பிரார்த்தனையின் சாரம்........


1- டிசம்பர்- 2012 -பெங்களூர் - இந்தியா

இன்று கனகதாசர் ஜெயந்தி தினம்.

குருதேவர்: இந்தியாவில் ஒரு பெரிய சாது இருந்தார். 12ம் நூற்றாண்டில் கர்நாடக மாநிலத்தில் ஒரு மாடு மேய்ப்பவராக இருந்தார். அவர் கனகதாசர் என்று அழைக்கப் பட்டார். 12ம் நூற்றாண்டில் இந்தியாவில் பக்தி அலை பெருக்கெடுத்தது. இந்தியாவில் மட்டுமல்ல. உலகம் முழுவதும் அப்படி இருந்தது. என் நினைவின்படி அசீசியின் ஃப்ரான்ஸிஸ்கோ என்பவர் (இத்தாலியின் புனித ஃப்ரான்ஸிஸ் என்று அழைக்கப் படுபவர்) அந்த காலத்தில், 12 – 13 ம் நூற்றாண்டுகளுக்கு இடையில் வாழ்ந்தவர்.

கனகதாசர் பகவான் கிருஷ்ணரின் தீவிர பக்தராக இருந்தார்.அவர் கன்னட மொழியில் பல அருமையான பாடல்களை எழுதியிருக்கிறார். கர்நாடகாவில் இப்பாடல்களை எல்லோரும் அறிவார்கள்.சரித்திரத்தில் கிடைத்த தகவலின் படி அவர் ஏழையாகவும், தாழ்ந்த சாதியில் பிறந்தவராதலால்,, கோவிலின் உள்ளே செல்ல மக்கள் அனுமதிக்க வில்லை. அவர் கோயிலின் வெளியே இருந்தபடியே பிரார்த்தனை செய்தார்.அந்தக் காலத்தில் கோவிலின் உள்ளே செல்ல செல்வந்தர்களுக்கும், உயர்ந்த சாதி மக்களுக்கும் மட்டுமே அனுமதி இருந்தது.


வரலாற்றின்படி,கனகதாசரின் பிரார்த்தனையைக் கேட்டு கோவிலின் சுவற்றை உடைத்து, பகவான் கிருஷ்ணர் கனகதாசர் நின்ற திசையில் திரும்பி அவருக்கு தரிசனம் அளித்ததாகத் தெரிகிறது. கோவிலின் உள்ளே பகவானுக்குப் பூஜை செய்ய வந்த மக்கள் திடுக்கிட்டார்கள். இந்தக் கதை இங்குள்ள அனைவருக்கும் தெரிந்திருக்கும்.இன்றும் உடுப்பி கிருஷ்ணன் கோவிலில் பகவான் கிருஷ்ணரின் சிலை மறு பக்கம் திரும்பியிருக்கும். அங்கும் சுவர் உடைந்திருக்கும். எல்லோரும் உடைந்த சுவர் மூலமே பகவானைத் தரிசிக்க வேண்டும். உடைந்த சுவரை கனகதாசரின் ஜன்னல் என்றும், அதன் பின்னால் தான் கனகதாசர் நின்று பகவானைப் பிரார்த்தனை செய்தார் என்றும் சொல்கிறார்கள்.

அந்த நிகழ்ச்சிக்குப் பின், சாதி,செல்வநிலையில் உள்ள வித்தியாசங்களைப் பாராமல் யாவரும் கோவிலுக்குச் செல்ல அனுமதி அளித்தார்கள் வரலாற்றின் படி, பலர் சாதி வித்தியாசம் செல்வநிலையில் உயர்வு தாழ்வுகளை மறக்கப் போராடினார்கள்.அதில் கனகதாசரும் ஒருவர்.அவர் எல்லோருடைய பெருமதிப்பையும் பெற்றார்.இது கனகதாசரின் கதை.

கேள்வி: இந்துக்களுக்குப் பலவகையான பிரார்த்தனைகள் இருக்கின்றன.சில தேவிக்காக, சில விஷ்ணுவுக்காக. ஒவ்வொரு பிரார்த்தனையிலும்,இதை தினந்தோறும் படித்து வந்தால் நிறைய நன்மைகள் கிடைக்கும் என்று சொல்லப் படுகிறது.எல்லாப் பிரார்த்தனைகளிலும் அப்படி சொல்லியிருப்பதால் நான் எதைப் படிக்க வேண்டும்.இதை அறிவது எப்படி?

குருதேவர்:முதலில் கடவுள் ஒருவர் தான் என்று புரிந்து கொள்.நீ எந்தப் பெயர் சொல்லி அழைத்தாலும் அவர் ஒருவரே.

இரண்டாவது: கடவுள் தன் பெயரைக் கேட்டு (பக்திப் பாடல்களைக் கேட்டு) மகிழ்கிறார் என்பது உண்மையல்ல.நீ உன் ஜன்னல் கதவைத் திறக்கும் போது வீட்டுக்குள் சூரிய ஒளி வருகிறது அல்லவா?நீ ஜன்னலைத் திறக்கா விட்டால் சூரியனுக்குக் கோபம் வரும் என்று நினைக்கிறாயா?சூரியன் தன் ஒளியைக் கொடுப்பதை நிறுத்தி விடுமா? இல்லை! உபவாசம் இருந்து கடவுளை சந்தோஷப் படுத்தலாம் என்று நினைப்பவர்கள் முட்டாள்கள். இது மூடத்தனமாகும்.

