நம் தலையாய கடமை - வாக்களிப்பது

ஞாயிற்றுக்கிழமை,16 மார்ச் 2014 

லக்னௌவ், உத்திரப் பிரதேசம்


இன்று நாம் ஒரு பயிற்சி செய்வோம் உன் அருகில் அமர்ந்திருப்பவரை பார்த்து “நான் உன்னை நம்பவே மாட்டேன்“ என்று சொல். (பார்வையாளர்கள் அனைவரும் அவ்வாறே செய்கிறார்கள்.) உன் உணர்ச்சி எப்படியிருக்கிறது? மற்றவரிடம் அப்படிச் சொல்வது மிகவும் கடினமாக இருந்தது. இல்லையா? இது போல் அடுத்தவரிடம் சொல்ல தயக்கமாக இருக்கும். “நான் உன்னை மிகவும் நம்புகிறேன்“ என்று சொல்ல சொல்லவில்லை. அப்படியில்லாமல் “நான் உன்னை நம்பவே மாட்டேன்“ என்று சொல்ல சொன்னேன். அப்படி சொல்வது மிகவும் கடினம். இல்லயா?

இந்த வாழ்க்கை ஒரு லீலை (விளையாட்டு) என்று நீ பார்த்தால் எதுவுமே உன்னை அசைக்க முடியாது. எதுவும் உனக்கு எதிர்மறை குணங்களை கொண்டு வராது. இப்படிப்பட்ட உணர்ச்சி உன்னுள் இருக்கும் போது உள்ளேயிருக்கும் ஒளியை எதனாலும் மங்கச் செய்ய முடியாது. இன்று இதுவரை நீங்கள் செய்யாத ஒரு காரியத்தைச் செய்தீர்கள். மற்ற ஒருவரிடம் “நான் உன்னை நம்ப மாட்டேன்“ என்று சொன்னீர்கள். என்ன நடந்தது. சொன்னதும் சிரிக்கத் துவங்கி விட்டீர்கள். அவரும் சிரித்திருப்பார். உங்கள் வாழ்வில் இப்படி எப்போதாவது நடந்திருக்கிறதா? இல்லை. அப்படி இருக்காது. ஏனென்றால் இன்று ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டு சொன்னீர்கள். இதே போல் வாழ்க்கையை ஒரு விளையாட்டாக பார்க்க வேண்டும். எனவே வாழ்க்கையை லீலை என்று சொல்கிறார்கள்.

நீயும் உன் வாழ்க்கையை ஒரு விளையாட்டாக பார்த்தால், எதுவும் உன்னை அசைக்க முடியாது. எதிர்மறை விளைவுகள் ஏற்படாது. உனக்குள் இருக்கும் ஒளி மங்காது. சரி! இப்போது மற்றொரு பயிற்சி செய்வோம். கண்களை மூடிக் கொண்டு “இவ்வுலகில் என்னை யாருமே நம்பவில்லை“ என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். எல்லோரும் உன்னை சந்தேகத்தோடு பார்க்கிறார்கள் என்றும் உன்னை ஏமாற்றுக்காரன் என்று நினைப்பதாகவும் எண்ணுங்கள்.  இப்போது மெதுவாக கண்களைத் திறக்கலாம். எப்படி உணர்ந்தீர்கள்? கெட்டவராக உணர்ந்தீர்களா? தனிமையாக இருப்பதாக உணர்ந்தீர்களா? ஆம். திடீரென்று மனத்தளர்ச்சி அடைந்தீர்கள் இல்லையா? உங்களுக்கு தெரியுமா? பல சமயங்களில் நாம் வாய் விட்டுச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. நம்மை சுற்றியுள்ளவர்கள் நம் மனதில் ஓடும் எண்ணங்களை, எண்ணங்களின் அதிர்வலைகளை புரிந்து கொள்வார்கள். யாரையாவது பார்க்க செல்லும் போது சிரித்த முகத்துடன் வரவேற்பார்கள். ஆனால் மனதுக்குள் “தேவையின்றி ஏன் வந்திருக்கிறாய்“ என்று எண்ணுவார்கள். இதை உடனே உணர முடியும். எவ்வளவு பேருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறது? (பார்வையாளர்களில் பலர் கைகளை உயர்த்துகிறார்கள்.) மற்றவர்களின் மனதில் ஓடும் எண்ணங்களை, அதிர்வலைகளை நீங்கள் உணர முடியும். எல்லோருக்கும் ஓரளவு இந்தத் திறமை உண்டு. இல்லையா?

