வலிமையான மனதிற்கு

ஜனவரி 27, 2014

பெங்களுரு இந்தியா


கேள்வி - பதில்கள்

குருதேவ்! மனம், உடல் ஆத்மா ஆகியவற்றில் எது பலமானது? இம்மூன்றையும் எவ்வாறு நல்வழியில் நான் பயன்படுத்த முடியும்?

குருதேவ்: ஆத்மாவிற்கு அதற்குறிய பலம் உள்ளது. மனதிற்கும் அதற்குறிய பலம் உள்ளது. அது போன்று உடலுக்கும் அதற்குறிய இடம் உள்ளது. ஒவ்வொன்றும் அவைகளுக்குறிய பலத்தினை கொண்டுள்ளது. அவைகளுக்குறிய பலத்துடன் அவைகளை சமமாக வைத்திருங்கள்.

இன்று காலையிலிருந்து எதுவும் உண்ணாமல் இங்கு ஒரு இளைஞர் காத்திருந்தார். குருதேவ் பலரை சந்தித்துக் கொண்டு மிகுந்த  வேலையில் ஈடுபட்ட நிலையில் இருக்கின்றார். அவரைக் காணும் வரையில் சாப்பிட மாட்டேன் என்ற எண்ணத்துடன் காத்திருக்கின்றார். இவ்வாறு செய்தால் எப்படி சரியாக இருக்கும்? நீங்கள் இப்படி செய்யக் கூடாது.

உங்கள் உடலை அதற்குத் தகுந்த வகையில் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சரியான உடற்பயிற்சி செய்து உரிய வேளையில் உணவருந்த வேண்டும்.எப்போதுமே ஏதோ ஒரு வேலையில் ஈடுபட்டிருப்போம் ஆயினும் சரியான காலத்தில் உணவு உட்கொள்ள வேண்டும். இல்லையெனில் எனக்கு அது ஒரு அதிகப்படியான பாரமாகி  நீங்கள் உரிய காலத்தில் உணவு எடுத்துக் கொண்டீர்களா இல்லையா என்று வேறு நான் கவனித்துக் கொள்ள வேண்டும் என்னும் நிலை ஏற்படும். தன்னை தானே கவனித்துக் கொள்ளுங்கள். உணவு எடுத்துக் கொண்டு பணியில் ஈடுபடுங்கள். உரிய உணவு உட்கொள்ளுதல், உடற்பயிற்சி, சாதனா ஆகியவற்றை செய்தல் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுவது மிக அவசியமாகும்.

மனதைப் பலப்படுத்துவதற்கு ஞானம் தேவை. ஒவ்வொரு நாளும் ஞான உபதேசங்களை கேளுங்கள். அன்றாடப் பணிகளில் ஈடுபடுவதாலும், மக்களை சந்திப்பதாலும் மனதில் பல எண்ணங்கள் எழுகின்றன. மனம் அவற்றால் அலைக்கழிக்கப் படுகின்றது. விருப்பங்கள், வெறுப்புகள், பொறாமை, பேராசை, சபலங்கள் போன்றவை மனதை கீழே வீழ்த்துகின்றன. ஒவ்வொரு நாளும் மனதைத் தெளிவாக வைத்திருத்தல் முக்கியமானது. எப்படி தினமும் ஒன்று அல்லது  இரண்டு முறை பல் துலக்குவது, குளிப்பது ஆகியவற்றை செய்கின்றீர்களோ அவ்வாறு  ஞான செய்தியினை படிக்கவோ, கேட்கவோ வேண்டும். அப்போது மனமும் அறிவும் தூய்மையாக இருக்கப்பெறும்

"நீ ஏன் மரணத்தை நினைவில் கொள்ளுவதில்லை? ஒரு நாள் நீ இறக்கப் போகின்றாய்! என்று நீங்கள் மனத்தை குற்றம் சாட்டுங்கள். மரணம் என்னும் எண்ணத்திலேயே மனதில் உள்ள ஒழுங்கின்மை மறைந்து விடும். இவ்வாழ்க்கை நிலையற்றது என்று உணரும் அந்த நொடியிலேயே மனம் சந்தோஷம் அடைந்து விடும். வாழ்க்கை விரைந்து செல்லக் கூடியது. சில காலமே வாழ்வோம். எவ்விதமான சிரமங்கள் ஆனாலும் அவற்றைத் தாங்கிக் கொள்ளுவோம். என்னன்ன நற்பணிகளோ அவற்றை செய்து விட்டு போவோம்.

