ஜனவரி 10, 2014
பெங்களூர்,
இந்தியா
கே: குருதேவ்,
முட்டாள்தனமாகத் தோன்றினாலும்,
என் இதயத்திலிருந்து வரும் நேர்மையான
கேள்வி இது. ஒருவன்
தன்னைத் தானே மேலும் நேசிப்பது எப்படி?
குருதேவ்:
இல்லாத
கருப்புப்பூனையை இருட்டறையில் தேட ஒருவன் முயற்சிப்பது போல் உள்ளது.
முதலில்
பூனை இருப்பதாக நினைத்துக்கொண்டு நீங்கள் தேட முயற்சி செய்கின்றீர்கள்.
உங்களை
நீங்கள் நேசிக்கவில்லை என்ற உங்கள் ஊகமே தவறு. நீங்கள்
அன்பு மயமானவர். உங்களை நீங்களே நேசிப்பதற்கான
பெரும் முயற்சிகள் செய்தால் அவை தோல்வியிலேயே முடியும். உங்களையோ
அல்லது மற்றவர்களையோ நேசிப்பதற்கு நீங்கள் முயற்சி எதுவும் செய்ய இயலாது.
நீங்கள்
அனைத்தையும் விட்டுவிட்டு தளர்வாகி அமைதி கொள்ளும் போது நீங்கள் அன்பு
வடிவமானவர் என்பதை உணர்வீர்கள். புரிந்ததா?
தற்கொலை செய்துகொள்ள நினைக்கும் ஒருவன் தன்னை
நேசிக்கவில்லை என்று நினைக்கின்றான். ஆனால்
அவனும் கூட தன்னையும் தன் சுகத்தையும் நேசிப்பதனால் தான் சிறிய அசௌகரியத்தைக் கூட ஏற்க இயலாமல் தற்கொலை
செய்து கொள்கின்றான். தற்கொலை செய்து
கொள்வதனால் அசௌகரியத்திலிருந்து வெளியேறிவிட முடியாது. இது
மிகவும் குளிராக இருக்கின்றதென்று மேலங்கியை கழற்றி விடுவது போன்றது.
குளிராக
உணரும்போது மேலங்கியை கழற்றுவது எப்படி பலனளிக்கும்? உங்களை
நீங்கள் நேசிக்க முயற்சி செய்யாமல் நீங்களே அன்பு மயமானவர் என்பதை உணருங்கள்.
பிராணாயாமம்,
மூச்சுப்
பயிற்சி, தியானம் ஆகியவை இதற்கான
சிறந்த வழிகள்.
கே: ஒவ்வொரு
குருவும் " என்
வழியே சிறந்தது" என்று
சொல்லி இருக்கின்றனர். மேலோட்டமாக பார்க்கும் போது இது குறுகிய மனப்பான்மையாக தோன்றினாலும் இதன் பின் உள்ள ஆழ்ந்த கருத்து என்ன?
குருதேவ்:
இயேசு
கிறிஸ்து,"எனக்கு முன் வந்தவர்கள்
அனைவரும் திருடர்கள்; கொள்ளைகாரர்கள்"
என்று
சொல்லி இருக்கின்றார். அவர் ஏன் அப்படி
சொன்னார் என்று தெரியுமா? அவர்
முன் அமர்ந்திருந்த அனைவரும் கடந்தகாலம் அல்லது எதிர்காலம் பற்றி நினைத்துக் கொண்டிருந்தனர்.
கடந்த
காலத்தை புகழ்ந்து கொண்டிருந்தனர் அல்லது
எதிர்காலத்தில்
எதையோ எதிர்பார்த்து கொண்டிருந்தனர். அவர்கள்
மனம் நிகழ்காலத்தில் இல்லை. "உங்கள்
மனம் கடந்த காலத்தால் கொள்ளை கொள்ளப்பட்டுள்ளது; அதிலிருந்து
விடுபட்டு நிகழ் காலத்தில் இருங்கள்" என்பதே
அதன் பொருள். அதுவே சிறந்த வழி. புதரிலிருக்கும் இரண்டு
பறவைகளை விட
நம் கையிலிருக்கும் ஒரே பறவை மதிப்பு வாய்ந்தது. இல்லையா?
