14 ஜனவரி 2014 – 1
விதர்பா மகாராஷ்டிரம்
கே: ஆன்மீகப் பாதையில் நாம் முன்னேற்றம்
அடைகிறோமா இல்லையா என்பதை எப்படித் தெரிந்து கொள்ளலாம்?
குருதேவர்: ஆன்மீகப்
பாதையில் வந்தபின் மூன்று விஷயங்களை எப்போதும் மனதில் வைக்க வேண்டும்.
இறைவன் என்னுடையவர்.
இறைவன் இங்கே, இச்சமயம் என்னுள் இருக்கிறார் என்று எண்ண வேண்டும். இந்த நம்பிக்கையோடு
ஓய்வாக இரு. உன்னால் என்ன தொண்டு செய்ய முடியுமோ செய். கவனித்திருக்கிறாயா? நாம் எல்லோரும்
இங்கு இருக்கிறோம். இதுவரை வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு கனவு போல் தோன்றவில்லையா
?
நேற்று என்ன செய்தாய்
என்பதை நினைவில் கொண்டு வா. அதற்கு முன் தினம் என்ன செய்தாய்? ஒரு மாதம் முன்பு, சில
மாதங்களுக்கு முன்பு, ஒரு ஆண்டுக்கு முன் இந்த தேதியில் (மகர சங்கராந்தி அன்று) என்ன
செய்தாய்? எல்லா நிகழ்ச்சிகளும் ஒரு கனவை போல் கடந்து சென்று விட்டன. இல்லையா? தற்சமயம்
நீ இங்கு அமர்ந்திருக்கிறாய். இந்த நிகழ்வும் கடந்து போகும். நீ உன் வீட்டுக்குச் செல்வாய்.
நீ இங்கு அமர்ந்திருந்தது ஒரு கனவு போல் ஆகிவிடும். இதே போல் ஒவ்வொரு நாள் நிகழ்வுகளும்
கடந்து போகும். ஒரு நாள் நாம் இங்கு இருக்க மாட்டோம். ஆனால் இந்த பூமி இங்கேயே இருக்கும்.
தொடர்ந்து இருக்கும்.
இந்த கோணத்தில் உன் பார்வை
இருந்தால், உன் சிந்தனையின் முன்னோட்டம் ஒரு வித்தியாசமான நிலையை அடையும். இந்த நிலையில்
உன் உள்ளுணர்வு “ நான் அழியக் கூடிய உடல் அல்ல. நான் நிலையான ஆன்மா, நான் எப்போதும்
இங்கு இருந்திருக்கிறேன். தொடர்ந்து இங்கு நிலைத்திருப்பேன். இந்த பூமியில் மீண்டும்
மீண்டும் தோன்றுவேன்“ என்று சொல்லும். இந்த அனுபவம் காதால் கேட்பதால் மட்டும் வராது.
ஆழ்ந்த தியான நிலைக்கு நீ செல்லும் போது இதை உணர முடியும்.
அதனால் தான் வைராக்கியம்
(பற்றின்மை) மற்றும் அப்யாசம் (யோக சாதனையில் இடைவிடாமல் ஈடுபடுவது) இரண்டும் தேவை
என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள். உன் அறிவு நிலையில் மாற்றம் ஏற்படும் போது இந்த
இயற்கை வித்தியாசமாகத் தோற்றமளிக்கும்.
கே: இன்று யோகா மற்றும் மதத்தின் பெயரால் பக்தர்களின்
உணர்வுகளை சிலர் தீய வழியில் பயன்படுத்தி கொள்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில்
மக்கள் யாரை எப்படி நம்ப முடியும் ?
குருதேவர்: இது ஒன்றும்
புதிய விஷயம் அல்ல. ராவணன் சாது வேஷத்தில் சீதா தேவியை ஏமாற்றி அபகரித்துச் சென்றான்.
சன்யாசி வேஷத்தில், உணவு கேட்டு வந்தது போல் ஏமாற்றினான் இல்லையா? சீதா தேவியின், எளிமையையும்,
தெய்வ பக்தியையும் தீய வழியில் பயன்படுத்தி சிறைப்பிடித்துச் சென்றான். இன்றும் இப்படிப்
பட்டவர்கள் இவ்வுலகில் வாழ்கிறார்கள். உலகில் பல நல்லவர்களும் வாழ்கிறார்கள். பல உண்மையான
சாதுக்கள் நம்மிடையே இருக்கிறார்கள். வேறு எங்கோ போக வேண்டாம். இங்கு அமர்ந்திருக்கும்
ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு மகான் இருக்கிறார். தீயவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது.
எந்தத் தொழிலை எடுத்துக்
கொண்டாலும், நீ சில கெட்டவர்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. இல்லையா? உத்தரப் பிரதேசத்தில்,நோய்டா
என்ற இடத்தில் சில டாக்டர்கள் மக்களை ஏமாற்றி அவர்களுடைய ஒரு சிறு நீரகத்தை அறுவை சிகிச்சை
மூலம் அகற்றி திருட்டுத்தனமாக விற்று வந்தார்கள். 150 பேர்களை ஏமாற்றி சிறுநீரகம் அகற்றப்பட்டதாக
செய்தி வந்தது. அப்பாவி மக்கள் பல நாட்கள் வரை இதை அறியவில்லை.