நீ பிரார்த்தனை செய்வதால் கடவுள் உனக்கு விலைமதிப்பில்லாத ஒன்றைக் கொடுப்பார் என்று நினைக்க வேண்டாம்.ஆம்.நீ பிரார்த்தனை செய்து வேண்டும் போது, அதன் பலன் உனக்குக் கட்டாயம் கிடைக்கும் என்பது இயற்கையின் விதி.எப்படி ஜன்னல் கதவு திறக்கும் போது சூரிய ஒளி வீட்டுக்குள் வருமோ, அதே போல் பிரார்த்தனையால் உனக்கு நன்மை கிடைக்கும்.
கடவுள் நம்மை மிகவும் நேசிக்கிறார் என்பதைப் பார்.நிபந்தனை இல்லாமல் கடவுள் நம்மை நேசிக்கிறது போல் நாமும் அவரிடம் அன்பு செலுத்துவதற்குப் பெயர் தான் பக்தி.இது தான் பிரார்த்தனையின் சாரம்.

பூஜை என்பது பூரணத்துவத்திலிருந்து உருவானது.நம் இதயம் எவ்வளவு நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பதைக் காண்பிக்க நாம் பூஜை செய்கிறோம்.“அன்பான கடவுளே, நான் உங்களுக்கு மிகவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.உங்கள் அருளை உணர்கிறேன்.நீ எனக்கு வேண்டியதை நிறைய அளவில் தந்திருக்கிறாய்” என்ற உணர்ச்சியைக் காட்ட நாம் பூஜை செய்கிறோம். அப்படிப்பட்ட உணர்வு நமக்குள் எழும்போது, நம் செயல்கள் அவ்வுணர்ச்சிகளோடு இணையும்.ஆழ்ந்த உணர்ச்சி பூர்வமான நன்றியைத் தெரிவிக்காமல் இருக்க முடியாது.அதுவும் சில சடங்குகள் இல்லாமல் பூஜை செய்ய முடியாது.(பூஜையின் போது செய்யும் வரிசைக் கிரமமான சடங்குகள்).

உதாரணத்துக்கு நாம் நண்பர்களைக் கண்டால், அவர் கையைக் குலுக்கியோ, அவர் முதுகில் தட்டியோ நம் அன்பைத் தெரிவிக்கிறோம்.முதுகில் தட்டுவது பஞ்சாப் மாநிலத்தில் வழக்கம்.சில சமயம் மிக பலமாக அவர்கள் தட்டுவதால் உனக்கு வலிக்கும். (சிரிப்பு) இப்படி நம் அன்பைத் தெரிவிக்க பல வழிகள் இருக்கின்றன.அதே போல் ஒரு பக்தன் கடவுளின் தெய்வீக அன்பில் நனைந்திருக்கும் போது அவன் பதிலுக்கு தன் அன்பை கடவுளுக்குக் காட்டுவதற்காக ஏதாவது செய்ய விழைகிறான்.அதனால் தான் நம் முன்னோர்கள் பல சடங்குகளுடன் பூஜை செய்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தினார்கள்.

பூஜையின் போது,கடவுள் உனக்குக் கொடுத்தவைகளை அவருக்கே தருவது போல் நடந்து கொள்கிறாய்.கடவுள் மலர்களை அளித்திருக்கிறார் நீ அவருக்கு மலர்களை சமர்ப்பிக்கிறாய். உன் இதயமும் இந்த மலரைப் போல் அவரை நோக்கி மலரவேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறாய்.
கடவுள் நமக்கு நீர் அளிக்கிறார்.நாம் அதை அவருக்கு அர்ப்பணித்து நீரைப் போல் எல்லோருக்கும் குளிர்ச்சியை அளித்து மிகவும் பணிவாக இருக்க வேண்டும் என வேண்டுகிறோம்.நீரைப் போல் வாழ்வில் நமக்கு ஒரு அடிப்படை வேண்டும்.(நீர் நம் வாழ்வுக்கு இன்றியமையாதது).நம் வாழ்வும் தூய்மையான நீரைப் போலிருக்க வேண்டுகிறோம்.

நாம் கடவுளுக்கு அட்க்ஷதை (முனை உடையாத அரிசி) சமர்ப்பிக்கிறோம்.அது ஒரு முடிவில்லாத மேலும் மேலும் வளர்வதற்கான அடையாளம்.ஒரு விதையிலிருந்து பல ஆயிரம் தானியங்கள் விளைகின்றன) அரிசி இல்லாமல் போவதே இல்லை.விஞ்ஞானிகள் சக்தியை அழிக்கவோ, உருவாக்கவோ முடியாது என்பார்கள்.அரிசிக்கான நெல்லும் அப்படித்தான்.அது எப்போதுமே அழிவதில்லை.வீணாவதில்லை.நாம் அரிசியைச் சாப்பிடுவதால்,அது நம் உடலுக்கு வேண்டிய சக்தியையும் போஷாக்கையும் அளிக்கிறது. உடலில் அதன் சக்தி சேர்ந்துவிடும். நாம் இறந்த பின் நம் உடல் எரிக்கப் பட்டு மண்ணோடு கரைந்து விடும்.அது உரமாக மாறி சில ஆண்டுகளுக்குப் பின் நெல்லாக விளைந்து நாம் உண்ணுவதற்கான அரிசி மீண்டும் கிடைக்கும்., நம் உடல் எரிந்து சாம்பலாகி, நீரில் கரைக்கும் போது அது பல மீன்களுக்கு உணவாகிறது.அந்த மீன்கள் பல மனிதர்களுக்கு உணவாகின்றன.இவ்வாறு மீண்டும் மீண்டும் இயற்கையில் நடக்கிறது. இறந்த உடலை மண்ணோடு புதைக்கும் போதும் 5 விதமான மூலப் பொருட்கள் மண்ணோடு கலந்து ஒன்றாகி விடும்.

