உண்மையில் எல்லாமே சூனியத்தில் அடங்கியுள்ளது

22 மார்ச் 2014  

பாத் ஆண்டகாஸ்ட், ஜெர்மனி


நாம் ஸ்விட்சர்லாந்திலிருந்து வந்திருக்கும் ஶ்ரீலங்காவின் கோயில் உறுப்பினர்களை வரவேற்கலாம். அவர்கள் ஒரு அருமையான தொன்மையான தமிழ்ப்பாடலை பாடினார்கள். அதன் பொருள் மிக அழகானது.

தமிழ் மிகவும் தொன்மையான மொழி. 10000 - 15000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழக்கில் உள்ள ஒரு மொழி. தமிழ் மற்றும் சமஸ்கிருதம் இரண்டுமே தொன்மையான மொழிகளாகும். ஜப்பானிய மொழியில் 70% தமிழ் வார்த்தைகள் உள்ளன என்று சொல்கிறார்கள். தமிழ் வார்த்தைகள் இந்தோனேசியா மற்றும் அதை சுற்றியிருக்கும் நாடுகளில் பேசப்படும் மொழிகளிலும் உள்ளன. ஹவாய் தீவிலும் தமிழ் வார்த்தைகள் பரவியுள்ளன. அமெரிக்காவிலும் பல தமிழ்ப் பெயர்கள் வழக்கில் உள்ளன.

“குரு” என்பது “எது உள்ளதோ அல்லது எது இல்லாமல் இருக்கிறதோ” அதிலிருந்து வந்தது. இதற்கு ஒரு ஆழமான அர்த்தம் இருக்கிறது. குரு என்பது எது உள்ளதோ அதிலிருந்தும் எது இல்லையோ அதிலிருந்தும் உன்னை வந்தடைகிறது. இறைத்தன்மை எப்போதும் நிலையாக இருப்பது. இறைத் தன்மையிலும் குருதத்துவம் உள்ளது. அவர்கள் பாடிய பாடல் மிகவும் தொன்மையான பாடலாகும். அதன் பொருள்: குரு என்பவர் உன் தாயை போன்றவர். உன் தாய் உன்னை அணைத்து காப்பதைப் போல் உன்னைக் காப்பவர். குரு உன் தந்தையை போன்றவர். நீ விளையாடிக் கீழே விழும்போது வந்து தூக்கி விடும் தந்தையை போல, நீ சோர்வாக இருக்கும் போது தட்டிக் கொடுத்து உற்சாகமூட்டுபவர்.

குரு தாயை போல் அன்பு செலுத்துபவர். தந்தையை போல் உன்னைக் காப்பவர். ஒரு நண்பனை போல் உன்னுடன் விளையாடுபவர். குரு என்பவர் உன் “சகா”. அதாவது நண்பன். குரு தாயைப் போன்றவர். தந்தையைப் போன்றவர். நண்பனைப் போன்றவர். ஒரு குழந்தையை போன்றவர். அப்படிப் பட்ட குருவை நான் மதித்து வணங்குகிறேன்.

குரு தத்துவம் எங்கிருக்கிறது? உன் வாழ்வில் குரு எப்படி வருகிறார்? குரு (“உருவாய்”) உருவமுள்ளவராகவும் (“அருவாய்”) உருவம் இல்லாதவராகவும் வருகிறார். அவர் உன் அறிவாய் வருகிறார். குரு உன்னுள் இருக்கும் ஒளியாய், ஞானமாய் வருகிறார். இப்படி இந்தப் பாடலில் பல கருத்துக்கள் அடங்கியுள்ளன. “குரு உளதாயும், இலதாயும் வருகிறார்.” இதற்கு மிகவும் ஆழமான பொருள் உள்ளது. குரு நிலையில்லாத உலகில், நிலையாக இருக்கும் இறைத் தத்துவமாக வருகிறார். குருவை ஒரு மணியைப் போல் (விலைமதிப்பற்ற இரத்தினம் போல்) பார்க்க முடியும். குரு பார்க்க முடியாத அறிவை நமக்கு உணர்த்துபவர். அந்த ஒளி (அறிவொளி) ஒரு மலரை போன்றது. ப்ரகாசமான சுடரை போன்றது.

