர் வாய்விட்டுப் பாட தயங்கினார்கள். சத்சங்கம் என்றால் மனம் விட்டு, இதயபூர்வமாக எல்லோரும் சேர்ந்து பாட வேண்டும். யார் வெட்கப்படாமல் பாடுகிறார்களோ அவர்கள் தான் உண்மையில் கடவுளை அடைபவர்கள். வாழ்க்கையில் இரண்டு விஷயங்களில் நீங்கள் தயங்ககூடாது. ஒன்று பாடுவது. மற்றொன்று சாப்பிடுவது. இந்த இரண்டு சந்தர்ப்பங்களில் வெட்கப்பட்டால், உனக்குத் தான் நஷ்டம் ஏற்படும். ஆனால் கோபப் படுவதற்கு நீ தயங்க வேண்டும். மற்றவர்களை சபிப்பதற்கு நீ தயங்க வேண்டும். மற்றவர்களைக் குறை சொல்ல தயங்க வேண்டும். இதை தான் இந்திய கலாசாரமும் பாரம்பரியமும் வலியுறுத்துகின்றன.

வாழ்க்கையின் இரகசியம் இது தான். சொல்வதைச் செய். நீ செய்வதை மட்டும் சொல். வாழ்க்கையில் நாம் மூன்று விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும். நம் இதயம் தூய்மையாக இருக்க வேண்டும். மனம் தெளிவாக இருக்க வேண்டும். 


நம் செயல் இயல்பாக, தன்னிச்சையாக இருக்க வேண்டும். நம் சிந்தனைகள் தெளிவாகவும், மனம் கூர்மையாகவும் இருக்க வேண்டும். நாம் செய்ய வேண்டிய செயலை தயங்காமல் செய்ய வேண்டும். கவனமாகவும், புத்திசாலித்தனமாகவும் சிந்தித்து செயல் பட வேண்டும். நம் இதயமும் மனமும் தூய்மையாக இருந்தால் எல்லாம் நன்மையாகவே நடக்கும். கடவுள் நமக்குள்ளேயே இருக்கிறார். வெளியே இல்லை. 

(பார்வையாளர்களில் சிலர் குருதேவருக்கு அன்போடு தலைப்பாகை அணிவித்து, பூவும், பழங்களும் கொடுக்கிறார்கள்.குருதேவர் தலைப்பாகையை ஏற்றுக் கொண்டு பூக்களையும், பழங்களையும் அவர்களுக்கே திருப்பி கொடுக்கச் சொல்கிறார்.)

எனக்கு பூக்கள் கொண்டு வர வேண்டாம். நீங்கள் எனக்கு பூக்கள் கொண்டு வந்தால், அதன் பொருள் இது தான். நான் இன்னும் மலர்ச்சி அடையவில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இந்த செய்தியை சொல்ல விரும்பினால் நீங்கள் எனக்கு பூக்களை கொண்டு வந்து தாருங்கள்.
அதே போல் எனக்கு இனிப்பு பண்டங்களையும், பழங்களையும் கொண்டு வந்து கொடுக்க வேண்டாம். ஏனென்றால் குருதேவர் இனிப்பாக மாற வேண்டும் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள். நான் ஏற்கனவே இனிப்பானவன் என்று நீங்கள் எண்ண வில்லையா? நீங்கள் அனைவரும் மகிழ்வோடும்,புன்னகையோடும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்கள் ஒவ்வொருவருடைய  இதயத்திலும் அன்பைத் தூண்ட விரும்புகிறேன். நீங்களும் எல்லோரிடத்திலும் அன்போடு இருக்க வேண்டும். யாரையும் வெறுக்க வேண்டாம். யாருக்கும் கெடுதல் நினைக்க வேண்டாம். இது தான் இந்திய கலாசாரம்.

எல்லோரையும் இதய பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் கலையை நாம் பழக வேண்டும். இந்தியாவில் தான் எல்லோரையும் அன்போடு ஏற்றுக் கொள்ளும் பண்பு பிறந்தது. நம் கலாசார சிறப்பாகும். இந்த பண்பை நாம் கைவிடக் கூடாது. இந்த அருமையான பண்பை, நம் கலாசாரத்தை காக்க வேண்டாமா? எத்தனை பேர் இதை ஒத்துக் கொள்கிறீர்கள்? கைகளை உயர்த்துங்கள். (பார்வையாளர்களில் பலர் கைகளை உயர்த்துகிறார்கள்.)