இங்கு சோம்பி இருப்பதற்காக வரவில்லை. இவ்வுலகில் நாம் வந்ததற்கு காரணம் ஏதேனும் செய்வதற்கே! அதைச் செய்வோம். இத்தகைய உணர்வு எழ வேண்டும். ஏதேனும் பணிகளை எப்போதும் செய்து கொண்டிருந்தாலும் மனக்கவலைகள் குறையும்.  சரி ! இப்போது எவ்வாறு ஆத்மாவைப் பலப்படுத்துவது? ஆத்மா ஏற்கனவே பலம் உள்ளதாகவே இருக்கின்றது. கடவுள் என்னுடையவர் என்னும் நம்பிக்கை இருக்கும் போது ஆத்மாவின் பலம் அதிகரிக்கின்றது. எது எனக்கு நிகழ்கின்றதோ  அது எனக்கு நல்லதே ஆகும் என்னும் திடமான தீர்மானம் அவசியம் ஆகும். நிகழ்வதெல்லாம் எனக்கு நன்மையே. இன்று ஏதேனும் சரியாக நிகழவில்லையெனில் அதை விட மேலான ஏதோ ஒன்று காத்திருக்கின்றது, அதனால் தான் அது இன்று நிகழ வில்லை என்னும் உறுதியான எண்ணம் மனதில் இருக்க வேண்டும்.

இந்த ஆஸ்ரமம் எப்போதும் உங்களுக்காக திறந்திருக்கின்றது.எப்போதெல்லாம், இங்கு வர வேண்டும் என்று தோன்றுகின்றதோ, சோர்வுற்று வருந்துகின்றீர்களோ இங்கு வாருங்கள், சேவையில் ஈடுபடுங்கள்.

தாஸ் கபி உதாஸ் நஹி ஹோதே (தொண்டு செய்பவன் எப்போதுமே வருந்த மாட்டான்). உங்களின் பலம் அதிகமாக இருக்கும் போது, பெட்ரோல் நிரம்பி இருக்கும் போது காரை ஓட்டிச் செல்லுங்கள். அது காலியானவுடன் இங்கு திரும்பி வாருங்கள். இந்த உடல் ஒரு வாகனத்தைப் போன்றது தான் அல்லவா? இவ்வுடல் ரதம் என்றே சாஸ்த்திரங்களில் அழைக்கப்பட்டு வருகின்றது. மனம் தான் சாரதி (ரதம் ஓட்டுபவன்) அதில் பயணம் செய்வது ஆத்மா ஆகும்.

(அரங்கத்தினரில் ஒருவர் கேட்ட கேள்வி செவிக்குப் புலனாகவில்லை)

குருதேவ்: ஏற்றுக்கொள்ளுதல் என்றால் என்ன? எதை ஏற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்? அழகான ஒன்றை, "இது அழகாக உள்ளது, இதை ஏற்றுக் கொள்ளுகின்றேன் என்று கூறுவீர்களா?

ஏற்றுக்கொள்ளுதல் என்பதே, எது ஒன்றை ஒப்புக்கொள்ள முடியாதோ அதை ஏற்றுக் கொள்ளுவது தான். எதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது? அரைகுறையான, செம்மையற்ற எதையும் ஏற்றுக்கொள்ள விரும்பமாட்டீர்கள். உங்களுக்கு அருகில் அமர்ந்து  இருப்பவர் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத எதையாவது செய்கிறார் என்று வைத்துக் கொள்ளுவோம். தும்மிக் கொண்டோ, அல்லது விசித்திரமாக எதையோ செய்து கொண்டிருப்பதாக வைத்துக் கொள்ளுவோம். நீங்கள் தியானம் செய்து கொண்டிருக்கும் போது, அருகில் அமர்ந்திருப்பவர் ஏப்பம் விட்டுக் கொண்டிருந்தால், "கடவுளே! நான் தியானம் செய்ய விரும்புகிறேன்.இந்த மனிதரின் ஏப்பத்தை கேட்டுக் கொண்டிருக்க இங்கு வரவில்லை! என்றுதான் எண்ணுவீர்கள்.