இப்பாடலின் கருத்து பின் வருமாறு:

இறைமை எல்லா உருவங்களிலும் பார்க்கும் பொருள்களிலும் உள்ளது. இறைமையான நீ குருவின் உருவில் எனக்கு அருள் புரிய, என்னை ஆசிர்வதிக்க என்னை வந்தடைகிறாய். உருவமுள்ள / உருவமற்ற ஒரே இறைவனே, பார்க்க முடிந்த உருவாய், பார்க்க முடியாத அருவாய், ஒளியுடைய மலரைப் போன்ற, ப்ரகாசமான சுடரை போன்ற, குருவின் உருவில் என் வாழ்வில் வந்து எனக்கு அருள் செய். என்னை வாழ்த்து. இந்தப் பாடல் பழங்காலத்தில் தமிழ் மொழியில் இயற்றப்பட்டது. 64 சமயக் குரவர்கள் சிவ தத்துவத்தை பாடல்களாக இயற்றினார்கள்.14 ஆழ்வார்கள் விஷ்ணு தத்துவத்தை எழுதினார்கள். இந்தப் பாடல்கள் தமிழில் இயற்றப்பட்டன. இந்தப் பாடல்களில் அரிய ஞானம் அடங்கியுள்ளன.

சிவனை பற்றி சொன்னார்கள். சிவன் எப்படிப்பட்டவர்? சிவனை சிதம்பரம் என்று சொல்லலாம். சிதம்பரம் என்றால் உள்ளிருக்கும் ஆகாயம் என்று அர்த்தம். நம் உள்ளே இருக்கும் அளவிட முடியாத அறிவின் ஆகாயம் போன்றவர் சிவன். குரு என்பவர் யார்? குரு என்பவர் உனக்கு அறிவென்ற மாலையை அணிவிப்பவர். இந்த மாலையில் உள்ள இரத்தினங்கள் காலியிடத்தைக் குறிப்பவை. இதை ஆங்கிலத்தில் “ஆக்ஸிமோரான்” என்று சொல்வார்கள். இரத்தினங்கள் உருவமுள்ளவை. (அளவிட முடியும்). காலியிடம் எல்லையற்றது. (அளவிட முடியாதது.)
எல்லையற்ற ஞானம் இரத்தினங்களை போல் அளிக்கப்படுகிறது. இது தியானத்தை குறிக்கிறது. அடிப்படையில் குரு என்பவர் அளவிட முடியாத ஞானத்தை தியானம் என்ற அனுபவம் மூலமாக உனக்கு அளிப்பவர். இந்த அழகான பாடல் இன்று வரை பாதுகாக்கப்ட்டுள்ளது. நூற்றாண்டுகளாக இப்பாடலை காத்து பாடி வரும் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். இந்தியாவில் இப்படிப்பட்ட பாடல்களை நாம் தொலைத்து விட்டிருக்கிறோம். இலங்கைத் தமிழர்கள் இவற்றை போற்றி வைத்திருக்கிறார்கள்.

20 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு கொடுஞ்செயலால் பல தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குக் குடி பெயர்ந்தனர். இம்மக்கள் ஐரோப்பாவிலும் தங்கள் கலாசாரத்தை போற்றி காத்து வருகிறார்கள். அவர்களுடைய சந்ததியினரும் இக் கலாசாரத்தை காப்பார்கள் என்று நம்புகிறேன். தமிழ் ஒரு தொன்மையான மொழி. தமிழ் கலாசாரம் போற்றத் தக்கது. பழங்காலத்தில் பல ஞானிகள், குருக்கள் மக்களுக்கு அறிவூட்டி வந்தார்கள். தங்கள் பெயர்களை எழுதாமல், ஒரு குறியீடாக வரைந்து இப்பாடல்களைத் தொகுத்துக் காத்து வந்தார்கள். ஒரு சிறுவனில் கையில் குச்சி இருப்பது போல் வரைந்து அதை முருகன் என்றழைத்தார்கள். (தண்டபாணி). முருகன் (கார்த்திகேயன்) சிவனின் மகன் என்றழைக்கப் பட்டான். குருவாக மதிக்கப்பட்டான். முருகன் எல்லா ஞானிகளையும், குருக்களையும் குறிக்கும் தெய்வமாக வணங்கப்படுகிறான். 