புதரிலிருக்கும்
பறவைகளை நினைத்து கையிலிருப்பதை இழப்பது முட்டாள் தனம். அதனால் தான் "நீங்கள்
எங்கே இருக்கின்றீர்களோ அது சரியான பாதை
தான்; விழித்தெழுங்கள்"
என்று
எப்போது சொல்லி
இருகின்றனர். ஆகவே இது ஒன்று தான் பாதை: ஞானத்திற்கான பாதை;
சத்தியத்திற்கான
பாதை; உங்களை அடைவதற்கான பாதை.
இதை
நீங்கள் எங்கும் காணலாம். நிகழ்காலத்தில்
இருப்பதே அது.
இதற்கு இணையான பல பாதைகளை நீங்கள் காணலாம்.
பகவான்
கிருஷ்ணனும்,
இயேசு நாதர் சொன்னதை போலவே,
"என்னிடம் வாருங்கள்; நான்
உங்களை உங்களுடைய எல்லா பாவங்களிலிருந்தும் மீட்கின்றேன்"
என்று
சொல்லி இருக்கின்றார்.
கே: குருதேவ்,
ஆன்மீகத்தில் பல பாதைகள் இருப்பது ஏன் என்று தயவு செய்து
விளக்குங்கள். எதை
தேர்ந்தெடுப்பது என்று நான் எப்படி முடிவு செய்வது?
குருதேவ்: இத்தனை
பேரில் என் வாழ்க்கைத் துணையாக யாரை தேர்ந்தெடுப்பதென்று எப்படித் தெரிந்து கொள்வது என்று நீங்கள்
கேட்பது போல்
உள்ளது. உங்கள் இதயத்தைக் கேளுங்கள்.
உங்களுக்கு
சரியானதென்று உங்கள் இதயம் சொல்லும் பாதையில் மேலே செல்லுங்கள்.
பேராசையில்
முடிவு செய்யாதீர்கள்.
கே: நான்
வாழும் ஆசிரியர் ஆவதற்கான சரியான நேரத்தை அறிந்து கொள்வது எப்படி?
குருதேவ்:
தொடர்ந்து
ஓராண்டு காலம் பயிற்சி செய்து வந்தால் நீங்கள் அதற்கான தகுதியைப் பெறுகின்றீர்கள்.
கே: குருதேவ்!
இந்தியாவில்,
வாழும்கலை
நிறுவனம், பசுக்களை ஆதரித்துப்
பொறுப்பேற்றுக் கொண்டு வருவது குறித்து மிக மகிழ்ச்சி அடைகின்றேன்.
மற்ற
நாடுகளில், விலங்குகளும் பசுக்களும், தொழிற்பண்ணைகளால் கொடூரமான
முறையில் நடத்தப்படுவதை தடுக்க உங்களால் முடியுமா? இதில்
உங்களுக்கு உதவ தனிப்பட்ட முறையில் நான் என்ன செய்ய வேண்டும்?
குருதேவ்:
விலங்குகளின்
உரிமைகள், எவ்வாறு அவைகளை,
முக்கியமாக கால்நடை இனங்களை பாதுகாத்து வளர்ப்பது
என்பனவற்றைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.
இச்செய்தியை
அறிந்திருக்கிறீர்களா என்று எனக்குத் தெரியவில்லை - அதாவது இரு வகையான பால்
புரதச்சத்து இருக்கின்றன.அவை A1
மற்றும் A2 ஆகும்.இந்தியாவிலுள்ள
நாட்டுப் பசுக்களின் பாலின் A2
புரதச்சத்து உள்ளது. அது தாய்ப்பால், மற்றும்
ஆட்டுப் பாலுக்கு ஒப்பானது. ஆனால்
டென்மார்க் மற்றும் ஸ்கான்டிநேவியா ஆகிய நாடுகளிருந்து இறக்குமதி ஆகும் உயரின
பசுக்கள் A1 புரதச்சத்து உடையவை.இப்பசுக்கள் அதிக பால்
கொடுத்தாலும், A1 புரதச்சத்து
புற்றுநோய் ஏற்படுத்தகூடியது., நாட்டுப்
பசுக்கள் குறைந்த அளவு பால் கொடுத்தாலும் A2
புரதச்சத்தைக் கொண்ட அந்தப் பால்,
தாய்ப்பாலை போன்று மிகுந்த சத்துள்ளது.