இன்று இறைவன் அருளால், நம் பாரம்பரிய பழக்கமான சத்சங்கமும்,தியானமும் உலகின் பல இடங்களை சென்றடைந்திருக்கிறது. நான் வட துருவத்துக்கருகில் உள்ள ஒரு இடத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு ஆண்டில் இரண்டு மாதங்கள் சூரியன் உதிப்பதில்லை. நான் நவம்பர் மாதத்தில் அங்கு சென்றிருந்த போது, சூரியன் எப்போது உதிக்கும் என்று ஒருவரைக் கேட்டேன். குருதேவா! அடுத்த சூரிய உதயம் பிப்ரவரி மாதத்தில் தான் நடக்கும் என்று விடையளித்தார். அப்படிப்பட்ட இடத்தில் கூட மக்கள் சத்சங்கத்தில் ஒன்று சேர்ந்து (பஜனை / கீர்த்தனைகள்) பாடுகிறார்கள்.
 
அதே போல் தென் துருவத்துக்கு அருகில் உள்ள டியரா டெல் ஃப்யூகோ என்ற இடத்துக்குச் சென்ற போதும் மக்கள் சத்சங்கங்களில் சேர்ந்து பாடுவதை கேட்டேன். சுதர்சன கிரியா, தியானம் செய்பவர்களைப் பார்த்தேன். அவர்கள் என்னிடம் “குருதேவா! எங்கள் வாழ்க்கை முற்றிலும் மாற்றமடைந்திருக்கிறது. சுதர்சன கிரியாவும், தியானமும் எங்கள் வாழ்க்கையை மிகச் சிறப்பாக மாற்றி விட்டது” என்று சொன்னார்கள்.

எனவே நாம் நம் இதயத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். எண்ணங்களில் தெளிவு வேண்டும். அதனால் தான் யோகப் பயிற்சிகளும் தியானமும் செய்ய வேண்டும் என்று சொல்கிறேன். அப்படிச் செய்யும் போது நம் வாழ்க்கைத் தரம் மேன்மை அடையும். நம் விருப்பங்கள் (இறையருளால்) நிறைவேறும். அதற்கான சக்தி நம்மிடம் இருக்கிறது. கடவுள் நமக்கு வேண்டியதை கண்டிப்பாக தருவார். சில நேரங்களில் தாமதம் ஆகலாம். ஆனால் நீ வேண்டுவது கட்டாயம் கிடைக்கும். இப்படிப் பட்ட நம்பிக்கை உன்னிடம் இருக்க வேண்டும். இதயபூர்வமான விருப்பங்கள் (சங்கல்பம்) கண்டிப்பாக நிறைவேறும். ஆனால் அப்படி எப்போது நடக்கும்? உன் இதயம் தூய்மையாக இருக்கும் போது, உன் வாழ்க்கை பக்தி நிறைந்ததாக இருக்கும் போது, நல்ல சிந்தனையோடு நீ செயல் படத் தயாராகும் போது உன் விருப்பங்கள் நிறைவேறும்.

நாம் எப்போதும் சுய நன்மைக்காக ஏதாவது செய்கிறொம். ஆனால் மற்றவர்களின் நலனுக்காகவும் சேவை செய்ய வேண்டும். அப்படி சேவை செய்யும் போது நம் வாழ்க்கையில் நற்பலன்கள் வந்து சேரும். நம் நாட்டின் கலாசாரம் புகழ் பெற்றது. மஹாராஷ்டிரத்தில் வாழ்ந்த குருக்களின் வாழ்க்கையைப் பாருங்கள். அவர்களுடைய பெயர்களும் மிக அழகானவை. இது ஒரு புண்ணிய பூமி. இங்கிருந்து எழுந்த ஆன்மீக அலை நாடு முழுதும் பரவியது. பெரிய நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியது. இந்த அலை அதர்மத்தை அழித்து, எதிர்மறை சக்திகளைப் போக்கி விடும் வலிமை பெற்றது. நம் சமுதாயத்தில் மீண்டும் தர்மம் தழைத்தோங்கச் செய்யும். லஞ்ச ஊழலையும், தகாத செய்கைகளையும் அழித்து விடும். மக்கள் ஒருவர் மேல் ஒருவர் அன்பு பாராட்டுவார்கள். வெறுப்பும் எதிர்மறை சக்திகளும் அறவே நீங்கி விடும். இப்படிப் பட்ட ஆக்க பூர்வமான ஒரு சக்தியின் அலையால் நம் நாடு மீண்டும் மேன்மை அடையும். இது ஏற்கனவே துவங்கி விட்டது. பெரிய மாற்றம் என்ற அலை மஹாராஷ்டிரத்திலிருந்து எழுந்து இந்திய நாடு முழுவதையும் மேலான நிலைக்குக் கொண்டு செல்லும்.

