குருதேவரின் குரு பௌர்ணமி செய்தி

வெள்ளிக்கிழமை 31 ஜூலை 2015

க்விபெக், கனடா


நாம் இரண்டு உலகங்களில் வாழ்கிறோம். ஒன்று நம் நினைவாற்றல் சம்பந்தமானது. மற்றொன்று நிஜ உலகம். நினைவாற்றல் மூன்று வகைப்படும்.

·         உனக்கு நினைவு இருக்கிறது. ஆனாலும் உன்னால் ஒன்றும் செய்யமுடியாது. உன் குழந்தைப் பருவம் உனக்கு ஞாபகம் இருக்கும். ஆனால் அதை நீ திரும்பப் பெற முடியாது.

·         மற்றொரு வகையில் உனக்கு நினைவு வரும். ஆனால் அதைப் பெறுவதற்கு நீ முயற்சி செய்ய வேண்டியிருக்கும். உதாரணமாக நீ டொராண்டோவில் உன்னுடைய சாவியை மறந்து வைத்து விட்டாய். இங்கு வந்ததும் நினைவு வருகிறது. ஆனால் அந்த சாவியை நீ உடனே பெற முடியாது. ஏழு மணி நேரம் காரில் பயணம் செய்து அதைப் பெற வேண்டியிருக்கும். உனக்கு நினைவு வந்தபோதிலும், அதைப் பெற முயற்சி செய்ய வேண்டும்.

·         மூன்றாவது வகை, நினைவு வந்தவுடனே நீ அதைப் பெறமுடியும். உதாரணத்துக்கு நீ உன் மூக்குக் கண்ணாடியைத் தேடுகிறாய். உன் எதிரிலிருப்பவர், “நீ உன் மூக்குக் கண்ணாடியைத் தலையில் தூக்கி விட்டிருக்கிறாய்” என்று சொல்கிறார். நீ உடனே அதைக் கீழே இழுத்து விட்டு அதைப் பெற முடியும். இங்கு முயற்சியின்றி, நீ தேடுவது உனக்குக் கிடைக்கிறது.

ஆன்மீகப் பாதை மூன்றாவது வகையைச் சேர்ந்தது. ஒன்றை பற்றிய ஞானம் வந்தவுடனே, அது கிடைத்துவிடும். நீ செய்ய வேண்டியது இதுதான். உனக்கும் இறைவனுக்கும் தொடர்பு எப்போதும் இருக்கிறது என்ற நம்பிக்கை வேண்டும். இந்த நினைவு நம்மை நிஜ உலகத்தோடு இணைக்கிறது. நாம் வாழும் கற்பனை உலகிலிருந்து நிஜ உலகத்துக்குச் செல்வோம்.

இறைவனோடு நமக்குள்ள தொடர்பை எப்படி உணர முடியும்? அங்கு தான் குருதத்துவம் வருகிறது. ஏனென்றால் குரு அந்தத் தொடர்பை உன்னிடம் கொண்டு வருகிறார். பார் ! நீ இங்கு கனடாவிலிருக்கிறாய். “கனடாவில் இருக்கிறேன் என்ற நினைவு வந்தவுடனே நீ கனடாவில் இருக்கிறாய்.அதற்கு எந்த முயற்சியும் தேவையில்லை… உடனே சாத்தியமாகிறது. அதே போல், நீ இறைவனின் தொடர்பை உணரும் போதே, அந்த க்ஷணத்திலேயே, நிஜமற்ற கருமேகம் போன்ற கற்பனை உலகை விட்டு நீ நிஜ உலகுக்கு செல்கிறாய். அது ஆச்சரியம்!
ஞானத்துடன் உள்ள தொடர்பை உணரும் போது, குருவுடன் உள்ள தொடர்பை உணரும் போது எந்தக் கவலையும் இருக்காது. எப்படி கவலைகள், பிரச்சினைகள் மற்றும் எதிர்மறை உணர்வுகள் இருக்க முடியும்? கண்டிப்பாக இருக்க முடியாது!இவைகளெல்லாம் மறைந்து விடும்.

குரு பௌர்ணமி இந்தத் தொடர்பை உணரும் நாள். “நான் இறைவனுடன் தொடர்புள்ளவன். இறைவனைச் சேர்ந்தவன்.” என்று உணரும் நாள். கொண்டாட்டம் தான். உடனுக்குடன் மகிழ்ச்சி தான். கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யத் தேவையில்லை. நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா? ஒரு ஏழை தான் அரச குமாரன் என்பதை மறந்து விட்டான். யாரோ ஒருவர் அவனிடம் வந்து “நீ அரசகுமாரன்” என்று சொன்னார். அந்த வரியைக் கேட்டவுடனே, அவன் தன் இராஜ்யத்தைத் திரும்பப் பெற்றான். உடனேயே அடைந்தான்! ஒரு முயற்சியும் இல்லை. முயற்சி செய்ய வேண்டுமென்று மனதில் பட்டால், அந்த முயற்சியை நீக்க வேண்டும். ஏனென்றால் உன் மனம் முயற்சிக்குப் பழக்கப்பட்டது. அப்படி முயற்சி செய்யத் தூண்டும் மனதை அடக்கி அமைதியாக இருக்க வேண்டும். இறைவனுடன் தொடர்பு என்பது “ நான் தொடர்பு கொண்டவன்” என்ற ஒரு நேரடியான அங்கீகாரம். இன்று இவ்வளவு போதும் . இதில் நிறைய இருக்கிறது. திரும்பத் திரும்ப இதை ஞாபகப்படுத்தி கொள்.

கர்மாவின் திருப்பங்களும் வளைவுகளும்

செவ்வாய்கிழமை, 21 ஜூலை,

2015, பாத் அண்டோகாஸ்ட்


(பிறரது அபிப்பிராயங்களை பற்றிய பயங்களை விட்டுவிடுங்கள் என்னும் இடுகையின் தொடர்ச்சி)

குருதேவ், வாழும் கலையில் இணைந்து, இந்த வழியின் அனுபவங்களை பெற்றுப் பின்னர் திடீரென்று எவ்வாறு சிலர், தங்கள் மனதை மாற்றிக் கொண்டு விலகி விடுகிறார்கள்? என்னால் இதை புரிந்து கொள்ளவே முடியவில்லை.

இந்த பூமியில் பல்வேறு விதமான மனிதர்கள் இருக்கின்றனர். மீண்டும் கூறுகிறேன், சிலரது காலம் சரியில்லையெனில், அவர்கள் விலகி பின்னர் திரும்பி வருகின்றனர். இதிலுள்ள அனைத்தையும் நிறுத்தி விட்டு, மீண்டும் திரும்பி வருகின்றனர். பிறரது நடத்தையை பற்றி கவலைப்படாதீர்கள். சிலர் தியானம் செய்வதை நிறுத்தி விட்டு, தவறுகளுக்கு திரும்புகிறார்கள்? காலம் சரியாகும் போது மீண்டும் துவங்குகின்றனர். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்பதையே பார்க்க வேண்டும். இதை விட்டுவிடும் பலர் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. மிகவும் பரிதாபமாகவே காணப்படுகின்றனர். துயர் ஓரளவுக்கு மிகும் போது திரும்பி வருகின்றனர்.  இவ்வாறு நிகழ்வதை பார்த்திருக்கிறீர்களா? இதை நாம் ஒவ்வொரு நாளும் காண்கின்றோம். மரத்தில் அதிகப் பழங்கள் இருக்கும் போது அவைகளை அனுபவித்து, அம்மரத்திற்கு தண்ணீர் ஊற்ற மறப்பது போன்றதாகும். மரம் காய்ந்து விடும் போது பழங்கள் உதிர்ந்து விடும். அதைக் கண்ட பின்னர், மீண்டும் மரத்திற்கு நீர் ஊற்றத் துவங்குகின்றனர். இதுதான் மனித இயல்பு.

பல தீர்க்கதரிசிகளுக்கு இவ்வாறு நிகழ்ந்திருக்கின்றது. அவர்களுக்கு மிக நெருக்கமானவர்கள் அவர்களுக்கெதிராக திரும்பியிருக்கின்றனர். அப்பாதையிலிருந்து விலகிச் சென்றிருக்கின்றனர். அல்லவா? கர்மாவின் விதி என்பது புரிந்து கொள்ள முடியாதது. பரந்த மற்றும் பிரம்மாண்டமானது. அதை 2+2 என்பது 4 என்பது போல் புரிந்து கொள்ள முடியாது.

குருதேவ், ஆஸ்ரமத்தில் ஏன் முக்கியஸ்தர்களுக்கான மேஜை இருக்கின்றது? ஏன் சிலர் மட்டும் பிறரைப் பற்றிக் கவலைப்படாமல், தங்களுக்கு வேண்டிய அளவுக்குத் தாங்களே பரிமாறிக்கொள்ள முடிகிறது?

நல்லது, எனக்குத் தெரியாது. நீங்களே கண்டுபிடித்துக் கூறுங்கள். மக்கள் மௌனத்திலிருக்கும் போது, அவர்களிடமிருந்து விலகி,விருந்தினர்  தனி மேஜையிலிருப்பது நல்லது தானே? ஏன் கூடாது? இது போன்ற சிறிய விஷயங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள். ஏன் ஒருவர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்? நீங்கள் மட்டும் ஏன் சற்று உயரத்தில் தனி சோபாவில் அமர்ந்திருக்கிறீர்கள் என்று என்னை நீங்கள் நாளை கேட்கக் கூடும். (சிரிப்பு) இங்கு சற்று உயரத்தில் அமர்ந்தால் உங்கள் அனைவரையும் என்னால் அல்லது நீங்கள் அனைவரும் என்னைப் பார்க்க முடியும் என்று நான் விளக்கம் தர வேண்டியதிருக்கும். ஒருவருக்கு லேபிள் இருக்கிறது ஏன் வேறொருவருக்கு இல்லை ஏன் எல்லோரும் ஒரே மாதிரியான இராணுவ உடையில் இல்லை, போன்ற இத்தகைய சில்லறை விஷயங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.இவையெல்லாமே பொருத்தமற்றவை.  உங்கள் மனதை ஞானச்செய்தியில் லயிக்க விடுங்கள். ஓர் பெரிய காரணத்துக்காக இங்கு இருக்கின்றீர்கள்.  சிறிய துகள்கள் உங்கள் கண்களை மறைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். இங்கு எல்லாமே ஏராளமாக இருக்கின்றது. என்ன வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் இல்லம். இங்கு இயல்பாக இருங்கள். யாரேனும் ஒருவர் வந்து உங்களை சொந்த உணர்வுடன் இயல்பாக இருக்கச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

என்னுள் இருக்கும் தெய்வத்திடம் எவ்வாறு  மேலும் மேலும் அதிகத் தொடர்புடன் இருப்பது? பல பிறவிகள் எடுக்க வேண்டுமா?