இங்கு
இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பசுக்கள் தாய் என்றழைக்கப்படுகின்றன. தாயாரைப் போன்று நன்மதிப்பளிக்கப்பட்டு வணங்கப் படுகின்றன. எவ்வாறு
பசுவின் புரதச்சத்துக் கூட மாறுபடுகின்றது என்பது ஆச்சர்யமான விஷயம். இப்போது
பிரேசில் நாடு இந்தியப் பசுக்களை தனது நாட்டிற்கு பெரும் அளவில்,
இறக்குமதி
செய்து கொண்டிருக்கின்றது. மக்கள் உட்கொள்ளச் A2
புரதச்சத்து கொண்ட பால், சிறந்தது
ஆகும். ஊட்டச் சத்துள்ளது, உடல்
நலத்திற்கு நல்லது, புற்று நோய்
விளைவிக்காதது. அனைவரும் இதை உட்கொள்ள வேண்டும்.
கே: குருதேவ்! தாங்கள் சத்சங்கத்தில், ஒரே
கடவுள் என்பது பற்றிக் கூறினீர்கள்.அது, ஹிந்துக்
கடவுள்களும், பெண் தெய்வங்களும் உருவகப்படுத்த பட்டவை
என்று பொருள் தருகின்றதா? மற்றும், இது மரபு வழியிலிருந்து முரண்படுகின்றதா?
குருதேவ்: இல்லவே
இல்லை.பாருங்கள்! ஒரு வெண் கதிரொளி ஒரு பட்டகத்தின் (prism) வழியாகச் செல்லும் போது, ஏழு வண்ணங்களாகப்
பிரிகின்றது. இந்த
ஏழு வண்ணங்களும் ஒரு வானவில்லின் நிறங்கள் ஆகின்றன. அவை அனைத்தும் வேறுபட்டவை. ஒவ்வொன்றும் தனிப்பட்ட பண்பு, அடையாளம், தனிச்சுவை உடையவை
ஆனால் அது ஒரே வானவில். இறைமை வேறுபாடுகளை விரும்புகின்றது. ஆகையால் தான் நம்மை எல்லாம், பல்வேறு விதமாகப்
படைத்திருக்கின்றார். ஒரே ராணுவ உடையில்,இருப்பார் என்று எதிர்பார்க்காதீர்கள்.கடவுளும், அவன் அல்லது அவள்
வித விதமான ஆடைகளை அணிய விரும்பி இருக்கின்றார்கள்.
ஒருவர் என்னிடம்,
"ஏன் இரவோடிரவாகக் குழந்தைகளின்
காலுறைகளில் கிறித்துமஸ் பரிசுகளை நிரப்புவதாக நம்பப்படும் குழந்தை நட்புத்
தெய்வம் (Santa Clause)
பெண்ணாக
இருக்கக் கூடாது என்று கேட்டார். அதற்கு நான்,"
அது
இயலாத காரியம், ஏனெனில் அவள் ஒவ்வொரு ஆண்டும்
மாறுதல் இல்லாத ஒரே ஆடையை அணிந்து கொள்ள விரும்ப மாட்டாள்" என்றேன். புது
நாகரிகத்தையே விரும்புவாள். கடவுள் ஆண் மட்டுமல்ல பெண்ணும் கூட. ஆனால்,
கவனத்தில்
கொள்ளுங்கள், ஒரே ஒளி,
ஒரே பரமாத்மா. பரமாத்மா ஒன்று தான், தேவதைகள்
(கடவுளர்கள்) பல்வேறு வகை .இதுவும் உண்மை, அதுவும்
உண்மை. இதுவும்
சரி, அதுவும் சரி.
