மனம் – நண்பனா? அல்லது விரோதியா?


26 - டிசம்பர் – 2012 - பாத் ஆண்டோகாஸ்ட் - ஜெர்மனி

கே: என்னைத் தொந்தரவு செய்யும் மனத்தை எப்படி வெல்லலாம்?

குருதேவர்: (தொந்தரவு செய்வது) மனதின் இயல்பு. நீ உன் மனதை விடப் பெரியவன் (பெரியவள்). விழித்துக் கொள். மனம் அப்படியே இருக்கட்டும்.

கே: என் ஆத்ம துணைவனை (துணைவியை) எப்படித் தெரிந்து கொள்ளலாம்?

குருதேவர்: முதலில் உன் ஆத்மாவை அறிந்து கொள். பிறகு ஆத்ம துணைவியை அறியலாம். உன் ஆத்மாவைப் பற்றி நீ அறியவில்லை. நீ யார் என்பதை நீ அறிய வில்லை. உன்னைப் பற்றி ஒன்றுமே உனக்குத் தெரிய வில்லை. நீ உன் மனத்தைப் பற்றியும் அறியவில்லை. உன் மனம் உன்னைப் பித்தனாக்குகிறது. ஒரு நிமிடம் ஒன்றை விரும்புகிறது. அடுத்த நிமிடம் வேறு ஏதோ வேண்டும் என்கிறது. எப்போதும் மனம் மாறிக் கொண்டே இருக்கிறது. எதிலோ சிக்கிக் கொள்கிறது.
அதனால் தான் பகவத் கீதையில் ஒரு ஸ்லோகத்தில் “உன் பந்தங்களுக்கு உன் மனமே பொறுப்பு. அந்த மனமே உன் விடுதலைக்கும் பொறுப்பு. அதைத் தவிர எந்தக் காரணமும் இல்லை.” என்று சொல்லப் பட்டிருக்கிறது.

உன் சொந்த மனமே உனக்கு நண்பனாகவும் செயல்படுகிறது. அதே மனம் உன் விரோதியாகவும் செயல்படுகிறது.



மனத்தை யோக சாதனைகளில் ஈடுபடுத்திப் பழக்கினால், உன் நண்பனாக இருந்து உதவுகிறது. இல்லாவிட்டால் அது உன் விரோதியாக செயல்படுகிறது.இது தான் உண்மை.

குருதேவர்: இங்கு நான் வருவதற்கு ஒரு வாரம் முன்பு நடந்த நிகழ்ச்சியைப் பற்றி சொல்ல விரும்புகிறேன். ஆசிரமத்துக்கு வெளியே இருக்கும் பெரிய வழிகாட்டும் பலகையில், ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் குறும்பாக அவர்களுடைய சுவரொட்டிகளை ஒட்டிச் சென்று விட்டார்கள்.
அவர்கள் தங்கள் தலைவரின் மிகவும் பெரிய படங்களுடன் கூடிய சுவரொட்டிகளை (தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றிய தகவல்) ஒட்டிச் சென்றனர். அதனால் நம் ஆசிரமத்தைச் சேர்ந்த காவலாளிகளும்,மற்றும் அங்கிருந்தவர்களும் அப்படங்களைக் கிழித்து எறிந்தார்கள். ஏனென்றால் ஆசிரமத்துக்குப் புதிதாக வருபவர்களுக்கு ஆசிரமத்துக்குச் செல்லும் பாதையைக் காட்டும் நம் வழிகாட்டும் பலகையை அப்படங்கள் மறைத்திருந்தன.

தற்போது அந்தக் கட்சியைச் சேர்ந்த உள்ளூர் தலைவர்கள் கோபம் அடைந்து ரகளை செய்து, சத்தம் போட்டு நம்முடைய வாழும் கலை ஆசிரியர்களிடம்,“நாங்கள் எங்கள் கட்சிக்காரர்களின் பெரிய கூட்டத்தைக் கொண்டு வந்து இங்கு போராட்டம் நடத்துவோம். இங்கு உண்ணாவிரதம் இருப்போம்” என்று பயமுறுத்தினார்கள். இரு தரப்பிலும் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகள் பரிமாறப் பட்டன. நம் காவலாளிகளும், அவர்களிடம், “வந்து பாருங்கள், நாங்களும் உங்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல” என்றார்கள்.