இளைப்பாறுங்கள். நீங்கள் ஏற்கனவே தொடர்பு கொண்டு விட்டீர்கள். சற்றே விழித்தெழுந்து காண வேண்டும், அவ்வளவு தான். இளைப்பாறுங்கள்! பைபிளில் கூட," அசைவின்றியிருங்கள், நானே கடவுள் என்பதைக் காணுங்கள் "என்று கூறப்பட்டிருக்கிறது. வெட்ட வெளியில் இருக்கிறீர்கள் அல்லவா? வெளியினைத் தேடவேண்டுமா என்ன? நீங்கள் என்ன புரிந்து கொள்ள வேண்டும்? நான் வெட்ட வெளியில் இருக்கிறேன் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். திரும்பத் திரும்ப "நான் வெட்ட வெளியில் இருக்கிறேன்" என்று கூறத் தேவையில்லை.

ஜெர்மனியில் இருக்கிறீர்கள் அது உங்களுக்குத் தெரியும். அது போதும். ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன்,நான் ஜெர்மனியில் இருக்கிறேன் நான் ஜெர்மனியில் இருக்கிறேன்  என்று திரும்பத் திரும்பக் கூற வேண்டியதில்லை (சிரிப்பு). அவ்வாறு செய்தால், ஜெர்மனியிலோ அதன் எல்லையிலோ மன நல மருத்துவமனைக்கு அனுப்பப்படுவீர்கள்! சில விஷயங்களை பாவனையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அது எவ்வாறு நிகழும்? எதுவும் செய்யாமல்  முற்றிலும் இளைப்பாறும் போது நீங்கள் ஆற்றலின் மூலத்தை மெதுவாகத் தட்டுகிறீர்கள். பின்னர் செயலில் ஈடுபடும் போது இயல்பாகவே இருங்கள்.

இப்போது இதைப் புரிந்து கொள்ள முடியவில்லையெனில் பரவாயில்லை. ஏனெனில் அதிக ரஜஸ் உடல் கூற்றில் இருக்கும் போது, புரிந்து கொள்ள முடியாது. அதனால் தான், தியானம் செய்யுங்கள், இளைப்பாறுங்கள், தீவத் தொடர்பில் பேரார்வம் கொள்ளுங்கள், என்று கூறுகிறேன். அது உங்களை படிப்படியாக முன்னேற்றும். உங்களுக்குப் பொறுமையும் தேவை. அவசரப்படாதீர்கள். யாரேனும் ஒருவர்," இன்று உங்களை இறைவனுடன் தோடர்பு கொள்ளச் செய்கிறேன்"என்று கூறினால் ஏற்றுக் கொள்ளாதீர்கள். சரி நன்றி. எனக்கு அவசரம் எதுவுமில்லை என்று கூறி விடுங்கள். அசைவின்றி அமர்ந்து தியானம் செய்யும் போது நீங்களே பரப்பு என்பதை அறிந்து கொள்வீர்கள். அங்கேயே எப்போதும் நிலைத்திருக்க முடியாது. எனவே திரும்பி செயலில் ஈடுபடுங்கள். செயல் வீரராகவே இருங்கள். இவையிரண்டும் முரண்பட்டதாக இருந்தாலும், ஒரு காலகட்டத்தில் செயலில் ஈடுபடும் போதும் மேய்யுனர்வுடன் இருப்பதைப் புரிந்து கொள்வீர்கள். என்ன நிகழ்ந்தாலும் அந்த நிலை மறையாது. எப்போதும் இருக்கும். ஆனால் அந்நிலையை அடைய அதற்குரிய காலம் ஆகும்.

குருதேவ், எனக்கு என்னைப் பற்றிய சுய மதிப்பு குறைவாக உள்ளது. என்னையும் பிறரையும் நான் விமர்சிக்கின்றேன். எவ்வாறு என்னுடைய தான் என்னும் அகந்தையை சீராக்குவது?  என்னுடைய ஆற்றல் குறைவாக இருக்கும்போது இவ்வாறு நிகழ்வதை காண்கின்றேன். ஆனால் இதிலிருந்து விடுபடுவது நல்லதற்கா?

இப்போதே, இந்தக் க்ஷணத்தில் விடுபடுவது சிறந்தது. இல்லையெனில் அதற்கு வாய்ப்பு இல்லை. நீங்கள் தயாரா? சாத்தியம் என்றால் இந்தக் க்ஷணமே அது சாத்தியம் தான்.  சுயமதிப்புக் குறைவு என்று உங்கள் மீதே நீங்கள் எழுதி வைத்துக் கொண்டிருக்கும் லேபிளை அழித்து விடுங்கள். உங்களுக்கு சுய மதிப்புக் குறைவு என்று யார் கூறியது? அது கற்பனை. முட்டாள்தனம். உங்களுக்கு குறைவான சுயமதிப்பு இல்லை. அந்த லேபிளை முதலில் அகற்றுங்கள்.

குருவினை பற்றிய பேராவல் அதிகரிக்கும் போது நாம் என்ன செய்ய வேண்டும்?

பேராவல் நல்லது தான். அதுவே சக்தி. பெரிய ஆற்றல். ஹிந்தியில்," தடப் ஹி ஈஸ்வர் ஹை" (பேராவலே கடவுள்) என்று கூறப்பட்டுள்ளது. பேராவலுள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

குருதேவ், எவ்வாறு சங்கடங்களைப் பற்றி எழுதிப் போடும் பெட்டி வேலை செய்கிறது?


அது வேலை செய்கிறது அல்லவா? (பலர் அமோதிக்கின்றனர்) அதுதான் என் தொழில் ரகசியம்! அதைப் பற்றிப் பின்னர் கூறுகிறேன். அது ரகசியமும் புனிதமானதும் கூட. நான் கூறுவதெல்லாம் ரகசியம் மற்றும் அதிக புனிதமுடையவையுமாகும்.

நேர்மை ஏன் முக்கியமானது?

சனிக்கிழமை, 18 ஜூலை, 2015,

பாத் அண்டோகாஸ்ட் - ஜெர்மனி




(மன்னிக்க எளிதான வழி என்னும் இடுகையின் தொடர்ச்சி)

அன்புள்ள குருதேவ், கியூபாவில் புரட்சியாளர்கள் அஹிம்சையைக் கடைபிடிக்க எடுத்துக் கொண்ட தீர்மானம் தொடர்பாக அவர்களை சந்தித்ததற்கு வாழ்த்துக்கள். காசாவின் ஹாமா தலைவர்களையும் இஸ்ரேலிய அரசாங்க உறுப்பினர்களையும் தாங்கள் அணுகி, இதே போன்று செய்வதற்கு ஊக்குவிக்க முடியுமா?

ஆம்.அரசியல் தலையீடு இருக்கும் போது எங்கேயோ நேர்மை மறைந்து,பேராவல் உள்ளே நுழைந்து விடுகிறது. சில இடங்களில் மக்களே மகிழ்வுடன் மோதல்களை வரவேற்கின்றனர், ஏனெனில் மோதல்கள் கறவை மாடுகளாகி விடுகின்றன.பலருக்கு உலக அமைதி வேண்டியிருப்பதில்லை. இல்லையெனில் அவர்களது படைக்கருவிகள் சந்தை என்னவாகும்? வளர்ந்த நாடுகளில் ஏராளமான படைக் கருவிகள் மற்றும் தளவாடங்கள் உள்ளன. உலகம் அமைதியாக இருந்தால், அவர்கள் தங்கள் மாபெரும் தொழிற்சாலைகளை மூட வேண்டியதிருக்கும். அவர்களை பொறுத்த வரையில் எங்காவது மோதல்கள் நிகழ்ந்து கொண்டிருந்தால் தான்  அவர்களால் போர்க்கருவிகளை விற்க முடியும். இது  நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய மிகக் கசப்பான உண்மை.

இந்தியாவின் சாராய தொழில் போன்றது. மக்கள் குடித்துப் போதைக்கு அடிமையாக அரசாங்கமே ஊக்குவிக்கின்றது, ஏனெனில் அரசு வருவாய்க்கு ஆதாரமானது ஆகும். என்ன ஆகிறது? மக்கள் குடித்துக் குடித்து போதைக்கு அடிமையாகி அவர்களது குடும்பங்கள் கஷ்டப்படுகின்றன. யார் கஷ்டப்படுவது? பெண்களே மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அமைதி என்பது எளிதான விஷயமன்று. அது மிகவும் சிக்கலானது. அதனால் தான், தலைவர்களும் முடிவெடுப்பவர்களும் தியானம் செய்யத் துவங்க வேண்டும் என்று நான் கூறுகின்றேன்.

உலக யோகா தினத்தன்று உலகத் தலைவர்களுக்குத் தியானம் கற்றுத் தந்த போது ஐநாவின் பொதுக் காரியதரிசி பன் கி மூன் உட்பட அதன் உறுப்பினர்கள்  என்ன கூறினார்கள் தெரியுமா? " ஒவ்வொரு நாளும் பேச்சுவார்த்தைகள் நிகழ்த்துவதற்கு முன்னர் நாம் இதை செய்யவேண்டும், தியானத்திற்கு பின்னர் மிக நன்றாக உணர முடிகிறது" என்று கூறினர். பலர் அன்று முதன் முறையாக தியானம் செய்தனர். "நாங்கள் புத்துணர்வுடன் முற்றிலும் வேறாக உணர்கின்றோம். தினமும் செய்ய வேண்டும்“ என்றே கூறினர். மில்லியன் மக்களைப் பாதிக்கும் ஒரு முக்கியமான முடிவு எடுக்க வேண்டும் என்னும் நிலையில் தியானம் மிகவும் அவசியம் ஆகும்.

கொலம்பியாவிலிருந்து ஓர் செய்தியாளர் என்னிடம்,"எவ்வாறு புரட்சியாளர்கள் நீங்கள் கூறுவதைக் கவனித்து போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டார்கள்? அமெரிக்கா, நார்வே போன்ற பெரிய நாடுகளே அவர்களை போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வைக்க முடியாமல் தோல்வியுற்றனவே? நீங்கள் என்ன கூறினீர்கள்? என்று கேட்டனர். அவர்களிடம் நான்," நான் என்ன கூறினேன் என்பது முக்கியமல்ல. நான் யார் என்பதே மிகப் பெரிய வித்தியாசத்தினை ஏற்படுத்தியது.” என்று பதிலளித்தேன்.

