வெள்ளிகிழமை, 14 மார்ச், 2014
வாரணாசி, உத்தரப்பிரதேசம்.
(மலைகளை
நம்பிக்கையுடன் அசையுங்கள், பதிவின் தொடர்ச்சி கீழே தரப்பட்டுள்ளது.)
இந்தியாவில், இறந்தவர்களின் நினைவாக
தர்ப்பணம் என்னும் சடங்கு செய்யப்பட்டு
வருகின்றது. எள்ளும் நீரும் கலந்து மறைந்தவர்களின் பெயரால் பிரசாதமாக தரப் படுவது ஆகும்.
இங்குள்ள எதனை பேர் இதை செய்கின்றீர்கள்? இந்த சடங்கின் முக்கியத்துவம்
என்னவென்று தெரியுமா? இந்த சடங்கின் மூலமாக இறந்தவர்களின் ஆத்மாவிடம் " அன்பானவரே!
இந்த உடலை விட்டு நீங்கிய தாங்கள், உங்களுடைய ஆத்மப் பயணத்தை தொடருமாறு பிரார்த்திக்கின்றோம்.
இந்த எள்ளைப் போன்று என்னன்ன சிறிய மற்றும் அற்பமான ஆசைகள் இன்னும் உள்ளதோ அவற்றை விட்டுவிடுங்கள்.ஆசைகளையெல்லாம், உங்களுக்காக நாங்கள் நிறைவேற்றுகின்றோம். நீங்கள் திருப்தியுடன் நிலைபேறுடைய பயணத்தை தொடருங்கள்" என்னும் செய்தியினை
அளிக்கின்றோம்.
சிறப்புடைய ஆன்மாக்கள் நமக்கு
அற்புதமான ஞானத்தை அளித்திருக்கின்றார்கள்.ஆயினும் இன்று நாம் அவற்றிலிருந்து தூர விலகி
நிற்கின்றோம். இந்த இடைவெளியை நாம் நிரப்பி தெய்வீகத்தின் அன்பில் நாம் மூழ்கித் திளைக்க
வேண்டும். இந்த சடங்கை செய்யும் ஒருவர்,நீரினை அளிக்கும் போது, த்ரிப்யதாம்! த்ரிப்யதாம்!
த்ரிப்யதாம்! என்று கூறுகின்றார். அதாவது திருப்தியுடனும் அமைதியுடனும் இருங்கள் என்பதாகும். மூன்று முறை இதை உச்சரிப்பதன்
மூலம்,"உடல், மன மற்றும் ஆன்மீகரீதியாக எப்போதும் திருப்தியுடன் இருங்கள் என்று
பிரார்த்திக்கின்றோம்.ஏதேனும் ஆசைகள், அதிபௌதிக் (பொருட்கூறு தொடர்பான ஆசை)அதிதைவிக்
(இறைவன் அல்லது ஒருவனது விதி தொடர்பான ஆசை) அல்லது அத்யாமிக் (ஆன்மீகத் தொடர்பான ஆசைகள்)
இருந்தால் உங்களுக்காக அவற்றை நாங்கள் நிறைவேற்ற முயற்சிக்கின்றோம். அந்த ஆசைகள் இந்த
எள்ளினைப் போன்று சிறியவை.எனவே அவற்றை விட்டு விட்டு நீங்கள் இறைவனை நோக்கி உங்களது
நிலைப்பேறுடைய பயணத்தை தொடருங்கள்" என்று கூறுகின்றோம்.
இவ்வாறு இளையவர்கள், மறைந்தவர்களுக்கு
வாழ்விற்குப் பின்னர் முன்னேறிச் செல்ல ஊக்குவிக்கின்றனர். அதனால் தான், ஒருவன் விடுதலை
அடைய அவனது பிள்ளைகள் உதவுவதாக கூறுகின்றனர். ஏனெனில்,ஒருவனுக்கு பிள்ளைகள் இருந்தால்,அவர்கள் தங்களது முன்னோர்களுக்கு இந்தச் சடங்கினை செய்து அவர்கள் திருப்தியடைய வழிவகுக்கலாம்.
