தெய்வீக - நடனம்

28 - டிசம்பர் – 2012 - பேட் அண்டகஸ்ட், ஜெர்மனி 


கே:  அன்புள்ள   குருதேவ்,  எங்களுக்கு  குரு பரம்பரை பற்றி இன்னும் சற்று அதிகமாக  கூற வேண்டுகிறோம் ?

குருதேவ்:  எப்போது ஆரம்பித்தது  என்று  விவரமாக தெரியாது. ஏனெனில் இது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்  உருவானது. யோகா, தியானம்  பற்றிய அறிவு, மற்றும் இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒரே சக்தியால் உருவானது என்ற கருத்தும் கூட நமக்கு வழிவழியாக, பாரம்பர்யமாக நம் குருக்களின் வழியாக வழங்கப்பட்டதே. பொதுவாக ஏதேனும் உருவாக்கப்பட்டால், உருவாக்கப்பட்ட பொருள் அதை உருவாக்கியவரோடு தனித்து  இருக்கும்.

அதாவது, நீங்கள் ஒரு மெழுகுவர்த்தியை செய்தால், - 'அந்த மெழுகுவர்த்தி என்னிலிருந்து   வேறுப்பட்டது'  என்று கூறி அதை தனியே  வைத்து விடுவீர்கள். 'அது நான் அல்ல, என்னால் உருவாக்கப்பட்டதே' என்று எண்ணிவிடுவீர்கள். இதுபோல் தான் மக்கள், உருவாக்கியவரும், உருவாக்கப்பட்ட பொருளும் இரண்டும்  வேறுவேறானது என்று  நினைக்கிறார்கள். ஆனால் கடவுள்  எங்கும்  இருக்கிறார் என்றால், உருவாக்கிய  பொருளிலும்  கடவுள்  இருப்பார்   இல்லையா.   


ஒரு பொருள்  நீக்கமற எங்கும் வியாபித்திருக்கும் என்றால், அதற்கு வெளியே எப்படி  அதனால்  இருக்க முடியும்? நான் தான் அனைத்திலும்  வல்லவன் என்றால், என்னைவிட வலிமை   மிக்க ஒன்று எப்படி சாத்தியமாகும்? இயலாத ஒன்று. 

எனவே உருவாக்கியவரும், உருவாக்கிய  பொருளும்  வெவ்வேறு அல்ல. ஒரே பொருள் தான். இப்போது, உருவாக்கிய பொருளும்,உருவாக்கியவரும் ஒன்றே என்பதை எப்படி  புரிந்து கொள்வது. நடனம் மற்றும் நடனக்கலைஞர் என்ற உதாரணத்தைப் பார்த்தால், நடனத்தை   நடனக்கலைஞரிடம் இருந்து  பிரித்துப் பார்க்க முடியுமா? கண்டிப்பாக இயலாத  ஒன்று.  

நடனத்தைப் பார்க்க வேண்டும் என்றால் அதை நடனக்கலைஞர் மூலம்தான் பார்க்க இயலும். ஆனால் ஒரு  ஓவியரும் அவரின்  ஓவியமும்  வித்தியாசமானது.அவர் ஓவியத்தை வரைந்து விட்டு நகர்ந்து  விட்டாலும் அந்த ஓவியம் தனியாக  இருக்கும். ஆனால் நடனக்கலைஞர்   அப்படி செய்ய இயலாது. எனவே இவ்வுலகில் உருவாக்கியவரும், உருவாக்கிய  பொருளும், நடனமும் நடனக்கலைஞரும் போன்றது.  