நீங்கள் நேர்மையாக இருந்தால் மக்கள் அதனைக் கண்டுணர்ந்து கொள்வர். அதுவே மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். உபாயம் என்பதை விட நேர்மை என்பது தான் முக்கியம். ஏனெனில் இந்த உலகம் ஆற்றலினால் நகர்ந்து கொண்டிருக்கின்றது, நேர்மறையான ஆன்மீக ஆற்றல் (நேர்மை) அனைத்தையும் மேம்படுத்துகின்றது. உங்களிடம் நேர்மறையான அன்பு மிக்க ஆற்றல் இருந்தால் அதுவே உலகில் ஓர் மாற்றத்தை ஏற்படுத்தும். நான் கூறுவது புரிகிறதா?

பல சமாதான மாநாடுகள் நடைபெறுகின்றன. அவற்றில் மக்கள் தலைவலி ஏற்படும் வரையில் பேசிக்கொண்டே இருப்பர்.  மிகச் சோர்வடைய வைக்கும் அவை! இத்தகைய பல மாநாடுகளுக்கு நான் வருகை தந்திருக்கின்றேன். இப்போது எதற்கும் செல்வதில்லை என்று முடிவெடுத்து விட்டேன்! ஒரு வேளை அப்படியொரு மாநாட்டிற்கு செல்ல வேண்டியதிருந்தால், என்னுடைய உரையை மட்டும் நிகழ்த்தி விட்டு, வெளியேற வேண்டியது தான். அங்கேயே அமர்ந்திருந்து அனைவரின் பேச்சுக்களையும் கேட்டுக் கொண்டிருக்கப் போவதில்லை. மக்கள் பேச மட்டும் தான் செய்கின்றனர். எத்தனை பேர் மாநாடுகளில் இத்தகைய அனுபவத்தைப் பெற்றிருக்கின்றீர்கள்? (பலர் கையுயர்த்துகின்றனர்) 

வாழும் கலை நிறுவனம் ஏற்பாடு செய்யும் சர்வதேச பெண்கள் மாநாடு, அல்லது பெருநிறுவன கலாச்சாரம் மற்றும் ஆன்மீக மாநாடு போன்ற மாநாடுகள் வித்தியாசமானவை. ஏன்? நேர்மறையான ஆற்றலுடன் நிகழ்த்தப்படும் அவை, தியானத்தினை ஓர் பகுதியாக உள்ளடக்கியவை. அதுதான் பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றது.

(கூட்டத்தில் பயங்கரவாதம் பற்றிய ஒருவரது கேள்வி செவிக்குப் புலனாகவில்லை)

இன்று மக்கள் செய்து வரும் பயங்கரமான குற்றங்கள் துரதிர்ஷ்டவசமானவையாகும். அவர்கள் மீது இரக்கம் தான் கொள்ளவேண்டும். அவர்கள் சரியான கல்வியினை அடையவில்லை. அவர்கள் கல்வி முறையால் பாதிக்கப்பட்டவர்கள். அந்த இடத்தில் நீங்கள் பிறந்திருந்து, உங்களிடம்," அது கடவுளின் பணி, கடவுள் பிற சமயங்களை சார்ந்த நாஸ்திகர்கள் இருப்பதை விரும்பவில்லை, அவர்களை அழிப்பது உங்கள் கடமை "என்று கூறினால் என்ன செய்வீர்கள்? இன்று அவர்கள் செய்து கொண்டிருப்பதையே  நீங்களும் செய்வீர்கள் அல்லவா?  போர் வீரர்களை போன்றவர்கள். ராணுவத்தில் பணி புரியும் ஓர் போர் வீரராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு என்ன கற்பித்துக் கொடுக்கப்படும்?  ஓர் எதிரியைக் கண்டால் அவனை மனிதனாகப் பார்க்காமல் ஓர் பொருளாகக் கருதி சுட்டுத் தள்ளுங்கள் என்றே கற்பிக்கப்படும் அல்லவா? 

இதுதான் ராணுவப் பயிற்சி! ஒவ்வொரு ராணுவ வீரனுக்கும் சண்டையிடுபவனிடம் மனிதாபிமானம் கருதாமல் போர் புரியவேண்டும் என்றே கற்றுக் கொடுக்கப்படுகிறது. உங்களை தாக்க வருபவர்களை ஆபத்தானவர்களாகவே கருதுங்கள். ஓர் விலங்கினைப் போலக் கருதி சுட்டுத் தள்ளுங்கள்! இதுவே கற்பிக்கப்படும் கல்வி.அதனால் தான் இப்புவியிலுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் பலவிதமான கலாச்சாரங்களைப் பற்றியும்,அனைத்து சமயங்களை பற்றியும் சிறிதளவாவது கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். ஓர் உலகக் குடும்பம் - அனைவரும் பிற மனிதர்களை மதித்து, மரியாதையுடன் அன்புடன் நடத்த வேண்டும் என்பதைப் புரிய வைக்கவேண்டும்.இத்தகைய கல்வி அளிக்கப்பட்டால், யாராவது பிறரைத் துப்பாக்கி எடுத்துச் சுட்டுக் கொல்வார்களா? சாத்தியமே இல்லை. அஹிம்சை கொள்கை கற்பிக்கப்பட்டால்,உங்களால் பிறரைக் கொல்ல முடியாது.கல்வியில்லாக் குறைபாட்டால் தான் பயங்கரமான குற்றங்கள் நிகழ்கின்றன. 

வளரும் குழந்தைகளிடம் விலங்குகளை  வதை செய்வது தவறானது என்று கூறினால், அவர்கள் அக்கொள்கையை ஏற்றுக் கொண்டு, விலங்குகளை தொல்லை செய்யாமல் இருப்பர். தூரக்கிழக்கு நாடுகளில் மக்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகள் அவர்களது சாப்பாட்டு மேஜைக்கே வந்து விடுகின்றன. தெரியுமா? ஓர் அமெரிக்கர்  என்னிடம் கூறியது,அவர் தூரக் கிழக்கு நாட்டில் ஒருவரது வீட்டு விருந்தாளியாக சென்றிருந்தாராம்.ஓர் அருமையான நாய் அங்கு இருந்திருக்கின்றது. ஓரிரு மாதங்களுக்குப் பின்னர் அவர் அங்கு மீண்டும் சென்ற போது, "உங்கள் நாய் எவ்வாறு இருக்கிறது?" என்று கேட்டாராம். ஆனால் அது ஏற்கனவே சாப்பாடு மேஜையில் வைக்கப்பட்டிருந்ததாம் ! உங்கள் வீட்டில் வளர்ப்பு நாயை சுட்டு விடலாமெனில், உங்களது அண்டை வீட்டுக்காரரையும் சுட்டு விடலாம், சரிதான்! அதுவே மனப் பண்பாட்டின் நிலை!

இன்று உலகில் குற்றங்கள் அதிகரிப்பதற்கு துப்பாக்கி வீரர்கள் மக்களைச் சுட்டுத் தள்ளுவதான மெய்நிகர் வீடியோ விளையாட்டுக்கள்தாம் காரணம். குழந்தைகளும் சுடுகின்றனர், அதைத் தீயது என்று உணருவதேயில்லை. மெய்நிகர் உலகில் சுடுவது பரவாயில்லை. ஆனால் குழந்தைகள் மெய்நிகர் உலகிற்கும் நிஜ உலகிற்கும் வேறுபாடு தெரியாமல் குழம்பி விடுகின்றனர். நிஜ உலகிலும் துப்பாக்கி எடுத்துச் சுடத் துவங்குகின்றனர்.

அமெரிக்காவில் மளிகைப் பொருட்கள் கடைகளை விட துப்பாக்கிக் கடைகள் இருமடங்கு அதிகமுள்ளன. எனவே குழந்தைகளால் துப்பாக்கிகளை அணுக முடிகிறது. துப்பாக்கிகள பள்ளிக்கு எடுத்துச் சென்று மக்களைச் சுடுகின்றனர். அதைத் தவறென்று உணர்வதுமில்லை, ஏனெனில் வீடியோ விளையாட்டுக்களில் சுட்டு விளையாடி வளர்ந்து விட்டனர்! வீடியோ விளையாட்டில் சுட்டாலும் ஒருவர் மீண்டும் திரும்பி வருவார். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவ்வாறில்லை. ஒருவரைச் சுட்டால்  அவர் வாழ்க்கையே முடிந்து விடுகிறது!

உலகில் வகுப்பறை மற்றும் கல்விவளாக குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. தெருக் குற்றங்கள், குடும்பச் சண்டைகள் ஆகியவையும் அதிகரித்து வருகின்றன. 50 சதவீத குடும்பச் சண்டைகள் விவாகரத்தில் முடிந்து விடுகின்றன என்று நேற்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அது ஓர் பெரிய பிரச்சினையாகி வருகிறது. நாம் நடத்தும் ஆனந்தப் பயிற்சி பொருத்தமானதாகும்.மன அழுத்தமற்ற வன்முறையற்ற சமுதாயமே நமது நோக்கம் அதை  அனைவரும் கேட்கும்படியாக தெளிவாகவும் உரக்கவும் வெளிப்படுத்த வேண்டும்.

இன்று காலை மிகப் பெரிய ஓர் பயங்கரவாதி என்னைத் தொலைபேசியில் அழைத்தார். அவர் காடுகளில் சண்டையிடுபவர், 35 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வருபவர். அவரிடம்," பாருங்கள் ! நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்? இப்போது உங்களுக்கு 65 வயதாகிறது. இன்னும் எத்தனை காலத்திற்கு காடுகளில் ஓடிக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? சில நாடுகள்  வேறொரு நாட்டினைப் பலமிழக்கச் செய்ய உங்களுக்கு ஆயுதங்களையும் பணத்தையும் தந்துவிடலாம், ஆனால் அவர்கள் ஒருநாளும் உங்களுக்குக் கௌரவத்தை அளிக்க மாட்டார்கள். இத்தகைய அவமானத்துடன் நீங்கள் இறக்க விரும்புகிறீர்களா? எந்த நாடும் உங்களுக்கு அடைக்கலம் தராது. உங்களுக்கு  சமூக நீதி தேவை, உங்கள் மக்களுக்கு உதவ விரும்புகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். அநீதியை எதிர்த்துப் போராடுவது என்பது உங்களுடைய காரணம். அது சரி! ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் துப்பாக்கி எடுப்பது சரியான வழியல்ல. அது எந்த விதத்திலும் பயன் தராது. 35 ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கின்றீர்கள். உங்களை எங்கே அழைத்துச் சென்றிருக்கிறது? உங்கள் தாய் நாட்டுக்குத் திரும்பி விடுவது நல்லது. கௌரவமான வாழ்க்கையை வாழுங்கள். நான் உங்களுடன் துணை நிற்கிறேன். நாம் ஓர் அமைதியான சூழ்நிலையை உருவாக்கலாம்." என்று கூறினேன்.