ஆனால் ஒருவனுக்குக் குழந்தைகள் இல்லையெனில் அவனால் விடுதலை அடைய முடியாது என்பது இங்கு
பொருள் அல்ல. ஞானமே விடுதலைக்கு வழி வகுக்கும். எனவே இப்போது மரணம் என்பதை மறந்து விடுங்கள். இப்போதே, உயிருடன் இருக்கும் போதே,
இந்த ஞானத்தின் மூலம் உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். அது என்ன? "இந்த படைப்பினைப் படைத்தவன் என்னைச் சார்ந்தவன்,
என்னுள்ளேயே வசிக்கின்றான்" என்னும் ஞானமே. இந்த ஆழ்ந்த நம்பிக்கை உணர்வினைக் கொண்டிருப்பது
தெய்வீக அன்பில் திளைத்திருப்பதாகும்.
.
ஞானிகள் மற்றும் துறவிகளால் இதுவே
பல்வேறு வழிகளில் கூறப்பட்டுள்ளது. குருநானக், "ஏக் ஓங்கார் சத்நாம்" என்றும்,
புத்த பெருமான், நிர்வாணா என்றும் மகாவீரர்
‘சுய ஞானம்’ என்றும் கூறியுள்ளனர் .வேதாந்த
தத்துவங்களில், பிரம்ம ஞானம் என்றும், இஸ்லாமிய ஸூபி துறவிகள் இதை அன்ஹலக்
என்றும் கூறுகின்றார்கள். முஹம்மது நபி கிழக்கில், இந்தியாவிலிருந்து குளிர்ந்த காற்று
வீசுவதை தான் உணர்ந்ததாக கூறியிருக்கின்றார்.அவர், அறிவார்ந்தவர்களின் மை ஒரு
ஜெஹாதியின்(அநீதிக்கு எதிராகப் போராடுபவன்)
ரத்தத்தை விட மதிப்பு வாய்ந்தது என்றும் கூறியுள்ளார். ஒரு வாளை விட பேனா வல்லமை மிக்கது
என்பது அவரது கூற்று.சிறந்தவர்கள் நமக்கு அற்புதமான
அறிவுச் செறிவினை நமக்கு அளித்திருக்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக இன்று நாம்
அவற்றிலிருந்தெல்லாம் விலகி நிற்கின்றோம். இந்த இடைவெளியை நாம் நிரப்பி தெய்வீகத்தின்
அன்பில் நாம் மூழ்கித் திளைக்க வேண்டும். இது வாழ்வின் ஒரு முக்கியமான அங்கம் ஆகும்.
இதுஇன்றி வாழ்க்கை வரண்டு பொருளற்று இருக்கும். வாழ்க்கை நிறமற்று தோன்றும்.
நாம் எங்கு சென்றாலும் நம்முள்ளிலிருந்து
அன்பு மற்றும் மகிழ்ச்சியின் மணம் பரப்பிக்கொண்டே இருக்க வேண்டும். வசந்த காலத்தில்
நமது வாழ்க்கை மலர்ந்து உற்சாகம் மற்றும் அன்பின் நிறம் அணிந்திருக்க வேண்டும்.நமது
முகம் மகிழ்ச்சியில் ஒளிவீசி,குரல் இனிமையான ஒலி அலைகளில் அதிரவேண்டும், இறைமையில்
ஆழ்ந்த நம்பிக்கையுடைய நிறமே வாழ்வின் நிறமாக வேண்டும். நம்மை சமுதாயத்திற்கும் நாட்டிற்கும்
நல்லது செய்ய தூண்ட வேண்டும். நாம் (நம்முடைய பக்தி மற்றும்
நம்பிக்கையினால் எழும்)அழகான ஒளிமயமான நிறங்களால் ஹோலி விளையாட வேண்டும்.சேற்று நீரினால்
ஹோலி விளையாடக்கூடாது. அமங்கலமான நிறங்களான கோபம், ஆசை, பேராசை,பற்றுதல்,வெறுப்பு,
காமம் ஆகியவற்றால் இப்பண்டிகையை கொண்டாடக் கூடாது. சந்தனத்தின் நிறங்களால் கொண்டாட
வேண்டும்.ஹோலியை சந்தனத்தின் நிறங்களால் கொண்டாடுவீர்களா அல்லது சேற்று நீரினால் கொண்டாட
விரும்புவீர்களா?