கடவுள், அன்பு மற்றும் ஒளி என்று பல பெயர்களால் நாம் கூறும் அந்த சக்தி, இந்த உலகில் உள்ள  எல்லா படைப்புகளிலும்,  மற்றும் இந்த  பிரபஞ்சத்தில் உள்ள  ஒவ்வொரு நுண்ணிய பொருட்களிலும்  ஊடுருவி உள்ளது. இது தான் பண்டையகால ஞானம்.இதைதான் இப்போது நவீன அறிவியலும், குவாண்டம் விசையியல் விரிவாகக் கூறுகிறது. இந்த உலகம் முழுவதும்  ஒரே மண்டலம், ஒரே சக்தி. இதுவே சமய, சித்தாந்த கருத்துள்ளவர்களின் புதிரை விடுவிக்கிறது.  

கே: குருதேவ் எப்படி குறைமிக்க  அல்லது  இல்லாமை எண்ணங்களை, மிக்க வளம் மிக்க  எண்ணங்களாக மாற்றுவது?

குருதேவ்:  மாற்றவேண்டும் என்ற எண்ணம் எழுந்துவிட்ட போதே நீங்கள் அந்த திசையை நோக்கி பயணிக்க தொடங்கிவிட்டீர்கள் என்று அர்த்தம். உங்கள் தேவைகள் என்ன என்று   அறியும்போது, அவை நிறைவு பெறுவதை நீங்கள்  உணர்வீர்கள். உங்களுக்கு என்ன தேவையோ அது தானாகவே நிறைவேறும்.ஆனால் அதற்காக, 'நான் எதுவுமே செய்ய வேண்டாம்,எல்லாமே என்னைத்தேடி வரும்.' என்று அடுத்த எல்லைக்கு போய்விடக் கூடாது. அதுவும் சரியல்ல. கடின முயற்சியும், துணிவும் இந்த இரண்டும் இருந்தால் செழிப்பு  நம்மைத்தேடி  வரும்.  

சமஸ்க்ரிதத்தில் ஒரு பழமொழி  உண்டு, 'உத்யோகினாம் புருஷ - சிம்ஹம் உபயதி  லக்ஷ்மி'. அதாவது கடின உழைப்பும், சிங்கம் போல் துணிவும் உள்ளவருக்கு செல்வம் தேடி வரும். எனவே கடின உழைப்பு கொண்டு, சிங்கம் போல் இருக்க வேண்டும்.ஆண் சிங்கம்   சோம்பேறியான விலங்கு. பெண் சிங்கம் தான்  வேட்டையாடி இரையை ஆண் சிங்கத்திடம்   கொண்டு வரும். 

ஆண் சிங்கம் இரையை உண்ணும்.இரை  தேடப்போகா, பெண்சிங்கம் தான் எல்லா  வேலையும் செய்யும். ஆண்  சிங்கம் சோம்பேறியாக இருந்தாலும், துணிவோடு இருக்கும், அதுதான் காட்டிற்கே ராஜா. எனவே நீங்களும் சிங்கத்திடம் உள்ளது போல் மாட்சிமை கொண்டு நம்பிக்கையோடு இருக்க வேண்டும். உங்களிடம் நூறு சதவித உழைப்பு  இருக்க வேண்டும் அப்போது தான்  செல்வம் தேடி வரும். உட்கார்ந்து பகல்கனவு காண்பதோ அல்லது அதைப்பற்றி  மிகவும் கவலைப்படுவதோ எந்த பலனும் அளிக்காது. பதட்டப்படாமல் ஒரு நல்ல  திட்டத்தை எடுத்து செயல்படுத்துங்கள். பிறகு  செல்வம் தன்னால்  தேடி வரும்.
  
கே: குருதேவ், நீங்கள் பல வகை பிராண நிலைகள் இருப்பது பற்றி கூறினீர்கள், அதைப்பற்றி  எங்களுக்கு கூறவேண்டும்?

