இயற்கையின் ஆன்மீகம்

வெள்ளிக்கிழமை 4 ஏப்ரல் 2014  

விதர்பா, மகாராஷ்டிரம்


ஒரு உயர்வான சக்தி இருக்கிறது. அந்த சக்தியான கடலில் மிதந்து கொண்டிருக்கிறோம் என்பதை நாம் எப்போதும் நினைவில் வைக்க வேண்டும். அந்த சக்தி நமக்குள்ளும் நமக்கு வெளியேயும் இருக்கிறது. இந்த நம்பிக்கை நமக்குள் உதயமாகும் போது, உலகில் எந்த விஷயமும் நம்மை அசைக்க முடியாது. வாழ்வில் நாம் இந்த நம்பிக்கையோடு இருந்தால், நமக்குள் அளவிட முடியாத ஒரு சக்தியை உணர்வோம்..

ஒரு மனிதன் உள்ளுக்குள் வலிமையானவனாக ஆகாவிட்டால் எப்போதும் மகிழ்ச்சி அடைய முடியாது. அவன் துன்பத்தால் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பான். எனவே நாம் மன வலிமை பெறுவது அவசியம். “இவ்வுலகில் ஒரு உயர்வான சக்தி எல்லாவற்றையும் காக்கிறது; அது நம்மையும் காக்கும் ; நான் எப்போதும் தனியாக இருப்பதில்லை;“ என்ற நம்பிக்கை நமக்குள் இருந்தால் மட்டுமே மன வலிமை பெற முடியும்.

மகாராஷ்டிரத்தில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றிக் கேள்விப்பட்டேன். இச்சம்பவத்தால் விவசாயிகள் மிகவும் மனத் தளர்ச்சி அடைந்திருந்தார்கள். அவர்களுடைய பயிர்கள் இயற்கையின் சீற்றத்தால் அழிந்து விட்டன. அந்த விவசாயிகளுக்கு நான் சொல்ல விரும்புவது “நம் வாழ்க்கை நம் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை விட மிகப் பெரியது “

“கடவுள் இருக்கிறார். அவர் எப்போதும் என்னைக் காக்கிறார்“ என்ற நம்பிக்கையோடு இரு. இந்த நம்பிக்கை உனக்கு தன்னம்பிக்கையைக் கொடுக்கும். உன்னை படைத்த இறைவன் உன்னுள் இருக்கும் போது, வாழ்வில் நடக்கும் சின்னச் சின்ன விஷயங்களுக்காக ஏன் அழுகிறாய்? கடவுள் நம்பிக்கை நமக்கு ஆர்வத்தையும், பொறுமையையும் அளிக்கும். வாழ்வில் எல்லோருக்கும் பிரச்சினைகள் வரும். யாருடைய வாழ்வில் பிரச்சினைகளே இல்லாமல் இருக்கிறது? பகவான் கிருஷ்ணர், பகவான் ராமர், புத்த பகவான், முகம்மது நபி எல்லோருமே தங்கள் வாழ்வில் பிரச்சினைகளைச் சந்தித்தார்கள். வாழ்வில் பிரச்சினைகள் இருந்த போதிலும், இறை நம்பிக்கை இருந்தால், பிரச்சினைகள் தீர்க்க முடியாததாகத் தோன்றாது.

பயிர்கள் அழிந்ததற்காக வருத்தமடைந்த விவசாயிகளுக்கு, இந்த சமயத்தில் நீங்கள் கடவுள் நம்பிக்கையை கை விடாமல் இருக்க வேண்டும். தன்னம்பிக்கையை இழக்காதீர்கள். மன வலிமையோடு இருங்கள். இச் சம்பவங்களை விட நம் வாழ்க்கை மிகப் பெரிது என்று தெரிந்து கொள்ளுங்கள். ஐந்து விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக கேள்விப்பட்டேன். இச் சமயத்தில் விவசாயிகளுக்கு ஒரு அறிவிப்பு செய்ய விரும்புகிறேன். எது வந்தாலும் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது. இறை நம்பிக்கையோடும், தன்னம்பிக்கையோடும் மேலே செல்ல வேண்டும். நாங்கள் அனைவரும் உங்களோடு இருக்கிறோம்.