அதே போல் நாம் சந்தனம் அளித்து அதன் வாசனை எல்லா இடமும் பரவுவதை உணர்ந்து மகிழ்கிறோம்.நம் ஐம் புலன்களும் நமக்கு இயற்கையில் கிடைக்கும் பொருட்களால் இன்ப மடைகின்றன.கண்கள், காதுகள், மூக்கு, நாக்கு மற்றும் நம் தோல் மூலம் பல பொருட்களின் இன்பத்தை நாம் அனுபவிக்கிறோம்.நம் புலன்களுக்கு இன்பமளிக்கும் எல்லா விதமான பொருட்களையும், பூஜையின் போது நான் இறைவனுக்கு சமர்ப்பிக்கிறோம்.பூஜை மணியிலிருந்து எழும் ஓசை நம் மனதை மற்ற எண்ணங்களிலிருந்து விடுவிக்கும்.மனதை தற்சமயத்தில் கொண்டு வரும்.மனதை ஒருமுகப் படுத்த பல விதமான தாளவாத்தியங்கள், தாரை (வாயினால் ஊதும் வாத்தியம்), கைத்தாளம் முதலியவைகளை பூஜையின் போது வாசிப்பார்கள்.அதிகமான ஓசைகள் மனதை தற்சமயத்துக்குக் கொண்டு வந்து பூஜையில் ஈடு பட வைக்கும்.

கற்பூரத்தை எடுத்து ஆரத்தி எடுக்க உபயோகிக்கிறோம்.கடவுள் சூரியனையும் சந்திரனையும் பூமியைச் சுற்ற விடுவது போல் (நமக்குத் தோன்றுவது) தெய்வச் சிலைக்கும் முன் கற்பூரம் ஏற்றி ஆரத்தி எடுத்து மகிழ்கிறோம்.கடவுள் நமக்குத் தந்திருக்கும் நல் வாழ்வின் ஒளி எப்போதும் நம்மை விட்டு விலகக் கூடாது என்று வேண்டி ஆரத்தி எடுக்கிறோம்.நம் வாழ்க்கை கடவுளை மையமாக வைத்தே சுழல்கிறது என்பதையும் இது குறிக்கும்.இப்படிப் பட்ட ஆழ்ந்த உணர்ச்சிகளோடு நாம் இறைவனுக்கு ஆரத்தி எடுக்கிறோம்.இந்தியா முழுவது கற்பூர ஆரத்தி எடுக்கும் வழக்கம் இருக்கிறது.இதன் உட்கருத்து பலருக்குக் தெரியாது.

ஆரத்தி என்றால் உயர்ந்த, அளவுக்கடங்காத ஆனந்தம் என்று பொருள்.கடவுள் தான் அளவுக் கடங்காத ஆனந்தத்தை அளிப்பவர்.நம் இதயம் இப்படிப்பட்ட தீவிரமான அன்பாலும், பக்தியாலும் நிரம்பி வழியும் போது, நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் அதில் முழுகி இருக்கும். உண்மையில் அது தான் ஆரத்தி.ஆரத்தி உங்களுக்கு முழு திருப்தியைக் கொடுக்கும். அதை இரண்டு பிரிவாக ஆ – ரதி என்று பிரிக்கலாம்.ரதி என்றால் மகிழ்ச்சி, பரமானந்தம்,ஆனந்தக் களிப்பு.எனவே நாம் அப்படிப் பட்ட பக்தி, பரவச நிலையில் இருக்கும் போது அதை ஆரத்தி என்று சொல்லலாம்.நாம் கடவுளுக்கு ஆரத்தி எடுத்து நமக்கு அப்படிப் பட்ட அனுபவத்தைக் கொடுக்க வேண்டுகிறோம்.நாம் எங்கு நோக்கினாலும் கடவுள் தெரிகிறார்.இதன் பெயர் தான் பூஜை.பூஜை என்பது கடவுளைப் பாராட்டுவதற்கோ, அல்லது கடவுளை சந்தோஷப் படுத்துவதற்கோ செய்யும் செயல் அல்ல.