நம் எண்ண அலைகள் நாம் பேசுவதை விட அதிகமாக மற்றவருக்கு உணர்த்துகின்றன. நம் ஆழ் மனதில் உள்ள உணர்ச்சிகளை, மன எழுச்சியை அதிர்வலைகள் மூலமாக மற்றவருக்கு உணர்த்துகிறோம். இரண்டு மணி நேரம் அன்பை பற்றிப் பேச முடியும். ஆனால் இந்த பேச்சால் அன்பின் சாரத்தை எடுத்துரைக்க முடியாது. ஒரு குழந்தையின் பார்வையில் அன்பை காண முடியும். 1000 வார்த்தைகளால் சொல்ல முடியாததை ஒரு பார்வையாலே சொல்ல முடியும்.
நம் உணர்வுகளை நம் எண்ண அலைகளின் மூலம் வெளிப்படுத்துகிறோம். அதனால் தான் நம் உணர்வுகள் தூய்மையாக இருப்பது அவசியம். இதயத்தையும் நாம் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். எதிர் மறை எண்ணங்கள் இருக்கக் கூடாது. ஹோலிப் பண்டிகையின் போது குச்சிகளை குவித்து எரிப்பது இதைக் குறிப்பிடுகிறது.

நமக்கு பொருள்கள் மேலும் நம்மைச் சுற்றியிருப்பவர்கள் மேலும் விருப்பு வெறுப்பு இருக்கிறது. ஹோலிப் பண்டிகையின் போது எல்லா விருப்பு வெறுப்புகளையும் விட்டு விடுவதற்காக குச்சிகளை எரித்து சங்கல்பம் செய்கிறோம். மனதை, இதயத்தை தூய்மை படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறுவோம். நம் எல்லோருக்குள்ளும் ஒரு மகா மனிதர் இருக்கிறார். அவரை வெளியே கொண்டு வர வழி இது தான் நாம் வாழ்க்கையில் திருப்தியோடு இருக்க வேண்டும். நீ உனக்குள் திருப்தியோடு இருக்கும் போது ஒரு பெரிய சக்தி உதயமாகிறது.

“கடவுள் எனக்குள் இருக்கிறார். அவர் தற்சமயம் இங்கு இருக்கிறார். இந்த ஆழ்ந்த நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும். மகிழ்ச்சியோடு இருக்க வேறு எதுவும் தேவையில்லை. இந்த உணர்வோடு இருக்கும் போது வாழ்வில் உனக்குத் தேவையான எல்லாமே தானாகவே வந்தடைவதைப் பார்க்கலாம். நீங்கள் திருப்தியோடு இருக்கும் போது மற்றவர்களை ஆசிர்வதிக்கும் (வாழ்த்தும்) சக்தி கிடைக்கும். இது இயற்கையின் நியதி.

நம் நாட்டில் பெரியோர்களிடம் வாழ்த்து பெறும் வழக்கம் உள்ளது. இவ்வழக்கம் எப்படி வந்தது? ஏனென்றால் பெரியவர்கள் நல்வாழ்க்கை நடத்தி திருப்தியோடு வாழ்கிறார்கள். அவர்கள் வாழ்வில் மேலும் எந்தத் தேவையும் கிடையாது. நீ வாழ்க்கையில் விருப்பு வெறுப்புகளில் சிக்கியிருக்கும் போது மற்றவர்களை வாழ்த்தும் சக்தி கிடைக்காது. ஆனால் நீ திருப்தியடைந்து, மனமார எனக்கு எதுவும் தேவையில்லை என்று நினைக்கும் போது,உனக்குள் மற்றவர்களை வாழ்த்தும் சக்தி உதயமாகும். உன்னுடைய தேவைகள் மட்டுமல்லாமல், நீ வாழ்த்தும் மற்றவர்களின் தேவைகளும் நிறைவேறுவதை பார்க்கலாம்.