சக்திச் சொட்டுப் பௌதீக இயல் (Quantum Physics) அனைத்தும் ஒன்றே என்று கூறுகின்றது. வேதியியலின் தனிம
அட்டவணை, ( Periodic Table) அனைத்து
மூலப்பொருட்களும் வேறுபட்டவை என்று கூறுகின்றது. இரும்பு தங்கத்திலிருந்து வேறுபட்ட ஒன்று, தங்கம்
வெள்ளியிலிருந்து வேறுபட்ட ஒன்று, வெள்ளி,யுரேனியமிலிருந்து
வேறுபட்டது. இத் தனிம அட்டவணையும் சரியானதே. சக்திச்சொட்டுப் பௌதீக இயல்
கூற்றுப்படி, திடப்பொருள் எதுவுமே கிடையாது, அனைத்துமே அதிர்வலை
இயக்கம் தான் என்பதும் சரியானதுதான். புரிந்ததா?
இந்தத் தத்துவத்தைப் புரிந்து கொள்ளமுடியவில்லை என்றால், நீங்கள், அறிவியலுக்குச்
செல்ல வேண்டும். அறிவியல் மூலம் இத்தத்துவத்தை புரிந்து கொள்ள முடியும்.
கே:
ஆழ்ந்த
ஞானத்தில் ஒன்றிப் போகும்பொழுது ஏன் அழுகின்றோம் ?
தங்களது உரைகளைக் கேட்கும் போது எனக்கு
இவ்வாறு நிகழ்கின்றது குருதேவ் !
குருதேவ்: தர்ம சாஸ்த்ரங்களில் கூட இது எழுதப்பட்டிருக்கின்றது. மிகுந்த அன்புக்குரியவரை காணும்பொழுது, உள்ளன்பு
தூண்டப்பட்டு, இதயத்தின்
முடிச்சுக்கள் அவிழ்ந்து, இதயம் திறந்து மலர்ந்து, சந்தேகங்கள் அனைத்தும் மறைந்து, கண்களில் நீர்
பெருகுகின்றது. இதயம் திறக்கும் போது அது ஆழ்ந்து உணரப்படுகின்றது. அது ஒரு அனுபவம்
அல்லவா? உங்கள் இதயத்தை ஏதேனும் தொடும்போது சந்தேகங்கள்
மறைந்து விடுகின்றன. உணர்வுகள் பொங்கி, நன்றியறிதலுடன்
கண்ணீர் பெருகுகின்றது. இது இங்கு சாதரணமாக
நிகழக் கூடியது தான்.
கே:
குருதேவ்!
பெயரை அல்லது பெயரின் எழுத்துக்களை மாற்றிக் கொள்வதன் மூலம்
விதியை மாற்ற முடியுமா?
குருதேவ்: சில எண் ஜோதிடர்கள் இதைக் கூறுகின்றார்கள். ஆனால் நீங்கள்
பெயருக்கும் அப்பாற்பட்டவர். பெயரை மாற்றிக் கொள்வது, சில குறிப்பிட்ட கற்களை அணிந்து கொள்வது இவற்றின் மூலம் விதியை மாற்ற
முடியுமா? முடியாது. உங்களது
மெய்யுணர்வு உங்களுடைய விதியை மாற்றலாம். உங்களது உணர்வுகள் தூய்மையாகவும், உங்கள் இதயம்
அன்பும் பிரார்த்தனையும் கூடியதாகவும் இருந்தால், அதாவது தியானம், தொண்டு இவற்றின் மூலம் உங்களது விதியை மாற்ற
முடியும்.
கே:
குருதேவ்!
அனன்ய சரண் பாவ ( ஒரு முனைப்பட்ட பக்தி) என்றால் என்ன? அதை ஒருவன் எவ்வாறு
அடைய முடியும்?