அதற்கு அவர் என்ன கூறினார் தெரியுமா? நீங்கள் என்னைப் புரிந்து கொண்ட முதல் மனிதர். நான் உங்களை நம்புகிறேன். வேறு யாருக்கும் இவ்வளவு புரிந்திருப்பதாக நான் கருதவில்லை என்று கூறினார்.“உங்களுக்கு என்ன தேவையென்று எனக்குப் புரிகிறது. நீங்கள் காட்டில் விருந்துகள் எதுவும் கொண்டாடவில்லை. உங்கள் மனைவி மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.நீங்கள் அனேகமாக வழக்கற்றுப் போன இந்தக் கோட்பாட்டில் சிக்கிக் கொண்டு இருக்கின்றீர்கள். இன்று உலகம் பரஸ்பர உதவியை நாடும் நிலையில் இருக்கிறது.” என்று கூறினேன். அவர் அதை ஏற்றுக் கொண்டு என்னைச் சந்திக்கவும் ஒப்புக்கொண்டார். "நான் மூன்று மாதங்களுக்கு பிஸியாக இருக்கிறேன் என்று கூறினார். அதற்கு நான், "உங்களை விட நான் அதிக பிஸியாக இருக்கிறேன். (சிரிப்பு) என்னால் ஒரு நாளைக் கூட உங்களுக்காக என்று ஒதுக்குவது சிரமம்,  என்னுடைய நாட்கள் எல்லாம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு விட்டன என்று கூறினேன். மீண்டும் என்னை அழைத்து, "சரி ! நாம் சந்திப்போம்" என்று கூறினார். ஒரு நாளையும் என்னை சந்திப்பதற்காக ஒதுக்கினார். நாம் மக்கள் மனதில் இத்தகைய உணர்வை பதிய வைக்கவேண்டும்.

நமது கல்வி முறையில் நான் சில முக்கியமான குறைகளைக் காண்கின்றேன். குழந்தைகளுக்கு ஆன்மீகக் கல்வியைத் தருவதில்லை. இவ்வுலகம் ஒரே குடும்பம் என்பதை அவர்களுக்கு புரிய வைப்பதில்லை. மக்களை ஒருங்கிணைக்கும் ஓர் பார்வை மற்றும் பணியை அவர்களை கண்டுணர வைப்பதில்லை. எனவே அவர்கள் பிரிவினையைக் கடவுளின் விருப்பம் என்று எடுத்துக் கொண்டு விடுகிறார்கள். இது முற்றிலும் முட்டாள்தனமானது! சமூக நீதிக்காக கம்யுனிசக் கொள்கையின் பேரில் போராடும் மக்களும் ஒரு புறம்  இருக்கின்றனர். சமய கொள்கையின் பேரில் போராடும் மக்களும் இருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் மனித நாகரீகம் என்னும் மைய இலக்கிற்குக் கொண்டு வர வேண்டும். என்ன நினைக்கிறீர்கள்? மனித நாகரீகத்தின்  மைய இலக்கு என்ன? அன்பு, கருணை மற்றும் ஆனந்தம். இந்த பூமியில் இருக்கப் போவது குறைந்த காலம் மட்டுமே. வாழ்க்கையை ஓர் கொண்டாட்டமாக்க வேண்டும். அதை முழுமையாக வாழும் கலை  செய்து வருகிறது." எனக்கு அநீதி  இழைக்கப்பட்டு விட்டது.  நான் அவற்றை சரியாக்க வேண்டும்." என்னும் பிரக்ஞை ஏற்பட்டுள்ளது. உலகில் அனைத்தையும் சரியாக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள், உதாரணமாக தீவிரவாதிகள் என்ன வேண்டுமென்று விரும்புகிறார்கள்?  

மக்கள் இப்புவியையும், நாகரீகத்தையும் கெடுத்து, சமுதாயங்களையும் குடும்பங்களையும் அழித்து விட்டதாக எண்ணுகின்றனர். தாங்கள், கடவுளின் சட்டம் அல்லது ஆணையை கொண்டு வந்து அனைவருக்கும் சமூக நீதி மற்றும் அமைதி ஆகியவற்றை அளிக்கப் போவதாகக் கருதுகின்றனர். அதற்காகவே அவர்கள் போராடுகின்றனர்.  அவர்கள் கண்ணோட்டத்தில், தங்களுடைய கொள்கையை பின்பற்றாத மக்கள் கெட்டுப்போன ஆப்பிள்களைப் போன்றவர்கள்.அவர்களை விலக்கி, வெளியேற்ற வேண்டும் என்று விரும்புகிறார்கள். சமுதாயத்தில் நாசத்தை ஏற்படுத்துபவர்கள் மற்ற அனைவரையும் தீயவர்களாகவே கருதுகின்றனர். இதுதான் அவர்களின் புரிதல்.

அதனால்தான் இன்று நாம் பின்பற்றும் யோகா தியானம் மற்றும் ஆன்மீக அறிவு பொருத்தமானது. ஏனெனில், இதன் அடிப்படை அஹிம்சை, மற்றும் வேற்றுமையில் நல்லிணக்கம் ஆகியவையாகும். பல்வேறு கலாச்சாரங்கள், பல்வேறு சமயங்கள் பற்றிய கல்வி, அஹிம்சை பற்றிய கல்வி, ஆன்மீக மதிப்பு பற்றிய கல்வி ஆகியவை இன்றைய உலகில் மிகத் தேவையானவையாகும். இத்தகைய கல்வி அளிக்கப்பட்டால், வருங்கால அழிவுகளை தடுக்கமுடியும். தாங்கள் உண்மையானவர்கள், சுவர்க்கத்திற்கு செல்வோம்,மற்றவரெல்லாம் நரகத்திற்கு செல்வர் என்று எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு சிறிய நாட்டினை விட்டுவிட்டால் கூட இவ்வுலகம் வருங்காலத்தில் பாதுகாப்புடன் இருக்காது. அனைவருக்கும் நரகத்தினை ஏற்படுத்தி விடுவர்! தீவிரவாதிகளாகி  விடுவர். ஆகையால் நம்மிடம் செய்யவேண்டிய ஓர் மாபெரும் பணி உள்ளது.  ஒவ்வொரு இல்லத்தின் வாயிலுக்கும் இந்த ஞானச் செய்தியினை எடுத்துச் செல்லவேண்டும். மக்கள் அனைவருக்கும் தியானம் பற்றி எடுத்துக் கூற வேண்டும்.ஏனெனில் நீங்கள் உள்நோக்கி செல்லும் போது,உங்களுக்குள் அமைதியைக் காண்பீர்கள். 

பிறருக்குத் தொல்லை கொடுக்க மாட்டீர்கள். யார் பிறரைத் துன்புறுத்துகின்றனர்? தங்களுக்குள் துன்புறுபவர்களே சமாதானத்தைக் கண்டறியாதவர்களே பிறரைத் துன்புறுத்துகின்றனர். எனவே ஒருவன் பிறரை ஏமாற்றினால் அவன் மகிழ்ச்சியான மனிதன் அல்ல. ஓர் ஆணோ பெண்ணோ, தங்களுக்குள் மகிழ்வுடன் இருந்தால், திருப்தியுடன் இருந்தால், அவர்கள்  ஏன் பிறரை ஏமாற்ற வேண்டும்?  

புத்துணர்வான மனதை அடைய தியானமே சிறந்த வழி

வியாழக்கிழமை, 16 ஜூலை 2015

பாத் அண்டோகாஸ்ட், ஜெர்மனி


 (அஹிம்சையே சிறந்த வீரத்தின் வழியாகும் என்னும் இடுகையின் தொடர்ச்சி)

குருதேவ், தியானம் செய்யும் போது எதையேனும் எண்ணிக் கொண்டிருக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது என்பதை நான் அறிவேன். ஆனால், நான் காலையில் தியானம் செய்யும் நேரத்திலேயே மிகச் சிறந்த யோசனைகள் என் மனதில் வருகின்றன. அவற்றை தவற விட நான் விரும்பவில்லை. எனவே தியானத்தின் போதே என் மனம் அந்த யோசனைகளில் ஆழ்ந்து விட அனுமதிக்கிறேன். நான் செய்வது தவறா?

இளைப்பாறியிருக்கும் போது சிறந்த கருத்துக்கள் மனதில் எழுவது இயல்பு தான். அவற்றைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள், தியானத்தினை நிறுத்த வேண்டாம், தொடருங்கள். உங்களில் சிலருக்கு காலை நேர தியானம் மிகுந்த ஆழ்ந்ததாக இருக்கும்.வேறு சிலரின் உடல்வாகிற்கு காலை வேளையில் உடல் முற்றிலும் விழித்தெழுந்து சுறுசுறுப்பாக இருக்கும்.தியானத்தில் ஈடுபட முடியாது. அதனால் மதிய வேளை தியானம் சற்று மேம்பட்டதாக இருக்கும்.பரவாயில்லை, நீங்கள் மதிய உணவிற்கு முன்னர் செய்யலாம். உடல் சற்று களைப்புற்று இருக்கும் போது சற்று பசியாக இருக்கும் போது தியானம் செய்யுங்கள். அதிகக் களைப்பாக இருக்கும் போது செய்யாதீர்கள், தூங்கி விடுவீர்கள்,

ஆரம்பத்தில் சற்று களைப்பாக இருக்கும் போது செய்வது உதவியாக இருக்கும்.ஏனெனில் உடலில் ரஜஸ் தன்னுடைய காலத்தை முடித்து கொண்டு விடுகின்றது. தமஸ் முழு உறக்கம், ஆகவே முற்றிலும் உறக்கம் வருவதற்கு முன்னர், ரஜஸ் காலம் முடிவடைந்த பின்னர் இரண்டிற்குமிடையேயான காலத்தில் சத்வ குணத்துடன் இருக்கின்றீர்கள். அப்போது ஆழ்ந்த தியான நிலைக்குச் செல்லலாம். ஆகவே சிலருக்கு மதிய வேளையில் தியானம் செய்வதும், சிலருக்கு மாலை வேளையில் தியானம் செய்வதும் சிறப்பாக இருக்கும். தினமும் இரு முறை தியானம் செய்ய முடியவில்லையெனில், ஒரு தடவையேனும் செய்ய வேண்டும். ஒரு தடவை கூட தியானம் செய்யவில்லையெனில் பல் தேய்க்காமல் இருக்கும் போது எவ்வாறு துர்நாற்றம் ஏற்படுமோ அது போன்று நாற்றத்துடன் இருப்பீர்கள். பல் தேய்ப்பது பல் சுத்தம். தியானம் என்பது மன சுத்தம். எண்ணங்கள் சூழ்ந்து கொண்டாலும், பரவாயில்லை கட்டாயம் தியானம் செய்ய வேண்டும்.