நான் ஒரு விழாவுக்காக நகரத்துக்குப் போகும் போது என் காரியதரிசி இச்செய்தியை எனக்குச் சொன்னார். அவரை “உள்ளூர் தலைவரை அழைத்துப் பேசு” என்று சொன்னேன். என் காரியதரிசி உள்ளூர் தலைவரை தொலைபேசியில் அழைத்து, “குருதேவர் இன்று தான் வெளியூரிலிருந்து வந்திருக்கிறார். உங்களை இங்கு அழைத்து ஒரு பழக் கூடையும், மலர் மாலையும், ஒரு கம்பளி சால்வையும் பிறந்த நாள் கொண்டாடும் உங்கள் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்தாக அளிக்க விரும்புகிறார்” என்று சொன்னார். அவரும் அதற்கு ஒத்துக் கொண்டார்.

“எங்கள் கட்சியின் படங்களை உங்களுடைய மக்கள் ஏன் கிழித்தெறிந்தார்கள்” என்று அத் தலைவர் என் காரியதரிசியிடம் கேட்டார். என் காரியதரிசி, அதைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர் போல்“ அப்படியா? நீங்கள் என்னிடம் சொல்லியிருக்கலாமே? குருதேவர் இப்போது தான் வெளியூரிலிருந்து வந்தார். அவருக்கு உங்கள் தலைவரின் பிறந்த நாள் வருகிறது என்று தெரிந்ததால், அவருக்கு வாழ்த்துக்களும், பிறந்த நாள் பரிசும் அனுப்பி வைக்கும்படிச் சொன்னார். ஆகவே நீங்கள் இப் பழங்களையும், மற்ற பொருட்களையும் உங்கள் தலைவருக்கு எடுத்துச் சென்று குருதேவரின் பிறந்த நாள் வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவியுங்கள்.

உள்ளூர் தலைவர் கோபம் குறைந்து, தன் தலைவருக்கு குருதேவரின் ஆசியையும், பரிசுப் பொருட்களையும் எடுத்துச் செல்லும் வாய்ப்பு கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தார்.
அவர் நடத்த இருந்த பெரிய நாடகம் (போராட்டம்), ஒரு தொலைபேசி அழைப்பில் நிறுத்தப் பட்டது. அவர் இப்போது பெருமையுடன், தன் தலைவரைச் சந்தித்து குருதேவர் அனுப்பிய மலர் மாலையை அவருக்கு அணிவித்து, தன் பிறந்த நாள் வாழ்த்துக்களையும், குருதேவரின் ஆசிகளையும் தன் தலைவருக்குத் தெரிவிக்கலாம். அவர் தன்னை மிகப் பெரிய மனிதனாக நினைத்து மகிழ்ந்தார். ஆசிரமவாசிகளும் பிரச்சினை தீர்ந்ததால் நிம்மதி அடைந்தார்கள்.

ஒரு மோதலை, விரோதத்தை எப்படித் தீர்ப்பது என்று நீங்கள் அறிந்தால் எல்லாம் எளிதாகி விடும். ஒரு தொலைபேசி அழைப்பால் இந்த பிரச்சினை தீர்ந்தது.இப்படிப் பட்ட வழி எல்லா இடங்களிலும் வெற்றியைத் தராது. இடத்துக்குத் தகுந்தவாறு தீர்வுகளைக் கண்டுபிடிக்க வேண்டும். சில இடங்களில் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும். முடியாது என்று சொல்ல வேண்டும்.சில இடங்களில் இராச்சிய பரிபாலனம் செய்வது போல் மதியூகத்தோடு செயல்பட வேண்டும்.
எப்போதுமே குறும்புக்காரர்கள் இருப்பார்கள். அந்த சூழ்நிலையில் அவர்களைக் கையாள தனித் திறமைகளை வளர்த்துக் கொள்வது அவசியம்.

நம் முன்னோர்கள் எந்த சூழ் நிலையையும் சமாளிக்க 4 வழிகள் சொல்லியிருக்கிறார்கள். அவை ஸாம, தான, பேத, தண்ட என்பனவாம்.