குருதேவ்: அதை அடைவதற்கான முயற்சிச் சுழலில் இறங்காதீர்கள். அது ஏற்கனவே
உங்களுக்கு உள்ளேயே இருப்பதை அறியுங்கள். ஆன்மீக வணிகம் செய்ய வேண்டாம். சில சமயங்களில்
சிலர், இந்த இடத்திற்கு
ஒரு கறுப்புப் பையை எடுத்து வாருங்கள், எல்லா விதமான அதிர்ஷ்டமும் அதிகாரமும் கிட்டும்
என்றெல்லாம் கூறுவார்கள். பேராசை
கொண்டவர்கள் இது போன்ற விஷயங்களில் ஈடுபடுவார்கள். அதிலெல்லாம்
சிக்கிக் கொள்ளாதீர்கள்.
நான் சென்ற முறை டெல்லிக்குச் சென்றிருந்த போது,நமது வாழும்கலை
ஆசிரியர்கள் இரண்டு பேர் என்னிடம், " குருதேவ்! ஒரு சன்யாசி இங்கு மக்களை
ஆசீர்வதிக்கின்றார். அவரது ஆசிகளைப் பெறச் செல்லும்போது, ஒரு கறுப்புப் பையை
எடுத்துச் செல்ல வேண்டும். அப்போது அவர்கள் விரும்பியதெல்லாம் நடக்கின்றன. எல்லோரும் அவ்வாறு அவரிடம் செல்கிறார்கள் ''.என்று கூறினார்கள்.
நான்,
"இது
ஒன்றும் இல்லை. குறைந்த கால அளவே இது வேலை செய்யும். நீங்கள்
கவலைப் படாமல் தியானம் கற்றுக் கொடுப்பதைத் தொடருங்கள்.அங்கு செல்பவர்கள் எல்லாம், விரைவிலேயே
திரும்பி வருவார்கள்" என்று கூறினேன். நம்முடைய மன உறுதியே எல்லாவற்றையும்
நிறைவேற்றும். தியானம், தொண்டு சத்சங்கம் இவற்றையே தொடர்ந்து பின்பற்றுங்கள். இதுதான் அனன்ய சரண் பாவ (ஒரு முனைப்பட்ட
பக்தி ) இத்தகைய
சித்திகளைக் கொண்ட ஒருவரைப் பற்றி யாரேனும் உங்களிடம் கூறி, அழைத்தால், நீங்கள் அவர்களிடம், " அப்படியா? நான் தொலைவில்
இருந்தே அவரை வணங்குகின்றேன் " என்று கூறி
விடுங்கள்.
DSN:
"தூர் சே நமஸ்கார்”- (தொலைவில் இருந்தே வணங்குகின்றேன்) என்று கூறி
விடுங்கள். எல்லோரையுமே வணங்குங்கள். ஒவ்வொருவரிடமும் சில நற்குணங்களும் சில தீய குணங்களும் இருக்கும். எது எங்கே என்று தெரியாது. ஏன் ஒருவரை கண்டனம் செய்ய வேண்டும்? நாம் ஏன்
ஒருவரை மதிப்பீடு செய்ய வேண்டும்? வணங்குங்கள்.
ஆனால்
அண்மையில் செல்ல வேண்டாம். நாம் ஒரு பாதையில்
சென்று கொண்டிருக்கின்றோம், இதுவே நமக்கு வேண்டியதை அளிக்கின்றது.
இதுதான்
அனன்ய சரண் பாவ் (ஒரு முனைப்பட்ட பக்தி ).
நாம்
வேண்டுவது கிடைக்கின்றது, இனியும் கிடைக்கும், இந்த நம்பிக்கைதான்.
கே:
குருதேவ்!
மகாபாரதத்தில் பல போர் வீரர்கள் தவறான முறையில் பாண்டவர்களால் கொல்லப்பட்டனர். இதன் காரணம் என்ன? மோசமானவை நடப்பதும்
தெய்வீக விருப்பச் செயல் தானா?
