அன்பின் மறுபக்கம்.....


   

29 – டிசம்பர் - 2012 - பாத் ஆண்டோகாஸ்த், ஜெர்மனி

கே: ஆன்மீகத்துக்கும், கணிதத்துக்கும் இருக்கும் தொடர்பைப் பற்றிப் பேசுவீர்களா?

குருதேவர்: ஆன்மீகத்தின் கணிதப்படி 2 + 1 = 0. புரிந்ததா? இதைப் பற்றி சிந்தித்துப் பார். உடலும் மனமும் ஆன்மாவுடன் இணையும் போது வேறு ஒன்றும் அறியத் தேவை இல்லை. அது அப்படித்தான்.

கே: ஏசு என்றால் என்ன அர்த்தம்? அவர் பிறப்பு மற்றும் தோற்றத்துக்குக் காரணம் பற்றிப் பேச பலர் கேள்விகள் எழுப்பியிருக்கிறார்கள். அதைப் பற்றி கொஞ்சம் பேசுங்கள்.

குருதேவர்: ஏசு அன்பை அடக்கியவர். அவர் எப்படிப்பட்ட அவமானங்களையும், வலியையும் தாங்கி வருந்தினார் என்று எண்ணிப்பார். அவர் மக்களின் நிந்தனைகளையும், வலியையும் பெருந்தன்மையோடு, அமைதியாக ஏற்றுக் கொண்டார். எல்லோரும் அவர் மேல் பழி சுமத்தினார்கள். அவருடைய சீடர்கள் அவரை விட்டு ஓடி விட்டார்கள்.

அந்த சமயத்தில் அவர் எப்படி துன்பப்பட்டிருப்பார் என்று எண்ணிப்பார். உன்னால் முடிந்ததை எல்லாம் நீ உன் பக்தர்களுக்குச் செய்தபின், ஒரு நாள் அவர்கள் உங்களை விட்டு விலகினால், அதை விட பெரிய துன்பத்தைக் கற்பனை கூட செய்ய முடியாது. ஆனால் ஏசுவின் வாழ்க்கை அப்படி இருந்தது. எல்லோரும் அவரைக் கைவிட்டு விலகிய பின், அவர் கடவுளை “நீயும் என்னைக் கை விட்டு விட்டாயா?” என்று கேட்டார்.


எனவே அவருடைய வாழ்க்கை, ஒரு பக்கம் அளவிட முடியாத வேதனையையும் மற்றொரு பக்கம் அன்பு நிரம்பியதுமாக இருந்தது. இதற்காக அன்பு நிறைந்தவர்கள் எல்லாம் அப்படிப்பட்ட துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்றில்லை. அப்படி அல்ல. அவர் மக்களுக்குச் சொன்ன செய்தி. மற்றவர்களைப் பற்றி நீ தீர்ப்புச் சொல்லாதே. அவர்களைக் குரூரமாகத் துன்புறுத்த வேண்டாம். எல்லோரிடமும் அன்போடும், கருணையோடும் நடந்து கொள். ஏனென்றால் கடவுளும் அன்பும் ஒன்று தான்.

ஏசுவின் காலத்தில் வாழ்ந்தவர்கள் மனம், புத்தியின் போக்கில் வாழ்ந்தார்கள். அவர்கள் பாவத்தையும் அதற்கான தண்டனையையும் மட்டும் தான் எண்ணி வாழ்ந்தார்கள். சொர்க்கத்தைப் பற்றிக் கனவு கண்டார்கள். நரகத்தை நினைத்து பயந்தார்கள்.

ஏசு வந்து, “தற் சமயத்தில் வாழுங்கள். எல்லோரையும் நேசித்து, அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ளுங்கள். கடவுளிடம் பயப்படத் தேவையில்லை. ஏனென்றால் அவர் நம் தந்தை. நம் தந்தை நம்மைச் சேர்ந்திருப்பது போல் அவரும் நம்மைச் சேர்ந்தவர். என் தந்தையும் நானும் ஒருவரே” என்று சொன்னார். அந்தக் காலத்தில் ஏசு ஒரு புரட்சி கரமான கருத்தைச் சொல்லி, “பயணம் தலையிலிருந்து இதயத்துக்குச் செல்வது. தலையிலிருந்து சொர்க்கத்துக்கும், நட்சத்திரங்களுக்கும் செல்வது அல்ல” என்று மக்களுக்கு உணர்த்தினார்.

