தெய்வீகத்தின் நாட்டியம்...

டிசம்பர் 28 - 2012 பேட் அண்டோகஸ்ட் - ஜெர்மனி




கே: குருதேவ், தயவு செய்து குருமார்களின் வம்சாவளி வரிசையைப் பற்றி எங்களுக்கு சொல்லுங்களேன்.

குருதேவ்: பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதனால் அது எப்பொழுது துவங்கியது என்று நமக்குத் தெரியாது.யோகா ஞானம், தியானம் பற்றிய ஞானம், இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒரே சக்தியினால் ஆனது என்னும் ஞானம் ஆகியவை குருமார்களின் மூலமாக வழிவழியாகக் கொண்டுவரப்பட்டுள்ளது. 

பொதுவாக, ஒன்று உருவாக்கப்படும் போது, படைப்பவனும், படைக்கப்பட்ட பொருளும் வெவ்வேறாகும். உதாரணமாக, நீங்கள் ஒரு மெழுகுவர்த்தியை உருவாக்கும் போது, இந்த மெழுகுவர்த்தி என்னிலிருந்து வேறுபட்டது என்று நினைப்பீர்கள்.அதனை உங்களிடமிருந்து பிரித்து வைப்பீர்கள். இது என்னுடைய படைப்பு இது நானல்ல என்று நினைப்பீர்கள். இப்படித்தான் படைப்பவன் ஆகிய இரண்டும் வெவ்வேறானவை என்று மக்கள் நினைக்கின்றார்கள். ஆனால் கடவுள் எங்கும் நிறைந்திருப்பவர் என்று சொன்னால் அவர் படைக்கப்பட்ட அந்த பொருளுக்குள்ளும் இருக்க வேண்டும். எங்கும் நிறைந்தது என்று ஒன்று சொல்லப்படும்போது அதை விட்டு வெளியில் வேறொன்று இருப்பதற்கான இடம் எங்கே இருக்கின்றது? 

நான் அனைத்து சக்திகளையும் உடையவன் என்றால், என்னைவிட சக்தி வாய்ந்த ஒன்று இருக்க முடியுமா? வாய்ப்பே இல்லை. படைப்பு, படைப்பாளி என்பவை  இருவேறு பொருட்கள் இல்லை. இருப்பது ஒரே பொருள்தான். இதனை எப்படி புரிந்து கொள்வது? நடனம், நடனமாடுபவர் என்ற உதாரணத்தை எடுத்துக் கொண்டால், நடனமாடுபவரிடமிருந்து  நடனத்தைப் பிரிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. நடனம் பார்க்கவேண்டுமென்றால் நடனமாடுபவரின் மூலமாகத்தான் பார்க்க முடியும். 

ஒரு ஓவியனும் அவன் வரைந்த ஓவியமும் வெவ்வேறானவை. ஒரு ஓவியன் ஒரு ஓவியத்தை வரைந்துவிட்டு அங்கிருந்து சென்று விடலாம். அப்பொழுதும் அந்த ஓவியம் அதே இடத்திலேயே இருக்கும். ஆனால் ஒரு நாட்டியக்காரர் நாட்டியத்தை விட்டு விலகிச் செல்ல முடியாது. எனவே  படைப்பு , படைப்பவன் என்பது நடனம், நடனமாடுபவர் போன்றது கடவுள் அல்லது அன்பு அல்லது  ஒளி என்று நம்மால் அழைக்கப்படும் சக்தி இந்த வையகம்  முழுவதும் பரவியுள்ளது. இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துகளிலும் ஊடுருவி உள்ளது.இதுவே நம் பண்டைய ஞானத்தின் சாரம் ஆகும். நவீன அறிவியல் விளக்குவதும் அதையே தான். இந்த உலகம் முழுவதும் ஒரே சக்தியினால் ஆனது. இந்த உண்மை தத்துவ ஞானிகளின் பற்பல புதிர்களுக்கு தீர்வளிக்கும். 

கே: பற்றாக்குறை என்பதிலிருந்து மிகுதி என்று எண்ணும் எண்ணங்களின் நிலைக்கு நாம் மாறுவது எப்படி? 

குருதேவ்: அவ்வாறு செய்ய வேண்டும் என்ற உங்களது எண்ணத்திற்கு நீங்கள் ஏற்கெனவே  அந்த திசை நோக்கி நகரத் துவங்கிவிட்டீர்கள் என்று அர்த்தம். உங்களுடைய தேவைகள் என்ன என்று பாருங்கள். அவையனைத்தும் எப்போதும் தீர்த்து வைக்கப்படுவதைக் காண்பீர்கள்.  உங்களுக்குத் தேவையானவை எல்லாம் எப்போதும் உங்களுக்குக் கிடைக்கும். ஆனால் அதற்கென நீங்கள் தவறான எல்லைக்குச் சென்று "நான் எதுவும் செய்ய வேண்டாம்.  அனைத்தும் என்னிடம் வரும்" என்று சொல்ல வேண்டாம். அது தவறு. நீங்கள் முயற்சிகள் செய்வதுடன் மிகுந்த தைரியமும் கொண்டிருக்க வேண்டும்.முயற்சி, தைரியம் இவையிரண்டும் தான் உங்களுக்கு செல்வம் அளிக்கும். 

