வெற்றியின் திறவுகோல் - அர்ப்பணிப்பு

புதன்கிழமை, 20 ஜனவரி 2016


 நல்ல ஆரோக்கியத்தின் அடையாளம் என்னவென்று தெரியுமா? குளுமையான தலை, குழைவான வயிறு, மற்றும் வெதுவெதுப்பான பாதங்கள் - இவையே ஆரோக்கியத்தின் அடையாளம். உங்கள் உடல், மனம், ஆத்மா சரியாக இருந்தால் அனைத்துமே சரியாக இருக்கும். பாதங்கள் குளிர்ந்து, தலை சூடாக, வயிறு இறுக்கமாக இருந்தால் ஏதோ சரியில்லை ; அபாயம் என்று பொருள். உடல் நலம் குன்றும்போது, தலை சூடாகவும், பாதங்கள் குளிர்ந்தும்  வயிறு இறுக்கமாகவும் ஆகின்றன. ஓர் பழங் கால முனிவர்,” பேவ் கரம், பேட்  நரம், ஔர் சிர் தண்டா, ஐஸா நஹி ஹோ தொ மார் தண்டா " என்று கூறுவதுண்டு. இதை நாம் கவனிக்க வேண்டும். 

நீங்கள் தியானம் செய்யும்போது வயிறு குழைவாக ஆவதைக் கவனித்திருக்கின்றீர்களா? எத்தனை பேர் இதைக் கவனித்திருக்கிறீர்கள்?” குளுமையான மனநிலை, வெம்மையான பாதங்கள், மற்றும் குழைவான வயிறு ஆகியவை ஆரோக்கியத்தின் அடையாளம். குளிர் பாதங்களும் கடினமான வயிறும் பிரச்சினைகளின் அறிகுறிகள். அவை அதிக ஆபத்தானவை என்பதில்லை, ஆனால் கவனிக்கப்பட வேண்டியவை.

எவ்வாறு தியானத்தின் மீது கட்டுங்கடங்கா விருப்பத்தை மேம்படுத்திக் கொள்வது?

தியானம் செய்ய வேண்டும் என்று விரும்பினால் அதுவே போதும். அறிவுபூர்வமாக அதன் பயன்களை புரிந்து கொள்ளுங்கள். தியானம் செய்யும்போது உங்கள் மூளையின் அமைப்பு மாறுகிறது. வயிறு குழைகிறது, பாதங்கள் வெம்மையாகின்றன, இதயம் பெரிதாகிறது, அறிவு கூர்மையாகிறது.. இதை விட வேறென்ன வேண்டும்? இவை உங்களிக்களிப்படும் பல தூண்டுதல்கள் !

உள்ளுணர்வுடன் புதுமையாக ஆற்றலுடன், கவர்ச்சியாக இருக்க விரும்புகிறீர்களா? இவை தியானம் உங்களுக்குத் தரும். வேறேதுவுமிருக்கிறதா? இவையனைத்தையும் தாண்டி, உங்களுக்கு விருப்பமின்றி இருந்தால் உங்களுடலில்  போதுமான வைட்டமின்கள்  இருக்கின்றதா என்று சோதித்துப் பாருங்கள். வைட்டமின் D  அல்லது B 12  குறைபாடு அல்லது அறிவுக் குறைபாடு இருக்கலாம். ( சிரிப்பு ) அதைச் சரியாக்குங்கள். இன்னும் ஆர்வம் வேண்டும் என்று எண்ணும் போதே , உங்களுக்கு ஏற்கனவே அது இருக்கிறது. நான் இதை விரும்பவேண்டும் என்று எண்ணும் போது, அதை விரும்பிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த உணர்ச்சிகளெல்லாம் மேலெழும்பச் செய்வதோ அல்லது கடையில் வாங்குவதோ முடியாது.

எவ்வாறு வாழும் கலையினை 155 நாடுகளில் இத்தகைய வேகத்தில், இத்தகைய சமாதானத்துடன் நடத்தி வருகிறீர்கள்?