நாட்டில் ஆன்மீகம் தழைத்து வளரும் போது, இயற்கையும் மகிழ்ச்சியோடும் அமைதியோடும் இருக்கும். நாட்டில் தற்போது வளர்ந்து வரும் அநீதி மற்றும் குற்றச் செயல்கள் தான் இயற்கையின் சீற்றத்துக்குக் காரணமாகின்றன. (செயற்கை உரம் உபயோகிப்பதால்) நாம் நம் மண் வளத்தை பாழ் செய்து வருவதாலும், காற்றையும் நீரையும் அசுத்தப்படுத்தி வருவதாலும், இயற்கை தன் சீற்றத்தை வெளிப்படுத்துகிறது. (நாம் இதை நிறுத்தா விட்டால்) இப்படிப்பட்ட பேரழிவுகள் தொடரும்.

ஒரு ப்ளாஸ்டிக் பையை எரிப்பதால் உற்பத்தியாகும் நச்சு வாயுவான டையாக்ஸின் 1000 பேருக்கு புற்று நோயை உண்டு பண்ணும் வலிமை வாய்ந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? நம் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டும். முடிந்த வரை ப்ளாஸ்டிக் பைகளை உபயோகிக்க கூடாது. இன்றைய காலகட்டத்தில் ப்ளாஸ்டிக் பைகளின் உபயோகத்தை முற்றிலும் தவிர்ப்பது கடினம். அதே சமயம் நம்மால் அதன் உபயோகத்தைக் குறைக்க முடியும். ஆறுகளில் ப்ளாஸ்டிக் பொருட்களை போடுவதையும் தவிர்க்கலாம். அதே போல் திறந்த வெளியில் ப்ளாஸ்டிக் பொருட்களை எரிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

நம் விவசாயிகள் விழித்தெழ வேண்டிய சமயம் வந்து விட்டது. நீங்கள் ரசாயன உரங்களை உபயோகிக்கக் கூடாது. (இயற்கை உரங்களையே பயன் படுத்த வேண்டும்) இன்று கால்நடைகளை கொல்வது (அசைவ உணவுக்காக) மிகவும் அதிகரித்து விட்டது. நாம் சுதந்திரம் அடைந்த போது 120 கோடி கால்நடைகள் இருந்தன. நம் மக்கள் தொகை அப்போது 30 கோடி. ஒரு மனிதனுக்கு 4 பசுக்கள். இப்போது மக்கள் தொகை 120 கோடி. கால்நடைகளின் எண்ணிக்கை 20 கோடி மட்டுமே.
கால்நடைகள் குறைந்ததால் இந்தியா பேரிழப்பை அடைந்திருக்கிறது. நாம் ஒவ்வொரு ஆண்டும் 6.5 லட்சம் டன் மாட்டிறைச்சியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். இப்படியே நடந்தால் நாம் பால் என்பதை புத்தகங்களில் மட்டும் படித்து அறிய வேண்டியிருக்கும். நாட்டில் பால் உற்பத்தி என்பதே இல்லாமல் போய் விடும். வரப்போகும் சந்ததியருக்கு இது பெரிய சோகமான விஷயமாகும்.

ஒரு ஏக்கர் நிலத்தை வளமாக்க ஒரு பசு மட்டும் போதும் என்று உங்களுக்குத் தெரியுமா? நம் நிலத்தில் ஹைட்ரோ கார்பன் மற்றும் நைட்ரோ கார்பன் அளவு (சதவிகிதம்) குறைந்து விட்டது என்பதை அறிவீர்களா ? உலக நாடுகளின் ஆராய்ச்சிப்படி ஒரு நிலத்தில் ஹைட்ரோ கார்பன் அளவு 6 % இருந்தால் அது பயிரடத் தக்கது. மேல் நாடுகளில் இந்த அளவு தற்போது 4 – 5 % உள்ளது. இந்தியாவில் தற்போது இந்த அளவு 0.2 – 0.3 % மட்டுமே உள்ளது.

நம் உடலில் இரும்பு சத்துக் குறைவால் அநிமியா என்ற வியாதி வருவது போல் இந்திய நிலப்பரப்புகளில் தேவையான அளவு ஹைட்ரோ கார்பன் சத்து இல்லாததால் நோய்வாய்ப் பட்டிருக்கிறது. ரசாயன உரங்களைப் பயன்படுத்துவது தான் இதற்கான காரணமாகும். எனவே விவசாயிகள் ரசாயன உரங்களை பயன்படுத்துவதை நிறுத்தி இயற்கை உரங்களையே பயன் படுத்த வேண்டிய சமயம் வந்து விட்டது.