“உனக்குள் ஒரு மகா மனிதர் இருக்கிறார். வாழ்வில் நீ திருப்தியடையும் போது அவர் வெளிப் படுவார்.“ இநிதியா 7 சிறந்த பண்பாடுகளின் இருப்பிடமாக்கும்.

முதலாவது: யோக சாதனை மற்றும் ஆன்மீகம். யோக சாதனை மற்றும் ஆன்மீகம் பிறந்த இடம் இந்தியா.

இரண்டாவது: ஆயுர் வேதம். இன்று உலகம் முழுதும் கொண்டாடப்படும், 21ம் நூற்றாண்டுக்கு தேவையான மருத்துவ முறையாக ஆயுர்வேதம் மதிக்கப்படுகிறது. பல சிறந்த பயனுள்ள மருந்துகளும், மருத்துவ முறைகளும் ஆயுர்வேதத்தில் உள்ளன. இவை உடல் நலத்தை பாதுகாப்பது மட்டுமல்லாமல், உடலுக்கு அதிக சக்தியையும் அளிக்கின்றன. நோய் உடலில் தோன்றுவதற்கு முன்பாகவே, நோய் வந்து வருத்தப்படுவதற்கு முன்பாகவே ஆயுர் வேதம் அதை அழிக்கக் கூடிய சக்தி வாய்ந்த விஞ்ஞானமாகும்.

மூன்றாவது: இந்திய உணவு: நம் நாட்டில் பல விதமான உணவுப் பழக்கங்களும், உணவுப் பதார்த்தங்களும் உள்ளன. இவற்றை ஒரு அருங்காட்சியாக பொது மக்களுக்குக் காட்ட,அகமதாபாத் நகரில் ஏற்பாடு செய்தோம். இந்தக் காட்சிக்கு “அன்னம் ப்ரம்மம்” என்று பெயர் வைக்கப்பட்டது. 5700 வகையான சைவ உணவுப் பண்டங்கள் காட்சியில் வைக்கப் பட்டது. இதற்குச் செலவான தானியங்களின் மொத்த அளவு 7000 கிலோவாகும். 256 சமையல் கூடங்களில் இப்பண்டங்கள் சமைக்கப்பட்டன. இந்த உணவு 30000 ஏழைக் குழந்தைகளுக்கு விநியோகிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி தீபாவளிப் பண்டிகையின் போது நடந்தது. நம் நாட்டில் உள்ள இவ்வளவு வகையான உணவுப் பண்டங்களை பற்றி மக்கள் அறியவில்லை. மேல் நாட்டு துரித உணவான பிஸ்ஸா மேல் மோகம் கொண்டிருக்கிறோம்.

பிஸ்ஸா எப்படி வந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? இத்தாலிய மக்கள் தாங்கள் சாப்பிட்டு மிச்சமான பல வகையான காய்கறிகள் மற்றும் உணவை மாவில் கலந்து உருட்டி பிஸ்ஸா செய்து ஏழை மக்களுக்கு உண்பதற்காகக் கொடுக்கும் வழக்கம் இருந்தது. இரவில் செய்து மிச்சமான உணவு சற்று புளித்திருக்கும். அதில் மாவு சேர்த்து பிஸ்ஸா செய்யப்பட்டது. துரதிஷ்டவசமாக இந்தியாவில் பலர் இதை முக்கிய உணவாக உண்கிறார்கள். இதை விட இந்தியாவின் பல விதமான உணவுப் பண்டங்களை செய்து மற்றவர்களுக்கு அளிக்க வேண்டும். இதை வியாபார ரீதியில் செய்து தேவையான செல்வத்தை அடைய முடியும்.

நான்காவது: இந்திய கம்ப்யூடர் மென்பொருள் திறமை.(ஸாஃப்ட்வேர் ஸ்கில்ஸ்)

ஐந்தாவது: இந்திய நடனம் மற்றும் இசை. பல விதமான நடனம் மற்றும் இசை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றும் பின் பற்றப்படுகின்றன.

ஆறாவது: பல வகையான அலங்காரப் பொருட்களும் அழகான ஆடை ஆபரணங்களும் இந்தியாவில் இருக்கின்றன.