குருதேவ்: ஆம். மகாபாரதம் ஒரு அழகான கதை,
குறியீடானதும்
கூட. ஏதோ முற்காலத்தில் நடந்து முடிந்த கதை என்று எண்ணாதீர்கள், அது ஒவ்வொரு நாளும்
, முக்கியமாக நமது
நாட்டில், நடந்து
கொண்டிருக்கின்றது. பல சகுனிகள் இருக்கின்றார்கள். 5220 ஆண்டுகளாக இந்த காப்பியம், இந்தியாவில் மட்டுமல்லாது, மலேசியா, சீனா,ஸ்ரீலங்கா, இந்தோனேசியா, மற்றும்ஆஸ்திரேலியாவிலும் கூட கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை
ஏற்படுத்தியிருக்கின்றது என்பது ஆச்சர்யமானது.
ஆஸ்திரேலியா என்பது ஒரு சமஸ்க்ருத சொல் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆஸ்திரேலியா என்னும் சொல்லுக்கு சமஸ்க்ருதத்தைத்
தவிர வேறெந்த மொழியிலும் பொருள் கிடையாது.
அஸ்த்ராலயா என்றால், ஆயதங்களை வைக்கும்
இடம் என்பதாகும். அவர்களிடம் அணு ஆயுதங்களைப் போன்ற சக்திமிகுந்த ஆயுதங்கள்
இருந்தன. ஆதலால்தான்
ஆஸ்திரேலியாவின் மையப்பகுதி பாலைவனமாக உள்ளது.
அங்கு
எதுவும் விளைவதில்லை. இப்பகுதி
அஸ்த்ராலயா என்று அழைக்கப் பட்டு வந்தது.
இது
மகாபாரதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வந்த போது, இந்த நாட்டின்
கலாசாரம் மிகுந்த வலுவுள்ளது என்று கருதினர்.
அதை
அழித்தாலொழிய இந்நாட்டை ஆள முடியாது என்று உணர்ந்தனர்.
மெக்காலே
பிரபு, லண்டனுக்குச்
சென்று, அரசி
எலிசபெத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில்," இந்தியா முழுவதும்
நான் பயணம் செய்து கவனித்ததில், பிச்சை எடுப்பவன், திருடன் என்று எவரையும் காணவில்லை. மிகுந்த செல்வம், உயர்ந்த அறநெறிகள், பண்பாற்றல் மிகுந்த
மக்கள், ஆகியவை
நிறைந்த இந்நாட்டின் முதுகெலும்பான ஆன்மீக
கலாசாரத் தொன்மையை உடைத்தால் மட்டுமே இந்நாட்டைக் கைப்பற்றுவது என்பது
இயலும்" என்று எழுதி இருந்தார். அதிலிருந்து ஆங்கிலேயர், மக்களை ஒடுக்கும் சட்ட திட்டங்களைக் கொண்டு வந்து அவர்களது நெறிமுறைகளை
அழித்தனர்.
நூற்றுக்கணக்கான பனை ஓலைச் சுவடிகள் ஜெர்மனியில் உள்ள டுபிங்கென்
பல்கலைகழகம், ஹம்பர்க் பலகலைக்
கழகம் ஆகியவற்றில் காணலாம். இந்தியாவிலிருந்து
எடுத்துச் செல்லப் பட்ட ஏராளமான சுவடிகள் இங்கிலாந்தில் உள்ளன.
கே:
குருதேவ்!
பகவத்கீதையில், ஸ்ரீ கிருஷ்ணர் செய்யும் பணிகள் அனைத்தும் என்னுடையவையாக கருதிச் செய்
என்று கூறுகின்றார். என்னுடைய வேலையையும் அன்றாடப் பணிகளையும் எவ்வாறு இறைவனது
பணிகளாகக் கருதிச் செய்ய முடியும்?