அவற்றை நான் நடத்துவதேயில்லை. (சிரிப்பு) அதுதான் ரகசியம். ஓர் தெய்வீக ஆணையின் கீழ் எல்லாமே நிகழ்ந்து வருகின்றன. அறிவுத்திறன் (ஞானம்) ஓர் நடத்தும் திறனை தன்னுள் கொண்டது. நீங்கள் ஞானத்துடனிருந்தால் அனைத்தும் தானே நிகழும். நடுவில்  நீங்கள் இருக்கும் போது, அதன் சுற்றளவு ஏற்கனவே இருக்கிறது. நடுவில் இருக்கும் நீங்கள் வட்டத்தின் ஒவ்வொரு புள்ளியிலிருந்தும் சம தூரத்திலேயே இருக்கிறீர்கள். நடுநிலை  ஏராளமான ஆளும்திறன் கொண்டது, ஏனெனில், அந்த நடுநிலையே அத்திறனை -  ஞானத்தை .உங்களுக்கு அளிக்கும். சுய ஞானம் நடத்தும் திறனை உடையது ஏனெனில் மிக உயரிய ஆத்மா இந்தப் பிரபஞ்சத்தையே கச்சிதமாக அமைத்துள்ளது.

இந்தச் செம்பருத்திப் பூக்கள் எவ்வாறு இத்தனை கச்சிதமான நிறத்துடன் மற்றும் மென்மையுடன் அமைந்துள்ளன என்று ஏன் நீங்கள் என்னைக் கேட்கவில்லை? லட்சக்கணக்கான செம்பருத்தி மரங்களில் லட்சக்கணக்கான செம்பருத்திப்  பூக்கள் மலர்கின்றன. மலரும் மல்லிகைப் பூக்கள் பூரணத்துவம் பெற்றவையாகவே இருக்கின்றன. அதன் வாசனை  எப்போதும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றது.  சுவையான இளநீர் கொண்டவையாக எவ்வாறு  தேங்காய் இருக்கிறது என்று நீங்கள் ஏன் கேட்பதில்லை? இப்படைப்பில் கோடிக்கணக்கான விஷயங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளன. படைப்பின் அடித்தளமாகிய  அந்த  சக்தி, அந்த மெய்யுணர்வு மிகுந்த ஆளுமைத் திறனும் எல்லையில்லாத ஞானமும் கொண்டது. நாம் அதனுடன் இருக்கும்போது அது நமக்குள்ளும் இங்குமங்குமாக வியாபிக்கின்றது.

எவ்வாறு அர்ப்பணிப்பு மற்றும் உணர்வுகளை சமப்படுத்துவது?

உணர்வுகள் மாறும், ஆனால் உணர்வுகள்  மாறும் வேகத்திற்கு ஏற்ப அற்பணிப்பு மாறக் கூடாது. உணர்வுகள் மிக விரைவாக மாறும் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஓர் பெண்மணி, கடைக்குப் பொருட்கள் வாங்கச்  செல்லும் முன்னர்  என்னிடம் வந்து “ குருதேவ் நான் கடைகளுக்குச் செல்ல விரும்புகிறேன், என்னை ஆசீர்வதியுங்கள்” என்று கேட்பதுண்டு. அதை நான் விசித்திரமாகக் கருதுவதுண்டு. சாதாரணமாக நோயுற்று இருக்கும்போது, எதையேனும் அடைய விரும்பும் போது, ஆசி வேண்டுவதுண்டு. ஆனால் கடைக்குச் செல்வதற்குக் கூடவா? எது அவரைத் தூண்டியது? 

"ஒவ்வொரு தடவையும் நான் கடைக்குச் சென்று ஒரு புதிய உடையை வாங்கி,  வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வந்தவுடன் பிடிக்காமல் போகிறது. பிறகு அதை மீண்டும் கடைக்கு எடுத்துச் சென்று மாற்றுகிறேன். வாங்கும்போதே வண்ணம் பிடிக்கவில்லையெனில் மாற்றிக் கொள்ளலாமா என்று கேட்டறிந்த பின்னரே வாங்குகிறேன். இது போன்று ஒவ்வொரு முறையும் நிகழ்கிறது. என் கணவர் இதனால் பெரும் சங்கடத்துக்கு ஆளாகிறார். எனவே இம்முறை மாற்ற தேவையில்லாத ஓர் உடையை தேர்ந்தெடுக்க விரும்புகிறேன் ஆசீர்வதியுங்கள்" என்று கூறினார்.ஆகவே நமது மனம் இப்படிப்பட்டது ஆகும். நமது உணர்வுகள் எப்போதும் மாறிக் கொண்டே யிருக்கும். உணர்வுகள் மற்றும் மனநிலைகளை மட்டுமே அடிப்படையாக அமைத்துக் கொண்டால் நாம் அழிந்து விடுவோம்.

