ஸ்ரீ ராமநவமியில் குருதேவரின் செய்தி

கொல்கத்தா, மேற்கு வங்காளம்


8 ஏப்ரல் 2014

குருதேவ், ராம் என்பதன் பொருள் என்ன?

ராம் என்பது நம்முள் இருக்கும் சுடரொளி. ஆத்ம ஒளி.ரவி என்னும் சொல்லும் இதையே குறிக்கும். ர என்பதன் பொருள் ஒளி, வி என்றால் சிறப்பான என்பதாகும். இதன் பொருள் நம்முள் இருக்கும் நிலையான  சிறப்பு மிக்க ஒளி என்பதாகும். நமது இதயத்திலிருக்கும் ஒளியே ராம். நமது ஆத்ம ஒளி ராம். ராமநவமியாகிய இந்த நாள் உள் ஒளியின் பிறப்பினை கொண்டாடும் நாளாகும். ராமர், தசரத மன்னருக்கும் கெளசல்யாவிற்கும் பிறந்தார். கௌசல்யா என்றால் திறன். தசரத என்பதன் பொருள் பத்து ரதங்களையுடையவன் என்பதாகும். நமது உடலில் பத்து உறுப்புக்கள் உள்ளன. பஞ்ச ஜன்யேந்திரா (ஐம்புலன்கள்) பஞ்ச கர்மேந்த்ரிய (செயல்களுடன் சம்பந்தப்பட்ட ஐந்து புலன்கள் (இரு கரங்கள், இரு கால்கள், பிறப்புறுப்பு, கழிவுறுப்பு, மற்றும் வாய் )

சுமித்ரா என்பதன் பொருள் அனைவருடன் சிநேகமாக இருப்பவர் என்பது ஆகும்.கைகேயி என்பதன் பொருள் எப்போதும் சுயநலமின்றி பிறருக்கு வழங்குபவர் என்பது ஆகும். தசரத மன்னர், தனது மூன்று மனைவிகளுடன் முனிவர்களை தரிசித்தார். ரிஷிகள் பிரசாதம் அளித்த போது, தெய்வீக அருளினால் ராம பகவான் அவதரித்தார். ராம் என்பதன் பொருள் உள் ஒளி. லக்ஷ்மண என்பதன் பொருள் விழிப்புணர்வு. சத்ருக்கனன் என்பதன் பொருள் பகைவரில்லாதவன், எதிர்ப்பில்லாதவன். பரத் என்பதன் பொருள் திறமையானவன். அயோத்யா என்பது அழிக்கக் கூடாதது. கருத்து: நமது உடல் அயோத்யா. உடலின் அரசன் ஐம்புலன்களும் ஐந்து செயல் உறுப்புக்களும் ஆகும். உடலின் அரசி திறன் (கௌசல்யா)  புலன்கள் வெளிப்புறத்தை நோக்கியே உள்ளன, திறனை பயன்படுத்தி, அவற்றை உட்புறமாக கொண்டு செல்ல வேண்டும். அப்போது நிரந்தரமான உள் ஒளி (ராமபகவான்) நம்மில் மலரும்.

ராமபகவான் நவமியன்று பிறந்தார். இந்த ஒன்பதாவது நாளின் சிறப்பினை நான் வேறொரு சமயம் கூறுகிறேன். மனம் (சீதா) அகங்காரத்தினால் (ராவணன்) கவரப்பட்டபோது, உள் ஒளியும் விழிப்புணர்வும், ஹனுமான் (ப்ராணாவைக் குறிக்கும்) தோள்களில் மீட்டெடுத்து வந்தனர். இந்த ராமாயணம் நமது உடலில் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

குருதேவ், அன்பு ஒரு உணர்ச்சி அல்ல. அப்படியானால் அன்பு என்பது என்ன?

அது நமது இருப்பு ஆகும். மூன்று விஷயங்களையே நான் உங்களிடம் கூறுகிறேன். தூய்மையான  இதயம். தெளிவான மனம், உண்மையான செயல்பாடு. இவை தாம் ஆன்மீகத்தின் சாரம். இவை மூன்றும் உங்களிடம் இருந்தால் பல பிரச்சினைகள் முளையிலேயே அவ்வப்போது கிள்ளி எறியப் படும்.

