செவ்வாய்க்கிழமை 12 ஜனவரி,
2016
பெங்களூர், இந்தியா
கேள்வி – பதில்கள்
என்னிடம்
முறைகேடாக நடந்து கொண்டு, உடலையும், மன உணர்ச்சிகளையும் பாதிப்பவர்களை எப்படி மன்னிப்பது
? மேலும் அப்படிப் பட்டவர்களோடு, தினமும் வாழ வேண்டியிருக்கும் போது எப்படி நடந்து
கொள்ள வேண்டும் ? சில சமயம் அவர்களைக் கொன்று விட வேண்டுமென்ற உணர்வு வருகிறது. அப்படிச்
செய்தால் கூட அந்த தண்டனை போதாது என்று நினைக்கிறேன்.
உன்னிடம் முறைகேடாக
நடந்து காயப்படுத்துபவர்களை, நீ மறந்து விட வேண்டுமென்று நான் விரும்புகிறேன். தெரிந்தோ,
தெரியாமலோ, விரும்பியோ, விருப்பமில்லாமலோ, நீ யாருக்கோ தீங்கு விளைவித்ததில்லையா ?
நீ அப்படிச் செய்திருக்கலாம். அந்த நபர், உன் வாழ்நாள் முழுதும் உன்னைப் பழி வாங்க
வரும் போது உனக்கு எப்படி இருக்கும் ? அது உனக்குப் பிடிக்குமா ?
அன்பானவளே, யாரோ உன்னிடம் முறைகேடாக
நடந்து கொண்டால், அவர் அறியாமையால் செய்திருக்கக் கூடும். அவர்களுக்குப் போதிய அறிவு (ஞானம்) இல்லை. அவர் ஆணவம் பிடித்தவராக
இருக்கலாம். ஏதோ, காயத்தினால் பாதிக்கப்பட்டோ, அறியாமையாலோ, அவர் மற்றவர்களுக்குத்
தீங்கிழைக்கிறார். உன் பார்வையை விரிவாக்கி, வேறு கண்ணோட்டத்தில் பார். அவருக்குப் போதிய அறிவு
இல்லை என்பதைப் புரிந்து கொள்வாய். அவர் ஆனந்தமாக இருக்கமாட்டார். ஆனந்தமாக
இருக்கும் ஒருவர் மற்றவர்களுக்குத் தீங்கு செய்ய மாட்டார்.
ஒருவர் மற்றவர்களுக்குத் தீங்கு
செய்கிறாரென்றால், அவர் ஆனந்தமாக இல்லை ; நடு நிலையில் இல்லை ; உனக்கிருக்கும் ஞானம்
அவருக்கு இல்லை. அவரை ஒரு நோயாளியாகப் பார். ஒருவர் உடல் நோயால் அவதிப் படும் போது,
அவரைப் பார்த்துக் கோபம் வருகிறதா ?
இப்படிப்பட்ட மனிதர்கள் மன அளவில், உணர்ச்சிகளால்
நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள். ஆன்மீக அறிவில்லாமல் வாடுகிறார்கள். அப்படிப் பட்டவர்களிடம்
நீ காழ்ப்புணர்ச்சியைக் காட்டினால், நீயும் அவர்களில் ஒருவராகி விடுவாய். நீ நோய்வாய்ப்
படுவாய். உன் நன்மைக்காக, அப்படிச் செய்வதைக்
கைவிட்டு, மேலே செல். நீ காயப்படுவதற்கு மற்றவர் மட்டும் காரணமா ? உன் அறியாமையும்,
அப்பாவித்தனமும் கூட அதன் காரணமாக இருக்கலாம்.
தேவையான அளவு புத்திசாலித் தனம்
உனக்கில்லை ; அல்லது அதிலிருந்து உன்னைக் காத்துக் கொள்ள போதிய உள்ளுணர்வு உனக்கில்லை.
எனவே நீயும் சற்று அதற்காகப் பொறுப்பேற்றுக் கொள். நீ பலமானவளாக, திறமைமிக்கவளாக இருந்திருந்தால்,
யாரும் உன்னிடம் முறைகேடாக நடக்க விட்டிருக்கமாட்டாய். அப்படிப்பட்டவரோடு நீ பழகியிருக்க
மாட்டாய். நீயும் சற்று பொறுப்பேற்றுக் கொள். நீ தவறு செய்து விட்டாய். எனவே இந்த நிகழ்வை, நீ வேறு ஒரு கோணத்தில் பார்க்கும்
போது, அமைதியாக இருப்பாய்.