நாட்டுப் பற்றும் இறைப் பற்றும்
ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போன்றது. ஒருவன் நான் முழுமையான இறை நம்பிக்கை உடையவன் ஆனால் இந்த
சமுதாயத்தை விரும்பவில்லை” என்றால் அது தவறானது என்றே நான் கூறுவேன். தோட்டக்காரனை
விரும்பும் போது அவன் உருவாக்கிய தோட்டத்தையும் விரும்புவது தவிர்க்க இயலாதது.
மக்கள் என்னிடம், "குருதேவ்!
தங்களுடைய பணி ஆன்மீகத்தை பயிற்றுவிப்பது. ஏன் ஊழல் போன்ற சமுதாயப் பிரச்சினைகளை பற்றி
இவ்வளவு அதிகமாகப் பேசுகின்றீர்கள்? என்று கேட்பதுண்டு. இதற்கு எனது விடை "மக்களைப்
பாதிக்கும் எந்த விஷயத்திலும் நான் குரலெழுப்பி எதிர்த்து நிற்பேன்" என்பது ஆகும்.
இவற்றையெல்லாம் பற்றி நான் பேசலாமா கூடாதா? நான் எப்போதும் போல பல்வேறு பிரச்சினைகளைப் பற்றித் தொடர்ந்து பேசுவேன்.எங்கு சார்புடைமை
முடிகின்றதோ அங்கு ஊழல் துவங்குகின்றது. நம்மை சார்ந்திருக்கும் ஒருவருக்கு
அல்லது உறவினருக்கு அவர்கள் தவறு செய்தாலும்
நிபந்தனையற்ற ஆதரவை அளிக்கின்றோம். ஆனால் அதே தவறை வேறொருவர் செய்தால் உடனே
சண்டையிடத் துவங்குகின்றோம். அவரை நமது எதிரியாகவே பட்டமளிக்கின்றோம். ஒருமையுணர்வு
மறையும்போது ஊழல் துவங்குகின்றது. ஆன்மிகம் ஒருமையுணர்வின் எல்லைகளை பிரபஞ்சம் எங்கும்
விரிவடையச் செய்து விடுகின்றது, அதனால் யாருமே நமக்கு அன்னியனாக தோன்றுவதில்லை.
அயல்நாடுகளில் பல இடங்களுக்கு
நான் பயணம் செய்திருக்கின்றேன். எங்கு சென்றாலும், வெளிநாட்டில் காலடி எடுத்து வைத்தது
போன்று நான் எப்போதுமே உணர்ந்ததில்லை. எங்கெல்லாம் சென்றேனோ,அனைவரும் ஏற்கனவே என்னை
சார்ந்தவர்கள் என்றே உணர்ந்திருக்கின்றேன், அங்குள்ள மக்களும் அவ்வாறே உணருகின்றார்கள்.
நான் 2012 ஆண்டு ஏழு ஆண்டு இடைவெளிக்குப்
பின்னர் பாகிஸ்தான் சென்றிருந்தேன். அங்குள்ள மக்கள் என்னை கண்ணீருடன் வரவேற்றார்கள்.அவர்கள்,குருதேவ்!
இங்கு தாங்கள் வருகை தர ஐந்து ஆண்டுகள் எங்களைக் காத்திருக்க வைக்காதீர்கள். சீக்கிரமே
மீண்டும் வாருங்கள்" என்று கூறினார்கள். அங்குள்ள மக்களும் தியானம் செய்ய கற்றுக்
கொண்டு விட்டனர். வாழ்வில் ஆழமான மாற்றங்களை கண்டு அனுபவித்திருக்கின்றார்கள். அண்மையில் சுமார் 8000 பேர் வாழும்கலை
பயிற்சிகளைக் கற்று தியானம் செய்துள்ளனர். தங்களது வாழ்வில் நேர்மறையான மாற்றங்களைக்
கண்டிருக்கின்றார்கள். ஆனால் இந்த வளர்ச்சியானது அங்குள்ள சிலருக்குப் பிடிக்கவில்லை.
நீங்கள் செய்தித்தாட்களில் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை படித்திருப்பீர்கள்.