குருதேவ்: பத்து வகை  பிராண நிலைகள்  உள்ளன. இதில் ஐந்து முக்கிய பிராண நிலைகள், மற்றும் ஐந்து சிறியவை. இன்று நான் அந்த ஐந்து முக்கிய பிராண நிலைகளைப் பற்றி கூறுகிறேன். முதலில் 'பிராண' என்ற நிலை நம் நாபியிலிருந்து தொடங்கி தலை உச்சிவரை உள்ளது.மற்றொன்று  நாபியிலிருந்து தொடங்கி கீழே செல்வது,'அபான' ஆகும். பிராணவாயு அதிகமாக இருக்கும் போது  ஒருவரால்  தூங்க  இயலாது, 

தூக்கமின்மை மற்றும் நடுக்கம் இருக்கும். அபான நிலை மேலோங்கி இருக்கும் போது,மிகவும் மந்தமாக  படுக்கையை விட்டு எழுந்து கொள்ளவே  சோம்பலாக இருக்கும்.  நீங்கள் இதை உணர்ந்து இருக்கிறீர்களா? சில சமயம் பெரும் சுமையாக, மந்தமாக  இருக்கும். இது அபான நிலையின் சமச்சீரின்மையால் வருவது. மூன்றாவது 'சமான' பிராண நிலை. இது ஜீரண உறுப்பான,வயிற்றில் ஜடாக்னியாக விளங்குகிறது. இதுதான்  அக்னியாக  ஜீரணத்திற்கு  உதவுகிறது.  

'சமான' என்பது அஜீரணத்தை சீர் செய்யும். மற்ற உறுப்பு மண்டலங்களையும் சீர் செய்கிறது.  பிறகு  'உதான  வாயு' அல்லது 'உதான பிராண'  என்று ஒன்று உள்ளது. இது எங்கோ   இதயத்திற்கு அருகே  உள்ளது. உணர்வுகளுக்கு இதுவே காரணமாய் அமைகிறது. சுதர்ஷன் கிரியாவில் பலர் அழுவர் அல்லது சிரிப்பார், பலவகையான உணர்ச்சிகள்  வெளிப்படும். இது உதானவாயுவினால் தான். ஐந்தாவது வகையான பிராணவாயு வ்யான' எனப்படும். இது உடலில் ஏற்படும் அசைவுகளுக்கு காரணமாகிறது.இது உடலெங்கும் பரவியுள்ளது. சுதர்ஷன் கிரியாவில் உடலில் சில சிலிர்ப்பு, கூச்ச உணர்வுகள் ஏற்படும் இல்லையா?  

சுதர்ஷன் கிரியாவின் போது என்ன நடக்கிறது, ஐந்து பிராண நிலைகளும் சீராக இருக்கும், அதனால் தான் சில சமயம் அழுகையும், சிரிப்பும் , சிலிர்ப்பு தன்மையும் ஏற்படுகிறது. அது தான்சுதர்ஷன் கிரியாவின் சிறப்பு தன்மை.கிரியா முடிந்ததும்  சிலசமயம் மிகவும் பசியாக இருக்கும்  இல்லையா? எனவே நம் உடலின்  ஐந்து  பிராணநிலைகளும் நம் உயிரை இயக்குகிறது.  

சமான நிலை சீராக இல்லாத போது, அஜீரண நிலை உருவாகும் அல்லது வயிற்றுப்பிரட்டல் ஏற்படும். இவையெல்லாம் 'சமான'  நிலை சீராக இல்லாததால் ஏற்படுகிறது. உதான ப்ராணா நிலை செயல் இழக்கும் போது, மனதின்  சிந்தனையை எண்ணத்தை தடை செய்யும் வண்ணம் ஒரு உணர்ச்சித்தடை உருவாகிறது.

உடல் முழுவதும் இருக்கும்  வ்யான நிலை சீராக இல்லாதபோது,மூட்டுவலி அல்லது நடுக்கம், அமைதியின்மை ஏற்ப்பட வாய்ப்புண்டு. உடலில் அசௌகர்யமும், அமைதியின்மையும்   ஏற்படுவது,வ்யான சமச்சீரின்மையால் தான்.  