மன்னிப்பது மற்றவருக்காக இல்லை.
அது உன் நன்மைக்காக : உன் மன நலத்தைக் காப்பதற்காக. அந்த நபர் எப்படியும் ஒரு நாள்
இறந்து விடுவார். நீ அவரை சொர்க்கத்துக்கோ, நரகத்துக்கோ அனுப்பும் பிரச்சினையைக் கையில்
எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அப்படி நீ அவரை அனுப்பினால், நீ சிறைச்சாலைக்குச் செல்ல
வேண்டியிருக்கும். அவர் ஒரு நாள் மரணமடைவார் என்பதை நினைவில் வை. அவருக்குப் பயணச்சீட்டு
வாங்கிக் கொடுக்க அவசியமில்லை. அவருக்கு எப்போது போக வேண்டுமோ, அப்போது போகட்டும்.
அதை நீ அவசரப் படுத்தினால், அவரை உடனே அனுப்பி
வைக்க முயற்சித்தால், உன் எஞ்சிய வாழ் நாட்களை, நீ சிறைச்சாலையில் கழிக்க வேண்டியிருக்கும்.
எனவே கடந்த காலத்தை மறந்து விடு.
சில மனிதர்கள் வன்முறையாளர்களாகவும்,
முறைகேடாக நடப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இது உலக நியதி. முள் ஏன் குத்துகிறது
? என்று கேட்டால், அது முள்ளின் இயல்பு ; நீ தான் கவனமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
உன் விரலை முள்ளின் மேல் வைக்காதே. நீ பாதுகாப்பாக இல்லாததால் காயப் படுகிறாய். நீ
5 % பொறுப்பேற்றுக் கொண்டால் கூட, உன் மனம் அமைதியாக இருக்கும். ஆனால் எல்லாம் மற்றவரின்
தவறு என்று நினைத்தால், நீ உன் மனதிலும், இதயத்திலும்
அவரை வைத்து வருந்துகிறாய். அப்படிச் செய்தால், நீ அவரை விட உயர்ந்த நிலைக்குச் செல்ல
முடியாது. உன்னை அறியாமலேயே, அவர் செய்த தீங்கை விட அதிகமாக உன் சூழ்நிலையை பாதிக்கிறாய்.
எனவே, நாம் கவனமாக இருந்து, நம்
அனுபவங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். புது செருப்பு, காலைக் கடித்ததற்காக,
செருப்பைக் கடிக்க முடியுமா ? அதை விட மூடத்தனம் ஒன்றும் கிடையாது. அதை விட்டு மேலே
ஆக வேண்டியதைப் பார்.
வாழ்நாள் மிகக் குறைந்த காலத்துக்கே
உள்ளது. நம்மைக் காயப்படுத்தியவர்களை நினைத்து, அதை வீணாக்க வேண்டாம். உலகம் மிகப்
பெரியது. எல்லா விதமான மக்களும் இவ்வுலகில் வாழ்கிறார்கள். நல்லவர்கள், கெட்டவர்கள்
எல்லா மக்களும் இருக்கிறார்கள். தோட்டத்தில் எல்லா வகையான மரங்களும் உள்ளன. எனவே, வாழ்க்கை
எல்லாம் கலந்த ஒன்றாகும். விழித்துக் கொண்டு இதைப் பார். எத்தனை நாட்கள், மனதில் விருப்பு, வெறுப்பைச்
சுமந்து கொண்டு வாழ்வாய் ? இது உன்னை எங்கே கொண்டு சேர்க்கும் ? ஒரு மனிதனின் முடிவு
வரும் போது எப்படியும் அவன் இறந்து விடுவான். அவனை சொர்க்கத்துக்கோ, நரகத்துக்கோ, அனுப்பி
வைக்க உனக்கு என்ன அவசரம் ? தீவிரமாக ஏதாவது செய்தால், நீ சிறைச்சாலையில் வாழ்க்கை
நடத்த வேண்டியிருக்கும். அப்படிப் பல முட்டாள் மனிதர்கள் சிறைச்சாலைக்குச் சென்றிருக்கிறார்கள்.