அவர் சொல்லிய கருத்துக்களை 70 வருடங்களுக்கு யாரும் எழுதி வைக்கவில்லை. (புரிந்து கொள்ளவில்லை). ஏசு மறைந்து 70 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் பைபிள் எழுதப்பட்டதாக அறிஞர்கள் மூலம் எனக்குத் தெரிய வந்தது. பின் வரும் பதிப்புகளில் பல கருத்துக்கள் திரிந்திருக்கக் கூடும். அதனால் தான் கிறிஸ்துவர்களில் 72 உட் பிரிவினர் இருக்கின்றனர். ஒவ்வொரு பிரிவினரும், அவர்கள் தான் ஏசு சொன்னவைகளைச் சரியாகப் பின் பற்றுவதாக நினைக்கிறார்கள்.

ஏசு கிறிஸ்து ஒருவர் தான். ஆனால் 72 பிரிவினர்கள் இருக்கின்றனர். ஒவ்வொரு பிரிவினரும் பைபிளை அவர்கள் வழியில் பொருள் கொள்கிறார்கள். வேறு வேறு பிரிவினர், சர்ச்சையில் ஈடுபடாமல், ஏசு சொன்னதன் சாரத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். கருத்து வேற்றுமைகளுக்கு, உலகில் முடிவே கிடையாது.

புத்தருக்கும் அதே மாதிரி நிலை ஏற்பட்டது. ஒரு பகவான் புத்தர். ஆனால் பௌத்தர்களுக்குள் 32 உட் பிரிவினர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு பிரிவினரும், புத்தரின் அறிவுரைப்படி நடப்பது தாங்கள் மட்டுமே என்று நினைக்கிறார்கள்.

முகம்மது நபியின் மதத்திலும் அதே நிலை தான் நிலவுகிறது. முகம்மதியர்களில் 5 உட் பிரிவினர் உண்டு. அவர்கள் ஒருவரை ஒருவர் வெறுக்கிறார்கள். சொல்லப் போனால் அவர்கள் ஒன்றுக் கொன்று முரண்பாடான கொள்கைகளைக் கொண்டிருக்கிறார்கள். கொள்கையை முழுதும் அனுபவபூர்வமாகப் புரிந்து கொள்ளாமல் ஒரு கொள்கையோடு தங்களை இணைத்துக் கொள்வது மக்கள் வழக்கம். மக்கள் அக் கொள்கைகளைத் தம் அடையாளமாகக் கருதி, அந்த அடையாளத்துக்காகத் தங்கள் உயிரையே கொடுக்கத் தயாராகிறார்கள்.

ஏசுவின் உபதேசம் “விழித்துக் கொள். சொர்க்கம் என்பது உனக்குள் இருக்கிறது. கடவுள் அன்பு வடிவானவர் என்று அறிந்து கொள்” என்பது தான். எனவே, ஒரு குழந்தையைப் போல் இரு. குழந்தைக்கு தப்பெண்ணம் எதுவும் கிடையாது. நீ குழந்தையைப் போல் இல்லாவிட்டால் உன்னால் சொர்க்கத்துக்குள் நுழைய முடியாது. ஆனால் இதை யாரும் அறிவதில்லை.

குழந்தையின் கபடமில்லாத தன்மையும், நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் சேர்ந்தவர்கள் என்ற அறிவும் இப்போது மக்களிடத்தில் இல்லை. அதனால் தான் மதத்தின் பெயரில் பல குற்றங்கள் நிகழ்கின்றன. அரசியல் அதிகாரத்துடன் மதம் சேர்ந்த போது, கம்யூனிஸம் பிறந்தது. இவையெல்லாம் நிகழக் காரணம் நாம் நம்முள்ளே இருக்கும் உள்ளொளியை அறிய வில்லை. நம் உள்ளே இருக்கும் ஆத்மாவின் ஒளியை அறிய வில்லை.

கே: அன்பான குருதேவா! ஒன்றும் செய்யாமல் இருப்பது நமக்கு இத்தனை இன்பத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்குமானால், நாம் ஏன் ஏதாவது காரியம் செய்ய வேண்டும்?

குருதேவர்: உன் இயல்பின் படி, நீண்ட நேரத்துக்கு ஒன்றும் செய்யாமல் இருக்க உன்னால் முடியாது. நிகழ்ச்சிகளின் வேறு பாட்டினை உணரும் போது தான் பரமானந்தத்தை அனுபவிக்க முடியும். நீ ஏதாவது காரியம் செய்யும் போது, 100 % முயற்சியோடு ஈடுபடும்போது தான் எதையும் செய்யாமல் இருப்பதின் மதிப்பை உணரலாம்.