நாம் நம் தகுதியை விரிவாக்கிக் கொள்ள வேண்டும். அருளை / வாழ்த்தை ஏற்றுக் கொள்ளும் தன்மையை பெரிதாக்கிக் கொள்ள வேண்டும். அது நாம் சேவையில் ஈடுபடும் போது நிகழும். இறைவனுக்குத் தொண்டும், நாட்டுக்குச் சேவையும் ஒரு காசின் இரண்டு பக்கங்களைப் போன்றது. நாம் எல்லோரும் நம் நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும். இங்கு எவ்வளவு பேர் அதற்குத் தயாராக இருக்கிறீர்கள்? கைகளை உயர்த்துங்கள். (பார்வையாளர்களில் பலர் உற்சாகமாகக் கைகளை உயர்த்துகிறார்கள்.) ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் நாட்டு நலனுக்காக செலவிட வேண்டும். ஒரு வாரத்தில் ஏழுமணி நேரம் நாட்டுக்காக, சமுதாய நன்மைக்காக கொடுக்க வேண்டும். நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் சேவை செய்யும் போது நம் தேவைகளும் தானாகவே நிறைவேறும். எனவே சேவை மிகவும் முக்கியமானது.

ஒருவர் ஓய்வாக இருப்பதும், தியானம் செய்வதும் மிக அவசியம். ஒவ்வொரு நாளும் மௌனமாக சற்று நேரம் கண்களை மூடி அமருங்கள். நாம் அனைவரும் இந்தக் கலையைக் கற்பது அவசியம். வாரம் ஒரு நாள் சத்சங்கத்தில் கலந்து கொள்ள வேண்டும். பஜனைப் பாடல்களை பாடலாம். குழுவாகச் சேர்ந்து தியானம் செய்வது நல்லது. எல்லோருடைய சக்தியும் பெருகுவதை உணர முடியும். நம் சக்தி அதிகமாகும் போது, நம் விருப்பங்கள் நிறைவேறும். நோய் வந்தாலும் சீக்கிரம் குணமாகி விடும். சமீபத்தில் நார்வே நாட்டு விஞ்ஞானி ஒருவர் தன் ஆராய்ச்சியில் கண்டறிந்த உண்மைகளை வெளியிட்டார். ப்ராணயாமம் மற்றும் சுதர்சனகிரியா செய்வதால், நம் உடலில் உள்ள மரபு அணுக்கள் மாற்றம் அடைவதை கண்டறிந்திருக்கிறார். இது ஒரு குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பாகும். நீங்கள் இண்டர்நெட் வலைதளத்துக்குச் சென்று அந்த ஆராய்ச்சிக் கட்டுரையை படிக்கலாம். நம் நாட்டில் பல காலமாக, வாழ்த்துவதற்கும் தியானம் செய்வதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இது ஒரு விஞ்ஞான அடிப்படையில் தோன்றிய வழக்கமாகும். தவறான எண்ணமோ, மூட நம்பிக்கையோ அல்ல. நாள் தோறும் ப்ராணயாமம் மற்றும் சுதர்சன கிரியா செய்வதால் உன் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தற்சமயம் பலர் மனச்சிதைவால் (டிப்ரஷன்) வாடுவதைப் பார்க்கிறேன். அதனால் பல இடங்களில் தற்கொலை அதிகரித்திருக்கிறது. மக்கள் ஆன்மீகப் பாதையை அடைந்து, நாட்டுக்குத் தொண்டு செய்து வந்தால் மனச் சிதைவுக்கு இடமே இல்லை. அதனால் தான் நான் மக்கள் அனைவரின் முகத்திலும் ஒரு மாறாத புன்னகை இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். சில ஆண்டுகளுக்கு முன் சிறியவர்களோ, பெரியவர்களோ எல்லோரும் முகத்தில் புன்னகையோடு வாழ்ந்து வந்தார்கள்.