1.   “ஸாம” என்றால் பேச்சு வார்த்தையோடு மற்றவர் ஒப்புக் கொள்ளும்படிப் பேசி பிரச்சினையைத் தீர்ப்பது.
2.   “தான” என்றால் மன்னித்து விடுவது. பரவாய் இல்லை. எல்லோரும் தவறு இழைக்கக் கூடும் என்று மற்றொரு வாய்ப்புக் கொடுப்பது.
3.   “பேத” என்றால் பாராமுகமாக இருப்பது. கடுமையாக நடந்துகொண்டு நாம் எண்ணியதைத் தெரிவிப்பது.
4.   “தண்ட” என்றால் பலத்தைப் பிரயோகிப்பது. வேறு எதுவும் வேலை செய்யாத போது தன் வலிமையை எதிராளிக்குக் காட்டி அவரைப் பணிய வைப்பது.

பொதுவாக நாம் முதலிலேயே கடைசியாகச் சொல்லப்பட்ட இரண்டு வழிகளைக் கடைப் பிடிக்கிறோம். மற்றவரோடு இணக்கமாகப் பேசி, பிரச்சினைக்குத் தீர்வு காணும் வழியில் செல்வதில்லை. எதிரிக்கு, சமாதானப் பேச்சு வார்த்தையோடு ஒரு வாய்ப்பு கொடுக்கவேண்டும். அது சரி வராவிட்டால், ஆராய்ந்து கடைசியாகப் பலத்தைப் பிரயோகிக்கலாம். இவை எந்த விதமான சூழ்நிலையையும் சமாளிக்க 4 வழிகளாகும்.

கே: யாருக்கும் விளக்கம் அளிக்க அவசியம் இல்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். நம் மனம் பாரமாக இருக்கும்போது, அதைச் சொல்ல வேண்டும் போலிருந்தால் என்ன செய்யலாம்?

குருதேவர்: அப்படி எதுவும் விதிமுறை இல்லை. சில சமயம் நீ பேசி விட்டு ஓய நினைத்தால், அப்படிச் செய்யலாம். சில சமயம் அப்படிப் பேசுவதால் ஒரு பயனும் கிடையாது.

விழித்துக் கொள்! பார்! இந்த உலகமே ஒரு கனவு போலத்தான். அந்த எண்ணங்கள் எல்லாம் கடந்து விட்டன. மனிதர்களின் நடத்தைகள் மறைந்து விடும். சிலர் நன்னடத்தையுடன் இருக்கிறார்கள். சிலர் கெட்டவர்களாக இருக்கிறார்கள். எல்லோருமே இறக்கப் போகிறார்கள். உலகமும் அழிந்து விடும்.

இப்போது இருக்கும் எல்லா மனிதர்களும் மறைந்து விடுவார்கள். புதியவர்கள் தோன்றி அவர்களும் ஒரு நாள் மறைந்து விடுவார்கள். மற்றும் சிலர் தோன்றுவார்கள். தங்களுக்குள் சண்டை போடுவார்கள். ஒருவரோடு ஒருவர் அணைத்துக் கொண்டு, அன்போடு முத்தமிட்டு அமைதியாக வாழ்பவர்களும் ஒரு நாள் இறந்து விடுவார்கள்.

இப்போது பூமியில் வாழும் 700 கோடி மனிதர்களும் இறக்கப் போகிறார்கள். சில ஆண்டுகள் தான் வாழ முடியும். இன்னும் 100 ஆண்டுகளுக்குப் பின் இப்போது வாழும் அனைவரும் இருப்பார்கள் என்று நினைக்கிறாயா? இங்கே இருக்கும் அனைவரும் 100 ஆண்டுகளுக்குப் பிறகு இருக்கப் போவதில்லை. 200 ஆண்டுகளுக்குப் பின் பேரக் குழந்தைகளும் இருக்கப் போவதில்லை.
பார்! உலகம் ஒரு நதியைப் போன்றது. நதியில் எப்போதும் புதிய நீர் ஓடுகிறது. உன்னைப் பிரச்சினைக்குள்ளாக்குவது என்ன? (கவலைப்படுவது எதைப்பற்றி?) நீ போகும் போது எதையாவது விட்டு விட்டுச் செல்ல வேண்டும் என்று விரும்பினால், மற்றவர்களுக்குப் பயன்படும் அறிவாக இருக்க வேண்டும். யாருக்காவது உபயோகமாக இருக்க வேண்டும். அவன் சொன்னது இல்லை. அவள் சொன்னது இல்லை. அந்த சூழ்நிலையைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் என்பது இல்லை. இதெல்லாம் புத்திக்கு உதவாதவை. ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்து விடு. அதில் ஒன்றும் அர்த்தம் கிடையாது.