தங்களை தரிசித்த பின்னரும் ஏன் தொடர்ந்து முரட்டுத்தனமாகவும், பொறாமையுடனும் நடந்து கொள்கின்றார்கள்? அதற்கு என்ன காரணம்?

பிறரை பற்றிக் கவலைப்படாதீர்கள் என்றே உங்களுக்கு நான் அறிவுறுத்துவேன். இந்தப் பாதையில் அவர்கள் இல்லையென்றால், இன்னும் எவ்வளவு முரட்டுத்தனமாக இருப்பார்கள்? அவர்களை ஏற்றுக்கொண்டு, முன்னேற சற்று நேரம் தரலாம். மக்கள் காலப் போக்கில் திருந்துவார்கள், முன்னேறுவார்கள். நீங்கள் பிறரை கவனித்து கொண்டிருப்பதில் சிக்கிக் கொள்ளக் கூடாது. உங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள். இந்தப் பாதைக்கு வந்த பின்னர் எவ்வளவு தூரம் நீங்கள் மாறியிருக்கின்றீர்கள் என்பதை மௌனமாக கவனித்துக் கொள்ளுங்கள்.சிலர் மெதுவாக கற்பார்கள், சிலர் விரைவாகக்  கற்பார்கள், வாழ்க்கையில் இவை நிகழக் கூடியது தான்.

குருதேவ், பழிவாங்குதலை நியாயப்படுத்தலாமா?

பழிவாங்குதல் முட்டாள்தனத்தின் அறிகுறியாகும்.எவ்விதமான பழி வாங்குதலாக இருந்தாலும் அது நீங்கள் உங்களுடைய பார்வையை இழந்து குருடாகி விட்டீர்கள் என்றே காட்டும்.

குருதேவ், ஏன் என்னுடைய அத்தனை விருப்பங்களும் நிறைவேறுகின்றன?

நீங்கள் ஒன்றை விரும்பும் போது அதை பெறுவது இயல்பானதே. எவ்வாறு கணினியில் ஒரு பட்டனைத் தட்டியவுடன் வேலை செய்கின்றதோ அது போன்று உங்கள் மனதில் விருப்பம் எழும்போது அது நிச்சயம் வெளிப்படும். ஏன் நிறைவேறுகின்றது என்று ஒருவர் கேட்பது இதுவே முதல் முறை என்று எண்ணுகின்றேன். உங்களது விருப்பங்கள் நிறைவேறாமல் இருக்கும் நிலையில் நீங்கள் பழகி விட்டீர்களா? நீங்கள் சாதனாவை ஒழுங்காக செய்து வந்தால் உங்கள் விருப்பங்கள் தாமாகவே நிறைவேறுவதைக் காண்பீர்கள். அப்போது ஏன் நிறைவேறுகின்றன என்றோ அது அசாதாரணம் என்றோ கேட்கமாட்டீர்கள். அதற்கு பழகி விடுவீர்கள்.

என்னுடைய பெற்றோர் ஒரு பெண் குழந்தைக்கு பாதுகாப்பானதும், பொருத்தமானதும் திருமணமே என்று நம்புகின்றனர். தாங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? ஒரு வசதியான பாதுகாப்பான வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு திருமணம் அவசியம் ஆகின்றது?

இல்லை. ஒரு பெண்ணின் பாதுகாப்பிற்காக மட்டும் திருமணம் இல்லை. அது சொந்த விருப்பமும் கூட. ஆனால் உங்களுக்கு ஒன்று கூற விரும்புகின்றேன். திருமணத்திற்குப் பிறகும், மகிழ்ச்சியாக இருங்கள். சிலர் மணமான பின்னரும் மகிழ்வின்றி இருக்கின்றனர், திருமணமின்றி மகிழ்வின்றி இருக்கின்றனர்.

குருதேவ், நான் முதல் முறை வாக்காளர். என்னுடைய தொகுதி வேட்பாளர் நாங்கள் விரும்பும் அளவுக்கு பலமானவர் அல்ல,ஆயினும், அந்த கட்சியைச் சேர்ந்தவர் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகின்றேன். நான் என்ன செய்வது?