இருபது நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து, தியான ஒலி நாடாவினைப் பயன்படுத்தி தியானம் செய்யுங்கள். உங்களுக்கு அது பெரிதும் உதவும். மனம் அர்த்தமின்றி பிதற்றிக் கொண்டிருக்கும் போதும் கூட தியானம் செய்யுங்கள். சில பஜனைப் பாடல்களைக் கேளுங்கள். பண்ணிசையுங்கள். இவையனைத்தும் உங்களை ஆழ்ந்த தியானத்திற்கு அழைத்துச் செல்லும்.

குருதேவ், காலை வேளையில் என் கணவருக்குக் உணவு தயாரித்தளித்தல், நண்பர்களை சந்தித்தல், தொலைக்காட்சி பார்த்தல் பேரக் குழந்தைகளுடன் விளையாடுதல் இவற்றையெல்லாம் விட்டுவிட்டு பயிற்சி செய்வது போதைக்கு அடிமையாதல் போன்றதல்லவா?

உங்களுக்கோ, உங்கள் கணவருக்கோ நீங்கள் காலையுணவு தயாரிப்பது என்பது தியானம் செய்வதிலிருந்து முரண்பட்டதல்ல. அது தியானத்திற்கு மாற்றும் அல்ல. காலை உணவிற்கு ஓர் விருப்பத் தேர்வும் அல்ல. நான் கழிப்பறையை பயன்படுத்துவதா அல்லது பல் தேய்ப்பதா என்று கேட்பதைப் போன்று இருக்கின்றது. இரண்டுமே தேவை தான். உங்களுக்கு எதையேனும் செய்ய விருப்பமில்லையெனில் நூறு காரணங்கள் கண்டுபிடிப்பீர்கள். ஆனால், எவ்வளவு வேலைகள் இருந்தாலும் எதையேனும் செய்ய விரும்பினால்,கண்டிப்பாக செய்ய முடியும். அனைவருக்கும் ஓர் நாளில் இருபத்து நான்கு மணி நேரம் தான் இருக்கிறது. அதில் சற்றுநேரம் உங்களுக்கென்று ஒதுக்கிக் கொள்ள வேண்டும். உங்கள் கணவர் எழுவதற்கு முன்னர் படுக்கையிலேயே அமர்ந்து, தியானம் செய்யுங்கள். அந்நேரத்தில் யாரும் உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டார்கள்.

தியானம் செய்வதன் மூலம் எனக்கோ வேறு யாருக்குமோ உதவுதாக எண்ணாதீர்கள்.எனக்காகவோ வேறு யாருக்காகவோ தியானம் செய்வதில்லை. உங்கள் நரம்பு மண்டலம் மற்றும் மூளைக்கு தியானம் நன்மை செய்கிறது.கண்டிப்பாக செய்ய வேண்டும். அதற்காக தீவிரமாக, "நான் தியானம் செய்யும் போது தொலைப்பேசி அழைப்புகள், வாயிலில் காத்திருப்போரின் அழைப்புக்கள் எதையும் நான் ஏற்கமாட்டேன்” என்று கூற வேண்டாம். அவற்றை கவனியுங்கள். குழந்தைகள் அழுதால் அவர்களை கவனியுங்கள். எந்த அவசரமானாலும், அதைக் கவனித்து விட்டுப் பின்னர் தியானம் செய்யுங்கள்.

யக்ஞங்கள் அவற்றால் நமக்கு ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றைப் பற்றித் தயவு செய்து பேசுங்கள்.

யக்ஞங்கள் என்பவை பழமையான அறிவியல் அவை நமது மெய்யுணர்வின் நுண்ணிய நிலையில் விளைவினை ஏற்படுத்துகின்றன. ட்ரான்சிஸ்டர் ரேடியோவை திறந்து பார்த்தால் ஒரு தகட்டில் மின்சுற்று வரிப்படம் இருப்பதைக் காண்பீர்கள். நமது செல்போனிலும் அதே போன்று உண்டு. இவை போன்றே பிரபஞ்ச அளவில் சில மின்சுற்று வரிகள் உள்ளன. அவை ஆற்றலை நகரச் செய்கின்றன. பழங்கால மக்களுக்கு இது பற்றித் தெரிந்திருந்தது.அவர்களை அவற்றை யந்திரங்கள் என்றழைத்தனர்.

யந்திரங்கள் என்பவை வடிவியல் படங்கள். அவை யக்ஞத்திற்கு மிக முக்கியமானவை. அவை பஞ்ச பூதங்களுடன் (நிலம், நீர், நெருப்பு காற்று, ஆகாயம்) இணைத்து குறிப்பிட்ட பண்ணிசைவுடன் குறிப்பிட்ட சடங்குகளுடன் சுற்றுசூழலில் உள்ள சில ஆற்றல்களை செயல்பட ஊக்குவிப்பதற்காக பயன்படுத்தினர். யக்ஞங்கள் சுற்றுச்சூழலில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை சுத்தப்படுத்தி, நேர்மறையான அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. மக்கள் எதிர்மறை எண்ணங்கள் உணர்ச்சிகள் ஆகியவற்றை வெட்டவெளியில் வெளியிடுகின்றனர். அவையனைத்தும் யக்ஞங்களில் பயன் படுத்தப்படும் யந்திர மந்திரங்களால் கரைந்து மறைந்து விடுகின்றன.

யக்ஞத்தில்,பல்வேறு விதமான விஷயங்கள் நியமிக்கப்பட்ட முறையில் நிச்சயமான விளைவினை உருவாக்கும் பொருட்டு செய்யப்படுகின்றன. எனவே யக்ஞத்தில் பங்கேற்றுக் கொள்ளுதல் பயனுள்ளது. தியானம் செய்பவர்க்கு அதன் பயன் மேலும் அதிகமானது ஆகும். யஞ்யத்தினை நடத்துபவரும்,அதில் பங்கேற்றுக் கொள்பவரும் தியானம் செய்பவர்களாக இருந்தால் தாக்கம் அதிகமாக இருக்கும். மக்கள் அதைச் சடங்காக மட்டுமே செய்தால் அதன் தாக்கம் அதிகமாக இருக்காது. ஆரோக்கியம், சந்தோஷம் முன்னேற்றம் மற்றும் தடைகளை அகற்றுதல் ஆகியவற்றுக்காக பல யக்ஞங்கள் உள்ளன.

தன்னை கவனித்துக் கொள்வதன் மூலமும் பிரார்த்தனை மூலமும் நமது மரண நேரத்தினை நம்மால் மாற்ற முடியுமா அல்லது போகும் நேரம் வந்தவுடன் போவதை யாராலுமே மாற்ற முடியாதா?

இது ஓர் மர்மம். ஆத்மா விரும்பினால் வாழ்வினை நீட்டிக்கும் சாத்தியம் உள்ளது. ஆனால் பிறரது விருப்பமாக இல்லாமல் அது ஆத்மாவின் உள்ளார்ந்த விருப்பமாக இருக்கவேண்டும். சமயங்களில் பிறரின் விருப்பமும் அதை நிகழ்த்தலாம்,ஆனால் அது சமயங்களில் மட்டுமே. எப்போது ஒருவர் இவ்வுலகை விட்டுச் செல்ல வேண்டும் என்பது ஒரு பாதுகாக்கப்பட்ட ரகசியம். தியானம், யோகா தன்னை நன்கு பராமரித்துக் கொள்ளுதல் ஆகியவை நிச்சயம் தாக்கத்தினை ஏற்படுத்தும்.

குருதேவ், குறைந்த பட்சம் 10 மில்லியன் யுரோக்களை நான் தேசீய லாட்டரியில் அடைய வேண்டும் என்று விரும்புகிறேன். 90 சதவீதத்தை வாழும்கலையின் பணித்திட்டங்களுக்குத் தருவேன். இது நிகழ தயவு செய்து எப்படியாவது சரியான லாட்டரி எண்களை எனக்கு அனுப்புங்கள்.

நீங்கள் 90 சதவீதம் நன்கொடை அளிக்க விரும்பினால் அதைக் கடுமையாக உழைத்து அடைந்து அளியுங்கள். அதுதான் சிறந்த வழி. எளிதாகக் கிடைக்கும் பணத்திற்கு ஏங்காதீர்கள். எளிதாக வருவது எளிதாகச் சென்று விடும். ஆன்மீகத்திலும் நெறிமுறைகள் உண்டு. வழி நடத்துபவரே குறுக்கு வழியில் சென்றால் அவரைப் பின்பற்றுபவர்கள் எப்படியிருப்பார்கள்? பயிற்றுனருக்கு ஒரு பங்கு இருக்கிறது. ஆகவே என்னிடம் லாட்டரி பற்றிக் கேட்காதீர்கள். நகைச்சுவை உணர்வு நல்லது தான். அனைத்தையும் கடினமாக எடுத்துக் கொள்ளாமல் நகைச்சுவையுணர்வுடன் ஏற்று கொள்வது சரிதான். லாட்டரி பற்றிக் கனவு கண்டு கொண்டிருந்தால் அதைக் கனவில் மட்டுமே அடைவீர்கள்.  கனவு காணும் விருப்பங்கள் கனவில் மட்டுமே நிறைவேறும்.

அஹிம்சையே சிறந்த வீரத்தின் வழியாகும்

வியாழக்கிழமை, 16 ஜூலை 2015,

பாத் அன்டகஸ்ட், ஜெர்மனி

சிறந்த போர்வீரர் என்னும் சொல் வீரம் நிறைந்த உலகில் போரிட்டு எதிரிகளை வெற்றி கொள்ளும் மனிதனைக் குறிக்கின்றது. அசைவின்றி அமர்ந்து, அஹிம்சை வழியினை முழுவதுமாக மேற் கொண்டிருப்பவரும் சிறந்த வீரர் என்றே அழைக்கப்படுகின்றார். மகாவீரர் என்னும் சொல்லில் வீரர் என்பது போர்வீரர் என்று  பொருள். மகாவீர் என்னும் பட்டம் போரிட்டு, வெற்றி பெறுபவர்களுக்கு மட்டுமல்லாமல் ஆழ்ந்த தியானத்தில் இருப்பவர்களுக்கும் வழங்கப்படுகின்றது.