மணிக்கணக்காக உன் நேரத்தை “ஏன் நீ இப்படிப்பட்ட உணர்ச்சிகளுக்கு ஆளானாய். மற்றவர்கள் ஏன், எதற்காக இப்படி உணர்கிறார்கள்” என்று விளக்குவதில் வீணாக்குகிறாய்?காலம் மாறும் போது மனமும் / உணர்ச்சிகளும் மாறுகின்றன. இதைப் பற்றி ஒரு அழகான விஞ்ஞானம் இருக்கிறது. உன் ஜாதகத்தைப் பார்த்து உன் மனம் காலத்தோடு எப்படி சம்பந்தப் பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

சமயம் வரும் போது, நாம் மனம், காலம் மற்றும் கிரகங்கள் எப்படி ஒன்றோடு ஒன்று இணைக்கப் பட்டிருக்கின்றன என்று ஒரு பயிற்சி ஆரம்பிக்கலாம். பார்! நான் ஜோதிட சாஸ்திரம் என்று சொல்லவில்லை. ஏனென்றால் அது தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது. பல சமயம் அதைத் தவறான வழியில் பயன் படுத்துகிறார்கள். இன்று ஜோதிடசாஸ்திரம் மிகவும் சரியாக (புரிந்து கொள்ளாத) விஞ்ஞானங்களில் ஒன்றாக இருக்கிறது.

ஜோதிடசாஸ்திரம் ஒரு விஞ்ஞானம் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால் அதைப் பலர் தவறான முறையில் சிதைத்து அதன் சுயரூபத்தைப் பார்க்க முடியாமல் செய்திருக்கிறார்கள்.
வேதகாலத்து ஜோதிடசாஸ்திரப் படி, 12 நட்சத்திரங்களின் கூட்டு அமைப்புகள் (ராசிகள்) உள்ளன. ஒன்பது கிரகங்கள் உள்ளன. நீ பிறந்த நேரத்திலிருந்து (ராசியிலிருந்து) 8வது வீட்டில் குரு (வியாழன் கிரகம்) வரும் போது அது உன் மனத்தில் ஆழ்ந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்.அதே போல் சனி 8ம் இடத்தில் இருந்தால், உனக்கு மன எழுச்சிகள் ஏற்படுத்தி மிக அதிக மாற்றங்களைக் கொடுக்கும். எல்லாமே தலைகீழாக மாறக் கூடிய நிலை வரும். வியாழன் 8 ம் இடத்தில் இருந்தால் உன் அறிவு கெட்டு விடும். (புத்தி பேதலித்து விடும்). ஆனால் இது 11 மாதங்கள் தான் நீடிக்கும். இந்த 11 மாதங்களிலும் 3 மாதங்கள் தான் உன்னை மிகவும் வாட்டி எடுக்கும்.

நீ ஆழமான ஆத்ம ஞானத்தை அறியும் வரை அல்லது ஞானியாக ஆகும் வரை, கிரகங்களின் நிலைமை உன் மனதைப் பாதிக்கும். ஆனால் நீ இதை முன்பே அறிந்திருந்தால்,இந்த மூன்று மாதம் மனதுக்கும் உணர்ச்சிகளுக்கும் கஷ்டமான காலம் என்று முன்பே அறிந்திருந்தால், எந்த முக்கியமான முடிவுகளையும் இந்த சமயத்தில் எடுக்கமாட்டாய்.

அதே போல் இரண்டரை நாட்களுக்கு ஒரு முறை மனநிலை மாறுகிறது. நீ அதிக துக்கத்தில் இருந்தால், அது இரண்டரை நாட்களுக்கு மேல் நீடிக்காது. ஒரு இடைவெளிக்குப் பின் மீண்டும் வரக்கூடும். இதே போல் அண்டவெளியும் உன் மனதைப் பாதிக்கும் சக்தி வாய்ந்தது. சத்சங்கம், தியானம் மற்றும் மந்திரஜபம் மூலம் இந்த பாதிப்புகளிலிருந்து உன்னைக் காத்துக் கொள்ளலாம்.
இவை உனக்கு ஒரு கவசம் போலிருந்து உன்னைக் காக்கும். ஒரு அம்பு உன்னை நோக்கி வரும்போது, நீ கவசம் அணிந்திருந்தால் உனக்குக் காயம் படாது. எனவே “ஓம் நமசிவாய” என்று ஜபித்தாலும், சத்சங்கத்தில் பாடினாலும் அது உனக்கு ஒரு கவசமாகிறது இந்தக் கவசம் கிரகங்களின் பார்வையிலிருந்து உன்னைக் காப்பாற்றும்.