நாராயணனை அறிய ஒருவருக்கு எல்லையில்லாத பொறுமை வேண்டும் என்று கூறப் பட்டிருக்கின்றது. அவ்வாறெனில் ஏன் லக்ஷ்மி சஞ்சல அல்லது விரைந்தோடுபவர்  என்று  கருதப் படுகிறாள்?

சஞ்சல என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். “சல்” என்றால் நகருதல்   “சஞ்சல” என்றால் விரைவாக நகருதல் என்பது பொருளாகும். கடைத்தெருவுக்குச் சென்று பொருட்கள் வாங்கி செலவு செய்ய  வேண்டாமெனில் ஏன்   வங்கிக்குச் சென்று பணம் எடுக்க வேண்டும்? அர்த்தமற்றதல்லவா? உங்களிடம் பணம் இருந்தால் எதற்காக  அப்பணம் உங்களிடம் இருக்கிறது? அதைச் செலவிட வில்லையெனில் அதன் மதிப்பு என்ன? செல்வம் என்பதே சுழற்சிக்குத் தான். ஒரு பானை நிறைய தானியங்கள் இருந்தால் அவற்றை மீண்டும் விதைக்க வேண்டும். மேலும் அதிக தானியம் கிடைக்கும். நீண்ட காலத்திற்கு அப்படியே வைத்திருந்தால் அவை மக்கிப் போய்விடும். ஆகவே செல்வமும் நகர்ந்து கொண்டேயிருந்தால்தான் வளரும், நீடித்திருக்கும். பழங்காலத்தில் இருந்தே மக்கள் இந்த ரகசியத்தை அறிந்திருந்தனர் அதனால்தான் லக்ஷ்மியை சஞ்சல என்று கூறுகின்றனர்.

நாராயணன் எப்போதுமே உள்ளார். நரம்பு அல்லது நரம்பு மண்டலம் என்பது நாராயணா என்பதிலிருந்தே தோன்றியிருக்கிறது. நர என்றால் நரம்பு. நாராயணா என்றால் நரம்பு மண்டலத்தில் குடியிருக்கும் மெய்யுணர்வு என்பது பொருளாகும். அவ்வாறில்லையெனில் இப்போது நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டோ புரிந்து கொண்டோ இருக்க  மாட்டீர்கள். எனவே நீங்களே நாராயணன். நீங்கள் நீடித்து வைத்துக் கொள்வதற்கு உங்களுக்கு வரும்படி வேண்டும், அது நகர்ந்து கொண்டேயிருக்க வேண்டும். அதுதான் லக்ஷ்மி என்பது பொருளாகும்.

மௌன பயிற்சித் திட்டத்தின் போது ஒருவர் தனக்குள்ளேயே பேசிக் கொள்வது கூடஅனுமதிக்கப்படாதா ?

அப்படியாவது உங்களுக்குளேயே பேச வேண்டும் என்னும் கட்டாயம் உள்ளதா? உங்களுக் குள்ளேயே  பேசிக் கொள்ள என்ன தேவையிருக்கிறது? நான் நன்றாக இருக்கிறேன்  அல்லது இல்லை, நான் பெங்களூருவில் இருக்கிறேன் என்றெல்லாம் உங்களுக்கு நீங்களே நினைவுறுத்திக் கொள்ள விரும்புகிறீர்களா ? எப்போதும் பேசிக் கொண்டேயிருந்து வீணாகும் ஆற்றல் அனைத்தையும் ஒன்று திரட்டுங்கள். இரண்டு நாட்கள் மௌனத்தில் ஆழ்ந்து அனுபவியுங்கள். உங்களுக்குள்ளேயே இருக்கும் ஆழம், அகன்ற பரப்பு ஆகியவற்றைக் கண்டு அதிசயிப்பீர்கள்.

பிறருடைய விமர்சனக் கருத்துக்கள் மற்றும் நடத்தை என்னைத் திசை திருப்பித் தொந்தரவு செய்கிறது. என்னால் அவற்றை விட்டு விட முடிவதில்லை. தயவு செய்து  உதவுங்கள்.