தென் இந்தியாவில் முருகன் கோயில் இருக்கும் இடங்களில் ஒரு ஞானியின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கும். அந்த ஞானி, சித்தர் தன் உடலைத் துறந்து பல ஆண்டுகளுக்கு பின்பும் அவருடைய சக்தி அந்த ஞானத்தின் அதிர்வலைகள் அங்கு இன்றும் இருக்கிறது. அவர் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் மேல் முருகன் சிலையை அமைத்து (தண்டம் ஏந்திய சிறுவனின் உருவம்) வழி படுகிறார்கள். யாகம் செய்யும் போது பஞ்ச பூதங்களான ஆகாயம், காற்று, தீ, நீர் மற்றும் பூமியை நினைவு கூர்ந்து கண்ணுக்குத் தெரியாத நுட்பமான ஆகாயத்திலிருந்து கண்ணுக்குத் தெரியும் பூமி வரை இறைச் சக்தி கொண்டு வரப்படுகிறது. இது ஒரு உத்தியாகும்.
இப்படிப்பட்ட பாரம்பரியத்தின் தூய்மை, இந்த உத்திகள் எல்லாமே தொலைந்து வருகின்றன. ஆனாலும் நம் பெங்களூர் ஆசிரமத்தில் இப்படிப்பட்ட பாரம்பரியமான யாகங்களை இன்றும் நடத்தி வருகிறோம். நீங்கள் ஆசிரமத்தில் வேதம் படிக்கும் மாணவர்களைப் பார்த்திருப்பீர்கள். நம் பாரம்பரியமான வேத ஆகமங்களை அவர்கள் கற்று வருகிறார்கள். அப்படி செய்யா விட்டால் இந்த வழக்கங்கள் மறைந்து விடும். நாம் 1981ம் ஆண்டு வேத பாடசாலையை துவங்கினோம். கிட்டத்தட்ட அதே சமயம் வாழும் கலை அமைப்பையும் துவங்கினோம். அழிந்து வரும் வேத ஆகம முறைகளைக் காத்து வளர்க்க வேத பாடசாலை அமைத்தோம். பல வேத விற்பன்னர்களை அழைத்து, சிறுவர்களுக்கு வேத பாடம் நடத்தும் படி வேண்டினோம். இது இவ்வுலகத்தின் பாரம்பரியமாகும். இவை அழிவதை நாம் விரும்பவில்லை. உண்மையில் காலப்போக்கில் பல வேத பாடல்கள் அழிந்து விட்டன.

தற்சமயம் பெங்களூரில் ஆயுர்வேத மருத்துவ மாணவ மாணவியருக்கு, ஆயுர் வேதம் பற்றிய அறிவை போதிக்கிறோம். 1981 ம் ஆண்டில், பல ஆயுர்வேத முறைகள் அழியும் நிலையில் இருந்தன. ஷிரோதரா என்ற மருத்துவ உத்தி கேரள மாநிலத்தில் சில கிராமங்களில் மட்டுமே நடை முறையில் இருந்தது. வட இந்தியாவில் இதை பற்றி யாரும் அறியவில்லை. டில்லியில் ஷிரோதரா என்றால் யாருக்கும் தெரியாது. டில்லியில் உள்ளவர்களுக்கே அது தெரியாத போது மற்ற உலக மக்களுக்கு எப்படித் தெரிந்திருக்க முடியும்?

அப்போது நாம் டில்லியில் ஒரு ஆயுர்வேத மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தோம். கேரளாவின் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களை அம் மாநாட்டுக்கு அழைத்து மற்றவர்களுக்கு அந்த உத்தியை கற்றுக் கொடுக்கச் செய்தோம். கடந்த 35 ஆண்டுகளாக இந்த முறை ப்ரபலமாக இருக்கிறது. மற்றும் பல வேத ஞானங்களும், உதாரணத்துக்கு வாஸ்து சாஸ்திரம் (கட்டடங்களில் இருக்கும் சக்தியை ஒருமைப்படுத்தும் அறிவு) மற்றும் ஜோதிட சாஸ்திரம் பற்றிய பல நூல்கள் அழிந்து விட்டன. வாஸ்து சாஸ்திர நூல்களில் பல இன்று நம்மிடம் இல்லை. வேதங்களில் சாம வேதத்தில்1000 கிளைகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இன்று நம்மிடம் 3 கிளைகள் பற்றிய ஞானமே உள்ளது. அதே போல ரிக் வேதத்தில் 21 கிளைகள் இருந்ததாக அறிகிறோம். ஆனால் இன்று நம்மிடம் ஒரு கிளையைப் பற்றிய ஞானமே இருக்கிறது.