வாழ்க்கைக்கு நான்கு விஷயங்கள் அவசியம். 1. பக்தி  2. சக்தி  3. யுக்தி  4. முக்தி. இந்தியா எப்போதும் ஆன்மிகத்தில் ஒரு சுதந்திரமான நாடாக இருந்து வந்திருக்கிறது. வருங்காலத்திலும் அப்படித் தான் இருக்கும். மக்கள் அறிவுடையவர்களாக, தன்னம்பிக்கையோடு உழைக்கும் போது நாடு வலுவடைந்து முன்னேற்றமடையும். பழங்காலத்தில் இந்தியாவில் லஞ்ச ஊழல் இருந்ததில்லை. அரசர்கள், தலைவர்கள் நீதி நெறியோடு செயல்பட்டார்கள். இன்று இந்தியா நாலா பக்கங்களிலிருந்தும் தீயால் சூழப் பட்டிருக்கிறது. (தீ என்பது தொந்தரவான, கடினமான, பகைமையான சூழ்நிலையைக் குறிக்கிறது. பாகிஸ்தான், பங்களா தேசம், நேபாளம் மற்றும் ஶ்ரீலங்காவைக் குறிக்கிறது). நாம் வலிமையாக இருந்தாலும், அண்டை நாடுகளின் பகையால் பாதிக்கப் பட்டிருக்கிறோம். இது காட்டில் ஒரு சிங்கம் அமைதியாக தூங்கும் போது, பல சிறிய பிராணிகள் அதன் மேல் ஓடி தொல்லை கொடுப்பதைப் போல இருக்கிறது.

ஒரு சிறு நாடான மாலத்தீவுகள் கூட (மூன்றரை லட்சம் மக்கள் உள்ள சிறிய நாடு) இந்தியா சொல்வதைக் கேட்பதில்லை. நம் நாட்டை அவமதிக்கிறது. ஒரு காலத்தில் நம் பெயரும் புகழும் எப்படி இருந்தது? இன்று எப்படி இருக்கிறது? ஐக்கிய நாடுகள் சங்கத்தில் இந்தியாவை பற்றிய கருத்தை மேல் நிலைக்குக் கொண்டு வந்து இந்தியா ஒரு சிறந்த நேர்மையான நாடு என்பதை நிரூபிக்க வேண்டும்.

நாட்டுக்குள் இருக்கும் உட்பூசலைத் தீர்த்து நாட்டை வலிமையாக்க வேண்டும். நாட்டை ஒரு வேகாத சமையல் போல் ஆக விடக் கூடாது. மக்கள் பேராசையால் ஒருவரோடு ஒருவர் சண்டை போடுகிறார்கள். இப்படி நடக்க விடக்கூடாது. ஒரு சிறப்பான தன்னிறைவு பெற்ற பொருளாதார நிலையை அடைய முடியும் என்ற நம்பிக்கையோடு உழைக்க வேண்டும். எவ்வளவு பேருக்கு இப்படி செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது? (பலர் கைகளை உயர்த்துகிறார்கள்). நீங்கள் ஒன்றாக அமர்ந்து பொருளாதாரத்தில் எப்படி சிறப்பான நிலையை அடையலாம் என்று யோசித்து  திட்டமிட வேண்டும். தேர்தலில் 100 % வாக்குப் பதிவை எட்ட வேண்டும். எல்லோரும் வாக்களிக்க வேண்டும். வாக்குரிமையைத் தவிர நமக்கு வேறு எந்த சக்தியும் இல்லை. புத்திச்சாலி தனமாக யோசித்து நேர்மையான தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
நாமனைவரும் சேர்ந்து சேவைத் திட்டங்களில் பங்கு பெற வேண்டும். இங்கு டாக்டர்கள் எவ்வளவு பேர் இருக்கிறீர்கள்? நீங்கள் எல்லோரும் ஒரு வாக்குறுதி கொடுக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் 2014 ம் ஆண்டில் குறைந்த பட்சம் 3 இலவச மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டும். அரசு தரப்பில் எல்லாம் கிடைக்க வழி இல்லை. நாம் ஒன்று சேர்ந்து ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவ வேண்டும். அப்போது தான் நல்ல முறையில் மாற்றம் ஏற்படும். இல்லாவிட்டால் நாடு பின் தங்கிய நிலையில் இருப்பதற்கான காரணமாக ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டிருப்போம். நீ உன் நாட்டின் முன்னேற்றத்துக்காக என்ன செய்ய முடியும் என்று சிந்தித்து செயல் பட வேண்டும். 