ஆனால் நம் நாட்டில் மக்கள் கடவுள் சிலைகளுக்கு மக்கள் இனிப்புப் பண்டங்களை ஊட்டுகிறார்கள்.முகமே தெரியாதபடி அலங்கரிக்கிறார்கள்.நீங்கள் சிலையின் கண், மூக்கு, வாய் எதையுமே பார்க்க முடியாது.மேலும் கடவுள் உருவப் படங்களுக்கு மலர் சாத்தும் போது குற்ற உணர்ச்சியோடு செய்கிறார்கள்.அனுமாருக்குப் பூ சாத்தினால் சிவன் கோபித்துக் கொள்வார், தங்களைத் தண்டிப்பார் என்று மனதில் நினைக்கிறார்கள்.எல்லா விதமான மூட நம்பிக்கைகளும் மனதில் தோன்றுகின்றன.அதனால் தான் உனக்கென்று ஒரு இஷ்ட தேவதை இருக்க வேண்டுமென்கிறார்கள். (பாரம்பரியமாக ஒரு கடவுளை மட்டும் வணங்குவது.மற்ற தெய்வங்கள் உங்கள் இஷ்ட தெய்வத்தின் வேறு வேறு தோற்றங்கள் என்று நினைக்கலாம்).இப்படிச் செய்வதன் சாரம் என்னவென்றால், எல்லாவற்றிலும் ஒரே கடவுளைக் காண்பது.எல்லோரும் அந்தக் கடவுளின் ஒரு பகுதி என்று உணர்வது.

கேள்வி: குருதேவா!பெண் ரிஷிகளைப் பற்றிச் சொல்வீர்களா?

குருதேவர்: ஆம்.சில பெண் ரிஷிகள் இருக்கிறார்கள்.இன்னும் நிறைய பேர் வர இடமிருக்கிறது.சில பெண் ரிஷிகளே இருந்திருக்கிறார்கள்.

மீரா அப்படி ஒரு சிறந்த பக்தை.தமிழ் நாட்டில் ஒரு பெண்மணி இருந்தார்.அவர் பெயர் ஔவையார். அவரை தமிழ் இலக்கியத்தின் தாய் என்று நினைவு கூர்கிறார்கள்.தமிழ் படிப்பவர்களில் ஔவையாரை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.இங்கு எவ்வளவு பேர் தமிழ் நாட்டில் இருந்து வந்திருக்கிறீர்கள்?(சிலர் கைகளை உயர்த்துகிறார்கள்).

(பார்வையாளர்களில் ஒருவர் ஔவையார் இயற்றிய “ஆத்திச்சூடி”யின் பெயரைச் சொல்கிறார்)
ஆத்திச்சூடி.அதில் எல்லா எழுத்துக்களும் இருக்கும் படி செய்யுள்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன.‘ஏ’ ஃபார் ஆப்பிள், ‘பி’ ஃபார் பால், ‘சி’ ஃபார் காட் என்று ஆங்கிலத்தில் சொல்வது போல், ஔவையார் ஒவ்வொரு தமிழ் எழுத்துக்கும் ஒரு கருத்துள்ள செய்யுளை எழுதியிருக்கிறார்.எனவே குழந்தைப் பருவத்திலேயே நற்குணங்களைப் பற்றி மாணவர்கள் அறிகிறார்கள். இதைத் தான் புத்திசாலியான தமிழ் இலக்கியத் தாய் ஔவையார் செய்தார்.
ஔவையாரின் கதை மிகவும் ருசிகரமானது.அவர் ஒரு அழகான இளம் பெண்ணாக இருந்தார். அவருடைய பெற்றோர்கள் அவருக்குத் திருமணம் செய்து வைக்க ஆவலாயிருந்தார்கள். ஆனால் அவர் மணம் செய்துகொள்ள விரும்பவில்லை.அந்த நாட்டு அரசர் அவளைப் பார்த்து ஆசைப்பட்டு அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினார்.அந்த நாட்களில் அரசர் சிறப்பான பொருட்களையோ,அழகான பெண்களையோ விரும்பினால், யாரும் மறுக்க முடியாது.

வரலாற்றின்படி, ஔவையார் அவருடைய இஷ்ட தெய்வமான பிள்ளையாரை வேண்டி, திருமணத்தை நிறுத்தக் கோரினார்.கடவுள் ஒருவரானாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு இஷ்ட தெய்வம் உண்டு.கடவுள் ஒருவர்.ஒரு அல்லா;ஒரு பரமாத்மா.ஆனால் அந்த பரமாத்மாவை அழைக்க நீ ஒரு பெயரைத் தேர்ந்தெடுக்கலாம்.அந்தப் பெயர் உனக்குப் பிரியமானதொன்று.அந்தப் பெயருடன் நீ இணைக்கப் படுகிறாய்.

எனவே ஔவையார் பிள்ளையாரை வேண்டி என் தோற்றத்தை ஒரு வயதான மூதாட்டி போல் மாற்றி விடு என்று கேட்டுக் கொண்டார்.அந்த க்ஷணத்திலேயே அவருக்கு வயோதிகத் தோற்றம் கிடைத்து விட்டது என்று சொல்கிறார்கள்.முடி நரைத்து வயோதிகத் தோற்றமடைந்த ஔவையாரை அரசர் மணக்க விரும்பவில்லை.அவர் விருப்பப்படி, ஔவையார் திருமணம் செய்து கொள்ளாமல் தமிழ்த் தாய்க்கு அருந் தொண்டாற்றினார். இதுதான் ஔவையாரின் கதை.

கேள்வி: தயவு செய்து சமர்ப்பணம் செய்வது பற்றிச் சொல்வீர்களா? சமர்ப்பணம் செய்வதால் நான் முட்டாளாகத் தோன்றுகிறேன்.ஏதாவது தீர்மானம் செய்ய வேண்டிய சமயத்தில்,என் கடந்த காலத்தை நினைக்கும் போது,குருதேவர் பார்த்துக் கொள்வார், எல்லாம் அவரே நிகழ்த்தி விடுவார் என்று சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.நான் காரியம் செய்வதை விட்டு எது நடக்க வேண்டுமோ அது அப்படித் தானாகவே நடக்கும் என்று நம்பியிருக்கிறேன்.எனவே நான் முட்டாள் போலாகாமல், சமர்ப்பணம் எப்படிச் செய்வது என்று விளக்க வேண்டுகிறேன்.

