ஒரே பிறவியில் கர்மங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிடுமா?

சனிக்கிழமை 23 ஜனவரி 2016.

பெங்களூரு. இந்தியா


 ஓர் அமைச்சர் ,ஆளுநர்  போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள் அல்லது ஓர் நிறுவனத்தின் தலைவர் அதிகாரத்துவத்தில் ஒரேயடியாக சிக்கிக் கொள்ளக் கூடாது. அவர்கள் சில சமயங்களில் கீழேயிறங்கி பல்வேறு தரப்பு மக்களிடமும்  பேச வேண்டும். எப்போதும் அல்ல, சில சமயங்களில் அது உதவும்.

உதாரணமாக ஓர் ஆய்வுக் குழுவில் இயக்குனர், மற்றும் இரண்டாம் மூன்றாம் நிலையில் அவர் கீழ் பணிபுரிவோரிடம்  பல சிறப்பான கருத்துக்கள் இருக்கலாம். சிறப்பானவையாக அவை இருந்த போதிலும் இயக்குனர் அவற்றை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம் ஆனால் நிறுவனத்தின் தலைவர் அவ்வப்போது இவ்விதமான கருத்துக்களை கேட்டறிய வேண்டும்.

அரசின் உயர் மட்டத்தில் இரண்டாம் மூன்றாம் நிலையில் பணி புரியும் ஒருவர் என்னை சந்திக்க வந்திருந்தார். ஓர் பணித்திட்டத்தில் வளங்கள் மற்றும் நிதி இவற்றைச் சேமித்து, பணித்திட்டத்தின் செலவை 60 முதல் 70 சதவீதம் குறைக்கும்வகையில் தம்மிடம் ஓர் யோசனை இருப்பதாகக் கூறினார். அது ஒரு புதுமையான யோசனை. இளைஞர்களுக்கு  அத்தகைய புதுமையான யோசனைகள் தோன்றுகின்றன. ஆனால் உயர் மட்டத்திலிருக்கும் இயக்குனர் பழமைவாதி. நீண்ட நாட்களாகப் பணியில் இருந்து களைத்து ஒய்வு  பெறும் நிலையில் உள்ளார். இத்தனை ஆண்டுகளாக அவர் உழைத்து, படிப்படியாக முன்னேறி இயக்குனர் நிலைக்கு வந்திருப்பவர். இளம் வயதினரைப் போன்று சாகசங்கள் மற்றும் உற்சாகம் ஆகியவை இல்லை. ஆகவே இந்த இளைஞனுக்கு சிறந்த யோசனை இருந்த போதிலும் இயக்குனர் தனக்கு எவ்வாறு அப்பணித்திட்டத்தை முடிக்க வேண்டும் என்று தெரியும் என்றும் இப்புதிய யோசனை சரியாக இருக்காது, என்றும்  கருதி அதை ஒதுக்கி விட்டார்.

இந்தத் துறை அமைச்சர்கள் இதை எடுத்துக் கொள்ள வேண்டும். தங்கள் பணியைப் பாதிக்குமோ என்னும் எண்ணத்தில்,இளையோர்களிடம் பேசப் பயப்படுகின்றனர். அதிகாரத்துவத்தில் " இதைச் செய்தால், அல்லது அதைக் கூறினால் தனிப்படுத்தப்பட்டு விடுவோமோ அல்லது வேலை போய் விடுமோ என்னும் பயம் எழுகிறது. அவ்வாறு தான் மனம் வேலை செய்கிறது. ஆகவே, பயத்தின் காரணமாக தங்களது படைப்பாற்றலுக்கு ஓர் மூடி போட்டு மறைத்து, தங்கள் எண்ணங்களை வெளியே கூறுவதேயில்லை. இந்த நிலையில், உயர் அதிகாரியோ, அல்லது அமைச்சரோ இத்தகைய இளையோரை அணுகி, பேசினால் அது பயனுள்ளதாக இருக்கும். அவ்வப்போது பேசுங்கள். அப்போது தான் அவர்கள் மனந்திறந்து தங்களுடைய கருத்துக்களையும் யோசனைகளையும் பகிர்ந்து கொள்வர். இது போன்றிருந்தால் சூழல்,  அதிகாரம் மற்றும் பயம் நிறைந்ததாக இல்லாமல்  நட்புடன் திறந்த மனதுடன் மற்றும் புதுமையுடன் இருக்கும். புதுமைகளை புகுத்த பயமற்ற ஓர் சூழல் தேவையாகும்.