குருதேவ்: எது செய்தாலும் அதில் தெய்வீகத் தன்மையை இணைவித்துச் செய்வது என்பது
உங்களது விருப்பம். எந்தப் பணியானாலும், சுயநலம் இல்லாமல், உங்களது சுய
இனபத்திற்கு என்று இல்லாமல், பிறர் நலன் கருதி
செய்யப் படுமானால் அது புனிதமானது. இவ்வாறு மனநிலை
உருவாக்குவதற்கு முயற்சி செய்து உங்களது நேரத்தை வீணாக்காதீர்கள். இயல்பாக இருங்கள்.
கே:
குருதேவ்!
நான் திருமணம் செய்து கொண்டால், லௌகீக விஷயங்களில் சிக்கிக் கொண்டு
ஆன்மீகத்திலிருந்து விலகிச் சென்று விடுவேன் என்று தோன்றுகின்றது. ஞான வழியை
தேடும் ஒருவன் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா அல்லது வேண்டாமா ?
குருதேவ்: என்னைத் தர்மசங்கடத்தில் வைக்கின்றீர்கள். நான் எது ஒன்றைக்
கூறினாலும், இதே கேள்வியை வேறு
விதமாகக் கேட்பீர்கள். திருமணம் செய்து
கொள்வதும், கொள்ளாததும் உங்கள்
தனிப் பட்ட விருப்பம். இரண்டுமே
சரிதான். இங்குள்ள பலரைப் போன்று திருமண வாழ்வில் ஈடுபட்டு
ஆன்மீகத்தையும் கடைப் பிடிக்கலாம். ஆயினும், உங்களுக்குப் பெரிய
குடும்பம் வேண்டுமானால், உலக மக்களின்
நலனுக்கு உழைக்க விரும்பினால் அதுவும் மிகவும் சிறப்பானது. ஆனால் ஒன்று நான் கூற
விரும்புகிறேன். திருமணம் செய்து
கொண்டாலும் இல்லையென்றாலும் மகிழ்ச்சியாக இருங்கள். திருமணம் செய்து
கொண்டு மகிழ்ச்சியற்று இருப்பவர்களும், தனிமையில் மகிழ்ச்சியற்று இருப்பவர்களும் உள்ளனர். இவற்றில் எது ஒன்றிலும் வீழ்ந்து விடாதீர்கள். இது முக்கியம். மணமாகாமல்
மகிழ்ச்சியாக இருப்பவர்கள் திருமணமாகி மகிழ்ச்சியாக இருப்பவர்கள் ஆகிய இரண்டு
பிரிவில் எதை வேண்டுமானாலும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
கே:
குருதேவ்! எனக்கு இலவச அறிவுரைகள் கூறுகின்றனர். ஒவ்வொருவரும்
எனக்கு ஆசிரியராக இருக்க முயல்கின்றனர்.
கேட்காமலேயே எனக்கு அறிவுரைகள் கிடைக்கின்றன. எந்த அறிவுரையை நான் ஏற்றுக்கொள்ள
வேண்டும்,
எதை
ஏற்றுக்கொள்ள வேண்டாம்?
குருதேவ்: இப்போது மட்டுமல்ல, தொடர்ந்து பல
ஆண்டுகளாகவே இது நிகழ்ந்து வருகின்றது. எல்லோர்
சொல்வதையும் கேட்டுக் கொண்டு, எதை செய்ய விரும்புகிறோமோ அதை செய்ய வேண்டும்.
காதுகளுக்கு
மூடி இல்லை. அவை திறந்திருக்கின்றன. ஏன்? எல்லாவற்றையும்
கேட்கலாம். ஆனால் கண்களுக்கு இமைகள் மூடிகளாக உள்ளன. அதனால் எதைப் பார்க்க
விரும்புகிறீர்களோ அதை மட்டுமே காணலாம். காதுகள் அவ்வாறு
இல்லை. எனவே எல்லாவற்றையும் கேட்டுக் கொள்ளுங்கள், ஆனால் மிக ஆழமாக
அதை உள்வாங்கிக் கொள்ளாதீர்கள். எல்லோரும் இலவச
அறிவுரை வழங்குகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு விட்டீர்கள், அது போதும்.