உலகம் பஞ்சபூதங்களினால் ஆனது, அவற்றுக்குள் முரண்பாடுகள் உண்டு. அவற்றின் இயல்புகளில் முரண்பாடுகள். நெருப்பும் நீரும் என்றுமே நட்பல்ல, நெருப்பு நீரினை ஆவியாக செய்து விடும், நீர் நெருப்பினை அணைத்து விடும். அது போன்று, காற்று நெருப்பினை அணைத்து விடக்கூடும், ஆனால் காற்றிருப்பதாலேயே நெருப்பு இருக்க முடியும், நெருப்பு காற்றினை பிரித்து விடமுடியும். நிலம் இந்த நெருப்பு, நீர் மற்றும் காற்று என்னும் இந்த மூன்று கூறுகளால் பாதிக்கப் படுகின்றது. இதே போன்று முரண்பாடுகள் உலகெங்கும் உள்ளன. உங்களுக்குள் இதயமும் மனமும் முரண்பாடானவை. இதயம் கருணை மிக்கது,மனம் தர்க்கரீதியானது அனைத்தையும் ஆய்ந்தறிவது. மனம் இதைச் செய்வது சரி என்று கூறும் போது இதயம் அதை செய்ய விரும்பாது. அதே போன்று இதயம் ஒன்றினை விரும்பும் போது மனம் அதை மறுக்கும். இந்த விருப்பு வெறுப்புக்கள் உங்களை பாதிக்கும். புயல்கள் உங்களுக்குள் எழுந்து, மனம் அமைதியின்றி இருக்கும்.

கவலைப்பட எதுவுமில்லையெனில், அடுத்த வீட்டிலிருப்பவர், நண்பர்கள் உறவினர் இவர்களை பற்றிக் கவலைப்படத் துவங்குவீர்கள். கவலை, முரண்பாடு, சோகம், மகிழ்ச்சியின்மை, ஆகிய உணர்ச்சிகள் தியானம் நிகழப்பெரும் சவால். உங்களை அமைதியடைய விடாது. நிமிஷங்களுக்கு அமைதியாக மகிழ்ச்சியுடன் இருந்தால், ஏதாவது ஒன்று வந்து அந்த அமைதியை தகர்த்து விடும்.  துன்புற நூற்றுக்கணக்கான காரணங்கள் இருக்கலாம், அறிவார்ந்தவராக இல்லையெனில், உங்கள் மனம் ஆயிரக்கணக்கான காரணங்களால் மகிழ்ச்சியின்றி இருக்கும்.சமயங்களில் முரண்பாடுகளால் மகிழ்ச்சியின்றி இருக்கலாம்,சில நேரங்களில் உங்கள் மன அமைதியை இழந்ததால் மகிழ்ச்சியின்றி இருக்கலாம். இது வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

எண்பது, தொண்ணூறு வயதுகளில் உள்ளவர்கள் குறைப்பட்டு முனகிக் கொண்டேயிருப்பார்கள். அதனால் பயனில்லை என்றும், எந்தப் பிரச்சினையையும் அது தீர்க்காது என்று தெரிந்தபோதும் அவ்வாறே செய்வார்கள். உற்சாகமுள்ளவர்கள் இந்தக் குறைப்பட்டு முனகும் குணத்தால் எரிச்சல் அடைவார்கள் ஏனெனில் இது அவர்கள் குணத்திற்கு முற்றிலும் மாறானது. நீங்கள் உற்சாகமாக இருக்கும் போது ஏராளமான ஆற்றலுடன் இருக்கிறீர்கள். அனைத்தும் வெளிச்சமாக தெரிகின்றன, சவால்களை ஏற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள், போர் வீரரை போன்று உணருகின்றீர்கள். ஆனால் ஒருவரது ப்ராணா அல்லது ஆற்றல் குறைவாக இருக்கும் போது, அவர்கள் உங்களை கீழே இழுக்கின்றார்கள், அப்போது நீங்கள் அதை எதிர்க்கின்றீர்கள். இது ஒரு சவால்.

அதே போன்று, தியானத்தின் போது, ஏராளமான விஷயங்கள் வரலாம்,ஆனால் உங்களை நீங்கள் முரண்பாடுகளுக்கு மேலாக எழுப்பி, அவற்றைப் பொருட்படுத்தாமல் அல்லது அவை ஏன் வந்தன என்று கேள்வி கேட்காமல், இருந்தால், உங்களை ஆழ்ந்து தியானிக்க செய்யும். ஏன் இந்த கெட்ட எண்ணங்கள் எழுந்தன என்று சிந்தித்துக் கொண்டிருப்பது, முரண்பாடுகளில் பங்கேற்கச் செய்து உங்களைப் பலவீனப்படுத்தும். எண்ணங்கள் வந்து போகட்டும்.அவற்றுடன் எந்த சம்பந்தமுமில்லை. இதுவே உள்முரண்பாடுகளை வெல்லும் உத்தியாகும்.

உள்முரண்பாடுகள் எழும்போது, இந்த உத்தி, அதிக சக்தியுடையவர் அதாவதுமுரண்பாட்டினை விட மிகப் பெரியவர் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்தும். அப்போது நீங்கள் மேகங்களுக்கு மேலே அவற்றை ஊடுருவிக்கொண்டு தெளிவான வானத்திற்கு செல்வதை போன்று உயர்வீர்கள். அது போன்று, முரண்பாடு, எண்ணம் அல்லது உணர்ச்சி எதுவானாலும் பொருட்படுத்தாமல் அசைவின்றி உள்ளமைதியுடன் அமருங்கள். வந்தால் வரட்டும்,போகட்டும்,என்ன உணருகிறேன் என்பது எனக்குப் பொருட்டல்ல என்று எப்போது எண்ணுகிறீர்களோ அப்போது அது உங்களுக்கு வலிமையை அளிக்கும்.

முந்தைய தலைமுறை குருமார்கள் இதைச் செய்வதுண்டு. யாரேனும் நன்றாக இல்லையென்று கூறினால், உன் விதியை நீதான் அனுபவிக்க வேண்டும் என்று கூறுவதுண்டு. அவர்கள் ஒரு போதும் கருணை காட்டியதில்லை. அவர்கள்,"நீ உன் கர்மத்தினால் துன்புருகின்றாய். நீ கஷ்டப்பட்டு உன் கர்மத்தினைக் கழிக்க வேண்டும், அவ்வாறில்லையெனில், அந்தக் கர்மத்தை அடுத்த பிறவிக்கும் எடுத்துச்செல்ல வேண்டியதிருக்கும்" என்று கூறுவதுண்டு.

உங்கள் உள்முரண்பாடுகளை எதிர்த்து நின்று போரிட வேண்டும். உலகம் எப்படியுணருகிறீர்கள்  என்பதை பற்றிக் கவலைப்படுவதில்லை. என்ன செய்தீர்கள், என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை மட்டுமே உலகம் காண்கிறது. ஒரு நாள் நன்றாக உணர்வீர்கள், அடுத்த நாள் அது போன்றிருக்காது. உணர்வுகள் மேலெழுந்து கீழிறங்கும். ஆனால் உலகம் "நீ என்ன நன்மை செய்தாய்? இவ்வுலகிற்கு எவ்வாறு பங்களித்தாய்" என்று மட்டுமே கேட்கும்.

இந்த சிக்கலான உணர்ச்சி கொந்தளிப்பில் நீங்கள் மாட்டிக் கொள்ளும் போது, ஏராளமான நேரமும் பணமும் வீணாகின்றன. நமது நேரம் மட்டுமல்ல, தொலைபேசி பேச்சின் மூலம் பிறருடைய நேரம் பணம் ஆகியவையும் வீணாகின்றது. இந்த உணர்ச்சிக் கொந்தளிப்பிலிருந்து விடுபட்டு விட்டால், அடங்கி நேரத்தை வீணாக்காமல் இருந்தால், உலகம் சிறப்பான இடமாக இருக்கும்; ட்ரில்லியன் டாலர்களை சேமிக்கலாம். பழங்கால விவேகமுள்ள ஆண்களும் பெண்களும் "மாயையிலிருந்து எப்போது விழித்துக் கொள்வோம்?" என்று கேட்டதுண்டு. இவையனைத்துமே மாயை. ஏதோ ஒன்று போலத் தோன்றுகிறது, ஆனால் உண்மையில் அதுவல்ல. மாயையை வென்று மகாவீரர் ஆக வேண்டும். நீங்கள் வெளியிலிருக்கும் மனிதர்களை வெல்லலாம்,ஆனால் உங்கள் உள்ளேயே இருக்கும் கொந்தளிப்பை வென்று புன்முறுவலுடன் இருந்தால், நீங்கள் ஓர் சிறந்த போர்வீரர் அதற்கு வீரம் தேவை.

நாம் எதிலிருந்தாவது தப்பித்து ஓடவேண்டும் என்று விரும்பினால் நாம் நமது சுயத்திலிருந்தே தப்பியோடுகிறோம். மக்கள் இங்குமங்கும் கோழிக்குஞ்சுகளை போன்று விருப்பு வெறுப்புக்களுடன் ஓடிக் கொண்டிருக்கின்றனர், எதையும் அடைவதில்லை. உங்கள் விருப்பு வெறுப்புக்களை பற்றி யாருக்குக் கவலை? நீங்கள் விரும்பும் ஒன்றை வெறுக்கவோ, வெறுக்கும் ஒன்றை மீண்டும் விரும்பவோ எவ்வளவு நேரம் ஆகும்? இந்தத் தூக்க நிலையிலிருந்து நாம் விழித்துக் கொள்ள வேண்டும். அது வலிமையினை அளிக்கும்.

அனைவருமே பலமான ஒருவரையே விரும்புகின்றனர். மக்கள் உங்களை விரும்பி அன்பு செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள். நீங்கள் உள்ளுக்குள் பலவீனமானவராக ஆட்டம் கண்டு கொண்டிருந்தால் எவ்வாறு மக்கள் உங்களை விரும்புவார்கள்? கருணையுடன் சில காலம் சகித்துக் கொள்ளலாம், ஆனால் உங்களிடமிருந்து விரைவில் தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்றே விரும்புவார்கள். அவர்களுக்கு உங்கள் அருகாமை மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். இது அனைத்து உறவுகளிலும் நிகழக்கூடியதே. அதனால் தான் உறவுகளிலிருந்து மக்கள் தப்பித்து ஓடி விடுகின்றனர். உங்கள் விருப்பு வெறுப்புக்களின் மூலம், உங்கள் உணர்ச்சிகளின் மூலம், பிறரை திணற வைக்கின்றீர்கள். அவர்களுக்கு ஏற்கனவே அவர்களுடையதே எவ்வளவோ இருக்கின்றது, அத்துடன், உங்கள் உணர்ச்சிகளை பிறரிடம் திணித்து அவர்களை சுமக்க வைக்கிறீர்கள். இவ்வாறு செய்து கொண்டிருந்தால், அவர்கள் அனைத்தையும் துறந்துவிட்டு விலகி ஓடிவிடுவர். எந்த உறவிலும் வலிமையினை கொடுங்கள். பலமாக இருந்தால் மட்டுமே இதை செய்யமுடியும். உணர்ச்சிபூர்வமாக பிறரை சார்ந்திருந்தால், உண்மையாகவே விரும்புகிறார்களா என்று கேட்டுக் கொண்டே இருந்தால், அவர்களுக்கு உங்கள் மீது அன்பிருந்தாலும், அது சரிந்துவிடும்.