இதில் ஓர் சிக்கல் என்னவெனில், நிறுவனத்தின் ஒழுங்கு சீர் குலையக் கூடும். உயர் அதிகாரிகள் இளையவர்களை தொடர்பு கொண்டிருந்தால், அவர்கள் எவ்வாறு மூத்தவர்கள் கூறுவதைக் கவனிப்பார்கள்? இது ஓர் பிரச்சினையாகலாம். மூத்தவர்கள் முற்றிலும் அதிகாரமின்றி ஆகி விடக் கூடும். இளையோரைக் கட்டுப்படுத்த முடியாமலும், அவர்களை வேலை வாங்க முடியாமலும் ஆகி விடக் கூடும். அது அபாயந்தான். ஏனெனில், இளையோர் சிறு விஷயங்களுக்குக்  கூட மூத்த அதிகாரிகளை எளிதாக அணுகக் கூடும். இது இந்த முறையில் ஓர் அனுகூலமற்ற நிலையும் ஆகும். அதே சமயம், அதிகாரத்துவத்தில் சிக்கிக் கொண்டால், ஒவ்வொன்றும் அமைப்பின் முறையிலேயே சென்று படைப்பாற்றலை மறைத்து விடக் கூடும்.

இவ்விரண்டுக்குமிடையே ஓர் மைய நிலையைக் கண்டறிய வேண்டும். எவ்வாறு அச்சமநிலையைக் கண்டறிவது?  இது ஓர் பெரிய கேள்வி. அமைப்பு சீர்குலைந்து விடாமல் படைப்பாற்றலை மலரச் செய்யவேண்டும். இதற்கு மூத்த மேலாண்மையினருக்கு சிறந்த பயிற்சி தேவை. மூத்த மேலாண்மையினர்  நட்பு மற்றும் திறந்த மனதுடன், அதே சமயம் தன்னம்பிக்கை இளையோரால் அச்சுறுத்தப்படாத மன நிலை இவற்றுடன் இருந்தால் அவர்கள் நன்கு வேலை வாங்க முடியும். சிலர் மேலாண்மை பற்றிப் பேசுமாறு என்னைக் கேட்டுக் கொண்டதால், இந்தக் கருத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணினேன்.

அனைத்துக் கர்மங்களையும் அழிக்க  ஒரே ஒரு பிறவி போதுமா?

ஆம். 20 ஆண்டுகள் ஓர் அறை  பூட்டப்பட்டிருந்தால், அதைச் சுத்தப்படுத்தி அங்கு வெளிச்சம் ஏற்படுத்த, 20 ஆண்டுகள் தேவையில்லை.
.
வெங்காயம், பூண்டு போன்ற சில காய்கள் தமசிக் என்று கருதப்படுகின்றன. ஆனால் மேல்நாட்டு மருத்துவர்கள் உணவு நன்மையின் பொருட்டு அவற்றை  பரிந்துரைக்கின்றனரே?

நல்லதே! ஆயுர்வேதத்தில் கூட உங்களுக்குக் கொழுப்பு சத்து பிரச்சினை  இருந்தால், வெங்காயம் அல்லது  பூண்டு எடுத்துக் கொள்ள வேண்டும், ஆனால் தினமும் அல்ல. சில சமயங்களில் அவற்றின் மருத்துவ குணங்களினால் அவற்றை எடுத்துக் கொள்ளலாம். ஆழ்ந்த தியானத்திற்குச் சென்று  சிலரால் வெளி வர முடியாமல் போனால் வெங்காயம் அல்லது பூண்டு தரப்படும், அப்போது உடனடியாக வெளி வருவார்கள். வெங்காயம் மற்றும் பூண்டு இவற்றுக்கு பிராண சக்தியைக் குறைக்கும் குணம் உண்டு. உங்களைச் சற்று கனமாக உணர வைத்து இருத்தி வைக்கும். ஆகவே தியானம் செய்பவர்கள் வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றைத் தினமும் எடுத்துக் கொள்ளக் கூடாது. எப்போதாவது ஓர் சமயம் எடுத்துக் கொள்ளலாம்.

ஏன் மக்கள் ஏமாற்றுகின்றனர்?  ஏமாற்றப்பட்டால் நாம் என்ன செய்ய வேண்டும்?

அவர்கள் தாம் செய்வதை அறிவதில்லை. மக்கள் எச்சரிக்கையுடனோ அர்ப்பணிப்புடனோ இருப்பதில்லை. மனம் போன போக்கில் வாழ்கின்றனர். அவர்களது தவறுகளுக்கு பின்னால் உள்நோக்கம் எதையும் கண்டறியாதீர்கள். கருணையுடன் இருங்கள். மனிதர்களின் மனங்களில் பல்வேறு விதமான சலனங்கள் ஏற்பட்டு எங்கு செல்ல விரும்புகின்றனவோ அங்கு செல்கின்றன. மனம் அப்படித்தான் இருக்கும். கட்டுப்பாட்டிற்குள் இருப்பதில்லை. எனவே அறிவொளியுடன் கூடிய நடத்தையை அவர்களிடமிருந்து எதிர்பார்க்காதீர்கள். நீங்கள் செய்யக் கூடியதெல்லாம், அவர்கள் தியானம் செய்து நல்ல மனிதப் பிறவிகளாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தி, அவர்களை அர்ப்பணிப்பு மற்றும் கருணையுள்ளவர்களாக மாற்றும் முறையில் கவனம் செலுத்துவது மட்டும் தான்.