சுதர்ஷன்கிரியா செய்த பிறகு உடலில் இந்த அசௌகர்யங்கள்,வலிகள் இவை நீங்கி விடுவதை உணர்ந்திருப்பீர்கள் இல்லையா? எனவே ஐந்து  வகையான பிராண நிலைகள் உள்ளன. ஐந்து கிளை பிராண நிலைகளும் உள்ளது அதை பிறகு பார்க்கலாம்.

கே: குருதேவ், அன்பும்,உணர்ச்சிவயப்படாத நடுநிலை தன்மையும் வாழ்க்கைத்துணைக்கு எவ்வாறு ஏற்புடையதாக இருக்கும்?

குருதேவ்: வாழ்வில் பற்றும், பற்றற்ற தன்மை இரண்டும் வேண்டும்.பொதுவாக, 'நான் பற்று உடையவனாக இருக்கும் போது எப்படி  உணர்ச்சி வயப்படாமல் பற்றற்று  இருப்பது? நான் நடுநிலையாக உணர்ச்சிவயப்படாமல் இருக்கும்போது எப்படி ஏதாவது ஒன்றின் மீது பற்றோடு   இருப்பது' என்று நினைப்போம்.இதுதான் மக்கள்  மனதில் உள்ள பொதுவான கருத்து. அது போல் அல்ல. அதாவது மூச்சுக்காற்றை உள்ளே இழுப்பது ஒரு பற்றுதலோடு செய்வது என்றும் மூச்சை வெளியேவிடுவது பற்றற்ற நிலை என்றும் வைத்துக்கொண்டால்,இதன் இரண்டுக்கும் நடுவே   இருப்பதுதான் காருண்யம் (கருணை)ஆகும். 

இது மூன்றுமே நமக்கு வேண்டும்.வாழ்வில் ஏதேனும் ஒரு பற்றுதல்  வேண்டும், இல்லையேல் மன அழுத்தம் உருவாகிவிடும். பற்றுதல் ஞானத்தோடு, பிறர்க்கு சேவை செய்வதற்கு அல்லது எதைப் பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம்.கண்டிப்பாக  வாழ்வில் ஏதாவது ஒன்றின் மீது   பற்றுதல் வேண்டும்.பற்று மிகவும் அவசியம்.பற்றற்ற நிலையும் வேண்டும். இல்லையேல் வாழ்வில் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்காது. வாழ்க்கையில் பற்றற்ற  நிலை இல்லையேல் மிகவும்  துயர்மிக்கதாகி விடும்.

கே: இந்தமுறை நாங்கள் மோக்ஷம் அடையவில்லை என்றால் என்ன ஆகும்? நாங்கள் அடுத்த பிறவியிலும் உங்களோடு இருப்போமா?

குருதேவ்: ஆம். நிச்சயமாக. அதைப் பற்றி கவலைப்படவேண்டாம்.   

கே: குருதேவ், பல  தம்பதியர்களுக்கு ஏன் குழந்தையில்லை? மேற்கு நாடுகளில் என்ன நடக்கிறது?

குருதேவ்: அதைப் பற்றி  நீங்கள் மருத்துவர்களிடம் தான் கேட்க வேண்டும். அவர்கள் சரியாக ஆய்ந்து கூறுவார்கள்.இதற்கு பொதுப்படையாக விடை கூறமுடியாது.நிச்சயமாக ஒரு  காரணம் மது அருந்துதல்,போதை வகைகள். இவை  நல்லதல்ல. மக்கள்  தங்கள்  கல்லூரி  மற்றும் பள்ளி நாட்கள் முதலே மது அருந்தத்தொடங்கி விடுகிறார்கள். அது மிகவும் தவறானது.போதை மருந்துகளிடம் இருந்து விலகினால் இந்த உலகம் மிகவும்  மேம்பட்ட சிறந்த  இடமாக இருக்கும்.