விட்டு விடுவதற்கு கடினமாக இருந்தால் கெட்டியாகப்  பிடித்துக் கொள்ளுங்கள். உங்களை பற்றிய அத்தனை விமர்சனக் கருத்துக்களையும் எழுதிக்  கொள்ளுங்கள். தினமும்  காலை, மதியம் மற்றும் மாலை மூன்று வேளையும்  அதை படியுங்கள். படிக்காமல் காலையுணவு கூட எடுத்துக் கொள்ளாதீர்கள். இவ்வாறு இரண்டு நாட்களுக்குச் செய்யுங்கள். மூன்றாவது நாள் விமர்சனம் பற்றிய எண்ணம் முற்றிலும் விலகி விடும். இதை நான் தீவிரமாகவே கூறுகிறேன். மறக்க முடியாத ஒவ்வொருவருடைய விமர்சனக் கருத்துக்களையும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நான் கூறிய படி செய்யுங்கள். அது பயனளிக்கிறதா இல்லையா என்று கூறுங்கள். இல்லையெனில் வேறு வழி முறை ஒன்றினைப் பரிந்துரைக்கிறேன்.

இந்த உலகில் வெற்றியாளர்கள் பலர் தியானம் செய்வதில்லை. அது போன்று தியானம் செய்யும் பலர் பெயர் , புகழ், பணம் அடைதல், சாதனைகள் இவற்றில் வெற்றியாளர்களாக இல்லை. இதை எவ்வாறு விளக்க முடியும்?

வெற்றி என்று எதைக்  குறிப்பிடுகிறீர்கள்? பெரிய தொகை வங்கியிலிருப்பதையா?பெயரும் புகழும் இருக்கலாம், ஏராளமான பணம் இருக்கலாம் ஆனால் அவர்கள் முகத்தில் புன்முறுவல் இருக்காது. நல்ல தூக்கம் இருக்காது. சரியாக உண்ண முடியாது. அது உங்களுக்குத் தெரியுமா? என்னைப் பொறுத்த வரையில் ஒருவரது முகத்திலிருக்கும் வற்றாத புன்முறுவலே அவரது வெற்றியைக் குறிக்கும். வாழ்க்கையில் எந்த நிலைமையையும், தடைகளையும்  தாண்டி வெற்றியடைய முடியும் என்னும் தன்னம்பிக்கை  தான் என்னைப் பொறுத்த வரையில் வெற்றி.

அதுதான் வெற்றி ! சில செல்வந்தர்களைப் பாருங்கள். பிறருடன் நட்புக்கு கொள்வதற்கு கூடப்பயப்படுவார்கள். பணம் பிடுங்குவதற்காகவே நட்புக்கு கொள்வதாகக் கருதுவார்கள். அத்தகைய பீதி அவர்களுக்கு இருக்கும். இதை வெற்றி என்று கூறுவீர்களா? இத்தகைய பல பிரபலங்கள் இருக்கின்றனர். பிழிந்தெடுத்தால்கூட சிறு துளி கூட மகிழ்ச்சியின்றியே இருப்பர். இதை வெற்றி என்று நான் கூற மாட்டேன். 

நீங்கள்  வெற்றியுடனும் புகழுடனும் இருக்க விரும்பினால் அவற்றை அடையலாம்.ஆனால் அதற்கு ஆரோக்கியமான உடல்நிலையும் மனநிலையும் தேவை. அதை அடைய நீங்கள் தியானம் செய்ய வேண்டும். தியானம்  வெற்றிக்கு நேரிடையான வழி என்பதல்ல. அது ஓர் மரத்தின் வேருக்கு நீரூற்றுவது போன்றதாகும். வேரில் நீர் ஊற்றினால் நல்ல பூக்களும், பழங்களும், பசுமையும் கிடைக்கும். தியானம் செய்ய விருப்பமில்லையெனில் செய்ய வேண்டாம். அது கட்டாயமில்லை. நன்றாக மன அழுத்தத்தை அடையுங்கள். அதுவே உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தருமானால் நல்லது, அப்படியே இருங்கள். யார் உங்களைத் தியானம் செய்யுமாறு கூறியது?


விழித்தெழுங்கள். தயவு செய்து  விழித்தெழுங்கள்.  ஆற்றலுடன் வெற்றிகரமான வாழ்க்கையை அடைய தியானம் ஓர் தடையில்லை. உண்மையில் அது உங்களுக்கு உதவுகிறது. தியானம் செய்து  வெற்றி காணாதவர்கள் இருந்தால் அது அவர்களது விருப்ப தேர்வு.