குருதேவர்: சங்கல்பமும் (திடமுடிவு எடுப்பது அல்லது ஒரு காரியத்தை விரும்புவது) சமர்ப்பணமும் ஒன்றாக நிகழ்கின்றன.100% உன்னால் முடிந்ததைச் செய்து விட்டு, அதற்கு மேல் ஒன்றும் இயலாது என்ற நிலையில் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

உன்னால் ஆனவற்றைச் செய்து முடித்தவுடன், ஒரு காரியத்தின் முடிவு இப்படி இருக்க வேண்டும் என்ற விருப்பத்தைச் சமர்ப்பணம் செய்து விடு.ஆனால் ஒரு காரியமும் செய்யாமல்,நடக்கிற படி நடக்கட்டும் என்று விடுவதால் பயன் ஒன்றும் இல்லை.நம்மால் முடிந்ததை 100% செய்ய வேண்டும். காரியத்தின் பலன் எப்படிப் பட்டதாக இருந்தாலும் இறைவன் பார்த்துக் கொள்வார் என்று சமர்ப்பணம் செய்ய வேண்டும்.நமக்கு எது நல்லதோ, அது நம்மை வந்தடையும் என்ற உணர்வோடு இறைவனுக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும்.புரிகிறதா? இறைவன் பார்த்துக் கொள்வார் என்று எண்ணி, ஒரு காரியமும் செய்யாமல், “நான் எல்லாவற்றையும் இறைவனுக்குச் சமர்ப்பணம் செய்து விட்டேன். எல்லாம் தானாக (நன்றாக) நடக்கும் என்று எண்ணி உட்கார்ந்திருக்கக் கூடாது.

சித்தாவஸ்தா – காரிய சித்தி - மனதில் எண்ணுவதை அடையும் நிலை மிக மிக மெதுவாக நடக்கும் ஒன்று. அதற்குப் பல நாட்கள் ஆகலாம். உன்னுடைய யோக சாதனைகளை இடைவிடாமல் செய்து வந்து விருப்பு வெறுப்பை ஒழித்து, உன் தேவைகள் ஒன்றும் இல்லாத போது, நைஷ்கர்ம சித்தி நிலையை அடையலாம் என்று சொல்வார்கள். (ஒன்றும் செய்யாமலே விரும்புவதை அடையும் அசாதரணமான திறமை)

அந்த நிலையில் அதிக முயற்சியின்றி நீ செய்யும் காரியங்கள் வெற்றி தரும். நீ விரும்பியதைப் பெறலாம். அந்நிலையை அடையும் வரை நம்முடைய காரியங்களை முழு மனதோடு செய்ய வேண்டும். சித்தாவஸ்தா நிலையில் நீ இருக்கும் போது உன் பக்தி மிகவும் ஆழமானதாக இருக்கும். ஆன்மீகப் பாதையில் முன்னேற்றம் அடைந்து, நீ திருப்தியோடு இருப்பாய். எவ்வளவுக் கெவ்வளவு நாம் திருப்தியோடு இருக்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு காரிய சித்தித் திறமை வளரும்.

காரிய சித்தி என்பது கடந்த காலத்திலோ,வருங்காலத்திலோ இருப்பது அல்ல. அதை நிகழ் காலத்தில் அடைய முடியும்.ஆனால் அப்படிப் பட்ட திறமைகள் திரையால் மறைக்கப் பட்டிருக்கின்றன.மெதுவாக, மெதுவாகத் திரை விலகும் போது, இப்படிப் பட்ட திறமைகள் அதிக முயற்சி இல்லாமல் வெளிப்படும்.

கேள்வி: நான் படித்த ஆன்மீக சம்பந்தமான புத்தகங்களில், எல்லாமே ஒரே பரமாத்மா என்றும் நாம் அதன் ஒரு பகுதி என்றும் சொல்லப்படுகிறது.அப்படியிருக்கும் போது சரணாகதி என்று சொல்வதன் அர்த்தம் என்ன?எல்லாமே ஒன்றாக இருக்கும் போது, நாம் எதை சரணாகதி செய்கிறோம்?யாருக்குச் செய்கிறோம்?

குருதேவர்: ஆம்.நீ சொல்வது சரி.சரணாகதி செய்ய ஒன்றுமே கிடையாது.ஆனால் உன் மனம் நீ பரமாத்மாவிலிருந்து வேறுபட்டவன்,வித்தியாசமானவன்,நான் தனியானவன் என்று எண்ணும் போது, எல்லா விதமான எண்ணங்களையும் கைவிட்டு சரணாகதி செய்து ஓய்வு எடு.வீட்டில் அம்மா இருப்பதை நாம் உணர்வது போல், நமக்கு பரமாத்மா இருக்கிறார் என்று சரணாகதி அடைய வேண்டும்.உன்னிடம் இருக்கும் (இருப்பதாக நினைப்பதை) எதையும் சரணாகதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.புரிந்ததா?