தேசீய தேர்தல் என்னும் போது உள்ளூர் வேட்பாளர் பின் செல்ல வேண்டாம் என்று நான் கூற விழைகின்றேன். புத்திசாலித்தனமாக யாரைப் பிரதமராக தேர்ந்தெடுப்பது என்று மதிப்பீடு செய்வது நல்லது. முனிசிபல் தேர்தல் என்றால் வேட்பாளரை பற்றிய அனைத்தையும் தெரிந்து கொண்டு வாக்களிக்க வேண்டும். ஆனால் தேசீய அளவில் நாட்டின் நலனையே மனதில் கொண்டு யார் உளமாரப் பேசுகின்றார்களோ அவர்களையே தேர்ந்தெடுங்கள்.பிறர் எழுதிக் கொடுக்கும் உரையினை வாசிக்கும் பிரதமர் நமக்கு தேவையில்லை. பயமின்றி தன்னுடைய மனதில் உள்ள கருத்துக்களை திறம்பட வெளியிடும் திடமான ஒரு தலைவரே நமக்குத் தேவை.

ஒவ்வொருவருக்கும் ஒரு கட்சியை ஆதரிக்கவோ அதில் சேர்ந்து கொள்ளவோ உரிமை உண்டு. அது பரவாயில்லை. ஆனால் நாட்டின் நலன் என்று பார்க்கும் போது நீங்கள் உங்கள் அரசியல் தேர்வுகளை ஒதுக்கி வைத்து, ஒரு முகமாக  நாட்டின் நலனையே கருத்தில் கொள்ளவேண்டும்.
நன்றாகச் செயல்படக் கூடிய, வாக்குறுதிகளை நிறைவேற்றக் கூடிய பலமான ஒரு வேட்பாளரைத் தேர்ந்தெடுங்கள். இதனைப் பிறருக்கும் கூறி புரிய வையுங்கள். நான் ஏன் இவ்வாறு கூறுகிறேன் என்று விளக்குகின்றேன்.

இன்று ஒரு டாலர் 65 ரூபாய்க்கு இணையானது. ஒரு பலவீனமான நபர் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், ஒரு டாலரின் வலிமை,100 ரூபாய்க்கு சமமாக உயரும். பிற நாடுகள் இவ்வாறு நிகழ வேண்டும் என்று விரும்புகின்றார்கள்.அப்போது தான் குறைந்த விலைக்கு பொருட்களை இந்தியாவிலிருந்து வாங்க முடியும்,நமக்கு எல்லாமே விலை அதிகமாகி விடும். அன்றாட உபயோகப் பொருட்களின் விலை வானத்தைத் தொடும். பிற நாடுகள் மத்திய அரசில் பலமான ஒருவர் ஆட்சியமைத்தால் ரூபாய் தனது மதிப்பில் உயர்ந்து டாலர் வாங்கும் சக்தி 40 ரூபாய்க்கு வீழ்ந்து விடும்.  நம் நாடு பொருளாதாரத்தில் பலம் அடைவதை சில அயல் நாடுகள் விரும்ப வில்லை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பல கோடி ரூபாய்கள் மதிப்புள்ள 30 ஊழல்கள் நடந்திருக்கின்றன.1.4 ட்ரில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இந்தியப் பணம் சட்ட விரோத கறுப்புப் பணமாக நாட்டிற்கு வெளியே ரகசியமாக கடத்தப்பட்டு விட்டது. நான் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட போது ஒரு கனவான் என்னிடம் 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்தியப் பணம் தனது நாட்டு வங்கியில் வைப்பு நிதியில் ஒரு அரசியல்வாதியால் சேமிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். அவர் ஆர்வத்துடன் என்னிடம் "உங்கள் நாட்டில் எவ்வாறு இவ்வளவு ஊழலை பொறுத்துக் கொள்கின்றீர்கள் ? " என்று கேட்டார்.

