மனதிற்கு மீண்டும் மீண்டும் பயிற்சியளியுங்கள்

28 ஏப்ரல், 2014

பெங்களூரு, இந்தியா


இன்று ஆத்மாவிற்கும் மனதிற்கும் இடையே உள்ள வேறுபாட்டினை பற்றி ஆழ்ந்து சிந்திப்போம். ஆத்மா மாற்றம் இல்லாதது, எப்போதும் ஒரே நிலையில் இருப்பது, ஆனால் மனம் அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்கும்.  அதனால் தான் மனம் சந்திரனுடன் (வளரும் தேயும் சந்திரனைக் குறிப்பிட்டு) ஒப்பிடப்படுகின்றது. ரிக் வேதத்தில் புருஷசுக்தத்தில் ' சந்த்ரமா மனசோ ஜாயதே' (பொருள்: இறைமையின் விண் மனதிலிருந்து எழுந்தது சந்திரன்) என்று கூறப்படுகின்றது. 

சந்திரனுக்கும், மனதிற்கும் ஒரு  ஆழ்ந்த தொடர்பு உள்ளது. சந்திரன் வளர்ந்து தேய்வது போன்று நம் மனத்திலும் எழுச்சியும் வீழ்ச்சியும் ஏற்படும். சில சமயங்களில் விரியும், சில சமயங்களில் சுருங்கும். எந்த காரணமும் இன்றி சில சமயங்களில் மகிழும், சமயங்களில் துன்புறும்.
அதனால் தான், நெடுங்காலமாக மக்கள்,"மனதை வெல்வபவன் இவ்வுலகையே வெல்கின்றான்" என்று கூறி வருகின்றார்கள். கட்டுப்படுதலுக்கும், விட்டு விடுதலையாவதற்கும் மனமே காரணம். ஏதாவது தளைகளில் சிக்கிக்கொண்டது போன்று நாம் உணருவதற்கும், விடுதலையாக உணருவதற்கும் மனமே காரணம். அதனால் நம் மனதிற்கு மீண்டும் மீண்டும் பயிற்சியளிக்க வேண்டும். "மனைவ மனுஷ்யாநாம் கரணம் பந்த- மோக்ஷயோ" 

இதன் பொருள் என்னவென்றால்,கட்டுண்டிருத்தலுக்கும், விடுதலைக்கும் மனம் மட்டுமே காரணம் ஆகும். தளைகளில் சிக்கிக் கொண்டது போன்று நாம் உணருவதற்கும்விடுதலையாக உணருவதற்கும் மனமே காரணம். அதனால் நாம் நம் மனதிற்கு மீண்டும் மீண்டும் பயிற்சியளிக்க வேண்டும். இது தான் ஞானத்தின் சாரம். இடைவிடாமல் தொடர்ந்து இதை பயிற்சி செய்து கொண்டிருந்தால், தொடர்ந்து பிரச்சனைகளை சந்திக்கும் ஒருவன் எவ்வாறு அவற்றை ஒரு புன்னகையுடன் சந்திக்கும் திறன் அடைகிறானோ அவ்வாறு நாம் சித்தி (அசாதரணமான திறன்) அடைந்து மனதை வசப்படுத்தலாம். அந்நிலையில் எந்தப் பிரச்சினையும் துன்பத்தை அளிக்காது.
முதன்முறை ஒரு குழந்தையை திட்டும் போது அது வருத்தம் அடைகின்றது. ஆனால் தினமும் அதைத் திட்டிக் கொண்டிருந்தால், அக்குழந்தை அதற்குப் பழகி, எந்த உணர்வும் இன்றி ஆகி விடுகின்றது."ஒ! எப்போதும் நான் திட்டு வாங்கிக் கொண்டிருக்கின்றேன், இது ஒன்றுமே இல்லை" என்று அக்குழந்தை வேதனை இன்றி வாழ்ந்து கொண்டிருக்கும்.

அது போன்று, நாம் வாழ்வின் அனுபவங்களை (இனியவை, இனிமையற்றவை) எதிர்கொண்டால், ஒரு காலகட்டத்தில், நம்முள் "எல்லாமே ஒன்றுமில்லாதவை" என்னும் மெய்யுணர்வு எழும். அப்போது  தான் நாம் ஆத்மாவில் நிலை பெறுகின்றோம்.ஆத்மாவில் நிலை பெறுவது என்பதன் பொருள் என்னவென்றால், மனிதர்களோ, பொருட்களோ, சூழ்நிலைகளோ எது நம் முன் வந்தாலும் நமது புன்னகையையும், உள்ளச் சமநிலையையும் ஒரு கணம் கூட இழக்காமல் இருப்பது என்பதாகும். அப்படி இழந்தாலும் அது க்ஷண நேரத்திற்குத்தான், உடனேயே நாம் மீண்டும் அதை  அடைகின்றோம். பின்னர் நாம் மேலும் பலமாகவும்ஸ்திரமாகவும் நமது ஆத்மாவில் நிலை பெறுகின்றோம்.