மாமியாரைக் கொடுமைப்படுத்திய
பல மருமகள்கள் இருக்கிறார்கள். முன்பெல்லாம் மக்கள் நல்ல மருமகளாகக் கிடைக்க வேண்டுமென்று
பிரார்த்தனை செய்வார்கள். இன்று பல மாமியார்கள், எப்படிப்பட்ட மருமகள் வருவாளோ என்று
கவலைப்படுகிறார்கள். பெண்கள் சிறைச்சாலைக்குச் சென்று பார்த்தால், பல முதியோர்களைக்
காணலாம். அவர்கள் நல்ல குடும்பத்திலிருந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் மருமகள்களுக்குத்
தீங்கு செய்து விட்டு, சிறைக்கு வந்திருக்கிறார்கள் என்பதை நம்ப மாட்டாய். பல பெண்கள்
தங்கள் மாமியார்கள் மேல், பொய்யாக வரதட்சிணைக் கொடுமை என்று புகார் கொடுத்து சிறைக்கு
அனுப்பியிருக்கிறார்கள். மாமியார் சிறை உணவை உண்ணட்டுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப்
பார்த்தால் உனக்குக் கண்ணீர் வரும்.
பூனா மற்றும் தில்லியில் நம் பயிற்சி
வகுப்புகளை, பெண்கள் சிறைச்சாலையில் நடத்தினோம். வகுப்பில் 70 – 80 வயது முதியவர்களைக்
காண முடிந்தது. அவர்கள் மிக வருத்தத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட தாய்மார்களின்
மகன்கள், வீட்டில் சி.சி.டி.வி பொருத்திப்
பார்த்ததில், தங்கள் மனைவிகள் தாயைக் கொடுமைப்படுத்தியது, பொய் சொல்லி சிறைச்சாலைக்கு
அனுப்பியது தெரிய வந்ததாம். கதைகளைக் கேட்டோம்.
வாழ்க்கையில் ஆன்மீகத்தைக் கடைப்
பிடிக்காதவரை, இப்படிப் பட்ட நிகழ்வுகள் தொடரும்.
கணவன் மனைவியிடையே, அம்மா பிள்ளையிடையே மற்ற உறவுகளுக்கிடையே பிரச்சினைகள் உள்ளன.
நம் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பறிவு
கொடுப்பது மட்டும், அவர்களுடைய மகிழ்ச்சியான வாழ்க்கையை உறுதிப்படுத்தாது. தார்மீக
மற்றும் ஆன்மீக மதிப்புகளை அவர்களிடம் வளர்க்காமல், நல்ல ஆனந்தமான வாழ்க்கைக்கு வழி
செய்ய முடியாது. அவர்களும் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள். அவர்களால், தங்களைச் சுற்றியிருப்பவர்களிடையே
மகிழ்ச்சியைப் பரப்பவும் முடியாது. எப்படி ஆனந்தமாக வாழ்வது ? எப்படி
ஆனந்தத்தைப் பரப்புவது ? என்று கற்றுக் கொள்ள வேண்டும். எனவே ஆன்மீகக் கல்வி மிகவும்
முக்கியம்.
ஒருவர் எதிர் கொள்ளும்
நிகழ்வுகள், அவரது கர்ம வினையைப் பொறுத்த ஒன்று
என்பதை அறிவேன். ஆனால் அந்த நபர் இப்பிறவியில்
நல்லவராக இருக்கும் போது, முன் செய்த பழைய செயல்களுக்காக ஏன் வருந்த வேண்டும்
?
புரிந்து கொள். நீ
காலை உணவு சமைக்கும் போது, நிறைய காரம் போட்டு விட்டாய். மதிய நேரத்தில் நீ காரம் போட்டதை
மறந்து விட்டு, உண்ணும் போது காரம் தெரிகிறது. நீ “ காலையில் காரம் அதிகம் போட்டதற்கு,
இப்போது ஏன் காரம் தெரிகிறது ? “ என்று சொல்ல முடியாது.