நீங்கள் செம்மையான சூழ்நிலையை விரும்புகிறீர்கள் ஆனால், அருகிலிருப்பவர் பல்வேறு விதமான சப்தங்களை எழுப்பிக் கொண்டு உங்களுக்குத் தொல்லை தருகின்றார். அச்சமயத்தில், உங்கள் மனதில் ஒரு இடம் ஒதுக்கி, "சரி! இவர் இப்படித் தான். நாம் ஏதேனும் செய்யலாம். தியானம் செய்து முடித்த பின்னர், அவருக்கு த்ரிபலா சூரணம் தேவையா என்று கேட்கலாம். அவரது வயிறு சரியில்லை. அவர் உடலில் ஏதோ கோளாறு. வாதம் அதிகமாயுள்ளது. அதிகம் உருளைக்கிழங்கு சாப்பிட்டிருக்கலாம் என்று எண்ணுங்கள்.

அவரது இனிமையற்ற, செம்மையில்லாத நிலைக்கு நீங்கள் உதவக் கூடுமானால் அதைச் செய்யுங்கள். அல்லது செம்மையற்ற அந்நிலைக்கு ஒரு இடம் ஒதுக்குங்கள். அது உங்களுக்குப் பொறுமையை ஏற்படுத்தும். இதுதான் ஏற்றுக் கொள்ளுதல் என்பது. ஏற்றுக் கொள்ளுதல் என்பது செம்மையற்றவைக்கு ஒரு சிறு இடம் அளித்தல் என்பதாகும். வாழ்க்கையில் செம்மையற்றதிற்குச் சிறிது இடம் ஒதுக்குங்கள். அது உங்களுக்கு மிகுந்த பலத்தை அளிக்கும். உங்களது பொறுமையும்  அதிகரிக்கும். ஒன்றுமில்லாத விஷயத்திற்கு கோபப்படுவதையும் தடுக்க உதவும். எது ஒன்றையும் ஏற்றுக்கொள்ளாத நிலையிலேயே ஒருவர் கோபப்படுகின்றார்.

அதனால் எல்லாவற்றையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் கூற வில்லை. ஒரு அநீதி நிகழும் போது, அதை  எதிர்க்க வேண்டும். அது அநீதி என்று ஏற்றுக் கொண்டு, அது அநீதி என்று கண்டறிந்து கொண்டு அதற்கெதிராகப் போராட வேண்டும்.. அடுத்தது, அகங்காரம். உங்களிடம் 'தான்' என்னும் அகந்தை இருப்பதை அறிந்தால், சரி அது இருக்கட்டும். அதைத் தகர்க்கவோ அழிக்கவோ முற்பட  வேண்டாம். ஏன் அதைச் செய்ய வேண்டும்? அகந்தை இருக்கட்டும். ஆனால் அதற்குறிய இடத்தில் அதை வையுங்கள். எல்லோரிடமும் அதை காட்ட வேண்டாம். அப்போது நீங்கள் தோற்றடிக்கப்படுவீகள். நான் கூறுவது உங்களுக்குப் புரிகின்றதா?

உங்களுக்கும், மற்றவர்களுக்கும் இடையே உருவாக்கப்படும் தடை வேலியே அகந்தை ஆகும். அதற்கான மாற்று மருந்து நட்புடனும் இயல்பாகவும் இருப்பது தான். முற்றிலும் இயல்பாக இருப்பது தான் மாற்று மருந்து. தான் என்னும் அகந்தை உங்களைத் தொல்லைப்படுத்தும் போது, அதினின்றும் வெளி வருவது மிகச் சுலபம். எப்படி என்று 

கிறுக்கு போல ஒரு நாள் நடந்து கொள்ளுங்கள். அனைவரும் சிரித்து மகிழட்டும். அவர்கள் உங்களைப் பார்த்து சிரிக்கும் போது நீங்கள் அதை வசதியாகவே உணருங்கள். அடுத்த நாள் நீங்கள் சாதாரணமாகி விடுவீர்கள். இயல்பாகவும், வசதியாகவும் உணருதலே உங்களைப் பற்றி எண்ணித் துன்புறும் அனைத்திற்கும் மாற்று மருந்து ஆகும்.