நோயாளிகள் அந்த டாக்டர்களிடம்
சிகிச்சை பெற வரும் போது, உனக்கு அறுவை சிகிச்சை அவசியம் என்று சொல்லி ஏமாற்றி அவர்களுடைய
ஒரு சிறு நீரகத்தை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து மற்றவர்களின் தேவைக்காக விற்று விடுவது
வழக்கமாக இருந்திருக்கிறது. பல மக்கள் இரு சிறு நீரகங்களும் பழுதாகி உயிருக்கு ஆபத்து
வரும் நிலையில், மாற்று சிறு நீரகத்துக்காக அதிக பணம் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.
இப்படி நடந்தது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். 8 – 10 ஆண்டுகளுக்கு முன் இப்படி நடந்தது.
ஒரு பெரிய அவமானமான நிகழ்ச்சியாகும்.
இதே போல் இன்று எல்லாத்
துறைகளிலும் ஏமாற்றுக்காரர்கள் இருக்கிறார்கள். ஆனால் சில டாக்டர்கள் இந்தத் திருட்டில்
ஈடுபட்டதற்காக எல்லா டாக்டர்களும் கெட்டவர்கள் என்று சொல்ல முடியாது. இல்லையா? கண்டிப்பாக
அப்படி இருக்க முடியாது.
சில தீயவர்கள் செய்யும்
செயலைப் பார்த்து பொதுவாக எல்லோரும் அப்படி இருப்பார்கள் என்ற முடிவுக்கு வருகிறோம்.
ஆனால் ஒரு போதும் அப்படி நினைக்கக் கூடாது. நீ கவனமாக இருப்பது தேவை தான். என்ன நடக்கிறது
என்பதில் கவனம் வைத்து செயல்படுவது அவசியம்.
கே: நீங்கள் வெளிப்படையாக “மாம் ஏகம் சரணம் வ்ரஜ“ என்று
எப்போது சொல்லப் போகிறீர்கள்? (பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் சொன்னது. இதன் அர்த்தம்
: என்னையே சரணடைக. பாபங்களனைத்தினின்றும் உன்னை நான் விடுவிப்பேன் “ )
குருதேவர்: இந்த அறிவிப்பு
5000 ஆண்டுகளுக்கு முன்பே வந்து விட்டது. நாம் செய்ய வேண்டியது பகவத் கீதையில் பகவான்
சொன்ன வழியில் செல்ல வேண்டும். பகவான் கீதையில் “சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம்
வ்ரஜ | அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச: || (18 – 66) என்று சொல்லியிருக்கிறார்.
எல்லாமே தெய்வசக்தியால்
தான் ஆக்கப்பட்டிருக்கிறது. உன்னை சுற்றி இருக்கும் அனைத்தையும் அந்த சக்தியின் வெளிப்பாடாகப்
பார்.
கே: குருதேவா! ஒரு ப்ரம்ம ஞானி இவ்வுலகில்
தோன்றும் போது உலகின் ஒட்டு மொத்தமான ஆன்ம சக்தி அதிகரிக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
இதை எப்படி அறியலாம்?
குருதேவர்: இது உண்மை. கடந்த காலத்திலும் இப்படி நடந்திருக்கிறது. தற்சமயத்திலும் இதைக் காண முடியும்.
கே: பள்ளிச் சிறுவர் சிறுமியர் 6 மணி
நேரம் பள்ளியிலும், 4 மணி நேரம் ட்யூஷன் பாடத்திலும் செலவு செய்த பின் தங்கள் திறமைகளை
எப்படி அதிகரித்துக் கொள்ள முடியும்? நம் பாட திட்டத்தை எப்படி மாற்றி அமைக்கலாம்?
குருதேவர்: சிறுவர் சிறுமிகளை
சற்று நேரம் ப்ராணயாமம், தியானத்தில் இருக்கச் செய். அவர்களுக்கு அதிகப் படியான ட்யூஷன்
தேவையாக இருக்காது. நிஜமாகவே ஏதாவது பாடத்தில் ட்யூஷன் தேவையென்றாலும் ஒரு மணி நேரம்
போதுமானது. குழந்தைகளின் மற்றத் திறமைகளையும் அறிவையும் வளர்க்க, அவர்களுடைய உணவுப்
பழக்கத்திலும் நடத்தையிலும் கவனம் வைக்க வேண்டும். காலை வேளையில் குழந்தைகளுக்கு எண்ணெயில்
பொரித்த பண்டங்களைத் தரவேண்டாம். அவர்களுடைய உணவில் நிறைய காய்கறிகளையும், பழங்களையும்
சேர்க்க வேண்டும். அவர்களுக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கலாம்.. மேத்ய ரசாயனம் கொடுக்கலாம். (மன அழுத்தத்தை குறைத்து, நினைவாற்றலை அதிகரிக்க உதவும் ஆயுர் வேத மருந்து. இது நரம்பு
மண்டலத்துக்கு உறுதியளிக்கும் சக்தி வாய்ந்தது.) பாலில் ஓஜஸ்விடா கலந்து கொடுக்கலாம்.
(ஓஜஸ்விடா பால் பௌடருடன் 7 மூலிகைச் சத்துக்கள் கலந்தது.) குழந்தைகளுக்கு இப்படி சத்தான
உணவை உண்ண உற்சாகப் படுத்தி, அவர்களுடைய திறமைகளை வளர்க்க முடியும்.