சமஸ்கிருதத்தில் ஒரு பழமொழி, "உத்யோகினம் புருஷ-சிம்ஹம் உபயாடி லக்ஷ்மி" என்று சொல்கின்றது. அதாவது சிங்கம் போன்று மன தைரியம் கொண்டுள்ள ஒருவன் தன முயற்சிகளனைத்தையும் செய்யும்போது அவனிடம் நிறைய செல்வம் வந்து சேரும். எனவே உங்கள் முயற்சிகள் அனைத்தையும் செய்துவிட்டு ஒரு சிங்கம் போன்று தைரியமாக இருங்கள். உங்களுக்குத் தெரியுமா? ஆண் சிங்கம் மிகவும் சோம்பேறி. பெண் சிங்கம்தான்  வேட்டையாடி இரை கொண்டுவந்து ஆண் சிங்கத்திற்கு கொடுக்கின்றது. ஆண் சிங்கம் இரை தேடி வேட்டையாடும் வேலையைக்கூட செய்யாமல் சோம்பேறியாக இருக்கின்றது.  இருந்தாலும் அது நம்பிக்கையோடு இருப்பதன் காரணமாக அது காட்டிற்கே அரசனாக இருக்கின்றது. ஆகவே உங்களுக்கும் இதுதான் தேவை. சிங்கம் போன்ற கம்பீரமும் நம்பிக்கையும் தேவை. அப்படி இருந்து கொண்டு நீங்கள் உங்கள் நூறு சதவீத முயற்சியையும் செய்தால் செல்வம் உங்களைத் தேடி வரும்.

உட்கார்ந்து பகல் கனவு காண்பதோ அல்லது அதையே நினைத்து ஜுரவேகம் கொள்வதோ  எந்த பலனையும் தராது. அதையே நினைத்து படபடப்பாகி ஜுரவேகம் கொள்ள வேண்டாம்.  ஒரு வேலையை எடுத்து செவ்வனே செய்யுங்கள். உங்களுக்கு செல்வம் தானாக வந்து சேரும்.

கே: குருதேவ்! தாங்கள் பல்வேறு விதமான பிராண சக்தி பற்றி கூறி இருக்கிறீர்கள். மேலும் விளக்கிக் கூற முடியுமா?

குருதேவ்: பத்து விதமான பிராண சக்திகள் இருக்கின்றன. இவற்றில் ஐந்து பெரிய வகையானதும், ஐந்து சிறிய வகையை சேர்ந்ததும் ஆகும். இன்று நாம் பெரிய வகையை சேர்ந்த ஐந்து பிராண சக்திகளைப் பற்றிப் பார்க்கலாம்.

முதலாவது வகை ப்ராணா  உங்கள் தொப்புளில் தொடங்கி தலை வரை மேல் நோக்கி நகருகிறது. இரண்டாவது தொப்புளில் இருந்து கீழ் நோக்கி நகருகிறது.இது அபானா.உங்களது பிராண சக்தி அதிகரிக்கும் போது  உறக்கம் வராது. அபானம் அதிகரிக்கும் போது சோம்பலாகவும், சோர்வாகவும் உணருவீர்கள். இதை கவனித்திருக்கிறீர்களா? மந்தமாகவும் சோம்பலாகவும் இருப்பதற்கு அபான வாயு அதிகரித்தலே காரணம்

மூன்றாவது வகை சமானா ஆகும். இது நமது வயிற்றில் ஜீரணத்திற்கு காரணமான ஜடாராக்னி ஆகும். இது நெருப்பு போன்றது. உணவு செரிமானத்திற்கும் உடல் உறுப்புக்களின் சமநிலை செயல்பாட்டிற்கும் காரணமானதாக விளங்குகிறது.

அடுத்தது உதான வாயு அல்லது உதான பிராணா என்பதாகும். இது நமது நெஞ்சுப்பகுதியில் உணர்ச்சிகளுக்கு காரணமானதாக இருக்கிறது.சுத்ர்சனக்ரியாவின் போது ஏற்படும் அழுகை மற்றும் சிரிப்பு போன்ற உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றன.அதற்கு இந்த உதான வாயு தான் காரணம்.

ஐந்தாவது வகை, வியானா ஆகும். இது உடல் முழுவதும் பரவி இருக்கிறது. நமது உடல் அசைவு மற்றும் இயக்கத்திற்கு காரணமானது. சுதர்சனக்ரியாவின் போது ஒரு வகை சிலிர்ப்பு உடல் முழுமையும் சக்தி பரவுவது போன்ற உணர்வு ஆகியவை ஏற்படுவதைக் கவனித்திருக்கிறீர்களா?