பார்! நீ மிகவும் சுறுசுறுப்போடு ஓடியாடி வேலை செய்த பின்னால் தான் அயர்ந்த ஓய்வை அனுபவிக்கிறாய். நாள் முழுதும் ஒரு வேலையும் செய்யாமல் படுக்கையில் படுத்திருந்தால், இரவில் உன்னால் தூங்க முடியாது. அதனால் நீ செய்ய வேண்டிய காரியங்களைச் செய்வது அவசியம்.

நாம் செய்ய வேண்டிய வேலைகள் சில உண்டு. அந்த வேலைகளைச் செய்யும் போது, இடையில் ஒன்றும் செய்யாமல் இருக்கும் நிலைகளும் ஏற்படும்.

கே: ஆசைகள் உற்பத்தி ஆகிறதா? ஆசைகளை அழிக்க முடியுமா? முடியுமென்றால் எவ்வாறு?

குருதேவர்: குழந்தைப் பருவத்திலிருந்த்உ இன்று வரை கடந்த காலத்தை திரும்பிப் பார்த்து நினைவில் கொண்டு வா. அப்போது உனக்கு நிறைய ஆசைகள் இருந்தன. நிறைய ஆசைகளை நீ நிறைவேற்றிக் கொண்டாய். நிறைவேறாத ஆசைகளை நீ விட்டு விட்டாய். குழந்தையாக, சிறுவனாக மற்றும் இளைஞனாக இருந்த காலத்தில் எழுந்த ஒவ்வொரு ஆசையையும் உன்னால் நிறைவேற்றிக் கொள்ள முடிய வில்லை.

அப்படி நடந்திருந்தால், உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கும். நீ மிகவும் துக்கத்தில் ஆழ்ந்திருப்பாய். அப்படி எல்லா ஆசைகளும் நிறைவேறாமல் போனதற்காக, கடவுளுக்கு நன்றி சொல். உனக்கு என்ன என்ன நடக்க வேண்டுமோ, அது மட்டும் தான் நடந்திருக்கிறது.

வாழ்க்கையில் நீ சந்தித்த கசப்பான அனுபவங்கள், உன்னுடைய தனித்தன்மைக்கு ஒரு ஆழத்தைக் கொடுத்திருக்கிறது. நல்ல அனுபவங்கள்  உன் தனித் தன்மையை விரிவாக்கியிருக்கிறது. எனவே அவை எல்லாமே உன் வாழ்வின் வளர்ச்சியில் பங்கு வகித்திருக்கின்றன. அனுபவங்கள் நல்லவையோ, கெட்டவையோ அவைகளை வரவேற்க வேண்டும். இரண்டுமே உன்னை வலிமையானவனாக்குகின்றன. கற்பனை செய்ய முடியாத அளவு, உன் ஆன்ம வளர்ச்சிக்கு உதவுகின்றன. எல்லா அனுபவங்களும், நீ செய்யும் யோக சாதனைகளின் (ஆன்ம சாதனைகளின்) ஒரு பகுதி என்று அறிந்து கொள்.

எனவே மகிழ்ச்சியான அனுபவங்கள் சாதனையின் ஒரு பகுதி. நீ சந்தித்த கசப்பான அனுபவங்களும் சாதனையின் ஒரு பகுதி தான். உதாரணத்துக்கு, உன்னைப் பாராட்டும் மக்களும், உன்னைத் தூற்றும் மக்களும் உன் சாதனையின் ஒரு பகுதிதான் என்று எடுத்துக் கொள். இரண்டு வழிகளிலும் நீ உறுதியானவனாக, நடுநிலை வகிப்பவனாக, நீ எப்படி வளர வேண்டுமோ, அப்படி வளர்வாய்.

வாழ்த்துக்களும், பழிச் சொற்களும் இந்த பூமியில் மற்றும் தான் ஏற்கப் படுகின்றன. அவற்றை அப்படியே ஏற்றுக் கொண்டு மேலே செல்ல வேண்டும். ஒரு வலிமையான ஆத்மாவுடன், வலிமையான மனிதனாக மாறு. அது தான் உண்மையான பலம். வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் புன்முறுவலோடு ஏற்றுக் கொள்ள முடிகிறதா? அது தான் இந்த நிகழ்ச்சிகளின் உத்தேசமாகும். உன்னால் எப்போதும் புன்னகையோடு இருக்க முடியுமா? அது கடினம். எனக்குத் தெரியும். ஆனால் நீ அப்படி இருப்பது அவசியம்.