அதனால் தான் 3 வழிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. (கர்ம யோகம் – செயல் வழி செல்வது; பக்தி யோகம் – பக்தி வழி செல்வது; ஞான யோகம் – பரமாத்மாவும் நானும் ஒன்று என்று அறியும் வழி)
“எல்லாமே ஒன்று தான் (பரமாத்மா) இரண்டல்ல (பரமாத்மாவும் ஜீவாத்மாவும் வேறு வேறு அல்ல)” என்பதை அறிவது ஞானயோகம்.ஆனால் இதை மறந்து, நீ தனியானவன் என்று நினைத்தால், நீ எதையோ உன்னுடையது என்று பிடித்து வைத்திருக்கிறாய் என்றால் அதை உன்னால் தாங்க முடியாது.அதை விட்டு விடுகிறேன் என்று நினைப்பது தான் சரணாகதி.

ஒரு நல்ல உதாரணம் சொல்லலாம்.நீ ரயில் வண்டியில் உட்கார்ந்திருக்கும் போது உன் தோள்களில் உன்னுடைய பெட்டி படுக்கைகளைச் சுமந்து கொண்டிருக்கிறாய் என்று வைத்துக் கொள். உன் இருக்கை வசதியாக இருந்தாலும், பெட்டி படுக்கைகளை வைக்க கீழே இடம் இருந்தாலும் நீ அதைத் தூக்கிக் கொண்டு (இது என்னுடையது என்ற எண்ணத்தில், இது என்னை விட்டுப் போய்விடும் என்ற பயத்தில்) இருக்க்கிறாய்.மிகவும் கஷ்டப் படுகிறாய்.யாராவது வந்து “ஏன் உன் சுமைகளைத் தூக்கிக் கொண்டிருக்கிறாய். கீழே வைத்துவிட்டு வசதியாக உட்கார், ஓய்வு எடு.எப்படியிருந்தாலும் ரயில் வண்டி உன்னையும் உன் சுமைகளையும் தூக்கிச் செல்லும் சக்தி வாய்ந்தது” என்று சொல்வார்கள். உனக்கு அப்படிப் பட்ட ஓய்வை அளிப்பது தான் சரணாகதி.

கேள்வி: நான் தேர்ந்தெடுப்பது ஊரார் வழக்கப்படி இல்லாமல் இருந்தால் என்ன செய்யலாம். பொதுவாக எல்லோரும் “நீ கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். குழந்தைகள் பெற்றுக் கொண்டு,சொத்து சுகத்துடன் இருக்க வேண்டும்” என்று சொல்கிறார்கள்.அதை விட்டு விலகி இருக்க விரும்பினால் “நீ செய்வது தவறு” என்று எப்போதும் சுட்டிக் காட்டுகிறார்கள். திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது தவறு என்று எனக்குத் தோன்றவில்லை.ன் விருப்பப்படி நடக்க எனக்கு உரிமை இருக்கிறது.இப்படிப்பட்ட நிலையில் என்ன செய்யலாம்? சமூகத்தையும், குடும்பத்தையும் எதிர்த்து,என் விருப்பப்படி நின்று எப்படி மகிழ்ச்சியோடு இருக்கலாம்?

குருதேவர்: ஆம், இது மிகவும் கடினமானது தான். நீ உன் பெற்றோர்க்கு எடுத்துரைத்து அவர்களை சம்மதிக்க வைக்க வேண்டும்.எல்லோரும் சென்ற வழிப் செல்ல உனக்குப் பிடிக்கவில்லை என்பதை அவர்கள் ஒத்துக் கொள்ள வேண்டும்.

இதில் ஒன்றை நீ தெரிந்து கொள்ள வேண்டும்.இந்த மாதிரி விருப்பங்களில் உனக்கு திறந்த மனம் இருக்க வேண்டும்.பிடிவாதம் கூடாது.திறந்த மனதோடு மற்றவர்கள் சொல்வதைக் கேள்.அது தான் சிறந்தது.

திருமணம், மற்றும் குடும்பத்தில் விட்டுக் கொடுப்பது அவசியம்.என் வழி தான் நல்லது என்று சொல்ல முடியாது.மற்றவர்களின் கருத்தைக் கேட்க வேண்டும்.இரண்டுக்கும் நடுவான வழியில் செல்ல முடியுமா என்று பார்த்துச் செல்ல வேண்டும்.வாழ்க்கை என்பது விட்டுக் கொடுப்பது தான்.திறந்த மனத்தோடு எண்ணிப்பார்.

எதுவானாலும் உன் மகிழ்ச்சியைக் கைவிட வேண்டாம்.திருமணம் ஆகாமல் பலர் தனியாக இருக்கிறார்கள்.எல்லோருமே மகிழ்ச்சியாக இருப்பதில்லை.பல திருமணமானவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதில்லை.இரண்டு சூழ்நிலைகளுமே நல்லது கிடையாது. “திருமணம் செய்து கொண்டாலோ,தனியாக இருந்தாலோ மகிழ்ச்சியாக இருப்பது இன்றியமையாதது” என்று நான் சொல்வேன்.

குழந்தை இல்லாதவர்கள் குழந்தைக்காக ஏங்கி இரவும் பகலும் அழுகிறார்கள். குழந்தைகள் இருந்தும் பலர் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறார்கள்.உன் மகிழ்ச்சியை நிகழ்ச்சிகள் மற்றும் சூழ்நிலைகள் பாதிக்காத படி பார்த்துக் கொள்.நான் அழகாக இருந்தால் மகிழ்ச்சியாக இருப்பேன் அல்லது எனக்கு வயதாகி விட்டதால் மகிழ்ச்சியோடு இருக்க முடியவில்லை என்று எண்ணாதே.எது வந்தாலும் நான் மகிழ்ச்சியோடும் திருப்தியோடும் இருப்பேன் என்று முடிவு செய்து கொள்.