நான் அவரிடம், "இப்போது படிப்படியாக மக்கள் இப்பிரச்சினைகளைப் பற்றி விழிப்புணர்வுடன் இருக்கின்றார்கள், ஊழல் மிகுந்த மக்களை அவர்கள் சிறைக்கு அனுப்புவார்கள்" என்றே கூறினேன். மாற்றத்திற்கான காலம் வந்து விட்டது. நாம் அதைச் செய்தே ஆக வேண்டும். மற்ற உலக நாடுகளில் இறங்கிக் கொண்டே வரும் உணவுத் தானியங்களின் விலை இந்தியாவில் மட்டும் ஏன் ஏறிக் கொண்டே செல்கின்றது என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. பொருளாதார நிபுணருக்கும் இது புரிய வில்லை.இது எல்லாமே ஊழலின் காரணமாகத்தான். ஏராளமான எண்ணெய் வளம் உள்ளது. ஆனால் நாம் எண்ணெய் இறக்குமதி செய்கின்றோம். இரும்புத் தாது வளம் அதிகம் உள்ளது ஆனால் இரும்பினை இறக்குமதி செய்கின்றோம்.அது போலவே தங்கமும். இது மிக முரண்பாடான ஒன்று ஆகும். அதனால் தான் நம் நாட்டிற்கு மாற்றம் தேவை என்று நான் கூறுகின்றேன்.

குருதேவ், நம் நாட்டின் பாராளுமன்ற முறை தவறானது, அதனால் நாம் வாக்களிக்கக் கூடாது என்று சிலர் கூறுகின்றார்கள். இதற்கு நாம் என்ன செய்வது? வாக்களிக்க வேண்டாமா ?

மாவோயிஸ்டுகள் வாக்களிப்பைப் புறக்கணித்து NOTA நோட்டாவை (பொருந்தாது அதாவது வாக்கு இல்லை) விருப்பத் தேர்வு செய்யுமாறு கூறி வருவதாகக் கேள்வியுற்றேன். உங்கள் வாக்கை வீணாக்காதீர்கள். உங்கள் வாக்கு முக்கியமானது. ஊழலை முற்றிலும் அகற்ற இயலாத போது அதிக ஊழல் செய்பர்களை குறைந்த அளவில் செய்பவர்கள் மூலம் விலக்க வேண்டும்.

குருதேவ், பல கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை ஒரு வாரத்திற்கு முன்னர் தான் வெளியிட்டன. இது சரியா?

தேர்தல் சீர்திருத்தங்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை தேர்தலுக்கு ஆறு மாதத்திற்கு முன்னரே அறிவிக்க வேண்டும், அப்போது தான் மக்கள் வாக்களிக்க முடிவு செய்வதற்கு முன்பு, வேட்பாளர்களுடன் தொடர்பு கொண்டு அவர்கள் பணியினைப் பார்க்க முடியும்.

குருதேவ், இந்தியாவில் ஏற்கனவே பல பல்கலைக்கழகங்கள் உள்ளன. அந்நிலையில் ஏன் ஸ்ரீ ஸ்ரீ பல்கலைக்கழகம் ஏற்பட்டது?

குருதேவ்: பல மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று அடிபடுகின்றனர். ஒரே ஆண்டில் 22 க்கும் 
மேற்பட்ட இறப்புக்கள் நிகழ்ந்து விட்டன. இங்கேயே கீழை மற்றும் மேலை நாட்டுக் கல்வியினைப் பெற முடியும்போது ஏன் நமது மக்கள் இனப் பாகுபாட்டினைச் சந்திக்க வேண்டும்? எனவே இந்தப் பல்கலைக்கழகத்தினைத் துவக்கி அதற்கு தகுந்தார் போன்று பாடத்திட்டத்தினை உருவாக்கினோம். உலக நாடுகள் அனைத்திலுமிருந்து மாணவர்கள் இங்கு வந்து கல்வி கற்கும் விதத்தில், நாலந்தா தக்ஷசீலா போன்ற பல்கலைக்கழகங்களை மீண்டும் நாம் உருவாக்க முடியும்.

குருதேவ், என்னை கடவுளைச் சந்திக்க வைக்க தங்களால் முடியுமா?


குருதேவ்: நிச்சயமாக, அதை செய்யத்தான் நான் இங்கு இருக்கின்றேன். உள்ளுக்குள்ளாகவே முற்றிலும் திருப்தி மற்றும் சந்தோஷமாக ஆகுங்கள். பின்னர் நீங்கள் விரும்பும் அனைத்தும் கிடைக்கும்.