அது என்னவென்றால் சுதர்சனக்ரியாவின் போது இந்த ஐந்து வகை பிராண சக்திகளும் சமநிலைப்பட்டுவிடுகின்றன. அதனால் தான் அழுகை, சிரிப்பு போன்ற உணர்ச்சி வெளிப்பாடுகளும் ஒரு விதமான சிலிர்ப்பும் ஏற்படுகின்றன. தவிர க்ரியா முடிந்ததும் பசி எடுக்கிறது. ஆக, இந்த ஐந்து வகை பிராண சக்திகளும் நம்மை இயக்குகின்றன.சமான வாயு சமமின்மை ஏற்பட்டால் அஜீரணம் வாந்தி இவை ஏற்படுகின்றன. உதான வாயு சமமின்மையால் உணர்ச்சித்தடைகளும் மனக் கோளாறுகளும் ஏற்படுகின்றன. உடலெங்கிலும் வியானா சமமின்மை ஏற்பட்டால் மூட்டு வலி, உடல் இயக்கத்தடை, படபடப்பு, அமைதியின்மை இவை ஏற்படுகின்றன. இவை அனைத்தும் சுதர்சனக் க்ரியா செய்து முடித்தவுடன் சரியாகி விடுகின்றன.முன்பு இருந்த வலிகள்,உடல் இயக்கத்தடைகள் யாவும் நீங்கி விடுகின்றன. இது உங்களுக்கு நிகழ்ந்திருக்கிறதா?

இந்த ஐந்து பெரிய வகை பிராண சக்திகளைத் தவிர ஐந்து வகை சிறிய வகை பிராண சக்திகளும் உள்ளன. அவற்றைப் பற்றிப் பின்னர் பார்ப்போம்.

கே: அன்பும், பற்றற்ற நிலையும் வாழ்கை துணை நிலையில் எவ்வாறு இணையாக அமையும்?
குருதேவ்: ஆழ்ந்த விருப்பு நிலை,பற்றற்ற நிலை இவை இரண்டுமே தேவையானவை. சாதரணமாக நாம்," ஆழ்ந்த விருப்பம் இருக்கும் போது எவ்வாறு பற்றற்று இருக்க முடியும்?அது போலவே பற்றற்ற நிலையில் எப்படி எதையும் ஆழ்ந்து விரும்ப முடியும்?" என்று எண்ணுவோம்.இதுதான் உலகில் மக்களிடையே நிலவி வரும் கருத்து. ஆனால் அவ்வாறு அல்ல.மூச்சு எடுப்பது போன்றது ஆழ் விருப்பம், மூச்சு விடுவது போன்றது பற்றற்ற நிலை. இவை இரண்டிற்கும் இடையே உள்ள நிலை தான் கருணை நிலை.இவை மூன்றுமே மிக அவசியம்.

உலகில் ஏதாவது ஒன்றில் ஆழ்ந்த ஈடுபாடு இருக்க வேண்டும். இல்லயெனில் மன அழுத்தம் ஏற்படும்.அறிவை பெருக்கிகொள்வதில் ஆழ்ந்த விருப்பம் கொள்ளுங்கள், தொண்டு செய்வதில் விருப்பம் கொள்ளுங்கள், சிந்திப்பதில் விருப்பம் கொள்ளுங்கள், அல்லது இது போன்ற ஏதாவதில் விருப்பம் கொள்ளுங்கள்.

வாழ்வில் ஏதேனும் ஒன்றில் ஆழ்ந்த ஈடுபாடு கொள்ள வேண்டும்.அது போலவே பற்றற்ற நிலையும் ஏற்பட வேண்டும்.இல்லையெனில் மகிழ்ச்சி கிடைக்காது. பற்றற்ற நிலை இல்லையெனில் மிகுந்த துன்பம் ஏற்படும். தவிர, நிச்சயமாக கருணை தேவை. ஆகவே மூன்றுமே வாழ்கைக்குத்தேவையானவை.

கே: இப்போது ஒரு வேளை விடுதலை அடைய முடியாமல் போனால் அடுத்த பிறவியில் தங்களுடன் இணைய முடியுமா?

குருதேவ்: ஆம்.நிச்சயமாக. கவலைப் படாதீர்கள்.

கே: குருதேவ்! ஏன் நிறைய தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பதில்லை? மேல்நாடுகளில் என்ன நடக்கிறது?


குருதேவ்: இது பற்றி மருத்துவர்களிடம் தான் கேட்க வேண்டும்.அவர்கள் தாம் சரியான அறுதியீடு செய்வார்கள். நாம் இதை பொதுக் கருத்தாக கொள்ள முடியாது.ஆயினும் மது அருந்துவதும், போதைப் பொருட்களை எடுத்துக் கொள்வதும் ஒரு காரணம் ஆகும். மேலை நாடுகளில் பள்ளி அல்லது கல்லூரிப் பருவத்திலேயே மது அருந்தத் தொடங்கி விடுகிறார்கள். இது சரி அல்ல. போதைப் பொருட்களில் இருந்து மக்கள் விலகி இருந்தால் இவ்வுலகம் இதை விட மிக நன்றாக இருக்கும்.