(சிலர் இஸ்லாமாபாதிலுள்ள வாழும்கலை மையத்திற்கு தீ வைத்து விட்டனர் என்னும் செய்தி)
காழ்புணர்ச்சியுடன் வன்முறை செயல்களில் ஈடுபடுபவர்களைப் பார்த்தால்
எனக்கு இரக்கமும் கருணையுமே ஏற்படுகின்றது. தங்களுக்கும் இந்த சமுதாயத்திற்கும் தீங்கினையே செய்கின்றார்கள்.
ஆனால்,
அவர்களால் இச்செயல்களை நீண்ட காலத்திற்கு தொடர்ந்து செய்ய முடியாது என்றே நான் கூறுகின்றேன். சமுதாயத்தில் பிரச்சினைகள் இருந்தால்,அதற்குத்
தீயவர்கள் சிலர் காரணம் அல்ல. நல்லவர்களின் மௌனமும் செயலற்ற தன்மையுமே அதற்குக் காரணம்.
விழித்தெழுவதற்கு இதுவே தருணம். வசந்த காலம்
துவங்கி விட்டது. இந்தியா விழித்தெழுவதற்கு உரிய காலம் வந்து விட்டது. நமது நாட்டிற்காக
நம்மை அர்பணித்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளில் ஒரு மணி நேரம் நாட்டுப் பணிக்கு செலவிடுங்கள். சிறந்த இந்தியாவிற்கு தன்னார்வ தொண்டராகுங்கள். நாம் அனைவரும் இதற்கு உழைத்தால் கடந்த
காலத்தில் இருந்தது போன்று இந்தியா வெகு விரைவில் தங்கப் பறவை ஆகிவிடும்.
சில சட்டங்களை விதிப்பதன் மூலமாக
மட்டுமே ஊழலை அகற்ற முடியும் என்று நான் நம்பவில்லை. கடுமையான சட்டங்கள் தேவை தாம்,
ஆனால் அவைகளின் முக்கியத்துவம் தனிப்பட்டது ஆகும். ஆனால் அவற்றை விட முக்கியமானது என்னவென்றால்,
மக்களின் மனப்பாங்கில் மாற்றம். சட்டங்களின் தேவையே இல்லாத வகையில் இத்தகைய சமுதாய
மாற்றத்தை ஏற்படுத்த நாம் அனைவரும் உழைக்க வேண்டும். நிச்சயம் நம்மால் இதை செய்ய முடியும். இன்று நாம் அனைவரும் வரும் ஓராண்டுக்கு
லஞ்சம் வாங்கவோ, கொடுக்கவோ, அல்லது அதை ஊக்குவிக்கவோ மாட்டோம் என்று ஒரு உறுதி மொழி
எடுத்துக் கொள்வோம்.
வெகு விரைவில் ஒரு பெரும் மாற்றத்தைச்
சமுதாயத்தில் நாம் காண முடியும். நமது சமுதாயதிற்காக நீங்கள் அனைவரும் இந்த உறுதிமொழியை
எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் கோரிக்கை விடுக்கின்றேன். எந்தக் குறையும் உங்கள்
வாழ்வில் இருக்காது என்று நான் உங்களுக்கு உறுதி அளிக்கின்றேன்.
"தர்மோ ரக்ஷதி ரக்ஷிதஹ"
(அதாவது, தர்மத்தைக் காத்து கௌரவிக்க உழைப்பவர்களை தர்மமே காக்கும்) என்று கூறப்பட்டுள்ளது.
தர்மத்தின் பாதையில் நடக்கும்போது என்ன விரும்புகின்றோமோ அது எப்போதுமே கிடைக்கும்.
குறை என்பதே இருக்காது. இதை பற்றி வாழும்கலையிலுள்ள ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை கேளுங்கள். உழைக்கின்றார்கள், ஒரு வகையில் அவர்களது விருப்பங்கள் நிறைவேறி விடுகின்றன.
இயற்கையும் உங்களுக்கு உதவி புரியும். விருப்பங்களை அடைய எத்தனை காலம் உழைத்துக் கொண்டிருக்கின்றோம்? வாழ்நாள் முழுவதும்
சம்பாதித்துக் கொண்டும், அதைச் சேர்த்து வைத்துக் கொண்டும் இருக்கின்றோம், அதை சிறிதும்
அனுபவிக்காமல் இறந்து விடுகின்றோம். நமது குழந்தைகள் அந்தச் செல்வத்தை அடைவதற்காக
தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றனர். இது நல்லதல்ல.