நீ இக்கட்டில் மாட்டும் போது தான்
கேள்வி கேட்கிறாய். நீ பணத்தை முதலாகப் போட்டு விட்டு, சில காலத்துக்குப் பின் அதிக
பணம் கிடைக்கும் போது, “ ஏன் இப்படி அதிக பணம் கிடைக்கிறது ? “ என்று கேட்பதில்லை.
நீ போட்ட முதலுக்கு வட்டி சேர்ந்து வருகிறது.
நீ ஒரு மாங்கொட்டையை விதைக்கிறாய்.
சில ஆண்டுகளுக்குப் பின், உனக்கு பல மாம்பழங்கள் கிடைக்கின்றன. நீ ஒரு தேங்காயை விதைத்து
ஒரு தென்னை மரத்தை வளர்த்தாய். அந்த மரம் ஒவ்வொரு
நாளும் ஒரு தேங்காயைக் கொடுக்கிறது.
நீ ஏன் இப்படி நிறையத் தேங்காய் கிடைக்கிறது என்று கேட்பதில்லை. அதே போல், காய்கறிகளை
விதையிட்டு, செடி வைத்து வளர்க்கும் போது, சில நாட்களுக்குப் பின் அவை அதிகமாக காய்களைக்
கொடுக்கும். அந்தச் சமயத்தில், “ஏன் கடவுள் இப்போது என்னோடு இல்லை. நான் மூன்று மாதம்
முன்பு ஒரு பீன்ஸ் தான் கொடுத்தேன். ஏன் இப்போது நிறைய பீன்ஸ் கொடுக்கிறார்? “ என்று
கேட்பதில்லை.
விழித்துக் கொள். குழந்தை ஒரு
நாளில் பிறப்பதில்லை. அதற்கு 9 மாதங்கள் ஆகும். இது உலக நியதியின் ஒரு பகுதியாகும்.
இது இடம், நேரத்துக்குள் நடக்கும் ஒரு நிகழ்வாகும். எல்லா நிகழ்வுகளும் கர்ம வினைப்படி
அந்தந்த காலத்தில், அந்தந்த இடத்தில் நிகழும். நிகழ்வுகளையே கர்ம வினை என்று குறிப்பிடலாம்.
எல்லா செயல்களும், முடிவிலியான
இறைவன் சித்தப்படி பிறக்கிறதென்றால், நாம் ஏன் நம் ஒவ்வொரு செயலிலும் இறைவனைக் காண்பதில்லை
? தயவு செய்து அப்படி சாத்தியமாக்குங்கள்.
இது ஒரு கோரிக்கையா
? நீ சரியான வழியில் செல்கிறாய். முடிவில்லாத ஒன்றிலிருந்து நீ தப்பிக்க முடியாது.
முடிவிலியிடமிருந்து தப்பித்துவிட முடிந்தால், அது முடிவிலி அல்ல. நீ முடிவிலியிலிருந்து
தப்பி விட்டதாக நினைப்பது மாயை. விண்வெளியிலிருந்து நீ விலக முடியுமா ? சாத்தியமே இல்லை.
நீ விண்வெளிக்குள்ளே இருக்கிறாய். தினந்தோறும் விண்வெளிக்குள்ளே இருப்பதாக மனதில் நினைக்கத்
தேவையில்லை. எனவே இயல்பாக இரு. நீ பெங்களூரில் இருப்பது உனக்குத்
தெரியும். ஒவ்வொரு நாளும் நீ பெங்களூரில் இருப்பதை நினைவு படுத்திக் கொள்ள அவசியமில்லை.
நான் ஸ்விட்சர்லாந்து நாட்டில்
பதஞ்சலியின் யோக சூத்திரத்தைப் பற்றிப் பேசிக்
கொண்டிருந்த போது ஒரு நிகழ்ச்சி நடந்தது. நம் வாழும் கலையினர் சிலர் மூலிகைத் தேநீர்
அருந்திக் கொண்டிருந்த போது, யாரோ ஒரு பெண் சொன்னதைக் கேட்டார்கள். அந்தப் பெண்ணின்
கணவர் தினந்தோறும் காலை 4.30 மணிக்கு எழுந்திருந்து “ நான் என்னை நேசிக்கிறேன் “ என்று
திரும்பத் திரும்ப 2 மணி நேரம் வரை சொல்வாராம். இது அவருடைய தினசரி சாதனை. வாழும் கலையினர், அந்தப் பெண்ணிடம் “ எங்களுக்கு அப்படி செய்யத் தேவையில்லை. நாங்கள் எங்களை நேசிக்கிறோம் என்பதை
அறிவோம் “ என்று சொன்னார்களாம்.