அயல் நாட்டு கோதுமை விதைகளால் வளரும் பயிர் ஒவ்வொன்றும் 50 – 60 தானியங்களைக் கொடுக்கிறது. இந்திய விதையில் வளர்ந்த பயிர் 120 தானியங்களைகொடுக்கிறது. அதே போல் இந்திய விவசாயிகள் நம் இயற்கை உரத்தைப் பயன்படுத்தி 6 அடி நீள சுரைக்காயை விளைவித்திருக்கிறார்கள். நான் மேற்கூறிய உதாரணங்களை உங்களுக்குச் சொல்லக் காரணம், நீங்களும் இயற்கை உரம் பயன் படுத்தி பயனடைய வேண்டும் என்ற எண்ணமே. நாம் முன்பு நம் நிலத்தில் பல விதமான பயிர்களை வளர்ப்பது வழக்கமாக இருந்தது. அதாவது ஒரே நிலத்தில் ஒரு ஆண்டில் இரண்டு அல்லது மூன்று வேறு வேறு பயிர்களை வளர்த்தோம். இது மண் வளத்தை காக்க உதவியது. தானியங்களின் கொள்முதலும் அதிகமாக உதவியது.

மேலும் ஒரு பயிர் சரியாக விளையாமல் நஷ்டமானாலும் மற்ற பயிர்களின் விளைச்சலால் நஷ்டத்தை ஈடு கட்ட முடிந்தது. ஒரே விதையை ஒரு முறை மட்டும் விதைக்கும் வழக்கம் மக்கள் தொகை குறைவான நாடுகளில் பின் பற்றப்படுகிறது. நம் இந்திய நிலங்களுக்கு இது உகந்தது அல்ல. கால்நடைகளின் இறைச்சி ஏற்றுமதியைக் குறைத்து பால் உற்பத்தியையும், இயற்கை உர உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும். மீண்டும் நம் விவசாயிகளை நான் கேட்டுக் கொள்வது இது தான். இயற்கையின் சீற்றத்துக்கு ஆளாகாமல் இருக்க வேண்டுமென்றால், எல்லா இடங்களிலும் சத்சங்கம் நடத்த வேண்டும். நம் நிலங்களிலும், கிராமங்களிலும் புனிதமான மந்திரங்களை ஓதுவது அவசியம்.

நம் பழம்பெரும் நூல்கள் இதை அறிவுறுத்துகின்றன. நானும் என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். எங்கெல்லாம் மகா ருத்ரம் சொல்லப்படுகிறதோ (சிவபெருமானுக்கான ஜபம்), அங்குள்ள சுற்றுச் சூழல் புனிதமாகி, ஆக்க பூர்வமான அதிர்வலைகள் பரவுகின்றன. அங்கு பயிர்கள் மிகச் செழுமையாக வளர்ந்து அதிக கொள்முதல் கிடைக்கும். தென் அமெரிக்க நாடுகளில் மக்கள் நம் த்ரயம்பக ஹோமம் மற்றும் அக்னி ஹோத்ரம் என்ற செயல்முறைகளை ஏற்றுக் கொண்டு பின்பற்றி வருகிறார்கள். இதனால் அவர்களுடைய நிலங்கள் வளமாக இருக்கின்றன. நம்முடைய பாரம்பரியமான இச் செயல்முறைகளை நம் நாட்டில் ஏன் பின்பற்றக் கூடாது?

விவசாயிகள் நம்பிக்கை இழக்கக் கூடாது. அதைரியப் படக் கூடாது. இன்றும் நம் நாட்டில் மனிதாபிமானம் மிகப் பெரிய அளவில் உள்ளது. நீங்கள் தற்கொலை செய்துகொள்ளத் தேவையில்லை. யாராவது அப்படிப்பட்ட மனநிலையில் இருப்பதை அறிவீர்களானால், அவர்களை வாழும் கலை ஆசிரியரிடம் அழைத்துச் செல்லுங்கள். அல்லது வாழும் கலை ஆசிரியரை அந்த விவசாயியின் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். இரண்டே நாட்களில் அவருடைய மன நிலையில் நல்ல மாற்றம் ஏற்படும். இரண்டு நாட்கள் கூடத் தேவையில்லை. ஒரு நாளே போதும்.

முன்பு கூட விதர்பாவில் தற்கொலை அதிகமாக இருந்த போது, வாழும் கலை ஆசிரியர்கள் 118 கிராமங்களுக்குச் சென்று சேவை செய்து விவசாயிகளுக்கு ஆறுதல் அளித்தார்கள். அவர்களுடைய சேவையை நான் போற்றுகிறேன்.அந்த கிராமங்களின் நிலை மிகவும் மேம்பட்டதாக சொல்கிறார்கள். யாரும் தற்கொலை செய்து கொள்வதில்லை.ஆன்மீக சக்தி ஒன்று மட்டுமே தற்கொலையைத் தடுக்க வல்லது. ஆன்மீகம் குற்றங்களையும் தடுக்கும்.