கேள்வி: ஒரு நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்ல விரும்புகிறேன்.ஒரு நாள் நான் இரண்டு வாழைப் பழம் வாங்கி ஒன்றை சாப்பிட்டு விட்டு மற்ற ஒன்றை வைத்திருந்தேன்.ஒரு பிச்சைக்காரனைப் பார்த்த போது, ஒரு பக்கம் அந்தப் பழத்தை அவனுக்குக் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.மற்றொரு எண்ணப் படி அதை மீண்டும் சாப்பிடுவதற்காக வைத்திருக்க வேண்டும் என்று தோன்றியது.பிச்சைக்காரனுக்குக் கொடுக்காமல் அதை வைத்திருந்தேன்.நான் செய்தது தவறா?பசியோடிருந்த பிச்சைக் காரனுக்கு அதைக் கொடுத்திருக்க வேண்டுமா?

குருதேவர்: இப்படித் தான் நடக்கிறது.பலர் நிறைய உணவுப் பொருட்களை வாங்கி ரிப்ரிஜிரேடரில் வைக்கிறார்கள்.சில நாட்களுக்குப் பிறகு அவை கெட்டுப் போய்த் தூக்கி எறிகிறார்கள்.உங்களில் எவ்வளவு பேர் அப்படிச் செய்திருக்கிறீர்கள். (சிலர் கைகளை உயர்த்துகிறார்கள்)உலகம் முழுதும் இப்படிப் பட்ட பழக்கம் இருக்கிறது.

தூக்கி எறியப் படும் உணவுப் பொருள்களில் மூன்றில் ஒரு பங்கு ரிப்ரிஜிரேடரிலிருந்து வருகிறது. நாலில் ஒரு பங்கு கடைகளிலிருந்து கெட்டுப் போய்த் (உபயோகிக்கத் தகுந்த தேதிக்குள் விற்பனை ஆகாததால்) தூக்கி எறியப் படுகின்றன. உணவுப் பொருட்களைத் தேவைக்கு மேல் சேர்த்து வைக்கும் பழக்கம் உலகம் முழுவதிலும் இருக்கிறது.

உனக்குத் தோன்றுவதை நீ செய்யலாம். அந்த க்ஷணத்தில் தோன்றியபடி செய். வைத்திருக்கத் தோன்றினால் வைத்திரு.பசியாக இருப்பவருக்குக் கொடுக்கத் தோன்றினால் கொடுக்கலாம்.எனக்காக வாங்கிய வாழைப் பழத்தை பிறருக்குக் கொடுக்க மாட்டேன் என்ற உறுதியான எண்ணம் வைத்திருக்கத் தேவையில்லை.அதே சமயம் எப்போதும் பிறருக்குக் கொடுக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணமும் நல்லதல்ல.சகஜமாக இரு.சில சமயம் வைத்திருக்கலாம்.சில சமயம் கொடுக்கலாம்.அந்த க்ஷணத்தில் தோன்றியபடி செய். பின்னால் குற்ற உணர்வுக்கு ஆளாக அவசியமில்லை.

கேள்வி: நேற்று ஒரு பெண்மணியை சந்தித்தேன்.அவள் சொல்லிய படி, 20 வருடங்களுக்கு முன் அவளுடைய குருதேவர் அவள் கனவில் வந்து, “நீ இந்த சமுதாயத்தைக் காக்கப் பிறந்திருக்கிறாய்” என்று சொன்னாராம்.அந்தக் கனவு அவளை ஐ.பி.எஸ் ல் (இந்தியக் காவல் துறையில்) சேரத் தூண்டியது.அவள் இத்தனைக்கும் பெரிய விளையாட்டு வீராங்கனையும் இல்லை.அவள் பயிற்சியின் போது அவளுடைய குருதேவர் உதவி செய்ததாகச் சொன்னாள்.அவள் இன்று இந்தியாவிலேயே மிகவும் பெயர் பெற்ற குற்றவாளிகள் பயப்படும் காவல் அதிகாரியாகப் பணியாற்றுகிறாள்.இப்படி உண்மையில் நிகழ முடியுமா?ஒரு சக்தி ஒருவரை இப்படித் தூண்டி இப்படிப்பட்ட நிலையை அடைய உதவுமா?

குருதேவர்: கனவுகள் ஐந்து வகையானவை.

முதல் வகை உன் ஆழ்மனத்தின் விருப்பங்கள் பயங்கள் மூலம் எழக் கூடியவை.

இரண்டாவது வகைக் கனவு உனக்கு ஏற்கனவே நேர்ந்த அனுபவங்களைக் கொண்டிருக்கும்.
மூன்றாவது வகைக் கனவு உன் சுய அறிவினால் (வரப்போகும் நிகழ்ச்சிகளைப் பற்றி அறியும் சக்தி) வரும் கனவு. வருங்காலத்தில்நிகழப் போகும் சம்பவங்கள் உன் கனவில் வரக்கூடும்.