சிறிய அற்பமான விஷயங்களுக்கெல்லாம்நாம் தொல்லை அடைவதில்லை. அடைந்தாலும் அது நீடித்திருப்பதில்லை. நீரில் வரையப்பட்ட கோடு நிலைத்திருக்கும் காலம் தான் அதன் பாதிப்பு நிலைத்திருக்கும். கல்லில் செதுக்கப்பட்ட கோடு போன்று நிலைத்திருப்பதில்லை.ஆத்மாவில் உண்மையில் நிலைபெற்றிருக்கும் ஒருவன் சித்தன் (முழுநிறைவடைந்தவன்) ஆகின்றான்.ஆனால் இந்நிலையை அடைவதற்கு நாம் நமது மனதிற்கு இடைவிடாமல் தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்டும். அதுதான் மனதை வெல்வது அல்லது சிலர் கூறுவது போன்று மனதை கொல்வதாகும்.
சிலர் மனதை வெல்ல வேண்டும் என்று கூறுவார்கள், சிலர் மனதை கொல்ல வேண்டும் என்று கூறுவார்கள். இரண்டும் ஒன்று தான், கூறும் விதம் தான் வெவ்வேறு.மனதின் மீது வெற்றி கொள்வதும், மனதை முறியடிப்பதும் ஒன்றே ஆகும். இதை அடைவதற்கு குருவே வழி.குரு தோன்றும் போது மனம் மறைந்து விடுகின்றது. ஏன் அப்படி? ஆழ்ந்த நம்பிக்கையே காரணம். (ஆழ்ந்த நம்பிக்கை இருக்கும் போது, மனம் சரணடைந்த நிலையில் இருக்கின்றது)

ஒரு பக்தனுக்கு குருவின் மீது ஆழ்ந்த நம்பிக்கை இருப்பதற்குக் காரணம் அவன் தனது மனதின் இயல்பினை பற்றிய விழிப்புணர்வுடன் இருக்கின்றான். மனம் நம்பத்தகுந்ததல்ல,அது ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவி ஊசலாடிக் கொண்டிருக்கும். சில சமயம் இதை விரும்பும், சில சமயம் அதை விரும்பும். சில சமயம் ஆம் என்றும் சில சமயம் இல்லை என்றும் கூறும். பிரக்ஞையுடன் ஒருவன் கவனிக்கும் போது தான் அருகிலிருப்பதையும் (நிகழ்காலம்) தொலைவிலிருப்பதையும் (வருங்காலம்) தடுமாற்றமில்லாத தெளிவுடன் காண முடியும்.

எல்லாவற்றையும் மனதின் மூலமே அறிய முற்பட்டால், அமைதியற்ற நிலை ஏற்படும். (ஏனெனில் மனம் ஒன்றிலிருந்து வேறொன்றுக்குத் தாவிக் கொண்டிருக்கும்). அதனால் தான், இளம் வயதினர் வாழ்க்கையில் பணி பற்றிய முடிவுகள் எடுக்கும் போது மூன்று, நான்கு மெய்யறிவார்ந்தவர்களை கலந்து ஆலோசிக்கின்றார்கள். ஒரு தொழிலைச் செய்ய தீவிர விருப்பம் இருப்பினும், சிறிது அதை ஒத்தி வைத்து, அத்தொழிலை செய்து கொண்டிருக்கும் அனுபவம் மிக்கவர்களை கலந்து ஆலோசிக்கின்றார்கள். ஏன்ஏனெனில், நாம் ஒன்றிலிருந்து ஒன்றிற்குத் தாவும் நமது மனதை மட்டுமே நம்பி இருக்க முடியாது. மனம் அடிக்கடி  மாறும் இயல்புள்ளது, சிலசமயம் சில பிடிக்கும், பிடிக்காது. இவ்வுலகிலேயே நாம் நம்பமுடியாதது நமது மனம் தான். மற்றவையெல்லாம் அடுத்தபடியாக வருகின்றன. நம்மை ஏமாற்றுவதில் முதல் இடம் நம் மனதிற்கு தான். நமது மனம் நம்மை மயக்குவது ஆகும். அதனால் தான், நாம் மீண்டும் மீண்டும் முயற்சித்து, நமது மனதை மௌனமாக்கி ஆத்மாவில் நிலை பெறவேண்டும்.