மத்திய காலத்தில் பல நன்னூல்கள் அழிந்துவிட்டன. ஒரு வெறி பிடித்த முகலாய மன்னன் புத்தகங்களை எரித்து, பல்கலைக் கழகங்களை மூடச் சொல்லி ஆணையிட்டதாக அறிகிறோம். பல மக்கள் இப் புத்தகங்களை மனப்பாடம் செய்து காத்து வந்தார்கள். இப்போது அப்படிப் பட்டவர்கள் நம்மிடையே இல்லை. எனவே வாழும் கலையில் நாம் இந்த வேத நூல்கள் அளிக்கும் அறிவுரைகளைக் காத்து பின் வரும் சந்ததியர்களுக்கு அளிக்க உறுதியாக இருக்கிறோம். இந்த ஞானத்தைக் காத்து வளர்க்க வேண்டும்.

தமிழ் நாட்டில் பல தமிழ் நன்னூல்களைக் காத்து அச்சிட்டிருக்கிறார்கள். சமஸ்கிருத நூல்களில் பல நமக்குக் கிடைக்கவில்லை. பாரம்பரிய ஞானத்தைக் காக்கும் இலங்கை தமிழ் மக்களுக்கு நாம் நன்றியைத் தெரிவிக்க வேண்டும். இலங்கையில் இன்றும் சித்த மருத்துவம் பின்பற்றப்படுகிறது. அதுவும் குறைந்து வருகிறது. சித்த மருந்துகள் ஆயுர் வேத மருந்துகள் போல் நன்கு செயல்படுபவை. ஆனால் வித்தியாசமானவை. சித்த மருத்துவ முறையை பாதுகாக்க வேண்டும். இன்று மக்களிடையே சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளுக்கு வரவேற்பிருக்கிறது. அந்த மருத்துவ முறைகளின் பயனை உணர்ந்த மக்கள் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவர்களிடம் செல்கிறார்கள்.

சீன மருத்துவ முறையும் நம் ஆயுர்வேத மருத்துவ முறையின் ஒரு கிளை தான். புத்த மதம் இங்கிருந்து சென்ற போது, நம் மருத்துவ முறைகளும் அங்கு சென்றன. அங்கும் கைநாடியைப் பரிசோதித்து மக்களுக்குத் தேவையான மருந்துகளைக் கொடுக்கிறார்கள். சீன நாட்டிலும் பல விதமான மூலிகைகள் இருந்தன. இடம் மற்றும் உணவுப் பழக்கத்துக்கேற்ப மருந்துகள் தேர்வு செய்யப் படுகின்றன. சீன மருந்துகள் அங்கு தயார் ஆனாலும், அவற்றின் மூல தத்துவம் இந்தியாவிலிருந்து சென்றதாக அறிகிறோம். அதே போல் நாம் சித்த மருத்துவ முறையிலும் கவனம் செலுத்த வேண்டும். சித்த மருந்துகள் கற்பூரத்தை அடிப்படையாகக் கொண்டவை. பொதுவாக சித்த மருந்துகள் பசை போன்று (நாம் சாப்பிடும் லேகியம் போல்) இருக்கும். நாம் ரொட்டியுடன் ஜாம் கலந்து சாப்பிடுவது போல், ரொட்டியுடன் சித்த மருந்தைத் தடவி சாப்பிடலாம். இம் மருந்துகளில் கற்பூர வாசனை இருக்கும்.

இது சரித்திரம் ! “எல்லாமே சூனியத்தில் அடங்கியுள்ளது“

பகவான் புத்தர் இதை இதய சூத்திரம் என்றழைத்தார். எல்லாம் சூனியத்தில் அடக்கம் என்று நீ அறியும் போது, உன்னுள் அன்பு உதயமாகும். இல்லாவிட்டால் அகம்பாவம் தலையெடுக்கும். எல்லாம் சூனியத்தில் அடங்கியுள்ளது என்று நீ அறியும் போது அகம்பாவம் கரைந்து விடும். அகம்பாவம் கரையும் போது அன்பு மலரும். நீ அன்பே உருவானவன் / உருவானவள்.