பெங்களூர் ஆசிரமத்தில், நம் பக்தர்களுக்காகவும், உலக நன்மைக்காகவும் யக்ஞங்கள் செய்கிறோம். ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய யக்ஞம் ஆறு முறை செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரியின் போது, உலக அமைதிக்காகவும், செல்வ வளர்ச்சிக்காகவும், தீய சக்தியிலிருந்து காக்கவும், நம் பக்தர்களின் நன்மைக்காகவும் ஒரு பெரிய யக்ஞம் நடக்கிறது. இவை நம் முன்னோர்களின் அறிவுரைப் படி செய்யப்பட்டு வருகின்றன. வருங்காலத்தில் இதைப் பற்றி ஞானம் அளிக்க பயிற்சித் திட்டங்கள் கொண்டு வருவோம்.

கே: எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன?

குருதேவர்: இந்த எண்ணம் (கேள்வி கேட்க வேண்டும் என்ற எண்ணம்) தற்சமயம் தான் வந்ததா? இது எங்கேயிருந்து வந்தது? அது உன்னிடம் வந்தது. எனவே ஒரு இடத்தில் அமர்ந்து அது எங்கேயிருந்து வந்தது என்று பார். உட்கார்ந்து எண்ணங்களின் பிறப்பிடம் எது என்று எண்ண ஆரம்பிக்கும் சமயம் மனம் வெறுமையாகி விடுவதை உணரலாம். அதுவே எண்ணங்களின் பிறப்பிடம்.

எண்ணங்கள்,கருத்துகள் மற்றும் உணர்ச்சி அலைகளின் பிறப்பிடம் நீ தான் – அந்த உள்ளே இருக்கும் வெற்றிடம். இது “மேகங்கள் எங்கிருந்து வருகின்றன?” என்று கேட்பதைப் போல் தான். மேகங்கள் வானில் காட்சி தருகின்றன. அதே போல் நம் உள்ளே இருக்கும் இடத்திலிருந்து (ஆகாயத்திலிருந்து) எண்ணங்கள் வருகின்றன.
3 ஆகாயங்கள் இருக்கின்றன. ஒன்று நமக்கு வெளியே இருக்கும் இடம் (ஆகாயம்). இரண்டாவது நமக்கு உள்ளே இருக்கும் இடம். இங்கிருந்து தான் எண்ணங்களும் உணர்ச்சிகளும் வருகின்றன. மூன்றாவதாக இருக்கும் இடம் ஒரு சாட்சி. அங்கு பரமானந்தத்தைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

கே: அசைக்க முடியாத நம்பிக்கையை எப்படிப் பெறலாம்?

குருதேவர்: அது உண்மையான நம்பிக்கையாக இருந்தால் அதை அசைய விடு.உண்மை நிரந்தரமாக (எப்போதும்) இருப்பது. நம்பிக்கை உண்மையோடு இருக்கும்போது, அது அசைந்தாலும் ஒன்றும் ஆகாது. அது எங்கும் காணாமல் போகாது. இன்னும் சொல்லப் போனால் உனக்கு மேலும் மேலும் சந்தேகம் வரவேண்டும். போலியான பொருளைக் காட்டும் போது தான் “இதை சந்தேகப் படாதே” என்று சொல்ல வேண்டி வரும்.

இது உண்மையான தங்கம் என்றால் எவ்வளவு வேண்டுமானாலும் உரசிப் பார்க்கலாம். அதுவே தங்க முலாம் பூசப் பட்டிருந்தால் “அதிகமாக உரசிப் பார்க்காதே” என்று சொல்வாய். ஏனென்றால் தங்கப் பூச்சு மறைந்து போய் விடும். போலி என்பது தெரிந்து விடும். உண்மையான தங்கத்தை எவ்வளவு உரசிப் பார்த்தாலும் தங்கமாகவே இருக்கும்.