நான்காம் வகைக் கனவுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.அவை நீ தங்கி இருக்கும் இடத்தைப் பொறுத்திருக்கும்.ஒரு வேளை நீ ஒரிஸ்ஸாவுக்குப் போய் ஒரு தங்கும் விடுதியிலோ, அல்லது ஒருவரின் இல்லத்திலோ தங்கியிருக்கும் போது உன் கனவில் ஒரியா மொழியைக் கேட்பாய்.நீ வங்காளத்துக்குச் சென்று தங்கும் போது வங்காள மொழியைக் கேட்பாய்.உனக்கு அந்த மொழிகள் தெரிந்திருக்க அவசியமில்லை.இப்படிப் பட்ட அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா?

ஐந்தாவது வகைக் கனவு மேற்சொன்ன நாலு வகைக் கனவுகளின் கலவை.நம்முடைய 90% கனவுகள் எல்லாம் கலந்த ஐந்தாம் வகையைச் சேர்ந்தவை.உன் சுய அறிவு சிறிதளவு செயல் படும்.மற்ற விருப்பங்கள், பயங்கள் முதலியனவும் கனவில் பிரதி பலிக்கும். கனவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஒரு முடிவுக்கு வர வேண்டாம்.

ஆம்.சில சமயம் உன் சுய அறிவின் காரணமாக சில கனவுகள் வரலாம்.பின் விளைவுகளைப் பற்றி இருக்கலாம்.ஆனால் அதுவும் உன் பயத்தாலோ அல்லது அடைய விரும்பும் பொருளைப் பற்றியோ ஏற்படலாம்.நான் சொல்வது புரிகிறதா? அப்படிப் பட்ட கனவை ஒதுக்கவும் முடியாது.ஒரேயடியாக ஏற்றுக்கொள்ளவும் முடியாது.அதனால் கனவுகளைப் பற்றிய கவலை வேண்டாம்.இதை யோக மாயை என்பார்கள். ஒரு சீடருக்கு இப்படிப் பட்ட அனுபவங்கள் ஏற்படும்.அந்தச் சமயம் அவருக்கு ஆலோசனை தேவைப்படும்.நீ ஆன்மீக வழியில் சென்று தியானத்தில் ஈடுபட்டால் இப்படிப்பட்ட பிரச்சினைகளைத் தாண்டி விடலாம்.

கேள்வி: பயணம் உருவத்திலிருந்து உருவமிலாததற்கு.பின் குருவோடு இருப்பது எவ்வளவு அவசியம்? இங்கு மிகவும் பெரியவர்கள் குருவின் பின்னால் ஓடுவதைப் பார்க்கிறோம். நாங்கள் ஞானத்தோடு இருப்பது முக்கியமா (உங்களோடு இருப்பதை உணர்வது மட்டும்) அல்லது உங்கள் பின்னால் ஓட வேண்டுமா?

குருதேவர்: பார்! என் பின்னால் யாரும் இல்லை.எல்லோரும் என் முன்னால் இருக்கிறார்கள். உனக்கு எது விருப்பமோ, அதைச் செய்.எனக்கு ஒரு தேவையும் கிடையாது. நீ ஒரு இடத்தில் திருப்தியோடு இருந்தால் அதுவே நல்லது.குற்ற உணர்ச்சியின் பொறியில் மாட்டிக் கொள்ளாதே. நான் உன்னை மேலும் பிரச்சினைகளில் மாட்ட விரும்பவில்லை. உன் இதயம் ஓடச் சொல்லும் போது,உன் மனம் ஓடாதே என்றால், நீ ஏற்கனவே முரண்பாட்டோடு இருக்கிறாய்.எனவே நான் மனத்தின் பக்கத்தையோ இதயத்தின் பக்கத்தையோ எடுக்கமாட்டேன்.ஏனென்றால் இரண்டுமே முக்கியம்.நீயே முடிவுக்கு வா. சில சமயம் ஒரு பக்கம் வெற்றி அடையட்டும். மற்ற சமயங்களில் மற்றொரு பக்கம் வெற்றி அடையட்டும்.சில சமயம் உன் தலை (புத்தி) வெல்லட்டும்.மற்ற சமயங்களில் உன் இதயம் வெற்றி அடையட்டும்.எல்லாமே விட்டுக் கொடுப்பதைப் பொறுத்தது.
ஒரு சக்தி இருக்கிறது.அதிசயங்கள் நிகழ்கின்றன என்று தெரிந்து கொள்.அதிசயங்கள் நடக்க இடம் கொடு.

கேள்வி: தேர்ந்தெடுப்பது உன் பொறுப்பு.ஆசிர்வதிப்பது என் பொறுப்பு ஏன்று சொல்கிறீர்கள். நாங்கள் தேர்ந்தெடுப்பது உங்கள் அகண்ட பார்வையில் விழாவிட்டால் எங்களுக்கு எப்படித் தெரியவரும்? இதை சரி செய்வது எப்படி? எங்களை வழிக்குத் திரும்பக்கொண்டு வர பொறுப்பு ஏற்பீர்களா?

குருதேவர்: (சிரிக்கிறார்) எல்லா வழியும் என் வழி தான்.உனக்கு நன்மை ஏற்பட விரும்புகிறேன். அதற்கான முடிவை நான் எடுப்பதில்லை.நீயே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனென்றால் ஒவ்வொரு முடிவு எடுப்பதாலும் நீ வளர்ச்சி அடைகிறாய்.