ஏழாவது: இந்திய சுற்றுலா தலங்கள். இந்தியாவில் மிகச் சிறந்த சுற்றுலா மற்றும் சரித்திரப் ப்ரசித்தி பெற்ற இடங்கள் உள்ளன. துரதிஷ்ட வசமாக மேற்சொன்ன ஏழு வகையான வாய்ப்புக்களை நாம் பயன்படுத்திக் கொள்ள வில்லை. அதனால் தான் நம் நாட்டில் இன்றும் ஏழ்மை மற்றும் பின் தங்கிய நிலை உள்ளது. மேற் சொன்ன ஏழு வாய்ப்புகளை நாம் சரியாகப் பயன்படுத்தி மற்ற நாட்டவருடன் வியாபார ரீதியில் தொடர்பு கொண்டால் நம் நாடு கண்டிப்பாக வளர்ச்சியடைய முடியும். மக்களின் ஏழ்மையை ஒழிக்க முடியும். நாம் ஒரு வலுவான அரசை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தியாவை ஒரு வலுவான நாடாக்க வேண்டும். அப்போது தான் இப்போது பரவியுள்ள லஞ்ச ஊழலை ஒழிக்க முடியும்.

நான் எப்போதும் சொல்வது வழக்கம். நாட்டுப்பற்று மற்றும் இறைப்பற்று ஒரே காசின் இரு பக்கங்கள் போன்றது. யாராவது நான் கடவுளிடம் அன்பாக இருக்கிறேன். ஆனால் அவர் படைத்த இந்த பூமியை விரும்பவில்லை என்று சொன்னால் அது உண்மையாகாது. இது நான் தோட்டக் காரரை மிகவும் விரும்புகிறேன். அவர் அமைத்த தோட்டத்தை விரும்பவில்லை என்று சொல்வது போல் உள்ளது. யாராவது உண்மையில் கடவுளோடு அன்பாக இருக்கும் போது, அவர் படைத்த பூமியுடன் அன்பாக இருக்க முடியாதா? இதை நாம் மறக்கக் கூடாது.

நீங்கள் அனைவரும் வி.பி.ஐ இயக்கத்தில் (வாலண்டீர் ஃபார் பெட்டர் இந்தியா) சேர வேண்டும். ஒவ்வொரு நாளும் நாட்டுக்காக 1 மணி நேரம் செலவிட வேண்டும். மீதி 23 மணி நேரம் உங்களுக்காக வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒவ்வொரு நாளும் 1 மணி நேரம் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும். நாம் எல்லோரும் இப்படிச் செய்தால் இந்தியா மிகவும் புகழோடும், பெருமையோடும் ப்ரகாசமாக விளங்கும். இப்படி நம்மால் கண்டிப்பாக செய்ய முடியும்.
நாம் ஒருவரோடு ஒருவர் சேர்ந்தவர் என்ற எண்ணம் மறையும் போது லஞ்சம் துவங்குகிறது. 

உன்னைச் சார்ந்தவரிடம் நீ எப்போதும் லஞ்சம் கேட்க மாட்டாய். யாரும் தன் சொந்த சகோதரன் / சகோதரி மற்றும் நெருங்கிய உறவினரிடம் லஞ்சம் கேட்க மாட்டார்கள். அவர்களுக்கு லஞ்சம் கொடுக்க மாட்டார்கள். அதனால் தான் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தவர்கள் என்ற எண்ண அலையை மக்களிடையே பரப்ப வேண்டும். சமுதாயம் மகிழ்ச்சியோடு இருக்க இது உதவும்.
சமீபத்தில் வாழும் கலையில் மகிழ்ச்சியின் அளவீடு என்ற கணக்கெடுப்பு திட்டத்தை துவங்கியிருக்கிறோம். வாழும் கலை தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று மக்களிடையே மகிழ்ச்சி எவ்வளவு நிலவுகிறது என்ற கணக்கெடுப்பு செய்கிறார்கள். மக்களை அவர்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்களா? இல்லையா? இல்லை என்றால் அதன் காரணம் பற்றி பல கேள்விகள் மூலம் கண்டறிகிறார்கள். பல சமயங்களில் நாம் அருகில் வசிப்பவர்களோடு கலந்து பழகுவதில்லை. நாம் நம் வாழ்க்கையிலேயே உழன்று கொன்டிருக்கிறோம். நம் தேவைகளையும் நம் பிரச்சினைகளையும் மட்டுமே கவனிக்கிறோம். எப்போதும் நான், எனது என்ற நினைவில் சிக்கியிருக்கிறோம்.