நிலையான, மாற்றம் இல்லாத, அசைக்க முடியாதவிரிவும் சுருக்கமும் அற்ற ஆத்மாவில்  உங்களை தாழிட்டுக் கொள்ளுங்கள். அது தான் நீங்கள், அது தான் நான், அதுவே கடவுள்.
கடவுள் யார்? கடவுள் எப்படி இருப்பார்? எங்கு இருக்கின்றார் என்றெல்லாம் நாம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். மிக உயர்ந்த ஒரு சக்தி அனைத்தையும் நிகழச் செய்கின்றது என்பதில் ஆழமான அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளுங்கள். அந்த உயரிய சக்தி உங்களை சார்ந்தது, உங்களுள் இருக்கின்றது. இந்த ஆழ்ந்த நம்பிக்கையுடன் இளைப்பாறுங்கள். அப்போது தியானம் எந்த முயற்சியும் இன்றியே நிகழும்.

உங்களது மனதையும் ஞானத்தையும் மீண்டும் தூய்மைப் படுத்திக் கொள்ளுங்கள். அவ்வாறு செய்யாவிடின், நமது மனம், உண்ணுதல், குடித்தல் போன்ற பிற ஆசைகளில் ஈடுபட்டு மங்கலாகவும்அமைதியற்று போகும்.அறிவு ஸ்திரமற்றுப் போகும். எனவேமனதை ஒரே நிலையாக ஞானத்தை நோக்கியே செலுத்துங்கள். 

இன்று ஒரு அறிவியல் ஆய்வாளர் என்னைக் காண வந்திருந்தார். அவர் ஒரு நரம்பியல் நிபுணர். என்னிடம் ஒரு சிறந்த படத்தொகுப்பை காட்டினார். அவர் என்னிடம் கூறியது சுவையானதாக இருந்தது. ஒருவன் 84 லட்சம் பிறவிகள் எடுத்த பின்னரே மனிதப் பிறவி எடுக்கின்றான். அந்த அறிவியல் ஆய்வாளர் இந்த செய்தியை மூளையின் பரிணாம வளர்ச்சியுடன் தொடர்புப்படுத்திக்  கூறினார். மனித மூளையின் கீழ்ப்பகுதி (மூளைத்தண்டு) ஊர்ந்து செல்லும் உயிரின மூளை என்று அழைக்கப்படுகின்றது. இது விலங்குகளிடமும் உள்ளது. இதற்கு சற்றே  மேற்பட்ட அடுக்கு (சற்று அதிக அளவு வாழ்வியல் பண்புகளைக் கட்டுப்படுத்தும்) பாலூட்டும் உயிரினங்களிடம் உள்ளதாகக் கூறப்படுகின்றது. மனித மூளையின் முன் பகுதி மடல் டால்பின் மீன் இனத்தினை ஒத்திருப்பதாகக் கூறப்படுகின்றது. எனவே மூளையின் அமைப்பு வெவ்வேறு இனங்களில் வெவ்வேறு வகையாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. 84 லட்சம் பிறப்புக்கள் என்று நாம் கூறுவது போன்று உடல் உறுப்பு என்னும் முறையில், மூளை வெவ்வேறு உயிரினங்களுக்கு பல்வேறு வகையாக பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கின்றது.

மூளை என்பது அதிசயமான ஒன்று ஆகும். பண்டையக் கால ரிஷிகள், படைப்பின் பல்வேறு தத்துவங்களைக் கணக்கெடுக்கும் போது மூளையையும் சேர்த்துக் கணக்கிட்டார்கள். நமது வேதநூல்களில் இந்த ஞானத்தில் நாம் சற்று ஆர்வம் கொள்ள வேண்டும். தினமும் சற்று நேரம் ஒதுக்கி இந்த ஞானத்தைக் கேட்டறிய வேண்டும். அனைவரும் யோகாவசிஷ்டா நூலை படியுங்கள். அஷ்ட வக்கிர கீதை யைத் திரும்பத் திரும்பப் படியுங்கள். ஒரு முறை படித்தால் போதாது.

இவ்வாறு செய்வதன் மூலம் படிப்படியாக மனதை வெல்லும் சித்தியை அடையலாம்.சித்தி என்பதன் பொருள் முழு நிறைவு என்பதாகும். நம் மனதை வெற்றிகொள்தல், அல்லது அமைதியற்ற மனதை அடக்கி ஆளுதல் ஆகும். இந்த செயற்திறனை பெறுதல் சிறப்பானதாகும். நாம் அனைவரும் இதை செய்யும் ஆற்றல் பெற்றவர்கள். நம்மில் சிலர் மட்டுமே இதை செய்யமுடியும், மற்றவர்களால் முடியாது என்பது இல்லை. இல்லவே இல்லை. உண்மையில் இது அடைவதற்கு  மிகவும் எளியது ஆகும்.


தொடரும்.......