மனித வடிவில் பிறப்பதற்கு முன்பு, வேறு  என்ன வகையான பிறவிகளை ஒருவன் கடந்து வர வேண்டும்?

84,00,000 பிறவிகளுக்கு பின்னரே மனிதப்பிறவி அமைகிறது. ஏன் கடந்த காலத்தை திரும்பிப் பார்க்க வேண்டும்? கண்ணாடியைப் பாருங்கள். ஓர் குரங்கை நீங்கள் ஒத்திருப்பதாக தோன்றினால் முற்பிறவியில் நீங்கள் குரங்காக இருந்திருப்பீர்கள். ஓர் குதிரை அல்லது கழுதையைப் போன்று தோன்றினால் அவைகளாகப்  பிறந்திருப்பீர்கள். எந்த விலங்காக வேண்டுமானாலும் பிறந்திருக்கலாம். நமது ஆசிரியர்களில் ஒருவர், ஓர் சிறுவனிடம் அவன் ஓர் முட்டாள் கழுதை என்று கூறினார். அதற்கு நான், அவன் அதுவல்ல, முழுமையான பூஜ்யம் என்று கூறினேன். ஒவ்வொரு தனி மனிதனிடமும் கிளி, காகம், ஆந்தை, மயில், போன்ற அனைத்து உயிரினங்களின் தனிமங்கள் கலந்திருக்கும். என்ன பிறவி எடுத்திருந்தீர்கள் என்பது முக்கியமல்ல. இப்போது ஓர் மனிதப் பிறவி. அதை பேரின்பத்துடன் வாழுங்கள். நீங்கள் மரணப் படுக்கையில் இருக்கும் போது, இந்த உயிரினங்களை உதாரணமாக கோழி  என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருக்காதீர்கள். அடுத்த பிறவியில் கோழிப் பண்ணையில் பிறவி எடுப்பீர்கள்.(சிரிப்பு) ஓர் முட்டையை எண்ணிக் கொண்டிருந்தால் அதுவாகவே உங்களைப் பின்னர் காண்பீர்கள் !

எனது ஆன்மீகப் பயணத்தில் எதுவுமே ஓர் பொருட்டில்லை என்று கண்டறிகின்றேன். இந்த ஞானம் என்னை முற்றிலும் செயலற்ற நிலைக்கு எடுத்துச் செல்கிறது. இதிலிருந்து எவ்வாறு வெளி வருவது?

நீங்கள் வெளி வர விரும்புகிறீர்கள். எனவே ஏற்கனவே அதற்கு ஓர் அடி எடுத்து வைத்து விட்டீர்கள். நீங்கள்  வெளி வந்து ஓர் தன்னார்வலராக பணியாற்றவே அவ்வப்போது நாம் இத்தகைய மாபெரும் விழாக்களை ஏற்பாடு செய்கிறோம். நீங்கள் சோம்பேறித்தனம், சோர்வு போன்றவற்றில் வீழ்ந்து விட மாட்டீர்கள். குழுவாகப் பணியாற்றும் போது, திறன்களை வளர்த்துக் கொள்கின்றீர்கள். உங்கள் விழிப்புணர்வு மேலோங்குகிறது. உங்கள் பொறுமை அதிகரிக்கிறது. ஏனெனில் நீங்கள் பல்வேறு விதமான மக்களைக் குழுக்களில் காண்கின்றீர்கள். அவர்கள் உங்களது அனைத்துப் புள்ளிகளையும் அழுத்துகிறார்கள், இறுதியாக நீங்கள் மைய  நிலைக்கு வருகின்றீர்கள்.


அனைத்தும் நல்ல முறையிலேயே சென்று கொண்டிருக்கும்போது நீங்கள் புன்னகையுடன் இருப்பது என்ன பெரிய விஷயம்? ஓர் மூடன் கூட அவ்வாறிருப்பான். நீங்கள் ஓர் அறிவுத் திறன் மிக்கவரானால், விஷயங்கள் சரியான முறையில் செல்லாத போதும் புன்னகையுடன் இருக்க வேண்டும். அனைத்துமே ஞானத்தினால் ஏற்படுகிறது, ஞானம் சேவையின் மற்றும் குழுப்பணியின் மூலம் ஏற்படுகிறது. குழுக்களில் பணியாற்றுவது நிச்சயமாக பயன் தரும்.