குருதேவ்! உலகில், மீட்சிக்குப் பல பாதைகள் இருக்கின்றன. விடுதலைக்கு நிச்சயமான ஒரு வழியைக் கூறுங்கள்.

குருதேவ்: அதைத் தான் நான் செய்து கொண்டிருப்பதாக எண்ணுகின்றேன்! நிச்சயமான வழியைத் தான் நான் கூறிக் கொண்டிருக்கின்றேன். உங்களை என்ன துன்புறுத்துகின்றது?
எப்போது மனம் துன்புறுகின்றதோ, எதிர்மறை எண்ணங்கள் மேலோங்குகின்றதோ, மூச்சுத் திணறுவது போன்று மகிழ்ச்சியற்று உணருகின்றீர்களோ, 'ஞானம் தேடுபவருக்கு ஞானப் பேழை' என்னும் புத்தகத்தைப் படியுங்கள். எதிர்மறை உணர்ச்சிகளை எவ்வாறு கையாள்வது? அதிகப்படியான காமம், கோபம், ஆணவம், பற்று, மருட்சி  ஆகிய ஆறு எதிர்மறை உணர்ச்சிகள். உள்ளன. மனம் இவற்றில் சிக்கிக் கொள்கின்றது. உங்களுக்கு மகிழ்ச்சி தருவதில்லை. இவற்றிலிருந்து விடுபடவும் முடியாது. ஏனெனில், விடுபடுவது மேலும் அதிக வலி அளிக்க கூடியது. இதுதான் மருட்சி என்பது. இதை சமஸ்க்ரிதத்தில் மோஹா என்று அழைக்கின்றோம். இதன் பொருள் பற்றுதல் ஆகும். தொண்டையில் ஏதோ சிக்கிக் கொள்வது போன்றது ஆகும். விழுங்கவும் முடியாது, துப்பவும் முடியாது என்னும் நிலை. இத்தகைய நிலைதான் மோஹா எனப்படுவதாகும்.

எதிர்மறை எண்ணங்களைக் கையாள்வத்ற்குப் பல வழிகள் உள்ளன. எப்படியாவது அவற்றைக் கையாண்டு விட்டால் சரி. அப்போது நீங்கள் விடுதலை அடைந்து விடுவீர்கள். பிராணாயாமமும் தியானமும் இவ்வழிகளில் ஒன்றாகும்.

குருதேவ்! சில தினங்களுக்கு முன்னர் தாங்கள், யோகாவின் அடிப்படை வியப்பு நிலை தான் என்று கூறினீர்கள்.யோகா என்பது என்ன என்று எங்களுக்குக் கூற முடியுமா ?

குருதேவ்: சிறிய மனத்தையும் பெரிய மனத்தையும் ஒருங்கிணைப்பது தான் யோகா.  உடல், மூச்சு, மனம் இவற்றிடையே இணக்கத்தை ஏற்படுத்துவது தான் யோகா. உடல், மனம் இரண்டுமே இருக்கின்றன. ஆயின் இவையிரண்டும் சீரமையாவிடில் அது யோகா அல்ல. யோகாவில், நீங்களாக இவைகளை இணைப்பதில்லை, மூச்சு, உடல், மனம் இவற்றை  சீரமைக்கின்றீர்கள், அதனால் மிக நல்ல உணர்வினை அடைகின்றீர்கள்.
உங்கள் கையை அக மன உணர்வின்றியே நீங்கள் தூக்கலாம். ஆனால், அக உணர்வுடன் நீங்கள் கையை உயர்த்தும் போது, அதில் ஒரு தாள லயத்தினை உணருகின்றீர்கள். அதில் ஒரு நல்லுணர்வைப் பெறுகின்றீர்கள். அது போன்று, சிறு மனமானது, இயற்கை முழதளாவிய பெரிய மனத்துடன் ஒருங்கிணைவது தான் யோகா.  

குருதேவ்! கர்மத்திற்கு சத்வா (தூய்மை) தேவை என்று கூறப்படுகின்றது. ஆயின், ரஜஸ் தேவையில்லையா? என்னுடைய நிலையில், நான், அதிகமான சாதனா செய்யும் போது வேறெந்த வேலையும் செய்ய விருப்பமில்லாமல் இருக்கின்றது.