வாழும் கலை மையங்கள் உங்களுக்கு இலவச மருத்துவ முகாம்களை நடத்த உதவி செய்யும். வாழும் கலையின் ஆசிரியர்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வார்கள். நீங்கள் செய்ய வேண்டியது மாதத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமைகளில் உங்கள் நேரத்தை முகாமுக்காக ஒதுக்க வேண்டும்.  அதே போல் இங்கிருக்கும் வழக்கறிஞர்களை, ஆண்டில் 3 ஏழைகளின் வழக்குகளை எடுத்து அவர்கள் சார்பில் இலவசமாக வாதாட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பல ஏழைகளுக்கு வக்கீல் வைத்து வாதாட முடியாததால், நீதி கிடைப்பதில்லை. அப்படிப்பட்ட பலர் பல காலமாக நீதி வேண்டி காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுங்கள்.
இங்கு உள்ள பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொருவரையும், ஆண்டில் 10 ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக ட்யூஷன் சொல்லிக் கொடுக்கும்படி கேட்டு கொள்கிறேன். பல ஏழைக் குழந்தைகளுக்கு ட்யூஷன் சொல்லிக் கொடுப்பதன் மூலம் அவர்களுடைய திறமைகளை வெளிக் கொண்டு வர முடியும்.

தொண்டு செய்வது என்றால் இலவசமாக உணவு அளிப்பது மட்டுமல்ல. அவர்களை தங்கள் கால்களில் நிற்க வைத்து, உழைத்து சம்பாதித்து தங்கள் உணவு மற்றும் வேறு தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்ளும் படிச் செய்வது தான் உண்மையான தொண்டாகும். அரசியல் காரணங்களால், இலவச உணவு மற்றும் இதர பொருட்களை ஏற்றுக் கொள்வது சரியல்ல என்று மக்களுக்கு உணர்த்த வேண்டும். அரசியல் வாதிகள் மக்களுக்கு டி.வி., மிக்ஸி, பணம் முதலியவற்றை அளித்து வாக்கு பெற முயற்சிப்பது சரியல்ல. மக்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்பளித்து உதவ வேண்டும். அப்போது தான் அவர்கள் தங்கள் திறமைக்கேற்ற வேலையைப் பெற்றோ, அல்லது சொந்த தொழில் நடத்தியோ தன் 
குடும்பத்துக்கான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

யாராவது உங்களுக்கு பணம் கொடுத்து வாக்களிக்கச் சொன்னால், பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் அவர்களுக்கு வாக்களிக்க அவசியமில்லை. ஏனென்றால் அவர்கள் அநியாயமாக உங்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தைத் தான் உங்களுக்குத் தருகிறார்கள். நேர்மையான ஒருவரைத் தேர்ந்தெடுப்பது நம் கடமை. லஞ்ச ஊழலையும், சமுதாயத்தில் நடக்கும் மற்ற கொடுஞ் செயல்களையும் ஒழிக்க வேண்டும். ஆன்மீகத்தில் வளர்ந்த முதல் நாடு இந்தியா தான். இவ் வுலக மக்களனைவருக்கும் ஆனந்தம் கொடுக்கும் சக்தி நம்மிடம் உள்ளது. இங்கு நம் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நாட்டின் முன்னேற்றத்துக்காக உழைத்தால் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் நாம் கனவு காணும் தலை சிறந்த நாடாக இந்தியாவை மாற்ற முடியும்.

நான் இன்று உங்களுக்கு ஒரு மந்திரம் சொல்லிக் கொடுக்கிறேன். இதை தினமும் உணவு உண்பதற்கு முன் சொல்லி வாருங்கள். “அன்ன தாதா சுகி பவ”. இந்த மந்திரத்தின் அர்த்தம் “இவ்வுணவை எனக்களித்த அனைவரும் அமைதியும் மகிழ்ச்சியும் பெற்று சுகமாக இருக்க வாழ்த்துகிறேன்.” 200 – 300 ஆண்டுகளுக்கு முன் இருந்தது போல் விதர்பா மீண்டும் செழிப்படைய விரும்புகிறேன். இதற்காக நாமனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும். இதை அடைய பிரார்த்தனையும் உழைப்பும் அவசியம். வெறும் பிரார்த்தனையால் மாற்றம் நிகழாது. ஓயாத உழைப்பால் மட்டும் மாற்றம் அடைய முடியாது. பிரார்த்தனையும் உழைப்பும் சேர்ந்து செயல் படுவது அவசியம். இது இரண்டும் இருந்தால் ஒரு செழிப்பான விதர்பாவை நீங்கள் காண முடியும். இங்கு பசுமைப் புரட்சி ஏற்படும். 