சந்தேகம் என்பது சக்தியின் குறைவைக் காட்டுகிறது. உன் சக்தி பெருகி இருக்கும் போது, சந்தேகம் எங்கிருந்து வரும்? சக்தி குறைவாக இருக்கும் போது சந்தேகம் வரும். உண்மையான நம்பிக்கை என்பது நூறு முறை ஆட்டினாலும் விழாமல் அப்படியே இருக்கும். உண்மையான நம்பிக்கை என்றுமே நிரந்தரமாக இருக்கக் கூடியது.

கே: ஆசிரமத்துக்கு வந்து நம்மைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இழந்த சக்தியைப் பெறலாம் என்று கூறுகிறீர்கள். உலகம் முழுதும் ஏன் ஆசிரமமாக இருப்பதில்லை.

குருதேவர்: என்னைப் பொறுத்தவரை உலகம் என் ஆசிரமம். நீ இந்த இடத்துக்கு வரும்போது, எப்போதும் பலர் தியானம் செய்யும் ஒரு ஆசிரமத்தில் சக்தியின் அதிர்வலைகளை உணர்கிறாய். உன் வீட்டில் உணவு அருந்த ஒரு அறை. தூங்கி ஓய்வெடுக்க ஒரு அறை, குப்பைகள் போட ஒரு அறை என்று இருப்பது போல, உலகில் ஒவ்வொன்றுக்கும் ஒரு இடம் இருக்கிறது.

நீங்கள் அனைவரும் உங்கள் வீட்டை ஆசிரமமாக ஆக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆசிரமம் என்றால் என்ன? ஞானம் இருக்கும் இடம் ஆசிரமம். அன்பு இருக்கும் இடம் ஆசிரமம். யார் வந்தாலும் அன்போடு அழைத்து அவருக்கு உணவு அளித்து ஓய்வெடுக்க ஒரு இடம் கொடுக்குமிடம் ஆசிரமம்.ஒவ்வொரு வீட்டையும் ஆசிரமமாக ஆக்கினால், அப்படிப் பட்ட சக்தியை உருவாக்கினால் உலகம் முழுவதும் ஆசிரமமாகி விடும். நீ ஒரு காட்டில் போய் இயற்கையோடு ஒன்றியிருந்தால் அதுவும் ஆசிரமம் தான்.

உலகில் உள்ள ஒவ்வொரு மரமும் என் தோட்டத்தில் இருக்கிறது, என் ஆசிரமத்தில் இருக்கிறது என்று சொல்வேன். இது உண்மை. ஆனால், நான் சொல்வது போல் நீ உணரா விட்டால், நீ இழந்த சக்தியைப் பெற உனக்கு ஒரு இடம் வேண்டும். அப்போது இங்கு (ஆசிரமத்துக்கு) வரலாம்.
இங்கு உன் சக்தி அதிகரிப்பது இயல்பானது. ஆசிரமத்தை உன் வீடாகவே நினைக்கலாம். எங்கு வேண்டுமானாலும் போகலாம். உணவின் சுவையை, அதன் மணத்தை உணர வேண்டுமென்றால் சமையலறைக்குச் செல்லலாம். உணவு அருந்தும் இடத்தில் எங்கு வேண்டுமானாலும் அமர்ந்து உணவருந்தலாம். அந்த நறுமணம் அங்கு இருக்கிறது.

கே: ஆத்மாவுக்கு குறிக்கோள் உண்டா?

குருதேவர்: ஆம். ஆத்மாவுக்கு கண்டிப்பாக ஒரு குறிக்கோள் உண்டு – பரமாத்மாவுடன் ஒன்று சேர்வது. சிறிய மனத்தின் குறிக்கோள் பெரிய மனத்துடன் ஒன்று சேர்வது. ஒவ்வொரு அலையும் கரையைத் தொட்டபின் சமுத்திரத்துடன் ஒன்று சேர்கிறது. அலையும் சமுத்திரமும் ஒன்று தான்.

கே: காலம் (நேரம்) என்பது என்ன?

குருதேவர்: இரண்டு நிகழ்ச்சிகளுக்கு இடையே உள்ள தூரம்.தூரம் என்பது என்ன என்று நீ கேட்டால், அது இரண்டு பொருட்களுக்கு இடையே உள்ள இடைவெளி என்று சொல்வேன்.