இவ்வுலகை ஒரு சிறந்த இடமாக்கலாம்


செவ்வாய்க்கிழமை 14 ஜூலை, 2015   

பாத் ஆன்டகாஸ்ட், ஜெர்மனி


(“மரணத்தைப் பற்றிய விழிப்புணர்வு நல்லது“ என்ற உரையின் தொடர்ச்சி)

கேள்வி – பதில்கள்

ஒவ்வொருவரும் அழைப்புக்காக காத்திருக்க வேண்டுமா ? அழைப்பு வரும் போது என்ன செய்ய  வேண்டும் ?

நீ ஏற்கனவே செய்து விட்டாய். உனக்கு  அழைப்பு வந்து விட்டது. அதனால் தான் நீ வாழும் கலையில் சேர்ந்திருக்கிறாய். வாழும் கலை அமைப்பு பல மக்களை அழைத்து, உலகளவில் மனித நேயத்தை மேம்படுத்துவதற்காகவே செயல்படுகிறது. இங்கிருக்கும் ஒவ்வொருவரும், இவ்வுலகை ஒரு சிறந்த இடமாக்க ஒன்று சேர்ந்திருக்கிறோம். உனக்கு அழைப்பு வந்து விட்டது. நீ பயணச்சீட்டு வாங்கி விட்டாய். கப்பல் நகரத் துவங்கிவிட்டது. இந்த பூமியில் மகத்தான ஒன்றை அடைய உன்னால் (தனி மனிதனால்) முடியாது. நீ மற்றவர்களுடன் ஒன்று சேர்ந்து, குழுவாக இணைந்து செயல்பட வேண்டும். நீ இங்கு அதைச் செய்கிறாய். நான் இங்கு (ஜெர்மனிக்கு) வருவதற்கு முன் யாரோ ஒருவர் பாரிஸ் மற்றும் ஃப்ரான்ஸில் உள்ள பல இடங்களில் மக்கள் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டிருப்பதை என்னுடன் பகிர்ந்து கொண்டார். இது ஒரு நல்ல செய்தி. எல்லோரும் இணைந்து குழுவாக செயல்பட்டு உலகில் ஆனந்தத்தைப் பரப்ப வேண்டும்.

குருதேவா ! என் தாய்  தன் சகோதரியை பற்றி கேவலமாக பேசுவதை எப்படி நிறுத்தலாம் ? என் தாய்க்கு 76 வயதாகிறது. அவள் சகோதரிக்கு 74 வயது.

அவள் பேசுவதைத் தடுத்து நிறுத்தாதே. அவள் பேசி மனதில் உள்ள அனைத்தையும் காலி செய்யட்டும். நீ அவளோடு சற்று விளையாட விரும்பினால், அழகான வாழ்த்துக் கடிதத்தை எழுதி, “உன் சகோதரி அனுப்பியிருக்கிறாள்” என்று சொல்லி அவளிடம் கொடு. இரண்டு பேருமே அக்கடிதத்தைப்  படிக்கும் நிலையில் இருக்கமாட்டார்கள். “நான் படித்துக் காட்டுகிறேன்” என்று சொல்லி படித்துக்காட்டு. “உன் சகோதரி உன்னிடம் மிகவும் அன்பாக இருக்கிறாள். உன்னை நேசிக்கிறாள்” என்று சொல். இப்படி கடிதப் போக்குவரத்தை நீயே தொடர்ந்து செய். அவர்களுடைய மன நிலையில் (உறவில்) ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்று பார்.  
உனக்கு தெரிந்திருக்கும். ஒருவர் இப்படி எதிர்மறை உணர்வில் இருக்கும் போது, “பார் என்னைக் கேலி செய்கிறாள்” என்று சொல்லக் கூடும். நீ எதிர்மறை மனநிலையில் இருக்கும் போது, யாராவது உனக்கு ரோஜாப்பூ அனுப்பினால் கூட, அது உன்னைக் கேலி செய்வதற்காக என்று நினைப்பாய். அப்படி யாராவது எதிர்மறை உணர்விலேயே இருக்க விரும்பினால், கடவுள் தான் அவர்களுக்கு உதவ முடியும். இருந்தாலும் உன் முயற்சியைக் கை விட வேண்டாம். உனக்குள் இருக்கும் தெய்வ சக்தி, இந்த முயற்சியைத் தொடர உதவும்.

என் மனைவி மற்றும் பிள்ளைகள் ஆன்மீகப் பாதையிலிருந்து  விலகிச் செல்வதாக நினைக்கிறேன். அவர்களைக் கட்டாயப் படுத்த விரும்ப வில்லை. பொறுமையாக இருப்பதைத் தவிர வேறு ஏதாவது  செய்ய முடியுமா?

சரி தான். பிள்ளைகளைக் கட்டாயப்படுத்த வேண்டாம். ஆனால் அவர்களை மென்மையாக ஊக்கப்படுத்துவது அவசியம்.  அதை கட்டாயமென்று நினைப்பார்களோ என நீ தயங்கலாம். நீ அவர்களை ஊக்கப்படுத்துவதைக் கூட விட்டு விடுவாய். உன் குடும்பத்தினர் ஆன்மீகப் பாதையில் நடக்க நீ அவர்களை ஊக்கப்படுத்துவது அவசியம் என்று நான் சொல்வேன்.

நீ இன்னொரு தந்திரம் செய்யலாம். “நான் இரண்டு நாட்களுக்கு தியானம் செய்யப் போவதில்லை” என்று சொல்லி, அந்த இரண்டு நாட்களிலும் அவர்களிடம் எரிச்சலை காட்டு. அப்போது உன் மனைவி ‘உங்களுக்கு என்ன ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் எரிந்து விழுகிறீர்கள்” என்று கேட்பாள். அப்போது “நான் தியானம் செய்வதை நிறுத்தி விட்டேன்” என்று சொல்.

அவள் உன்னிடம் “தயவு செய்து தியானம் செய்யுங்கள். நீங்கள் யோக சாதனைகளை செய்து, தியானம் செய்த நாட்களில் எங்களுடன் இனிமையாக நடந்து கொள்கிறீர்கள்” என்று சொல்வாள். ஒரு தாய் என்னிடம் தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டாள். அவள் மகன் அவளிடம் “இன்று நீ தியானம் செய்யவில்லை என்று நினைக்கிறேன். அதனால் தான் என்னிடம் இன்று மோசமாக நடந்து கொள்கிறாய். நீ தியானம் செய்யும் நாட்களில் இனிமையாக இருப்பாய்” என்று சொன்னானாம். எனவே எல்லா விதமான தந்திரங்களையும் உபயோகித்து, சிக்கலான இவ்வுலகில் உனக்கு வழியை ஏற்படுத்திக் கொள்.

ஆஸ்பர்கர் நோய்க்கூற்றைப் பற்றி உங்கள் கருத்து என்ன ? (ஆஸ்பர்கர் மன இறுக்கம் சம்பந்தமான நோய்). எனக்குப் பிரியமான குழந்தைக்கு, மருத்துவ ஆய்வின் போது இந்த நோய் இருப்பதாக கண்டு பிடித்திருக்கிறார்கள்.

நான் இதைப் பற்றி ஆழ்ந்து படித்ததில்லை. கருத்து சொல்ல இயலாது. தற்காலத்தில் பல குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படுவதாகத் தெரிகிறது. அமெரிக்காவில் இந்த நோய் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது. இந்த நோய் ஒரு பிரச்சினையாக இருக்கிறது. ஆழ்ந்த ஆராய்ச்சியின் மூலம், யாராவது இந்த நோய்க்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். சில சமயம் தடுப்பூசி போடுவதும் தீங்கு விளைவிக்கக் கூடும். தென் அமெரிக்க நாடுகளுக்குச் செல்லுமுன் நீங்கள் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். சிலருக்கு  இந்த ஊசி ஒத்துக் கொள்ளாது. தோல் மீது சிறிய கொப்பளங்கள் தோன்றக் கூடும்.

இது உள்ளுணர்வு,அகம்பாவம் அல்ல என்று  தெரிந்துகொள்வது எப்படி ?

காலம் விடையளிக்கும். அது  உள்ளுணர்வாக இருந்திருந்தால், தவறாமல் சரியாக நடக்கும். தவறாக நடந்தால் அது உன் உள்ளுணர்வு அல்ல.

எப்போது ஆன்மா மற்றொரு உடலை ஏற்றுக் கொள்ளும். ஆன்மா மற்றொரு உடலில் புகுந்த பின், அதோடு தொடர்பு கொள்ள முடியுமா ?

நல்லது ! இது  ஒரு ஆழ்ந்த இரகசியமாகும். விடை தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறாய் ? ஆம் ! ஆன்மா திரும்பி வரும். சில சமயம் இரண்டு மூன்று வயதுள்ள குழந்தைகள் ஏதோ பேசி, எதையோ சொல்லும். நீ அதைப் பொருட்படுத்தாமல் விட்டு விடுவாய். கவனித்து குழந்தை பேசுவதைக் கேட்பதில்லை. இரண்டு வயது குழந்தை “என் வீடு ஓப்பனாவில் (ஜெர்மனியிலிருக்கும்  ஒரு கிராமத்தின் பெயர்) இருக்கிறது “என்று சொல்லும். அல்லது “ என் நண்பர்கள் ஓப்பனாவில் இருக்கிறார்கள் “ அல்லது “என் காலணிகள் ஓப்பனாவில் இருக்கிறது “ என்று சொல்லும். குழந்தை ஏதோ சொல்கிறது. ஆனால் உன் கவனம் அதில் போவதில்லை. பல சமயங்களில் குழந்தைகளுக்கு மூன்று வயது வரை, முற் பிறப்பில் நடந்த நிகழ்ச்சிகள் நினைவுக்கு  வருவதுண்டு. இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல, நூற்றுக் கணக்கான சம்பவங்கள் இதை தெரிவிக்கின்றன.


எப்போது ஆன்மா ஒரு உடலைத் துறந்த பின் மறு உடல் எடுக்கும் என்பதற்கு அளவு கோல் எதுவும் கிடையாது. அது எப்போது  வேண்டுமானாலும் திரும்பி வரலாம். உடனே வர முடியும். அதே நாளில் அதே நேரத்தில் வரலாம்; அல்லது பல ஆண்டுகள் கடந்த பின் திரும்பி வரலாம். அது பல விஷயங்களைப் பொறுத்தது. இறந்தவர்களின் ஆன்மாவோடு தொடர்பு கொள்ள முயலாதே. அதற்கு அவசியமில்லை. அவர்களுக்கு உன்னைப்  பற்றிய எல்லா விவரமும் தெரியும். நீ பேசித் தான் தொடர்பு கொள்ள வேண்டுமென்று இல்லை. உன் மனதில் எண்ணம் வருவதற்கு முன்பே, அவைகள் அதை அறியும். பேச்சில்லாத தொடர்பு ஏற்கனவே நிகழ்கிறது.