குருதேவ்:  சத்வா என்பதற்கு அறிவுத் தூய்மை என்று ஒரு பொருளும் உள்ளது. ஒரு காரியத்தைச் செய்வதற்கு ரஜோகுணம் தேவை. ரஜோகுணம், தமோகுணம் சதோகுணம் எனப்படும் மூன்று குணங்களுமின்றி உடலானது உறுதியாக இருக்காது.  உடலில் இந்த மூன்று குணங்களுமே இருக்க வேண்டும்.  அவற்றில் சத்வ குணம் முக்கியமாக இருத்தல் வேண்டும்.  ரஜோ குணம் மற்றும் தமோ குணம் , இவை அடங்கி இருக்கும். ஆனாலும் நிச்சயமாக அவை இருக்கும்.

ஒரு சமயம், ஒரு அணு அறிவியல் நிபுணர் இங்கு வந்திருந்தார். அவர் ஒரு செயல்திட்ட உருப்படத்தை கொண்டு வந்திருந்தார். அதில் மூன்று ஆரக்கால்கள் இருந்தன. இந்த மூன்று விசைச் சேர்க்கைகளினாலேயே இவ்வுலகம் தாங்கி நிற்கப் பட்டு இயக்கப்படுவதாகக் கூறினார். ஒரு காற்றாலையின் மூன்று விசிறிகள் போன்று இந்த ஆரக்கால்கள் ஒத்திசைந்து மேலும் கீழும் சென்று வருவதாகக் கூறினார். அது போன்று, இம்மூன்று குணங்களினால், இவ்வுலகம் இயங்கி வந்திருக்கின்றது, இனியும், முடிவற்றதாக இயங்கி வரும்.

சத்குணத்தின் பெயரில் சோம்பேறி ஆகி விடாதீர்கள். சாதனாவின் மூலம், சதகுணம் பெருகுவதாக எண்ணுகின்றோம். தமோ குணம் பெருகி விட்டால், சோம்பேறித்தனம் ஏற்படும். இதைக் கவனித்துக் கொள்ளுங்கள். எனவே, சத்குணத்துடன், பணியில் நிலையுறுதியும் பெற வேண்டும்.

முதிய வயதில், அதாவது 70, 80 வயதுகளில், ரஜோ குணம் மற்றும் தமோ குணம் தாமாகவே குறைந்து விடும். தூக்கமும் குறைந்து விடும். அப்போது, படியுங்கள், சிந்தியுங்கள், எப்போதும் உங்களை சுறு சுறுப்பாகவே வைத்துக் கொள்ளுங்கள்.

குருதேவ்! தாங்கள் தரும் ஒவ்வொரு துளி ஞானமும் ரசமுள்ளதாக இருக்கின்றது. எளிதாகவும் உள்வாங்கிக் கொள்ள முடிகின்றது. யோக வசிஷ்டத்தைப் பற்றி எளிமையான முறையில் எடுத்துக் கூற முடியுமா?

குருதேவ்: இது ஒரு பெருங்கடலை ஒரு சிறு பானைக்குள் அடக்குவது போன்றது.  இயலாத செயல். யோக வசிஷ்டம் விண்வெளியைப் போன்றது. பெருங்கடலை போன்றது. நீங்களே அதில் ஆய்வுப் பயணம் சென்று அறிய வேண்டும். அது தன் விளக்கம் உள்ளது. ஞான அர்த்தம் உள்ளது. உள்ளுயிர்த் தன்மை என்பது விண்வெளியைப் போன்றது, காலியானது, பெருங்கடலைப் போன்றது, முழுமையானது.