எல்லோரும் ஆனந்தமாக இருக்கிறீர்களா ? இரண்டு நாட்களுக்கு முன் உலக ஆனந்த தினம் கொண்டாடப்பட்டது. நமக்கு எல்லா நாட்களும் ஆனந்த தினம் தான். நாம் செய்ய வேண்டியது அந்த ஒன்றுக்கு மரியாதை அளிப்பது மட்டுமே. அந்த ஒன்று என்ன? சூனியத்தை கௌரவிக்க நீ கற்றுக் கொள்ள வேண்டும். ஏதாவது செயலுக்கு முன்னும் ஒன்றும் இல்லை. செயலுக்குப் பின்பும் ஒன்றும் இல்லை. எனவே எல்லாமே சூனியத்தில் அடங்கியுள்ளது. அந்த ஒன்றுமில்லாத, எல்லாவற்றையும் அடக்கிய சூனியத்துக்கு மரியாதை செய். அது தான் முக்தி / விடுதலை. ஏசுபிரான் சொன்ன இரட்சிப்பு இது தான். பகவான் புத்தர் சொன்ன நிர்வாணம் இது தான். ஆதிசங்கரர் சொன்னபடி, நம் வேத பாரம்பரியப்படி சொல்லப்பட்ட முக்தி / மோக்ஷம் என்பதுவும் இது தான்.

ஒரு உணர்ச்சிக்கு முன்பு ஒன்றும் இல்லை. உணர்ச்சிக்குப் பின்பும் ஒன்றும் இல்லை. எப்போதும் நிலையானது ஒன்றுமில்லாத சூனியம் மட்டுமே. எனவே நீ எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாய் என்று பார்! சூனியத்தில் எல்லாம் அடங்கியுள்ளது. வாழ்வில் சில இனிமையான நிகழ்ச்சிகள் வரும். கசப்பான நிகழ்ச்சிகளும் வரும். சிலர் உன்னைத் திட்டுகிறார்கள். சிலர் உன்னைப் பாராட்டுகிறார்கள். ஆனால் முடிவில் ஒன்றும் கிடையாது. பல உறவுகள் வருகின்றன. பல உறவுகள் முறிகின்றன. முடிவில் எல்லாவற்றிலும் ஒன்றும் இல்லை.

சூனியத்தில் எல்லாம் அடக்கம் என்று நீ அறியும் போது அன்பு உதயமாகிறது. அப்படி இல்லாத போது, எனக்கு இது வேண்டும்; இதை நான் என்னிடம் தக்க வைக்க விரும்புகிறேன்; அகம் பாவம் தலையெடுக்கிறது. எல்லாம் சூனியத்தில் அடக்கம் என்று நீ அறியும்போது அகம்பாவம் கரைகிறது. அன்பு பெருகிறது. உண்மையில், நீ அன்பே உருவானவன் / உருவானவள். அன்பு உலகத்துக்கு பொதுவானது. அன்பு நிலையானது. ஒவ்வொரு மனித உயிரும் அன்புக்காக ஏங்குகிறது. இதய சூத்திரத்தின் மூலம் இதைப் பெற முடியும். எல்லாம் சூனியம் தான் என்பதை அறிவதே இதய சூத்திரம். 

நீ தாமரை மலர் போலிருக்க வேண்டும் என்று சொல்லப் படுகிறது. ஏன் என்று உனக்கு தெரியுமா? தாமரை மலர் சேறு நிரம்பிய குளத்தில் இருந்தாலும், ஒரு சொட்டு நீர் கூட, ஒரு சிறு துளி சேறு கூட அதில் ஒட்டாது. தாமரை இலை தண்ணீரிலேயே இருந்தாலும் அதன் மேல் ஒரு சொட்டு நீர் விட்டால், அது இலையில் ஒட்டாமல் ஒரு இரத்தினக் கல் போல் ஒளி விடும். எனவே உலகில் ஒரு தாமரை இலை போல் வாழ வேண்டும். உலகில் நடக்கும் எதிலும் ஒட்டாமல் வாழ வேண்டும். உலக நிகழ்வுகளில் சிக்கிக் கொள்ளாமல் மேலே செல்ல வேண்டும். எல்லா செயல்களிலும் ஈடுபடு. ஆனால் அது உன் தலைக்கேறாமல் (அகம்பாவமில்லாமல்) இருக்க வேண்டும். உங்களில் எவ்வளவு பேருக்கு இக்கருத்து பிடித்திருக்கிறது? இப்படி இருந்தால் நீ இவ்வுலகில் பைத்தியமாகாமல் வாழ முடியும். தாமரை இலை நீர் போல் வாழ்க்கையில் பற்றற்று இருக்க வேண்டும் என்ற அறிவுரை எங்களுக்கு சிறு வயதிலேயே கிடைத்தது.