மரணத்தைப் பற்றிய விழிப்புணர்வு நல்லது

செவ்வாய்கிழமை , 14 ஜூலை 2015,

பாத் அண்டோகாஸ்ட் ,ஜெர்மனி  

காலமும், வாழ்க்கையும் புயலை போன்று வந்து உங்கள் மனதை துடைத்தெடுத்து விடுகின்றது. இதையே இவ்விதமாக கூறுகிறேன். எதிர்மறைகள் புயலைப் போன்று எழுந்து உங்கள் மனதை ஆக்கிரமித்துத் துடைத்தெடுத்து விடுகின்றன. இவ்வாறு உங்களுக்கு நிகழ்ந்திருக்கின்றதா? (பலர் கையுயர்த்துகின்றனர்) இது நிகழக் கூடியது தான்.  எதிர்மறை உங்கள் மனதை அப்படியே ஏற்றுக் கொண்டுவிடும்.

இவ்வாறு நிகழ்வதே ஒரு பெரிய படி என்பதை விழிப்புணர்வுடன் அறியுங்கள். இருண்ட மேகங்கள் சூழந்திருந்தாலும் ஒரு விமானம் புறப்பட்டு மேலெழக் கூடிய வசதியுடன் இருப்பது போன்றதாகும். விமானம் கரிய மேகங்களை ஊடுருவிக் கொண்டு மேகங்களுக்கு மேலே பறந்து செல்கின்றது. நான் கூறுவது புரிகிறதா? நம் மனத்திலும் அத்தகைய ஒரு இயந்திர நுட்பத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எதிர்மறை மேகங்கள் சூழ்ந்து கொள்ளும் போது (அவற்றை விழிப்புணர்வுடன் உணர்ந்து) அவற்றிற்கு உயரே செல்லவேண்டும்.

உயர்ந்து செல்ல உங்களுக்கு உதவுவது ஞானம். ஞானம் என்பது என்ன? அறிவாற்றல் மற்றும் அனுபவம் இரண்டும் இணைந்தது. வெறும் அறிவு மட்டுமல்ல, வெறும் அனுபவம் மட்டுமல்ல, இரண்டும் இணைந்தது. இவையனைத்துமே தாற்காலிகமானவை. அனைவரும் மரணிக்கப் போகின்றனர் என்னும் அறிவும்,அனுபவமும் இணைந்தது.

மக்கள் தாம் இறக்கப் போகின்றோம் என்னும் நினைவுடன் இருந்தால், பேராசையுடன் இருக்க மாட்டார்கள். பொறாமைப்பட மாட்டார்கள். கோபப்பட மாட்டார்கள். நமது பிரச்சினையே கோபம், பேராசை பொறாமை பற்று, காமம் போன்றவைதாம். ஏனெனில் நாம் இறந்து விடுவோம் என்பதை மறந்து விடுகிறோம் அல்லது, இவையெல்லாம் தாற்காலிகமானவையே நாம் இறந்து விடுவோம் என்பதன் மீது கவனம் வைக்காமல் இருக்கிறோம். எதுவுமே நிரந்தரமானது அல்ல.

நான் இறக்கவே போவதில்லை என்னும் தத்துவத்தினை நீங்கள் முன்வைத்தால்,"சரி, உண்மை தான், உங்களுக்குள் இருக்கும் ஒன்றிற்கு இறப்பே கிடையாது, இந்த உலகம் நிலையானதல்ல, அனைத்தும் ஒருநாள் மறைந்துவிடும் என்பதையாவது குறைந்தபட்சம், நினைவில் கொள்ளுங்கள்.  புல்லின் மீதுள்ள பனித்துளி போன்று அனைத்தும் மறைந்து விடும். பொறாமை, கோபம், பேராசை, இவை எதுவுமே நிலைக்காது.

எவ்வளவு பணம் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? ஏராளமான பணம் இருந்தாலும் உங்களுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மறைந்து விடலாம். அப்போது அங்கு இங்கு என்று சுவிட்சர்லாந்த்,லக்சம்பேர்க் என்று பல வங்கிகளில் சேர்த்து வைத்த பணமும் என்னவாகும்? பலர் இது போன்று பணம் சேர்த்து இறந்து விடுகின்றனர். வங்கிகளுக்கு அந்தப் பணம் யாரைச் சேரும் என்பதே புரிவதில்லை. அவ்வாறு வங்கிகளில் பல பில்லியன் கணக்கான பணம் உள்ளதாக கேள்விப்படுகின்றேன். அவர்கள் வேதனை, பேராசை, பொறாமை இவற்றுடனேயே அத்தகைய பணத்தினை சேர்த்திருப்பார்கள். இறந்த பின்னர் யாருக்கும் போய்ச் சேராமல் இருந்து விடுகின்றது. வாழ்க்கை முழுவதுமே அந்தப் பணத்திற்காக வீணாகி விட்டது ! 

அதற்காக வங்கியில் பணமே சேர்க்கக்கூடாது என்று நான் கூறவில்லை. வாழ் நாள்  குறுகிய காலமே என்னும் விழிப்புணர்வுடன் கவனத்துடன் இருங்கள் என்றே கூறுகிறேன். இன்றே குன்றின் மீதேறிக் குதித்து இறந்து விடுங்கள் என்று நான் கூறவில்லை,இல்லவே இல்லை! ஏதோ ஓர் நாள் இறந்து விடுவோம் என்பதை நினைவில், கவனத்தில் வையுங்கள். அந்த ஞானச் செய்தி உங்களை சரியான பாதையில் நடத்திச் செல்லும்.அமைதியினை ஏற்படுத்தும். உறுஞ்சிக் கொண்டிருக்கும் அனைத்து எதிர்மறை என்ன மேகங்களிலிருந்தும் உங்களை விடுவிக்கும். இது ஓர் பகுதி, அதாவது ஞானம்.

அடுத்த பகுதி அனுபவம். நீங்கள் குழந்தையாக இருந்த போது கூட, எதிர்மறை எண்ண மேகங்கள் உங்களுக்கு வந்திருக்கும். குழந்தை பருவத்தில் எண்ண நிகழ்கின்றது? உங்களிடமிருந்த ஓர் விளையாட்டுப் பொருளை வேறொரு சிறுவனோ சிறுமியோ உடைத்து விட்டால் கோபம் ஏற்பட்டிருக்கும். விளையாட்டு சாமான்கள் கடைக்குள் நீங்கள் விரும்பிய அனைத்தையும் வாங்கும் முன்னர் உங்கள் பெற்றோர் கடைக்கு வெளியே அழைத்து வந்திருந்தால், கோபம் வந்திருக்கும். பின்னர் பள்ளியிலும், கல்லூரியிலும் உங்கள் நண்பர்களுடன் கோபம் போன்றவை ஏற்பட்டிருக்கும். சரியான மதிப்பெண்கள் அடையாமல் இருந்திருந்தால் வருத்தம் ஏற்பட்டிருக்கும். உங்கள் காதலன் அல்லது காதலியிடம் எதிர்மறையான உணர்வுகள் ஏற்பட்டிருக்கும்.! கடவுளே ! வாழ்வில் பல முறைகள் இது போன்றவை நிகழ்ந்திருக்கும். இப்போது அவற்றையெல்லாம் திரும்பிப் பார்த்தால், அவையனைத்தும் ஒன்றுமே இல்லாதவையாகவே தோன்றும். இதைப் புரிந்து கொண்டால் அது எதிர்மறை மேகங்களுக்கு உயரே நீங்கள் எழுவதற்கு உதவும். இதுதான் வாழ்க்கை அனுபவம்.

மற்றொரு வழி, உள்ள அமைதி மற்றும் சாந்தி அனுபவத்தை நினைவில் கொள்வது. ஏனெனில் அந்த கடந்தகால அனுபவத்தை மீண்டும் நினைவில் கொண்டு வருதல். அதே அனுபவத்தை உங்களுக்கு தரும். நீங்கள் மிகவும் வேதனையாக உணரும் போது உங்களில் சிலர் உடனேயே க்ரியா செய்திருக்கலாம். ஏனெனில், க்ரியா செய்து முடித்தவுடன் ஏற்படும் சாந்தி அனுபவத்தினை மனம் பெற விரும்புகிறது. மனதில் தொல்லை ஏற்படும்போது தாள கதியிலுள்ள மூச்சுப்பயிற்சி எதிர்மறை எண்ணங்களிலிருந்து உங்களை வெளியேற்றி சாந்தமான நிலைக்கு எடுத்துச் செல்லும் என்பது மனதிற்குத் தெரியும். எனவே, ஞானம் அனுபவம் இரண்டுமிணைந்து உங்களை எதிர்மறை எண்ண மேகக் கூட்டத்திலிருந்து வெளிக்கொண்டு வரும்.

ஒரு எதிர்மறை எண்ணத்தால் நீங்கள் பாதிக்கப்படும் போது அனைவருமே தவறு செய்வதாக உணருவீர்கள். மிகச் சிறந்த ஒருவரிடம் கூட தவறு காண்பீர்கள். அனைவரிடமும் உங்களிடமும் கூட குறை கண்டுபிடிப்பீர்கள். முதலில் இவர் செய்வது தவறு, அவர் செய்வது தவறு என்று  பிறரைக் குறை கூறுவீர்கள். ஏனெனில் உங்கள் தவறை நீங்கள் காண்பதில்லை. உங்கள் தவறை நீங்கள் அறியும் போது உங்களையே நீங்கள் குறை கூறிக் கொள்ளத் துவங்குவீர்கள்.அடுத்த கட்டம் மனச் சோர்வுக்கு ஆளாவது. இது தான் இயக்கவியல். இந்த வழியில் தான் நிகழ்கின்றது.

இதை நீங்கள் ஞானத்தின் மூலம் கடக்க வேண்டும். ஞானம் என்பது அறிவாற்றலும், அனுபவமும் இணைந்தது. அனைத்தும் தாற்காலிகமானவை என்று தெரிந்து கொள்வது அறிவாற்றல். நிகழ்வுகள் வந்து போகும் என்பதை நினைவு கூர்தல் அனுபவம். இதை கண்டறிந்து கொண்டால் உங்கள் முகத்தில் புன்னகை மீண்டும் தவழும். அப்போது நீங்கள் சிறிது பாதிக்கப் பட்டாலும் அதைப் பொருட்படுத்த மாட்டீர்கள். அன்பானவர்களே ! நீங்கள் தூய்மையான வெட்ட வெளி! உங்களை எதுவும் அணுக முடியாது!