மற்றவர்களோடு பேசி, அவர்களுடைய தேவைகள், பிரச்சினைகளை பற்றி அறியும் போது நம்முள் மாறுதல் ஏற்படும். அவர்களுக்கும் நம்மிடம் பிரச்சினைகளை பகிர்ந்து கொள்வதால் மனம் நிம்மதி அடையும். எனவே மக்களை மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்று கேட்டு, அப்படி இல்லாவிட்டால் அதன் காரணம் என்ன என்று கண்டறிய வேண்டும். நாம் அப்படிச் செய்யலாமா? நாம் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து வீடு வீடாகச் சென்று மக்களிடம் பேசி மகிழ்ச்சிக் கணக்கெடுப்பு படிவத்தில் பதிவு செய்து கொண்டு வர வேண்டும். இது அவர்களுடைய பிரச்சினைகளை பற்றிப் புரிந்து கொள்ள உதவும். இப்படிச் செய்வதால் சமுதாயத்தில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும். நல்ல மனிதர்கள் வீட்டுக்குள்ளே இருந்து கொண்டு வாக்களிக்க வராததால் சமூக விரோதிகள் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

மற்றும் இரண்டு விஷயங்கள் சொல்ல விரும்புகிறேன் ஒரு ப்ளாஸ்டிக் பையை எரிப்பதால் வெளி வரும் விஷ வாயு 1000 பேருக்கு புற்று நோய் வரப் போதுமானது. இந்த விஷயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். பொது இடங்களில் ப்ளாஸ்டிக் குப்பைகளை சேர்ப்பதில் (எரிப்பதில்) கவனமாக இருக்க வேண்டும். இது மிகவும் முக்கியம். சொல்லப் போகும் மற்றொரு விஷயம் தற்சமயத்துக்கு பொருத்தமானது. தேர்தல் வரப்போகிறது. அனைவரும் வாக்களிக்க வேண்டும். இது நம் தலையாய கடமையாகும். நல்ல அனுபவசாலியானவருக்கு வாக்களித்து தேர்ந்தெடுங்கள். தேர்தல் நடக்கும் பல இடங்களில் வெய்யில் அதிகமாக இருக்கக் கூடும். நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டியிருக்கும். அதைப் பொருட்படுத்தாமல் வாக்களிக்க செல்ல வேண்டும்.

இன்று சமுதாயத்தில் அநீதி, வன்முறை அதிகரித்திருப்பதற்கு சமூக விரோதிகள் காரணமல்ல. சில நல்லவர்கள் வாயை மூடிக்கொண்டு நமக்கென்ன வந்தது என்று வாக்களிக்க செல்லாமல் இருப்பதால் கெட்டவர்கள் நாடாளுமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். எனவே சமூக விரோதிகள், தேசிய அரசியலில் கொண்டு வந்ததற்கு யார் பொறுப்பு? நாம் தான் பொறுப்பு. நான் எல்லோரையும் வாக்களிக்கச் சொல்கிறேன். தயங்குபவர்களையும், வற்புறுத்தி உங்களுடன் அழைத்துச் சென்று வாக்களிக்கச் சொல்லுங்கள்.


இப்போது,“யாருக்கு வாக்களிக்க வேண்டும்” என்று என்னைக் கேட்காதீர்கள். நீங்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். தற்போது ஒரு வலுவான கூட்டணியில்லாத அரசு இந்தியாவுக்குத் தேவை. அப்போது தான் எங்கும் பரவியிருக்கும் லஞ்ச ஊழலை ஒழிக்க முடியும். மறுபடியும் மத்திய அரசில் கூட்டணி ஆட்சி அமைந்தால், அது லஞ்சத்தை ஒழிக்க உதவாது.