எதையாவது விட்டு ஓட முயன்றால், அது உன்னைத் தொடர்ந்து வரும். இந்தப் பிறவியில் இல்லையென்றாலும், அடுத்த பிறவியில் நிகழும். அதனால் தான் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு, எது நடக்க வேண்டுமோ, அவ்வளவையும் அனுபவித்து விடு என்கிறார்கள். பெரிய புன்முறுவலோடு, வீரத்தோடும் உற்சாகத்தோடும் தொடர்ந்து செல்.

கே: ஏக்கம் ஏன் மிகுந்த துன்பத்தை அளிக்கிறது? நான் சொல்வது இறைவனை அடைய ஏக்கம், பரம் பொருளை அடைய ஏக்கம் பற்றி. நாம் எங்கிருந்து வந்தோம்?

குருதேவர்: பார் அன்பும், மனவருத்தமும் (துன்பமும்) வெகு நெருக்கமானவை. கை கோத்துக் கொண்டு செல்பவை. நீ யாரிடமாவது அன்பு செலுத்தும் போது, ஒரு நாள் மனம் வருத்தம் அடையலாம். அது அப்படித்தான் நிகழ்கிறது. வாழ்க்கையில் அதை ஏற்றுக் கொண்டு மேலே செல்ல வேண்டும். அதை விட்டு ஓடாதே. துன்பம் அடைவது காதலின் ஒரு பகுதி. இன்று ஒருவர் வந்து என்னிடம், “என் மகன் இப்படி இருக்கிறான். நான் சொல்வதைக் கேட்பதில்லை” என்று சொன்னார். பார்த்தீர்களா. அது இயல்பு தான். தாய் தன் மகனுக்காக எவ்வளவோ தியாகம் செய்திருக்கிறாள். அவன் தன் சொல்லைக் கேட்காத போது மிகவும் மனவருத்தம் அடைகிறாள்.

இயற்கையில், தாய் தன் மகனுக்கு நல்லவைகள் நடக்க வேண்டுமென்று விரும்புகிறாள். ஆனால் மகனோ, தனக்கு எது நல்லது என்று நான் அறிவேன் என்று நினைக்கிறான். அதனால் தாய் சொல்வதைக் கேட்பதில்லை. இப்போது, இந்த சூழ்நிலையில் என்ன செய்வாய்?

தாய் என்னிடம் வந்து, “குருதேவா! என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்” என்று கேட்டாள்.“பார்! நான் எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று அவளிடம் சொன்னேன். “உன் மகனுக்கும் நல்லது நடக்க வேண்டும். உனக்கும் நல்லது நடக்க வேண்டும்” என்றேன்.

“ஆனால், குருதேவா! என் மகன், நான் சொல்வதை விட, நீங்கள் சொல்வதைத் தான் கேட்கிறான்” என்று அவள் சொன்னாள். “அவன், நீ சொல்வதை விட நான் சொல்வதைக் கேட்கிறான் என்றால், குருதேவருக்கு எந்த சுய நோக்கமும் இல்லாததால், சரியானதைத் தான் சொல்வார் என்று அவனுக்குக் கட்டாயமாகத் தெரியும்” என்று அவளிடம் சொன்னேன்.

அவளுடைய மகனிடம், “நீ, என்ன விரும்புகிறாயோ, அதைச் செய்” என்றேன். பார்!~ “நீ அதைச் செய், இதைச் செய்” என்று யாருக்கும் சொல்வதில்லை. ஆகவே, மனவருத்தம் என்பது அன்பின் ஒரு பகுதி. இந்த வலி தவிர்க்க முடியாதது. அன்பு இருக்கும் போது சில நேரங்களில் வேதனையையும் ஏற்படுத்தும். வேதனைக்குப் பயந்தால், அன்பு செலுத்துவதை நிறுத்தவேண்டும் என்று பொருள். ஒரேயடியாக நிறுத்துவது மூடத்தனமாகும். பலர் அப்படிச் செய்கிறார்கள்.
சில சமயம் மனவருத்தம் ஏற்படுகிறது என்பதால்,அன்பு செய்வதை நிறுத்துவது புத்திசாலித்தனமல்ல. அது ஒருவர் செய்யும் மூடத்தனமான காரியமாகும். யார் அந்தச் சிறிய நெருடலை, வேதனையைத் தாங்கி, மேலே செல்கிறார்களோ அவர்களுடைய அன்பு உண்மையான பரமானந்தத்தைத் தரும்.

கே: மனிதர்கள் ஞானம் அடைய,ஏன் இவ்வளவு காரியங்களில் ஈடுபட வேண்டியிருக்கிறது?

குருதேவர்: அது அவசியம் தான். தற்போது அப்படித் தெரிந்து கொள்.