கே: மூலத்துக்குத் திரும்புவது எப்படி?

குருதேவர்: ஒன்றும் செய்யாமல் அமைதியாக இருந்து, தவறாகக் கற்றவைகளைக் கைவிட்டு, ஓய்வாக இருந்தால் நீ மூலத்துடன் சேரலாம்.

கே: கலியுகத்தைப் பற்றிச் சொல்வீர்களா?

குருதேவர்: நாலு யுகங்கள் இருக்கின்றன.காலம் (அப்போது வசித்த மக்களின்) நான்கு குணங்களைச் சார்ந்து பிரிக்கப்பட்டிருக்கிறது.
1.   சத்ய யுகம் – (மக்களிடையே) நிறைய நற்குணங்கள் இருந்த காலம்
2.   த்ரேதா யுகம் – நற்குணங்கள் குறைய ஆரம்பித்த காலம்
3.   த்வாபர யுகம் – நற்குணங்கள் மேலும் குறைந்த காலம்
4.   கலியுகம் – நற்குணங்கள் மிகவும் குறைந்த காலம்
இது தான் கலியுகத்தைப் பற்றிச் சொல்லப் பட்டிருக்கிறது. ஆனால் நான் சொல்கிறேன். கலியுகத்திலும் சத்ய யுகம் இருக்கிறது. நீ மகிழ்ச்சியாக இருக்கும் நாட்களில் சத்ய யுகத்தில் இருக்கிறாய். மிகவும் துக்கத்தில் இருக்கும் நாட்களில் கலியுகத்தில் இருக்கிறாய். அந்த அர்த்தத்தில் பார்க்கும் போது, இந்தப் பெரிய கலியுகத்திலும் நல்ல நேரங்கள் இருக்கின்றன.

கே: உண்மை எதிரிடையானது. (முரண்பாடானது) என்று சொன்னீர்கள். இதைப் புரிந்து கொள்ள சுலபமான வழி சொல்ல முடியுமா?

குருதேவர்: பால் நல்லது மற்றும் கெட்டது. ஒரு டம்ளர் பால் குடித்தால் பால் உடலுக்கு நல்லது செய்யும். ஆனால் 2 லிட்டர் பாலைக் குடித்தாயானால்! புரிந்து கொண்டாயா? 

ஃப்ராய்டன்ஸ்டாட்டிலிருந்து பாத் ஆண்டகாஸ்டுக்கு வரும்போது நேராக வந்து வலது புறம் திரும்ப வேண்டும். ஆனால் ஓப்பனாவிலிருந்து வரும் போது நேராக வந்து இடது புறம் திரும்ப வேண்டும். இரண்டு அறிவுரைகளுமே சரி தான். ஆனால் அவைகள் முரண்பாடானவை. உண்மை என்பது ஒரு கோளத்தைப் போலிருக்கிறது. ஒரு நேர் பாதை போலல்ல. கோளத்தில் ஒரு இடத்தை அடைய பல்வேறு வழிகள் உள்ளன.

கே: 2000 வருடங்களுக்கு முன் இருந்த செழிப்பான நிலைக்கு இந்தியா திரும்ப வர முடியுமா?

குருதேவர்: அரசியல் வாதிகள் அப்படி நடக்கவிட்டால் அப்படிப்பட்ட நிலை திரும்பி வரும். இத்தாலியில், இந்தியாவில் மற்றும் கிரீஸில் அரசியல்வாதிகளே வளர்ச்சிக்கு எதிராக பிரச்சினையாக இருக்கிறார்கள். அரசியல் வாதிகள் தேசத்தை திவாலா நிலைக்கு (நேர்மையாக வாழத் தகுதி இல்லாத நிலைக்கு) எடுத்து செல்கிறார்கள். ஒவ்வொரு தேசமும் தேவையான அளவு மூலப் பொருட்களையும், நல்ல மனிதர்களையும் கொண்டிருக்கின்றன. மக்கள் ஊக்கத்தோடு உழைக்கத் தயாராக இருக்கிறார்கள்.ஆனால் ஊழல் (இலஞ்ச ஊழல்) தேசத்தைப் பின் நோக்கி (கற்காலத்தை நோக்கி) எடுத்துச் செல்கிறது.