இன்று விஞ்ஞானிகள் , இப்பிரபஞ்சத்திலுள்ள எல்லா கோள்களும், விண்மீன்களும், தங்களைச் சுற்றியுள்ள வெற்றிட அழுத்தத்தால், உருண்டையாகவே இருக்கின்றன என்று கூறுகின்றார்கள். சூரியனைச் சுற்றியுள்ள வெற்றிடமானது, அழுத்தமும் சக்தியும் மிகுந்து எப்போதும் சூரியனை வட்ட வடிவமாகவே வைத்துள்ளது. வெற்றிடம் என்பது சூரியனை விட பத்து லட்சம் அளவு அதிக சக்தியுடையது. இருட்டாக உள்ள அந்த இடம் விண்மீன்களை விட பல மடங்கு சக்தி வாய்ந்தது. வேதங்களில் கூறப்படுவது இது தான்: இருட்டை இருட்டு கவ்வியது தான் ஆதியானது என்பதாகும். இன்று விஞ்ஞானிகள் கூறும் இருட்டு மற்றும் கரும் சக்தி என்பதெல்லாம் இந்த சக்தி தான்.

ரிக்வேதத்தில் .படைப்புச் சூத்திரம் என்று ஒரு சூத்திரம் உள்ளது.  இருட்டை இருட்டு சூழ்ந்து கொள்வது என்பதை மக்களால் புரிந்து கொள்ள இயல வில்லை. அது ஏதோ ஒரு கவியின் கற்பனை அல்லது கவி ஏதோ கூற முயற்சித்து அது பொருளற்றதாகி விட்டதாக எண்ணினார்கள். வெகு காலத்திற்கு மக்கள் இவ்வாறே அதற்குப் பொருள் விளக்கம் கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று அறிவியல் வல்லுனர்கள் கூறுவதில் ஒத்திசைவு உள்ளது. அதனால்தான் அறிவியலும் ஆன்மீகமும் நெருங்கியவை. பௌதீக இயலும், சக்திச் சொட்டுப் பொறியியலும் நீங்கள் படிக்கும் போது, வேத ஞானதிற்குள் சென்று விடுகின்றீர்கள். எக்காலத்திலுமே மக்களுக்கு ஞானம் வழங்கப் படாமல் இல்லை. எப்போதுமே ஞானம் வழங்கப்பட்டு உள்ளது, அதை மக்கள் புரிந்து கொண்டார்களா இல்லையா என்பது வேறு விஷயம்.

குருதேவ்! தயவு செய்து பிராணப் பிரதிஷ்டை பற்றிக் கூற முடியுமாதானியங்கள் மற்றும் நீரில் விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்வார்கள் என்று கேள்வியுற்றிருக்கின்றேன். அதன் முக்கியத்துவத்தைக் கூற முடியுமா?

குருதேவ்: ஆம்.ஆகமங்களில் அது பற்றி நிறைய கூறப்பட்டுள்ளது. ப்ராணா (சக்தி) சிலை அல்லது விக்ரஹத்தில் செலுத்தப்படுகின்றது. ஒரு கோவிலில் பல சிலைகள் உள்ளன. ஆனால் எல்லாமே வழிபாட்டுக்குரியவையாக இருப்பதில்லை. கர்ப்பக் கிரஹத்தில் உள்ள விக்ரஹம், சிலை மட்டுமே ஆராதிக்கப்படுகின்றது. அதற்கு, பலவிதமான சமயச் சடங்குகள் செய்கின்றார்கள். முதலில் மந்திரங்களை ஜபித்து, விக்ரஹத்தை குறிப்பிட்ட நாட்களுக்கு நீரிலும் பின்னர் தானியங்களிலும் வைக்கின்றார்கள். கோவில் உள்ள இடத்தில் தானியங்களை விதைத்து, அவை முளையிடுகின்றன. பல படிகளில் இச்சடங்குகளை செய்து, காற்று, ஆகாய வெளி, நெருப்பு, நீர், சப்தம் ஆகியவற்றிலிருந்து சக்தி விக்ரஹத்துள் செலுத்தப்படுகின்றது.

சிலையை விட அதனடியில் உள்ள மண்டலா அல்லது யந்த்ரா என அழைக்கப்படும் வரைபடம் உள்ள செப்புத் தகடு மிக முக்கியமானது. அது ஒரு மின்சுற்று வரை படம். ஒரு டிரான்சிஸ்டர் .அல்லது தொலைக் காட்சிப் பெட்டியைத் திறந்தால், அங்கு ஒரு மின்சுற்று வரை படம் இருப்பதைக் காண்பீர்கள். உங்களுக்கு அது பொருள் இல்லாத செப்புக் கம்பிகள் இங்குமங்குமாகச் செல்லும் ஒரு வரைபடமாகத் தோன்றும்.