எங்கும் ஆன்மீக அலையும் ஒற்றுமை
அலையும் ஏற்பட வேண்டும். அப்போது உண்மையிலேயே நமது சமுதாயத்தில் நேர்மறையான முன்னேற்றம்
ஏற்படும். 1.4 லட்சம் கோடி மதிப்புள்ள இந்தியப் பணம் கறுப்புப் பணமாக வெளி நாடுகளிலுள்ள
வங்கிகளில் சேமிக்கப் பட்டுள்ளது. இவ்வளவு பெரிய இலக்கத்திலுள்ள பூஜ்யங்களை ஒருவனால்
கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. இந்தப் பிரச்சினைகளின் அடிப்படைக் காரணம் ஊழல்.
அதை நாம் அகற்ற வேண்டும்.பதினெட்டாம் நூற்றாண்டில் ஆன்மிகம் இந்தியாவில் மிக உயர்ந்த
நிலையில் இருந்தது.அதே சமயம் இந்தியப் பொருளாதாரமும் மிகச் சிறப்பாக இருந்தது. இந்த
இரண்டிற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது.
இப்போதும் இந்தியா ஒரு ஏழைநாடு என்று நான்
கூற மாட்டேன். இந்தியா எப்போதுமே ஒரு செழிப்பான நாடு தான்.1.4 லட்சம் கோடி மதிப்புள்ள இந்தியப் பணம் கறுப்புப்
பணமாக வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ளது. நாம் திரும்ப எடுத்து வரவேண்டுமா இல்லையா? நானும் இதை ஏற்றுக் கொள்கின்றேன். வெகு
விரைவில் இப்பணம் இந்தியா வந்தடைய வேண்டும். கடந்த பல ஆண்டுகளில் நமது தொழில் வளர்ச்சி
எதிர்மறையாக 2.5 என்னும் அளவிற்கு குறைந்ததே
கிடையாது. இங்கு இளைஞர்கள் வேலையின்றி இருக்கின்றீர்களா? ஏன் தெரியுமா? அவர்களுக்கு முறையான திறன்கள் இல்லை. இந்த இடத்திற்கு
வரும் முன்னர், நான் ஒரு திறன்கள் வளர்ச்சி மையத்தை தொடங்கி வைத்தேன். இளைஞர்கள்
அதிகத் திறனுள்ளவர்களாக ஆக வேண்டும். பல்வேறு துறைகளிலும் அவர்கள் பயிற்சி பெற வாய்ப்புக்களை
அடைய வேண்டும். நமது தொழிலகங்கள் பல, தங்களது அடிப்படை இடத்தை சீனாவிற்கு மாற்றிக்
கொண்டிருக்கின்றன.
மேற்கே அண்டை நாடுகளான மதியகிழக்கு நாடுகளில் ஏராளமான எண்ணெய்
வளம் உள்ளது. இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளிலும் எண்ணெய் வளம் அதிகமாக உள்ளது.
நாம் நடுவில் இருக்கின்றோம், நம்மிடமும் எண்ணெய் வளம் உள்ளது ஆனால் அதை பிரித்தெடுத்து
நமது நன்மைக்கு பயன்படுத்திக் கொள்ள எதுவும் செய்யவில்லை. இந்தியாவில் அதிக பாக்சைட் உள்ளது.
அதிக விலைக்கு இறக்குமதி செய்கின்றோம். ஏராளமான இரும்புத் தாது உள்ளது, ஆயினும் வெளிநாடுகளிலிருந்து
உருக்கு இரும்பு இறக்குமதி செய்கிறோம். அதிக அளவு நிலக்கரி உள்ளது இருப்பினும் அதை
இறக்குமதி செய்கின்றோம். பல நாடுகளில் உணவு தானியங்களின் விலை குறைந்து வரும் வேளையில்
இந்தியாவில் மட்டும் அது அதிகரித்து வருகின்றது. எந்தப் பொருளாதார நிபுணருக்கும் இந்த
முரண்பாட்டினை புரிந்து கொள்ள முடியவில்லை. அனைத்து பிரச்சினைகளுக்கும் அடிப்படைக்
காரணம் ஊழலே, அதை நாம் அகற்ற வேண்டும்.