இந்தியாவை தவிர எந்த நாட்டிலும், பசு வதை இந்த அளவு கிடையாது. பசுவைக் கொன்று அதன் இறைச்சி அசைவ உணவுக்காக விற்கப்படுகிறது. வெளி நாட்டுக்கு ஆண்டுக்கு 650 லட்சம் டன் இறைச்சி ஏற்றுமதி செய்யப் படுகிறது. இதற்காக இந்திய அரசாங்கம் ஏற்றுமதிக்கான ஊக்கத் தொகையும் வழங்குகிறது. 10,15 ஆண்டுகளாக நடக்கிறது. நாட்டில் பசுக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மேலும் இப்படி நடக்க விடக்கூடாது. இந்தியப் பசுக்களை எப்பாடு பட்டாவது காப்பாற்ற வேண்டும்.

ப்ரேசில் போன்ற முன்னேற்றமடைந்த நாடு இந்தியாவிலிருந்து இந்திய பசுக்களை இறக்குமதி செய்கிறது. ஏனென்றால், இந்திய பசுக்களின் பால் தாய் பாலுக்குச் சமமான சத்துப் பொருட்கள் அடங்கியதாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மூலம் கண்டறிந்திருக்கிறார்கள். நாம் நம் பசுக்களைக் காப்பது மிகவும் அவசியம். நாம் அப்படிச் செய்யலாமா ? நம் நாட்டின் ஆவினங்களைக் காக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒரு நாள் “பால்” என்ற வார்த்தையை அகராதியில் மட்டுமே பார்க்க முடியும். இதை எத்தனை பேர் ஒப்புக் கொள்கிறீர்கள் ? எந்த அரசாங்கம் அமைந்தாலும், நம் பசுக்களைக் கொன்று இறைச்சி ஏற்றுமதி செய்வதைத் தடுக்க வேண்டும். பசுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க புரட்சி செய்ய வேண்டும்.

நாடு சுதந்திரம் அடைந்த போது இருந்த பசுக்களின் எண்ணிக்கையில் இப்போது ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே எஞ்சியிருக்கிறது. இந்த எண்ணிக்கையை விரைவில் அதிகரிப்பது அவசியம்.
இன்று நம் நாடு போதிய அளவு பொருளாதார வளர்ச்சியின்றி ஒரு பெரும் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாமல் தவிக்கிறது. பண வீக்கம் மிக அதிக அளவில் இருக்கிறது. தொழில் உற்பத்தி குறைந்து விட்டது. தற்போதைய தொழில் வளர்ச்சி 2 % மட்டுமே. நாம் நம் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். எல்லோரும் ஒன்று சேர்ந்து இதற்காக உழைக்க வேண்டும். புதிய உற்சாகத்தோடு மக்களிடையே நாட்டுப்பற்றையும், அரசியல் பொருளாதார அறிவையும் (விழிப்புணர்வையும்) வளர்க்க வேண்டும். நீங்கள் இதற்காக உழைப்பேன் என்று வாக்குறுதி அளிக்க வேண்டும். நீங்கள் எவ்வளவு பேர் வாக்குறுதி அளிக்கத் தயாராக இருக்கிறீர்கள்? உங்கள் சொந்த பிரச்சினைகளையும், கவலைகளையும் என்னிடம் கொடுத்து விடுங்கள். நீங்கள் மகிழ்வோடு இருந்து நாட்டின் பொருளாதாரத்தை பற்றி மட்டும் கவலைப் படலாம். சின்னச் சின்ன தனிப் பிரச்சினைகளை விட்டு விட்டு நாட்டு முன்னேற்றத்துக்காகப் பாடுபட வேண்டும்.
நம் நாட்டு இளைஞர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். யாரும் வேலை கிடைக்காமல் அலையக்கூடாது. நம் நாட்டில் எத்தனையோ வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. திறமைகளை வளர்த்துக் கொண்டு அந்த வாய்ப்புகளைத் தேடிச் சென்று நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.