ரேடியோவினுள்ளும் இவ்வாறே இருப்பதைக் காணலாம். ஆனால் இந்த வரை படம் மிக முக்கியமானது. அது போன்றே விக்ரஹத்தின் அடியிலும் இத்தகைய வரைபடம் உள்ளது. அது நேர்மறை சக்தியினைக் காக்கும் வலிமை உள்ளது.  மக்கள் வழிபடும் போது, அவர்கள் அந்த அதிர்வலைகளை உணருகின்றார்கள். மிகவும் பழமையானது. துரதிர்ஷ்ட வசமாக பெரும்பான்மையானவர்கள் இதை அறியாமல் இருக்கின்றார்கள். மிகச் சிலரே இதை அறிந்திருக்கின்றார்கள்.

குருதேவ்! நமது சடங்குகள் அனைத்திலும் நீர் உபயோகப்படுத்துவதன் முக்கியத்துவம் என்ன?

குருதேவ்: நமது உடலில் 60 சதவீதம் நீர் தான் உள்ளது. உணர்வுகளுடனும், சப்தத்துடனும் நீரின் ஒலி அலை அதிர்வு ஏற்படுகின்றது.மந்திரங்கள் நீருடன் ஆழ்ந்து கலந்து விடுகின்றன. நீர் எவ்வாறு வெவ்வேறு விதமான உணர்ச்சிகளுக்கு பிரதிபலிப்பாக உள்ளது  என்பது பற்றி ஒரு அழகான காட்சி தொகுப்பு நமது வலைத்தளத்தில் உள்ளது. ஒரு பாட்டிலில் தண்ணீர் உங்கள் முன்னால் வைத்துக் கொண்டு," நான் உன்னை வெறுக்கின்றேன்" என்று கூறுங்கள். நீரிலுள்ள படிகங்கள் வேறு விதமாக ஆகும். அது போன்று நீருக்கு அருகில், நேர்மறையான பண்ணிசைப்பு நிகழும் போது, அதில் ஒத்திசைந்த அழகிய அதிர்வுகள் ஏற்படும். ஜப்பானிலிருந்து ஒருவர் இத்தகைய பரிசோதனைகளை நடத்தி, அது கணினினித் தொடர்பில் உள்ளது. மிக ஆச்சரியமானது.

குருதேவ்! தொண்டு, சாதனா, சத்சங்கத்தில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் பட்சத்தில் ஏன் முக்தி நிலையைத் தேட வேண்டும்? பிறப்பிற்கும் இறப்பிற்கும் அப்பால் ஏதேனும் இருக்கின்றதா?

குருதேவ்: மகிழ்ச்சியை விரும்பாதவன் மோக்ஷத்தை அடைகின்றான். மோக்ஷத்தை விரும்பாதவன் அன்பினை அடைகின்றான். மகிழ்ச்சிக்கான தேடுதல் இல்லாத போது  மோக்ஷம் கிட்டுகின்றது. ஏன் மக்கள் தற்கொலை செய்து கொள்ளுகின்றார்கள்? ஏனெனில் அவர்கள் மகிழ்ச்சியைத் தேடுகின்றனர். துன்பத்தைப் பற்றிய பயமும் மகிழ்ச்சிக்கான தேடுதலும் முடிவில்லாமல் போகும்போது தற்கொலை எண்ணம் தோன்றுகின்றது.

குருதேவ்! கடந்த பத்து ஆண்டுகளாக நான் இரண்டே இரண்டு பிரச்சினைகளையே சந்தித்து வருகின்றேன். இதிலிருந்து நான் எப்போது விடுபடுவேன்? வாழ்வில் வித்தியாசமான பிரச்சினைகள் இருந்தாலும் பரவாயில்லை.

குருதேவ்: பிரச்சினைகள் பாதியாகக் குறைக்கப்பட்டாலும் அவையின்றி அமைதியின்மை ஏற்படும்! சற்றுப் பிரார்த்தனை செய்யுங்கள். நன்மைகள் ஏற்படும். தூய்மையான உள்ளத்துடன் பிரார்த்தனை செய்தால் கடவுள் கேட்டதை கொடுப்பார். ஆழ்மனதிலிருந்து "இது வேண்டும்" என்னும் பிரார்த்தனை எழுந்தால், தாமதமின்றி அது கிடைக்கும்.