நீ உன்னை நேசித்தால், அதை மந்திரம்
போல் திரும்பத் திரும்பச் சொல்லத் தேவையில்லை. பார், நீ ஸ்விட்சர்லாந்தில் இருக்கும்
போது, “நான் ஸ்விட்சர்லாந்தில் இருக்கிறேன்.
நான் ஸ்விட்சர்லாந்தில் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டேயிருக்கும் போது, ஸ்விட்சர்லாந்தில்
இருக்கிறோமா “ என்ற சந்தேகம் வந்து விடும். உன்னை நீ நேசிக்காமலிருக்க சாத்தியமே இல்லை.
ஏனென்றால் நீயே அன்பு. அன்பு என்பது ஒரு செயல் அல்ல. நீ அன்பால் உருவானவன் / உருவானவள்.
உறுதிப்படுத்திக்
கொள்ளும் செயல்கள் உன்னைப் பைத்தியக்காரனாக்கிவிடும். நீ ஒரு மனநோய் மருத்துவ மனைக்குச்
செல்ல வேண்டியிருக்கும். நீ முடிவிலிக்குள் இருக்கும் போது, நான் முடிவிலிக்குள் அடங்கியவன்
என்று திரும்பத் திரும்பச் சொல்லத் தேவையில்லை.
ஓய்வாக இரு.
உலகில் தோன்றிய முதல்
மொழி எது ? எல்லா மொழிகளும் எப்படித் தோன்றின
? குருதேவா ! மொழிகளின் கதையைச் சொல்லுங்கள்.
“ கூகிள் “ (வலை தளம்)
பக்கத்துக்குச் சென்று தேடு. உனக்குத் தெரியுமா
? பல மொழி வாரியான சமூகங்கள் உள்ளன. எப்போது அவர்களுடைய மொழி தோன்றியது என்று சொல்வார்கள்.
நீ அதை வேதவாக்காக நம்ப வேண்டியதில்லை. நமக்குத் தெரிந்தது – இந்திய மொழிகளுக்கெல்லாம்
தாயாக இருந்தது சமஸ்கிருத மொழி தான். சொல்லப் போனால் ஆங்கில மொழிக்கும் மூலம் சமஸ்கிருத
மொழியாக இருக்கலாம். இன்று இங்கிலாந்திலும், ஃப்ரான்ஸ் நாட்டிலும், பள்ளிகளில் குழந்தைகளுக்கு
சமஸ்கிருத மொழியைப் பயில்விக்கிறார்கள்.
எந்த மொழி முதலில் தோன்றியது என்பது
முக்கியம் அல்ல. எந்த மொழியைக் கற்க விரும்பினாலும் நீ அதை கற்றுக் கொள்ள வேண்டும்.
ஆனால் மொழிகளுக்கப்பால் ஒன்று உள்ளது. அதை நீ கற்றுக் கொள். அது வாய் பேசாத தொடர்பு.
உன் எண்ண அலைகள், நீ பேசாமலேயே, உண்மையில் நீ என்ன சொல்ல விரும்புகிறாய் என்பதைத் தெரியப்
படுத்தி விடும். உன் ஆறாவது அறிவின் மூலம் மற்றவருடன் தொடர்பு கொள்ள முடியும். வாழும்
கலையின் உள்ளுணர்வுப் பயிற்சி மூலம், குழந்தைகள் வியக்கத் தகு அறிவாற்றல் பெறுகிறார்கள்.
இந்த அறையில் அமர்ந்து கொண்டு அடுத்த அறையில் நிகழ்வதைப் பற்றி அவர்களால் சொல்ல முடியும். அவர்களுக்கு இந்தத்
திறமை உள்ளது. எனவே மொழியில்லாத தொடர்பு நிலைக்கு உயர வேண்டும். அது தான் உண்மையான
தியானம்.