அன்புள்ள குருதேவ்! விசாலாக்ஷி மண்டபம் யாருடைய வடிவமைப்பு,மற்றும் கட்டிடக்கலை? அது வெனிலா ஸ்ட்ராபெரி கேக்  போன்று மிகுந்த சுவையுடன் உள்ளது. அதைப் பார்த்தாலே எனக்கு மிகுந்த அமைதி ஏற்படுகின்றது

குருதேவ்: ஆம்! நமது பயிற்சிகள் மற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் கூரை வேய்ந்த கொட்டகைகளிலேயே நடை பெற்று வந்தன.  மழை பெய்யும் போது, ஈரமில்லாத இடங்களுக்கு தங்கள் இருக்கைகளை மாற்றிக் கொள்வார்கள். கடுமையாக மழை பெய்யும் போது எல்லாவற்றையுமே நிறுத்தி விட வேண்டியது இருக்கும். இவ்வாறு தான் பழைய வளாகத்தில் நிகழ்ந்து வந்தது. ஹாங்காங்கிலிருந்து ஒரு கனவான் "குருதேவ்! உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மக்கள் இங்கு வருகின்றார்கள். அவர்கள் மழையில் நனைவதையோ, வசதியின்றி இருப்பதையோ நீங்கள் விரும்ப வில்லை. எனவே ஒரு ஒரு அரங்கம் அமைக்க வேண்டும்" என்று கூறினார். ஒரு வரைபடம் வரைந்து இது போன்று அமைப்போம் என்று கூறினேன். அவ்வாறே கட்டினார்கள். பின்னர், ஒவ்வொரு தூண் அமைப்பிற்கும் சுற்றியுள்ள கிராமத்தில் ஒரு எழை குடும்பத்திற்கு இலவச வீடு அமைத்துத் தர வேண்டும் என்று கூறினேன்.

அவ்வாறே சுற்றியுள்ள கிராம மக்களுக்கு வீடுகள் அமைத்துத் தந்தோம். விசாலாக்ஷி மண்டபம் அமைத்து 12 ஆண்டுகள் ஆகி விட்டன. இப்போதும் அதைப் பார்த்தால் நல்லுணர்வு ஏற்படுகின்றது. அதன் அமைப்பு கண்களுக்குக் குளுமையாக இருக்கின்றது. துபாயிலிருந்து ஒருவர் "நான் இதற்கு மின் விளக்குகள் பொருத்துகின்றேன்" என்றார். "நல்லது! அவ்வாறே செய்யுங்கள் என்று கூறினேன்.தற்காலத்தில் அலுமினியச் சட்டங்கள், கண்ணாடி கூரை, கண்ணாடி தகடுகள், இவற்றுடன் கூடிய நவீன கட்டிட அமைப்பைத் தான் செய்கின்றார்கள். இந்த மண்டபத்தைக் கட்டிய இது போன்ற பழைய கட்டிட அமைப்பு கொத்தனார்கள் வெகு காலம் வேலையின்றி இருந்தார்கள். ஏனெனில் இது போன்ற கட்டிடங்கள் கட்டப் படுவதில்லை. இக்கட்டிடம் அமைக்க இரண்டரை முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆயிற்று. சுமார் 7000 பேர் பல்வேறு கட்டங்களில் இதில் பணி புரிந்து வருவாய் அடைந்தனர். மிக்க மகிழ்ச்சியுடன் இருந்தனர். இத்தகைய கலை நுணுக்கம் பழைய கால இந்தியக் கோவில்களிலேயே காணப்பட்டது. இம்மாதிரியான கோவில்களோ, கட்டிடங்களோ இப்போது எவரும் கட்டுவதில்லை.

நமது கட்டிடங்கள் எல்லாமே அநேகமாக இத்தகைய இதழ்கள் வடிவமைப்பு உள்ளவை ஆகையால் கொத்தனார்களுக்கு வேலை இருந்து கொண்டே இருக்கின்றது. அவர்களுக்குத் தெரிந்த இத்தகைய கட்டிடக்கலை அமைப்பு  ஒரு தனித்திறன்அல்லவா?